லண்டனில், சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்திய இளம்பெண் ஒருவர், லொறி மோதி பலியானதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் கல்வி கற்பதற்காகச் சென்றிருந்த இந்தியப் பெண்ணான Cheistha Kochhar (34), கடந்த செவ்வாயன்று, அதாவது, மார்ச் மாதம் 19ஆம் திகதியன்று, சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார். அவரது கணவரான Prashant, அவருக்கு சில அடிகள் முன்னால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, குப்பை சேகரிக்கும் லொறி ஒன்று Cheistha மீது மோதியுள்ளது. சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த Prashant, மனைவிக்கு உதவ ஓடோடிச்சென்றுள்ளார். மருத்துவ உதவிக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தும் Cheisthaவைக் காப்பாற்ற முடியவில்லை.
உயிரிழந்த Cheistha, ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரியாகிய Lieutenant General Dr SP Kochhar என்பவரின் மகள் ஆவார்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள Bareilly என்னுமிடத்தைச் சேர்ந்தவரான Cheistha, பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்காக லண்டன் சென்றுள்ளார். தேசப்பற்று மிக்கவரான அவரது நோக்கம் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்புவது என்று கூறியுள்ளார் Cheisthaவின் தந்தை.
Cheisthaவின் உயிரிழப்பால் அதிர்ச்சியடைந்துள்ள அவரது சகாக்கள், சமூக ஊடகங்களில் தங்கள் இரங்கல் செய்திகளை வெளியிட்டுவருகிறார்கள். Cheisthaவின் தந்தை மகளுடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி பகுதியில் நெஞ்சை வருடும் வகையில் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி சாந்தி பானி நகரை சேர்ந்த ரவுனக் குர்ஜார் என்பவர் தனது தோலில் இருந்து காலணிகள் செய்த தாய்க்கு பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பேச்சு பொருளாகி வருகின்றது.
ரவுனக் குர்ஜார் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்படும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகினார். இதன் போது அவருக்கு கால் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
எனவே தொடையில் உள்ள தோல் அகற்றப்பட்டது. அவரின் உடலில் இருந்து அகற்றப்பட்ட அந்த தோலை காலணிகள் செய்யும் தொழிலாளியிடம் ஒப்படைத்துள்ளார். அதிலிருந்து தனக்கு ஓர் காலணி செய்து தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி தொழிலாளியும் காலணியை வடிவமைத்துள்ளார்.
அதை ரவுனக் குர்ஜார் என்பவர் தாய்க்கு பரிசாக வழங்கியுள்ளார். அவருடைய கிராமத்தில் நிகழ்ந்த ஓர் நிகழ்ச்சியின் போதே இதை தனது தாயிடம் ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், நான் ராமாயணத்தை தவறாமல் பாராயணம் செய்வேன். அதில் தாயாருக்கு தன் தோலினால் செருப்பை செய்தாலும் போதாது என்று ராமரே கூறியிருந்தார்.
அது என் நினைவில் இருந்தது. எனவே நான் இதை செய்து முடித்தேன். சொர்க்கம் என்பது பெற்றோரின் காலடியில் தான் இருக்கிறது என்பதை சமூகத்திற்கு தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும் இந்த நெகிழ்ச்சியான செயல் குறித்து அவருடைய தாயார் கூறுகையில், ரவுனக் போன்ற ஒரு மகனை பெற்றதை நான் பாக்கியமாக பார்க்கிறேன்.
கடவுள் அவரை அனைத்து பிரச்சினையில் இருந்தும் காப்பாற்றி, சந்தோஷமாக எப்போதும் வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வருவாய்த் துறையினரைக் கண்டித்து வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகக் கூறி நெசவாளர் ஒருவர் ரயிலில் பாய்ந்தும், அவரது மனைவி, மகள் தூக்கிலிட்டும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்எஸ்ஆர் (கடப்பா) மாவட்டத்தில் வொண்டிமிட்டா மண்டலம் கொத்த மாதவரத்தைச் சேர்ந்தவர் சுப்பாராவ்(47). இவரது மனைவி பத்மாவதி(41), மகள் வினய்(17). நெசவாளரான சுப்பாராவுக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் உள்ளது.
இந்நிலையில், அந்த நிலத்தை விற்க சுப்பாராவ் முயற்சி செய்துள்ளார். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகளால் தனது நிலப்பதிவேட்டில் குளறுபடி செய்யப்பட்டதை சுப்பாராவ் அறிந்தார். இதனால் தனது மூன்று ஏக்கர் நிலத்தை விற்க முடியாமல் சுப்பாராவ் தவித்து வந்தார்.
இந்த நிலையில், சுப்பாராவ் தனது மனைவி, மகளோடு தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார். இன்று காலை, கொத்த மாதவரத்தில் ரயிலில் பாய்ந்து சுப்பாராவ் தற்கொலை செய்து கொண்டார்.
அதே நேரத்தில் வீட்டில் பத்மாவதி, வினய் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சுப்பாராவ் மற்றும் அவரது மனைவி, மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் வீட்டில் சோதனையிட்ட போது, சுப்பாராவ் எழுதிய கடிதம் கிடைத்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் தங்களை ஏமாற்றி விட்தால், தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று சுப்பாராவ் கடிதத்தில் எழுதியிருந்தார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும், மூன்று உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி இளம்பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்குள் இரகசியமாக நுழைந்து பாலியல் லஞ்சம் கேட்ட இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் அந்தரங்கப்படங்களை போலியாக தயார் செய்து அவரை மிரட்டிய நிலையில் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி இளம்பெண்ணிடம் இளைஞர் பாலியல் லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது . இளம் பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்குள் நுழைந்த இளைஞர், குறித்த பெண்ணிடம் காதலிக்குமாறு கேட்டுள்ளார்.
எனினும் அவரது கோரிக்கைக்கு இணங்க பெண் மறுத்துள்ளார். இதனையடுத்து இளம்பெண்ணுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி, அந்தரங்க புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிடுதாக மிரட்டியுள்ளார்.
அதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எந்தவிதமான கணினி அறிவும் இல்லை, ஆனால் மற்றவர்களின் சமூக ஊடக வலையமைப்புகளை அணுகும் அசாத்திய திறமை கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் கைதான இளைஞருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்..
யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவர் தனது தாடியாலும் தலை முடியினாலும் ஏஷ் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் என்பவரெ இந்த சாதனையை படைத்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் இன்றையதினம் (24-03-2024) காலை 10.00 மணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 1000 மீற்றர் தூரத்துக்கு வாகனத்தை தனது தாடியாலும் முடியாலும் இழுத்து உலக சாதனையை நிகழ்த்துவதே திருச்செல்வத்தின் நோக்கமாக அமைந்தது.
இதற்கமைய 1550 கிலோ கிராம் எடையுடைய ஏஷ் பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தூரத்துக்கு தாடியாலும், 500 மீற்றர் தூரம் வரை தலை முடியாலும் இழுத்து திருச்செல்வம் சாதனை படைத்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உலக சாதனை புத்தக நிறுவனப் பிரதிநிதிகள் இந்த சாதனை நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இதன்போது வாகனத்தை இழுத்துவந்த செல்லையா திருச்செல்வத்தை ஆரம்பம் முதல் சாதனையை நிலைநாட்டும் வரையில் அமைச்சர் உற்சாகப்படுத்தி வந்தார்.
இந்த நிகழ்வை Cholan Book of World Record (CBWR) நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரடியாக அவதானித்து திருச்செல்வத்தின் சாதனையை அங்கீகரித்து, பதக்கத்தையும் விருதையும் பட்டயத்தையும் அமைச்சரின் கரங்களால் வழங்கி வைத்தனர்.
செல்லையா திருச்செல்வம் கடந்த 10 ஆண்டுகளாக தனது தலைமுடியாலும், தாடியாலும் வாகனங்களை இழுப்பது, தனது உடலின் மீது வாகனத்தை ஓடவிடுவது போன்ற சாதனைகளை நிலைநாட்டி வருகிறார்.
60 வயதான சாதனை நாயகன் அண்மையில் சாவகச்சேரி பஸ் நிலையத்தின் அருகில் 1550 கிலோ எடையுள்ள வாகனத்தை 1500 மீற்றர் தூரம் வரை 45 நிமிடங்களில் இழுத்து சாதனை படைத்துள்ளார்.
கனடாவிற்குள் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பிரஜைகளினால் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என கனடிய அட்லாண்டிக் பேரவை குடியேறிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கனடாவில் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது
இதனால் குடியேறும் சில ஆண்டுகளில் அவர்கள் வேறும் நாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கி விடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2013ம் அண்டில் குடியேறிகளின் எண்ணிக்கை 6000 மாக காணப்பட்டதாகவும், 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 32000 மாக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசிக்கும் குடியேறிகளில் 50 வீதமானவர்கள் மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் தாக்குப் பிடிக்கின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீடமைப்பு, மருத்துவ சேவை, கல்வி வசதி, பாடசாலை வசதி போன்ற சில காரணிகளினால் குடியேறிகள் தொடர்ச்சியாக கனடாவில் வாழ்வதற்கு விரும்புவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் போர் காரணமாக உக்ரைனிலிருந்து கனடாவின் நோவா ஸ்கோடியாவில் குடியேறிய பெண் ஒருவர் வாழ்க்கைச் செலவு பிரச்சினை காரணமாக கனடாவை விட்டு வெளியேறி, ஜோர்ஜியாவில் குடியேறியுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டில் கனடாவில் குடியேறிய டிடென்யா மெலினெக் என்ற பெண்ணே இவ்வாறு கனடாவை விட்டு வெளியேறியுள்ளார். வாழ்க்கைச் செலவு பிரச்சினை காரணமாக இவ்வாறு கனடாவை விட்டு வெளியேறியதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே கனடாவிற்குள் குடியேறுவோர் இந்தக் காரணிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி சரியான திட்டமிடலுடன் குடியேறுவது பொருத்தமானது என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை அண்மைக்காலமாக இலங்கையில் இருந்து கனடா செல்வோரின் எண்னிக்கை அதிகமாகியுள்ள நிலையில், பெரும் தொகை கொடுத்து கனடா செல்லும் பலர் , இவ்வாறான வாழ்க்கை செலவு இடர்களுக்கு முக கொடுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேசமயம் கனடாவிற்கு செல்லும் இலங்கையர்களும் இந்தக் காரணிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி சரியான திட்டமிடலுடன் சென்றால் அவர்கள் வாழ்க்கை பிரகாசிக்கும் என்பதில் ஐயமில்லை.
நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (25) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 661,766 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 23,350 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 186,750 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 21,410 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,250 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 20,440 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 163,450 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன.
களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதால் குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவொன்று போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவன் ஒருவர் நேற்று (24.03.2024) இரவு திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகயீனமுற்ற மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க எந்தவொரு அம்புயுலன்ஸ் வசதியும் களனி பல்கலைக்கழகத்தில் காணப்படவில்லை என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே, இதற்கு, எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிடம் முன்பாக ஏறத்தாழ 150 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த ஒரு மாணவியும் மூன்று மாணவர்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிலும், மேலும், 04 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பொல்கொல்ல பிரதேச வைத்தியசாலையிலும், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்பாகமுவ, பக்மீகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த தனியார் கல்வி நிறுவனத்தில் கல்விப் பொதுத் தராதர பரீட்சையில், சித்தி பெறாத மாணவர்கள் கல்வியைப் பெற்று வருவதாகவும், இதன்போதே தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எதிர்வரும் மாதங்களில் தேங்காய் ஒன்று 200 அல்லது 300 ரூபாவுக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படக்கூடும் என்று தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது கிளிநொச்சி சேவை சந்தையில் ஒரு தேங்காய் 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்கின்ற தேங்காயில் ஒரு பங்கு மாத்திரமே தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும் இனி வரும் மாதங்களில் முற்றாக தேங்காய் இல்லாத நிலை காணப்படும் எனவும் தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு காரணம் கிளிநொச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளை ஈ தாக்கம் என தெரிவித்துள்ளனர். இதனால் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேங்காய் கொள்வனவாளர்கள் மற்றும் தென்னை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெண் ஈ தாக்கம் காரணமாக பலரது தோட்டங்களிலுள்ள வெண் ஈ தாக்கப்பட்ட மரங்களில் சிறு குரும்பைகூட இல்லாமல் வெறுமனே நோய் தாக்கம் ஏற்படுத்தப்பட்ட மரமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தென்னை பயிர் செய்கையாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை (23/03/2024) இடம்பெற்றது. அதிகாலை 5.00 மணிக்கு அபிசேகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜை இடம்பெற்று மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை 6.30 மணிக்கு தம்ப பூஜையும் இடம்பெற்றன. தொடர்ந்து காலை7.00 மணிக்கு வசந்த மண்டபூஜை ஆரம்பமாகி 8.00 மணிளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர், விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள்வீதி வலம் வந்து 9.00 மணியளவில் தேரில் ஆரோகணிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. . மேற்படி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். தேர் இருப்பிடத்தை அடைந்தபின் அர்ச்சனைகள் இடம்பெற்று நண்பகல் 12.00 மணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றதுடன் .தொடர்ந்து பிராயசித்த அபிசேகமும் இடம்பெற்றது.
அறுந்து விழுந்த கேபிள் வயரில் மின்சாரம் பாய்ந்து டூவீலரில் சென்ற புதுப்பெண்ணான செவிலியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பாகல்கோட் மாவட்டம், பாதாமி தாலுகாவில் உள்ள சின்சலகட்டே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபாய் ஜாதவ்(36). இவர் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவில் உள்ள இப்பாடி கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து லட்சுமிபாய் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த ஊரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரியும் லட்சுமணன் டூவீலரில் வந்துள்ளார். அவர் லட்சுமிபாயின் ஊரைச் சேர்ந்தவர் என்பதால்,வீட்டில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார்.
இதனால் அவருடன், செவிலியர் லட்சுமிபாய் ஜாதவ் வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது குனிகல் நோக்கி டூவீலர் சென்ற போது சாலையில் நடுவில் இருந்து கேபிள் வயர் அறுந்து டூவீலரில் சென்ற லட்சுமிபாய், லட்சுமணன் ஆகியோர் மீது விழுந்தது.
அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், செவிலியர் லட்சுமிபாய் ஜாதவ் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த தலைமை ஆசிரியர் லட்சுமணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லட்சுமி பாய் உடல், பிரேத பரிசோதனைக்காக குனிகல் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து குனிகல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் தான் லட்சுமிபாய் ஜாதவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியால் சின்சலகட்டே பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
64 லட்ச ரூபாய் கேட்டு கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு அவர் எழுதிய 5 பக்க கடிதம் தற்போது கிடைத்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், கே.ஆர் பேட்டை தாலுகா லிங்கபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமகுமாரி(26). இவருக்கும் மைசூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அப்போது பிரேமகுமாரியின் குடும்பத்தினர் 150 கிராம் தங்கம் மற்றும் 5 லட்ச ரூபாய் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனால், திருமணமான மூன்றே மாதங்களில் வரதட்சணை கேட்டு பிரேமகுமாரியை அவரது கணவர் வீட்டினர் கொடுமைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ரூ.64 லட்சம் தராவிட்டால், வீட்டில் இடமில்லை என பிரேமகுமாரியை அவரது வீட்டுக்குத் துரத்தியுள்ளனர். வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசை கொண்ட பிரேகுமாரி, தனது வீட்டில் இருந்த அதற்காக படிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில், வரதட்சணை வாங்கி வராததால் கணவர் வீட்டில் இருந்து பிரேமகுமாரிக்கு கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த பிரேமகுமாரி வீட்டில் தூக்குப்போட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலைக் கைப்பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், பிரேமகுமாரி எழுதிய 5 பக்க கடிதம் போலீஸாரிடம் தற்போது கிடைத்துள்ளது. அதில், வழக்கறிஞராக வேண்டும் என்ற எனது கனவு நனவாகியுள்ளது. ஆனால், என் கணவருடைய கோபத்தை என்னால் தாங்க முடியவில்லை.
எந்நேரமும் பயத்துடனே வாழ்க்கையை நடத்துவது போல் இருக்கிறது. நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றி விட்டனர். பணக்கார வீட்டு பெண்ணான எனக்கு சாக தைரியம் இல்லை, ஆனால், வாழவும் ஆசை இல்லை என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதையடுத்து பிரேமகுமாரி குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ராகவேந்திரா குடும்பத்தினர் மீது கிக்கேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நித்திரவிளை அருகே இளம்பெண் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் குரல்வளை நொறுங்கியதால் கொடூரமாக உயிரிழந்திருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் கடைசி நிமிடத்தில் சித்ரவதையை அனுபவித்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
நித்திரவிளை அருகே பூத்துறை கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்தவர் சஜின் (37). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி ஷானிகா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. 2 தினங்களுக்கு முன் இரவு நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், பேச்சு மூச்சு இல்லாமல் ஷானிகாவை அனுமதித்துள்ளனர் .
மருத்துவமனை ஊழியர்கள் ஷானிகாவை பரிசோதனை செய்தபோது இறந்துவிட்டது தெரியவந்தது. தொடர்ந்து உடலை கேட்டு தகராறு செய்ததால் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நித்திரவிளை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவில் ஷானிகாவின் கழுத்து நெரிக்கப்பட்டு குரல்வளை உடைந்ததால் தான் இறந்திருப்பது உறுதியானது. ஷானிகாவின் கடைசி நிமிடங்கள் மிகவும் சித்ரவதை அனுபவித்து இறந்திருக்கலாம் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனவே ஷானிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் அல்லது யாரேனும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்ற இரண்டு வாய்ப்பு மட்டுமே இருக்கலாம் என பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
இதையறிந்ததும் தனது மகளை கணவர் வீட்டினர் கொலை செய்துவிட்டதாக கூறி ஷானிகாவின் தந்தை தனிஸ்லாஸ் (65), நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சஜினின் வீட்டில் சென்று பார்த்தனர்.
அங்கு ஷானிகா தற்கொலை செய்ததற்கான எந்த ஆதாரமும் தென்படவில்லை. ஷானிகாவின் கணவர் சஜின் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, சம்பவத்தன்று சஜினும், ஷானிகாவும் அறைக்குள் இருந்து பேசிக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் ஷானிகா மட்டும் அறையை விட்டு வெளியே வந்துள்ளார். பின்னர் திடீரென மயக்கம்போட்டு விழுந்துவிட்டதாக சஜின் எங்களை அழைத்தார். நாங்கள் வந்து பார்த்தபோது ஷானிகா சுயநினைவின்றி கிடந்ததை கண்டோம்.
பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். மயங்கிய நிலையில் கிடந்தபோதுதான் ஷானிகாவை பார்த்தோம். எனவே அங்கு என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்கு தெரியாது என சஜினின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் ஷானிகாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதே அவரது கணவர் சஜின் தலைமறைவாகிவிட்டார். எனவே சஜின் மீது சந்தேகம் வலுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சஜினை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. சஜின் சிக்கினால்தான் உண்மையிலேயே என்ன நடந்தது என தெரியவரும்.
இதுகுறித்து ஷானிகாவின் தந்தை தனிஸ்லாஸ் போலீசிடம் அளித்துள்ள புகாரில், 2015ம் ஆண்டு எனது மகளை சஜின் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம். ஆரம்பத்தில் சஜின் நன்றாக தான் இருந்தார். கடந்த 3 வருடங்களாக கஞ்சா, மது போதையில் வீட்டுக்கு வருவதும் தெரியவந்துள்ளது.
ஷானிகா மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறினர். இதனால் எனது மகள் சாவில் சஜின் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சந்தேகம் உள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நித்திரவிளை போலீசார் சந்தேக மரணமாகவும், அதில் சஜினின் பெயரையும் சேர்த்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
10 வயசு மகளைக் கொடூரமாக குத்திக் கொன்று இங்கிலாந்தில் அதிர வைத்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய். இந்த கொலைக் குற்றத்திற்காக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய கொலைக் குற்றத்தை ஒப்புக்கொள்ளவுமில்லை, மறுக்கவும் இல்லை என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட் மாகாணத்தில் உள்ள ரவுலி ரெஜிஸ் நகரத்தில் உள்ள வீடொன்றிற்கு, கடந்த 4ம் தேதி, இரவு 12.10 மணியளவில் போலீசார் அழைக்கப்பட்டார்கள். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு ஷே கேங் (10) என்கிற சிறுமி படுகாயமடைந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறாள்.
இதையடுத்து மருத்துவ உதவிக் குழுவினர் அவளைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலிக்காமல், ஷே கேங் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் தாய் ஜஸ்கிரத் கௌர் என்னும் ஜாஸ்மின் கேங் (33) கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், குழந்தை கொல்லப்பட்டது எப்படி என்ற தகவலை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளார்கள். குழந்தை ஷே கேங்கின் மார்பில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், ஜாஸ்மின் வால்வர்ஹாம்ப்டன் கிரௌன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் குற்றம் செய்ததை ஒப்புக்கொள்ளவும் இல்லை, எதற்காக குழந்தையை அவர் கொலை செய்தார் என்பதும் தெரியவில்லை. மீண்டும், ஏப்ரல் மாதம் 22-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கவேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நவீன் (25). இவரும், ஹாசன் பேளூரை சேர்ந்த தேஜஸ்வினி என்ற 21 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இதை அறியாத பெண்ணின் குடும்பத்தினர் தேஜஸ்வினிக்கு சிவமொக்காவை சேர்ந்த பிரமோத் குமார் என்பவருடன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். பெற்றோருக்கு பயந்த தேஜஸ்வினி காதலை மறைத்து திருமணத்திற்கு சம்மதித்தார்.
இந்நிலையில், பேலூரு உள்ள ஒக்கலிகர் பவனில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அப்போது, மணமகன் தாலி கட்டிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த காதலன் நவீன், திடீரென தாலியை பறித்து, ‘ இந்த பெண் என்னை காதலிக்கிறாள்.
அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்” என்று கூறினர். இதனால் திருமண மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனால் பெண்ணின் குடும்பத்தினர் பேலூரு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் பேலூரு போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது மணமகள், நவீனை யாரென்று தெரியவில்லை. மணமகன் காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தவுடன், மணமகன் பிரமோத்குமார், ‘‘இந்தத் திருமணம் தேவையில்லை’’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் நவீன் மற்றும் மணமகள் தேஜஸ்வினியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரியவந்தது. போலீஸ் ஸ்டேஷனில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும், பெண் அனுப்பிய குறுஞ்செய்திகளையும் நவீன் காட்டினார்.
நேற்று இரவு குறுஞ்செய்தியில், “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. என்னால் திருமணத்தை நிறுத்த முடியாது. நீ எப்படியாவது வந்து இந்தக் கல்யாணத்தை நிறுத்து” என்று தேஜஸ்வினி குறுஞ்செய்தி அனுப்பினாள்.
இதையடுத்து இருவரது பெற்றோரையும் அழைத்து போலீசார் திருமணம் செய்து வைக்க அறிவுறுத்தினர். இதையடுத்து இரு வீட்டாரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.