ஆலயம் சென்று திரும்பியவருக்கு கூரையை பிய்த்துக்கொண்டு கொடுத்த கடவுள் : லொத்தர் சீட்டில் 10 கோடி ரூபாய்!!

கேரளாவில் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவருக்கு, கேரள அரசின் ‘சம்மர் பம்பர்’ லொத்தர் சீட்டில் 10 கோடி ரூபாய் (இந்திய மதிப்பு) பரிசாகக் கிடைத்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், பரப்பனங்காடியைச் சேர்ந்த 51 வயதான நதுவெட்டில் பத்மநாபன் என்பவர், கடந்த 8 ஆண்டுகளாக கோழிச்சேனாவில் உள்ள குடும்பத்தினர் அளவற்ற மகிழ்ச்சிபல்பொருள் அங்காடி ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

வழக்கமாக லொத்தர் சீட்டு வாங்கும் பழக்கம் இல்லாத பத்மநாபன், அண்மையில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

தரிசனம் முடிந்து கடந்த மார்ச் 26 ஆம் திகதி கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு நோக்கிச் சென்றபோது, தற்செயலாக 250 ரூபாய் மதிப்புள்ள கேரள அரசின் ‘சம்மர் பம்பர்’ லொத்தர் சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.

குலுக்கல் முடிவுகள் வெளியானபோது, பத்மநாபன் வாங்கிய SB 517026 என்ற இலக்கமுடைய சீட்டிற்கு முதல் பரிசான 10 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எதிர்பாராத இந்த இமாலயப் பரிசுத் தொகையினால் பத்மநாபன் மற்றும் அவரது குடும்பத்தினர் அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை பத்மநாபன் பரப்பனங்காடியில் உள்ள எஸ்பிஐ (SBI) வங்கி மேலாளரிடம் ஒப்படைத்து, பரிசுத் தொகையைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

ஒரு சாதாரண பல்பொருள் அங்காடி ஊழியராகத் தனது வாழ்க்கையை நகர்த்தி வந்த பத்மநாபனின் வாழ்வில், இந்த அதிர்ஷ்டம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

 

தண்ணீரில் மூழ்கிய குழந்தை : மனமுடைந்து தாய் எடுத்த தவறான முடிவு!!

பெங்களூருவில் 11 மாத குழந்தை உயிரிழந்த சோகத்தில் தாய் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை பெங்களூருவில் 29 வயது மென்பொறியாளரான தாய் பிரதீபா துவைத்த துணிகளை மாடியில் போடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது சலவை இயந்திரம் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு தவழ்ந்த வந்த அவரது 11 மாத குழந்தை அங்கிருந்த தண்ணீர் நிரப்பப்பட்ட வாளிக்குள் எதிர்பாராதவிதமாக விழுந்து மூழ்கியுள்ளது.

தாய் பிரதீபா மாடியிலிருந்து கீழே இறங்கி வரும் போது தண்ணீர் வாளிக்குள் குழந்தை அசைவு இல்லாமல் கிடப்பதை பார்த்து நிலைகுலைந்து உள்ளார்.

குழந்தை இறப்பிற்கு தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் ஆழ்ந்த பிரிதீபா தன் உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடிவெடுத்துள்ளார்.

பிரதீபாவின் கணவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவி மற்றும் குழந்தை சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பிரிதீபா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

அதில் தான் மாடிக்குச் சென்ற போது இந்த சம்பவம் நடந்தததால் குழந்தை உயிரிழப்பிற்கு நான் மட்டுமே பொறுப்பு என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையின் தற்போது தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரும் SMS தொடர்பில் எச்சரிக்கை!!

நாட்டில் அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் சைபர் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரும் சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் இணைய இணைப்புகள் (Links) குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறை ஊடகப்பிரிவு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளில் உள்ள இணைய இணைப்புகளை (Links) கிளிக் செய்வதற்கு முன்னர், அதன் இறுதிப் பகுதியை (Domain) நன்கு அவதானிக்க வேண்டும்.

குறிப்பாக .NET, .XYZ மற்றும் .CC போன்ற வழமைக்கு மாறான முனைகளைக் கொண்ட இணைய இணைப்புகளைத் திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான இணைய முகவரிகள் பெரும்பாலும் தனிநபர் தரவுகளைத் திருடுவதற்கும், வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை மோசடி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் இவ்வாறான செய்திகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை (Links) எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வவுனியாவில் கலைப் பிரிவில் சாதனை படைத்த மாணவி!!

வவுனியா அல் அக்ஸா மகாவித்தியாலய மாணவி வெளியாகிய உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில் கலைப் பிரிவில் மாவட்டத்தில் மூன்றாம் நிலை பெற்று சாதனை படைத்துள்ளார்.

வவுனியா புதியசாளம் பைக்குளத்தில் வசிக்கும் ஐதுறூஸ் முஸ்தகீம், ஜாஹிறா தம்பதிகளின் புதல்வி பாத்திமா சனா கலைப் பிரிவில் தமிழ், புவியியல், அரசியல் ஆகிய பாடங்களைக் கற்று 3A சித்திகளைப் பெற்று வவுனியா மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலை பெற்றுள்ளார். இவர் அல் அக்ஸா மகாவித்தியாலத்தில் கல்வி கற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த மாணவியை வழி நடத்திய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைவதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

 

காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் : 15 நாட்களில் பெண் எடுத்த விபரீத முடிவு!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர், காதல் திருமணம் செய்த 15 நாட்களிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதாயூன் பகுதியைச் சேர்ந்த இளைஞரைத் தீவிரமாகக் காதலித்து வந்த இவர், இருவீட்டாரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் நீதிமன்றத்தில் முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு கணவர் வீட்டில் வசித்து வந்த அந்தப் பெண், திடீரென தனது சகோதரர் வீட்டிற்குத் திரும்பிய நிலையில் இந்தத் துயர முடிவு எடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடலை மீட்ட காவல்துறையினர், அங்கு ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர்.

அந்தத் தற்கொலைக் குறிப்பில் தனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல என்று அவர் குறிப்பிட்டிருந்தாலும், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தது முதல் அவர் நீண்டகாலமாக மன உளைச்சலில் இருந்ததாகத் தெரியவருகிறது.

காதலித்து கரம் பிடித்த கணவருடன் வாழ்ந்த சில நாட்களிலேயே இவருக்குள் ஏற்பட்ட மன அழுத்தமே இந்த விபரீத முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், திருமணமான சில நாட்களிலேயே கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு இவரது கணவர் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றதும், 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே நேரில் வாக்குவாதம் நடந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்கொலைக் குறிப்பில் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை என்றாலும், குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வளர்ப்பு நாய் கடித்ததில் 11ம் வகுப்பு மாணவி பலியான சோகம்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள புதியம்புத்தூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகள் செல்வசுஹாசினி தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வந்தார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் வளர்க்கும் நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த நாயின் நகம் பட்டு மாணவிக்கு உடலில் சிறு கீறல் ஏற்பட்டுள்ளது.

நாய் கீறல் தானே என்று அலட்சியமாக இருந்த மாணவி அதற்குரிய முறையான மருத்துவ சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி மாணவிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் நாய் கீறியதன் மூலம் பரவிய விஷம் மாணவியின் உடல் முழுவதும் பரவி இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட மாணவிக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த மாணவி செல்வசுஹாசினி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

வளர்ப்பு நாயின் நகம் பட்டதைச் சாதாரணமாக நினைத்து உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்தாததால் 16 வயது மாணவியின் உயிர் பறிபோன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் துயர சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வளர்ப்பு விலங்குகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

செம்பருத்திப் பூவின் காம்பை விழுங்கிய 7 மாதக் குழந்தை மூச்சுத் திணறி பரிதாபமாக பலி!!

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் அருகே உள்ள தொட்ட ஹெஜ்ஜூரு கிராமத்தில், விளையாடிக் கொண்டிருந்த 7 மாத ஆண் குழந்தை செம்பருத்தி பூவின் காம்பை விழுங்கியதால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

சுதர்சன் மற்றும் நவ்யா தம்பதியினரின் மகனான சின்மயி என்ற அந்தச் சிறுவன், வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது வீட்டின் பூஜை அறை கதவில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த செம்பருத்தி பூவை எடுத்து விளையாடிய குழந்தை, எதிர்பாராத விதமாக அதன் காம்புப் பகுதியை விழுங்கியுள்ளது.

சமையல் அறையில் தாய் நவ்யா வேலை செய்து கொண்டிருந்தபோது, குழந்தையின் அண்ணன் தம்பியின் வாயில் பூவின் காம்பு சிக்கியிருப்பதைப் பார்த்து எடுக்க முயற்சி செய்துள்ளான்.

ஆனால், அந்தக் காம்பு குழந்தையின் தொண்டையில் ஆழமாகச் சிக்கிக் கொண்டதால் சிறுவனால் சுவாசிக்க முடியாமல் திணறல் ஏற்பட்டுள்ளது. பதற்றமடைந்த குடும்பத்தினர் உடனடியாகக் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுவாசப் பாதையில் பூவின் காம்பு சிக்கியிருப்பதை உறுதி செய்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

மருத்துவர்களின் தீவிர முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 7 மாதக் குழந்தை சின்மயி பரிதாபமாக உயிரிழந்தான்.

தன் கண் முன்னாலேயே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இப்படி ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்ததைக் கண்டு பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து உன்சூர் புறநகர்க் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

 

வவுனியாவில் விஞ்ஞானப் பிரிவில் முதல் நிலை பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி சஞ்சனா!!

வைத்தியராக வந்து நோயாளர்களுக்கு சிறப்பாக பணியாற்றுவதே எனது இலக்கு என உயர்தரப் பெறுபேற்றில் விஞ்ஞானப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி சஞ்சனா குணலிங்கம் தெரிவித்துள்ளார்.

அம் மாணவி மேலும் தெரிவிக்கையில், விஞ்ஞானம் பிரிவில் நான் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையையும் தேசிய ரீதியில் 81 ஆவது நிலையையும் பெற்றுள்ளேன்.

நான் இந்த நிலையை அடைவதற்கு எனது குடும்ப உறுப்பினர்கள் தான் முக்கிய காரணம். அடுத்தது ஆசிரியர்கள். அவர்களுக்கு நன்றிகள்.

உயர்தரப் படிப்பு என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி அல்ல. எனக்கு வழிகாட்டக் கூடிய ஆசிரியர்கள், நண்பர்கள் இருந்தார்கள். எனது சகோதரிகளின் ஒத்துழைப்பும் கிடைத்தது.

உண்மையில் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என்று இல்லை. விரும்பிப் படித்தால் சரி. சிலர் கஷ்டப்பட்டு மனதை வருத்திப் படிக்கிறார்கள். ஆனால் முதலில் பாடத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு சிறந்த ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தார்கள். நான் அவ்வாறு படித்ததால் விஞ்ஞானத் துறையில் சாதிக்க முடிந்தது.

பல்கலைக்கழக படிப்பை முடித்த பின் வைத்தியராக வந்து நோயாளர்களுக்கு சிறப்பாக பணியாற்றுவதே எனது இலக்கு. எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் கலைப்பிரிவில் முதல் நிலை பெற்ற சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி துவாரகா : விடாமுயற்சியே வெற்றிக்கு காரணம்!!

கஸ்டத்திற்கு மத்தியிலும் விடா முயறாசியே வெற்றிக்கு காரணம் என உயர்தரப் பெறுபேற்றில் கலைப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மாணவி துவாரகா அல்லிராசா தெரிவித்துள்ளார்.

அம் மாணவி மேலும் தெரிவிக்கையில், கலைப் பிரிவில் நான் தமிழ், புவியியல், அரசியல் ஆகிய பாடங்களை கற்று 3 ஏ சித்திகளைப் பெற்று வவுனியா மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளேன்.

எனது கிராமம் கோவில் புளியங்குளம். மிகவும் பின் தங்கிய கிராமம். எனது கிராம பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் வரை கற்று உயர்தரத்தை சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் கற்றேன்.

சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த நான் எனது பெற்றோரின் கடின உழைப்பால் உறவினர் வீட்டில் தங்கி நின்று உயர்தரம் கற்றேன்.

நான் இந்த நிலைக்கு வருவதற்கு எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முக்கிய காரணம். அத்துடன் என்னை வழிப்படுத்தி சிறப்பாக கற்பித்த பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களுக்கும் நன்றிகள்.

அத்துடன் வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தால் இறுதி நேரத்தில் நடத்தப்பட்ட செயலமர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதனை நெறிப்படுத்தி நடத்திய வலயத்திற்கும் எனது நன்றிகள்

எனது கிராமத்தில் முன் முதலாக நான் மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளேன். சட்டத்தரணியாக வந்து எனது பின் தங்கிய கிராம மக்களுக்கு சேவை செய்வதே எனது விருப்பம் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி நதீராவின் விருப்பம் இதுதான்!!

சமுதாயத்திற்கு ஒரு சகபாடியாக இருக்க விரும்புகிறேன் என கணிதப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி நதீரா அற்புதராஜா தெரிவித்துள்ளார்.

அம் மாணவி மேலும் தெரிவிக்கையில், கணிதப் பிரிவில் நான் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளேன்.

நான் இந்த நிலையை அடைவதற்கு காரணமான வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள். மற்றும் பாடசாலை சமூகத்திற்கு நன்றிகளை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த வெற்றிக்கு அயராது உழைத்த எனது ஆசிரியர்களுக்கும் சக நண்பர்களுக்கும் நன்றிகள். பல கஷ்டங்களுக்கு மத்தியில் ஆய்வுகூட வசதியையும் நூலக வசதியையும் செய்து தந்தமையால் நாம் சிறப்பாக படித்தோம்.

அடுத்து வரும் மாணவர்களுக்கும் அந்த வசதியை செய்து கொடுக்க வேண்டும். இந்த பாடசாலைக்கு மேலும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

நான் பொறியியலாளராக வரவேண்டும் என்பது எனது விருப்பம். இந்த சமுதாயத்திற்கு நல்லதொரு சகபாடியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது!!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 5 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து1500ற்கும் அதிகமான போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் பெற்ற கிளிநொச்சி மாணவனின் வெற்றியின் இரகசியம்!!

ஒவ்வொரு நாளும் விருப்பத்துடன் பாடங்களை கற்று வந்தால் உயர்தரப் பரீட்சையில் வெற்றி பெறுவது இலகுவாகும் என அகில இலங்கை ரீதியில், இயற்பியல் அறிவியல் (Physical Science) பாடத்தொகுதியில் முதலாம் இடம் பெற்ற கிளிநொச்சி மாணவர் தெய்வேந்திரன் திருக்குமரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாம் நினைப்பது போன்று உயர்தரப் பரீட்சை அவ்வளவு கஷ்டமானது அல்ல. ஒவ்வொரு நாளும் படிக்கும் பாடங்களை விரும்பி கற்றுக்கொண்டால் ஒரு நல்ல நிலையை அடைய முடியும்.

எனக்கு இத்தனை காலமாக ஆதரவளித்த சக மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் துணையாக நின்ற பெற்றோர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பெரிதாக பங்கேற்கவில்லை. ஆனால் விளையாட்டு போட்டிகளில் மட்டும் வலய மட்டம் வரை சென்றுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தகப் பிரிவில் முதல்நிலை பெற்ற முல்லைத்தீவு மாணவி!!

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவி வர்த்தக பிரிவில் முதன்நிலை பெற்று முல்லைத்தீவு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

2025 ஆண்டுக்கான கா. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம்(31.03.2026) வெளியாகிய நிலையில் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தை சேர்ந்த அன்ரனிற்றா நிலுயினி அருள் ஜெனிபர் எனும் மாணவி வர்த்த பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இவர், தேசிய நிலையில் 312 வது இடத்தை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ரீதியில் உயர்தரப் பரீட்சையில் முதலாம் இடம் பெற்ற கிளிநொச்சி மாணவன்!!

2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகின.

அதன்படி, அகில இலங்கை ரீதியில் உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சியை சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற மாணவன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

இம்மாணவன், இயற்பியல் அறிவியல் (Physical Science) பாடத்தொகுதியில் 3A சித்திகளை பெற்றுள்ளார்.

அதேநேரம், அகில இலங்கை ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் முதலாவது புள்ளியை பெற்றுக் கொண்டுள்ளார்.

கட்டுப்பாடுகள் இன்றி நாளை எரிபொருள் விநியோகம்!!

நாளை (1) மாத்திரம், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை அல்லது இரட்டை எண்களாகக் கொண் அனைத்து வாகனங்களும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவுள்ளன.

இதனை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி அனைத்து வகையான வாகனங்களும் நாளை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இலங்கையின் அதிரடி தீர்மானம் : 39 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா!!

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், தெரிவுசெய்யப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு 6 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்திற்கு 2025 ஜூலை 21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ், இலவச விசா வழங்குவதற்கான சட்ட வரைவுகள் சட்ட ஆலோசகரால் தயாரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளன.

இந்த முன்மொழிவு பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அமைச்சரவை அதற்கான அனுமதியை அளித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, இலங்கையை உலகின் முன்னணி சுற்றுலா இலக்குகளில் ஒன்றாக வலுப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்குள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் ஏடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற போது, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறித்த 39 நாடுகளின் விபரங்களை அறிவித்தார்.

அவுஸ்திரேலியா, ஒஸ்திரியா, பஹ்ரைன், பெலாரஸ், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கசகஸ்தான், குவைத், மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து,

நோர்வே, ஓமான், பாகிஸ்தான் ,போலந்து, கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, தென் கொரியா, ஸ்பெயின், சுவீடன், சுவிற்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா

இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், இலங்கையின் சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.