யாழில் சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்தவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 43 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்வதற்கு சென்ற நிலையில் கூரை வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தவேளை கூரை மரம் முறிந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(08.09) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
வாழைச்சேனை கல்குடா கல்வி வலயத்தின், மாங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் சதீஷ் அஜய் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 145 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் தமது கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மாங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் 28 வருடங்களின் பின்னர் இந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் அதிபர் மேற்பார்வையில் ,மாணவனுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் மாணவனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
நீர்கொழும்பு கட்டுவ சந்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது. பேருந்தின் , ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது.
தனியார் சொகுசு பேருந்து மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் முன்பகுதி பெரும் சேதமாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழையமாணவர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற ஒன்றுகூடலும், விளையாட்டு நிகழ்வும் லயன்ஸ் விளையாட்டு கழகமைதானத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபரும், சங்கத்தின் பதவி வழித்தலைவருமான கி.நந்தபாலன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது. அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வுகளில் முதற்கட்டமாக பழைய மாணவர்களுக்கிடையிலான துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றது.
அணிக்கு 8 பேர் கொண்ட இப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு 2006 ஆம் வருட க.பொ.த.சாதாரண தர மாணவர்களும், 2017 மாணவர்களும் தகுதிபெற்றனர். போட்டி முடிவில் 2006 ஆண்டு மாணவர்கள் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியிருந்தனர்.
தொடர்ந்து இடம்பெற்ற பெண்களுக்கான கயிறு
இழுத்தல் போட்டியில் 2005 க.பொ.த.சாதாரண தர மாணவர்கள வெற்றியை தமதாக்கியிருந்தனர்.
வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது. நிகழ்வில் முதன்மை அதிதியாக கோட்டக்கல்வி அதிகாரி செல்வரத்தினம், கலந்துகொண்டதுடன் பெருமளவான பழையமாணவர்களும் பங்கெடுத்திருந்தனர்.
கனடாவில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவர் சுற்றுலாவுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (05) உயிரிழந்துள்ளார்.
கனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த சத்தீஸ்வரன் சயினகா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி – கல்லுவம் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட யுவதி தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 05.09.2025 வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் நாளை(8) திங்கட்கிழமை கல்லுவத்தில் உள்ள அன்னாரின் பூர்வீக வீட்டில் இடம்பெறவுள்ளது. குறித்த சிறுமியின் திடீர் மரணத்தால் வடமராட்சி கல்லுவம் பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை உட்பட பல நாடுகளில் தோன்றிய முழு சந்திர கிரகணம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் பல இடங்களில் நிலா சிவப்பு நிறத்தில் தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை பல மக்கள் பார்வையிடுவதாகவும் அவர்கள் சந்திரனை புகைப்படம் எடுத்தும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இலங்கை உட்பட பல நாடுகளுக்கும் தெரியும் முழு சந்திர கிரகணம் நேற்று (07.09.2025) நிகழும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவு தெரிவித்திருந்தது.
அதன்படி, இன்றிரவு 8.58 மணி முதல் நாளை (08) அதிகாலை 2.25 மணி வரை, 5 மணி நேரம் 27 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணத்தைக் காண ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்பட்டது.
அந்தவகையில், தற்போது வானில் சந்திரகிரகணம் இடம்பெற்று வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அதனை பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும், இந்த சந்திர கிரகணம் உலக மக்களுக்கு சுமார் 85 சதவீதம் முழுமையான அல்லது பகுதி கிரகணமாகத் தெரியும் என தெரிவிக்கப்பட்டிருந்நது.
அதன்படியே கட்டாரிலும் இந்த சிவப்பு நிலா தென்பட்டதாக சிலர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
தங்காலை நகர சபையின் ஊழியர்கள் பலருக்கு ஒரே நேரத்தில் விடுமுறை வழங்கப்பட்டு, சுற்றுலா சென்றது தொடர்பாக சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகர சபை போன்ற ஒரு அரச நிறுவனத்தில் ஒரே நேரத்தில் பலருக்கு விடுமுறை வழங்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த விபத்தில் உயிரிழந்த நகர சபையின் செயலாளர் பி.டபிள்யூ.கே.ரூபசேனவே இந்த விடுமுறைக்கு அனுமதி வழங்கிய அதிகாரி என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.இ.என்.இ. அபயரத்ன தெரிவித்துள்ளார்.
எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து எதிர்பாராத விதமாக இடம்பெற்ற பின்னரே குறித்த விடயம் தெரியவந்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.
தங்காலை நகர சபை ஊழியர்கள் குழுவின் இடமாற்றம் தொடர்பாக இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த தங்காலை நகர சபையின் தலைவர் பி.பி.ஜி. நந்தசிறி, இத்தகைய எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் அதிகாரம் விபத்தில் உயிரிழந்த நகர சபையின் செயலாளருக்கு காணப்பட்டதாக கூறினார்.
இந்தநிலையில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கத் தயாராக உள்ளதாக தங்காலை மாநகர சபையின் தலைவர் கூறுகிறார்.
இந்த இழப்பீட்டை வழங்குவது குறித்து நகர சபைக்கும் தங்காலை வணிக சமூகத்திற்கும் இடையே ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எல்ல-வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து பெறப்பட்ட 10 இலட்சம் ரூபாவுக்கு மேலதிகமாக, போக்குவரத்து அமைச்சு மேலும் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்காலை நகர சபையின் அங்கீகரிக்கப்பட்ட 47 ஊழியர்களில் 22 பேர் எல்ல – வெல்லவாய சுற்றுலாவில் பங்கேற்றுள்ளதாகவும், மற்றொரு குழு சுற்றுலாவில் பங்கேற்கவில்லை என்றும் நகர சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எல்ல – பிரதான வீதியில் நடந்த பேருந்து விபத்து தொடர்பில் பேருந்தில் மோதிய சொகுசு காரின் சாரதி முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
விபத்து சம்பவிப்பதற்குசில நிமிடங்களுக்கு முன்பு சொகுசு காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் உயிர் தப்பியதாக எல்ல பொலிஸார் தெரிவித்திரு்தனர்.
உயிர் தப்பிய மூன்று சகோதரர்களும் பண்டாரவளை, பூனகல வீதியைச் சேர்ந்த புத்தல நகரில் வியாபாரம் செய்து வரும் எச்.எம். சமிது தேஷன் (22) மற்றும் அவரது 17 மற்றும் 19 வயதுடைய இரண்டு சகோதரர்கள் என கூறப்பட்டது.
தங்கல்லை நகராட்சி மன்ற ஊழியர்கள் குழு ஒன்று நுவரெலியாவில் சுற்றுலா சென்றுவிட்டு தங்கள் குடும்பங்களுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது,
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் எதிர் திசையில் இருந்து வந்த சொகுசு காரில் அவர்கள் பயணித்த பேருந்து மோதியது.
பின்னர் வீதிக்கு அருகிலுள்ள ஒரு தடுப்புச் சுவரில் மோதி 1,000 அடி உயரமுள்ள ஒரு பாறையில் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்ததுடன் மற்றும் 18 பேர் காயமடைந்தனர்.
விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தனது அனுபவங்களை விவரித்த வாமிது தேஷன் (22),
“நான் புத்தலவில் ஒரு தொழிலை நடத்தி அங்கு வேலை செய்கிறேன். நாங்கள் வார இறுதி நாட்கள் என்பதால் பண்டாரவளை பூனகல வீதியில் உள்ள எங்கள் வீட்டிற்குச் சென்றோம்.
குறித்த எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நாங்கள் அடிக்கடி பயணிப்பதால், நான் மிகவும் சாலையைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறேன். மலைச் சரிவுகளில் ஆபத்தான வளைவுகள் உள்ள இடங்கள் எனக்குத் தெரியும்.
அன்று (04.09.2025) நாங்கள் எங்கள் வேலையை முடித்துவிட்டு, இரவில் புத்தலவிலிருந்து என் இரண்டு சகோதரர்களுடன் பண்டாரவைளைக்கு புறப்பட்டோம்.
நான் காரை ஓட்டிக்கொண்டிருந்தேன். என் தம்பி முன் இருக்கையில் இருந்தான். என் இரண்டாவது தம்பி (19) ஜன்னலுக்குப் பக்கத்தில் பின் இருக்கையில் இருந்தான்.
நாங்கள் இராவணன் நீர்வீழ்ச்சியைக் கடந்து எல்ல நோக்கி மலையில் வாகனத்தை செலுத்தியபோது 15வது தூணில் உள்ள ஃபேட்டல் வளைவுக்கு அருகில், எல்ல பக்கத்திலிருந்து வெல்லவாயா நோக்கி ஒரு பேருந்து வந்தது. குறித்த பேருந்து வேகமாக விளக்குகளை எரியவிட்டு வருவதைக் கண்டேன்.
இதன்போது அந்த பேருந்து வேகமாக என்னை நோக்கி வந்தது. அதே நேரத்தில், நான் காரை வீதியின் இடது பக்கமாக முடிந்தவரை நிறுத்தினேன்.
அந்த நேரத்தில், வேகமாக வந்து கொண்டிருந்த பேருந்து என் காரின் வலது பக்கத்தில் மோதி அதிவேகமாகச் சென்றது.
அந்த நேரத்தில், கார் நின்றது. எனக்கு எதுவும் புரியவில்லை. பேருந்து எங்கே சென்றது என்றும் எனக்குப் புரியவில்லை. பேருந்தை நிறுத்தாமல் சாரதி சென்றுவிட்டார்.
இந்த விபத்து நடந்தபோது சரியாக இரவு 9 மணி. பின்னர், நான் என் இரண்டு சகோதரர்களுடன் வாகனத்தில் இருந்து இறங்கி மோதுன்ட இடத்தை அவதானித்தோம்.
வாகனத்தின் வலது பக்கம் சேதமடைந்தது. பின்புறத்தில் வலது ஜன்னலில் அமர்ந்திருந்த என் சகோதரர், மற்றொரு சகோதரர் எந்த ஆபத்தும் இல்லாமல் தப்பினார்.
நான் என் தந்தைக்கு அழைப்பை ஏற்படுத்தி, விளக்கம் அளித்தேன். பின்னர், கீழே உள்ள வளைவின் திசையில் இருந்து யாரோ அலறி அழும் சத்தம் கேட்டது.
இருள் காரணமாக எதையும் பார்க்க முடியவில்லை. இந்த நேரத்தில், ஒரு பேருந்தின் இலக்க தகடும், பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த வெள்ளை இரும்பு கம்பமும் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டோம்.
இதன்போது வெல்லவாய பக்கத்திலிருந்து நீர்வீழ்ச்சியை நோக்கி ஒரு இராணுவ வாகனம் வருவதைக் கண்டோம்.
எனவே நாங்கள் அந்த வாகனத்தை நிறுத்தி விளக்கமளித்தோம். பின்னர், அவர்கள் இராணுவ வாகனத்தை நிறுத்தி, அதிலிருந்து ஒரு பெரிய கயிற்றைக் கொண்டு வந்து, தங்களிடம் இருந்த விளக்குகளை பயன்படுத்தி, கயிற்றில் மூலம் இறங்கி, இரண்டு சிறிய குழந்தைகள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணை தூக்கி வந்தனர்.
நாங்கள் மூவரும் அவர்களுக்கு உதவினோம். அந்த நேரத்தில்தான் எங்கள் காரை மோதிய பேருந்து இராவணன் நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்ததை அறிந்தோம்.
அதே நேரத்தில், எல்ல பொலிஸ் அதிகாரிகள் வந்தனர். வீதி மூடப்படாததால் அவர்கள் இருபுறமும் வீதியை மறித்தனர். நாங்கள் முதலில் மீட்ட ஐந்து பேரும் பதுளை போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
பின்னர், இராணுவ அதிகாரிகள், உள்ளூர்வாசிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் வந்து தங்கள் தொலைபேசி விளக்குகளை பயன்படுத்தி, கயிறுகளின் உதவியுடன் பள்ளத்தாக்கில் இறங்கி, பேருந்தில் இருந்த காயமடைந்தவர்களை கயிறுகளின் உதவியுடன் பள்ளத்தாக்கிலிருந்து மேலே இழுத்து, மருத்துவமனைகளுக்கு அனுப்பினர்.
பின்னர் ஜெனரேட்டர்கள் வரவழைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. பள்ளத்தாக்கிலிருந்து உடல்கள் சிரமத்துடன் மீட்கப்பட்டன. காலை, பொலிஸ் அதிகாரிகள் தனது விவரங்களை என்னிடம் கேட்டார்கள்.
பின்னர் காலை 6 மணியளவில், நான் எல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்றேன். எனது வாக்குமூலங்களைப் பெற்ற பிறகு, அவர்கள் என்னை பண்டாரவளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். பின்னர் பிணை வழங்கப்பட்டது” என கூறியுள்ளார்.
வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்ல – வெல்லவாய பிரதான வீதியில், ரந்தேனிய பகுதியில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை (06.09.2025) ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் மேல் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
இந்நிலையில், மழையுடன் கூடிய தற்காலிக காற்று மற்றும் மின்னல் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரரை தவறாக பேசிய நபரை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு முக்கியமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில் எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் மைதானத்திற்கு வந்தாலே ரசிகர்களின் ஆரவாரம் அளவுக்கதிகமாக இருக்கும்.
இதில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டி நடைபெறும் போதும் ஒரு அணியை சேர்ந்த ரசிகர்கள் மற்றொரு அணியை சேர்ந்த ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். அதற்கு சமூக வலைதளமே ஒரு எடுத்துக்காட்டு.
அந்த வகையான சம்பவம் ஒன்று கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது. நடைபெற்றுள்ளது. தமிழக மாவட்டமான அரியலூரை சேர்ந்த தர்மராஜ் என்பவர் தனது நண்பர் விக்னேஷ் உடன் மது அருந்த சென்றுள்ளார்.
அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்த போது கிரிக்கெட் குறித்து பேசியுள்ளனர். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து விக்னேஷ் தவறாக பேசியுள்ளார்.
இதனால், கோபமடைந்த தர்மராஜ் அரிவாளால் விக்னேஷை வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், பொலிஸார் தர்மராஜை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று தர்மராஜுக்கு அரியலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கியுள்ளது.
தனது மூன்று குழந்தைகளையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற தந்தை, தானும் விஷம் குடித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் ஆந்திராவை அலற செய்திருக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் பிரகாசம் மாவட்டத்தில் எர்ரகொண்ட பாளையம் மண்டலம் பெத்தபொயபள்ளியில் வசித்து வருபவர் புத்தா வெங்கடேஸ்வர். இவரது மனைவி தீபிகா.
இவர்களுக்கு 8 மற்றும் 6 வயதில் 2 மகள்கள், 4 வயதில் ஒரு மகன். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த புத்தா வெங்கடேஸ்வர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்தால் குழந்தைகள் சிரமப்படுவார்கள் என நினைத்தார்.
மாலையில் பள்ளி முடிந்து வந்த 3 குழந்தைகளையும் மோட்டார் சைக்கிளில் புத்தா வெங்கடேஸ்வர், தெலுங்கானாவில் உள்ள நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டை மண்டலம் ஹாஜிபூர் என்ற இடத்திற்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து 3 குழந்தைகள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் 3 பேரும் தீயில்கருகி உயிரிழந்தனர்.
பின்னர் புத்தா வெங்கடேஸ்வர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கணவனும், குழந்தைகளும் வீடு திரும்பாததை அறிந்த தீபிகா பல இடங்களில் தேடிப் பார்த்தார்.
அவர்கள் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் 3 குழந்தைகளையும் கொலை செய்து அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.
அந்தப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டன. 3 குழந்தைகள், கணவரின் உடல்களை பார்த்து தீபிகா மற்றும் உறவினர்கள் கதறிஅழுதது காண்பவர் கண்களில் நீரை வரவழைத்தது.
நண்பர்கள் 3 பேரும் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் நெல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நெல்லை டவுன் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது.
அந்தப் பேருந்து சந்திப்பு பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஈரடுக்கு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது டவுன் பகுதியில் இருந்து நெல்லை சந்திப்பு நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் 3 இளைஞர்கள் வந்தனர்.
ஈரடுக்கு மேம்பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் மீது அரசுப்பேருந்து எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நெல்லை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் உயிரிழந்த இளைஞர்கள் நெல்லை டவுன் வையாபுரி நகரில் வசித்து வரும் லோகேஷ்,
முகமது அலி தெருவி வசித்து வரும் சாதிக், சந்தோஷ் என்பது தெரியவந்தது. இந்நிலையில் பலியான 3 பேர் பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி விபத்தில் உயிரிழந்த லோகேஷ் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்திலும், சாதிக் ஒரு ஓட்டலிலும் பணிபுரிந்து வந்தனர்.
சந்தோஷ் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்கள் 3 பேரும் நண்பர்கள். சந்தோஷ் நேற்று முன்தினம் காலையில் ஊருக்கு வந்திருந்தார்.
நீண்டநாள் கழித்து விடுமுறைக்கு நண்பன் வந்துள்ளதால் 3 பேரும் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
நேற்று முன்தினம் இரவில் பாளையங்கோட்டைக்கு பானிபூரி சாப்பிடுவதற்காக 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றிருந்த போது தான் இந்த கோர விபத்து நடந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது
காலியில் கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹவத்த பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு மருமகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மருமகனே கொலைசெய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவத்தன்று, கொலைசெய்யப்பட்ட மருமகன் தனது வீட்டில் நண்பர்களுடன் இணைந்து மதுபானம் அருந்தியுள்ள நிலையில் மதுபோதையில் உள்ள நண்பர்களை அவர்களது வீடுகளுக்கு கொண்டுசென்று விடுவதற்காக மாமனாரிடம் முச்சக்கரவண்டியை கேட்டுள்ளார்.
ஆனால் மாமனார் தனது முச்சக்கரவண்டியை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த மருமகன் பொல்லால் வீட்டின் கதவை அடித்து உடைத்து மனைவியை தாக்க முயன்றுள்ளார்.
மதுபோதையில் உள்ள மருமகனை தடுப்பதற்காக மாமனார் தனது மருமகனை பொல்லால் தாக்கியுள்ளார். காயமடைந்த மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரான 58 வயதுடைய மாமனார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இறந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெல்லவாய – தணமல்வில பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபையின் யாலபோவ டிப்போவுக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறி மற்றும் கார் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது காரில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பணம், புகழ், வசதிகள் வந்த போதிலும், மகிழ்ச்சிக்காக, 15 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்’ என, செயின் பறிப்பு வழக்கில் கைதான, திமுக ஊராட்சி தலைவி வாக்குமூலம் அளித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் வரலட்சுமி, (வயது 50). இவர், காஞ்சிபுரத்தில் இருந்து அரசு பஸ்சில் சென்னை திரும்பிய போது, அவரது 5 சவரன் நகையை பெண் ஒருவர் திருடியுள்ளார்.
கோயம்பேடு பொலிஸார் விசாரித்து, திருப்பத்துார் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி தலைவரான, தி.மு.க.,வைச் சேர்ந்த பாரதி,(வயது 51), என்பவரை கைது செய்தனர். பொலிஸாரிடம் ,
நான், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்துார், வேலுார், கிருஷ்ணகிரி என பல இடங்களில், ஓடும் பஸ்களில், பெண்களின் கவனத்தை திசை திருப்பி, நகை திருடி உள்ளேன். நல்லவள் போல குழந்தைகளுடன் பேச்சு கொடுத்து, நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளேன்.
கடந்த 15 ஆண்டுகளாக, திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். திருடிய நகை களை விற்று கிடைத்த பணத் தில், சொந்த ஊரில் வணிக வளாகம் கட்டி உள்ளேன். ஊராட்சி தலைவியான பின், திருட்டு தொழிலை விட்டு விடும்படி உறவினர்கள் கூறினர்.
என்னால் திருடும் பழக்கத்தை விட முடியவில்லை. பணம், புகழ், வசதிகள் வந்த பின்னரும், திருடும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காக, இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ‘இனி திருடவே கூடாது’ என, ஒவ்வொரு நாளும் சபதம் எடுப்பேன்.
ஆனால், திருடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நான் தோற்று விடுவேன். என் திருட்டு பழக்கத்தால் கூனி குறுகி நிற்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில் மக்களை பற்ரி கவலைப்படாது திமுக ஊராட்சி தலைவி திருடி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.