சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரை படுகொலை செய்த கணவன் மற்றும் அவரது சகோதரருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
திட்டமிட்ட வகையில் மனைவியை கொலையை செய்த கணவனுக்கு 19 வருடங்கள் சிறைத்தண்டனையும் சகோதரனுக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த வருடம் செப்டம்பர் 11ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தின் டிசினோ பகுதியில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 40 வயது பெண்மணி, மர்மமான முறையில் உயிரிழந்தார்.
குற்றவாளிகள் இணைந்து கொலை செய்த நிலையில், இயற்கையான மரணம் என நாடகமாடியதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட தமிழ் பெண் உறங்கிக் கொண்டிருந்த போது, கணவர் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் சேர்ந்து அவர் மீது பாய்ந்துள்ளனர்.
பெண்ணின் தலையில் பிளாஸ்டிக் பையை மாட்டி, சுமார் 10 நிமிடங்கள் மூச்சுத் திணறச் செய்து அவரைக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், அவர் தூக்கத்திலேயே இயற்கையாக இறந்தது போல் காட்டுவதற்காக உடலை நகர்த்தி வைத்துள்ளனர். இந்த நாடகத்தை ஒஸ்கார் விருதுக்கு தகுதியானது என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் நிஷான் கனகராஜா பிரித்தானிய மன்னரின் 2026 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கௌரவப் பட்டியலில் ‘நைட்’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வரும் நிலையில் பட்டம் பெற்றுள்ளார்.
உயர்கல்வித் துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு மற்றும் சமூக உள்ளடக்கல் கொள்கைகளை முன்னெடுத்தமைக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ். மார்ட்டின் வீதியில் வளர்ந்தவர். யாழ். பரி. யோவான் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1985ஆம் ஆண்டு அந்தக் கல்லூரியின் தலைமை மாணவ தலைவராகவும் (Head Prefect) திகழ்ந்துள்ளார்.
இலங்கையில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றார்.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பதவிகளை வகித்த அவர், 2019 ஆம் ஆண்டு லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுள்ளார்.
பிரித்தானியாவின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றை நிஷான் கனகராஜா வழிநடத்தி வருகினறார்.
இந்த கௌரவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தேசத்திலிருந்து வந்த ஒரு சிறுவன், இன்று அரச குடும்பத்தினால் கௌரவிக்கப்படுவது என்பது ஒரு வியக்கத்தக்க பயணம்.
கல்வியின் மாற்றும் சக்தியினாலும், அது வழங்கும் வாய்ப்புகளினாலுமே இது சாத்தியமானது” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த உதவி கோரிக்கையைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் சிக்கித் தவிக்கும் இலங்கை பெண் மற்றும் அவரது குழந்தை தொடர்பில் வெளியுறவு அமைச்சகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த பெண் பேஸ்புக்கில் காணொளி ஒன்றை பகிர்ந்து, ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சரிடம் நேரடியாக நாடு திரும்ப உதவுமாறு முறையிட்டுள்ளார்.
இதற்கமைய, அதிகாரிகள் முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்தப் பதிவில், தனது கணவர் மாரடைப்பால் நீண்ட காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து பின்னர் உயிரிழந்த நிலையில், தன்னால் ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு வெளியேற முடியவில்லை என்று அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவக் கட்டணங்கள் செலுத்தப்படாததால், துபாய் மருத்துவமனை தனது கடவுச்சீட்டை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக வைத்திருந்ததாகவும், இதனால் தனக்கும் தனது குழந்தைக்கும் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், “தற்போது, எனக்கும் சட்ட சிக்கல்கள் உள்ளன, ஏனெனில் நான் எனது பெயரில் தங்குமிடத்தை எடுத்திருந்தேன். மேலும் அதற்கான கொடுப்பனவுகளைச் செலுத்த எனக்கு வழி இல்லை.
இப்போதும் கூட, எனக்கு எந்த தீர்வும் இல்லை. மேலும், என் குழந்தைக்கும் எனக்கும் செல்லுபடியாகும் விசாக்கள் இல்லை, எங்கும் வேலை கிடைக்கவில்லை” என அந்த பெண் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அந்தப் பெண், தான் நிதி இழப்பீடு கோரவில்லை, மாறாக இலங்கைக்குத் திரும்புவதற்கு அரசாங்கத்தின் உதவியை மட்டுமே கேட்கிறேன் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பில் அருண் ஹேமச்சந்திர செய்தியாளர்களிடம், அந்தப் பெண்ணுடன் தான் நேரில் பேசியதாகவும், பின்னர் அவர் இலங்கை தூதரகத்திற்கு முறையான அறிக்கையை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
“எமது அலுவலகம் தற்போது அபுதாபியில் உள்ள எங்கள் பணியகம் மற்றும் தொடர்புடைய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் இந்த விடயத்தைக் கையாள்கிறது.
இதனால் குறித்த பெண் மற்றும் அவரின் குழந்தை, முறையான அதிகாரப்பூர்வ வழிகளில் திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும்” என்று துணை அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (31) சற்று குறைந்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 360,000 ரூபாவாக விற்பனையாகியிருந்த நிலையில், வருடத்தின் இறுதி நாளான இன்று (31) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.
அந்த வகையில்,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அதற்கமைய, 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,300 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,163 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்தி செய்யப்படும் நிதிமோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இணையத்தைப் பயன்படுத்தும் போது மக்கள் பின்வரும் விடயங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் இது தொடர்பில் இன்று (31) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் இந்த விடயத்தில் பொதுமக்களின் கவனத்தை மேலும் ஈர்க்கவும், சட்டத்தை திட்டமிட்ட முறையில் செயல்படுத்தவும் இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தென்னிலங்கையில் வைத்தியசாலை ஒன்றில் பல் ஒன்றைப் பிடுங்கியதன் பின்னர் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் காரணமாக உயிரிழந்துள்ளார். ஹொரண, பொக்குணுவிட்ட பகுதியைச் சேர்ந்த 20 வயதான தெவ்மி மதுஷிகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவி ஹொரண மேதங்கர மகா வித்தியாலய மாணவி ஆவார். அவர் பாடசாலை மட்டத்தில் சிறந்த நடனக் கலைஞராகவும், மாணவர் தலைவியாகவும் விளங்கிய ஒரு திறமையான மாணவியாகும்.
எதிர்காலத்தில் ஒரு கணக்காளராக வர வேண்டும் என்ற கனவோடு இருந்த தெவ்மி, உயர்தரப் பரீட்சையில் ஒரு பாடத்திற்குத் தோற்றவிருந்த நிலையில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளார்.
திடீரென ஏற்பட்ட பல் வலியால் கடந்த 14 ஆம் திகதி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, வைத்தியரின் ஆலோசனையின் பேரில் ஒரு பல் பிடுங்கப்பட்டது.
அதன் போது அவருக்கு மயக்க நிலை ஏற்பட்டுள்ளது. மயக்கம் குறித்து தந்தை வைத்தியரிடம் வினவிய போது அது சாதாரண மயக்கம் என குறிப்பிட்டுள்ளனர்.
வீடு திரும்பிய பின்னர் மாணவிக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதுடன், முகம் வீக்கமடைந்ததைக் கண்ட தாய், அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது யுவதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகக் கூறி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மாணவியின் இரத்த அழுத்தம் குறைந்ததால் அவர் ஹொரண அரசாங்க மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட சோதனைகளில் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சையின் போது உடலில் கடுமையான கிருமித்தொற்று பரவியிருந்ததும், நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. அத்துடன் அவரது மூளையில் நீர் கோர்த்து வீக்கம் ஏற்பட்டிருந்ததால் நிலைமை மேலும் மோசமடைந்தது.
பலமுறை இரத்தம் மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி கடந்த 28 ஆம் திகதி இரவு தெவ்மி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிய விரும்புவதாக தாய் கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் பைகளின் இலவச விநியோகத்தைத் தடை செய்ததன் பின்னர், பிளாஸ்டிக் பை பயன்பாடு 50% குறைந்துள்ளதாக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயகொடி தெரிவித்தார்.
2025 நவம்பர் 1 முதல் கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் வசூலிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில், ஆண்டுதோறும் 100 டன்க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவு அந்த பகுதியில் குவிகிறது.
இதனை கட்டுப்படுத்த சிவனொளிபாதமலை பகுதியை “பிளாஸ்டிக் இல்லா மண்டலம்” ஆக அறிவிக்க அரசுத் திட்டமிட்டுள்ளது.
அங்கு பிளாஸ்டிக் உணவு உறைகள், ஒருமுறை பயன்படும் பாத்திரங்கள், 1 லீட்டருக்குக் குறைவான பிளாஸ்டிக் நீர் போத்தல்கள் கொண்டு செல்லவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படும்.
பிளாஸ்டிக் கழிவுகளை சரியான முறையில் சேகரித்து அகற்றுவது கடை உரிமையாளர்களின் பொறுப்பு ஆகும். அத்துடன் பிளாஸ்டிக் கொண்டு வரும் யாத்திரிகர்களுக்கு அபராதம் விதிப்பதையும் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியில், திரிவனகெட்டிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (31.12.2025) காலை, வான் மற்றும் லொறியொன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது வானில் இருந்த ஐந்து பேரும் லொறியின் உதவியாளரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வானில் பயணித்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வான் மீது லொறி மோதி பிரதான வீதியின் நடுவில் கவிழ்ந்ததால், ஒரு வழிப்பாதை போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது.
மேலும் வானில் இருந்தவர்கள் மொனராகலை பகுதியில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு தங்கள் சொந்த ஊரான இரத்தினபுரிக்கு திரும்பிக்கொண்டிருந்த போது அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.
இவ்வாறு விபத்திற்குள்ளான லொறி கொழும்பிலிருந்து பெல்மடுலவுக்கு பயணித்த போது விபத்தில் சிக்கியுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்தவர்களின் தகவல்படி, வானைச் செலுத்தி வந்த சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இரத்தினபுரி பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம், நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்மிஸ்ஸர மத்திய கல்லூரியின் உயர்தர கணிதப் பிரிவு மாணவனான 18 வயதுடைய சவிது சிஹார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவயது முதலே மோட்டார் சைக்கிள் மீது அதீத ஆர்வம் கொண்ட சவிது, சமீபத்தில் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார்.
விபத்து நடந்த அன்று, மோட்டார் சைக்கிளில் சென்றவாறே வீடியோ பதிவு செய்ய முயன்றபோது, நிலைதடுமாறி வீதியோர தொலைபேசி கம்பத்தில் மோதியுள்ளார்.
மோதிய வேகத்தில் கம்பம் உடைந்து அவர் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்து, மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
“அந்த மோட்டார் சைக்கிளுக்கு உயிர் இருந்தால் நான் அதை எவ்வளவு நேசித்தேன் என்று சொல்லும்” என அவர் அடிக்கடி கூறி வந்ததாக அவரது தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள வென்னப்புவ நைனமடம பகுதியில் ஜின் ஓயாவில் குதித்து காணாமல் போன யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஜா-எல, போபிட்டியவைச் சேர்ந்த 17 வயதுடைய உமயங்கனா சத்சரணி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
28 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் நைனமடம், ஜின் ஓயா பாலத்திற்கு அருகில் வந்த சிறுமி, தனது காதலனுக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி கூறிய நிலையில் ஜின் ஓயாவில் குதித்தார்.
அதே நேரத்தில், அந்த இளைஞனும் அவரை காப்பாற்ற ஜின் ஓயாவில் குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜின் ஓயாவில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரையும் காப்பாற்ற அருகிலுள்ள ஹோட்டலின் இரண்டு ஊழியர்கள் ஆற்றில் கயிற்றை வீசினர். யுவதி நீரில் காணாமல் போன நிலையில், இளைஞன் கயிற்றில் தொங்கி கரையை அடைந்தார்.
வென்னப்புவ, நைனமடம பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் உயிர் பிழைத்த நிலையில், 1990 அம்புலன்ஸில் மாரவில ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த யுவதியின் தாய் தற்போது இரண்டாவது கணவருடன் வசித்து வருவதாகவும், அவரது குடும்பத்தில் தகராறுகள் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காணாமல் போன யுவதியின் உடல், பாலத்தின் அருகே மிதந்து கொண்டிருந்ததை உள்ளூர்வாசிகள்நேற்று மதியம் கண்டுபிடித்தனர். அவரது பிரேத பரிசோதனை மாரவில ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் , காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது. ஆழியவளை பகுதியை சேர்ந்த ஜெசிந்தன் (வயது 26) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் தாளையடி கடலில் நீராடிக்கொண்டிருந்த வேளை கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனார்.
இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக இளைஞனை அப்பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளர்கள், கடலில் தேடிய நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இளைஞனின் சடலம் அப்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
அதனை அடுத்து மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்
தமிழில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கெளரி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை நந்தினி தற்கொலை செய்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கெளரி சீரியலில் ‘கனகா’, ‘துர்கா’ ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை நந்தினி. இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
நடிகை நந்தினி ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். தெலுங்கு அவருடைய தாய்மொழி. இவருக்கு தமிழில் ‘கௌரி’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையே, பெங்களூருவில் வசித்து வந்த நந்தினி, தனது வீட்டில் நேற்று(29) தற்கொலை செய்துகொண்டார். ‘கௌரி’ சீரியலின் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக நந்தினியும் பெங்களூருவில் வசித்து வந்தார்.
அண்மையில் தான் இந்த தொடரின் படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டது. அவரும் சென்னைக்கு வந்து நடித்து கொடுத்துள்ளார். இதற்கிடையில் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட நந்தினி பெங்களூருவுக்கு சென்றுள்ளார்.
அங்கு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் திருமணம் செய்துகொள்ளுமாறு பெற்றோர் வற்புறுத்தி வந்ததாகவும், தான் திருமணத்திற்கு தயாராக இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் எழுதப்பட்டிருந்தது.
மேலும், மன ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த முடிவை எடுப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிங் ஓயாவில் குதித்து காணாமல்போன பாடசாலை மாணவி நேற்று (29) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் ஜா – எல, போபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஆவார்.
குறித்த மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) தனது 18 வயதுடைய காதலனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து வென்னப்புவை பிரதேசத்திற்கு வரழைத்து காதலன் கண் முன்பு கிங் ஓயாவில் குதித்துள்ளார்.
மாணவியை காப்பாற்ற முயன்று காதலனும் கிங் ஓயாவில் குதித்துள்ள நிலையில் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் மாணவி நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார். காணாம்போன மாணவி நேற்று திங்கட்கிழமை (29) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவியின் குடும்பத்தில் பல தனிப்பட்ட பிரச்சினைகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
களுத்துறை, ஹொரண பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 23 வயதுடைய பசிந்து டிலான் பூர்ண மதநாயக்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.
நத்தார் தினத்தன்று நண்பர்களுடன் ஹொரண மஹிபாலான பகுதிக்குச் சென்ற டிலான், மதிய உணவிற்குப் பிறகு வெற்றிலை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் கடைக்குச் சென்றுள்ளார்.
தலைக்கவசம் அணியாமல் பயணித்த டிலான், வளைவு ஒன்றில் திரும்பும்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்கால் மதிலில் மோதி விபத்துக்குள்ளானது.
தலையில் பலத்த காயமடைந்த அவரை நண்பர்கள் மீட்டு ஹொரண ஆதார மருத்துவமனையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
நான்கு சகோதரர்களில் மூத்தவரான டிலான், சிறுவயதில் துறவறம் பூண்டு பின்னர் குடும்பச் சுமையைத் தாங்குவதற்காக தொழிலுக்கு சென்றுள்ளார்.
உழைக்கும் பணத்தை தம்பிகளின் கல்விக்கும், பெற்றோரின் மருத்துவத்திற்கும் செலவிட்ட ஒரு தியாக உணர்வுள்ள இளைஞனை இழந்துள்ளதாக நண்பர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் உடல் நேற்று பெலவத்தை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை (30.12.2025) காலமானார்.
2018ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்திலிருந்து கடந்த 7 வருடங்களாக தொடர்ச்சியான தீவிர சிகிச்சைக்குள்ளாகி வந்த அக்ஷு பெர்னாண்டோவின் மறைவு ஒரு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நியூஸிலாந்தில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண் கிரிக்கெட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்ஷு பெர்னாண்டோ,விளையாடி இருந்தார்.
2018 டிசம்பர் 28ஆம் திகதியன்று கல்கிஸ்ஸை கடற்கரைக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
அன்றைய தினம் கடற்கரையில் நடைபெற்ற அணியின் பயிற்சி அமர்வில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றது. விபத்து இடம்பெற்ற காலப்பகுதியில் பெர்னாண்டோ தனது தலைமுறையினரில் மிகச் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
தனுஷ்க குணதிலக்க, பானுக்க ராஜபக்ஷ, கித்ருவன் வித்தானகே ஆகியோருடன் அவர் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெற்றார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக லின்கன் விளையாட்டரங்கில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அக்ஷு பெர்னாண்டோ 52 ஓட்டங்களைப் பெற்றார்.
பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரியில் கல்வி கற்ற அக்ஷு பெர்னாண்டோ 13, 15, 17 வயதுகளுக்குட்பட்ட அணிகளின் தலைவராகவும் 19 வயதுக்குட்பட்ட அணியின் உப தலைவராகவும் விளையாடினார்.
அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் உயிரும் துரதிர்ஷ்டவசமாக அகால முடிவுக்கு வந்ததை அடுத்து கிரிக்கெட் சமூகத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தென்னிலங்கையில் பல் பிடுங்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹொரணை பகுதியில் கடந்த 28 ஆம் திகதி இரவு குறித்த யுவதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரஹேன, பொக்குனுவிட்ட பகுதியை சேர்ந்த 20 வயதான தேவ்மி மதுஷிகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேல் தாடையின் நுனியில் உள்ள பல்லில் வலி ஏற்பட்டதால், அந்த இளம் பெண் கடந்த 14 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் பல் பிடுங்கியுள்ளார்.
இதனையடுத்து அவர் தொடர்ந்து வாந்தி எடுத்து வயிற்றுப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு, மறுநாள் சிகிச்சைக்காக தனியார் நிறுவனத்திற்குச் சென்றார்.
இதன்போது அவரது இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், யுவதி உயிரிழந்துள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், ஹொரணை மரண விசாரணை அதிகாரி சுமேத குணவர்தன இந்த மரணம் குறித்து ஒரு திறந்த தீர்ப்பை வெளியிட்டு, மரணம் குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.