கல்முனையிலிருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடி சந்தியில் சற்று முன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து செங்கலடி சந்தியிலுள்ள ரான்ஸ்போமர் தூணை உடைத்து கடையொன்றினுள் புகுந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒலிபெருக்கியின் சத்தங்களினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு…
வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய வழிபாட்டுத்தளங்களிலும் , பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாக சுகாதார பிரிவினர் , நகரசபை , பொலிஸ் திணைக்களம் , மாவட்ட செயலகம் ஆகியவற்றிக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வாறான ஒலிபெருக்கிப் பாவனையை கட்டுப்படுத்துமாறும் இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் பொலிஸார் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று 06 ஆம் திகதி ஆரம்பமாகி 15 ஆம் திகதி நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
30கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவை கைப்பற்றிய வவுனியா பொலிஸார்…
வவுனியா பொலிஸாரினால் இன்று (06.05.2024) அதிகாலை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30கிலோ 500கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டெடுத்துள்ளமையுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் போதைப்பொருள் கைமாறுவதாக இடம்பெறுவதாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலமையிலான பொலிஸ் பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கையினை மருதங்கேனி பகுதியில் முன்னெடுத்திருந்தனர்
இதன்போது போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில்
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த 36,35 ஆகிய வயதுடைய இரு நபர்களை கைது செய்துள்ளமையுடன் அவர்களிடமிருந்து 30 kg 500g கேரளா கஞ்சாவினை வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர்
கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா ஆகியவை மருதங்கேனி பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமையுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினருடன் இணைந்து மருதங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
அண்மைக்காலமாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினருடன் இணைந்து பல திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கடம்பநாடு பகுதியில் வசித்து வருபவர் மனோஜ். அவரது மகள் 8 வயது அவந்திகா. அவர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்பட்டது.
இதனையடுத்து சிகிச்சைக்காக அடூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சிறுமியை கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவந்திகா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். ஷிகெல்லா நோய் பாதித்தது தான் மரணத்திற்கு காரணம் என கோட்டயம் மருத்துவமனை மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது.
அசுத்தமான குடிநீர் மூலம் தான் இந்த பாக்டீரியா உடலில் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அசுத்தமான குடிநீர் மூலம் இந்த நோய் பரவியிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள,
கிணறு, குளம் , குட்டை, ஆறு, ஏரிகளில் நீரை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 8 வயது சிறுமி இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரைவிட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.
அதாவது டெல்லி மெயில் அறிக்கையின்படி, பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
அதில், இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டுபிடிக்கப்படுள்ளது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமியில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் மறைந்துவிடும். அந்த நேரத்தில் பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஸியஸை எட்டும். அத்தகைய சூழலில் பூமியில் எந்த உயிரினமும் வாழ இயலாது. அனைத்தும் வெப்பத்தின் காரணமாக அழிந்துவிடும்.
பூமியில் நாம் கார்பனை வெளியேற்றும் வேகத்தின் காரணமாக இந்த அழிவு விரைவில் நிகழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல நிகழ்ந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாக டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வு குழுவின் தலைவர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த் கூறுகையில், உலகில் கார்பன் டை ஆக்சைட்டின் அளவு இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம்.
இதன் காரணமாக உடல் வெப்பமடைந்து மனிதர்கள் இறந்துப்போகும் சூழல் உருவாகும். பின்னர் பூமியின் அனைத்து கண்டங்களும் ஒன்றிணைந்து ஒரு சூப்பர் கண்டத்தை உருவாக்கும், அது பாங்கேயா அல்டிமா என்று அழைக்கப்படுகிறது.
குறிப்பான பூமி முதலில் சூடாகவும், பின்னர் வறண்டதாகவும், இறுதியாக வாழத் தகுதியற்றதாகவும் மாறும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதமட்டுமன்றி வெப்பம் தாங்காமல் எரிமலைகள் வெடித்து சிதறி, பூமியின் பெரும்பகுதி எரிமலையால் மூடப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் அவ்வாறு நிகழும் போது அது அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். அதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுவார்கள். அதன்பிறகு படிப்படியாக பூமியில் ஒரு உயிரினம் கூட மிச்சமில்லாமல் மொத்தமாக அழிந்து விடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
லாண்டி பராகா கோய்புரா என்ற 23 வயது இளம்பெண், 2022யில் மிஸ் ஈகுவடார் போட்டியில் பங்கேற்று பிரபலமானார்.
ஓர் ஆண்டுக்கு முன் சிறைக் கலவரத்தின்போது இறந்த, போதைப்பொருள் கடத்தல் நபர் லியான்ட்ரோ நோரெரோவுடன் இவருக்கு தொடர்பு இருந்ததாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள, கோய்புரா கடந்த மாதம் 28ஆம் திகதி கியூவெடோ நகருக்கு வந்துள்ளார்.
அவர் அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று, மதிய உணவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துப்பாக்கியால் சுட்டுக்கொலை
அதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத இரு நபர்கள் பதிவினைப் பார்த்து அங்கு வந்துள்ளனர்.
ஒருவர் நுழைவாயிலுக்கு அருகில் நிற்க, மற்றொரு நபர் கோய்புராவை நோக்கி வந்து 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் நிலைகுலைந்து விழுந்த அவர் உயிரிழந்துள்ளார்.
நீதிமன்ற விசாரணையின்போது, கோய்புராவுடனான தனது உறவை வெளிப்படுத்த வேண்டாம் என கொல்லப்பட்ட நோரெரோ கணக்காளரிடம் கெஞ்சினார் என்றும், தனது மனைவிக்கு கோய்புரா குறித்து தெரிந்தால் கலவரம் ஆகிவிடும் என்றும் கூறினார் என வாதிடப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலந்து பெண்ணை காதலித்து கரம் பிடித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷன். 33 வயதாகும் இவர் மேற்படிப்புக்காக போலந்து சென்றுள்ளார்.
அங்கேயே வேலை கிடைக்க தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் போலந்தைச் சேர்ந்த எவலினா மேத்ரா (30) உடன் ரமேஷனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரின் குடும்பத்திற்கும் இதனை கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே பாரம்பரிய முறைப்படி ரமேஷன், எவலினாவின் திருமணம் வெகுவிமர்சியாக நடைபெற்றது.
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் தேங்காய்பட்டினம் கடற்கரை உள்ளது. தென்னை மரங்கள் நிறைந்த இந்த கடற்கரை சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமானது. தற்போது கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தேங்காய்பட்டினம் கடற்கரைக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அடுத்த விழுந்தைம்பலம் பகுதியில் வசித்து வருபவர் பிரேமதாஸ். இவரது மகள் ஆதிஷா (6). விடுமுறை நாளான நேற்று பிரேமதாஸ் தனது மகளை அழைத்துக் கொண்டு தேங்காய்ப்பட்டினம் கடற்கரைக்கு சென்றார். இருவரும் கடற்கரையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த ராட்சத அலை அவர்களை கடலுக்குள் இழுத்துச் சென்றது.
இதையடுத்து அவர்களின் கூச்சல் சத்தத்தைக் கேட்ட மீனவர்கள், கடலுக்குள் நீந்தி பிரேமதாஸை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட அவரது மகள் ஆதிஷாவை மீனவர்கள் நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து புதுக்கடை போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு காவல் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாயமான சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர். விடுமுறையைக் கொண்டாடுவதற்காக கடற்கரைக்கு சென்ற நிலையில் சிறுமி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு இறை இரக்க ஆலயத்தில் மாதாவின் உருவ சிலையிலிருந்து கண்ணீர் சிந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாவின் உருவ படத்திலிருந்து இன்று (05.05.2024) அதிகாலை 5:30 மணியிலிருந்து இரத்தம் வடிந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனை அதிகளவில் மக்கள் சென்று அதிசயமாக பார்வையிட்டு வருகின்றனர்.
அதேவேளை, நேற்று யாழ்ப்பாணம் இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மாதா சிலையிலும் கண்களில் இருந்து கண்ணீர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை, பாக்குநீரினை கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் (Relay Race) நீந்தி சாதனை படைத்துள்ளனர்.
தலைமன்னாரிலிருந்து நேற்றைய தினம் காலை 6.30 மணிக்கு கடலில் குதித்து தொடர் ஓட்ட முறையில் நீந்த தொடங்கி 12 பேரும் மாலை 4.40 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை வந்தடைந்துள்ளனர்.
மகாராஸ்ட்ரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் ராம் சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை மகராஸ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த நீச்சல் வீராங்கணைகளே இவ்வாறு போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, அவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து இலங்கை சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்குநீரினை கடற்பரப்பினை நீந்தி கடந்துள்ளனர்.
மேலும் இராமேஸ்வரம் கடற்றொழில் இறங்குதளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் தலைமையில் கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னார் வரை நீந்தியுள்ளனர்.
அதேவேளை, குறித்த போட்டிக்காக இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பல எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தளித்து கொல்ல முயன்ற குற்றத்திற்காக நர்ஸ் ஒருவருக்கு 380 முதல் 760 ஆண்டுகள் சிறை தனடனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 முதல் 2023 வரையான காலகட்டத்தில் 5 சுகாதார மையத்தில் பணியாற்றியுள்ள இவர் 17 நோயாளிகளின் இறப்புக்கு காரணமாகியுள்ளார் என நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பென்சில்வேனியா பகுதியில் செவிலியராக பணியாற்றி வந்துள்ள 41 வயதான Heather Pressdee என்பவரே மூன்று கொலை வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது 19 கொலை முயற்சி வழக்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரவுப்பணியின் போதே இவர் இந்த கொடூரத்தை நிகழ்த்தி வந்துள்ளார்.
22 நோயாளிகளுக்கு அதிக அளவிலான இன்சுலின் மருந்தை அளித்துள்ளார். பெரும்பாலான நோயாளிகள் அடுத்த சில மணி நேரங்களில் இறந்துள்ளனர். சிலர் தாமதமாக மரணமடைந்துள்ளனர்.
இன்சுலின் அளவு அதிகரித்தால், இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு வழிவகுக்கும், இதயத் துடிப்பை அதிகரிக்கலாம் மற்றும் மாரடைப்புக்கு கூட வழிவகுக்கும். கடந்த ஆண்டு மே மாதம் இரண்டு நோயாளிகள் மரணம் தொடர்பில் அவர் மீது முதலில் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் பொலிசார் முன்னெடுத்த விரிவான விசாரணையில் அவரது பகீர் பின்னணி அம்பலமானது. ஒரு நர்ஸாக அவரது நடவடிக்கை தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, நோயாளிகளை அவர் தரக்குறைவாக விமர்சித்தும் வந்துள்ளார். Heather Pressdee போன்று நியூ ஜெர்சி மற்றும் பென்சில்வேனியாவில் 29 நோயாளிகளை இன்சுலின் மருந்தால் கொலை செய்துள்ளார் Charles Cullen என்ற செவிலியர்.
இதய நோயாளிகளுக்கு William Davis என்ற செவிலியர் காற்றை ஊசியால் செலுத்தி 4 நோயாளிகளின் உயிருக்கு உலை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அருகாமையில் வசித்து வந்தவர் 43 வயது கமல்ராஜ் . ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரியாக உள்ள இவருக்கு, 2 மகள்கள் இருந்தனர்.
கடந்த சில நாட்களாக வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கமல்ராஜ் உயிரிழந்தார். இவரது உற்ற நண்பரான ஞானவேல் என்பவர் கமல்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். இருவரும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவரது குடும்பத்திற்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது.
இந்நிலையில் நண்பர் கமல்ராஜ் உயிரிழந்த தகவலை அறிந்ததும் திடீரென ஞானவேலுக்கு வலிப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் இரு குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இருவரது இறுதிச் சடங்குகளும் இன்று நடைபெற உள்ளது. இறப்பிலும் இணைபிரியாத இந்த இருநண்பர்களுக்கும் அப்பகுதியில் வசிப்பவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் தனது மகன் வாங்கிக் கொடுத்த விசம் கலந்த உணவை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழப்பு.
நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ், இவரது மகன் பகவதி (20), புதுச்சத்திரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் இ-சேவை மையத்தில் பகுதி நேரம் வேலை செய்துள்ளார்.
வேலைக்கு சேர்ந்து முதல் மாதம் சம்பளத்தை பெற்ற பகவதி, கடந்த 30ம் தேதி நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் உணவகத்தில், 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40),
இதனைத்தொடர்ந்து தேவராயபுரத்தில் வசித்து வரும் தாத்தா சண்முகநாதன் (67) வீட்டிற்கு சென்று அங்கு தாத்தா சண்முகநாதன் மற்றும் குடும்பத்தினருக்கு முதல் மாத சம்பளத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி வந்துள்ளேன் சாப்பிடுங்கள் என்று கொடுத்து உள்ளார்.
இதற்கிடையே மகன் ஆசையாக வாங்கி வந்த சிக்கன் ரைசை சாப்பிட்ட நதியா, சண்முகநாதன் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீதமுள்ளவர்கள் சிக்கன ரைஸ் சாப்பிட வில்லை.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நதியா, சண்முகநாதன் ஆகிய இருவரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், இது தொடர்பாக எந்தவித பரபரப்பும் இல்லாமல் பகவதி இருந்து வந்துள்ளார்.
முன்னதாக சிகிச்சைக்கு வந்த 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி வந்ததால் அவர்களுக்கு உணவு ஒவ்வாமையால் பிரச்சினை ஏற்பட்டு இருக்க வாய்ப்பு குறைவு எனவும், சாப்பாட்டில் விஷம் கலந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கடந்த மே 01.05.24 ம் தேதி ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உமா, சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார், இதையடுத்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர் மேலும் சிக்கன் ரைஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உமா நாமக்கல் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அவர்களும் சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை எடுத்து, சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பினர். இதன் பின்னர் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம், சிக்கன் ரைஸ் வாங்கி சென்ற பகவதி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகநாதன் சிகிச்சை பலன்யின்றி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து உணவு மாதிரியின் பகுப்பாய்வு முடிவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தது உறுதி செய்யப்பட்டதால் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி சென்ற பகவதியிடம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
அப்போது பகவதி திடீரென நான் தான் உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தேன் என ஒப்புக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் செய்ததில் தன்னுடைய குடும்பத்தினருக்கும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இதில் இருந்து தன்னிடம் தாய் நதியா பாசமாக இல்லை என்று தெரிவித்த பகவதி மேலும் ஒரு பெண்ணிடம் உள்ள தவறான பழக்கம், செல் போனில் அபாச படங்களை அடிக்கடி பார்த்தது குறித்து தாய், தாத்தாவும் கண்டித்ததால் அனைவரையும் விஷம் கொடுத்து கொலை செய்ய முடிவு செய்தேன்.
இதற்காக நாமக்கல்லில் உள்ள கடையில் கடந்த 27 ம் தேதியே கலைக்கொல்லிக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி வைத்துக்கொண்டேன்.
பின்னர் 30ம் தேதி வீட்டிற்கு செல்லும் வழியில் நின்று கொண்டு சிக்கன் ரைஸ் உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தேன் என்றும் இதில் இருவர் மட்டுமே சாப்பிட்டார்கள், மற்றவர்கள் சாப்பிடவில்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் பகவதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாய் நதியாவும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விட்டிலிகோ என்ற அரிதான நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் 2 ஆண்டுகளில் முழுவதும் வெள்ளையாக மாறி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தோல் அதன் இயற்கையான நிறத்தை இழந்து வெளிறிய வெள்ளை நிறமாக மாறும் நிலை விட்டிலிகோ எனப்படும். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியை சேர்ந்த ஸ்மித் என்பவர் வளர்த்து வரும் பஸ்டர் என்ற பெயர் கொண்ட அந்த 4 வயது நாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதும் கருப்பு நிறத்தில் இருந்துள்ளது.
இந்நிலையில் விட்டிலிகோ பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நிறம் படிப்படியாக மாறி தற்போது முழுவதும் வெள்ளை நிறமாகி உள்ளது. இந்த வகை அரிய நோயால் சில மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் காதலியின் வீட்டுக்குச்சென்ற போது கடத்திச்செல்லப்பட்ட இளைஞன் தொடர்பில் வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் அதுல விஜேசிங்கவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதலியின் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற இளம் வர்த்தகர் கடந்த 22 ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த இளைஞன் கடத்தப்படுவதற்கு முன்தினம் முன்னாள் முதலமைச்சருக்கு இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் (காதலியின் தந்தை) தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பொலிஸார் அவரிடம் கேள்வி எழுப்பி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் தனது மகளின் பிரச்சினை தொடர்பில் சட்ட ஆலோசனையை பெற்று பொலிஸில் முறைப்பாடு செய்து சம்பவத்தை தீர்த்து வைக்குமாறு தெரிவித்ததாக அதுல விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், இளைஞனின் காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.