தென்னிந்திய திரையுலகின் இலங்கை தமிழ் நகைச்சுவை நடிகர் மரணம் : திரையுலகினர் அஞ்சலி!!

திரையுலகில்..

தென்னிந்திய திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான இலங்கை தமிழர் போண்டா மணி உடல்நலக்குறைவால் தனது 60 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவருடைய தாயகமான இலங்கையில் உள்ள மன்னாரில் மறுமலர்ச்சி விநாயகர் கலா மன்றம் என்ற பெயரில் மன்றமொன்றை ஆரம்பித்து நண்பர்களோடு கலைநிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையிலிருந்து அகதியாக இராமேஸ்வரம் சென்று நடிகராகியுள்ளார்.தமிழில் 1991ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தின் மூலம் அறிமுகமான நகைச்சுவை நடிகர் போண்டா மணி சுமார் 270 படங்களில் துணை காமெடி நடிகராக நடித்துள்ளார். சிறுநீரகம் செயலிழந்த நிலையில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவரின் வைத்திய செலவுக்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்து வந்த நிலையில், நேற்று(23) வீட்டில் திடீரென மயங்கி விழுந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் மரணம் தென்னிந்திய திரையுலகை சோகத்தில் ஆழ்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழிற்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனத்தால் வீதியில் காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்!!

யாழில்..

யாழிற்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனம் ஒன்று விதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக மஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (24-12-2023) அனுராதபுரம் ராம்பவே வெலி ஓயா சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹம்பக பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த வாகனம் அனுராதபுரம் ராம்பவே வெலி ஓயா சந்திக்கு அருகில் வீதியை விட்டு விலகி பேருந்துக்காக காத்திருந்த ஒருவரை மோதியுள்ளது.

இந்த விபத்தில் கொழும்பு நோக்கி பயணிப்பதற்காக பேருந்துக்காக பேருந்து தரிப்படத்தில் காத்திருந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் கல்லாசிய கொடவ பகுதியைச் சேர்ந்த 38 வயதான டி. ஏ சந்துன் தினேஷ் ஜெயக்கொடி என தெரியவந்துள்ளது.

யாழ் யுவதிக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அங்கீகாரம்!!

பிரித்தானியாவில்..

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் பிரித்தானிய கழகமட்ட கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார். யாழ். காரைநகரை பூர்வீகமாக கொண்ட அமுருதா சுரேன்குமார் பிரித்தானியாவின் சன்ரைஸ் அகடமி குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டிற்கான சன்ரைஸ் அகடமி குழுவில், 15 வீராங்கணைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவராகவே அமுருதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நீண்டகால விரிவான தேர்வு செயல்முறையின் அடிப்படையில், குளிர்கால பயிற்சி திட்டத்தில் இத்தேர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து பேர் கொண்ட அணி பின்வருமாறு : மோலி பார்பர்-ஸ்மித், ஒலிவியா பார்ன்ஸ், பிரிஷா பேடி, ஈவி புக்கர், ஹன்னா டேவிஸ், மே டிரிங்கெல், இசபெல்லா ஜேம்ஸ், பெல்லா ஜான்சன், லைலா, ஓலோரன்ஷா, சாரா பியர்சன், சார்லி பிலிப்ஸ், மாபெல் ரீட், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் ரிவா பின்டோரியா, அமுருதா சுரேன்குமார்

அமுருதாவின் தந்தை சென் ஜோன்ஸின் முன்னாள் கிரிக்கட் வீரர், யாழ்ப்பாண பிக் மட்ச் இல் அதிக தனி நபர் ஓட்டங்கள் (145) அடித்த சாதனை அவர்வசம் தான் இன்னமும் இருக்கிறது. 2024 மார்ச்சில் இடம்பெறவுள்ள இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணத்தில் அமுருதாவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழக மாணவி மரணம் : கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள உடற்கூறுகள்!!

யாழில்..

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழந்த மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மேலதிக பரிசோதனைக்காக குறித்த மாணவியின் உடற்கூறு பகுதிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது நேற்றைய தினம்(23) உயிரிழந்துள்ளார். குணரத்தினம் சுபீனா என்ற (25 வயது) மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலையை கற்கும் குறித்த மாணவி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே உயிரிழந்துள்ளார்.உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

முல்லைத்தீவில் உணவு அருந்தும்போதே பரிதாபமாக உயிரிழந்த தமிழ் வங்கி உத்தியோகத்தர்!!

முல்லைத்தீவில்..

உணவகம் ஒன்றில் உணவு அருந்தும் போது தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டு வைத்திய நிலைக்கு கொண்டு சென்ற போது இலங்கை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் இலங்கை வங்கியில் நிறைவேற்று தர உத்தியோகத்தராக பணிபுரிந்து வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பருத்தித்தித்துறை தம்பசிட்டி சொந்த இடமாக கொண்ட 38 வயதான பாலசுப்பிரமணியம் மதனகுமார் வயது 38 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மீண்டும் முகக்கவசம் அணியுங்கள் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

முகக்கவசம்..

நாட்டில் வாழும் மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர அறிவுறுத்தியுள்ளார்.

J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கோவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவி வருகின்றமையே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காய்ச்சல், இருமல், மணமின்மை மற்றும் சுவையின்மை, அதிக வெப்பம், சுவாசக் கோளாறு, உணவு தவிர்ப்பு மற்றும் வாந்தி என்பன J N 1 OMICRON கோவிட் பிறழ்வின் நோய் அறிகுறிகளாக காணப்படுகின்றன.இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் வைத்தியரை நாடுமாறும் வைத்தியர் சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தினார்.

இலங்கையில் மீண்டும் பதிவான கொரோனா மரணம்!!

கொரோனா மரணம்..

சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் உறுதிப்படுத்திய கொவிட் மரணம் கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று பதிவாகியுள்ளது. கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

கொவிட் அறிகுறிகளுக்கு இணையான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நுரையீலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்திய சிறுமியின் மரணம்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி பூநகரி நெடுங்குளத்தில் வெள்ளம் நிரம்பிய குழியில் தவறி விழுந்த குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன் தினம் (21) மாலை 05.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் புஸ்பராசா மிதுசனா என்ற ஒன்றரை வயது குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குழந்தையின் இறப்பு தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அதேவேளை கடந்த தினங்களில் பெய்த கடும் மழை காரணமாக கிளிநோசி, முல்லைத்தீவு பகுதி மக்கள் பெரும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

8 வயதிலேயே உலக சாதனை படைத்த இலங்கை தமிழ் சிறுமி : குவியும் வாழ்த்துக்கள்!!

இலங்கையில்..

சதுரங்கப் போட்டியில் 8 வயதிலேயெ வெற்றி பெற்று இலங்கை தமிழ் சிறுமியொருவர் உலக சாதனை படைத்துள்ளார்.ஐரோப்பிய பிளிட்ஸ் சதுரங்கப் சாம்பியன்ஷிப் போட்டியில் லண்டனைச் சேர்ந்த 8 வயதான இலங்கை தமிழ் சிறுமி போதனா – சிவானந்தன் Bodhana Sivanandan சிறந்த பெண் வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் உள்ள ஹாரோவைச் சேர்ந்த போதனா – சிவானந்தன் என்ற சிறுமி இறுதிச் சுற்றில் இரண்டு முறை ரோமானிய சாம்பியனான 54 வயதான கிராண்ட்மாஸ்டர் விளாடிஸ்லாவ் நெவெட்னிச்சியுடன் டிரா செய்தார்.சர்வதேச மாஸ்டர் மற்றும் பிரித்தானிய மகளிர் பயிற்சியாளர் லோரின் டி’கோஸ்டாவை வென்றுள்ளார்.

ஒரு போட்டி விளையாட்டில் கிராண்ட்மாஸ்டருக்கு எதிராக தோல்வியைத் தவிர்க்கும் இளைய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.எட்டு வயது சிறுமி “வியக்கத்தக்க முடிவை” அடைந்ததாக ஐரோப்பிய சதுரங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.போதனா சிவானந்தனின் வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.மேலும், உலக சாதனைப் புத்தகத்தில் இச் சிறுமியின் பெயரை பதிவு செய்து சாதனைச் சிறுமியாக பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வானில் திடீரென தோன்றிய அதிசயம் : ஆர்வத்துடன் பார்த்த மக்கள்!!

இலங்கையில்..

இலங்கை வானில் நிலாவை சுற்றி பாரிய வளைய வடிவிலான ஒளி வட்டம் தோன்றியுள்ளது. இதைப் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வத்துடன் உற்று நோக்கியுள்ளனர்.

இந்த ஒளி வட்டம் நேற்று (22-12-2023) மாலை சுமார் 7.00 மணி முதல் நாட்டின் பல பாகங்களிலும் தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு வட்டப் பரிமாண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

மேலும், வளிமண்டலத்தில் ஈரப்பதம் அல்லது வளிமண்டலத்தில் நீராவியின் அளவு அதிகரிக்கும் போது, ​​தெளிவான வானத்திலும், நிலவு நன்றாக இருக்கும் நாளிலும் இவ்வாறான ஒளி வட்டம் தோன்றும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட பூ பனி புகைப்படங்கள் : வெளியாகியுள்ள தகவல்!!

இலங்கையில்..

இலங்கையின் நுவரெலியாவில் பல பகுதிகளில் நேற்றைய தினம் (22.12.2023) அதிகாலை பூ பனி பெய்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், குறித்த புகைப்படங்கள் இந்தியாவில் உள்ள ஒரு பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தற்போது தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் பூ பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பூ பனி பொழிவு காணப்பட்டது.

மேலும் இன்று அதிகாலை நுவரெலியாவின் வெப்ப நிலை 14 பாகை செல்சியஸாக காணப்பட்டதால் அதிகம் குளிரான நிலையை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.இந்தநிலையிலேயே வெளியான குறித்த புகைப்படங்கள் ஹட்டன் பகுதியைச் சேர்ந்தவை என்று முகப்புத்தகத்தில் வேகமான பகிரப்பட்டு வந்தது.

இலங்கையில் கொரோனாவின் புதிய திரிபு : மீண்டும் முகக்கவசம் அணியும் நிலை!!

இலங்கையில்..

JN1 Omicron துணை வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் ஒரு குறிப்பைச் சேர்த்த அவர், கொவிட் பரிசோதனை மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால், தற்போது அதன் பரவலின் நிலைமை குறித்து அறிவியல் அறிக்கையை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மீண்டும் முகமூடி அணிவதை நாடுவதே மிகவும் பொருத்தமானது என்று அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கொரோனா வைரஸுக்கு எதிரான நோய்த்தடுப்பு தடுப்பூசிகள் இன்னும் செயலில் உள்ளன, மேலும் ஆபத்தில் உள்ள குழுக்கள் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது முக்கியம் என்று பேராசிரியர் சந்திம ஜீவந்தரா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்கிறது : 64 குளங்கள் உடைப்பு!!

வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக பெய்துவந்த மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையினால், பெரும்பாலான குளங்கள் வான் பாய்கின்றது.

குறிப்பாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 620 குளங்களில் 456 குளங்களும், மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 17 குளங்களும், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 06 குளங்களும் வான் பாய்கின்றதாக மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை பாலிக்குளம், சின்னசிப்பிகுளம், தேகக்கம்குளம், பிரமநாலங்குளம், பரயநாலங்குளம் உட்பட 64 குளங்கள் உடைப்பெடுத்த நிலையில் கமநல அபிவிருத்தி திணைக்களம், இராணுவம், கிராமமக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இணைந்து குளத்தினை மறுசீரமைத்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரப்பகுதியில் உள்ள ஆபத்தான மரங்கள் வெட்டியழிப்பு!!

வவுனியா நகரப்பகுதியில் உள்ள ஆபத்தான மரங்கள் நேற்றையதினம் (21.12.2023) வெட்டி அகற்றப்பட்டது. வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள ஆபத்தான மரங்கள் பாதுகாப்புகருதி ன்றையதினம் வெட்டிஅகற்றப்பட்டது.

அந்தவகையில் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாகவும், காமினி மகாவித்தியாலம், பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரங்களே இவ்வாறு அகற்றப்பட்டது.

குறித்த மரங்கள் மிகவும் பழமையானதாக காணப்படுவதுடன், அதன் கிளைகள் அண்மையில் வீசிய காற்றின் போது முறிந்து விழுந்திருத்தது. இதனையடுத்து இம்மரங்களை அகற்றுமாறு பல்வேறு தரப்புக்களால் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பாதுகாப்பு கருத்தி குறித்த மரங்களின் ஆபத்தான கிளைகள் மரக்கூட்டுத்தாபனத்தில் நேற்றையதினம் வெட்டி அகற்றப்பட்டது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பல்கலைக்கழக மாணவன் பலி!!

இலங்கையில்..

கம்பளை – கண்டி பிரதான வீதியில் வெலிகல்ல நகரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தவுலகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஓஷத பந்துல பண்டார அலஹகோன் என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.வெலிகல்ல பகுதியைச் சேர்ந்த ஐம்பத்தைந்து வயதுடைய ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேற்று(21) அதிகாலை இரண்டு மணியளவில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் ஹெரொயின் போதைப் பொருளுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது!!

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (22.12) தெரிவித்தனர்.

பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கு அமைய வவுனியாவில் நேற்று (21.12) இரவு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளரது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீ்டிலும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வியாபார நிலையத்தின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது மகள்கள் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.