இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதி விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!!

எதிர்காலத்தில் வாகன சந்தை நிலையான நிலையில் காணப்படும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஓடர் செய்யப்பட்ட வாகனங்கள் தற்போது திட்டமிட்டபடி வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்டு வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக வாகன சந்தையில் சில விலை ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், எதிர்காலத்தில் நிலைமை நிலைபெறும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பே ஆர்டர் செய்யப்படுகின்றன. அவை வழக்கம் போல் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன.

மழைக்காலத்தில் சுமார் 2 வாரங்களாக சிக்கல் நிலைமை காணப்பட்ட நிலையில், அரசாங்கம் சரியான நடைமுறைகளை மேற்கொண்டமையினால் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் வாகன விற்பனை குறைந்த மட்டத்தில் இருந்த நிலையில்,புத்தாண்டில் பலர் வாகனங்களை வாங்குவதனால் வாகன விற்பனை அதிகரித்துள்ளன.

மேலும், பலர் சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்தனர். அவர்கள் வரி செலுத்தவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகள் தவிர்க்கப்படும். “எதிர்காலத்தில் நியாயமான விலையில் விற்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி வந்த தந்தைக்கு நேர்ந்த துயரம்!!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தையொருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த வையாபுரி சந்திரன் (வயது 69) என்ற தந்தையே மரணமடைந்துள்ளார்.

அவரது மகனான ஜெயகாந்தன் கடந்த 2008ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பப்டிருந்தார். மகனை தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு போராடியிருந்தார்.

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் 10ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கத்தின் விலை : நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!!

நாட்டில் நேற்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 370,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று (30) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 10,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இன்று (30.12.2025) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 333,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கொழும்பிலுள்ள ஹோட்டலுக்குள் நடந்த பயங்கரம் : கடுமையாக தாக்கப்பட்ட பெண்!!

கொழும்பில் மொடலிங் துறையில் ஈடுபடும் பெண் ஒருவருக்கு அவரது காதலன் கொலை அச்சுறுத்தல் விடுத்து பெருந்தொகை பணத்தை பறித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மொடலிங் பெண்ணான சாரங்கி சங்கீதா, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தன்னை கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நிலையில், 6 மில்லியன் ரூபாய் பணம் பறித்ததாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. கடந்த 12 ஆம் திகதி இரவு தன்னுடைய காதலனுடன் குறித்த ஹோட்டலுக்கு வந்ததாக அந்த யுவதி குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டல் அறையில் இருந்தபோது, ​​தனது காதலன் தன்னை மிரட்டி, தனது கையடக்க தொலைபேசி ஊடாக வங்கியிலிருந்து 6 மில்லியன் ரூபாவை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தன்னைத் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்து, ஹோட்டல் அறையில் விட்டுச் சென்றுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்தமை காரணமாக சிகிச்சை பெற்ற நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் லலித் சிலோகமவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அடுத்து வரப்போகும் 24 மணி நேரம் : காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

அடுத்த 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் நாளை (30) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும். சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும், களுத்துறை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சுமார் 40 மைல் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்த பச்சை மிளகாயின் விலை!!

வரலாறு காணாத அளவுக்கு பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஒரு கிலோ கறி மிளகாய் 1,300 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பெரும்பாலான காய்கறிகளின் விலை ஒரு கிலோ 500 முதல் 1,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை, குறைந்த அறுவடை மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவைகளே விலை அதிகரிப்பு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

 

காதலன் முன்னிலையில் காதலி செய்த அதிர்ச்சி செயல்!

புத்தளம், வென்னப்புவ பொலிஸ் பிரிவில் உள்ள நைனமடம பாலத்தில் உள்ள ஜின் ஓயாவில் குதித்து பதின்ம வயது யுவதி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காணாமல் போன யுவதி பொருத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. காணாமல் போன யுவதி காதல் உறவில் இருந்த இளைஞனை சம்பவ இடத்திற்கு வருமாறு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர், அவரது காதலன் மற்றொரு நண்பருடன் நைனமடம பாலத்திற்கு அருகில் வந்தபோது, ​​அந்த யுவதி ஜின் ஓயாவில் குதித்ததாகவும், அவரைக் காப்பாற்ற அந்த இளைஞனும் ஜின் ஓயாவில் குதித்ததாகவும், தெரியவந்துள்ளது.

எனினும் அந்த இளைஞனை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர். யுவதி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைச் சிறுவனின் நெகிழ்ச்சி செயல்!!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை சிறுவன் ஒருவர் புற்றுநோய் நோயாளிகளுக்கு உதவும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

பெர்விக் நகரில் உள்ள செயிண்ட் கேத்தரின் ஆரம்ப பாடசாலையில் 9 வயதான யெவின் கரியவாசம் கல்வி கற்று வருகிறார்.

அவர் தன் தலைமுடியை புற்றுநோய் நோயாளிகளுக்கு தானம் செய்து வருகிறார். அத்துடன் விக்டோரியாவின் புற்றுநோய் கவுன்சிலுக்கு நிதி திரட்டுகிறார்.

நன்கொடை

புற்றுநோய் கவுன்சிலுக்கு எப்படி பயனுள்ள நன்கொடை அளிக்க முடியும் என்பதை தன் பெற்றோர் தனக்கு வழிகாட்டியதாக யெவின் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, புற்றுநோய் இல்லாத எதிர்காலத்திற்காக புற்றுநோய் கவுன்சிலை ஆதரிக்க தனது தலைமுடியை தானம் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது இரண்டு ஆஸ்திரேலியர்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

எனவே, யெவின் தனது தலைமுடியை வெட்டி தேவைப்படும் சிறுவர்களுக்கு தானம் செய்வதாகவும், அவர்களுக்காக நிதி திரட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

புற்றுநோய் ஆராய்ச்சியை ஆதரிக்கவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கவும் இந்த நிதியில் சேரவும் மக்களிடம் அவர் உதவி கோரியுள்ளார்.

தேனிலவுக்கு இலங்கைக்கு வந்த புதுமண ஜோடியின் விபரீத முடிவு : துயரத்தில் உறவினர்கள்!!

இலங்கையில் தேனி​ல​வை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்பிய ஜோடி, தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறு மற்றும் வரதட்சணை கொடுமையால் பெங்களூருவில் இளம்பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டதைத் தொடர்ந்து, அவரது கணவரும் நாக்பூரில் தன்னுயி​ரை மாய்த்துக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூருவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் சமீபத்தில் மிக விமர்சையாகத் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் தேனிலவுக்காக இலங்கை வந்து தங்கியிருந்தபோது, பெண்ணின் பழைய காதல் விவகாரம் கணவருக்குத் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தம்பதியிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே டிசம்பர் 21-ம் திகதி அவர்கள் பெங்களூரு திரும்பினர்.

வீடு திரும்பிய பிறகும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெண்ணை இடைவிடாது அவமானப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. குடும்ப கௌரவம் கருதி பெண் விவாகரத்து செய்ய விரும்பாமல் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டுள்ளார்.

ஆனால், மன உளைச்சல் தாங்க முடியாமல் கடந்த வியாழக்கிழமை அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். . தகவலறிந்து பெண்ணின் உறவினர்கள் கணவர் வீட்டின் முன் திரண்டு போராட்டம் நடத்தினர்.

பெண்ணின் மரணத்திற்கு காரணமான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தினர்.

பெண்ணின் மரணம் தொடர்பாகப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அந்த இளைஞர் தனது தாய் மற்றும் சகோதரருடன் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்குத் தப்பிச் சென்றார்.

அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது, வெள்ளிக்கிழமை அன்று அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

மகனுடன் தாயாரும் தற்கொலைக்கு முயன்று உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட அவர், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணமடைந்த பெண்ணின் தாய் இது குறித்துக் கூறுகையில், “அவர்கள் செய்த தவற்றை உணர்ந்துவிட்டார்கள். என் மகள் அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தாள். அவள் இல்லாமல் அவரால் வாழ முடியாது என்பதை உணர்ந்து அவரும் இந்த முடிவை எடுத்துள்ளார்” என கண்ணீருடன் தெரிவித்தார்.

அடுத்தடுத்து நடந்த இந்த மரணங்கள் குறித்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர மாநிலப் பொலிஸார் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு சிறிய தகராறு மற்றும் குடும்பப் பிரச்சனை இவ்வளவு பெரிய உயிர் இழப்புகளுக்கு இட்டுச் சென்றிருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலையில் கரையொதுங்கிய மர்மப் பொருள் : மக்கள் செல்லத் தடை!!

திருகோணமலை, சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் பாரிய அளவிலான மர்மப் பொருள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (ISRO) விண்ணிற்கு ஏவப்பட்ட ரொக்கட்டின் ஒரு பகுதி என ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களாக திருகோணமலை ஆழ்கடல் பகுதியில் மிதந்து வந்ததாகக் கூறப்படும் இந்த உலோகப் பாகம், நீரோட்டத்தின் காரணமாக சம்பூர் பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

அதனை அவதானித்த மீனவர்கள் உடனடியாகப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கினர். கரை ஒதுங்கியுள்ள பாகத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, சம்பூர் பொலிஸ் பிரிவின் அறிவுறுத்தலின் பேரில் கடற்படை வீரர்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆய்வுகள் நிறைவடையும் வரை பொதுமக்கள் அருகில் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரொக்கட்டுகள் விண்ணை நோக்கிப் பாயும்போது, புவி ஈர்ப்பு விசையைத் தாண்டிச் செல்வதற்காகப் பல்வேறு நிலைகளில் அதன் பாகங்கள் கழன்று விழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அவ்வாறு இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட ரொக்கட்டின் ‘ஹீட் ஷீல்ட்’ (Heat Shield) அல்லது எரிபொருள் கலனின் ஒரு பகுதியே இவ்வாறு மிதந்து வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

​அதேவேளை முன்னதாக இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் ரொக்கட்டுகளின் சிதைவுகள் அவ்வப்போது இலங்கை மற்றும் மாலைத்தீவு கடற்பரப்புகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் இரும்பு கேட் விழுந்து பலி!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் இரும்பு கேட் மற்றும் தூண் சரிந்து விழுந்ததில், பெண் காவலரின் மகள் மற்றும் அவரது உறவினர் சிறுமி என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிவகாசி அருகே கொங்கலாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.

இவருடைய கணவர் ராஜாமணி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு கவின் (11) என்ற மகனும், கமலிகா (6) என்ற மகளும் உள்ளனர்.

தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், ராஜேஸ்வரியின் சகோதரியும் செவிலியருமான தனலட்சுமி, தனது குழந்தைகளுடன் சிவகாசியில் உள்ள ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்துள்ளார்.

ராஜேஸ்வரி பணிக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் குழந்தைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

ராஜேஸ்வரியின் மகள் கமலிகா (6) மற்றும் அவரது சகோதரி மகள் லசிகா (4) ஆகிய இருவரும் வீட்டின் முன்புறம் உள்ள பெரிய இரும்பு கேட்டில் ஏறி ஊஞ்சலாடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

எதிர்பாராத விதமாக, பாரம் தாங்காமல் கேட் பொருத்தப்பட்டிருந்த சிமெண்ட் சுவர் தூண் திடீரென இடிந்து சரிந்தது. தூணுடன் சேர்ந்து அந்த கனமான இரும்பு கேட் இரண்டு சிறுமிகள் மீதும் அப்படியே விழுந்தது.

இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த இரண்டு சிறுமிகளும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.  குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும், சிறுமிகளை மீட்க முயன்றனர்.

ஆனால் அதற்குள் அவர்கள் உயிர் பிரிந்திருந்தது. இது குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சிறுமிகளின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் விடுமுறை நாளில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியையே கண்ணீர் கடலில் மூழ்கடித்துள்ளது.

அரையாண்டு விடுமுறை காலங்களில் குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது, இத்தகைய விபத்துகளைத் தவிர்க்கப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை:

வீட்டின் இரும்பு கேட்டுகள் துருப்பிடிக்காமல் இருக்கிறதா, தூண்கள் வலுவாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது சோதிக்க வேண்டும். குழந்தைகள் இரும்பு கேட்டில் ஏறித் தொங்குவதையோ அல்லது ஊஞ்சலாடுவதையோ கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் விளையாடும்போது பெரியவர்கள் யாராவது ஒருவர் அருகில் இருந்து கண்காணிப்பது அவசியம். பழைய கட்டிடங்கள் அல்லது முறையாகப் பராமரிக்கப்படாத தூண்கள் இருக்கும் இடங்களில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது.

சகோதரனுடன் சண்டை : வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் குளத்தில் சடலமாக மீட்பு!!

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் எர்மன்கோடு பகுதியில், அண்ணனுடன் விளையாட்டாக ஏற்பட்ட சண்டையில் வீட்டை விட்டு வெளியேறிய 6 வயது சிறுவன் சுஹன், குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.

எர்மன்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது அனீஸ் – துஹிடா தம்பதியினருக்கு ரயன் மற்றும் சுஹன் (6) என இரு மகன்கள் உள்ளனர். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வர, தாய் துஹிடா ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

நேற்று துஹிடா வெளியே சென்றிருந்த நேரத்தில், அண்ணன் ரயனுக்கும் தம்பி சுஹனுக்கும் இடையே டிவி பார்ப்பதில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சண்டையில் கோபித்துக் கொண்ட சிறுவன் சுஹன், அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறியுள்ளான்.

மாலை வீட்டிற்குத் திரும்பிய தாய், சுஹன் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அண்ணனிடம் விசாரித்தபோது, சண்டையிட்டு வெளியே சென்ற விவரம் தெரியவந்தது.

உடனடியாகத் தாய் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் சுஹன் கிடைக்காததால், காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் கிராம மக்கள் இணைந்து பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இறுதியில், வீட்டிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குளத்தில் சிறுவன் சுஹன் சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் உடலை மீட்ட போலீசார், அதனைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அண்ணனுடன் கோபித்துச் சென்ற சிறுவன், குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தானா அல்லது மன உளைச்சலில் குளத்தில் குதித்தானா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய விளையாட்டுத் தகராறு பிஞ்சுயிரைப் பறித்த இச்சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

19 வயதில் 8 ஆண்களுடன் திருமணம் : பணத்திற்காக நடந்த மோசடி!!

19 வயது, பணம் பறிக்கும் நோக்கில், 8 ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் நகரின் கர்ஜி தெருவை சேர்ந்த 19 வயதான முத்திரெட்டி வாணி என்ற பெண்ணுக்கும், கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் சோம்பேட்டில் அமைந்துள்ள துர்கா தேவி கோயிலில் கடந்த சில வாரத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னர் ரயில் மூலம் மணமகன் ஊருக்கு சென்ற போது, விசாகப்பட்டினம் ரயில் நிலையம் வந்ததும், கழிவறைக்கு செல்வதாக ரெயிலில் இருந்து இறங்கிய வாணி மீண்டும் ரயிலில் ஏறவில்லை. இதனையடுத்து, புது மனைவியை காணாமல் பதறிய நபர் அவரை, தேடி அலைந்தார்.

வாணி மாயமானது குறித்து இச்சாபுரத்தில் உள்ள வாணியின் அத்தை சத்யா வீட்டில் தகவல் தெரிவிக்கச் சென்ற போது, வாணி அங்கிருந்ததை கண்டு மணமகன் தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர்.

மணமகன் வீட்டார் வாணியின் குடும்பத்துக்கு திருமண செலவுக்காக கொடுத்த ரூ.1 லட்சம் பணத்திற்காக தான் திருமணம் செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, மணமகன் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியானது.

சிறுவயதிலே பெற்றோரை இழந்த வாணியை அவரது தாய் வழி அத்தையான சத்யா என்பவரே வளர்த்து வந்துள்ளார்.

கர்நாடக நபர் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 8 ஆண்களை திருமணம் செய்து, அதன் பின்னர் அவர்களிடம் நகை மற்றும் பணத்தை பறித்து விட்டு மாயமாகியுள்ளனர்.

வாணி அப்போது மைனர் பெண் என்பதால், பணத்தை பறித்தது குறித்து புகார் அளித்தால் மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக தங்கள் மீதும் வழக்கு பாயும் என யாரும் புகார் அளிக்கவில்லை.

தற்போது தலைமறைவாகியுள்ள வாணி மற்றும் சத்யாவை தனிப்படை காவல்துறை தேடி வரும் நிலையில், ஏற்கனவே அவரை திருமணம் செய்து பணத்தை இழந்த நாகிரெட்டி மற்றும் கேசவ ரெட்டி ஆகிய இருவரும் காவல் நிலையில் புகார் அளித்துள்ளனர்.

ஆற்றில் கவிழ்ந்து கார் விபத்து : மூவர் காயம்!!

அம்பாறை, பக்கிஎல்ல, ரஜகலதென்ன பிரதேசத்தில் பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.12.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காரில் பயணித்த சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ள நிலையில்,

கொனகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காரின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2026 இல் வானில் நிகழ்வுள்ள அதிசயம் : கண்களைப் பறிக்கும் காட்சி!!

வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு ஓர் அற்புதமான வானியல் விருந்துடன் தொடங்கவுள்ளது. வழக்கத்தை விடப் பெரியதாகவும், அதீத பிரகாசத்துடனும் ஒரு முழு நிலவு நம் கண்களுக்கு விருந்தளிக்கப் போகிறது.

2026ஆம் ஆண்டின் முதல் பௌர்ணமி தினமான ஜனவரி 3ஆம் திகதி இந்த ‘ஓநாய் சூப்பர் மூன்’ (wolf-supermoon) நிகழ்வு வானில் அரங்கேற உள்ளது.

உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவரும் இந்த அழகிய காட்சியைக் கண்டு ரசிக்கலாம். ஏன் இதற்கு ‘ஓநாய் சூப்பர் மூன்’ என்று பெயர் வந்தது தெரியுமா?

ஜனவரி மாதத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவின் போது, உணவிற்காக அலைந்து திரியும் ஓநாய்களின் சத்தம் (ஊளையிடுதல்) வழக்கத்தை விட அதிகமாகக் கேட்கும்.

பழங்கால நம்பிக்கைகள் மற்றும் அதன் அடிப்படையில் உருவான காரணங்களால், ஜனவரி மாத முழு நிலவை ‘ஓநாய் நிலவு’ (Wolf Moon) என்று அழைக்கின்றனர்.

சூப்பர் மூன் – அப்படி என்ன சிறப்பு? இந்த நிலவு ஏன் மற்ற பௌர்ணமிகளை விடச் சிறப்பு வாய்ந்தது என்பதற்கு அறிவியல் பூர்வமான காரணம் ஒன்று உண்டு.

நிலவு பூமியைச் சுற்றி வரும் பாதையில், பூமிக்கு மிக அருகில் வரும் நிலையை அடையும் போது இந்த ‘சூப்பர் மூன்’ நிகழ்கிறது.

பூமிக்கு அருகில் வருவதால், வழக்கமான பௌர்ணமி நிலவை விட இது அளவில் பெரியதாகத் தெரியும். நிலவின் ஒளி வழக்கத்தை விட மிக அதிக பிரகாசமாகவும், தெளிவாகவும் காட்சியளிக்கும்.

ஜனவரி 3ஆம் திகதி அன்று இரவு மறக்காமல் வானத்தைப் பாருங்கள். இயற்கையின் இந்த மாபெரும் இயற்கையின் கலைப்படைப்பைக் கண்டு ரசிக்கத் தவறாதீர்கள்.

முல்லைத்தீவு சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதிகோரி தற்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(29.12.2025) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்போது, முல்லைத்தீவு மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்று, ஜனாதிபதி செயலகத்திற்கும் அதன் பிரதிகள் சுகாதார அமைச்சர், செயலாளர் நாயகம், சுகாதார பணிமனை,

வடமாகாண ஆளுனர் அலுவலகம், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகம், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், போராட்டத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சையின்போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டமானது இன்றையதினம்(29) நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா (வயது 12) என்ற சிறுமி திடீர் சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த 21ஆம் திகதி சிகிச்சையின்போது உயிரிழந்தார். மருத்துவத் தவறு காரணமாகவே, இந்த இறப்புச் சம்பவித்தது என்று சிறுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான பின்னணியிலேயே, சிறுமியின் இறப்புக்கு நீதி கோரி, முல்லைத்தீவு மாவட்டவைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு வணிக நிறுவனங்கள், சங்கங்கள் எனப் பல தரப்புகளும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. அத்துடன், ஏனையோரின் ஆதரவையும் அந்தத் தரப்பினர் கோரியுள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையின் செயற்பாட்டினை உறுதி செய்ய மருத்துவமனையில் பணியில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள்,சுகாதார பணியாளர்களுக்கும்,மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.