யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தர் மாயம்!!

யாழ்ப்பாணம் – நல்லிணக்கபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 20.10.2023 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இதன்போது யாழ்ப்பாணம் – கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் என்ற முகவரியில் வசித்து வந்த தேவராசா சூசைதாசன் 46 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் கடந்த 20.10.2023 அன்று மேற்படி முகவரியில் உள்ள அவரது வீட்டில் இருந்த வர்த்தக விடயமாக கொழும்புக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் சென்றதில் இருந்து 5ஆவது நாள் அவரது கைப்பேசி இயங்காததன் காரணத்தினால் அவரது மனைவி இது குறித்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 2024.02.01 ஆம் திகதி அன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார். எனினும் இதுவரை காணாமல் போன நபர் கண்டுப்பிடிக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் யுத்த காலத்தில் குறித்த நபர் கண்ணிவெடியில் சிக்கியதில் அவரது கால் பறிபோயுள்ளதாக கூறப்படுகின்றது. இவர் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் 076 – 6348367, 074 – 0910152 மற்றும் 076 – 3934822 ஆகிய இலக்கங்களில் ஏதாவது ஒரு இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இப்படியெல்லாமா விளையாடுகின்றது? குடல் வெடித்து இளைஞன் பலி!!

பைக் சர்வீஸ் சென்டரில் ஏர் பிடிக்கும் கம்பரசரில் ஆசனவாயில் காற்று பிடித்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது நண்பரான பைக் மெக்கானிக் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள விஜயபுராவைச் சேர்ந்தவர் யோகேஷ்(28). டெலவேர் ஏஜென்டாக பணிபுரிந்து வந்த அவர், தனிசந்திராவில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சம்பிகேஹள்ளியில் உள்ள சிஎன்சி(சிஎன்எஸ்) பைக் சர்வீஸ் சென்டருக்கு சென்றுள்ளார். தனது வாகனத்தை சர்வீஸ் செய்ய வேண்டும் என்று கடையில் இருந்த அவரது நண்பரான மெக்கானிக் முரளியிடம் கூறியுள்ளார்.

அப்போது ஏர் பிடிக்கும் கம்பரசரில் இருந்து திறந்து விடப்பட்ட காற்றைக் கொண்டு முரளியும், யோகேசும் விளையாடிக் கொண்டிருந்தார். முதலில் யோகேஷின் முகத்தில் காற்றை அடித்தார். அப்போது விளையாட்டாக, யோகேஷின் ஆசனவாயிலில் முரளி காற்றைப் பிடித்துள்ளார்.

இதனால் யோகேஷின் வயிறு வீங்கி மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஷ் உயிரிழந்தார்.

ஏர் பிடிக்கும் கம்பரசரில் இருந்து வெளியேறிய காற்று மூலம் வயிற்றுக்குள் குடல் வெடித்து யோகேஷ் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து யோகேஷின் பெற்றோர், சம்பிகேஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதன் பேரில், 304 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், முரளியை இன்று கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த டிசிபி லட்சுமி பிரசாத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மாற்றுத்திறனாளி பெண்ணுடன் காதல்… திருமணம் செய்வதாக 56 லட்சம் பணத்துடன் எஸ்கேப்பான இளைஞன்!!

பெங்களூருவில் சினிமா பாணியில் மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், 56 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவான வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் சுரேந்திர மூர்த்தி. இவர் கால் இல்லாத மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை சந்தித்துள்ளார். தொலைபேசி மூலம் அடிக்கடி பேச ஆரம்பித்த சுரேந்திர மூர்த்தி, இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் சுரேந்திர மூர்த்தியை காதலித்துள்ளார்.

இந்த நிலையில், வியாபாரம் செய்ய வேண்டும் என்று அந்த பெண்ணிடம், சுரேந்திர மூர்த்தி பணம் கேட்டுள்ளார். அவரது வார்த்தையை நம்பி தன்னிடமிருந்த தங்க நகை, பணம் ஆகியவற்றை கொடுத்துள்ளார்.

ஆனால், சிறிது நாளிலேயே அந்த பணம், நகை பணம் போதாது என்று கூறியுள்ளார். இதனால் கடன் வாங்கி சுரேந்திர மூர்த்தியிடம் அந்த பெண் கொடுத்துள்ளார். அத்துடன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த பெண்ணுடன் சுரேந்திர மூர்த்தி பாலியல் ரீதியாக உறவு கொண்டதாக கூறப்படுகிறது.

இதன் பின், அந்த பெண்ணுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். திருமணம் செய்து கொள்ளச் சொல்லி இளம்பெண் கேட்ட போது, கால் இல்லாத பெண்ணை என் வீட்டில் ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். கடன் வாங்கிக் கொடுத்த பணத்தைக் கேட்ட போது, அவருக்கு சுரேந்திர மூர்த்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில் சுரேந்திர மூர்த்தி மீது இளம்பெண் நேற்று புகார் செய்துள்ளார். இதனை விசாரித்த போலீஸார், சுரேந்திர மூர்த்தி மீது ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம், மோசடி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இளம்பெண்ணிடம் சுரேந்திர மூர்த்தி மொத்தம் ரூ.56 லட்சம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறுகையில், ” நானும், என் அம்மாவும் சுயதொழில் செய்கிறோம்.

சுரேந்திர மூர்த்தி 2018-ம் ஆண்டு அறிமுகமானார். என்னைக் காதலிப்பதாக கூறினார். அத்துடன் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார், ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்றும், அதற்கு போதுமான பணமில்லை என்று கூறினார். உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள் என்றும், நிறுவனம் தொடங்கிய பிறகு திருப்பித் தருவதாக கூறினார்.

இதனால் என் எதிர்காலத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணம், தங்க நகைகளை அவருக்குக் கொடுத்தேன். அது போதவில்லை என்றும், மேலும் பணம் கடன் வாங்கித் தரச்சொன்னார். அதன்படியும் வாங்கித் தந்தேன். ஆனால், அவர் நிறுவனம் தொடங்கவில்லை.

மேலும், திருமண பேச்சு எடுத்தாலே, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தப்பித்துக் கொண்டார். கடைசியில் என்னைக் கொன்று விடுவதாக மிரட்ட ஆரம்பித்தார்.

அவரது வீட்டுக்குப் போய் நியாயம் கேட்ட போது, கால் இல்லாத பெண்ணை ஏற்கமாட்டோம் எனறு அவரது அப்பா கூறினார். இந்த நிலையில், ஜனவரி 31, 2024 அன்று திருமணம் செய்து கொள்வதாக சுரேந்திர மூர்த்தி கூறினார். நான் இதை நம்பினேன்.

ஆனால், அதன் பின் அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக சஞ்சயா நகர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தேன். அங்குள்ள இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறேன் என்றவர், இதன் பின் புகாரை கண்டு கொள்ளவில்லை.

இதனால் கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில் சுரேந்திர மூர்த்தி, அவரது தந்தை பரமேஷரப்பா, தாய் மீனாட்சிம்மா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளேன்” என்றார்.

மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி பணம், நகை மட்டுமின்றி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சுரேந்திர மூர்த்தியை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு தானே ஊசி செலுத்திக் கொண்ட 30 வயது பெண் மருத்துவர்.. சோக முடிவில் சிக்கிய கடிதம்!!

இந்திய மாநிலம் கேரளாவில் இளம் பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் அபிராமி. 30 வயதான இவர், பிரதீஷ் ராகு என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.

அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த அபிராமி, பி.டி.சாக்கோ நகரில் வாடகை குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில், அபிராமி செவ்வாய்க்கிழமை அன்று தனது வீட்டில் அபிராமி உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து அபிராமியின் உடலை மீட்டனர். மேலும், அவரது அறையில் இருந்து ஊசி ஒன்றும், உயிரை மாய்த்துக் கொண்டதான கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

அந்த கடிதத்தில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அவர் எழுதியிருந்துள்ளார். அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்தை, அபிராமி ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டு உயிரை விட்டுள்ளார் என கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை அவர் உட்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

500 ரூபாய் நோட்டுக் குவியலின் நடுவே படுத்து உறங்கும் அரசியல் தலைவர் : யார் இவர்?

அரசியல் தலைவர் ஒருவர் தனது உடல் முழுவதும் 500 ரூபாய் நோட்டுக்களால் சூழப்பட்டு தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அசாமின் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (UPPL) தலைவர் பெஞ்சமின் பாசுமாதாரி என்பவர் உடல்குரி மாவட்டத்தில் உள்ள பைரகுரியில் கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.

இவர் கட்டிலில் படுத்தபடி உடல் முழுவதும் 500 ரூபாய் நோட்டுக்களால் சூழப்பட்டு தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து அரசியல் தலைவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் அரசியல் தலைவரின் செயல் பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

NDA மற்றும் UPPL ஆகிய இரு கட்சிகளும் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்யும் நிலையில் இந்த மாதிரியான விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கணவனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத மனைவியின் விபரீத முடிவு!!

குருணாகல், நிகவெரட்டிய பிரதேசத்தில் 88 வயதான கணவனின் மரணத்தைத் தாங்க முடியாமல் விஷம் அருந்திய 85 வயது மனைவி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் கணவன் மனைவியின் சடலங்களை பொலிஸார் மீட்டு பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். பிரதேச பரிசோதனையில் கணவர் இதயம் செயலிழந்து உயிரிழந்துள்ளதாகவும் மனைவி விஷமருந்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நிகவெரட்டிய பொலிஸ் பிரிவில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தம்பதியரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் தங்கள் மகன், மருமகள் மற்றும் அவர்களது பிள்ளைகளுடன் தங்கள் வீட்டில் வசித்து வந்துள்ளனர். கணவன்-மனைவியாக மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

கணவன் சுகயீனமடைந்து இருந்து காலப்பகுதியில், அவர் இறந்தால் தானும் வாழ மாட்டேன் என அவரது மனைவி பல சந்தர்ப்பங்களில் கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகன் மற்றும் மருமகள் இருவரும் வியாபார விடயமாக அதிகாலை ஐந்து மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், பேத்தி காலை தேநீருடன் அறைக்கு சென்றபோது, ​​பாட்டி கட்டிலில் முனகுவதை பார்த்ததாகவும் தாத்தா படுக்கையில் இறந்து கிடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உறவினர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் பாட்டியை தாயை உடனடியாக நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பதற்கு பேத்தி நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அனுமதிக்கப்பட்ட வேளையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் போது மேலும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி!!

இலங்கையில் இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 171,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,380 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 187,000 ரூபாவாகவும் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,440 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 171,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 20,460 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 163,700 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 176,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 163,300 ரூபாவாகவும் மாற்றமின்றி தொடர்வதாக தெரியவருகிறது.

யாழில் கோர விபத்து : மதுபோதையால் நேர்ந்த விபரீதம்!!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று (28) மதியம் இடம்பெற்ற விபத்தில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஈவினை கிழக்கு புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த (65) வயதுடைய சீனியர் இராஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் தோட்டத்திலிருந்து புற்களைளை ஏற்றுக் கொண்டிருந்த விவசாயி மீது லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பலாலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது லொறியில் பயணம் செய்த சாரதி உட்பட மூவர் மது போதையில் இருந்ததாகவும் இதனால் வீதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக உழவியந்திரத்துடன் நிலை தடுமாறி மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் போது வீதியிலிருந்த மின்கம்பம், தொலைத்தொடர்பு கம்பம் என்பன முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதுடன் பாரிய மரம் ஒன்றும் முறிந்து விழுந்துள்ளது. மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சாதாரண தரப் பரீட்சையின் பின்னரான விடுமுறை இனி இல்லை : கல்வி அமைச்சர்!!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சாதாரண தர பரீட்சையில் தோற்றியதன் பின்னர் பெறுபேறுகள் வரும் வரையான நான்கு மாத காலப்பகுதியில் அந்த மாணவர்கள் வேறு விடயங்களுக்கு உட்படுகின்றனர்.

புதிய வேலைத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவதற்கு முன்பதாக க.பொ.த. உயர் கல்விக்கான வகுப்புகளை ஆரம்பிப்பதன் மூலம் பாடசாலைகளில் உயர் கல்விக்காக தோற்றும் 02 மாணவக் குழுக்கள் ஒன்றாக இணைக்கப்படுவர். இது எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது. அதற்கான இட முகாமைத்துவமும் அதிபர்களினால் ஒழுங்கு செய்யப்படும்.

கல்வி முன்னேற்றம் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக தேவையான மாற்றங்களும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

க.பொ.த. உயர்தர விஞ்ஞான பாடத்துக்காக முதலில் 2001 ஆம் ஆண்டில் ஆங்கில மொழிக் கல்வியை அறிமுகப்படுத்தியதுடன், அது தற்போது 06ஆம் வகுப்பு முதல் க.பொ.த. உயர்தரம் வரை 500 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நடத்தியுள்ளது.

இதன்போது ஆங்கில பாடம் கற்பித்து அண்மைக்காலங்களில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள ஆசிரியர்களை, மேலும் 03 வருட காலங்களுக்கு தற்காலிகமாக ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கு இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்த காலகட்டத்தில் தற்போது பாடசாலைகளில் கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் அதற்கான பயிற்சியைப் பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்தானது, நேற்று (27.03.2024) இரவு பெரியகல்லாறு மயான வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த இரு மாணவர்களும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நிலையில், வேகத்தினை கட்டுப்படுத்த முடியாது மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் பெரியகல்லாறு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த சந்திரகாந்தன் சதுஸன் என்னும் 16வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன், மற்றைய மாணவன் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை!!

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே விதித்துள்ளார். அத்துடன் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 23 வயது யுவதியின் சடலம் மீட்பு!!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று (28.03.2024) தெரிவித்தனர்.

வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் குறித்த யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கவிப்பிரியா என்பவராவார். சம்பவம் தெர்ர்பில் சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியா ஓமந்தையில் கோர விபத்து : முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று (27.03.2024) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,

இரவு 7 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

IPL சூதாட்டத்தில் 1 கோடியை இழந்த நபர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!

இந்தியாவில் IPL போட்டிகள் தொடங்கி சூடு பிடித்துள்ள நிலையில், சூதாட்டத்தில் ரூ 1 கோடியை இழந்த நபரின் மனைவி கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் பொறியியல் பட்டதாரியான தர்ஷன் பாபு என்பவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஆர்வகம் கொண்டவர். கடந்த 2021ல் இருந்தே IPL போட்டிகள் தொடர்பில் சூதாட்டத்தில் தர்ஷன் ஈடுபட்டு வந்துள்ளார்.

சூதாட்டத்தில் தோல்வி காணும் போது கடன் வாங்கத் தொடங்கினார். கடன் தொகை அதிகமான நிலையில், கடன் அளித்தவர்கள் நெருக்கடி தரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அவரது மனைவி 23 வயது ரஞ்சிதா நிரந்தர கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 18ம் திகதி கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள வீட்டில் ரஞ்சிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். வெளியான தரவுகளின் அடிப்படையில் தர்ஷன் ரூ 1 கோடிக்கு மேல் கடனாளியாக உள்ளார் என்றே தெரிய வந்துள்ளது.

தர்ஷன் பொறியாளராக பணியாற்றி வருகிறார். 2021ல் தொடங்கி 2023 வரையில் தர்ஷன் IPL சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் சூதாடுவதற்காக சுமார் 1.5 கோடி வரையில் அவர் கடன் வாங்கியுள்ளதாக தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுமார் 84 லட்சம் வரையில் தற்போதும் கடனாளியாக உள்ளார். தர்ஷன் – ரஞ்சிதா திருமணம் 2020ல் நடந்துள்ளது. ஆனால் 2021ல் தான் தமது கணவரின் சூதாட்டம் குறித்து அவர் அறிந்துகொண்டுள்ளார்.

தற்போது ரஞ்சிதாவின் தந்தை தமது மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் என 13 பேர்களின் பெயர்களை பட்டியலிட்டு புகார் அளித்துள்ளார். இவர்கள் தர்ஷனுக்கு கடன் கொடுத்தவர்கள் என்றே கூறப்படுகிறது.

மேலும், தமது மருமகனை ஏமாற்றியே சூதாட்டத்தில் ஈடுபட வைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மிக விரைவில் பல கோடிகளை சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தையை நம்பியே தர்ஷன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ரஞ்சிதாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள தங்கத்தின் விலை!!

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 163,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அந்தவகையில் செட்டியார் தெரு நிலவரப்படி தங்கத்தின் நேற்றைய விலையுடன் இன்றைய தினத்திற்கான விலையை ஒப்பிடும் போது மாற்றமின்றி காணப்படுகிறது.

24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 176,500 ரூபாவாக காணப்படுகிறது. அதேவேளை 22 கரட் தங்கப்பவுணொன்று 163,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 22,062.50 ரூபாவாகவும், 22 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 20,412.50 ரூபாவாகம் காணப்படுகிறது. இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 350 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை!!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்நாயக்க இன்று இந்தியா விஜயம் செய்ய உள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாளைய தினம் இது குறித்து புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து, சுற்றாடல் அமைச்சுக்களின் செயலாளர்கள், தொடருந்து திணைக்களப் பொது முகாமையாளர், சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்களும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.