வவுனியா சிறையில் இருந்து 23 பேர் விடுவிப்பு!!

நத்தார் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 23 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

நேற்று நத்தார் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 1004 சிறைக் கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறுகுற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 23பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா போக்குவரத்து பொலிசார் புத்தாண்டை முன்னிட்டு விசேட சோதனை!!

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா போக்குவரத்து பொலிசார் இன்று (26.12) விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை கட்டுப்படுத்தவும், போதைப் பாவனையை தடுக்கும் வகையிலும் வவுனியா போக்குவரத்து பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது, 10 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், ஒரு சாரதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய போக்குவரத்து பொலிஸாரினால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம் எழுப்பியமை, முச்சக்கரவண்டிக்கு அதிகளவான அலங்காரம், தலைக்கவசத்தினுள் தொலைபேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா பூந்தோட்டத்தில் சுனாமி நினைவு தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது!!

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களிற்கான 19 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று(26.12.2023) இடம்பெற்றது.

பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நினைவு தூபி சுனாமி பேரலை ஏற்பட்டு 31 ஆம் நாளில் நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையின் முதலாவதாக அமைக்கப்பட்ட தூபியாகவும் விளங்குகின்றது. தற்போது நகரசபையால் புணர்நிர்மானம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றது.

நரசிங்கர் ஆலயத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராஜா, தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மதகுருமார்கள், பொதுஅமைப்புகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள், என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்து : ஒருவர் படுகாயம்!!

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிவ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டானிச்சூர் பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று (25.12.2023) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக முதியவர் ஒருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் அதே திசையில் வந்த அதிவேக சீசியுடைய மோட்டார் சைக்கிள் முதியவர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவையூடாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையுடன் விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிலும் பகுதியளவில் சேதமடைந்திருந்தன.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

நத்தார் தினத்தை கொண்டாட முடியாமல் தவறான முடிவெடுக்க முயற்சித்த குடும்பஸ்தர்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பில் தொழில் இல்லாத காரணத்தால் நத்தாருக்கு பிள்ளைகள் மனைவிக்கு ஆடைவாங்கி கொடுக்க முடியாது மனமுடைந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (24) இரவு 11 மணியளவில் இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை மேசன் தொழில் செய்துவந்துள்ளார். இந்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டிடத் தொழில் இல்லாத காரணத்தால் பொருளாதார ரீதியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளார்.

வருடத்தில் ஒருதடவை வரும் நத்தார் தினத்தை கொண்டாடுவதற்கு பிள்ளைகளுக்கு ஆடை வாங்கி கொடுக்க முடியாது நிலையினால் மனக்கவலையடைந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம்(24) இரவு வீட்டைவிட்டு வெளியேறி யேசுநாதரின் பிறந்த தினம் எனது இறப்பு தினமான அமைய வேண்டும் என தவறான முடிவெடுக்க கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்துள்ளார்.

இதன்போது நீரில் தத்தளித்த நிலையில் பயம் ஏற்பட்டதையடுத்து காப்பாற்றுமாறு கத்தியதையடுத்து அவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குறித்த நபரை பொலிஸார் கைது செய்து தவறான முடிவெடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை இவரின் இந்த நடவடிக்கை பரபரப்பு அல்ல நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் எதிர்காலத்தில் நாட்டு மக்கள் வாழமுடியாது இவ்வாறு தவறான முடிவெடுக்கம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை இவரின் செயல் மூலம் அனைவருக்கும் உணர்த்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மக்களின் வருமானத்தில் கடும் வீழ்ச்சி : வெளியான கணக்கெடுப்பு!!

இலங்கையில்..

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் 2022 மார்ச் மாதத்திற்குப் பிறகு மொத்த வருமானத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்பதை அறியும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் இது தெரியவந்துள்ளதாக அந்த திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

வேலை இழப்புகள் மற்றும் வேலை ஒப்பந்தங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை,வேலை நேரம் குறைக்கப்பட்டமை,விற்பனை வீத வீழ்ச்சி என்பன இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கால்நடை தீவனம், எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் அதிகரிப்பு என்பனவும் கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளது.

யாழ் பல்கலை மாணவி மரணம் : அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ள சகோதரி!!

குணரத்தினம் சுபீனா..

தரமற்ற ஊசியை செலுத்தியதாலும் சரியான முறையில் சிகிச்சை வழங்காததினாலுமே தனது தங்கை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவியின் சகோதரி குற்றச்சாட்டியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா உடல் சுகயீனம் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் கடந்த 23 ஆம் திகதி இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கயிலேயே குறித்த மாணவியின் சகோதரி இவ்வாறு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”கடந்த ஞாயிற்றுக்கிழமை(17) எனது சகோதரிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை(23) காலை 11 மணிக்கு மருத்துவர் பார்வையிடுவதற்கு வரும்போது வாந்தி ஏற்பட்டதால் அதற்கு ஒரு ஊசியை செலுத்துமாறு தாதியருக்கு கூறினார்.

இந்நிலையில் குறித்த ஊசியை தாதியர் செலுத்திவிட்டு போகும்போது மூச்சுத்திணறல், தலைவலி என்று எனது தங்கை துடித்துள்ளார். இதையடுத்து அந்த ஊசிக்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்றினை கொடுத்துவிட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.

பின்னர் மருத்துவர் “இதே ஊசி ஏனையோருக்கும் ஏற்றப்பட்டது. ஆனால் உங்களது சகோதரிக்கு தான் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. ஒவ்வாமை ஏதாவது இருக்கிறதா” என்று கேட்டார். ஆனால் ஏற்கனவே வைத்தியசாலையில் பதிவுகள் மேற்கொள்ளும் போது ஒவ்வாமை எதுவும் இல்லை என்று கூறினோம். பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாக கூறினர்.

பின்னர் தெல்லிப்பழை வைத்தியசாலையின் எந்தவிதமான ஆவணங்களும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படாமலேயே சகோதரியை அனுப்பி வைத்தனர். இதயத்தை தொழிற்பட வைப்பதற்காக கழுத்துக்கு கீழ் பகுதியில் இருந்து துளையிட்டார்கள். ஏனென்றால் இதயத்தின் தசைநார்கள் இறுகிவிட்டன. ஆகையால் உடல் பாகங்களுக்கு இரத்தம் செல்லவில்லை.

முகம் வெளிறி, கால்கள் மஞ்சள் நிறமாக மாற்றமடைந்தது.பின்னர் இரவு என்னையும் எனது அம்மாவையும் அழைத்த வைத்தியர், ஏற்கனவே ஏற்றப்பட்ட ஊசியின் தாக்கத்தினை தடுப்பதற்காக சிகிச்சைகள் வழங்கவுள்ளோம் என்றனர். இரவு எட்டு மணியளவில்தான் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டது.

எந்தவிதமான மருந்துகளும் வைத்தியசாலையில் இல்லாதது போல எல்லா மருந்துகளும் எங்களையே வாங்கி தருமாறு கூறினர்.பின்னர் அடுத்தநாள் வைத்திய ஆலோசகருடன் பேசும்போது 90 வீதம் அபாய கட்டத்தில் இருந்து தற்போது 60 வீதம் நிலைமைகள் சீருக்கு வந்துள்ளது. ஆகையால் பயப்படத் தேவையில்லை என்று கூறினார்.

பின்னர் திடீரென செயற்கையாக இதயத்தை தொழிற்பட வைக்கும் மருந்தை குறைத்தனர். இவ்வாறு குறைத்ததால் மூன்று மணத்தியாலத்தில் திரும்பவும் அபாய கட்டத்திற்கு எனது சகோதரி சென்றார்.இதன்போதே ஏதாவது எனது சகோதரிக்கு நடந்துவிட்டதா தெரியவில்லை.

எனது சகோதரிக்கு ஏற்கனவே செலுத்திய ஊசி என்ன என நான் வைத்தியரை கேட்டவேளை அவர் என்ன ஊசி என்று கூறவில்லை. கண்ணுக்கு பிளாஸ்டர் போட்டு ஒட்டி இருந்தனர்.பின்னர் இரவு எங்களை அழைத்தவேளை நாங்கள் போய் பார்த்தோம் வென்டிலேட்டர் குழாயில் இரத்தம் காணப்பட்டது.ஊசி ஏற்றுவதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை(19) பரிசோதனைகள் செய்யப்பட்டது.

ஆனால் புதன்கிழமை(20) பரிசோதனை செய்யவில்லை.ஏனென்றால் மெசின் பழுதாகி விட்டதாக கூறினர். இரத்த அளவீடு பார்க்காமல், குருதிச் சிறு தட்டுகளின் அளவு பார்க்காமல், டெங்கின் அளவுகள் பார்க்கால் எவ்வாறு ஊசியை ஏற்றினார்கள்? அத்துடன் ஏற்றப்பட்ட அந்த ஊசி தரக்குறைவான ஊசி என அறியமுடிகிறது.

போடப்பட்ட ஊசியின் பெயரோ அல்லது அது தொடர்பான விபரங்கள் எவையும் பதிவுகளில் இடம்பெறவில்லை.பிரேத பரிசோதனை அறிக்கையில் ஊசியின் தாக்கத்தினால் தான் எனது தங்கச்சி உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான எந்த சம்பவங்களும் இனி நடக்கக்கூடாது. எனது சகோதரிக்கு நீதி வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சுனாமியின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த சுனாமி பேபி!!

இலங்கையில்..

கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் கடந்துள்ளன. குறித்த பேரழிவில் சிக்குண்டு 35,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5000க்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில், சுனாமி பேபி என அழைக்கப்படும் அபிலாஷ் ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கு இன்று (26.12.2023) அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள் மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் பெற்றோருடன் இணைந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள க.பொ.த உயர்தரத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவித்தார்.

உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இலங்கைச் சிறுவன்!!

பாக்யராசா முரளிதரன்..

2023 ஆம் ஆண்டில் உலகின் தனித்துவமான நினைவாற்றல் கொண்ட மாணவராக புகழ்பெற்ற சோழன் உலக சாதனை புத்தகத்தில் இலங்கை சிறுவன் ஒருவன் இடம்பிடித்துள்ளான்.பலாங்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாக்யராசா முரளிதரன் எனும் ஒன்பது வயதுடைய மாணவரே இவ்வாறு சாதனைப் படைத்துள்ளார்.

குறித்த சிறுவன் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட சோழன் உலக சாதனை புத்தகத்தில் இந்த குழந்தை இடம்பெறுவது இதுவே முதல் முறை என்று சோழன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்.

உலக வரைபடத்தில் உள்ள நாணயங்கள், ஆட்சியாளர்களின் பெயர்கள், தலைநகரங்கள், மொழிகள், சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தொடர்பு கொள்ளும் திறன் போன்ற பகுதிகள் பற்றிய இந்த மாணவனின் இளம் வயதிலேயே அசாதாரண அறிவு மற்றும் நினைவாற்றலை மதிப்பீடு செய்வதன் மூலம் அந்த மொழிகளிலும், சர்வதேச பொது அறிவிலும் சோழன் அமைப்பாளர்கள் இந்த மாணவரை உலக சாதனை புத்தகத்தில் சேர்த்துள்ளனர்.

இந்த மதிப்பீட்டின் நோக்கம் ஆட்டிசம் குழந்தைகளைப் பற்றி பெற்றோருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாகும்.இந்த மாணவனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் சேர்ப்பதற்கான பரீட்சை பலாங்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் நிலத்துக்குள் கீழ் பதுக்கப்பட்டிருந்த சாராய போத்தல்கள் : அதிர்ச்சியில் பொலிஸார்!!

யாழில்..

நத்தார் பண்டிகை மற்றும் போயா தினத்தை முன்னிட் நாட்டில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற மூன்று இடங்கள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் கஸ்தூரியர் வீதி, கலட்டி சந்தி மற்றும் முலவை சந்திப் பகுதியில் நடாத்திய தேடுதலின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 117 கால் போத்தல்களும் 9 முழு சாராயப் போத்தல்களும் பொலிஸ் புலனாய்வாளர்களால் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது மண்ணுக்குள் குழி வெட்டி அதற்குள் சாராயப் போத்தல்களை வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்டவரும் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் பெரிய வெங்காயத்தின் விலை : 3 மாதங்களுக்கு நெருக்கடி!!

பெரிய வெங்காயத்தின் விலை..

இலங்கை சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 650 ரூபாவை தாண்டியுள்ளது. வெங்காய ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள இந்தியா, கடந்த டிசம்பர் 8ஆம் திகதி முதல் பெரிய வெங்காயம் ஏற்றுமதியை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதால் வெங்காய விலை உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை அமல்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் பெரிய வெங்காயம் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதையடுத்து விலையை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், இலங்கை, பங்களாதேஷ், மலேசியா, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் பெரிய வெங்காயத்தின் விலை பெருமளவு அதிகரித்துள்ளன.

இலங்கையின் நுகர்வோரின் வருடாந்தம் பெரிய வெங்காயத்தின் தேவை சுமார் 280,000 மெற்றிக் தொன்களாகும். இந்த நாட்டில் சராசரியாக பெரிய வெங்காய உற்பத்தி சுமார் 125,000 மெட்ரிக் தொன்களாகும்.

மீதமுள்ள தேவையை இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. மழை, உரத் தட்டுப்பாடு, உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கடந்த பருவத்தில் பெரிய வெங்காயச் செய்கையை கைவிட்டதால் 2023ஆம் ஆண்டு அறுவடை 7851 மெற்றிக் தொன்களாக குறைந்துள்ளது.

ஜனவரி முதல் பாரியளவில் அதிகரிக்கவுள்ள கையடக்க தொலைபேசி விலைகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

தொலைபேசி விலைகள்..

VAT வரி விலக்கு பட்டியலில் இருந்து கையடக்க தொலைபேசிகளை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் விலை அதிகரிப்பு காரணமாக சந்தையில் போலிப் பொருட்கள் அதிகரித்து வரி வருமானம் இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குறித்த விலை அதிகரிப்பு தொடர்பில் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஜனவரி 1, 2024 முதல் VAT 15% முதல் 18% ஆக ஒரே நேரத்தில் அதிகரிக்கப்படுவதால், கையடக்கத் தொலைபேசி தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.

இதனால் 10,000 க்கும் மேற்பட்ட நேரடி வேலை வாய்ப்புகள் ஆபத்தில் இருக்கும் என்று கையடக்க தொலைபேசி மற்றும் பாகங்கள் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

VAT வரி அதிகரிப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்ட போதிலும் நல்ல பதில் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக சந்தையில் போலிப் பொருட்கள் அதிகரித்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானத்தை இழக்கும் அபாயம் காணப்படுவதாக கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பலரின் கண்ணீருக்கு மத்தியில் யாழ் பல்கலை மாணவியின் இறுதிச்சடங்கு!!

யாழில்..

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இறுதி வருட கலைப்பீட மாணவி ஒருவர் கடந்த 23ம் திகதி (23.12.2023) திடீரென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சாயுடை, மாவிட்டபுரம் , தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் சுபீனா (வயது 25) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் நேற்று (25.12) நடைபெற்றது.

மாணவியின் இறுதி சடங்குகளில் பல்கலைக்கழக மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஊர் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீரால் அஞ்சலி செலுத்தினர்.

மாணவிக்கு கடந்த 17ஆம் திகதி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அங்கு கடந்த 22ஆம் திகதி குறித்த யுவதி திடீரென மயக்கமடைந்ததால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 11 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். யுவதி டெங்கு தொற்றினால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தபோதும், உடற்கூற்று பரிசோதனைகளின்படி அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை என்றும், இதனால் அவரது உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் மாணவியின் மரணம் அவரது குடுபத்தவருக்கும், மாணவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவியின் இறுதி சடங்கிஒல் பெருமளவானர்கள் கலந்துகொண்டு கண்ணீர் விட்டு கதறியழுதுள்ளமை துயரத்த்தைஏற்படுத்தியுள்ளது.

நத்தார் தினத்தில் காதலியை பார்க்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

புத்தளத்தில்..

புத்தளத்தில் தேவாயலத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நத்தார் வழிபாட்டின் போது தனது காதலியை சந்திப்பதற்காக தேவாலயத்திற்கு அருகில் நின்ற இளைஞனையும் அவரது நண்பரையும் முந்தலம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பத்தலுஓயா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்களே இன்று அதிகாலை ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர்கள் வந்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தேவாலயத்திற்கு அருகில் இரண்டு இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடுவதை, கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அவர்களை கைது செய்துள்ளனர். யுவதி ஒருவருடன் சுமார் 06 மாதங்களாக காதல் தொடர்பு இருப்பதாகவும், அவர் தேவாலயத்திற்கு வந்த நிலையில் அவரை சந்திப்பதற்காக தேவாலயத்திற்கு அருகில் வந்ததாகவும் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். சந்தேக நபரின் இந்த வாக்குமூலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக முந்தலம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் : பரிதாபமாக உயிரிழந்த 6 மாத பெண் குழந்தை!!

யாழில்..

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 6 மாத பெண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. கலாசாலை வீதி, திருநெல்வேலியைச் சேர்ந்த பிறந்து 6 மாதங்களேயான பிருந்தாபன் அர்ச்சனா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நேற்று முன்தினம் (22-12-2023) இரவு 10.00 மணியளவில் குழந்தை மூச்சு விட கஷ்டப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

யாழில்..

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி நேற்றைய தினம் (23-12-2023) உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த மாணவி நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். உயிரிழப்பு தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது, டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த மாணவியின் உடற்கூறு பகுதி மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழந்த மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.