மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ள தாழமுக்கம் : வடக்கு -கிழக்கில் நீடிக்கும் மழை!!

வங்காள விரிகுடாவில் இலங்கையின் பொத்துவிலுக்கு தென்கிழக்கு திசையில் 664 கி.மீ. தொலைவில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக (Well Marked Low Pressure) மாறியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையின் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு நோக்கி நகர்ந்து, வடக்கு மாகாணத்தை அண்மித்து மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தாழமுக்கமும் இலங்கைக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. தற்போது வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு பரவலாக மிதமான மழை கிடைத்து வருகின்றது.

எதிர்வரும் 08.01.2026 முதல் 12.01.2026 வரை வடக்கு, கிழக்கு, ஊவா, வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்கள் முழுவதும் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தங்களுக்கு வாய்ப்புள்ளது.

முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 8,9,10,11 ம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எதிர்வரும் 08.01.2026 முதல் 11.01.2026 வரை திரட்டிய மழைவீழ்ச்சியாக 450மி.மீ. க்கு மேல் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 08.01.2026 முதல் 13.01.2026 வரை வடமேற்கு, மேற்கு, சபரகமுவா மாகாணங்களுக்கு பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இது தற்போது தாழமுக்கமாகக் காணப்பட்டாலும் இலங்கைக் கரையை அண்மிக்கும் போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதனால் எதிர்வரும் 08.01.2026 முதல் கிழக்கு, வடக்கு வடமத்திய ஊவா மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. இனை விட கூடுதலாக வீசக்கூடும்.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் என்பதனால் நிலச்சரிவு அனர்த்தங்களும் நிகழக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களின் மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகள் முன்கூட்டியே மக்களுக்கு இந்தக் கனமழை தொடர்பிலும் வெள்ள அனர்த்தங்கள் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பிலும் தெரியப்படுத்துவதன் மூலம் பாதிப்புக்களைக் குறைக்க முடியும்.

தயவு செய்து இந்த தாழமுக்கத்தினைச் சாதாரண நிகழ்வாகக் கருத வேண்டாம். மிக வேகமான காற்றோடு கூடிய மிகக் கனமழை (இடி மின்னலும் இணைந்ததாக) மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும்.

மிக முக்கியமாக இது தாழமுக்கம்/ தாழ்வு மண்டலத்தோடு இணைந்த நிகழ்வு என்பதனால் வழமையை விட கடல் மட்டம் மிக உயர்வாக காணப்படும்.

ஆகவே சாதாரண காலங்களில் வெள்ளநீர் கடலுக்குள் செல்வது போல இக்காலத்தில் வெள்ள நீர் கடலுக்கு செல்லாது. ஆகவே இதனையும் கருத்தில் கொண்டு அதிகாரிகள் செயற்படுவது சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயம்!!

திருகோணமலை – அலெக்ஸ் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து, இன்று (05.01.2026) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை 6ம் கட்டைப் பகுதியில் நடமாடும் பஞ்சர் ஒட்டும் சேவை வழங்கி வருபவரின் முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முச்சக்கர வண்டி விபத்து தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை தான் விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உலக சந்தையில் வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்கத்தின் விலை : இலங்கையிலும் திடீர் மாற்றம்!!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததை தொடர்ந்து தங்கம், வெள்ளி மற்றும் உலோகங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (05.01.2025) காலை உலக சந்தைகளில் ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 1.8 சதவீதம் அதிகரித்து $4,408 (£3,282) ஆக உயர்ந்துள்ளதுடன், வெள்ளி விலையும் 3.5% உயர்ந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் 2025 இல் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச அளவை எட்டியதாக கூறப்படுகிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, இலங்கையிலும் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, கடந்த 02ஆம் திகதி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாவாக இருந்த நிலையில் இன்று (05) 3,000 ரூபாய் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 360,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அதற்கமைய, 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 332,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 314,900 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

தேங்காய் எண்ணெய்யின் விலை திடீரென அதிகரிப்பு!!

கடந்த இரண்டு வாரங்களில் சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.

இதனுடன் ஒப்பிடும்போது தாவர எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சந்தையில் தேங்காய்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காயின் விலை ரூ. 122 – 124 வரை இருந்த நிலையில், சில்லறை விற்பனையாளர்கள் ஒரு தேங்காயை ரூ. 180 முதல் 200 வரை விற்பனை செய்கின்றமை குறிபிபிடத்தக்கது.

புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலி!!

காலியில் சம்பவித்த கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஹுங்கல்ல, கட்டுவில, அஹுங்கல்ல-உரகஸ்மன்ஹந்திய வீதியில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கம்பத்தில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அஹுங்கல்ல, பதிராஜகம பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சமத் தேஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் மூன்று நாட்களுக்கு முன்பு தான் பணிபுரியும் தனியார் நிறுவனத்தில் இருந்து தனது சம்பளத்தை பெற்று, மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார்.

நேற்று முன்தின இரவு, தான் வாங்கிய மோட்டார் சைக்கிளில் பயிற்சி செய்ய சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கொழும்பிலுள்ள உணவகம் ஒன்றுக்குள் நடந்த பயங்கரம் : பெண்கள் உட்பட கும்பல் வெறியாட்டம்!!

கொழும்பின் புறநகர பகுதியான மோதரயிலுள்ள உணவகம் ஒன்றுக்குள் நுழைந்து, குழப்பம் ஏற்படுத்திய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

இதன்போது உணவகத்தில் இருந்த மக்களைத் தாக்கி, பொருட்களை திருடியதாக கூறப்படும் 3 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக மோதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய ஒரு கார் மற்றும் பணப்பையை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் மோதர பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொல்கத்தா அணியிலிருந்து நீக்கப்பட்ட முஸ்தஃபிசூர் ரஹ்மான் : பங்களாதேஷின் அதிரடி உத்தரவு!!

அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு பங்களாதேஸ் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தொலைக்காட்சி சேனல்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்றையதினம்(5) தொலைக்காட்சிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மார்ச் 26 அன்று தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து முஸ்தஃபிசூர் ரஹ்மானை நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த முடிவிற்கு எந்த நியாயமான காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இதனால் பங்களாதேஸ் மக்கள் “மிகவும் காயமடைந்து, அதிர்ச்சி அடைந்து, கோபமடைந்துள்ளனர்” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே ஐபிஎல் ஒளிபரப்புகளை நிறுத்தும் உத்தரவு வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் (இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ள) பங்கேற்க பங்களாதேஸ் அணியை அனுப்ப முடியாது என பங்களாதேஸ் கிரிக்கெட் பேரவை (BCB) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விளையாடுவதில் பாதுகாப்பு குறித்த கவலைகள் இருப்பதே இதற்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலைப்பாட்டை பங்களாதேஸ் கிரிக்கெட் பேரவை நேற்றையதினம்(4) அனுப்பிய மின்னஞ்சல் மூலம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ICC) தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவிற்கு பயணம் செய்வது சாத்தியமில்லை என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பங்களாதேஸ்அணியின் போட்டிகளை வேறு ஒரு நாட்டிற்கு மாற்றுமாறும் பங்களாதேஸ் கிரிக்கெட் பேரவை விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டாக கழுத்தில் வைக்கப்பட்ட கத்தி : கந்தளாயில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

கந்தளாய் பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றில், விளையாட்டாக கழுத்தில் கத்தி வைக்கப்பட்டதில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (04.01.2026) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து கந்தளாய் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளை அடுத்து சூரியபுர பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆறு இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து கந்தளாய் பேருந்து நிலையத்திற்கு மேலுள்ள சிகையலங்கார நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

அங்கு ஒருவருக்கு முடி வெட்டப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த சிகையலங்காரக் கருவிகளைக் கொண்டு ஏனைய இருவர் விளையாடியுள்ளனர்.

இதன்போது எதிர்பாராத விதமாக 15 வயதுடைய அசேன் சாருக்க சூரியதாச என்ற சிறுவனின் கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், கழுத்தில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தன்மை காரணமாக அவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பரீட்சைக்கு பயந்து மாணவி எடுத்த விபரீத முடிவு!!

களுத்துறையில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். களுத்துறை, துவா கோயில் வீதியை சேர்ந்த 16 வயது மாணவியே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துயர சம்பவம் கடந்த இரண்டாம் திகதி அவரின் வீட்டில் நடந்துள்ளது. பிரபல பாடசாலை மாணவியான அவர், அடுத்த மாதம் நடைபெற உள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தயாராகி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எதிர்கொள்ள அச்ச நிலைமை காரணமாக விபரீத முடிவை எடுப்பதாக மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெற்கு களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிள்ளைகளின் கண் முன்னால் தாய் கொலை : வட்டிப்பணத்தால் பறிபோன உயிர்!!

அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (4) குடும்பப் பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண் முன்னால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான 46 வயது பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மேற்படி பெண்ணின் கணவர் கூலி வேலைக்குச் சென்ற நிலையில் அந்தப் பெண் வீட்டில் தனது பிள்ளைகளுடன் இருந்துள்ளார்.

மாலை 5 மணியளவில் கத்தியுடன் வீட்டுக்கு வந்த உறவினரான ஆண் ஒருவர், வட்டிப் பணம் தொடர்பில் அந்தப் பெண்ணுடன் முரண்பட்டுள்ளார்.

இறுதியில் அவர் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் நெஞ்சில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அயலவர்கள் பெண்ணை உடனே வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிறிது நேரத்தில் பெண் உயிரிழந்துவிட்டதாக தெரியவருகின்றது.

கொலையாளியான 42 வயது நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னடுத்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவரிடமும், பிள்ளைகளிடமும் வாக்குமூலங்களைப் பெற்று மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் இருந்து யாழ் வந்தவருக்கு நேர்ந்த துயரம் : சோகத்தில் உறவுகள்!!

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர் நிமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார். கனடாவில் வசித்து வந்த 42 வயதான குறித்த நபர் அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.

குறித்த நபர் வட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்த நிலையில் , கடந்த 31ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் , சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை(3) உயிரிழந்துள்ளார். கனடாவாழ் நபரின் உயிரிழப்புக்கு நிமோனியா காரணம் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

 

2.5 கோடி சம்பளம் : மாணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய வேலை!!

இந்திய தொழில்நுட்பக் கழகம், ஹைதராபாத் (IIT Hyderabad) தனது வரலாற்றில் மிகப்பெரிய வேலை வாய்ப்பை பதிவு செய்துள்ளது.

கணினி அறிவியல் பிரிவில் இறுதியாண்டு B.Tech படிக்கும் மாணவரான 21 வயதான எட்வர்ட் நாதன் வர்கீஸ், நெதர்லாந்தில் அமைந்துள்ள Optiver என்ற டிரேடிங் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக (Software Engineer) ஆண்டுக்கு ரூ.2.5 கோடி சம்பளத்துடன் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இது IIT Hyderabad நிறுவப்பட்ட 2008 முதல் கிடைத்த அதிகபட்ச சம்பளம் கொண்ட வேலை வாய்ப்பாகும். இதற்கு முன்பு 2017-ல் சுமார் ரூ.1 கோடி சம்பளம் மிகப்பெரியதாகக் கருதப்பட்டது.

சமீப காலங்களில் 60-90 லட்சம் ரூபாய் சம்பள வாய்ப்புகள் கூட அசாதாரணமாகக் கருதப்பட்டன.

வர்கீஸ், Optiver நிறுவனத்தில் இரண்டு மாத Internship செய்தார். Internship காலத்தில் சிறப்பாக செயல்பட்டதால், Pre-Placement Offer (PPO) வழங்கப்பட்டது.

Internship-க்கு IIT Hyderabad-இல் இருந்து இரண்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், முழுநேர வேலை வாய்ப்பு கிடைத்தது இவர் ஒருவருக்கே.

“இது நான் சந்தித்த முதல் மற்றும் ஒரே Interview. என் Mentor, Offer வழங்கப்படும் எனச் சொன்னபோது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். என் பெற்றோர்களும் அதேபோல் மகிழ்ந்தனர்” என வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Competitive Programming-இல் நாட்டம், இந்திய அளவில் Top 100 இடம் பெற்றது, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

இந்த சாதனை, IIT Hyderabad-இன் சர்வதேச வேலை வாய்ப்பு திறனை வெளிப்படுத்துகிறது. மேலும், உலகளாவிய நிறுவனங்கள் இந்திய மாணவர்களின் திறனை அதிகம் மதிப்பிடுகின்றன என்பதற்கும் இது ஒரு சான்றாகும்.

மகனை 2வதாக திருமணம் செய்த பெண்ணை கொலை செய்து தலையை தனியாக புதைத்த மாமியார்!!

தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மருமகளை மாமியார் கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கிறிஸ்துவமேரி என்ற பெண்ணின் மகனை நந்தினி இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இது கிறிஸ்துவமேரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மருமகளை கொலை செய்ய மூன்று மாதங்களாக திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் நந்தினியை தலையில் அடித்து கொலை செய்துள்ளார். மேலும் அவரது தலையை ஒரு இடத்தில் புதைத்துள்ளார். அத்துடன் நந்தினியின் மற்ற உடல் பாகங்களை மற்றொரு இடத்திலும் புதைத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் கொலை நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர். தடயவியல் நிபுணர்களுடன் பொலிஸார் அங்கு ஆய்வு செய்வதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உறங்கிக்கொண்டிருந்த மனைவி மீது மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவன்!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே, குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாக மனைவியை மின்சாரம் பாய்ச்சிக் கொன்று விட்டு, உடல்நலக்குறைவால் மனைவி இறந்தது போல நாடகமாடிய கணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (43). இவருக்கும் கலையரசி (33) என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 3 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில காலமாகவே தனது மனைவியின் நடத்தையில் கருணாகரனுக்குச் சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கலையரசி வழக்கம் போல உணவு அருந்தி விட்டுத் தூங்கச் சென்றுள்ளார். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நள்ளிரவு நேரத்தில்,

கருணாகரன் மின்சார வயர்களைக் கொண்டு கலையரசியின் கை மற்றும் கால்களில் மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளார். இதில் மின்சாரம் தாக்கி கலையரசி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

மறுநாள் காலை, தனது மனைவியின் தந்தைக்குப் போன் செய்த கருணாகரன், “கலையரசி காலை 7 மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை, எழுப்பிப் பார்த்தும் அசைவின்றி இருக்கிறார்” என்று கூறி நாடகமாடியுள்ளார்.

அங்கு விரைந்து சென்ற கலையரசியின் பெற்றோர், மகளின் திடீர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கருணாகரனைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தியபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டு மின்சாரம் பாய்ச்சிக் கொன்றதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து கருணாகரனைப் போலீசார் முறைப்படி கைது செய்து சிறையில் அடைத்தனர். 14 ஆண்டு கால திருமண வாழ்க்கை சந்தேகத்தின் பலியால் மூன்று சிறுவர்கள் அநாதையாக நிற்கும் நிலை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் மீண்டும் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை : யாழ்.பல்கலைக்கழக நிபுணர் எச்சரிக்கை!!

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு 06.01.2026 முதல் 12.01.2026 வரை கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் மற்றும் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 28.12.2025 அன்று வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் தோன்றிய காற்றுச் சுழற்சி தற்போது தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது.

இக்காற்றுச்சுழற்சிக்கு தேவையான மறை வெப்பச் சக்தியின் பற்றாக்குறையால் இது எதிர்பார்த்த வேகத்தில் நகராமல் மிக மிக மெதுவாக நகர்ந்து நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு நிலையாக விருத்தி பெற்றுள்ளது.

இது மேலும் மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, இலங்கைக் தெற்காக நகர்ந்து குமரிக்கடலைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றுச் சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது.

இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு நாளை முதல் 12.01.2026 வரை கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக 06.01.2026 முதல் 11.01.2026 வரை மேற்குறிப்பிட்ட மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மிக முக்கியமாக நாளை 06.01.2026 முதல் 11.01.2016 வரை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு மிக மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இக்காலப்பகுதியில் இலங்கையின் ஏனைய மாகாணங்களிலும் பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக மழை கிடைக்கும் என்பதனால் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் நிலச்சரிவு அனர்த்தங்கள் இடம்பெறக்கூடும்.

எனவே மக்கள் இது தொடர்பாக மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம். வடக்கு, கிழக்கு,மத்திய, வட மத்திய மாகாணங்களின் நீர்த்தேக்கங்களின் முகாமையாளர்கள் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையோடு தொடர்புடைய கனமழை நிகழ்வு தொடர்பாக அதிக கரிசனை கொள்வது விரும்பத்தக்கது.

அதேவேளை இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பிராந்தியங்கள் நாளை 06.01.2026 முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

அதே வேளை கிழக்கு, தென்கிழக்கு கடற்பகுதிகளில் பலநாட் கலங்களில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளவர்களும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பில் அவதானமாக இருப்பது சிறந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா அம்மாச்சி உணவகம் மீண்டும் திறக்கப்பட்டது!!

வவுனியா அம்மாச்சி உணவகம் புணரமைப்பு பணிகளின் பீன் இன்று காலை (02.01.2026)மீண்டும் திறக்கப்பட்டது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி புணரமைப்பு பணிகளுக்காக கடந்தசில நாட்களாக பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் புணரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை மீண்டும் அது உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, மற்றும் விவசாய திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.