இளம் யுவதியின் விபரீத முடிவு : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!!

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள வென்னப்புவ, நைனமட பகுதியில் ஜின் ஓயாவில் குதித்து உயிரிழந்த யுவதியின் மரணம் நீரில் மூழ்கியதால் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனையை சிலாபம் பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி டி.கே. விஜேவர்தன மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், யுவதியின் மரணம் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட பிற காரணங்களால் நிகழ்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த 28 ஆம் திகதி வென்னப்புவ, ஜின் ஓயா பாலத்திற்கு வந்த யுவதியொருவர் தனது காதலனுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய பின்னர் ஜின் ஓயாவில் குதித்து உயிரிழந்திருந்தார்.

கொச்சிக்கடை பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த ஜா-எல, போபிட்டியவைச் சேர்ந்த 17 வயதுடைய உமயங்கனா சத்சரணி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

அதே நேரத்தில், குறித்த யுவதியின் காதலன் என அறியப்படும் இளைஞன் அவரை காப்பாற்ற ஜின் ஓயாவில் குதித்த நிலையில், அயலவர்களின் உதவியுடன் இளைஞன் மீட்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், யுவதி காணாமல்போயிருந்த நிலையில், மறுநாள் (29 ஆம் திகதி) பாலத்தின் அருகே மிதந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதன்போது காப்பாற்றப்பட்ட இளைஞன் 1990 ஆம்புலன்ஸ் மூலம் மாரவில வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞன் யுவதியின் மரணம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கரப்பான் பூச்சி நூடில்ஸ் : புத்தாண்டில் ஹோட்டலுக்கு சென்ற குடும்பத்திற்கு அதிர்ச்சி!!

யாழ்ப்பாணம் – கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றில், கரப்பான் பூச்சியுடன் கூடிய உணவு வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பம் ஒன்று புத்தாண்டு தினமான நேற்று வியாழக்கிழமை குறித்த உணவகத்துக்கு உணவருந்த சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களுக்கு வழங்கிய நூடில்ஸ் உணவில் கரப்பான்பூச்சி இருந்தமை அவதானிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த விடயத்தை உணவக பணியாளர்களுக்கு எடுத்துக் கூறிய போது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!!

யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி கடற்கரை பகுதியில் இன்று (02.01.2026) மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்று மற்றும் கொந்தளிப்பால் குறித்த பொருள் அடித்துவரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மக்கள் யாரும் அருகில் செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

அமெரிக்க டொலர், யூரோ, பவுண்டிற்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி!!

கடந்தாண்டு அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 5.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாயின் மதிப்பு 12.1 சதவீதமும், 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக 10.7 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதற்கமைய, கடந்த ஆண்டு யூரோவிற்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 16.3 சதவீதம்,

பிரித்தானிய பவுண்டிற்கு எதிராக 12 சதவீதம், சீன யுவானுக்கு எதிராக 9.6 சதவீதம்,  ஜப்பானிய யென்னுக்கு எதிராக 5.6 சதவீதம், அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராக 12.2 சதவீதம் மற்றும் இந்திய ரூபாய்க்கு எதிராக 1 சதவீதம் என இலங்கை ரூபாயின் மதிப்பு சரிந்தது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதியை ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, பரீட்சை தொடர்பான அனைத்து தொடர்புடைய விபரங்களும் அடங்கிய சுற்றறிக்கை இன்று (02) வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு கூறுகின்றது.

இந்த முடிவின்படி, ஜனவரி 12 ஆம் திகதி தொடங்கும் உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாட வினாத்தாள்களை ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்த பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக நாடு முழுவதும் உள்ள பரீட்சை மையங்கள் மீண்டும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் வழக்கமான நடைமுறையின் படி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே பரீட்சை மையங்களுக்குச் செல்லும்போது தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுமாறும் அமைச்சகம் மாணவர்களைக் கேட்டுக்கொள்கின்றது.

மேலும், புதிய அட்டவணையின் விபரங்கள சுற்றறிக்கை மூலம் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நாட்டை தாக்கிய டித்வா சூறாவளி காரணமாக, பல பகுதிகளில் மோசமான வானிலை நிலவியதை தொடர்ந்து அந்த நேரத்தில் நடைபெற்று வந்த உயர்தரப் பரீட்சையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பரீட்சைகள் திணைக்களம் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை : குவியும் முறைப்பாடுகள்!!

இலங்கையில் 2025ஆம் ஆண்டில் சமூக ஊடக தவறான பயன்பாடு மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (Sri Lanka CERT) தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டில் மட்டும் இது தொடர்பாக சுமார் 12,650க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இணைய மோசடிகள், டிஜிட்டல் நிதி மோசடி மற்றும் இணையவழி துன்புறுத்தல்கள் (Cyber Harassment) ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள ஒரு பாரிய உயர்வாகும்.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் முன்னணி தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபோல இது குறித்துத் தெரிவிக்கையில்,

பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் பெரும்பாலானவை போலி சமூக ஊடகக் கணக்குகள் (Fake Accounts), கணக்குகள் ஹேக் செய்யப்படுதல் (Hacked Accounts) மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இவை தவிர, வெறுக்கத்தக்கப் பேச்சுகள், ஆபாசமான அல்லது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பதிவுகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்றவை தனிநபர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, இணையப் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் புதிதாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களே இத்தகைய குற்றவாளிகளின் இலக்காக மாறியுள்ளனர்.

பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களையோ அல்லது வங்கி விவரங்களையோ இணையத்தில் பகிர வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான செய்திகள் மற்றும் இணைப்புகளை (Links) சரிபார்க்காமல் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சமூக ஊடகக் கணக்குகளுக்கு வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதுடன், ‘இரு காரணி அங்கீகாரம்’ (Two-factor authentication) போன்ற பாதுகாப்பு வசதிகளைச் செயல்படுத்தி விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏதேனும் இணையவழித் தாக்குதல்கள் அல்லது மோசடிகள் நடந்தால், உடனடியாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அமைப்பிற்குப் முறைப்பாடு அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

உலகின் மோசமான நாடுகளின் வரிசையில் இடம் பிடித்த இலங்கை!!

உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தர வரிசையில் நைஜீரியா முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் மோசமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் நைஜீரியா முதலிடத்தையும் இலங்கை இரண்டாம் இடத்தையும் பங்களாதேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

வாழ்க்கைத் தரம் மோசமான நாடுகளின் வரிசையில் நைஜீரியா பூச்சிய புள்ளிகளுடன் முதலிடத்தையும் 61 புள்ளிகளுடன் இலங்கை இரண்டாம் இடத்தையும் 73 புள்ளிகளுடன் பங்களாதேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

கொள்வனவு இயலுமை, வீடுகளை பெற்றுக்காள்ளக்கூடிய நிலைமை, வாழ்க்கச் செலவு, பாதுகாப்பு, சுகாதார, போக்குவரத்து நேரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் அடிப்படையில் இந்த வாழ்க்கைத் தர சுட்டி கணிக்கப்பட்டு தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் லக்ஸ்சம்பேர்க் ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சனிபகவான் அருளால் 2026 ல் கோடிகளை குவிக்கப்போகும் ராசிகள் எவை தெரியுமா?

ஜோதிடத்தில் சனிபகவானின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. அனைத்து கிரகங்களின் இயக்கங்களால் ஏற்படும் பலன்களும் சனிபகவானின் நகர்வைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

2026-ல் சனிபகவான் மீன ராசியில் நிலைபெற்றிருக்கிறார். இருப்பினும் மற்ற கிரகங்களின் நகர்வுகள் சனிபகவானின் இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவானின் அருளால் 2026-ல் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று நாம் இங்கு பார்ப்போம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சனிபகவான் அருளாள் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகளுக்கு இறுதியாகத் தீர்வைக் காண்பார்கள். அவர்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும், புதிய பொறுப்புகள் அல்லது தொழில் வாய்ப்புகள் உருவாகலாம், மேலும் சமூகத்தில் அந்தஸ்தும்,

அங்கீகாரமும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். சனிபகவானின் தாக்கம் சிம்ம ராசிக்காரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் புதிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த வழிவகுக்கிறது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் சனிபகவான் அருளால் 2026-ல் பல நன்மைகளை அடையப்போகிறார்கள். அவர்களின் தொழில் நிலை வலுப்பெறும் மற்றும் நிதி நிலைத்தன்மை மேம்படும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆளுமை மிகவும் வலிமையானதாக மாறும்.

அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதால், அதிக தைரியத்துடன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். வேலையில்லாத கடக ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் வேலை கிடைக்க அனைத்து வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு, 2026 ஆம் ஆண்டு நம்பிக்கைக்குரிய ஆண்டாக இருக்கும். தொழில் மாற்றங்கள், பதவி உயர்வுகள் அல்லது வேலை மாறுதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சொத்து அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகளும் ஏற்படலாம். இந்த நேரத்தில் அவர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில், பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் சிறப்பாக முடிக்க முடியும்.

 

திருகோணமலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞர் பலி!!

திருகோணமலையில், விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (01.01.2026) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் முத்துச்சேனையைச் சேர்ந்த 21 வயது ஜமனராஜ் ஜதுர்ஷன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஈச்சிலம்பற்று காவல் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இலங்கைத்துறை முகத்துவாரத்தில் இருந்து புன்னையடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

உலகம் அழியப்போகிறது எனக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பிய எபோ நோவா அதிரடியாக கைது!!

மேற்கு ஆப்பிரிக்காவில் கானாவை சேர்ந்த இவான்ஸ் எஷுன் என்ற நபர், தன்னை ‘எபோ நோவா’ என்று அழைத்துக்கொண்டு, 2025 டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்று கூறி பீதி கிளப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கானா பொலிஸின் இணையவழி குற்றப் பிரிவு நேற்று (31) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தன்னை தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்டு, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியமையே கைதுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

எபோ நோவா கடந்த ஆகஸ்ட் மாதம் பெரிய மரக் கப்பலை கட்டும் வீடியோக்கள் வைரலாகி உலக அளவில் பிரபலமானார்.

நத்தார் தினத்தில் என்னுடைய வேண்டுதலை கடவுள் ஏற்றுக்கொண்டு விட்டார். அதனால் உலகை அழிக்கும் முடிவை கடவுள் ஒத்திவைத்திருக்கிறார் அதனால் தொடர்ந்து இன்னும் பல கப்பல்களை கட்டப் போகிறேன்.

அதற்கு எனக்கு கடவுள் போதிய நேரம் கொடுத்திருக்கிறார் என்று கூறிய அவர் நோவாவை தேடி வந்த மக்களிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் மகிழ்ச்சியாய் இருங்கள் என கூறினார்.

இதனால் மக்கள் கோபடைந்தனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் அவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

எபோ நோவா மழுப்பலாக வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கூறி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க பெண்ணை கேரள முறைப்படி திருமணம் செய்த இளைஞன்!!

தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அமெரிக்கப் பெண்ணொருவரை கேரள முறைப்படி திருமணம் செய்தார். கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் வாசுதேவன். இவர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர் அமெரிக்காவில் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வாசுதேவனும், அமெரிக்காவைச் சேர்ந்த கரோலின் கஸாஸ் என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு இருவரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கேரள முறைப்படி காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.

மணமகளின் பெற்றோர் அமெரிக்காவில் இருந்து வந்து இந்த திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தியது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 

மோட்டார் சைக்கிளும் காரும் ஒரே நேரத்தில் மோதியதில் பற்றி எரிந்த பேருந்து!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனி பேருந்து இன்று காலை ஒரு பயங்கர விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்தங்கரை அருகேயுள்ள கொட்டுகாரம்பட்டி பகுதியில் இருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, மாதேஸ்வரன் (51) என்பவர் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

ஊத்தங்கரை நாட்டாண் கொட்டாய் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த பைக், கார் மற்றும் பேருந்து மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பைக்கை ஓட்டி வந்த நபர் தூக்கி வீசப்பட்ட நிலையில், திடீரென பைக் மற்றும் பேருந்து ஆகிய இரண்டுமே கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின.

பேருந்தின் முன்பகுதியில் தீ மளமளவெனப் பரவியதைப் பார்த்த ஊழியர்கள் மரண பயத்தில் அலறினர். நொடிப் பொழுதில் சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள், வாசல வழியாகவும், ஜன்னல்கள் வழியாகவும் கீழே குதித்து உயிரைத் தற்காத்துக் கொண்டனர்.

ஊழியர்கள் அனைவரும் கீழே இறங்கிய சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதுமாகத் தீப்பற்றி எரிந்து எலும்புக்கூடாக மாறியது. இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாகப் பேருந்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் உயிர் தப்பினாலும், முந்திச் செல்ல முயன்ற காரால் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முட்டைக்கோஸ் சாப்பிட்ட பாடசாலை மாணவி பலி : பெரும் சோகம்!!

ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட முட்டைக்கோஸை சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மாமாவுக்கு சொந்தமான வயலில் விளைந்திருந்த முட்டைக்கோஸ் இலைகளை சிறுமி அறியாமலே பறித்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

முட்டைக்கோஸ் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுமிக்கு குமட்டல் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலை முன்னேறாமல், டிசம்பர் 24ஆம் தேதி சிறுமி உயிரிழந்தார்.

இந்த துயர சம்பவம் குடும்பத்தினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படும் காய்கறிகளை கவனமின்றி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

1000 ரூபாய்க்காக ஆணாக மாறிய இளம்பெண்!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 1000 ரூபாய் பணத்திற்காக ஒரு இளம்பெண், ஒரு ஆணின் சவாலை ஏற்றுக்கொள்கிறார்.

“ஆண்களின் வாழ்க்கை கடினமா, பெண்களின் வாழ்க்கையா?” என்ற கேள்விக்கு, பெண்களின் வாழ்க்கைதான் அதிக கஷ்டம் என அவர் முதலில் வாதிடுகிறார்.

பிரபல யூடியூபர் ஜெய் குமார் தவானி ஏற்பாடு செய்த அந்தச் சவாலில், ஆண்களின் தினசரி உழைப்பை அந்த இளம்பெண் நேரடியாக அனுபவிக்கிறார். சில நேரங்களிலேயே அவர் சோர்வடைந்து, ஆண்களின் பொறுப்புகளும் அழுத்தங்களும் எவ்வளவு கடினம் என்பதை உணர்கிறார்.

“ஆணாக வாழ்வது மிகவும் கஷ்டம். என்னால் இனி முடியாது” என்று கூறிய அவர், கேமரா முன்பு கைகளைக் கூப்பி அனைத்து ஆண்களிடமும் மன்னிப்பு கேட்டார்.

நகைச்சுவையுடன் சொல்லப்பட்ட இந்த உண்மை சம்பவம், இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று, ஆண்களின் உழைப்பை புரிய வைத்த வீடியோவாக பேசப்பட்டு வருகிறது.

கைப்பேசி பாஸ்வேர்டு சொல்லாததால் காதலியைக் கொன்று வீசிய காதலன்!!

செல்போனுக்கு பாஸ்வேர்டு வைத்து லாக் போட்டு விட்டு, பாஸ்வேர்டு சொல்லாததால் சந்தேகத்தில், காதலியைக் கொன்று கள்ளக்காதலன் பள்ளத்தில் உடலை வீசியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். லாரி டிரைவரான இவரது மனைவி சுமதி (24). கடந்த 23ம் தேதி சுமதி மயமாகி இருந்த நிலையில், இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசாரின் விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவருடன் சுமதிக்குத் தகாத உறவு இருந்தது தெரிய வந்தது.

சுமதிக்கும் வெங்கடேஷுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவர் லாரி ஓட்ட வெளியூர்களுக்குச் செல்லும் நேரங்களில் இருவரும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக சுமதி தனது செல்போனை ‘லாக்’ செய்து வைத்துள்ளார்.

மேலும் வெங்கடேஷின் அழைப்புகளையும் தவிர்க்கத் தொடங்கியுள்ளார். இதனால் சுமதிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்குமோ என வெங்கடேஷ் சந்தேகப்பட்டுள்ளான்.

கடந்த 23-ம் தேதி சுமதியைத் தனது காபி தோட்டத்திற்கு வரவழைத்த வெங்கடேஷ், அங்கு அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் செல்போன் லாக் செய்து வைத்திருப்பது குறித்துக் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், சுமதியின் துப்பட்டாவாலேயே சுமதியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பிறகு சுமதியின் தாலியைக் கழற்றிக் கொண்ட வெங்கடேஷ், சடலத்தைச் சாக்குமூட்டையில் கட்டி தனது பைக்கில் 6 கி.மீ தூரம் கொண்டு சென்று, குப்பனூர் சாலையில் உள்ள 300 அடி பள்ளத்தில் யாரும் கண்டுபிடிக்காத வகையில் வீசி எறிந்துள்ளார்.

சுமதி வேறு யாருடனோ ஓடிவிட்டார் என நம்ப வைக்க வெங்கடேஷ் ஒரு நாடகமாடினார். சுமதியின் தாலியை ஒரு பார்சலில் வைத்து பஸ் டிரைவர் மூலம் சுமதியின் கணவர் சண்முகத்திடமே கொடுத்தனுப்பியுள்ளார். ஆனால் அந்தத் தாலி வெங்கடேஷிடம் எப்படி வந்தது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சண்முகம் அளித்த புகாரே, வெங்கடேஷைச் சிக்க வைத்தது.

போலீசார் வெங்கடேஷைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் சுமதியைக் கொன்று வீசியதை ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் 300 அடி பள்ளத்தில் வீசப்பட்டிருந்த அழுகிய நிலையில் இருந்த சுமதியின் சடலத்தை போலீசார் மீட்டனர். தற்போது வெங்கடேஷ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காதலியை காப்பாற்ற போராடிய காதலன் பொலிஸாரினால் கைது!!

புத்தளத்தில் ஜின் ஓயாவில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட யுவதியின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 28ஆம் திகதி தண்ணீரில் குதித்த யுவதியை காப்பாற்றும் நோக்கில் குதித்த காதலன் மக்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், யுவதி சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காதலன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அந்த இளைஞர் வென்னப்புவ பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் வென்னப்புவ, நைனமடம பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ருமேஷ் லக்ஷன் என தெரியவந்துளளது.

சம்பவத்தில் உயிரிழந்த 17 வயதான உமயங்கனா சத்சரணி என்ற யுவதி, கொச்சிக்கடையில் உள்ள பொருத்தொட்ட பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.

சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட காதலன் வழங்கிய வாக்குமூலத்தில், “உயிரிழந்த உமயங்கனாவுக்கும் எனக்கும் பல வருடங்களாக காதல் இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு இது தெரியும். 28 ஆம் திகதி மாலை, உமயங்கனா எங்கள் வீட்டிற்கு வந்தார்.

அந்த நேரத்தில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அவர் தனது வீட்டிற்குச் சென்று எனக்கு தொலைபேசியில் அழைத்து, அவருடைய அம்மா தன்னைத் திட்டுவதாகக் கூறினார்.

அதனால் வீட்டிற்குச் செல்ல அச்சமடைந்த நிலையில் காணப்பட்டார். நான் நைனமடமவில் உள்ள ஜின் ஓயாவில் பாலத்திற்குச் சென்றபோது, அவர் பாலத்திலிருந்து குதிப்பதைக் கண்டேன். அவரை காப்பாற்ற நானும் ஜின் ஓயாவில் குதித்தேன். ஆனால் என்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.