வெளிநாட்டில் மனைவி : மகளை துன்புறுத்தி காணொளி வெளியிட்ட தந்தை கைது!!

வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை மீண்டும் நாட்டிற்கு வருமாறு தனது பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்ட தந்தையை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பலாங்கொடை – பெட்டிகல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய தந்தையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தனது மகளைக் கவனிக்கும் பொறுப்பை, கணவன் மற்றும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு தாய் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், மனைவியை மீண்டும் நாட்டிற்கு வருமாறு அழைத்து தனது பெண் குழந்தையை துன்புறுத்தி காணொளி வெளியிட்டுள்ளார்.

விளக்கமறியல் உத்தரவு

தற்போது பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தை குணமடைந்த பின்னர் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், தாயார் வரும் வரை சிறுமி காப்பகத்தில் வைக்கப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு!!

மட்டக்களப்பு – ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஏறாவூர் செங்கலடி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த மரணம் படுகொலையா அல்லது வேறு காரணமா என ஏறாவூர் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

நோர்வேயில் சிறந்த விருதை வென்ற இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர்!!

யூடியூப்பில் ஒரு மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடலுக்கு Norway International Tamil Film Festival பெருமையுடன் பிரபாலினிக்கு சிறந்த இசை காணொளிக்கான விருதை வழங்கியிருக்கிறது.

“ஆத்தங்கரை ஓரத்தில ” கிராமத்து குத்து பாட்டு” இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன் எழுதி, இசையமைத்து, பாடி, நடித்து, தயாரித்த பாடல் இது.

பிரபாலினி, ஈழத்து மெல்லிசை மன்னர் M.P. Paramesh மற்றும் சங்கீத பூஷனம் Sivamalini Paramesh தம்பதிகளின் மூத்த மகளாவார்.

இலங்கையின் 1968களில் முதல் தமிழிசைத்தட்டை தனது காதலிக்காக “உனக்குத்தெரியுமா நான் உன்னை நினைப்பது” என்று எழுதி, இசையமைத்து, பாடி, தயாரித்து வெளியிட்ட பெருமைக்குரிய எமது பெருமைக்குரிய மூத்த கலைஞர் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷ் மகள் தான் இந்த பிரபாலினி பிரபாகரன்.

அவரது அம்மா அப்பா வழியில் இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வெளியிட காதலர் தினத்தில் களத்தில் குதித்த “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடல் மாபெரும் வெற்றியை கிடைக்க பெற்றுள்ளது.

பிரபாலினி பிரபாகரன் வெளியிட்ட Queen cobra என்ற ஆடியோ ஆல்பம் தொகுப்பில் இருந்து வெளியான வீடியோ ஆல்பம் இது. முழுக்க முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்டது.

ஒரு ஈழத்தமிழ் மகள் எழுதி, இசையமைத்து, பாடி, தயாரித்து, நடித்த பாடலும் இதுவாக மட்டுமே இருக்கிறது என்பதும் இந்தப்பாடலின் அடுத்த பெரும் சாதனை தான். இந்தப்பாடலை முழுமையாக இலங்கையிலேயே படமாகடகியுள்ளனமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

நேருக்கு நேர் மோதிய கார் – மோட்டார் சைக்கிள் : பரிதாபமாக உயிரிழந்த இளம் உயிரியல் பாட ஆசிரியர்!!

குருநாகல், வாரியப்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 34 வயதுடைய உயிரியல் பாட ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (03.05.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த ஆசிரியருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாரியப்பொல பாடசாலையொன்றில் கடமைகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியரே விபத்தில் சிக்கியுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவின் புகழ்பெற்ற அழகுக்கலை விருதை வென்ற இலங்கைப் பெண்!!

பிரித்தானியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற ஒப்பனை மற்றும் அழகு கலை விருதுகளை இலங்கைப் பெண்ணான அஞ்சலி ராஜசிக வென்றுள்ளார்.

பிரித்தானியாவில் நடைபெற்ற The English Hair and Beauty Awards, Chapter 3இன் ஆண்டின் சிறந்த அழகுக்கலைஞராக Anjalee Laser Beauty and Spa நிறுவனத்தை நடத்தி வரும் அஞ்சலி ராஜசிக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21, 2024 ஞாயிற்றுக்கிழமை தி மெர்க்யூர் பெட்ஃபோர்ட் சென்டர் ஹோட்டலில் நடந்த விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து லூடன் நகருக்குச் சென்ற அஞ்சலி, தனது கணவர் மற்றும் மகனின் உதவியுடன் தொழிலை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு மிக்க விருதை வெல்வது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். ஏனெனில் இது ஒப்பனை மற்றும் அழகு கலை நிபுணர்களின் திறமை மற்றும் கடின உழைப்பை அங்கீகரிக்கிறமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மாதா சிலையில் வடியும் கண்ணீர் : பார்வையிட குவியும் மக்கள்!!

யாழ்ப்பாணம் இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவமானது, நேற்று (03.05.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இதன்போது, வழிபாட்டிற்கு சென்ற பக்தர்கள் சிலர் மாதாவின் சிலையை தொட்டு வழிபட்ட வேளையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை அவதானித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, இது தொடர்பில் அறிந்த மக்கள் ஆலயத்துக்கு படையெடுத்து வருவதுடன் மாதாவின் கண்களில் கண்ணீர் வருவதை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பெண் அதிபரை பல்லக்கில் சுமந்து சென்ற மாணவர்களின் பெற்றோர்கள்!!

வவுனியாவில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபரை மாணவர்களின் பெற்றோர்கள் பல்லக்கில் சுமந்து சென்ற நிகழ்வு ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்குளம் ஆரம்பப் பாடசாலையின் அதிபரின் பணி ஓய்வு நாளை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வுகள் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிபரை பல்லக்கில் சுமந்து சென்று கெளரவித்துள்ளனர்.

குறித்த அதிபர் பணியாற்றிய பல சந்தர்ப்பங்களில் வவுனியா மாவட்டத்தில் சிறந்த புலமைப்பரிசில் பெறுபேறுகளை பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்க உழைத்ததாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலதிக நிதிப் பலன்கள் எதுவும் பெறாமல் கல்லூரி மாணவர்களின் கல்வியை மேம்படுத்த அதிபர் பாடுபட்டதால், ஓய்வு பெறும் நாளில் அதிபரை தோளில் சுமந்ததாக பெற்றோர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பணத்தை நம்பி வாழும் சமுதாயத்தில், தலைமையாசிரியை சில சந்தர்ப்பங்களில் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை மாணவர்களின் கல்விக்காக ஒதுக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எதிர்வரும் 6ஆம் திகதி அதிபர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு பெற்றோர்கள் இந்த கௌரவிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

வவுனியாவில் மாபெரும் இரத்தான முகாம் : அனைவருக்கும் அழைப்பு

வவுனியாவில் மாபெரும் இரத்தான முகாம்

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்

அந்த வகையில் “பசியில்லா தேசம் உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் நாளை 05.05.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிமுதல் 11.00 மணிவரை வவுனியா பொது வைத்தியசாலையில் இரத்ததான முகாம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ள இரத்ததான முகாமில் அனைவரது பங்களிப்பினையும் கோரி நிற்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.

முகநூல் விளம்பரத்தினை நம்பி வேலைக்கு சென்ற இளம் யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

முகப்புத்தக விளம்பரத்தினை நம்பி மசாஜ் நிலையமொன்றிற்கு வேலைக்கு வந்த இளம் யுவதி ஒருவர் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கடந்த (01.05) தொழிலாளர் தினத்தன்று மாத்தறை, தலரம்ப பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மாத்தறை பகுதியில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் வேலை வாய்ப்பு உள்ளதாக முகப்புத்தகத்தில் காணப்பட்ட விளம்பரத்தினை நம்பி யுவதி மசாஜ் நிலையத்திற்கு வந்த போது மேலாளரால் துன்புறுத்தப்பட்டு தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி மேலாளருக்கு பயந்து பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை எனவும், முகாமையாளர் அவரை வெளியில் செல்லவிடாமல் அங்கேயே பூட்டி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் தலரம்ப பகுதிக்கு சென்று மசாஜ் மையத்தை சுற்றி வளைத்த பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர். இதன்போது மசாஜ் நிலைய உரிமையாளர் போல் நடித்து யுவதியுடன் சென்றவர் உண்மையான உரிமையாளர் இல்லை எனவும் யுவதி அங்கு அடையாளம் காட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் யுவதியின் தலை, கால், கழுத்தில் காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் கடந்த 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை யுவதியை பலமுறை தகாதமுறைக்கு உட்படுத்தி பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுமாறு அடித்து துன்புறுத்தியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து யுவதியை மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

மேலும், மசாஜ் நிலைய முகாமையாளரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறியிருந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திற்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் விளம்பரங்களில் சிக்கி இளைஞர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வழக்கு அதிகம் என்பதுடன், பெரியவர்கள் இது தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கமைய மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி வருணி போகஹவத்த உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கத்தின் விலையில் பதிவாகும் மாற்றம் : நகை கொள்வனவு செய்பவர்களுக்கான தகவல்!!

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 177,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது. இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இதன்படி இன்று (03.05.2024) 24 கரட் 1 கிராம் தங்கம் 24,140 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 193,100 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது. இதேவேளை, 22 கரட் 1 கிராம் தங்கம் 22,130 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 177,050 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் 1 கிராம் தங்கம் 21,130 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 169,000 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கனடாவிலிருந்து அதிகமாக வெளியேறும் புலம்பெயர்ந்தோர் : வெளியான அதிர்ச்சி தகவல்கள்!!

கனேடிய குடியுரிமை பெற்றும் கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சமீபத்திய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி 2017ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுகளுக்கிடையில் கனடாவிலிருந்து வெளியேறி வேறொரு நாட்டில் குடியேறும் கனேடியர்களின் எண்ணிக்கை 31 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் ஒரு கூட்டத்தினர் கனடாவை விட்டு அமெரிக்கா, ஹொங்ஹொங் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் குடியேறியுள்ளார்கள்.

கனடாவுடன் ஒன்றிணைந்து வாழும் அளவுக்கு பொருளாதார வசதி, அதாவது வருவாய், இது நம் நாடு என்னும் ஒரு எண்ணத்தைத் தரும் சூழல், இனவெறுப்பின்மை, வாழ வீடு, படித்த படிப்புக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வேலை என்பதுபோன்ற விடயங்கள் கிடைக்கவில்லை என்பதாலேயே குடியுரிமை பெற்றும் புலம்பெயர்ந்தோர் வேறு நாடுகளுக்கு வெளியேறிவருவதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக, குடியிருக்க சரியான வீடுகள் கிடைக்காததாலேயே, கனடாவுக்கு வந்து நான்கு அல்லது ஏழு ஆண்டுகளுக்குள், குடியுரிமை பெற்றும் புலம்பெயர்ந்தோர் பலர் கனடாவிலிருந்து வெளியேறுவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

மேலும், அப்படி கனடாவிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் வாழ்வோர், (இவர்கள் Canadian Expats என அழைக்கப்படுகிறார்கள்), இவர்களுக்கு ஒரு புகார் உள்ளது.

அதாவது, தாங்கள் வரி செலுத்தியும், மாகாண தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும், மருத்துவ அமைப்பை பயன்படுத்திக்கொள்ள தாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளனர்.

வவுனியாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது!!

வவுனியாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இரு சாரதிகளை நேற்றிரவு (02.05) வவுனியா போக்குவரத்து பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை தடுக்கும் நோக்கில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கில் ஆகிய இரு வாகனங்களின் சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் செலுத்திச் சென்ற இரு வாகனங்களும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளும் நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களை கண்டால் உடன் அறிவிக்கவும் : புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்!!

குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞரொருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞரின் காதலி மற்றும் குடும்ப உறுப்பினர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சம்பவத்தின் பின்னர் காணாமல்போயுள்ள பிரதான சந்தேகநபரின் குடும்பத்தினரை கைது செய்வதற்காக குடும்பத்தினரின் புகைப்படத்தை பொலிஸார் நேற்று (02.05) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

குளியாபிட்டிய, கபலாவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சுசிதா ஜயவன்ச என்பவர் கடந்த 10 நாட்களாக காணாமல்போயுள்ள நிலையில், கடைசியாக காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது காதலியின் தந்தை மற்றும் இரண்டு கொத்தனார்களுடன் சேர்ந்து குறித்த இளைஞரை தாக்கியுள்ளமை பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் குறித்த இளைஞரை பிரதேசத்தில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு காதலியின் தந்தை கூறியதாக கைது செய்யப்பட்ட கொத்தனார்கள் இருவரும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் பின்னர் பிரதான சந்தேகநபரும் அவரது மனைவியும், காணாமல்போன இளைஞனின் காதலியான அவரது மகள் மற்றும் இரண்டு மகன்களும், பிரதான சந்தேகநபரின் சகோதரி மற்றும் அவரது கணவரும் வீடுகளை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ளவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் பிரதான சந்தேகநபரின் பெற்றோர் மற்றும் மாமனார் குளியாபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழில் காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

யாழில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறீவரதன் சஞ்சிதன் என்ற வயது 22 வயதுடைய இளைஞனே இன்று அதிகாலை 12.30 மணியளவில், சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் அவரது காதலியின் வீட்டுக்கு சென்று அங்கு உறங்கியதாகவும் அதனையடுத்து 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக இளைஞனின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து உடற்கூற்று பரிசோதனைகள் நாளையதினமே நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் பரவும் வைரஸ் : முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை!!

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார்.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வைரஸ் என்பதால் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சமூகத்தில் பரவல் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார். மேலும், குறிப்பாக மற்ற நோய்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால், மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றைய வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் மனித உடலால் அதிக அளவில் உணரக்கூடிய வெப்பம் நாளை (2024.05.03) காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மொணராகலை மாவட்டங்களிலும் இந்த நிலை காணப்படும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.