மட்டக்களப்பு கிணற்றில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம்!!

மட்டக்களப்பு கிணற்றில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த பெண் அன்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் விளக்கமளித்தார், சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்,

நான் அற்றைய தினம் காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பிற்குச் செல்வதற்காக, எனது குழந்தையுடன் வவுணதீவு சந்தி பேருந்து நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு வயோதிபப் பெண்ணும் பேருந்துக்காகக் காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு முச்சக்கரவண்டி எங்களை எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டது. நான் மட்டக்களப்பு நகருக்குச் செல்ல வேண்டும் என்று கூறியபோது, எம்மை ஏறுமாறு கூறினர். என்னிடம் போதிய பணம் இல்லை என்று கூறியபோது, 100 ரூபா மட்டும் தருமாறு கூறினர்.

அதனை ஏற்று நானும் அந்த வயோதிபப் பெண்ணும் அதில் ஏறினோம். முச்சக்கரவண்டி நகரை நோக்கிச் சென்றபோது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் அந்த வயோதிபப் பெண் இறங்கிக்கொண்டார்.

பின்னர், என்னை எங்கு விட வேண்டும் என்று கேட்டபோது, சத்தார் புடவைக்கடை வீதியில் விடுமாறு கூறினேன். அங்கு என்னை இறக்கிவிடும்போது, அந்த முச்சக்கரவண்டியில் இருந்த ஒரு பெண், தான் சேலை (Saree) எடுக்கப் போவதாகவும், அதுவரை தன்னுடன் வருமாறும் என்னைக் கேட்டுக்கொண்டார்.

நான் சேலை கடைக்கு முன்னால் காத்திருப்பதாகக் கூறினேன். நான் குழந்தையுடன் அருகிலிருந்த நகைக்கடைக்குச் சென்று, அடகு வைத்திருந்த தங்க மோதிரத்தை 24,000 ரூபா செலுத்தி மீட்டுக்கொண்டேன்.

மீண்டும் அந்தப் பெண் சொன்ன கடைக்கு வந்தபோது, அவர் முச்சக்கரவண்டி ஓட்டுநருடன் தொலைபேசியில் பேசிவிட்டு, எங்களை மணிக்கூட்டுக் கோபுரப் பகுதிக்கு வருமாறு கூறினார்.

நானும் அந்தப் பெண்ணும் அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுரம் நோக்கிச் சென்று, மீண்டும் அதே முச்சக்கரவண்டியில் ஏறினோம். தொடர்ந்து முச்சக்கரவண்டி பொதுச்சந்தை வீதி வழியாகச் சென்று ஓரிடத்தில் நின்றது.

அங்கிருந்து பிரதான பேருந்து நிலைய வீதியூடாக வவுணதீவு நோக்கிப் பயணித்தது. வலையிறவுப் பாலத்தைக் கடக்கும்போது, அந்தப் பெண் மூன்று குளிர்பானப் (Juice) போத்தல்களை வாங்கினார்.

எனது மகளுக்கும் அவருக்கும் பச்சை நிறக் குளிர்பானத்தையும், எனக்கு விளாம்பழக் குளிர்பானத்தையும் தந்தார். நான் அதனை அருந்தினேன். வவுணதீவு சந்தியில் அந்தப் பெண் இறங்கிக்கொண்டார்.

அதன் பின்னர், ஒரு இளைஞன் கையில் கத்தியுடன் (தாள்கத்தி) அந்த முச்சக்கரவண்டியில் ஏறினார். அவர் ஏன் கத்தியுடன் ஏறுகிறார் என்று நான் கேட்டபோது, மாட்டிற்குப் புல் வெட்டுவதற்காகச் செல்வதாகக் கூறினர்.

நான் என்னை தாண்டியடியில் இறக்கிவிடுமாறு கேட்டபோது, அதற்குச் சம்மதித்தனர். ஆனால், முச்சக்கரவண்டி கன்னங்குடா சந்தியூடாகத் தாண்டியடி நோக்கிச் செல்லாமல், பாவற்கொடிச்சேனை பகுதியை நோக்கிச் சென்றது. ஏன் இந்த வீதியில் செல்கிறீர்கள் என்று கேட்டபோது, அந்த இளைஞனை இறக்கிவிட்டு என்னை விடுவதாகக் கூறினர்.

அடுத்த சில நிமிடங்களில் நான் மயக்கமடைந்தேன். நான் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, நான் நீரில் மூழ்கியிருந்தேன்.

மேலே பார்த்தபோது வானம் தெரிந்தது. “வீட்டில் வெள்ளம் ஏறிவிட்டதா? ஏன் வானம் தெரிகிறது?” என்று குழப்பமடைந்த நிலையில், தப்பிப்பதற்காக நீரில் மூழ்கி எழுந்தேன்.

இரண்டு மூன்று முறை நீரில் மூழ்கி எழுந்த பின், “அம்மா, அம்மா” என்றும் எனது கணவரைப் பெயரிட்டும் சத்தமிட்டேன். “மீன்பிடிக்கச் சென்றவர் இவ்வளவு நேரமாக என்ன செய்கிறீர்கள்?” என்று கத்தினேன்.

அதன் பின்னரே எனது பிள்ளையைத் தேடி அலறினேன். அப்போது யாரோ ஒரு சிலர் வந்து எனது கையில் கயிற்றைக் கொடுத்து என்னைக் காப்பாற்றினார்கள் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சுட்டெரிக்கும் சூரியன் : பாடசாலைகள் மற்றும் பணியிடங்களுக்கு புதிய கட்டுப்பாடு!!

நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்ப காலநிலை காரணமாக, வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் , பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் அன்றாடச் செயல்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வெப்பமான காலநிலையில் நீரிழப்பு, வெப்பத்தாக்கம் மற்றும் தோல் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அதிக அபாயத்தைக் கொண்டுள்ளனர்.

ஆகவே பாடசாலைகளில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் தவிர்த்து, அதிகாலை அல்லது மாலை வேளைகளில் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பணியிடங்களில் வெளியில் வேலை செய்பவர்களின் நலன் கருதி, பணிகளை முற்பகல் 10.30 மணிக்கும் முன்னதாக அல்லது பிற்பகல் 3.30 மணிக்குப் பின்னரோ மாற்றியமைக்க வேண்டும்.

நண்பகல் வேளையில் நேரடி சூரிய ஒளியில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும், ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து வைத்து காற்றோட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது குளிர்ச்சி தரும் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமும் குறைந்தது 2.5 லீற்றர் நீர் அருந்த வேண்டும், சர்க்கரை கலந்த பானங்கள், கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் மதுபானங்களைத் தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து உள்ளதா என்பதை சிறுநீரின் நிறத்தைக் கொண்டு அவ்வப்போது அவதானிக்க வேண்டும்.

வெளியில் செல்லும் போது குடை, தொப்பி அல்லது முழு உடலையும் மறைக்கும் வகையிலான ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும்.

அதேவேளை வாகன சாரதிகள் வெயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்குள் ஏறுவதற்கு முன்னர், ஜன்னல்களைத் திறந்து உட்புற வெப்பத்தைக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து விலைகள் உயர்வு!!

இன்று (31) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்று எரிவாயு தட்டுபாடு காரணமாக இன்று (31) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

பிரான்ஸ் அரசியலில் தமிழர் தடம் : இலங்கை வம்சாவளி அதிதியா, பெரிஸில் பிரதி மேயராக நியமிப்பு!!

பிரான்ஸின் பெரிஸ் நகருக்கு அருகிலுள்ள பொன்டோ-கொம்போல்ட் (Pontault-Combault) மாநகரசபையின் பிரதி மேயராக 25 வயதேயான இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அதிதியா அனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் நிலவிய யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற அகதிகளின் புதல்வியான இவர், தனது 19 வயதிலேயே நகர சபை உறுப்பினராகத் தெரிவானார்.

தனது கடின உழைப்பு, கொள்கை உறுதி மற்றும் தான் வாழும் நகரத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் அண்மையில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் இவர் சிறந்து விளங்கினார்.

2026 மார்ச் மாதம் பொன்டோ-கொம்போல்ட் நகரின் பிரதி மேயராக நியமிக்கப்பட்ட அதிதியா, உள்ளூர் ஆட்சி நிர்வாகம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்றுறையைப் பூர்வீகமாகக் கொண்ட அனந்தராசா குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனது குடும்பப் பின்னணி மற்றும் ஆரம்பகால அனுபவங்களே அரசியலில் தனக்கு ஆழ்ந்த ஆர்வத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், இளைஞர் விவகாரங்களுக்கான மாநகர சபை உறுப்பினராக (2020-2026) பணியாற்றிய போது, 11 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டோருக்கான திட்டங்கள், “Quartier Jeunes” எனும் செயற்திட்டம் மற்றும் சுற்றுச்சூழல், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வுப் பட்டறைகளை அவர் முன்னெடுத்திருந்தார்.

இவரது இந்தப் புதிய நியமனம், மேலும் பல இளைஞர்களை அரசியலுக்கும் தலைமைத்துவப் பணிகளுக்கும் வருவதற்கு ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி!!

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (31) திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று (30) ஒரு பவுண் 24 கரட் தங்கம் 393,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 396,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 364,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக இலங்கையின் தங்கத்தின் விலை திடீர் வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நான்கு இலட்சம் ரூபாவை நோக்கி அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (31.03.2026) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,561.4 டொலர்களாக பதிவாகியுள்ளது.

அதேவேளை நேற்றைய தினம் உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,511.85 டொலர்களாக பதிவாகியிருந்தது.

அத்துடன் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (31.03.2026) 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 396000 ரூபாவாக காணப்படுகிறது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 364300 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச சந்தையில் வெள்ளி ஒரு அவுண்ஸின் விலை 71.98 டொலர்களாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

விழிப்புடன் செயற்பட்டு அனர்த்தங்களை தவிர்க்கவும் :இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத்தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

எனவே காடுகளை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அங்கு பயணம் செய்வோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

வறண்ட காற்று மற்றும் கடும் வெப்பம் நிலவும் சூழலில், மிகச்சிறிய தீப்பொறி பாரிய அளவிலான வனப்பகுதியை அழிக்கும் நிலை உள்ளமையினால் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீப்பரவல்களைக் கட்டுப்படுத்த முப்படையினர், பொலிஸார் மற்றும் ஏனைய தரப்பினரின் ஒத்துழைப்புடன் பேரிடர் மேலாண்மை மையம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

எனவே தீப்பரவல்கள் அல்லது அவசர நிலைமைகள் குறித்து பொதுமக்கள் எந்த நேரத்திலும் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து மும்மொழிகளிலும் தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்பதால், விழிப்புணர்வுடன் செயற்பட்டு அனர்த்தங்களைத் தவிர்க்க ஒத்துழைக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!!

இலங்கைக்கு சொந்தமான 42,000 மெட்ரிக் டொன் எரிவாயு இருப்பு தற்போது மாலைத்தீவில் நிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்த அளவு போதுமானது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த இருப்பை கூடிய விரைவில் நாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மே மாதத்திற்கு தேவையான 33,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிச்செல்லும் ஒரு கப்பல் ஏப்ரல் 25 ஆம் திகதி நாட்டிற்கு வந்து சேரும் என்றும் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், 7,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிச்செல்லும் ஒரு கப்பல் ஏப்ரல் 4 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நலிந்த குருகுலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடும் வெப்பம் : நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட சுகாதார அறிவுறுத்தல்கள்!!

இலங்கையில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, பாடசாலைகள் மற்றும் பணியிடங்களின் அன்றாடச் செயற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நீரிழப்பு மற்றும் வெப்பத்தாக்கம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் குறித்து பொது சுகாதார பரிசோதகர் ஆர்.எம். சதுன் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோயுள்ளவர்கள் இந்த வெப்பத்தினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தசைப்பிடிப்பு, தோல் பாதிப்புகள் மற்றும் மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், அவர்களை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் நண்பகல் வேளைகளில் வெளிப்புற செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உடற்பயிற்சிகளை அதிகாலை அல்லது மாலை வேளைகளில் மாத்திரம் நடத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பணியிடங்களில் வெளிப்புற பணிகளை மேற்கொள்வோர் காலை 10.30 மணிக்கு முன்னதாக அல்லது மாலை 3.30 மணிக்குப் பின்னர் தமது கடமைகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

மேலும், உட்புறச் சூழலில் போதிய காற்றோட்டத்தை உறுதி செய்ய ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஒரு நாளைக்கு 2.5 லீற்றருக்கும் அதிகமான நீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.

அதேவேளை, சீனி கலந்த பானங்கள், மென்பானங்கள் மற்றும் மதுபானங்களைத் தவிர்க்குமாறும், சிறுநீரின் நிறத்தைக் கொண்டு உடலில் உள்ள நீரின் அளவை அவ்வப்போது அவதானிக்குமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெளியே செல்லும்போது குடை, தொப்பி மற்றும் தளர்வான ஆடைகளைப் பயன்படுத்துவது அவசியமாகும்.

அத்துடன், வெயிலில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்குள் நுழைவதற்கு முன்னர், ஜன்னல்களை திறந்து உட்புற வெப்பத்தை வெளியேற்றுமாறு சாரதிகளுக்கு விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கோர விபத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் படுகாயம் : சாரதி கைது!!

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்து சக்கரத்தில் சிக்கிய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்தில் ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் மிதிபலகையிலிருந்து தவறி விழுந்த பெண் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பேருந்தின் மிதிபலகையில் ஒரு காலினை வைத்து ஏறும் போது தவறுதலாக வீதியில் வீழ்ந்துள்ளனர். இதன்போது பெண்ணின் மீது பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி இரு கால்களும் நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தினமும் ஹட்டன் முதல் நுவரெலியா வரை சேவையில் ஈடுபடும் பேருந்து இன்றைய (31) தினம் இயங்கவில்லை எனவும், இதனால் குறித்த பேருந்து தலவாக்கலையில் இருந்து புறப்படும் போதே அதிக பயணிகள் இருந்துள்ளனர்.

இதனால் நானுஓயா டெஸ்போட் பகுதியில் பேருந்தினை நிறுத்தாமல் பாரிய வளைவு ஒன்றில் பேருந்தினை மெதுவாக இயக்க முற்பட்டபோது குறித்த பெண் பேருந்தினை நிறுத்துவதாக நினைத்து பேருந்தில் ஏறுவதற்கு முயன்ற போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த வீதியில் பேருந்து சேவை உரிய முறையில் ஈடுபடாமையே குறித்து விபத்துக்கு காரணம் என பொதுமக்களும் குற்றம் சுமத்துகின்றன. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் வங்கிகளில் கடன் வாங்கவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு!!

சில வங்கிக் கிளைகள் அரசாங்கத்தின் சலுகைக் கடன் திட்டம் குறித்து வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தவறாக வழிநடத்துவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கிளை இலாபங்களை அதிகரிக்கும் மாற்றுத் திட்டங்களை நோக்கி அவர்களை தூண்டுவதாக கவலைகள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சலுகைக் கடன் திட்டம் தெளிவான செயல்முறையுடன் செயலில் இருப்பதுடன், அணுகக்கூடியதாகவும் உள்ளது. மார்ச் மாத நிலவரப்படி, வங்கிகள் ரூ. 7.2 பில்லியன் மதிப்புள்ள 630 விண்ணப்பங்களைச் செயல்படுத்தியுள்ளன.

அதே நேரத்தில் கடன் உத்தரவாத நிறுவனம் 267 பிணையமில்லாக் கடன்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த முன்னேற்றம் ரூ. 17.4 பில்லியனை எட்டியுள்ளது. மேலும் வணிகங்களுக்காக ரூ. 95 பில்லியன் மொத்த ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

கொமர்ஷல் வங்கி, எச்.என்.பி மற்றும் என்.டி.பி உள்ளிட்ட சில வங்கிகள் ஏற்கனவே தங்கள் ஒதுக்கீடுகளை நிறைவு செய்துள்ளன. ஆனால் நிதி அமைச்சகம் அடுத்த காலாண்டில் கூடுதல் நிதியை வெளியிடும். தவறான கூற்றுக்கள் இருந்தபோதிலும் 1300க்கும் மேற்பட்ட தனிநபர்கள் வெற்றிகரமாகப் பிணையமில்லாக் கடன்களைப் பெற்றுள்ளனர்.

எனவே தொழில்முனைவோர் இது தொடர்பான சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடன்களுக்கு விண்ணப்பிப்பதற்கான சரியான முறையை விவரிக்கும் விவரங்களை அவர் வழங்கியுள்ளார்.

அதன்படி பிரதேச செயலகத்திலிருந்து உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெறவும். விண்ணப்பப் படிவத்தை வங்கியில் சமர்ப்பிக்கவும். ஆய்வுக்குப் பிறகு, செயல்முறையைத் தொடங்குவதற்காக வங்கி அந்த விண்ணப்பத்தை டிஜிட்டல் அமைப்பில் உள்ளிட வேண்டும்.

வங்கி, தனது ஆரம்பகட்ட ஆய்வுக்குப் பிறகு, விண்ணப்பதாரரை நிதி அமைச்சகத்திற்குப் பரிந்துரைக்கும். நிதி அமைச்சகம் இரண்டு வாரங்களுக்குள் ஒப்புதல் அளிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அரச ஊழியர்களுக்கான விசேட விடுமுறை : மின்சார கட்டுப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியை கருத்திற்கொண்டு எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள சமய விழாக்களுக்கு மின்சாரக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற ஊடக சந்திப்பில் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

எரிசக்தியை நிர்வகிப்பதற்காக அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது, மேலும் அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக, புதன்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்களுக்கான எரிசக்தி சேமிப்பு குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரும் சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள சூழலில், வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ள சமய விழாக்களுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரங்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என்றும் விளக்கமளித்துள்ளார்.

வெசாக் மற்றும் போசன் பண்டிகைகளுக்கு அரசாங்கம் மின்சாரத்தைக் கட்டுப்படுத்தாது என்றும், அரசாங்கம் ஆதரவை வழங்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே, வரவிருக்கும் வெசாக் பண்டிகை, போசன் பண்டிகை, எசலப் பண்டிகை மற்றும் பிற மத ரீதியான திட்டங்களை கட்டுப்படுத்தும் எண்ணம் இல்லை என்றும்,உலகில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எரிசக்தி மற்றும் நுகர்வு கோட்பாடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

சிவன் அழைக்கிறான்.. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு கல்லூரி மாணவி மாயம்!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர், தனது வீட்டில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு திடீரென மாயமாகியுள்ளார்.

அந்தப் பெண் எழுதியுள்ள கடிதத்தில், “என்னை சிவபெருமான் அழைக்கிறார், நான் அவரிடமே செல்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாலையில் மாணவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், வீடு முழுவதும் தேடியும் அவர் கிடைக்காததால் கதறித் துடித்தபடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மாணவி தனது கடிதத்தில், ஆன்மீக ரீதியான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளதாகவும், இறைவனைத் தேடிச் செல்வதாகவும் உருக்கமாக எழுதியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே அந்த மாணவி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தாரா அல்லது ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாரா என்பது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவனின் அழைப்பை ஏற்றுச் செல்வதாகக் கூறிவிட்டு இளம் பெண் ஒருவர் மாயமானது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்த காவல்துறையினர் மாணவியின் செல்பான் எண்களை வைத்து அவர் கடைசியாக எங்கு இருந்தார் என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், அருகில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் தீவிரமாகச் சோதித்து வருகின்றனர்.

மாயமான மாணவியைத் தேடத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவரைப் பத்திரமாக மீட்கப் போலீசார் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த மாணவியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

2 குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

தேனி அருகே டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துவின் மகள் பாப்பாத்தி, தனது 2 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருடன் திருமணமான பாப்பாத்திக்கு, 8 மற்றும் 5 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது தந்தை வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 28ம் தேதி காலை கடைக்குச் செல்வதாகக் கூறி குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய பாப்பாத்தி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்காததால், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் மூன்று உடல்கள் மிதப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கிணற்றில் இருந்து பாப்பாத்தி மற்றும் அவரது இரண்டு மகள்களின் உடல்களை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, பாப்பாத்தியும் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

இந்தப் பயங்கரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தது கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சி : 9 கிமீ தூரத்திற்கு தண்டவத் யாத்திரை சென்ற இளைஞன்!!

விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சியில், இளைஞர் ஒருவர் 9 கி.மீ தூரத்திற்கு தண்டவத் யாத்திரை சென்று வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பஷ்டியை சேர்ந்த 26 வயது இளைஞரான லோகேஷ் என்பவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் திருமணவாழ்வின் ஆரம்பம் முதலே கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, லோகேஷ் தீவிர மனஅழுத்தத்திற்கு ஆளாகினர்.

இதன் காரணமாக விவாகரத்து பெற விரும்பிய லோகேஷ், பான்பூரில் உள்ள பத்வா மாதா கோவிலுக்குச் சென்று தனது திருமண வாழ்க்கையில் இருந்து விடுதலை கிடைத்தால் வீட்டில் இருந்து கோவிலுக்கு தண்டவத் யாத்திரை(dandvat yatra) மேற்கொள்வதாக வேண்டிக்கொண்டார்.

2 ஆண்டுகளாக நடைபெற வழக்கு முடிவடைந்து தற்போது விவாகரத்து கிடைத்துள்ள நிலையில், காலையில் 6 மணிக்கு நீர் கூட அருந்தாமல் தரையில் படுத்தவாறே தனது வேண்டுதலை நிறைவேற்ற தொடங்கினார்.

அவருடன் அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியபடி வந்தனர். மாலை 6 மணியளவில் 9 கிலோ மீட்டர் தூரம் தண்டவத் யாத்திரை செய்து கோவிலை வந்தடைந்து கடவுளை வணங்கி நன்றி தெரிவித்தார்.

மிகுந்த களைப்புடன் இருந்த அவரது முழங்காலில் இருந்து ரத்தம் வழிந்தது. இருந்தாலும் அவரது முகத்தில் நிம்மதியும் அமைதியும் தென்பட்டது.

இது குறித்து பேசிய அவர், மனைவியால் துன்புறுத்தப்பட்டதாகவும், தனது திருமண வாழ்க்கை என்னும் நரகத்திலிருந்து வெளியே வந்த பிறகு இப்போது நிம்மதியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரமனாலங்குளத்தில் வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

பிராந்திய மற்றும் இன அடிப்படையிலான இழிவுபடுத்தும் வெறுப்புபேச்சுக்களை பேசுவதை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்தக்கோரி வவுனியா, பிரமனாலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டமானது பிரமனாலங்களம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மக்களினால் பிரமனாலங்குளம் சந்தியில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது வெறுப்பு பேச்சுகளை உடனடியாக நிறுத்துங்கள், ஒழுக்க விதிகளை உருவாக்குங்கள், அரசியல் நாகரீகத்தை பேணவும் போன்ற பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் முறைகேடு? சட்டநடவடிக்கை செல்லவுள்ளேன் : நடராசா ஜனகதீபன்!!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (29.03.2026) இடம்பெற்ற பாடசாலை அபிவிருத்தி குழு கூட்ட தெரிவில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாகவும் பாரிய மோசடிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க திட்டமிட்டு தெரிவுகள் நடத்தப்பட்டதாக முன்னாள் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர் நடராசா ஜனகதீபன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அபிவிருத்தி குழு பொதுக் கூட்டம் 29.03.2026 (ஞாயிற்று கிழமை) இடம்பெற்றபோது யாப்பிற்கும் இயற்கை நீதிக்கும் எதிரான வகையில் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றுள்ளது.

பாடசாலை அதிபர் மற்றும் சில பழைய மாணவர்கள் இணைந்து பழைய மாணவ பெற்றோரே பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளராக வரவேண்டும் என திட்டமிட்டிருந்த நிலையில் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டு பிள்ளைகளின் பெற்றோராகிய என்னை செயலாளராக தெரிவு செய்த போது,

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை பிரதிநிதியாக கலந்து கொண்ட பிரதிக்கல்வி பணிப்பாளர் வீரசிங்க அவர்களும் அதிபர் யோகேஸ்வரன் அவர்களும் தொடர்ச்சியாகவோ இடைவிட்டோ இரண்டு முறை (நான்கு வருடங்கள்) பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினராக இருந்த ஒருவர் செயலாளராக தெரிவு செய்யப்பட முடியாது எனக் கூறி முற்றாக நிராகரித்ததுடன் தாம் திட்டமிட்டபடி பழைய மாணவ பெற்றோர் ஒருவரை நியமித்து என்னை அவமானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

பாடசாலை அபிவிருத்திக்குழு தொடர்பான சுற்று நிருபத்தில் அவ்வாறான எந்த குறிப்பும் யாப்பில் இல்லை என நான் உட்பட பல பெற்றோர்கள் வாதாடியும் அவர்கள் வேறொரு பந்தியை மேற்கோள் காட்டி பெற்றோர் தெரிவை நிராகரித்ததுடன் அதற்கு பின் தெரிவுசெய்யப்பட்ட இரண்டு பெற்றோர் பிரதிநிதிகளையும் நிராகரித்து தாம் முதல் நாளே ஏற்பாடு செய்த பழைய மாணவ பெற்றோரை செயலாளராக தெரிவுசெய்து பாரிய மோசடியையும் அதிகார துஸ்பிரயோகத்தையும் அரங்கேற்றியுள்ளனர்.

இந்த முறைகேடான நிகழ்வானது பாடசாலையின் பெற்றோர்களை உதாசீனப்படுத்தும் வகையில் அமைந்ததுடன் பழைய மாணவர்கள் தவிர்ந்த யாரும் பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளராக வரக்கூடாது எனும் எழுதப்படாத புதிய யாப்பு ஒன்றினை தமக்கு தாமே உருவாக்கி அதை தொடர்ச்சியாக நடைமுறைப் படுத்துவதில் வெற்றியும் கண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் இடம்பெறும் போது வருகை தந்திருந்த மிகவும் குறைவான பெற்றோரில் பலர் கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்கள் போகும் போது பழைய மாணவர்களே அனைத்தையும் தீர்மானிக்க வேண்டுமானால் பெற்றோராகிய எம்மை ஏன் கூட்டத்திற்கு அழைத்தீர்கள் என்று கூறியபடி வெளியேறி சென்றனர்.

ஏற்கனவே கடந்த பொதுக்கூட்டத்தின் போதும் பெற்றோர் சார்பில் செயலாளராக என்னை தெரிவு செய்தபோது அதற்கு போட்டியாக ஒரு பழைய மாணவ பெற்றோரை தெரிவுசெய்து என்னை வாபஸ் பெற வைத்தனர்.

ஏற்கனவே செயலாளராக பதவி வகித்தவர் மாதாந்த கூட்டறிக்கையை தயாரிக்காமல் பாடசாலை அதிபரின் மேற்பார்வையில் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரால் தயாரிக்கப்பட்டு அல்லது எழுதப்பட்டு வருவதை கேள்விக்குட்படுத்தியமை , மாதாந்த அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது ஆசிரிய பிரதிநிதிகள் தொடர்ச்சியாக சமூகமளிக்காமல் அவர்களிடம் ஒப்பம் மட்டும் பெற்றுக்கொண்டு பெரும்பான்மையை காட்டுவதை சுட்டிக் காட்டியமை ,

பழைய மாணவர் சங்கம் என்ற பெயரில் எந்தவித முறையான விதிகளை பின்பற்றாமல் பாடசாலை அபிவிருத்திக் குழுவிற்கு பொறுப்புக்கூறல் இன்றி பல மில்லியன் ரூபாயினை வெளிநாடுகளிலும் உள்நாடுகளிலும் சேகரித்து செலவு செய்தமையை கேள்வி கேட்டமை, பாடசாலையின் முழு அதிகாரத்தையும் அதிபர் பயன்படுத்தி பாடசாலை அபிவிருத்தி குழுவை தனது பிற்பாட்டு குழுவாக தான் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் தலையாட்டும் வகையில் பயன்படுத்தும் செயற்பாட்டை கேள்வுக்குட்படுத்தியமை,

இது போன்ற பல காரணங்களினால் என்னை போன்ற நியாயமான கேள்விகளை முன்வைப்பவர்கள் செயலாளராக வந்தால் தமது ஊழல் நடவடிக்கைகள் வெளிக்கொண்டுவரப்பட்டுவிடும் என்ற அச்சத்தினாலோ என்னவோ தொடர்ச்சியாக பாடசாலை அதிபர் பாடசாலை அபிவிருத்துக்குழு உறுப்பினர்களும் செயலாளரும் யார் யார் வர வேண்டும் என்பதனை தனக்கு இணைவாக தனது தான்தோன்றித் தனமான அனைத்து செயற்பாடுகளுக்கும் இணக்கம் காட்டும் ஒரு சில பழைய மாணவர்களை வைத்து பாடசாலை அபிவிருத்திக்குழு நிர்வாகத்தை தீர்மானிக்கின்றார்.

இந்த நிலை தொடருமானால் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலையில் அனைத்து உரிமையும் அந்த பத்து (10) நபர்கள் கொண்ட பழைய மாணவர் குழுவிற்குத்தான் இருக்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை என பாடசாலையில் இருந்து விலகியிருக்கும் சூழலை ஏற்படுத்தும்.

இவர்கள் முன்வைக்கும் சுற்றுநிரூபம் 54/2023 படி பார்த்தால் அதில் எங்கேயும் இரண்டு தடவைகள் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினராக இருக்கும் ஒருவர் செயலாளராக வர முடியாது என குறிப்பிடப்படவில்லை என்பதோடு ஒரு வாதத்திற்கு அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டால் 2024 -01-01 நடைமுறைக்கு வரும் ஒரு சுற்று நிருபத்தின் படி பார்த்தால் நான் குறித்து சுற்று நிருபம் நடைமுறைக்கு வந்து சரியாக ஒரு வருடமும் மூன்று மாதங்களுக்கும் குறைவாகவே உறுப்பினராக உள்ள நிலையில்,

நான் 2022 ற்கு முன்னரும் உறுப்பினராக இருந்த காலத்தை கணக்கிட்டு நிராகரித்தமை அதுவும் பொதுக்குழுவை மீறி அதிபரும் வலயக்கல்வி பிரதிநிதியும் பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினரும் நிராகரித்தமை அப்பட்டமான யாப்பு மற்றும் விதி மீறலாகும் இந்த செயற்பாட்டினால் சமூகத்தில் பலரின் நன்மதிப்பை பெற்ற நான் தனிப்பட்ட ரீதியில் பெரும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளதுடன் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன்.

எனவே குறித்த யாப்பை சரியாக ஆராய்ந்து இந்த கூட்டத்தில் நடந்த ஜனநாயக மீறல் மற்றும் அடிப்படை மனித உரிமை மீறல் அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றிற்கு உடனடி நடவடிக்கை எடுக்க கோருவதுடன் அன்றைய கூட்ட தீர்மானங்களும் தெரிவுகளும் முறையற்றது என அறிவித்து மீளவும் பொதுக்கூட்டத்தை நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.