வவுனியாவில் மருமகனின் தாக்குதலில் மாமனார் மரணம் : மருமகனும் நண்பரும் கைது!!

வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று திங்கட்கிழமை (06.05.2024) மாலை ஆசிக்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மதுராநகர் கிராமத்திலே இடம்பெற்றுள்ளது.

வவுனியா, மதுராநகர் பகுதியில் அமைந்துள்ள இறந்தவரின் வீட்டில் மாமனார், மருமகன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மது அருந்தியுள்ளனர்.

இதன்போது மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இக்கைகலப்பின் போது மருமகன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மண்வெட்டி மற்றும் தலைக்கவசங்களினால் தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலினால் பலத்த காயங்களுக்குள்ளான மாமனார் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி அருகில் உள்ள வீட்டின் வாசலில் வீழ்ந்துள்ளார்.

வீழ்ந்து கிடந்த குறித்த நபரினை அயலில் உள்ளவர்கள் இணைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுயை கணேசமூர்த்தி (மோகன்) என்பவரே மரணமடைந்தவராவார். சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளடன்,

குடும்ப தகராறினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை சிதம்பரபுரம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஒரே மாணவியை காதலித்த இரு மாணவர்கள்… இறுதி நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

கம்பகாவில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரை மற்றொரு மாணவன் கத்தியால் குத்தியதில் குறித்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கம்பகா மகா வித்தியாலயத்தில் ஒரே மாணவியை தாக்குதல் நடத்திய மாணவனும், தாக்குதலுக்குள்ளான மாணவன் காதலித்து வந்துள்ளனர்.

இதன்போது, குறித்த இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தன்னுடைய காதலியான மாணவி மற்றுமொரு மாணவனை காதலிப்பதை அறிந்த 10ம் தர மாணவன், 9ம் தர மாணவனை பாடசாலை முடிந்ததும் பாடசாலைக்கு முன்பாக வைத்து தாக்கியதுடன் கத்தியால் குத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

கத்தியால் தாக்கியதில் மாணவனின் தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு வத்துப்பிட்டியால ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவரின் நினைவேந்தல்!!

தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவரின் 38வது நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் சிறீரெலாே கட்சியால் அனுஸ்டிக்கப்பட்டது.

1986ம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 38வது நினைவேந்தல் நேற்று (06.05) மாலை 6மணியளவில் வவுனியாவில் உள்ள சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (சிறீரெலாே) தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான சங்கர் தலைமையில் இடம்பெற்றிருந்ததுடன் முதலாவது ஈகைச்சுடரினையும் அவரே ஏற்றிவைத்திருந்தார்.

அவரை தொடர்ந்து சிறீசபாரத்தினம் அவர்களின் மெய்ப்பாதுகாவலரும் ரெலோ அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவருமான அஜித் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி இருந்தார்.

தொடர்ந்து தமிழ் விருட்சம் அமைப்பின் ஸ்தாபகர் சந்தரகுமார் கண்ணன், மாணிக்கம் ஜெகன், சிறீதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞரணியினர், பிரதேச அமைப்பாளர்கள், என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!

வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொலிசார் முன்னிலையில் தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக நேற்று (06.05) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான நபர் உட்பட 40 இற்கும் மேற்பட்டோர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ‘பொலிசார் பக்கசார்பாக செயற்படாது குழாய் கிணறு ராசனை கைது செய்,

பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கியவருக்கு பாதுகாப்பு கொடுக்காதே, பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீதும் நடவடிக்கை வேண்டும்” என பல்வேறு கோசங்களை எழுப்பினர்.

இதனையடுத்து, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக 10 பேரை அழைத்து பேசியிருந்தார். இதன்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபரை 3 தினங்களுக்குள் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன்,

குறித்த சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட பொலிசார் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர்.

இதேவேளை, கடந்த மாதம் 15 ஆம் திகதி வவுனியா, சின்னப் பூவரசன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையை புளியங்குளம் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய பொலிசாரும் பிடித்து வைத்திருக்க, வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கியதாக பாதிக்கப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தில் 40 பரீட்சை மத்திய நிலையங்களில் 4309 மாணவர்கள் சாதாரண தர பரீட்சைக்கு!!

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை இன்று (06.05.2024) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தில் மாணவர்கள் பரீட்சை நிலையங்களிற்கு ஆர்வத்துடன் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

நாடளாவிய ரீதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பரீட்சையின் பாதுகாப்புக்காக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 40 பரீட்சை நிலையங்கள் மற்றும் 14 இணைப்பு நிலையங்களில் 4309 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

வவுனியாவில் மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி!!

வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (06.05) மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய மாமன் மீதே மருமகன் காேடலியால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாமனாரை உறவினர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு காெண்டு செல்லப்பட்ட பாேதும் அவர் அங்கு காெண்டு செல்லப்படுவதற்கு முன்னரே மரணமடைந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 45 வயது மாேகன் என்பவரே மரணமடைந்தவராவார். சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் பாெலிசார் இச்சம்பவம் தாெடர்பில் விசாரணைகளை மேற்காெண்டு வருகிறார்கள்.

வெளிநாடொன்றில் 13 கோடி மக்கள் மனதில் இடம் பிடித்த இலங்கை இளைஞனின் காணொளி!!

இலங்கையில் பூங்கொத்துக்களை விற்கும் இளைஞர் ஒருவரின் காணொளி சீனாவில் 130 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்து சாதனைப்படைத்துள்ளது.

குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பின் காரணமாக அன்றாட செலவிற்காக கம்பளை- நுவரெலியா வீதியில் பூங்கொத்துக்களை விற்கும் வியாபாரியான திலிப் மதுசங்க என்பவரின் காணொளியே இவ்வாறு பாராட்டுக்களை பெற்றுள்ளது.

கமராவில் பதிவான காட்சிகள்

கொத்மலையை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தின் மூன்றாவது பிள்ளையான இவர் 8 வருடங்களாக நாள்தோறும் 15 கிலோ மீட்டர் வரை பூங்கொத்துக்களை கையிலேந்தியப்படி வெளிநாட்டு பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனத்திற்கு தன் ஓட்டத்தை ஈடுசெய்து வெளிநாட்டு பயணிகளிடம் அப்பூக்கொத்துக்களை விற்று கிடைக்கும் பணத்தில் தன் குடும்பத்தின் அன்றாட செலவுகளை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் இலங்கை வந்திருந்த சீன பெண்ணிற்கு பூக்கொத்துக்களை விற்பனை செய்த போது அப்பெண்ணின் கமராவில் பதிவான காட்சிகள் இப்பொது பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது.

மேலும், இவர் பூக்கொத்துக்களை சுமந்து கொண்டு இருக்கும் கார்ட்டூன் சித்திரங்களும் சீனர்களுக்கு மத்தியில் பகிரப்பட்டு பிரபல்யமாகிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய புரட்சி!!

இலத்திரனியல் ஊடகக்துறையில் புரட்சியை உருவாக்கி முதன்முறையாக செயற்கை நுண்ணறிவை (AI தொழில்நுட்பம்) பயன்படுத்தி சிங்கள செய்தி ஒளிபரப்பை தேசிய தொலைக்காட்சி நேற்று வழங்கியுள்ளது.

தொலைக்காட்சியில் நேற்றிரவு 8 மணிக்கு ஒளிபரப்பான செய்தியறிக்கையில், பிரதான அறிவிப்பாளர்களான நிஷாதி பண்டாரநாயக்க மற்றும் சமிந்த குணரத்ன ஆகியோரின் பிரதியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய செய்தி ஒளிபரப்பு இந்த பிரதிகள் மூலம் நீண்ட நேரம் வழங்கப்பட்டது. இதன்மூலம் செயற்கை நுண்ணறிவின் தொழில்நுட்பத்தின் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்க தேசிய தொலைக்காட்சி நடவடிக்கை எடுத்திருந்தது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித செயல்பாடுகளை எளிதாக்க இன்று உலகளவில் பயன்படுத்தப்படும் மிகவும் மேம்பட்ட மற்றும் முன்னணி தொழில்நுட்ப செயல்பாடுகளில் ஒன்றாகும்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடந்த வருடத்தின் சடங்குகளை பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பியது.

அத்துடன், நாடு மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள இலட்சக்கணக்கான பார்வையாளர்களிடமிருந்து அதிக வரவேற்பைப் பெற்றது.

அதனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் நேற்று செய்தி ஒளிபரப்புக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் பரிதாப மரணம்!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை – மாரதென்ன (Balangoda) பகுதியில் இந்த துயரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

2023ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகின.

இந்தநிலையில், பரீட்சை எழுதச் சென்ற குறித்த மாணவன் அப்பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுவிட்டு திரும்பிய நிலையில் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை மாரதென்ன பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்.. கணவன் வெளிநாட்டில்.. மகன் மாயம்!!

யாழ் தெல்லிப்பழை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், உயிரிழந்த பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதுடன், வீட்டின் சுவர்களில் இரத்தக் கறைகளும் காணப்படுகின்றன.

உயிரிழந்த பெண் தனது இரு பிள்ளைகளுடன் தெல்லிப்பழையில் வசித்து வந்ததாகவும், கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் மகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (3) அருகிலுள்ள வீட்டில் தூங்கச் சென்றவேளை வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்துள்ளனர்.

அயல் வீட்டில் தூங்கச் சென்ற மகள் மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அதேவேளை, தனது சகோதரன் வீட்டில் இல்லாததையும் அறிந்துள்ளார்.

இது குறித்து அயல் வீட்டாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அயல் வீட்டார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். மேலும் காணாமல்போன சிறுவனை தேடும் நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பில் பயங்கரம்… போதைப்பொருளுக்கு பணம் கேட்ட கணவன்.. மகனுக்கு நேர்ந்த கொடூரம்!!

கொழும்பில் போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது மகனை கடுமையாக கொடுமை செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் தனது 7 வயது மகனை தனது கணவர் தரையில் அடித்ததாக பெண் ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தன்னையும் பிள்ளையையும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று தனது கணவர் பணம் கேட்டு தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், அருகில் வந்த தனது 7 வயது மகனை தூக்கி தரையில் கொடூரமாக தாக்கியதாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்தனர். இதேவேளை, சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும், சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்காக பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சாதாரண தர மாணவர்களை கொடூரமாக தாக்கிய தேரர்!!

விகாரை ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவன் மற்றும் மாணவியை அந்த விகாரையின் விகாராதிபதி, கொடூரமாக தாக்கியதாக குறித்த மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் காரணமாக இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சையில் அந்த மாணவரால் தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக வகுப்பு இடம்பெறாமையால் வெலிகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு குறித்த மாணவர்கள் சென்றுள்ளனர்.

அங்கு குறித்த விகாரையின் விகாராதிபதி மாணவனையும் அவருடன் சென்ற தோழியையும் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தாக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறுகையில், “இந்த தாக்குதலால் மகனின் உடலின் உள்பகுதி சேதமடைந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் கூறினர்.

அறுவை சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மகனுக்கு அடித்ததால் ஏற்பட்ட ரத்தக்காயம் இருப்பதாக மனைவி என்னிடம் கூறினார்.

இது வீழ்ந்ததால் ஏற்பட்ட காயம் அல்ல தாக்கியதால் ஏற்பட்ட காயம் என மருத்துவர்களும் கூறினர். பின்னர், இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்தேன்.

அதன் பிறகு வெலிகம பொலிஸாருடன் விகாரைக்கு சென்றோம் அங்கு தேரர் இல்லை. மகனுக்கு இன்னும் சாப்பிடவும் குடிக்கவும் முடியவில்லை. 6ம் திகதி பரீட்சை. அதுக்கு செல்லவும் தற்போது வழியில்லை. உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையா இருக்கிறான்.

மகன் தோழியுடன் சென்றமை குறித்து எங்களுக்கு அறிவித்திருக்கலாம், அதனை விடுத்து இவ்வாறு கொடூரமாக தாக்குவது முறையல்ல. எனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் தேரருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இந்த விடயம் குறித்து தாக்கப்பட்ட மாணவி கூறும் போது, “இருவரும் விகாரைக்கு சென்றோம். அப்போது அங்கு வந்த தேரர் ஈர்க்குமாரை எடுத்து நண்பரை தாக்கினார். அவர் ஓடினார், நானும் ஓடினேன். ஏன் தாக்கினீர்கள் என்று கேட்டோம். நாங்கள் தவறாக நடந்து கொள்ளவில்லை, பின்னர் என்னையும் அழைத்து தாக்கினார்.” என கூறியுள்ளார்.

இவ்வருடம் சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்த வெலிகம பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், கடந்த 25 ஆம் திகதி பரீட்சை அனுமதி சீட்டில் கையொப்பமிடவுள்ளதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் மேலதிக வகுப்பிலும் பங்கேற்கவுள்ளதாகவும் அந்த மாணவன் கூறிச் சென்றுள்ளான். ஆனால் மேலதிக வகுப்பு நடைபெறாததால், தனது தோழியுடன் அப்பகுதியில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.

அங்கு குறித்த விகாரையின் விகாராதிபதி மாணவனையும் அவருடன் சென்ற தோழியையும் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பெரும் சோகம் 21 வயது பெண் உயிரிழப்பு இரு பெண்கள் வைத்தியசாலையில்!!

கண்டி – பன்வில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதான பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து சம்பவத்தில் பன்வில, தவலந்தன்ன – ஆகலை தோட்டத்தைச் சேர்ந்த 21 வயதான நிலு என்றழைக்கப்படும் செல்வராஜ் சபியா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் கடந்த சனிக்கிழமை (04.05.2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தெல்தெனிய ஆடைத் தொழிற்சாலையில் பணியை முடித்து விட்டு முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, முச்சக்கர வண்டி வீதியை விட்டு சுமார் 35 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

மேலும், முச்சக்கர வண்டியில் பயணித்த இரு பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மடுல்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்த நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் தந்தையால் ஏற்பட்ட பரபரப்பு : பிள்ளைகளை கடத்தி வைத்து மிரட்டல்!!

கொழும்பின் புறநகர் பகுதியான ஹங்வெல்ல அரச ஊழியர் வீட்டுத் தொகுதியில் பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அவர் இந்த செயலை செய்துள்ளார்.

கைக்குண்டுடன் அவர் பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிள்ளைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்யும் நோக்கில் சந்தேக நபர் கைக்குண்டை ஏந்தியவாறு வீட்டுக்குள் பிரவேசித்ததாகவும் எனினும் மனைவி அங்கியிருந்து தப்பியோடியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நபர் தனது இரு பிள்ளைகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரண்டு பிள்ளைகளை மீட்கும் முயற்சியில் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபட்டு காப்பாற்றியுள்ளனர். .

செவிலியராக பணியாற்ற பிரித்தானியா செல்லவிருந்த பெண்ணுக்கு அரளி பூவினால் நேர்ந்த துயரம்!!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் செவிலியராக பணியாற்ற பிரித்தானியா (UK) செல்ல தயாராக இருந்த இளம்பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளாவின்  ஹரிபாட் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சூர்யா சுரேந்திரன் என்ற இளம்பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் பிரித்தானியா செல்ல தயாராக இருந்த நிலையில் அண்டை வீட்டாரிடம் விடைபெற சென்றுள்ளார்.

இதன்போது தொலைபேசி அழைப்பில் உரையாடிய படியே தன்னை அறியாமலேயே ஒரு அரளி இலை மற்றும் பூவை பிடுங்கி மென்றதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து ஆலப்புழா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் அவர் சாப்பிட்ட இலை, பூவின் விஷத்தை வெளியேற்ற முயன்றதுடன் உடல்நிலை சீராகவே அவர் வீடு திரும்பியுள்ளார்.

எனினும், அவரது உடல் நிலை மீண்டும் மோசமடைந்ததால் பருமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அரளி பூ மற்றும் இலையின் விஷமே அவரது மரணத்திற்கு காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை “கடும் அவதானம்” செலுத்தப்பட வேண்டிய நிலைக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று(06.05.2024) வெப்பமானது மேலும் உயர்ந்து அதிக அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் இவ்வாறு வெப்பநிலை உயர் மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

போதுமான அளவு நீர் அருந்துதல், நிழலான பகுதிகளில் முடிந்த அளவு ஓய்வெடுத்தல், கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்று திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் மெரில் மெண்டீஸ் தெரிவித்தார்.

இதற்கிடையில், அதிக சூரிய ஒளி காரணமாக தலைவலி, வாந்தி, உடல்வலி, தூக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.