நீர்கொழும்பில் சினிமாப் பாணியில் வீட்டுக்குள் நுழைந்த இளம் தம்பதி, பெண் ஒருவரை தாக்கிய நிலையில் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
91 வயது மூதாட்டியின் வாயைத் துணியால் கட்டி, அவரிடமிருந்து 45,000 ரூபாய் மதிப்புள்ள தங்க காதணிகளை திருடிய தம்பதியை, கட்டான பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள், நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனை அருகே கடந்த 26 ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மூதாட்டியின் வீட்டில் தேங்காய் பறிக்கும் நோக்கில் உள்நுழைந்த இளம் தம்பதி, மூதாட்டியை திடீரென தாக்கிய நிலையில் மூதாட்டி சுயநினைவினை இழந்துள்ளார்.
இதன்போது மூதாட்டி அணிந்திருந்த தங்க காதணியை களவாடிக் கொண்டு குறித்த தம்பதியினர் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வீட்டின் மேல் மாடியில் தங்கியிந்த மூதாட்டியின் பேத்தி, அவரை நீண்ட நேரம் காணவில்லை என தேடிய போது, தோட்டத்தில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக அயல் வீட்டாரின் உதவியுடன் அவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.
நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட நகைகள் 45,000 ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டு, போதைப்பொருட்களை வாங்க பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம், மதுரங்குலியவைச் சேர்ந்த 27 வயதுடைய கணவர் மற்றும் 25 வயதுடைய, மனைவி என தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேக நபர்கள் இருவரும் பல ஆண்டுகளாக போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளமை பொலிஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டு, அரசாங்கத்திற்கு பல மில்லியன் ரூபாய் வரி வருவாய் இழப்பை ஏற்படுத்திய வாகனங்கள் குறித்த அறிக்கையை ஜப்பான், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
இலஞ்ச ஆணைக்குழுவின் கோரிக்கையை தொடர்ந்து, ஜப்பானிய போக்குவரத்து அமைச்சு, இலங்கை வெளியுறவு அமைச்சு வழியாக வாகனங்கள் குறித்த வரலாற்று அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.
குறித்த வாகனங்கள் தயாரிக்கப்பட்ட திகதி, அவற்றை ஜப்பானில் பயன்படுத்திய உரிமையாளர்கள் மற்றும் ஜப்பானில் செய்யப்பட்ட பதிவுகள் இரத்து செய்யப்பட்டமை உள்ளிட்ட அறிக்கைகளை நாட்டிற்கு வழங்கியுள்ளது.
‘கடந்த காலத்தில், இலங்கை சுங்கத்துறையால் அனுமதி பெறாத 5000-க்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2015 முதல் 2019 வரை மட்டும், 178 சொகுசு வாகனங்கள் சட்டவிரோதமாக சுங்கத்துறைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் தவறான தரவுகள் உள்ளிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த வாகனங்கள் மூலமாக மட்டுமே அரசாங்கம் சுமார் 100 பில்லியன் ரூபாய் வரி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.
இவ்விஷயம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நடத்திய விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த வாகனங்கள் குறித்த வரலாறு அறிக்கை ஜப்பானிலிருந்து பெறப்பட்டது,” என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தணமல்வில – வெல்லவாய வீதியில் குடாஓய நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
வெல்லவாயவில் இருந்து தணமல்வில நோக்கி பயணித்த லொறி ஒன்று, எதிர்த்திசையில் வந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த சிறுவன் பலத்த காயமடைந்து தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
கொட்டியாகல பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட காவல்துறை அதிகாரி ஜெயந்த் பல்லவாரின் மரணம், தற்போது ஒரு திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்துள்ளது.
காதலுக்குத் தடையாக இருந்த தந்தையை, அவரது மகளே விஷம் கொடுத்துக் கொன்றது அம்பலமாகியுள்ளது.
காவல்துறை அதிகாரியான ஜெயந்த் பல்லவாரின் மகள் ஆர்யா, ஆஷிஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்குத் தந்தை ஜெயந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்யா, தனது காதலுக்கு முட்டுக்கட்டையாக இருந்த தந்தையைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
கடந்த 2023ம் ஆண்டு ஒரு நாள், தந்தை குடிக்கும் ‘மில்க் ஷேக்’கில் ஆர்யா ரகசியமாக விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
அதைக் குடித்த சிறிது நேரத்திலேயே ஜெயந்த் பல்லவார் பரிதாபமாக உயிரிழந்தார். அந்தச் சமயத்தில் இது மாரடைப்பால் ஏற்பட்ட இயற்கை மரணம் எனக் கருதப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தந்தையின் மறைவிற்குப் பிறகு, ஆர்யா தான் ஆசைப்பட்டபடியே காதலன் ஆஷிஷைத் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டு ‘பிரேக்கப்’ செய்யும் சூழல் உருவானது.
தன்னை விட்டுப் பிரிய நினைத்த ஆர்யா மீது ஆத்திரமடைந்த ஆஷிஷ், தனது மாமனார் மரணத்தில் இருந்த மர்மத்தை உடைக்க முடிவு செய்தார்.
நேரடியாகக் காவல்துறையை அணுகிய அவர், ஆர்யா தனது தந்தையை விஷம் கொடுத்துக் கொன்ற அதிர்ச்சித் தகவலை வாக்குமூலமாக அளித்தார்.
ஆஷிஷ் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்கை மீண்டும் கையில் எடுத்த மகாராஷ்டிரா காவல்துறையினர், ஆர்யாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இறுதியில் அவர் தனது தந்தையைக் கொன்றதை ஒப்புக் கொண்டார்.
இந்தச் சதித் திட்டத்திற்கு உடந்தையாக இருந்த ஆர்யா மற்றும் அவரது கணவர் ஆஷிஷ் உள்ளிட்ட மொத்தம் 4 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தினை அண்மித்த பகுதியல் போக்குவரத்து பொலிஸாரின் அசமந்த போக்கினால் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் இடம்பெற்றிருந்தது.
வவுனியா – இராசேந்திரகுளம் பிரதான வீதியில் பாரதிபுரம் கிராமத்தினை அண்மித்த பகுதியில் ஏற்ற இறக்கத்துடன் கூடிய பாதை வளைவு காணப்படுகின்றது.
அப்பகுதியில் கடமையிலிருந்த நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தினை வீதி வளைவில் வைத்து மறித்துள்ளனர். டிப்பர் சாரதி பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்கிணங்க வாகனத்தினை நிறுத்திவிட்டு இறங்கியுள்ளார்.
எனினும் அப்பாதையானது ஏற்ற இறக்கத்துடன் கூடிய பாதை வளைவு பாதை என்பதினால் வாகனம் பாரத்துடன் நின்றதாலும் டிப்பர் வீதியில் தானாக நகர்ந்து சென்று மின்சார கம்பத்துடன் மோதுண்டு விபத்துள்ளானது.
டிப்பர் சாரதி கீழே இறங்கி நின்றமையினால் எவ்வித உயிராபத்துகளும் இடம்பெறவில்லை என்பதுடன் டிப்பர் வாகனத்தின் முன் பகுதி சிறிதளவு சேதமடைந்திருந்ததுடன் மின்சார கம்பம் முழுமையான சேதமடைந்திருந்தது. இதனால் அப்பகுதிக்கான மின்சாரமும் முற்றாக பாதிப்படைந்திருந்தது.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நெளுக்குளம் பொலிஸார் டிப்பரை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.
இலங்கையில் நிலவும் தற்போதைய மின் உற்பத்தி நெருக்கடியை கருத்திற்கொண்டு, பொதுமக்கள் தமது மின்சார தேவைகளைப் பகல் நேரங்களில் நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் மின் கட்டணத்தையும், நாட்டின் உற்பத்திச் செலவையும் குறைக்க முடியும் என்று இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகார சபையின் தலைவர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார இது குறித்து ஊடகங்களிடம் வெளியிட்ட முக்கிய தகவல்கள் பின்வருமாறு,
“தற்போது பகல் நேரங்களில் சூரிய சக்தி மூலம் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. எனவே, பொதுமக்கள் தங்களது மின்சாரம் சார்ந்த அத்தியாவசியப் பணிகளை முற்பகல் 10 மணி முதல் மாலை 4 மணி வரை முன்னெடுப்பது மிகவும் பொருத்தமானது.
இதன் மூலம் தேசிய மின் கட்டமைப்பிற்கான செலவு குறையும். நாட்டில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிகளவில் எரிபொருள்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
தற்போது மசகு எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதால், மின் உற்பத்திக்காக விலையுயர்ந்த டீசல் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் மின் உற்பத்திக்கு அதிக செலவு ஏற்படுகின்றது.
பொதுமக்கள் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு எரிசக்தி வினைத்திறன் கொண்ட உபகரணங்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும்.
குறிப்பாக மின்குமிழ்கள், குளிரூட்டிகள் மற்றும் ஏசி இயந்திரங்களைக் கொள்வனவு செய்யும் போது மின்சாரத்தைச் சேமிக்கும் தர அடையாளங்களைக் கொண்ட உபகரணங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
குறைந்த வினைத்திறன் கொண்ட மின் உபகரணங்கள் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுப்பதற்கான புதிய சட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட ரீதியில் மின் கட்டணத்தைக் குறைப்பதுடன், நாட்டின் அந்நியச் செலாவணியைச் செலவிட்டு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் பயன்பாட்டையும் குறைக்க முடியும்.
எனவே, பொதுமக்கள் தமது அன்றாட மின் தேவைகளுக்கான நேரத்தை மாற்றியமைத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பு நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற பாழடைந்த கிணறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர், நேற்று (29) கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணப் பெருங்குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி இதனை உறுதிப்படுத்தினார்.
மட்டக்களப்பு – நெல்லிக்காடு பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு உதவியதாக கூறப்படும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20-ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து, வவுணதீவு கொத்தியாவலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடனும், ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டனர்.
அத்துடன் அந்த இளம் தாயின் 3 வயது 4 மாதங்கள் நிரம்பிய சிறுமி, வயல் பகுதியில் அழுதுகொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், 22 வயதுடைய தம்பி உட்பட 5 பேர் 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து இரு ஆட்டோக்கள், கார் ஒன்று, கோடரி மற்றும் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த மயக்க மருந்துகள் மீட்கப்பட்டதுடன் முச்சக்கர வண்டி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய மேலதிக விசாரணையில், குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படடுள்ளார்.
அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வத்தளை பகுதியில் வைத்துச் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 125 சீன நாட்டினர் இன்று காலை சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
சுற்றுலா விசாக்களில் நாட்டிற்கு வருகைதந்து இணையவழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 125 சீன நாட்டினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் 6 பேர் சீன பெண்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினரால் நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமைக் கட்டுப்பாட்டாளரின் உத்தரவின் பேரில், அவர்கள் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படும் வரை வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இலங்கையில் உள்ள சீனத்தூதரகம் மூலம் இது குறித்து நாட்டுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த குழுவினரை அழைத்துச்செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஒரு சிறப்பு விமானம் அனுப்பப்பட்டது.
அதே விமானத்தில், அந்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் குழுவும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இன்று (30.03.2026) காலை நிலவரப்படி, தங்க விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 3000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது
முதலாம் இணைப்பு
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (30.03.2026) தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,511.85 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,493.79 டொலராக பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸின் விலை 70.33 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இலங்கை நிலவரம்
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (30.03.2026) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 358800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 390000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி கடந்த 28ஆம் திகதி நிலவரத்தை இன்றைய நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது விலை மாற்றமின்றி தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் சிறுவனை காணவில்லை என நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, கணேசபுரம் 07ம் ஒழுங்கையை சேர்ந்தவரும், நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவனுமான தி.லதுர்சன், வயது 14 என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
நேற்று (28) மதியம் 02.30 மணியளவில் தாயிடம் இருந்து சிகையலங்கார நிலையத்திற்கு செல்வதற்காக பணம் பெற்று சென்ற சிறுவன் மாலை ஆகியும் வீடு வந்து சேரவில்லை.
இதன் காரணமாக உறவினர்கள், அயலவர்கள், நண்பர்களின் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையிலேயே சிறுவனின் பெற்றோரால் வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்து தேடி வருகின்றனர்.
குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் சிறுவனின் தாயின் தொலைபேசி இலக்கமான 0768644938, 0772432175 ஆகியவற்றுக்கு அழைத்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
வலு சக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “இலங்கையைக் காப்போம்” தேசிய வேலைத்திட்டம் நேற்று (29.03.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாட்டின் வலுசக்தி மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள்,
அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய “எல்-நினோ” வானிலை மாற்றங்கள் குறித்த முன்னறிவிப்புகளைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
அரச வளங்களை மிகவும் சிக்கனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் சுட்டிக்காட்டுவதுடன், தேசிய வலுசக்திப் பாதுகாப்பிற்காகப் பொதுமக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்வதே இதன் முக்கிய எதிர்பார்ப்பாகும்.
இதற்கமைய, இந்த வேலைத்திட்டம் நேற்று முதல் அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்காக அரச மற்றும் அரை அரச நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
நடவடிக்கைகள்
மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான அதிக பயன்பாட்டு நேரத்தில் (Peak Hours) மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் அல்லது
அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை முடிந்தவரை பகல் நேரங்களில் செய்வதற்கு மக்களை ஊக்குவித்தல் ‘’இலங்கையைக் காப்போம்‘’ திட்டத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மின்சாரப் பயன்பாட்டிற்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளையும் விதிக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை.
எனினும், நாட்டின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி நீர்மின்சாரம் மூலம் கிடைப்பதால், வருங்காலத்தில் நீரைப் பயன்படுத்துவதிலும் மிகுந்த சிக்கனம் தேவை என்பதை இது வலியுறுத்துகிறது.
வலுசக்திப் பயன்பாடு குறித்து மக்களிடையே ஒரு மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தானாக முன்வந்து ஒத்துழைக்கச் செய்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மின்வெட்டு ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(30.3.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்குவதாக இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய மின்சார வாரியத்தின் (CEB) உறுதிமொழியை கருத்தில் கொண்டு, தற்போதைக்கு எந்த மின்வெட்டும் ஏற்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை, என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையில் நிலவும் தற்போதைய மின் உற்பத்தி நெருக்கடியை கருத்திற்கொண்டு, பொதுமக்கள் தமது மின்சார தேவைகளைப் பகல் நேரங்களில் நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் மின் கட்டணத்தையும், நாட்டின் உற்பத்திச் செலவையும் குறைக்க முடியும் என்று இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் திங்கட்கிழமை (30.03.2026) பல பகுதிகளில் வெப்பச் சுட்டெண் மனித உடலால் உணரப்படும் வெப்பம் “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அதிக வெப்பமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்ப்பதற்காக சீரான இடைவெளியில் தண்ணீர் அருந்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, 30 அலகுகளுக்கு கீழ், 4.3 சதவீதத்தினாலும், 30 முதல் 60 அலகுகளுக்கு 6.9 சதவீதத்தினாலும், 61 முதல் 90 அலகுகளுக்கு 6.9 வீதத்தினாலும், 91 முதல் 180 அலகுகளுக்கு கீழ் 7.2 வீதத்தினாலும், 180 அலகுகளுக்கு மேல் 25 சதவீதத்தினாலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, 30 அலகுகளுக்கு 15 ரூபாயினாலும், 30 முதல் 60 அலகுகளுக்கு 45 ரூபாயினாலும், 61 முதல் 90 அலகுகளுக்கு 120 ரூபாயினாலும், 91 முதல் 180 அலகுகளுக்கு கீழ் 420 ரூபாயினாலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு : மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் (30.03.2026) அறிவிப்பொன்று வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவு இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தப் புதிய கட்டணத் திருத்தம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு, இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள ஒரு சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
62 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குறித்த பெண் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அத்துடன் ஊர் மக்களும் தொடர் தேடுதலில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மாலை மந்துவில் வன்னியாசி மதகு பகுதியிலுள்ள சிறிய காட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறிருக்க இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என ஊர் மக்கள் சந்தேகித்துவரும் நிலையில் சம்பவம் தொடர்பான உண்மைத்தன்மையை அறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை குறித்த பெண் தனது வீட்டிலிருந்து இறுதியாக வெளியேறிய சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.