வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்களின்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (29.12.2025) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதனை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சம்பத் கொட்டுவேகொட இது குறித்துக் கூறுகையில், முப்படைகள், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டு, அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன் அவசரகால மீட்புப் பணிகளுக்காகக் கடற்படை வீரர்கள், விமானங்கள் மற்றும் படகுகள் தயார் நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாட்டின் கிழக்குப் பகுதியில் அலை போன்ற காற்று ஓட்டம் (Wave-like wind flow) உருவாகியுள்ளது.
இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் இயல்பை விட அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த இடர்களைக் குறைக்கும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளால் அவ்வப்போது வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் மேஜர் ஜெனரல் கொட்டுவேகொட கேட்டுக்கொண்டுள்ளார்.
வென்னப்புவ, லுணுவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்மோதர – போலவத்த பிரதான வீதியில் பெஸ்டஸ் பெரேரா மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹாவெவ, கொஸ்வாடிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் சம்பவ தினத்தன்று லுணுவில பகுதியில் இருந்து பெஸ்டஸ் பெரேரா மாவத்தை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள தொலைபேசி கம்பத்தில் மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த மாணவனை உடனடியாக மாரவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும் அந்த மாணவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் லுணுவில பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் குடை பிடித்தவாறு கடற்தொழில் அமைச்சர் , தேசிய கொடியை ஏற்றிய சம்பவம் கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
தேசிய பாதுகாப்பு தினம் மற்றும் சுனாமி ஆழிப்பேரலையின் 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் (26) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் கொட்டும் மழைக்குள் குடை பிடித்தவாறு கடற்தொழில் அமைச்சர் தேசிய கொடியினை ஏற்றியுள்ளார்.
இதன் போது கூட மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என்.சூரியராஜா ஆகியோரும் உடனிருந்தனர்.
அமைச்சர் குடை பிடித்தவாறு தேசிய கொடி ஏற்றும் போது , மாவட்ட செயலரும் , அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் குடை பிடித்தவாறு உடனிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்வில் பத்திரப்படுத்தப்பட்டுள்ள டன் கணக்கிலான தங்க இருப்புக்களை ஜேர்மனியும் இத்தாலியும் திரும்பப் பெற உள்ளது.
ஜேர்மனியும் இத்தாலியும்
கடுமையான இறக்குமதி வரிகள் உட்பட உலகப் பொருளாதாரத்தையே உலுக்கும் பல முடிவுகளை ட்ரம்ப் எடுத்துள்ள நிலையிலேயே ஜேர்மனியும் இத்தாலியும் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
உலகில் மிக அதிகமாக தங்கம் இருப்பு வைத்துள்ள நாடுகளில் ஜேர்மனியும் இத்தாலியும் முதலிடங்களில் உள்ளன. இத்தாலிக்கு சுமார் 2,500 டன் தங்கமும் ஜேர்மனிக்கு 3,500 டன் தங்கமும் கையிருப்பு உள்ளது.
இந்த நிலையில், ஜேர்மனி 1,200 டன் தங்கத்தை அமெரிக்காவின் மத்திய வங்கியில் முதலீடு செய்துள்ளது. இத்தாலி 1000 டன் வரையிலான தங்கத்தையும் பத்திரப்படுத்தியுள்ளது.
ஆனால் தற்போது இரு நாடுகளும் இந்த தங்கம் மொத்தமும் திரும்பப்பெறும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிலைப்பாடுகள் மீதான அவநம்பிக்கை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ட்ரம்ப் எப்போது, என்ன முடிவு எடுப்பார் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மையும், பெடரல் ரிசர்வ் நடவடிக்கைகளில் தலையிட அவர் எடுக்கும் முயற்சிகளும்,
ஈரான் மீது தாக்குதல் நடத்த அவர் எடுத்த முடிவும், தங்கம் விவகாரத்தில் இத்தாலியும் ஜேர்மனியும் கருத்தில் கொண்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
முடக்க ட்ரம்ப் முடிவு
புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அமெரிக்க பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் அமெரிக்க தங்க இருப்புக்கள் உள்ளிட்ட வெளிநாட்டு சொத்துக்கள் அனைத்தையும் முடக்க ட்ரம்ப் முடிவு செய்யலாம் என்ற அச்சம் காரணமாகவே இத்தாலி மற்றும் ஜேர்மனி தங்கள் தங்க இருப்புக்களை திரும்பப் பெறும் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பொதுவாக அமெரிக்கா அரசியல் ரீதியாக நிலையானதாகவும், உலகின் மிகப்பெரிய இராணுவ சக்தியாகவும் இருப்பதைக் கருத்தில் கொண்டு மட்டுமே உலக நாடுகள் பல தங்களின் தங்க கையிருப்பை அமெரிக்க மத்திய வங்கியில் பாதுகாக்கின்றன.
ஆனால், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் நாணய ஏற்ற இறக்கம் காரணமாக, இந்தியா உட்பட பல நாடுகள் வெளிநாடுகளில் உள்ள தங்க இருப்புக்களை மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் ஏ-9 பிரதான வீதியில் திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து குட்டிக்கரணம் அடித்து விபத்துக்குள்ளகியுள்ளது.
இந்த விபத்து காலை இன்று( 27.12.2025) இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த கழிவுநீர்க் கால்வாய்க்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
எனினும் காரில் பயணம் செய்தவர்கள் தெய்வாதீனமாக சிறு சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.
மாத்தறை மாவட்டத்தின் வரல்ல பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர், நாகொட கமகே யெனுகி செஹன்சா ஹன்சாதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்ப பாடசாலையில் படிக்கும் ஏழு வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் வரல்ல பகுதியில் வசித்து வருகிறார். மாணவி வைத்திருந்த அளவிடும் நாடா தனது வீட்டோடு இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியின் இரண்டு கம்பிகளில் பட்டதால் மின்சாரம் தாக்கியுள்ளது.
உடனடியாக மாணவி மொரவாக்கவில் உள்ள கொஸ்னில்கொட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த உயிரிழப்பு சம்பவம் கடந்த 21.12.2025 அன்று பதிவாகியிருந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்களின் கவனயீனத்தினால் உயிரிழந்துள்ளதாகவும், இதற்கான தீர்வினை மருத்துவமனை அதிகாரிகள் தர வேண்டும் என கோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலாவத்தை மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 29.12.2025 முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை முன்பாக இந்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அழகக கூட்டுறவு சங்கம் தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.
இவ்வாறான இழப்புக்கள் இனியும் நடைபெறாமல் தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தினை வலியுறுத்தும் இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதனிடையே, விசேட பொருளாதார மையங்களிலும், கொழும்பு மரக்கறி சந்தையிலும் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
அந்த வகையில், கொழும்பு பொருளாதார மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், தம்புள்ளை மற்றும் நாரஹேன்பிட்டவிலும் போஞ்சி உட்பட பல வகையான மரக்கறிகளின் விலைகள் இன்று (27.12.2025) அதிகரித்துள்ளன.
இதற்கமைய, சில இடங்களில் ஒரு கிலோ போஞ்சி ரூ. 1,400க்கு விற்கப்பட்டுள்ளதுடன்,பச்சை மிளகாயின் விலை ரூ. 1,500ஐத் தாண்டியுள்ளது.
மத்திய வங்கியின் தினசரி விலை அறிக்கையில் தக்காளியின் விலையும் ரூ. 500ஐத் தாண்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில், கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் தங்கத்தின் விலை 22,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்படி, கடந்த 20 ஆம் திகதி 340,000 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்று இன்றையதினம்(27) 362,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 22 கரட் தங்கம் பவுண் 335,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று(26) 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, இன்றைய நாளில் 362,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது இன்று 6000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலையில் நேற்றையதினம் (26) பிற்பகல் உயர்வு ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று நண்பகல் வரை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி நிலையாகக் காணப்பட்டுள்ளது. இருப்பினும் பிற்பகலுக்குப் பின் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபா அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு – காத்தான்குடி வாவியில் நீண்ட நாட்களாக அட்டகாசம் செய்து வந்த இராட்சத முதலையொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த முதலை, இன்று (27.12.2025) அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி வாவியில் ஒருவர் முதலைக்கடிக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
அத்துடன், மாடுகள், ஆடுகள், நாய்கள், பூனை உள்ளிட்ட விலங்குகளையும் இழுத்துச்சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இராட்சத முதலையைப் பிடிப்பதற்கு, மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களம், காத்தான்குடி நகர சபை உன்ன வாவியோரத்தில் கூட்டினை பொருத்தி முயற்சித்த நிலையிலும் பிடிக்க முடியாமல் போயுள்ளது.
சுமார் 18 அடி நீளமுள்ள இந்த முதலையினால் வாவியோரத்தில் வாழும் மக்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மூதூரில் அண்மையில் ஏற்பட்ட தித்வா புயலின் தாக்கத்தினால் சுமார் 50 வருடங்கள் பழமை வாய்ந்த பாடசாலை கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
நத்தார் தினமான கடந்த வியாழக்கிழமை (25) குறித்த கட்டிடம் திடீரென உடைந்து விழுந்துள்ளதுடன் ஆறு வகுப்பறைகளை கொண்ட இந்தக் கட்டிடத்தில், வழக்கமாக 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வந்ததுள்ளனர்.
தப்பிய 200 மாணவர்கள்
இச்சம்பவத்தில் எந்தவிதமான உயிர் சேதங்களும் ஏற்படவில்லை. குறிப்பாக, நத்தார் தினம் என்பதனால் 25ஆம் திகதி பாடசாலை விடுமுறை நாளாக இருந்ததனால் மாணவர்கள் பாடசாலைக்கு வராத நிலையில், அவர்களின் உயிர்கள் தெய்வீகமாக பாதுகாக்கப்பட்டதாக பாடசாலை சுற்றுவட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரும், பாடசாலையின் மற்றொரு பிரதான கட்டிடம் முழுமையாக உடைந்து விழுந்ததாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, தற்போது பாடசாலையில் கடுமையான வகுப்பறை தட்டுப்பாடு நிலவி வருகிறது.
புதிய கல்வியாண்டு ஆரம்பிக்க உள்ள நிலையில், மேலும் அதிகளவான புதிய மாணவர்கள் இந்த பாடசாலைக்கு வருகை தரவுள்ளதால், கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
எனவே, உரிய அதிகாரிகள் இந்த அவசர நிலையை கருத்தில் கொண்டு, மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில், மிக விரைவாக நிலையான மற்றும் தகுந்த தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் மற்றும் , மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியின் 124 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (27) அதிகாலை 1.00 மணியளவில் பயணித்த வேன் ஒன்றுடன் காட்டு யானை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த வேனின் சாரதியும் பெண் ஒருவரும் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் விபத்தில் சிக்கிய காட்டு யானை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கவுடுல்ல தேசிய பூங்காவிலிருந்து ஹுருலு சூழலியல் பூங்கா நோக்கி பிரதான வீதியைக் குறுக்கறுத்துச் செல்ல முயன்ற போதே, இந்த யானை வேனுடன் மோதியுள்ளதாக கவுடுல்ல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த காட்டு யானை சுமார் 12 வயதுடையது எனவும், அது 5 அடி உயரமான விலங்கு எனவும் வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து சம்பவம் குறித்து கவுடுல்ல வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ஹத்தரஸ்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் வைத்திருந்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்து 490 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெமட்டகொடையைச் சேர்ந்த 65 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இலங்கையில் தங்க நகைகளின் விலையும் அதிகரித்துள்ளது.
மேலும் சராசரியாக, ஒரு பவுண் தங்க நகைகளின் விலை சுமார் 20,000 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
ஒரு பவுண் எடையுள்ள ஒரு சாதாரண தங்க நெக்லஸின் விலை ரூ. 325,000 லிருந்து சுமார் ரூ. 345,000 ஆகவும், ஒரு பவுண் எடையுள்ள திருமண தங்க நெக்லஸின் விலை ரூ. 380,000 லிருந்து சுமார் ரூ. 400,000 ஆகவும், ஒரு மோதிரத்தின் விலை ரூ. 360,000 லிருந்து சுமார் ரூ. 380,000 ஆகவும் அதிகரித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒரு பவுண் எடையுள்ள சராசரி மோதிரத்தின் விலை சுமார் ரூ. 340,000 லிருந்து சுமார் ரூ. 360,000 ஆகவும், திருமண மோதிரத்தின் விலை சுமார் ரூ. 100,000 ஆகவும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
24 கரட் பவுண் ஒன்றின் விலை தற்போது ரூ. 354,000 ஆகவும், 22 கரட் பவுண் ஒன்றின் விலை ரூ. 327,500 ஆகவும் உயர்ந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையே போர் வெடிக்கும் என்ற அனுமானத்தின் கீழ் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
போர் வெடித்து பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும் என்ற அடிப்படையில் உலக சந்தையில் தங்க இருப்பு குவிவதால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்பத்த, பட்டகொட பகுதியை சேர்ந்த 35 வயதுடைய திருமணமாகாத மகேஷ் சஞ்சீவ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து 8.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது தனது சகோதருடன் இணைந்து கொத்து ரொட்டி சாட்பிட்டதாகவும், இரவு 10.30 மணியளவில், வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக கல்பத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிப்படை சிகிச்சையின் பின்னர் அவர் ஹொரண மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அதிகாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொத்து ரொட்டியை சாப்பிட்ட சகோதரருக்கு எந்த உடல்நலக் குறைவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான பிரேத பரிசோதனையை ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரி சுமேத குணவர்தன நடத்த உள்ளார்.
அதன் பின்னரே அவரது மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அங்குருவத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றில் தம்மால் மனு கையளிக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து பேசப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு – சிலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமியின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதேபோன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இவ்வாறான சந்தேகத்திற்கிடமான மரணச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இதற்கு முன்னர் வினோதரன் வினோதா என்னும் பெண்ணினுடைய மரணம் தொடர்பிலும் என்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இவ்வாறு கிடைக்கப்பற்ற முறைப்பாட்டிற்கமைவாக அந்தப் பெண்ணின் குடும்பத்தாருடனும், வைத்தியர்களுடனும் ஏற்கனவே கலந்துரையாடியிருந்தேன்.
இதனையடுத்து, அந்தபெண்ணின் மரணம் தொடர்பிலே அவரது குடும்பத்தாரினால் என்னிடம் அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில், வினோதரன் வினோதாவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்றத்தில் மனு ஒன்றினைச் சமர்ப்பித்துள்ளேன்.
இந்த நிலையில், சபாநாயகராலும் அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அந்த மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இதேவேளை, குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பிலும் தற்போது என்னிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இத்தகைய மரணச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு செல்வதற்கே பயமாக இருப்பதாக மக்கள் என்னிடம் முறையிடுகின்றனர்.
மேலும், குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றத்திலும் வலியுறுத்துவேன்.
குறிப்பாக இந்த சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் மனுவினைக் கையளிப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதிப் பணிப்பாளர் இதன் போது பதிலளிக்கையில், “வினோதரன் வினோதாவினுடைய சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் மாகாண சுகாதார பணிமனையினால் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினரால் விரைவில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
அதேபோன்று குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக தற்போது எம்மால் குறித்த சிறுமியினுடைய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குருதி, சிறுநீர் மாதிரிகள் கொழும்பிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், மருந்தின் அளவு கூடுதலாகச் செலுத்தப்பட்டதால்தான் சிறுமியின் மரணம் நிகழ்ந்ததாக பரிசோதனை அறிக்கை வெளிவந்தால், உரிய தரப்பினருக்கெதிராக மிகக்கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா மற்றும் தொம்மைப்பிள்ளை பவுல்ராஜ் ஆகியோரும் இந்த சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணையினைக் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.