இலங்கையில் உயிருக்கு போராடிய தாயையும் மகளையும் காப்பாற்றிய பொலிஸார்!!

பாணந்துறை கடலில் தத்தளித்து கொண்டிருந்த தாயையும் அவரது மகளையும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளனர்.

நேற்று காலை பாணந்துறை கடற்கரையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் புஷ்பகுமார மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் தனுக ஆகியோர் இந்த அதிரடி செயலை செய்துள்ளனர்.

காப்பாற்றப்பட்ட பெண்ணுக்கும் மகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பொல்கசோவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 6 வயது சிறுமியும் 38 வயதுடைய அவரது தாயும் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்பிள் ஜூஸ் குடித்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பச்சை ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் போது அந்த பாக்கெட்டில் இறுதியாக ஆப்பிளை தவிர்த்து சாப்பிடுவதற்கு பொருத்தமற்ற வேறு பொருள் இருந்ததாக பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது முகபுத்தகத்தில் இது தொடர்பில் அந்த பெண் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,”ஏப்ரல் 27 அன்று, நாங்கள் கிஸ்ட் பச்சை ஆப்பிள் ஜூஸ் குடித்தோம், இறுதியாக இருந்த பானத்தை ஊற்றும்போது ஏதோ அசாதாரணமானதாக உணர்ந்தேன்.

பிறகு அதில் என்ன இருக்கிறது என்று பார்க்க அதை வெட்டி திறந்து பார்த்தேன், அப்போது “பச்சை ஆப்பிளைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்று பேக்கில் இருந்ததிலிருந்து இருக்கக்கூடாத ஒன்று இருந்தது.

உடனடியாக புகார் செய்ய அந்த நிறுவனத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி இந்த விடயம் தொடர்பில் வினவினேன்.

இதன்போது எனக்கும் என் சிறிய குழந்தைகளுக்கும் என்ன நடந்தது என்பதை தெரிவிக்க திங்கள் வரை காத்திருக்கும்படி அவர்கள் என்னை கேட்டுகொண்டனர்.

நான் காத்திருக்கும் அளவுக்கு அன்பாக இருந்தேன், ஆனால் இன்னும் அவர்கள் அழைப்பை ஏற்படுத்தவில்லை. அவர்கள் தங்கள் நுகர்வோரின் வாழ்க்கையை எவ்வளவு இலகுவாக எடுத்துக்கொள்கிறார்கள்.

நான் இன்னும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன் உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறோம்.”என்று பதிவிட்டுள்ளார்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கான அறிவிப்பு!!

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது. இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

அதன்படி இன்றைய தினம் (02.05.2024) 24 கரட் 1 கிராம் தங்கம் 24,430 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 195,450 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, 22 கரட் 1 கிராம் தங்கம் 22,400 ரூபாவாகவும்,22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 179,200 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,380 ரூபாவாகவும்,21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,050 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

வவுனியாவில் பாரவூர்தி – மோட்டார் சைக்கிள் விபத்து : பொலிஸ் உத்தியோகத்தர் காயம் : ஒருவர் கைது!!

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற பாரவூர்தி – மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரவூர்தியுடன் பொலிஸார் உத்தியோகத்தர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளினை செலுத்திச்சென்ற நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் பாரவூர்தியின் சாரதியினையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா நெடுங்கேணியில் விபத்து : ஒருவர் காயம்!!

வவுனியா நெடுங்கேணி சந்தியில் இன்று (02.05.2024) காலை குளிரூட்டப்பட்ட மீன்கள் ஏற்றும் வாகனமும் காரும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்

குளிரூட்டப்பட்ட மீன்கள் வாகனமும் காரும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்ற நெடுங்கேணி போக்குவரத்து பிரிவு பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்

போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலமையிலான பொலிஸ் பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கையினை உக்குளாங்குளம் பகுதியில் முன்னெடுத்திருந்தனர்

இதன் போது 50 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் செட்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 36வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

கைப்பற்ற போதைப்பொருளின் பெறுமதி கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபா எனவும் கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.

பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும். சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் கட்டம் மே மாதம் 31ஆம் திகதி முடிவடைகிறது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

மூவாயிரத்து 527 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி வரை க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளது.

இளைஞன் கடத்தல் : விசாரணையில் சிக்கிய காதலியின் பெற்றோர்!!

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டிய – வெரலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 22 ஆம் திகதி தனது காதலியைச் சந்திப்பதற்காக காதலியின் வீட்டிற்குச் சென்றிருந்த போதே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இந்த கடத்தல் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் வெலிமட – கெப்பட்டிபொல பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 24 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதான சந்தேகநபர்களான குறித்த இளைஞரின் காதலியின் 72 வயது தந்தையும் 69 வயது தாயாரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். எவ்வாறிருப்பினும் இந்த இளைஞர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இளைஞரை கடத்திச்செல்ல பயன்படுத்தியதாக கூறப்படும் NW PK- 0125 என்ற சில்வர் நிற மினி வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப்பிரிவு பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 281445 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அதற்கமைய, 4 இலட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சாத்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் கொலை!!

நாவலப்பிட்டி பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனை அடித்து கொலை செய்ததாக கூறப்படும் மற்றுமொரு மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்

நாவலப்பிட்டி Monte Cristo தோட்டத்தின் கீழ் பகுதியைச் சேர்ந்த ஸ்டேன்லி ஸ்டெப்பில் (Stanley Steph Phil) என்ற பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

​​கிரிக்கெட் மட்டையால் ஏற்பட்ட வாக்குவாதம்
இரு மாணவர்களும் பாடசாலை நண்பர்கள் எனவும், இருவரும் கடந்த 23 ஆம் திகதி தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற போது, ​​கிரிக்கெட் மட்டையால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மற்றைய மாணவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பலத்த காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதின ஊர்வலம்!!

உழைக்கும் மக்கள் ஒன்றிணைவோம், நாட்டின் வளங்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இன்று (01.05) காலை வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய மேதின ஊர்வலம் பஜார் வீதி ஊடாக வவுனியா நகர மண்டபத்தை அடைந்தது, அங்கு பிரதான மேதினக் கூட்டம் இடம்பெற்றது.

இம்முறை மேதினப் பேரணியில் உணவுப் பொருட்கள், எரிபொருட்களின் விலைகளைக் குறை, IMF ஆலோசனைகள்- நிபந்தனைகளால் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை நாசமாக்காதே, வற் (VAT) வரி, மின்சாரம் உள்ளிட்ட கட்டணங்களின் அதிகரிப்பை உடன்குறை,

அந்நியக் கம்பனிகளுக்கும் பெரு முதலாளிகளுக்கும் வழங்கும் வரிச்சலுகையை உடன் நிறுத்து, தேசிய இனங்கள் மீதான பேரினவாத ஒடுக்கு முறைகளை உடன் நிறுத்து,

தமிழ், முஸ்லிம், மலையகத் தேசிய இனங்களின் சுயாட்சி உரிமைகளை வழங்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேதின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.

குறித்த பேரணியில் கட்சியின் முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்தனர்.

வவுனியாவில் மூன்று தனியார் பேரூந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து!!

வவுனியாவிலிருந்து சேவையில் ஈடுபடும் மூன்று தனியார் பேரூந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டு அவைகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

மூன்றுக்கு மேற்பட்ட விபத்துக்களை ஏற்படுத்தியமை , வீதியில் போட்டித்தன்மையில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இப் பேரூந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் இச் செயற்பாடு மக்கள் மத்தியின் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளமையுடன் தொடர்ந்தும் பயணிகளின் சுதந்திரமான பயணத்திற்கு இடையூறு விளைவிக்கும் பேரூந்துகளுக்கு எதிராக நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் வவுனியாவில் நோயாளர் காவு வண்டியை வழிமறித்து யானைகள் அட்டகாசம் : காணொளி!!

வவுனியா செட்டிகுளம் ஊடாக மன்னார் செல்லும் பிரதான வீதியில் யானைகள் வீதியை குறுக்கறுத்து அட்டகாசம் செய்கின்றன. பறயனாளங்குளம் பகுதியிலேயே இச்சம்பவம் நேற்று (30.04.2024) காலை நிகழ்ந்துள்ளது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக யானைகள் வீதியில் நின்று போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் இதே பகுதியில் பல மின்கம்பகளை உடைத்து யானைகள் சேதமாக்கியிருந்தன. இந்நிலையில் நேற்று காலை நோயாளர்களை ஏற்றிவந்த நோயாளர் காவு வண்டியையும் வழிமறித்ததுடன் நீண்ட நேரமாக போக்குவரத்துக்கு இடையூறாக வீதியில் நின்று பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்துள்ளது.

மேலும் இவ்வீதியூடாக பயணிப்பவர்களும் அருகில் உள்ள கிராமவாசிகளும் உயிர் அச்சுறுத்தலுடனேயே எந்நேரமும் காணப்படுகின்றனர். உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

எரிபொருள் விலைகள் குறைப்பு : புதிய விலைப் பட்டியல் இதோ!!

நாடளாவிய ரீதியில் இன்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள். விலைகள் பாரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது .

இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு 368 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது. 95 ஒக்டேன் பெற்றோல் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 420 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.

லங்கா ஒட்டோ டீசல் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 333 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு 377 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 215 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகளுக்கு அமைய லங்கா ஐ.ஓ.சியும் தமது எரிபொருள் விலைகளை குறைத்துள்ளது..

வவுனியா நகரில் போக்குவரத்து பொலிசாரால் வீதி போக்குவரத்து மறுசீரமைப்பு!!

வவுனியா நகரப் பகுதியில் போக்குவரத்து பொலிசாரால் வீதி போக்குவரத்து நடவடிக்கைகள் மறு சீரமைக்கப்பட்டன.

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் போக்குவரத்து பொலிசாரால் இன்று (30.04) குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரில் அதிக சனநடமாட்டம் மிக்க பகுதிகளான பசார் வீதியில் இந்த மறுசீரமைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில், பசார் வீதியில் இருந்து பள்ளிவாசல் சந்தி நோக்கி செல்லும் போது 0,2,4,6,8 ஆகிய திகதிகளில் பசார் வீதியின் வலது புறமாகவும், 1,3,5,7,9 ஆகிய திகதிகளில் வீதியின் இடது புறமாகவும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரகாலப் பகுதியில் இதன் முன்னேற்றம் குறித்து அறிந்த பின் ஏனைய நகர வீதிகளையும் மறு சீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

 

வவுனியாவில் உழைப்பாளர்களுக்கு விடுமுறை வழங்குங்கள் : வர்த்தக சங்கம் கோரிக்கை!!

தொழிலாளர் தினம் அல்லது உழைப்பாளர் தினம் என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது

அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள் பிரபலமாக மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர்தினம் என்று அறியப்படுகின்றது

இந்த தினத்தில் வவுனியா மாவட்டத்திலிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏனைய சேவைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மே 1ம் திகதி விடுமுறை வழங்குமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கடந்த காலங்களில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்களை இவ்வருடமும் உலக தொழிலாளர்கள் தினத்தில் உழைப்பால் இந்த உலகத்தினை உருவாக்கிய உழைப்பாளர்களுக்கு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் விடுமுறை வழங்கி அவர்களை கௌரவிக்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.