வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக இன்று (25.04.2024) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 1000 மில்லிக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும் இவை விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது பாவனைக்காக வைத்திருந்தாரா போன்ற கோணத்தில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன்,

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா நகரசபை உபநகரபிதா வீட்டில் திருடப்பட்ட 60 பவுண் நகைகள் வீட்டின் கூரையில் இருந்து மீட்பு!!

வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து இன்று (25.04) மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரான வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதா அவர்களின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 60 பவுண் நகையும், கடவுச் சீட்டு ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். குறித்த விசாரணைகளின் போது அவர்களது வீட்டில் இருந்த சீசிரீவி கமராக்களும் காணாமல் போயிருந்தமை தெரியவந்தது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் திருடப்பட்ட குறித்த வீட்டின் கூரைப்பகுதியில் கீழ் சூட்சுமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 60 பவுண் நகைகளும் மீட்டுள்ளதுடன், கடவுச் சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் வீட்டில் நின்றவர்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தங்கியிருந்த அவர்களது உறவினர் ஆகியோர் பொலிசாரால் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நகைகள் மீட்க்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் உள்ளதுடன் அதனை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாயம் : தவிக்கும் பெற்றோர்!!

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய 23 வயதான A.S.முஹமட் ரஷாட் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.

கடந்த மாதம் 28ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதும், இதுவரை வீடு வந்து சேரவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய விமான நிலைய CCTV காணொளிகளின் படி கடந்த மாதம் 28ம் திகதி கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து மாலை 6:35 மணியளவில் வெளியேறி உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

அதன் பின்னர் எந்த வாகனத்தில் யாருடன் எங்கு சென்றார் என்ற விபரம் எதுவும் இதுவரைக்கும் இல்லை. இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், அறியத்தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் பிரபல ஆசிரியை உயிரிழப்பால் அதிர்ச்சி!!

யாழில் பல விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கிய விளையாட்டுத்துறை ஆசிரியை ஜெயந்தி ஜெயதரன் இன்று திடீரென உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த ஜெயந்தி ஜெயதரன், யாழ் பிரபல பாடசாலைகளின் ஒன்றான யா / மகாஜனக் கல்லூரி மூத்த உடற்கல்வி ஆசிரியரும் உப அதிபருமாமாவார்.

அதேவேளை யாழில் பல பாடசாலைகளில் பல விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கியவர் பெருமை ஜெயந்தி ஜெயதரனையே சாரும்.

இந்நிலையில் ஆசிரியையின் தீடீர் இழப்பு பாடசாலை மாணாக்கர் மத்தியிலும் குடும்பத்தினரிடையேயும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!!

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் சிறுவர் கடத்தல் கும்பலின் பின்னணியில் இருந்த பிரதான உள்ளூர் உதவியாளர், நேற்று மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். இதன் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கை எல்லை முகவர் நிலையம் ஊடாக ஒரு வருட கால விசாரணையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை, 14 வயது சிறுவனை அவரது தந்தையும் மலேசியாவுக்கு அழைத்து சென்ற குறித்த நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நீண்ட காலமாக இரகசியமாக கண்கானிக்கப்பட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது. ஆண்டு 17 சிறுவர் கடத்தல் வழக்குகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலதிக வகுப்பு ஆசிரியர் பொலிஸாரால் கைது!!

முன்னாள் மேலதிக வகுப்பு ஆசிரியரான உபுல் சாந்த சன்னஸ்கல (Upul Shantha Sannasgala) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைக்கு அமைய அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவகையில், நுவன் பிரதீப் எனும் நபர் அளித்த முறைப்பாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உபுல் சாந்த சன்னஸ்கலவின் வங்கிக் கணக்கு இலக்கத்துக்கு தான் பத்து லட்சம் ரூபாவை வைப்பிட்டதாகவும், குறித்த பணம் தனக்கு திருப்பித் தரப்படவில்லை என்றும் அவர் யூடியூப் ​சேனல் ஒன்றின் நிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கந்தானை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் அவர் முறைப்பாடு ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.

அதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சன்னஸ்கல இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை வெலிசர நீதிமன்றத்தில் முன்னிலை செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் பெண்கள் பாடசாலை அருகில் விடுதி சுற்றிவளைப்பு : பெண்கள் உட்பட ஐவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதியொன்று பொலிஸாரால் திடீரென முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது, விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (24.4.2024) இரவு யாழ்ப்பாணம் பொலிஸாரால்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ். நகரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலைக்கு அண்மையில் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விடுதியே இவ்வாறு பொலிஸாரால் நேற்று இரவு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, விடுதியில் சமூகப்பிறழ்வில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 பெண்களும், விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வங்கியில் கொள்ளையிட சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

அநுராதபுரம் நகரிலுள்ள அரச வங்கியொன்றில் பணத்தை கொள்ளையிடன் வந்த சம்பவம், வங்கியின் சமிக்ஞை கட்டமைப்பு செயற்படுத்தப்பட்டதனால் தடுக்கப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (24.04) காலை அநுராதபுரம் பொது வர்த்தக நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள அரசாங்க வங்கி ஒன்றின் மேற்கூரையின் ஒரு பகுதியை அகற்றி வங்கிக்குள் புகுந்து பெட்டகத்தை உடைத்து பணத்தை திருடிச் செல்ல கொள்ளையர்கள் முற்பட்டுள்ளனர்.

எனினும் அவர்களின் முயற்சி சமிக்ஞை கட்டமைப்பு செயற்படுத்தப்பட்டதனால் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வங்கிக் கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து ஒருவர் அல்லது பலர் கயிற்றின் உதவியுடன் கீழே இறங்கி பெட்டகத்தை உடைத்தபோது வங்கியின் சமிக்ஞை கட்டைப்பு திடீரென செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேசமயம் உடைக்கப்பட்ட பெட்டகத்தில் பணம் எதுவும் வைக்கப்படவில்லை என்பது தெரியவந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

முதியோர் இல்லத்தில் நடந்த கொடூரம் : ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்திய பெண்!!

முதியோர் இல்லமொன்றின் பெண் ஒருவர் முதியவர் ஒருவரை ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்தும் காணொளி வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைகளை பேணி காக்கும் பெற்றோகள் அவர்களை வளர்த்து ஆளாக்க பெரும் கஸ்ரப்படுகின்றனர். பிள்ளைகள் வளர்ந்து ஆளானதும் தம்மை நன்றாக கவனித்து கொள்வார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு எல்லா பெற்றோரிடமுமே உள்ளது.

ஒருகாலத்தில் தாத்தா, பாட்டி, பேரன் பேத்தி , பெற்ரோர்கள் பிள்ளைகள் என இரண்டு மூன்று தலைமுறையே வீடுகளில் கூடி வாழ்ந்தவர்கள் தான் எமது மூதாதையர்கள் .

ஆனால் இன்றைய காலத்தில் பெற்றோர்களை வயதான காலத்தில் பராமரிப்பதை பிள்ளைகள் சுமையாக நினைக்கும் கொடுமையான காலமாக மாறிவிட்டது. அதனால் தானோ என்னவோ முதியோர் பராமரிப்பு இல்லங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளதுடன், வருமானத்தை மட்டுமே நோக்கமாக கொண்டும் பல முதியோர் இல்லங்கள் முளைத்துவிட்டன.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாரம் என எண்ணாது எப்படி போற்றி காத்தார்களோ அதேபோல பிள்ளைகளும் தம் பெற்றவர்களை பாரமாக எண்ணி முதியோர் இல்லங்களுக்கு அனுப்பாது , அவர்களையும் தமது இல்லத்தில் சேர்த்து மகிழ்ச்சியுடன் வாழ்தலிலேதான் வாழ்வின் முழுமை அடங்கியுள்ளது.

தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையை விட சிறந்த அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கான டெண்டர்கள் திறக்கப்பட்டு, தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையில் பார் குறியீடு நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியாவில் ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள 340 இடங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு நிதிப் பிரச்சினைகள் இருப்பதாகவும், ஆனால் மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக நாடு முழுவதும் பல அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

கொழும்பில் பிரமாண்ட அதிசொகுசு நட்சத்திர ஹோட்டல் திறந்து வைப்பு!!

கொழும்பு – காலி முகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ITC ரத்னதீப அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (25.4.2024) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் ஐடிசி ஹோட்டல் குழுமத்தால் கட்டப்பட்ட முதல் சொகுசு ஹோட்டல் இதுவாகும்.

இந்த ஹோட்டல் ”வெல்கம் ஹோட்டல்ஸ் லங்கா” என்ற துணை நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. இதற்காக 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு கட்டிடங்களாக கட்டப்பட்டிருக்கும் இந்த ஹோட்டலில் முதல் கட்டிடம் 30 அடுக்கு ஹோட்டலாகவும் இரண்டாவது கட்டடம் 50 அடுக்குமாடி குடியிருப்பு ஆகும்.

மேலும், தரையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இந்த இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் வகையில் 55 மீற்றர் நீளமான ஸ்கை ப்ரிட்ஜ் எனப்படும் வான் பாலமும் கட்டப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சம் என தெரிவிக்கப்படுகின்றது.

வீதியில் நடந்து சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

புத்தளம்(Puttalam) – மதுரங்குளிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற வான் ஒன்று பாதையில் நடந்து சென்ற குறித்த இளைஞன் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுரங்குளிய – முக்குதொடுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான மானென் நெத்மிக என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

21 வயதான மானென் நெத்மிகா இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் மூத்த பிள்ளை எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றையதினம் தற்காலிகமாக விடுதியொன்றில் தங்கியிருந்து வீட்டிற்கு செல்லும் வழியிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த அவர், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி!!

கொழும்பு செட்டியார்தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 173,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக இலங்கையில் தங்கத்தின் விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.

குறிப்பாக 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது இரண்டு இலட்சம் ரூபாவை தொட்டிருந்தது. இந்த நிலையில் கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி இன்று (25.04.2024) காலை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 173,000 ரூபாவாக குறைந்துள்ளது. இதற்கிடையில் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 188000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய பெண் திடீரென உயிரிழப்பு!!

மதுரங்குளிய – முக்குத்தொடுவாவ பிரதேசத்தில் நோய்களை குணப்படுத்துவதாக கூறப்பட்ட இடத்தில் வழங்கப்பட்ட நீரை பருகிய பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

நீர்ச்சத்து குறைபாடு மற்றும் கடுமையான சுவாச கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முந்தலம,வில்பொத்த பகுதியைச் சேர்ந்த ரேணுகா இந்திரகாந்தி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 35 வருடங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இவர், கடைசியாக துபாயில் பணிபுரிந்து வந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு பணிபுரிந்து சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு நாடு திரும்பிய குறித்த பெண் சில மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததால் குணமடைய இந்த இடத்திற்கு சென்றதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது போத்தல்களில் அடைக்கப்பட்ட சில தண்ணீர் வகைகளை குடிக்கக் கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் உடல் நிலை மோசமாகி அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எரிமலைக்கு அருகில் புகைப்படம் எடுக்க ஆசைப்பட இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

எரிமலைக்கு அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் பள்ளத்தாக்கிற்குள் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தோனேஷியாவில் பதிவாகியுள்ளது.

இந்தோனேஷியாவின் – இஜென் எரிமலையை பார்க்கச் சென்ற சீனா பெண் ஒருவரே இவ்வாறு எரிமலை பள்ளத்தாக்கிற்குள் வீழ்ந்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த 31 வயதான குறித்த பெண் இஜென் எரிமலை நீல நிறத்தில் காட்சியளித்ததை பார்த்து எரிமலைக்கு மிக அருகில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது, அந்த பகுதியில் பலமான காற்று வீசியதில் பள்ளத்தாக்கிற்குள் தூக்கி வீசப்பட்ட குறித்த பெண் சுமார் 246 அடி பள்ளத்திற்குள் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

2 மணித்தியால தேடுதலுக்குப் பின்னர் அவரின் உடல் மீட்கப்பட்டு, சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. படிப்பை பாதியில் நிறுத்தியதால் விபரீத முடிவு!!

மேற்படிப்பு படிக்க விரும்பிய நிலையில், திடீரென திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த புதுப்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள சந்துரு கொண்டா மண்டலத்தில் உள்ள மங்கையபஞ்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனு.

இவரது மனைவி பத்மா. விவசாயக் கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு தேவகி(23) என்ற மகள் இருந்தார். இவருக்கும், கடந்த மாதம் 28-ம் தேதி துப்பண்டா கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், திருமணம் முடிந்த பதினாறாவது நாளில் திருவிழாவுக்காக மங்கையபஞ்சார் கிராமத்திற்கு தேவகி வந்திருந்தார். கடந்த 14-ம் தேதி இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, தேவகி பூச்சிமருந்தைக் குடித்தார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு விழித்த அவரது பெற்றோர், உடனடியாக தேவகியை கொத்தகூடம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதன்பின் கம்மம் மருத்துவமனைக்கு தேவகி கொண்டு செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த தேவகி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தேவகி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், ” தேவகி சமீபத்தில் தான் பிஎஸ்சி படித்து முடித்துள்ளார். இதன்பிறகு மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று தனது தாயிடம் தேவகி கூறியுள்ளார்.

ஆனால், உடல்நிலை சரியில்லை என்று கூறி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி சம்மதிக்க வைத்தனர். இதையடுத்து கடந்த மாதம் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற தனது ஆசை நிராசையானதால் தேவகி மனமுடைந்து இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்” என்றனர்.

திருமணமான ஒரு மாதமேயான நிலையில் புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.