யாழில் பட்டத்துடன் பறந்த இளைஞன்!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பாரிய படலப் பட்டத்தை தொடுவையாக இணைத்து பறக்க விட முற்றப்பட்ட போது பட்டம் ஏற்றும் வடத்துடன் இளைஞன் ஒருவர் வான் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு வடத்தில் தொங்கிய நிலையில் பறந்து பலரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பட்டங்கள் ஏற்றி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

சிறுவர்கள், இளைஞர்கள் என குழுக்கள் குழுக்களாக பாரிய அளவிலான பட்டங்களை கட்டி பறக்க விட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் மிகச் சிறப்பாக விதம் விதமாக விசித்திரமான பட்டங்களை கட்டி ஏற்றி தனக்கென மிக சிறந்த இடத்தை தக்க வைத்துள்ளது.

நேற்றும் வல்வெட்டித்துறை றெயின்போ (Rainbow) விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் கூடி பாரிய பட்டங்களை பறக்க விட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் சக நண்பர்களால் பாதுகாப்பாக குறித்த நபர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவாகும் தலைகீழ் மாற்றம்!!

தங்க விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08.01.2026) 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை தங்க சந்தையில் கடந்த திங்கட்கிழமை முதல் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான வீழ்ச்சி பதிவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 359000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

2025 வருட இறுதிப்பகுதி முதல் இலங்கையில் தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு பதிவாகியிருந்தது. இவ்வாறான சூழலில் அண்மைய சில நாட்களாக தலைகீழ் மாற்றம் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சொகுசு பஸ் – வேன் விபத்து : நால்வருக்கு நேர்ந்த கதி!!

புத்தளம், கருவலகஸ்வெவ, தப்போவ இரும்பு பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (07.01.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சொகுசு பஸ் ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் நால்வர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

11 வயது சிறுவனின் வாழ்வை பறித்த இளைஞன் : நடுவீதியில் பிரிந்த உயிர்!!

குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மேற்படி சிறுவன் சைக்கிளில் வீதியைக் கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உடனே கல்கமுவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையை முன்னெடுத்த பொலிஸார், காரின் சாரதியான 27 வயது இளைஞரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பணத்தை கீழே வையுங்கள் :தொட்டால் தீட்டு : விசித்திர மூட நம்பிக்கையுடன் கிராமம்!!

இமாச்சலப் பிரதேசத்தின் குலு பள்ளத்தாக்கில் உள்ள மலாணா கிராமம், அதன் கடுமையான கலாச்சார கட்டுப்பாடுகளால் மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

துஷிகா அகர்வால் என்ற பெண் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், கடையில் பொருள் வாங்கும்போது பணத்தை நேரடியாக கொடுக்காமல் தரையில் வைப்பது காணப்படுகிறது.

வெளியாட்கள் தொட்டால் ‘தீட்டு’ ஏற்படும் என்ற நம்பிக்கை இங்கு நிலவுகிறது. அதனால் வெளியாட்கள் கிராம மக்களை, வீடுகளை, சுவர்களை, கோவில்களை தொட அனுமதி இல்லை. பணம் மற்றும் பொருட்கள் கைமாறும்போதும் நேரடியாக வழங்கப்படாது. அனைத்தும் தரையிலேயே வைக்கப்படும்.

மலாணா கிராமத்திற்கு தனி நிர்வாகமும், பழங்கால சட்டங்களும் உள்ளன. இந்திய அரசியலமைப்பை விட, ஜம்லு தேவதாவின் கட்டளைகளே இங்கு முக்கியம்.

அலெக்சாண்டரின் படைவீரர்களின் வாரிசுகள் தாங்கள் என நம்பும் இந்த மக்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். இது பிற்போக்குத்தனமா, கலாச்சார பாதுகாப்பா என்ற விவாதம் இணையத்தில் தீவிரமாக நடக்கிறது.

அமெரிக்காவில் இந்தியப் பெண் கொலை : கடன் தகராறில் கொடூர முடிவு!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்த 32 வயது இந்தியப் பெண் நிகிதா கோடீஷலா, தனது முன்னாள் அறை நண்பரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாக மாயமான நிலையில் இருந்த நிகிதாவின் உடல்,

அவர் தங்கியிருந்த வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் டிக்கிக்குள் இருந்து மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அர்ஜுன் சர்மா என்ற 32 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நிகிதா தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்.

நிகிதா மற்றும் அர்ஜுன் சர்மா இருவரும் முன்பு ஒரே அறையில் தங்கியிருந்ததாகவும், அந்த காலத்தில் அர்ஜுன் நிகிதாவிடமிருந்து சுமார் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களைக் கடனாக பெற்றிருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பணத்தை திருப்பிக் கேட்டு நிகிதா தொடர்ந்து வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆத்திரமே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று நிகிதாவின் தந்தை சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கொலை செய்த பிறகு, அர்ஜுன் சர்மா தற்கொலை செய்துகொள்ளப் போவதாக நிகிதாவின் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அந்த தகவலைப் பெற்ற குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

தற்போது நிகிதாவின் உடல் அமெரிக்காவில் உள்ள நிலையில், அதை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு மற்றும் வெளியுறவுத் துறை உதவ வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 வயது மகளை உடலுடன் கட்டிக்கொண்டு ஏரியில் குதித்த தாய் : பொலிசார் விசாரணை!!

தட்சிண கன்னடா (கர்நாடகா) மாவட்டம், கொடியால கிராமத்தைச் சேர்ந்த மதுஸ்ரீ (34) மற்றும் அவரது 3 வயது மகள் தன்வி ஆகிய இருவரின் சடலங்கள்,

அருகில் உள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா? தற்கொலையா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தனது கணவர் ஹரீஷ் மற்றும் குழந்தையுடன் மதுஸ்ரீ என்கிற இளம்பெண் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் உறங்கச் சென்றவர்கள், மறுநாள் காலையில் காணவில்லை.

தாயையும், மகளையும் காணவில்லை என்று உறவினர்கள் அக்கம்பக்கம் இவர்கள் இருவரையும் தேடிப் பார்த்தபோது, வீட்டின் அருகே உள்ள ஏரியில் இருவரும் சடலமாக மிதந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டபோது அங்கிருந்தவர்கள் கண்கலங்கினர்.

மதுஸ்ரீ தனது 3 வயது மகள் தன்வியை, ஒரு துணியால் தன்னோடு உடலில் சேர்த்து இறுக்கிக் கட்டிக் கொண்டு ஏரியில் குதித்துள்ளார். சடலங்கள் மீட்கப்பட்டபோது, அந்தச் சிறுமி தனது தாயை அணைத்த நிலையிலேயே உயிரிழந்திருந்தது கண்கலங்க செய்தது.

குடும்பத் தகராறு அல்லது மன உளைச்சல் காரணமாக மதுஸ்ரீ இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று முதற்கட்டமாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதே சமயம் மதுஸ்ரீயின் தாய் ரத்னாவதி,

தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்துள்ளார். இதனால் இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் சதி நடந்ததா என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவுகள் வந்த பிறகே மரணத்திற்கான உண்மைத் தெரிவரும் எனப் பெல்லாரே போலீசார் தெரிவித்துள்ளனர்.

5000 கி.மீ. பறந்து சாதனை படைத்த இந்திய பால்கன் பறவைகள்!!

மிகச் சிறிய உடல் எடையுடன் (150–200 கிராம்) இருக்கும் அமூர் பால்கன் பறவைகள் விஞ்ஞானிகளையும் பறவையியல் ஆர்வலர்களையும் ஆச்சரியப்படுத்தும் சாதனையை நிகழ்த்தியுள்ளன.

இந்தியாவில் செயற்கைக்கோள் கருவி பொருத்தப்பட்ட மூன்று பால்கன் பறவைகள், வெறும் 5 நாட்களில் 5,000 கி.மீ. தூரம் பறந்து ஆப்பிரிக்காவை அடைந்துள்ளன.

இவை இந்திய நிலப்பரப்பை கடந்தவுடன், அரேபியக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் மீது இடைவிடாமல் பறந்துள்ளன.

மழைக்கால காற்றோட்டங்கள் மற்றும் வலுவான கடல் காற்று வழித்தடங்கள் அவற்றின் சக்தியைச் சேமித்து, இயற்கையான ‘கிளைடர்’ போல பறக்க உதவின.

பால்கன் பறவைகள் நீரில் தரையிறங்க முடியாததால், காற்றின் நேரத்தை சரியாகப் பயன்படுத்துவது அவற்றின் உயிர் காக்கும் யுக்தியாகும்.

சில பறவைகள் unihemispheric sleep எனப்படும் முறையில், மூளையின் ஒரு பகுதியை ஓய்வில் வைத்துக்கொண்டு மற்ற பகுதியைச் செயல்படுத்தி, பறக்கும் போதே தூங்கும் திறன் கொண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் இது இன்னும் ஆராய்ச்சியில் உறுதி செய்யப்படவில்லை.

இந்த பயணம், ஆசியாவின் இனப்பெருக்கப் பகுதிகளையும் ஆப்பிரிக்காவின் குளிர்கால தங்குமிடங்களையும் இணைக்கும் அற்புதமான சூழலியல் பாலமாக விளங்குகிறது.

உலகின் நீண்ட தூரப் பயணிகள் பட்டியலில், அமூர் பால்கன் பறவைகள் தங்கள் இடத்தை உறுதியாகப் பிடித்துள்ளன.

 

ஐரோப்பாவை தாக்கியுள்ள கடும் குளிர் : 6 பேர் பலி!!

ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிர், பனிப்பொழிவு மற்றும் உறைபனி காரணமாக இதுவரை குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

கடும் வானிலை சூழல் காரணமாக வீதி, தொடருந்து மற்றும் விமானப் போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸின் தென்மேற்கு பகுதியான லாண்டஸ் பகுதியில், ஏற்பட்ட வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், பாரிஸ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகளில் மேலும் இருவர் உயிரிழந்தனர். பாரிஸ் நகரின் கூரைகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் முழுவதும் பனியால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டன.

கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக, பிரான்ஸின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள ஆறு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

போஸ்னியா மற்றும் ஹெர்செகோவினா நாட்டின் தலைநகர் சரயேவோவில், பனியால் மூடப்பட்ட மரத்தின் கிளை தலை மீது விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார்.

நகரம் முழுவதும் பனிப்பொழிவு பரவலாக காணப்படுகிறது. நெதர்லாந்தில், ஆம்ஸ்டர்டாமின் ஸ்கிப்போல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஓடுபாதைகளை சுத்தம் செய்வதும், விமானங்களில் உறைபனியை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே, தகவல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் உள்நாட்டு தொடருந்து சேவைகள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதன் விளைவாக, ஆம்ஸ்டர்டாமிலிருந்து பாரிஸுக்கான யுரோஸ்டார் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படவோ அல்லது தாமதமாகவோ இயக்கப்பட்டன.

ஜெர்மனியின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், வெப்பநிலை மறை பத்து பாகை செல்சியற்கு கீழ் சரிந்துள்ளது. இங்கிலாந்தில், இரவு நேரத்தில் வெப்பநிலை மறை 12.5 பாகை செல்சியஸ் வரை குறைந்தது.

இதனால் தொடருந்து, சாலை, விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன், வடக்கு பகுதிகளில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டன.

நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கும் நடிகை தமன்னா!!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம்வருபவர் நடிகை தமன்னா நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி நெட்டிசன்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிகை தமன்னா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் கடந்த 25 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஒரேயொரு படத்தில் தான் தமன்னா முன்னணி வேடத்தில் நடித்திருந்தார்.

ஆனாலும் வருடம் முழுக்க ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். அதற்குக் காரணம், படங்களில் ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்தில் ஆடினாலும் தமன்னா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார்.

இதனால் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்காக மட்டுமே அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரம் என்ற பெயரைப் பெற்றுள்ள தமன்னா தற்போது ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அண்மையில் கோவாவின் பாகா கடற்கரையில் உள்ள பிரபலமான லாஸ் ஓலாஸ் கடற்கரை கிளப்பில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தமன்னா, நடிகை சோனம் பஜ்வாவுடன் இணைந்து நடனமாடினார்.

இந்த 6 நிமிடம் மட்டுமே நடனம் ஆடியதாகவும், இதற்காக தமன்னாவுக்கு 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி எந்த நடிகையும் செய்யாத சாதனையைப் புத்தாண்டு தினத்தில் படைத்திருக்கிறார் தமன்னா.

இலங்கையை உலுக்கிய சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி : மகளின் பிறந்தநாளில் குடும்பத்தை எரித்த ஈவிரக்கமற்ற தந்தை!!

அனுராதபுரம் காலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் தனது மகளின் பிறந்தநாளில் தந்தை தீவைத்து குடும்பத்தை கொன்ற சம்பவம் முழு இலங்கையையுமே உலுக்கியுள்ள்து.

முழு அனுராதபுரத்தையும் உலுக்கிய, மனித இதயங்களைக் கலங்கடிக்கும் ஒரு பெரும் சோகச் செய்தி இது. நேற்று காலை (6) நுவரகம கொலனியாவில் உள்ள காலென்பிந்துனுவெவ பகுதியிலிருந்து வெளிவந்தது.

குடும்பத் தகராறு முற்றியதன் இறுதி விளைவாக, ஒரு முழு குடும்பமும் அழித்தொழிக்கப்பட்டது, தன்னுடைய குழந்தைகளின் பாதுகாப்புக்கு அர்ப்பணித்திருக்க வேண்டிய ஒரு தந்தை,

குழந்தைகளையும், அ மனைவியையும் தீயில் கருகிப் போகச் செய்தது விதியின் கொடூரமான விளையாட்டா என்பதைப் புரிந்துகொள்வதே கடினமாக உள்ளது.

காலென்பிந்துனுவெவ காவல் பிரிவுக்கு உட்பட்ட பண்டிகரமடுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த கொடூரக் குற்றம் நடந்துள்ளது.

நேற்று அதிகாலை 2:00 மணியளவில், சமன் அனுருத்த பிரதீப்பிரியா என்ற 43 வயது தச்சரான ஒருவர், தனது மனைவி, குழந்தைகள் மற்றும் மாமியார் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் பெட்ரோல் போன்ற எரியக்கூடிய திரவத்தை ஊற்றி தீ வைத்ததன் மூலம் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார். இந்தத் துயரம் பலியான 13 வயது மகளின் பிறந்தநாளில் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த 13 வயது மகள் திமல்கா ஜெயஷானியின் பிறந்தநாள், சம்பவம் நடந்த நாளுக்கு முந்தைய நாள், ஜனவரி 5 ஆம் தேதி ஆகும். சந்தேகத்திற்குரிய தந்தை, தனது இளைய மகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவதாகக் கூறி,

கேக்குகள் மற்றும் பரிசுகளுடன் பண்டிகரமடுவவில் உள்ள தனது மனைவியின் தாயாரின் வீட்டிற்கு மிகுந்த பாசத்துடன் வந்துள்ளார்.

அவர் தனது குழந்தைகளுடனும் மனைவியுடனும் பிறந்தநாளைக் கொண்டாடி, கேக் வெட்டி மகிழ்ச்சியாக இருந்ததாக ஆரம்பகட்ட காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முடிவில் தந்தையின் மனதில் உருவான கொடூரமான திட்டத்தால் அந்த மகிழ்ச்சி ஒரு கணத்தில் சாம்பலானது. திரும்பிச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறுவது போல் நடித்த அந்தச் சந்தேக நபர், உண்மையில் அந்த இடத்தை விட்டுச் செல்லவில்லை.

அவர் வந்த லாரியை வீட்டிற்கு அருகில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்தவர்கள் தூங்கும் வரை காத்திருந்ததாக காவல்துறை சந்தேகிக்கிறது. நள்ளிரவுக்குப் பிறகு, வீட்டில் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ​​சந்தேக நபர் தனது செயலை அரங்கேற்றினார்.

அவர் வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் கூரை மீது ஏறி, அதன் வழியாக இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்திற்குள் நுழைந்தார்.

பின்னர், தனது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மாமியார் உறங்கிக்கொண்டிருந்த அறையைக் கண்டுபிடித்து, அதில் எரியக்கூடிய திரவத்தை ஊற்றி தீ வைத்தார். தீ மளமளவெனப் பரவி, அறை முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது, உள்ளே இருந்தவர்களுக்குத் தப்பிப்பதற்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

தீ விபத்தால் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்கள் காரணமாக, தீ வைத்த சமன் அனுருத்த பிரதீப்பிரியா மற்றும் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட 13 வயது மகள் திமல்கா ஜெயஷானி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 36 வயது மனைவி திருமதி பிரபாஷா சந்தமாலி ஜெயரத்ன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தயார் நிலையில் அதிகாரிகள்!!

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக, 8 ஆம் திகதி முதல் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும் நிலை அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

அதன்படி ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து அவதானம் செலுத்தி, அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளமை கறிப்பிடத்தக்கது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் : யாழ்ப்பாணம் இதுவரை எதிர்கொள்ளாத பாதிப்பை சந்திக்குமென எச்சரிக்கை!!

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழில் 650 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதன் தாக்கம் காரணமாக யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (07.01.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், உருவாகியுள்ள தாழ்வு மண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர உள்ளது. இது மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் நகரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்றும் வீசுக்கூடும்.

குறிப்பாக 1970ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21ஆவது தாழ்வு மண்டலமாக அமைகின்றது. ஆனாலும் கடந்து சென்ற தாழ்வு மண்டலங்கள் விட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதாவது இதன் நகர்வும் பாதை கடல் பகுதியாக இருந்தாலும் வடக்கு நோக்கி நகரும் போது தரையையும் ஊடறுத்துச் செல்லவுள்ளது. அத்துடன் மிக குறைந்தளவு வேகத்தில் நகர்வதால் எதிர்வரும் 8, 9, 10ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணம் பாரியளவு மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

அத்துடன் 9, 10 ஆம் திகதிகளில் யாழ். மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள உள்ளது. இதன் தாக்கம் டிட்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்க முடிகிறது.

துறைசார் அதிகாரிகள் இது தொடர்பில் துரித முன்னேற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்தது. எனவே பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை அவதானத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என அறிவுறுத்தியுள்ளார்.

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளைஞன் : பின்னணியில் இலங்கைப் பெண்!!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கை பயணி ஒருவர் சுமார் 70 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள் பொதியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (07) காலை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் ‘கிரீன் ரோடு’ வழியாக விமான நிலையத்திலிருந்து போதைப்பொருள் பொதியை எடுத்துச்செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பில் சுற்றுலா விடுதியை நடத்தும், ஜாஎலயை சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னணியில் இலங்கை பெண்

தாய்லாந்தின் பெங்காங்கிலிருந்து இந்தியாவின் புது டில்லிக்கு ‘குஷ்’ போதைப்பொருள் பொதியை அவர் கொண்டு வந்து, அங்கிருந்து இன்று காலை சுமார் 07.33 மணிக்கு இந்தியன் எயார்லைன்ஸ் விமானம் AI 277 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.

இவர் 7 கிலோகிராம் 70 கிராம் ‘குஷ்’ என்ற போதைப்பொருளை 15 பொதிகளில் இரண்டு சூட்கேஸ்களில் இனிப்புகள் அடங்கிய பொதிகளுடன் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சுங்கத்துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில், தாய்லாந்தில் வசிக்கும், இலங்கை பெண் ஒருவரால், நாட்டிற்கு கொண்டுவருவதற்காக போதைப்பொருள் ஒப்படைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் : சில பகுதிகளில் நாளை முதல் தீவிரமடையும் மழை!!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே நிலை கொண்டிருந்த நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

அவர் இன்று 07.01.2026 புதன்கிழமை நண்பகல் 12.45 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார். இது நாளை இரவு (08.01.2026) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு புயலாக மாறுமா என்பது தொடர்பாக நாளை இரவே(08.01.2026) தீர்மானிக்க முடியும்.

ஒரு புயலின் படிநிலை வளர்ச்சியில்,

1. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

2. காற்றுச் சுழற்சி

3. காற்றழுத்த தாழ்வு நிலை

4. நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

5. தாழ்வு மண்டலம்

6. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

7. புயல்

8. சூறாவளி

9. சூப்பர் சூறாவளி என அமையும்.

நாளை முதல் தீவிரம்

தற்போது தெற்கு, மத்திய, ஊவா, கிழக்கு, வட மத்திய, வடக்கு ( ஒரு சில பகுதிகளில்) மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை நாளை முதல் தீவிரமடையும்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளை முதல் மழை பரவலடைவதோடு செறிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தாழமுக்கம் தொடர்ச்சியாக வலுவடைகிறது. ஆகவே வானிலை நிலைமைகளின் குழப்பநிலையும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே மக்கள் எச்சரிக்கை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, போதுமான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வது அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இந்திய முகாமில் வசிக்கும் இலங்கைப் பெண்ணின் கோரிக்கை!!

இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னாரை சேர்ந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் (05) மாவட்ட ஆட்சியரிடம் மனுவினை வழங்கிய பின்னர் இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக 2023ஆம் ஆண்டு மே மாதம் மன்னாரில் இருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு சென்று இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஜிம்ஸ்ரிக் அவரது மனைவி கிறிஸ்ரபேல் ராஜினி குடும்பத்தினரே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தாங்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் போதியளவு அடிப்படை மற்றும் உணவு வசதிகள் இல்லாததால் சொந்த நாட்டுக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும்

இதுவரை தம்மை அனுப்பிவைக்காததால் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதி உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தம்மோடு தங்கியிருந்த 13 குடும்பங்களில் 9 குடும்பங்கள் சட்டவிரோதமான முறையில் பணம் செலுத்தி படகில் இலங்கைக்கு மீண்டும் சென்றுள்ளதாகவும், தம்மிடம் படகில் செல்வதற்குரிய போதியளவு பண வசதி இல்லாத காரணத்தினால் தங்களால் செல்ல முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 மார்ச் மாதம் 20ஆம் திகதியிலிருந்து 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வரத் தொடங்கியுள்ளனர்.

இவர்கள் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.