சுட்டெரிக்கப்போகும் சூரியன் : கடும் வெப்ப வானிலை தொடர்பில் எச்சரிக்கை!!

நாட்டில் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கடும் வெப்பமான வானிலை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ், சர்வதேச ரீதியில் கடந்த சில ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை வழமையை விட 1 முதல் 1.5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரித்துள்ளது.

இதுவே தற்போதைய கடும் வெப்ப நிலைக்கு முக்கிய காரணமாகும். பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தினால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மேலும் அதிகரித்து வருகின்றது.

இதன் விளைவாக, எதிர்வரும் வாரங்களில் நாட்டின் வெப்பநிலை வழமையை விடவும் மிக அதிகமாகக் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் வரட்சியான காலநிலையும் ஏப்ரல் மாதம் முழுவதும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ, வடமேல், மேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்கள் வெப்பநிலை அதிகரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என அடையாளங்காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

பிரபல நடிகை கார் விபத்தில் பலி : தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து!!

இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்த நடிகையும் மாடலுமான 30 வயதான ஹர்ஷில் காலியா ஜெய்ப்பூரில் நடந்த வீதி விபத்தில் உயிரிழந்தார்.

ஹர்ஷில் காலியா, 2021 இல் ‘மிஸ் திவா ராஜஸ்தான்’ போட்டியில் முதல் ரன்னர் அப் பட்டத்தை வென்றவர் ஆவார். டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘க்ரைம் நெக்ஸ்ட் டோர்’ என்ற வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

கடந்த 23 ஆம் திகதி இரவு சுமார் 11.30 மணியளவில், ஹர்ஷில் தனது வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் உள்ள ஷிப்ரா பாத் சாலையில் அவரது கார் சென்றுகொண்டிருந்தபோது ஒரு வளைவில் கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வீதித் தடுப்பில் மோதியது.

மோதிய வேகத்தில் கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. . பலத்த தலைக்காயங்களுடன் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பொலிஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டில் மின் பாவனையாளர்களுக்கு அவசர செய்தி!!

முடிந்தவரை ஒரு மின்விளக்கையாவது அணைத்துவிட்டு, உங்களால் இயன்ற ஆதரவை வழங்குங்கள் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் யாரும் அச்சமடைய வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். மின்வெட்டை நடைமுறைப்படுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

முடிந்தவரை ஒரு மின்விளக்கையாவது அணைத்துவிட்டு, உங்களால் இயன்ற ஆதரவை வழங்குங்கள். அந்த நேரத்தில்தான் மின்சார உற்பத்திக்கு அதிக எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.

பகல் நேரங்களில் பிரச்சினை இல்லை. இரவில் பிரஜைகளாக நாம் அந்த ஆதரவை வழங்க வேண்டும். ஏனென்றால், அதன் சுமை இறுதியில் நமக்கும் மக்களுக்கும் தான் வந்து சேரும்.

மக்களுக்குத் தொந்தரவு ஏற்படாத வகையில் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் எரிபொருளை வழங்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

பிராந்திய ரீதியாகப் பார்த்தாலும் நாம் இதனை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறோம் என்று நான் நினைக்கிறேன். எதிர்காலத்திலும் நாம் அதைத் தொடர வேண்டும்.

அதற்காக எரிபொருளைக் கொள்வனவு செய்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

அரசாங்கம் என்ற ரீதியில் நான் பொறுப்புடன் கூறுகிறேன், பலர் மின்வெட்டைச் செய்யுமாறு பரிந்துரைக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு அந்த எண்ணம் இல்லை. எப்படியாவது மின்வெட்டைத் தவிர்க்கவே முயற்சிக்கிறோம்.

மே மாதம் வரை அனைத்து நுகர்வுகளுக்கும் தேவையான எரிபொருள் எங்களிடம் உள்ளது. எனவே யாரும் அச்சமடைய வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

100 டொலரை தாண்டிய எண்ணெய் விலை : ஆசிய பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழல், உலகளாவிய முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக, ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் எண்ணெய் விநியோகத் தடை குறித்த அச்சத்தால் மசகு எண்ணெய் விலை பரலுக்கு 100 டொலரைத் தாண்டியுள்ளது.

இந்த எண்ணெய் நெருக்கடி காரணமாக, ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வேகமாகத் திரும்பப் பெற்று வருகின்றனர்.

நேற்றைய தின நிலவரப்படி, ஜப்பான், தென் கொரியா மற்றும் தாய்வான் போன்ற முக்கிய ஆசிய சந்தைகளில் பங்குகள் பெரும் சரிவைக் கண்டன.

எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியுள்ள ஆசிய நாடுகள், எரிபொருள் விலை உயர்வால் கடும் பணவீக்கத்தைச் சந்திக்க நேரிடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ஆசிய நாடுகளின் கரன்சி மதிப்புகளும் சரிந்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் அமெரிக்கப் பத்திரங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

ஈரானுடனான பேச்சுவார்த்தை குறித்த முரண்பாடான தகவல்கள் சந்தையில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளன.

போர் நீடித்தால், ஆசியாவின் உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் துறைகள் முடங்கும் அபாயம் உள்ளதால், சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆசிய சந்தைகள் குறித்த தங்களின் மதிப்பீட்டைக் குறைத்துள்ளன.

 

தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் : குறைந்த வேகத்தில் சடுதியாக அதிகரிக்கும் பெறுமதி!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (25.03.2026) ஒரே நாளில் 8000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை உலக தங்க சந்தையில் இன்று உயர்வு போக்கு அவதானிக்கப்படுகின்றது. இதன்படி, இன்று காலையில் தங்க விற்பனை 2.94 வீதத்தால் உயர்ந்து 4,539.52 டொலர்களாக நிலவியுள்ளது.

மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து பெண் மீட்கப்பட்ட சம்பவம் : வேலையின்றி சொத்து சேர்த்துள்ள சந்தேகநபர்களின் உறவினர்கள்!!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் உறவினர்கள்

தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக இது தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வரும் அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது. ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்ட சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 3 சந்தேகநபர்களின் உறவினர்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, சந்தேகநபர்களின் உறவினர்கள் சிலர் எந்தவித வேலைகளுக்கும் செல்லாது சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, முச்சக்கரவண்டி மற்றும் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கு அவர்கள் முயற்சித்துள்ளனர்.

இந்த நிலையில், இவ்வாறான சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்கு அவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைத்தது, அவர்களும் சந்தேகநபர்களுடன் தொடர்புப்பட்டுள்ளனரா என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த சந்தேகநபர்களில் முச்சக்கர வண்டி சாரதியான பிரதான சந்தேக நபர், நிதி கொடுக்கல் வாங்கல்களிலும் மோசடிகளைச் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, இந்த குழுவினர் மேலும் பல சம்பவங்களுடன் தொடர்புப்பட்டிருக்கலாம் என்ற கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எரிபொருள் சிக்கல் : பாடசாலை பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள எந்தவொரு பரீட்சையையும் ஒத்திவைக்கவோ அல்லது மறு அட்டவணைப்படுத்தவோ தற்போது எந்த திட்டங்களும் இல்லை என்று கல்வி பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சிறப்பு அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், புதன்கிழமைகளில் கல்வி வகுப்புகளை நடத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்ட உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களின் படி இந்த சிறப்பு விடுமுறை பாடத்திட்டங்களில் பாதிப்பினை ஏற்படுத்தாது என்பதினை அமைச்சு உறுதி செய்துள்ளதாக பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

கல்வித்துறை தனது செயல்பாடுகளை தேசிய எரிசக்தி கொள்கைகளுடன் சீரமைத்து வரும் வேளையில், தற்போதைய சூழ்நிலை பரீட்சை கால அட்டவணையில் தாமதத்தை ஏற்படுத்தாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தற்போதுள்ள பரீட்சை அட்டவணைகள் எந்த மாற்றம் இன்றி தொடரும் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மக்கள் வங்கி – இலங்கை வங்கி உள்ளிட்ட வங்கிகள் மூலம் 4 சதவீத வட்டியில் கடன் : அமைச்சர் அறிவிப்பு!!

அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி 5 ஆண்டுகளில் 50,000 தொழில்முனைவோரை உருவாக்க நிதியுதவிகளையும், வழிகாட்டுதலையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதன்படி, அந்த இலக்கை அடைவதற்கான ஒரு படியாக, சலுகைக் கடன் திட்டத்தைச் செயல்படுத்த 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவில் 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், விவசாய மற்றும் தொழில்துறை துறைகளில் இளம் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான கடன் திட்டத்தைச் செயல்படுத்த அந்தப் பணத்தைப் பயன்படுத்த, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேற்கூறிய கடன் திட்டத்தை மேலும் செயல்படுத்துவதற்காக 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூலம் 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் பிராந்திய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் மூலம் 4 சதவீத ஆண்டு வட்டி விகிதத்தில் கூறப்பட்ட கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும்,

அதற்கேற்ப வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கும் தமது அமைச்சரவையால் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளை அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

மேலும், அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்டம்காணும் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் : இலங்கையில் ஒரே நாளில் இரு தடவை உயர்வு!!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.03.20026) ஒரே நாளில் இரண்டு தடவைகள் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 370,000 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 5000 ரூபாயால் அதிகரித்து 375,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

முதலாம் இணைப்பு : உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதன்படி, சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (24.03.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,367.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 67.56 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கை நிலவரம்

இதேவேளை கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 340400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 370000 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எயார் கனடா விமான விபத்து : 330 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு உயிர் தப்பிய பெண்!!

ஏர் கனடா விமான விபத்தில், 330 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு உயிர் தப்பிய பெண்ணொருவர் குறித்த ஆச்சரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம், அதாவது, மார்ச் மாதம் 22ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இரவு, கனடாவின் மொன்றியலிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள LaGuardia விமான நிலையத்தில் சென்று இறங்கிய ஏர் கனடா விமானம் ஒன்று, தீயணைக்கும் ட்ரக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விமான ஓடுபாதையின் குறுக்கே வேகமாக வந்த தீயணைப்பு வாகனம் ஒன்றின் மீது மோதி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தின் விமானிகள் இருவரும் உயிரிழந்தார்கள்.

விமானம் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதிய வேகத்தில், பயணிகள் அனைவரும் முன் இருக்கைகள் மீது மோத, பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இரத்தம் சொட்டச் சொட்ட அதிர்ச்சியில் உறைந்திருந்த பயணிகளை, அவர்களுடைய சக பயணிகள் ஒருவருக்கொருவர் உதவி, விமானத்திலிருந்து இறக்கியுள்ளார்கள்.

இதற்கிடையில், விமானத்தில் அமர்ந்திருந்த தலைமை விமானப் பணிப்பெண்ணான Solange Tremblay, விமானம் மோதிய வேகத்தில், இருக்கையுடன் விமானத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார்.

சுமார் 330 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட Solangeக்கு ஒரு காலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவரது மகளான சாரா (Sarah Lepine) தெரிவித்துள்ளார்.

அவ்வளவு பெரிய ஒரு விமான விபத்து, சுமார் 330 அடி தூரம் தூக்கி வீசப்பட்டும் தன் தாய் உயிருடன் இருக்கிறாரென்றால், அது ஒரு அற்புதம்தான் என்று கூறும் சாரா, கடவுள்தான் தன் தாயைக் காப்பாற்றியிருக்கவேண்டும் என்றும் கூறுகிறார்.

ஐரோப்பிய நாடொன்றில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கை இளைஞன் : நண்பியுடன் சென்றபோது துயரம்!!

இத்தாலியின் மிலான் நகரில், நேற்று முன் தினம்(21) இரவு, சிவப்பு போக்குவரத்து விளக்கை கவனக்குறைவாக கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இலங்கையர் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார்சைக்கிள் பயணித்த இலங்கையைச் சேர்ந்த மிதும் சந்தீப பெரேரா (23 வயது) மற்றும் எலிசா தியோடோரா (20 வயது) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்தில் பலியானவர்கள், இத்தாலியின் டஸ்கனி (Tuscany) பிராந்தியத்தில் உள்ள லூக்கா (Lucca) நகரின் கப்பானோரி (Capannori) பகுதியில் வசித்து வந்த 23 வயதான இலங்கை இளைஞர் மிதும் சந்தீப பெரேரா குரணகே என்பவரும் ,

மிலன் நகரின் ‘Locate Triulzi’ பகுதியில் வசித்து வந்த, ருமேனிய வம்சாவளியைச் சேர்ந்த 20 வயதான இத்தாலியப் பெண் எலிசா தியோடோரா ட்ரான்கா என்பவருமாவர்.

இவர்கள் இருவரும் பயணித்த அதிவேக மோட்டார் சைக்கிள் ஒன்று, ஒரு டாக்ஸியுடன் மோதியபோது இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளையும் அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

121 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விபத்து : 66 பேர் பலி!!

கொலம்பியாவின் புவேர்ட்டோ லெகுயிசாமோவில் திங்கள்கிழமை (23) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பெரும்பாலும் இராணுவ வீரர்கள் உட்பட 121 பேரை ஏற்றிச் சென்ற இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது 66 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் இதனை உறுதிபடுத்திய துணை மேயர் கார்லோஸ் கிளாரோஸ்,

உயிரிழந்தவர்களின் உடல்கள் அந்தச் சிறிய நகரத்தின் உள்ள வைத்தியசாலை ஒன்றின் பிரதே அறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறினார்.

மேலும், நகரத்தில் உள்ள இரண்டு வைத்தியசாலைகளில் காயமடைந்தவர்களுக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். விபத்து நடந்த இடத்திலிருந்து குறைந்தது 77 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக விமானப்படை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் இறுதி எண்ணிக்கை குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ஹெர்குலஸ் சி-130 விமானத்தில் 110 வீரர்கள் மற்றும் 11 பணியாளர்கள் உட்பட 121 பேர் இருந்ததாக விமானப்படை கூறியுள்ளது.

எக்குவாடோர் மற்றும் பெரு நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அமேசானிய மாகாணமான புடுமாயோவில் புவேர்ட்டோ லெகுயிசாமோ நகரம் அமைந்துள்ளது.

விபத்து தொடர்பில் கொலம்பிய ஊடகங்கள் இணையத்தில் பகிர்ந்த படங்களில், விமானம் விபத்துக்குள்ளான வயலில் இருந்து கரும்புகை மேகம் எழுவதும், இராணுவ வீரர்களுடன் ஒரு லொறி சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதும் காணப்பட்டன.

 

இலங்கைக்கு வரும் எண்ணெய்க் கப்பல்கள் : ஈரான் கொடுத்த வாய்ப்பை ஏற்கமுடியாத நிலையில் அரசாங்கம்!!

ரஷ்யாவிலிருந்து எரிபொருளைப் பெறுவதற்கான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகள் இராஜதந்திர மட்டத்தில் உள்ளன, ஆனால் கடந்த காலத்தில் எங்களால் ரஷ்யாவிலிருந்து எரிபொருள் பெற முடியவில்லை. நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலம் இதைச் செய்ய முடியுமா என்று நாங்கள் பார்க்க முயற்சிக்கிறோம்.

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கைக்கு வருகை தர உள்ளார். அப்போது இந்தப் பேச்சுவார்த்தைகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல வாய்ப்புள்ளது.

இலங்கைக்கு எரிபொருள் வழங்குவது குறித்து இலங்கைக்கான ஈரான் தூதுவர் தெரிவித்த கருத்தை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்.

ஈரானிலிருந்து எரிபொருள் பெறுவதைப் பொறுத்தவரை, தற்போது கப்பல்களை வைத்திருக்கும் நாடுகளுக்கு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் உள்ளது. ஆனால் எங்களுக்கு அந்தத் திறன் இல்லை. ஆனாலும், ஈரானின் அந்த நட்புக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம்.

நாங்கள் இப்போது கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு பல விலை மனுக்களை வழங்கியுள்ளோம். விலை மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. எனவே, அதனூடாக நாங்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வோம் என்று நம்புகின்றோம்.

இந்த விலை மனுக்களின் அடிப்படையில், பல எரிபொருள் கப்பல்கள் ஏப்ரல் மாதத்தில் நாட்டிற்கு வந்து சேரும். இவற்றைக் கொண்டுதான் எரிபொருள் ஒதுக்கீட்டை தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தங்க விலை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல் வர்த்தகங்கள் நிறுத்தப்படும் அபாயம்!!

நேற்றைய நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் சுமார் 4,454 டொலர்கள் ஆக உள்ளது. ஒருவேளை அனைத்து முதலீட்டாளர்களும் நாளை தங்களது தங்கத்தை விற்க முற்பட்டால், அது வரலாற்றின் மிகப்பெரிய பொருளாதார அதிர்ச்சியை உருவாக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 200,000 தொன் தங்கம் ஒரே நேரத்தில் சந்தைக்கு வரும்போது, அதற்கான கேள்வி (Demand) குறைந்து வழங்கல் (Supply) அதிகரிக்கும்.

இதனால் தங்கத்தின் விலை அதிரடியாக வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்படுகின்றது. வர்த்தக நிலையங்கள் இந்த சரிவைக் கட்டுப்படுத்த தற்காலிகமாக வர்த்தகத்தை நிறுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

தங்கத்தின் விலை குறைந்தால், சுரங்க நிறுவனங்கள், நகை உற்பத்தியாளர்கள் மற்றும் மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட தங்கத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்து : 12 பேர் காயம்!!

பொலன்னறுவை – சோமாவதிய பிரதான வீதியின் சுங்காவில மற்றும் சோமாவதிய ஆகிய பகுதிகளுக்கு இடையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய பகுதிகளில் இருந்து ஒரு குழுவினரை ஏற்றிக்கொண்டு சோமாவதிய புனித பூமியை நோக்கி பேருந்து பயணித்துக்கொண்டிருந்தது.

விபத்தின் போது பேருந்தில் 24 பேர் பயணித்துள்ளனர். பேருந்திற்குள் சிக்கியிருந்தவர்களை கந்தகாடு இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் புலஸ்திபுர பொலிஸார் இணைந்து மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

காயமடைந்தவர்களில் 8 பேர் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையிலும், ஏனைய நால்வர் புலஸ்திபுர பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் என விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் புலஸ்திபுர பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் எரிபொருளைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் உயரும் அபாயம்!!

அரசாங்கம் மேற்கொண்டுள்ள அண்மைக்கால எரிபொருள் விலை அதிகரிப்பானது நவீன வரலாற்றில் ஓர் அரசாங்கம் மேற்கொண்ட மிக மோசமான தந்திரோபாயம் எனவும்,

இது ஒரு ‘கறுப்புச்சந்தை முதலாளித்துவ’ பாணியிலான நடவடிக்கை எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் எரிவாயுக் கட்டணங்களும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளப் போவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களை மகிழ்ச்சியாக வாழ வைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள், கடந்த மகிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் பாரிய முரண்பாடுகளைக் கொண்டுள்ளன.

மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்த அரசாங்கத்தைத் தெரிவு செய்தனர். ஆனால் இன்று அரசாங்கத்திற்கு ஏற்படும் அனைத்து நிதி அழுத்தங்களும் நேரடியாக மக்கள் மீதே சுமத்தப்படுகின்றன.

முந்தைய ஆட்சிக் காலங்களில் போர்ச் சூழல்கள் மற்றும் உலகளாவிய நெருக்கடிகளின் போது கூட இவ்வாறான பாரிய அழுத்தங்கள் மக்கள் மீது திணிக்கப்படவில்லை.

இன்று அரசாங்கம் எவ்வித சுமைகளையும் தாங்காமல் சுதந்திரமாக இருக்கிறது. ஆனால் சாதாரண மக்கள் போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

உலக சந்தையில் விலை உயரும் போது உள்நாட்டிலும் விலையை உயர்த்துவதற்கு ஒரு அமைச்சர் அல்லது ஜனாதிபதி தேவையில்லை என அன்று நாடாளுமன்றத்தில் அநுரகுமார திஸாநாயக்க கூறினார்.

ஆனால் இன்று அவரே ஒரு கறுப்புச்சந்தை முதலாளியைப் போலச் செயற்படுகின்றார். எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து மின்சாரக் கட்டணம் மற்றும் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதால், பொதுமக்கள் தாங்க முடியாத சுமைக்கு ஆளாகியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.