காலி – கொழும்பு பிரதான வீதியில் வெட்டுமகடை சந்திக்கருகில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் ஒருவன் லொறி ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளான்.
காலி்யிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி, நேற்று (07) இரவு வீதியை கடக்க முற்பட்ட துவிச்சக்கர வண்டியில் மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த அச்சிறுவன் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த சிறுவன் 11 வயதுடையவன் எனவும், கட்டுக்குறுந்த பிரதேசத்தைச் சேர்ந்தவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் களுத்துறை நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கு காரணமான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு களுத்துறை தெற்குப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாமியாருடன் ஏற்பட்ட வாய்த்தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான இளம் ஆசிரியை தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சுகிராமத்தை சேர்ந்த மகேஷ் (34), மும்பையில் கால் சென்டரில் வேலை பார்த்த போது மராட்டிய மாநிலத்தை சேர்ந்த லேகா (32) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் 2 மகன்கள் உள்ளனர்.
பின்னர் மகேஷ் சத்தீஸ்காரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பெற, லேகா கணவரின் வீட்டில் தங்கி அருகிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவருடன் கணவரின் தாயாரும் வசித்து வந்தார்.
இந்நிலையில், வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என்ற காரணத்தால் மாமியார் லேகாவை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட லேகா, நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டிலேயே சேலையால் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துள்ளார்.
தகவல் அறிந்த அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி மாவட்டத்தில் எறும்புகள் மீதான கடுமையான பயம் காரணமாக 25 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாவட்டத்தை சேர்ந்த மனிஷா (25) என்ற இளம்பெண், ஸ்ரீகாந்த் என்பவரின் மனைவியாவார். இவர்களுக்கு 3 வயது மகள் ஒருவர் உள்ளார்.
சிறுவயது முதல் மனிஷாவுக்கு எறும்புகளைப் பற்றிய அச்சம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை மருத்துவ ரீதியாக “மிர்மெகோஃபோபியா” என அழைக்கின்றனர்.
இதற்காக மனிஷா தனது சொந்த ஊரான மஞ்சேரியில் உள்ள மருத்துவமனையில் ஆலோசனைகள் பெற்று வந்துள்ளார். சிகிச்சை பெற்றுவந்த நிலையிலும் பயம் குறையாததால் மனஅழுத்தம் அடைந்திருந்ததாகவும் தெரிகிறது.
கடந்த நவம்பர் 4 ம் தேதி தனது குழந்தையை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, வீட்டு வேலை செய்யப்போவதாக கூறிய மனிஷா, வீட்டிற்குள் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
மாலை வீட்டிற்கு திரும்பிய கணவர் ஸ்ரீகாந்த், கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது இந்த துயரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் கிடைத்த கடிதத்தில் “என்னை மன்னித்துவிடு ஸ்ரீ… என்னால் இந்த எறும்புகளுடன் வாழ முடியாது” என எழுதியிருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
திவுலப்பிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யபடும் போது ஆணின் வசம் 11 கிராம் மற்றும் 980 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், பெண்ணின் வசம் 5,100 மில்லிகிராம் ஐஸ் (Ice) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து மு்ன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இவர்கள் இருவரும் நீண்ட காலமாக திவுலப்பிட்டிய, கட்டுவெல்லேகம, துனகஹ, அலுதேபொல, மரதகஹமுல்ல, நெல்லிகஹமுல்ல, நில்பனாகொட, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களுக்குப் போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட ஆண் இன்று (08) மினுவாங்கொட நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர், தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவின் பேரில் விசாரிக்கப்படவுள்ளார்.
குறித்த பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று (08.11.2025) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். வடமராட்சி, கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய உதயகுமார் சாருஜன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி இளைஞரும், அவரது நண்பரும் கொழும்பில் இருந்து ஓட்டோவில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை, யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், பெரியகுளம் பகுதியில் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த லொறியுடன் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தில் ஓட்டோவில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன்போது மற்றைய இளைஞர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கனடாவில் இலங்கை சேர்ந்த இளைஞன் கொலை குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட நிலையில், குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கனேடிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்ற 20 வயதான டி சொய்சா என்ற இலங்கை இளைஞனை குற்றவாளியாக ஓட்டா நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொலை வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்ற போது, தனது குற்றத்தினை டி சொய்சா ஒத்துக்கொண்ட நிலையில் வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது.
அடுத்து வரும் வழக்கு விசாரணையின் போது குற்றவாளிக்கான தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. கடந்த வருடம் ஒட்டாவில் வசித்த வந்த இலங்கை குடும்பம் ஒன்றை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர்.
டி சொய்சா என்ற இளைஞனால் அவர்கள் கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்போது தாய் மற்றும் அவரின் நான்கு பிள்ளைகள் உட்பட ஆறு பேர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
கொலை செய்யப்பட்ட குடும்பத்தினரின் வீட்டில் டி சொய்சா தங்கியிருந்த நிலையில், இந்த கொலைகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு பெயர்களில் பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி, நிதி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களைக் கொண்ட பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டு பணம் மோசடி செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
அவ்வாறு பணத்தை மோசடி செய்து வரும் குழுவை விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவு நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
இந்த சந்தேக நபர்களால் பல பெயர்களில் பேஸ்புக் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய விளம்பரங்களை வெளியிடப்பட்டுள்ளது.
அதனை நம்பிய மக்களிடம் மில்லியன் கணக்கான ரூபாய்களை மோசடி செய்துள்ளதாக, குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கொழும்பு தலைமை நீதவான் அசங்கா போதரகமவிடம் தெரிவித்தனர்.
கரந்தெனய பகுதியைச் சேர்ந்த ஒருவர், புற்றுநோய் நோயாளியான தனது மகளின் புகைப்படங்கள், தகவல்கள் மற்றும் பல்வேறு வங்கிக் கணக்குகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு மோசடியாக பணம் சேகரித்துள்ளார்.
இது தொடர்பான அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தொடர்புடைய தகவல்கள் தெரியவந்ததாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட ஓபநாயக்க பகுதியை சேர்ந்த சமில் சந்தருவன், ரக்வானவையைச் சேர்ந்த முசான் ஷமிந்த மற்றும் ஓபநாயக்கவைச் சேர்ந்த ஹர்ஷ சதுரங்க ஆகிய மூன்று சந்தேக நபர்களையும் தலா 100,000 ரூபாய் பிணையில் விடுவிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
சமூக ஊடகங்களில் புற்றுநோய் நோயாளிகளின் விளம்பரங்களை வெளியிட்டு மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தலைமை நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற தாயார் , குழந்தை பெற்ற ஒரே மாதத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் வடமராட்சி வதிரி பகுதியை சேர்ந்த 46 வயதான தாயாரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
திருமணமாகி நீண்ட வருடங்களின் பின் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை குறித்த தாய் பெற்றெடுத்திருந்த நிலையில் குழந்தைகள் பிறந்த ஒரேமாதத்தில் இத் துயரம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (05.11.2025) குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சத்தீஸ்கரில் இறந்துவிட்டதாக கருதி தகனம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் உறவைனர்கள் அதிர்ச்சியடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிவருகையில், சத்தீஸ்கரில் நவம்பர் 1 ஆம் திகதி சூரஜ்பூர் மாவட்டத்தின் மன்பூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து ஒரு உடலம் மீட்கப்பட்டது.
அருகில் உள்ள சந்தர்பூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான புருஷோத்தமனின் குடும்பத்தினர், இரண்டு நாட்களாக அவரை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்த நிலையில், உறவினர்களுக்கு அந்த உடலம் காண்பிக்கப்பட்டது.
குடும்பத்தினர், இறந்தவர் புருஷோத்தமன் என அடையாளம் காட்டிய நிலையில் காவல்துறையினர் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் உடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து குடும்பத்தினர் உடலத்தை அடக்கம் செய்து இறுதிச் சடங்கு செய்தனர். இந்நிலையில் புருஷோத்தமனின் இறப்பு செய்தியைக் கேள்விப்பட்டு அங்கு வந்த உறவினர்கள்,
புருஷோத்தமனை சந்தர்பூரில் இருந்து 45 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அம்பிகாபூரில் பார்த்ததாக குடும்பத்தினருக்குத் தெரிவித்தனர். இறுதியில் புருஷோத்தமன் அங்கு ஒரு உறவினரின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நவம்பர் 4 ஆம் திகதி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
புருஷோத்தமனனின் குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்ட நபரின் டி.என்.ஏ மாதிரிகள், கைரேகைகள், உடைகள் மற்றும் பிற உடைமைகள் பாதுகாக்கப்பட்டு உடலின் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை வைத்து உடலத்தை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளி மேற்ஒண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நேர நீடிப்பானது தரம் 5இலிருந்து 13ஆம் தரம் வரை அமுல்படுத்தப்படுமென்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார்.
பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் விளக்கமளித்து கொழும்பில் நேற்று (06) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணிவரை நீடிக்கப்படும். அவ்வாறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். உதாரணமாக குறிப்பிடுவதானால் முதலாம் தர மாணவர்களின் பாடசாலை நேரத்தில் மாற்றம் ஏற்படாது.
தற்போது காலை 7.30 மணியிலிருந்து 11.45மணி வரையான காலம் அவ்வாறு நீடிக்கப்படும். இரண்டாம் தரத்துக்கும் 7.30 மணியிலிருந்து 11.45 மணி வரையிலான கற்றல் நடவடிக்கைகள் அவ்வாறே முன்னெடுக்கப்படும்.
அதேவேளை 03, 04ஆம் தர மாணவர்களுக்கு 7.30 மணியிலிருந்து 1.00 மணி வரையான கற்றல் காலம் அவ்வாறே இடம்பெறும். அதிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
மேலும் 05 ஆம் தரத்திலிருந்தே நேர மாற்றம் ஏற்படும். 05ஆம் தர மாணவர்களுக்கு 7.30 மணியிலிருந்து 2.00 மணிவரை கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும், அதாவது,
06ஆம் தரத்திலிருந்து எதிர்வரும் 13ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் காலை 7.30 மணிமுதல் பகல் 2.00 மணிவரை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார்
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்காக ரூபா 110 பில்லியன் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொள்கைகளை நிலைபேறாக நிர்வகிப்பது எமது பொறுப்பாகும். பல ஆண்டுகளாக எழுந்துள்ள சம்பள முரண்பாடுகளையும் அரசாங்க நிதி முகாமைத்துவம் என்பவற்றிலுள்ள சவால்களையும் கருத்திற்கொண்டு,
அரசாங்க ஊழியர்கள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக சம்பளம் மற்றும் ஓய்வூதிய குழுவை தாபிப்போம்.
2025ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சம்பள திருத்தங்களுக்கு அமைய, இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 110 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த சம்பளங்களை அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2026 ஜனவரி தொடக்கம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வீட்டுமனை பார்க்கச் சென்ற இளம்பெண் ஒருவரை கும்பல் கொடூரமாக தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவரது நகைகள் பறிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்த பாண்டிக்குமார். சிங்கப்பூரில் வேலை செய்து வரும் இவரது மனைவி மகேசுவரி (38), நிலம் வாங்குவதில் ஆர்வம் கொண்டவர்.
இதற்காக இடம் பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் தனது காரில் சிலரை அழைத்துச் சென்றார்.
ஆவுடைப்பொய்கை பகுதியில் வீட்டுமனை குறித்து பேசும் போது அவருக்கும் அழைத்துச் சென்ற நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தகவல்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், மகேசுவரியின் தலையை கார் கதவில் மோத வைத்தும், கழுத்தை நெரித்தும், மகேஸ்வரியின் முகத்தில் தாக்கியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவரது தாலிச்சங்கிலி, மேலும் கழுத்தில் இருந்த ஒரு சங்கிலி உள்ளிட்ட சுமார் 20 பவுன் நகைகளை பறித்துவிட்டு, மகேஸ்வரியின் உடலை காருக்குள் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புகார் பெறப்பட்டதையடுத்து குன்றக்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலம் வாங்கல் தகராறு காரணமா கொலை நடந்ததா? பணப் பரிவர்த்தனை சச்சரவு பின்னணியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதை பல்வேறு கோணங்களில் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் தப்பிச் சென்றவர்களை பிடிக்க வலை வீசப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற ‘அதர்ஸ்’ பட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கௌரி கிஷனிடம் ஒரு நிருபர் தகாத முறையில் எடை குறித்த கேள்வி எழுப்பியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நவம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகை நிகழ்வில் நடந்த இந்த சம்பவம், திரைப்படத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பரவலான விவாதத்தை தூண்டியுள்ளது.
அந்த நிருபரின் கேள்வியால் கடும் மனவருத்தமடைந்த கௌரி, “என் எடை உங்களுக்கு எப்படி சம்பந்தப்பட்டது? ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்த உடல் அமைப்பு இருக்கும். என் திறமையால் பேச அனுமதியுங்கள்.
உங்களின் அங்கீகாரம் எனக்குத் தேவையில்லை,” என்று திடுக்கிடும் பதில் அளித்தார். சிலர் இதை “இலேசான கேள்வி” என கூறியபோதும், கௌரி, “உடல் அவமதிப்பை சாதாரணமாகக் காட்டுவதை நிறுத்துங்கள். இது வேடிக்கையல்ல,” என வலியுறுத்தினார்.
“என் கதாபாத்திரம் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை; எல்லோருக்கும் என் எடைதான் முக்கியம்.
ஒரு ஆண் நடிகரிடம் இதே கேள்வி கேட்டிருக்கமாட்டார்கள்,” என்று கூறிய அவர், அந்த நிருபரிடம் “இது பத்திரிகைத்துறை அல்ல, உங்கள் தொழிலுக்கு அவமானம்” என சாடினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பாடகி சின்மயி ஸ்ரீபாதா உள்ளிட்ட பலரும் கௌரியின் துணிச்சலை பாராட்டினர்.
அதேசமயம், நிகழ்வில் இருந்த நடிகர் ஆதித்ய மாதவன் தாமதமாக பதிலளித்ததற்காக மன்னிப்பு கேட்டார். “அது எதிர்பாராத நிலை; நான் உறைந்து போனேன்.
உடல் அவமதிப்புக்கு யாரும் தகுதியற்றவர்கள்,” என்று அவர் விளக்கம் அளித்தார்.கௌரி கிஷன் மற்றும் ஆதித்ய மாதவன் நடித்த ‘அதர்ஸ்’ திரைப்படம் நவம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இணையத்தில் ஆடைகள் விற்பனை செய்வதாக கூறி 10 மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரிவு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் ஹபரணையை சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை, பின்வத்த, மீகஹகோவில வீதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும் சந்தேக நபரின் வங்கி கணக்கில் ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக வங்கி பதிவுகள் தெரிவிக்கின்றன.
டெலிகிராம் செயலி மூலம் மதிப்புமிக்க ஆடைகள் இணையத்தில் விற்கப்படுவதாகவும், இணைப்பை கிளிக் செய்ததால் பல லட்சம் ரூபாய் பரிசை வென்றுள்ளதாகவும் குறுந்தகவல் அனுப்பப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அதனை பெற ஒரு தொகை பணத்தை வைப்பு செய்துள்ளார். மேலும் பல சந்தர்ப்பங்களில், அவ்வப்போது அவரை தவறாக வழிநடத்தி, தொடர்புடைய இலக்கு தொகையை பெற 10 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மேலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் முனேஸ்வரம் ஆலயத்திற்கு சென்ற நிலையில் தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்ற போது உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
கிரிபத்கொட பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 பேர் கொண்ட உறவினர்கள் குழு ஒன்று நேற்று தெதுரு ஓயாவில் குளிக்க சென்ற போது இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் நான்கு சகோதரர்கள் அடங்குவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கொழும்பு கிராண்ட்பாசை சேர்ந்த 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் குழு காலையில் மாகொலவில் இருந்து சிலாபத்திற்கு சுற்றுலா சென்று திரும்பிய போது தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்றனர்.
அந்தப் பகுதி பாதுகாப்பற்ற இடம் என ஒரு பெரிய பலகை வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது குளித்துக் கொண்டிருந்த சுமார் 10 பேரில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 5 பேர் உள்ளூர்வாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனர்த்தத்தின் போது காப்பாற்றப்பட்ட சிறுவன் ஒருவர் தகவல் தருகையில், “முதலில் மாரவில தேவாலயத்தை பார்வையிட வந்தோம். பின்னர் முன்னேஸ்வரன் ஆலயத்திற்கு சென்று இங்கு வந்து சாப்பிட்ட பின்னர் குளித்தோம்.
அதிக தண்ணீர் இல்லை. எனினும் நான் ஒரு அடி கால் வைத்தவுடன் இழுத்து செல்லப்பட்டேன். மூத்த சகோதரர் என்னை இழுத்து காப்பாற்றினார். ஏனையவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.