கனடாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்கள் : சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி கனடாவின் ஒட்டாவா பகுதியில் இலங்கையை சேர்ந்த தாயும், அவரது நான்கு குழந்தைகளும் மற்றுமொரு இலங்கையரும் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான 19 வயதான இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா என்ற மாணவன் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் ஒட்டாவாவில் உள்ள நீதிமன்றத்தில் தொலைபேசி மூலம் சந்தேகநபர் முன்னிலையான போது ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர், தனது பெயர், பிறந்த திகதி மற்றும் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள திகதி ஆகியவற்றை மாத்திரம் தெரிவித்துள்ளார்.

மேலும்,சந்தேகநபரின் மனநிலை குறித்து விரிவான மதிப்பீடு செய்ய இன்னும் பல மாதங்கள் ஆகும் என அவரின் சட்டத்தரணி இவான் லிட்டில் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் – இறுதிக்கிரியை தொடர்பில் தகவல்!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் டேனியல் பாலாஜியின் (Daniel Balaji) கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. நடிகர் டேனியல் பாலாஜி நேற்று (29.3.2024) இரவு மாரடைப்பு காரணமாக காலமானார்.

தான் இறந்தாலும், தனது கண்கள் மூலம் இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக கண் தானம் செய்திருந்தார் டேனியல் பாலாஜி. அதன்படி, அவர் மறைவை அடுத்து அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

புரசைவாக்கத்தில் அவர் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் அங்கு வந்து கண்களை தானமாகப் பெற்றனர். இதையடுத்து “உயிரிழந்த பிறகும் அவர் மற்றவர்களுக்குப் பார்வையைத் தருகிறார்” என்று டேனியல் பாலாஜி குறித்து அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

டேனியல் பாலாஜியின் உடல் புரசைவாக்கத்தில் வரதம்மல் காலனியில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன், அமீர் ஆகியோர் டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை டேனியல் பாலாஜியின் உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்!!

குயின் விக்டோரியா என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து வந்த குறித்த கப்பலில் 1,812 சுற்றுலா பயணிகளும் 964 பணிக்குழாமினரும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே குறித்த கப்பலில் இலங்கையை வந்தடைந்துள்ளனர். அவர்கள் இன்றைய தினம் காலி, கண்டி மற்றும் பின்னவல ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அதிகரிக்கும் அடிப்படைச் சம்பளம்!!

ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சரவை முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வைப் பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில், தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட் ஊதியம் 12,500 ரூபாவிலிருந்து 17,500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட 3,500 ரூபாவை உள்ளடக்கியது, இதன் விளைவாக புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 21,000 ரூபாவாகும். கூடுதலாக, ஊழியர்களின் EDF மற்றும் EPF பலன்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களும் தமது சம்பள உயர்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதையடுத்து ஜனாதிபதியின் தலையீட்டை விரைவுபடுத்தியுள்ளனர்.

தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் சம்பள அதிகரிப்பு முன்மொழிவுகள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சு தீவிரமாக செயற்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.

ஒரு தலைக்காதல் வழக்கு… மாணவியை எரித்துக் கொன்ற காதலனுக்கு அதிரடி தண்டனை!!

தும்கா: ஒரு தலைக்காதலால் மாணவியை எரித்துக் கொன்ற காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜார்கண்ட் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி அங்கிதா சிங் (17) என்பவரை ஷாரூக் உசேன் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து உள்ளார்.

அவரது காதலை அந்த மாணவி ஏற்க மறுத்தார். ஆத்திரமடைந்த ஷாரூக், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி அங்கிதாவின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு, தூங்கிக்கொண்டிருந்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்.

பலத்த தீக்காயமடைந்த அங்கிதா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருதலைக் காதலன் ஷாரூக் உசேன் மற்றும் அவரது நண்பர் நயீம் அன்சாரி மீது போலீசார் கொலை, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கு ஜார்கண்ட் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் சந்திரா முன் விசாரணகை்கு வந்தது. 51 சாட்சிகள் மற்றும் ஆவணங்களை பரிசீலித்த நீதிமன்றம், 17 வயது சிறுமியை தீ வைத்து கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷாருக் உசேன், நயீம் அன்சாரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும், குற்றவாளிகளுக்கு தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அபராதத்தை செலுத்தாவிட்டால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி.. வீட்டிற்கே சென்று வெட்டி கொலை செய்த கணவன்!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள அனேகல் தாலுகா ஜிகானி நகரை சேர்ந்தவர் முபாரக் (28). இவரது மனைவி அர்பியா தாஜ் (24). இந்நிலையில் அர்பியா தாஜ் ஒரு மாதத்திற்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஒரு வாரத்தில் தாய் வீட்டிற்கு செல்வதாக மனைவி கூறிவிட்டு ஒரு மாதமாகியும் வீடு திரும்பாததால் முபாரக் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் அர்பியா தாஜ், கதவைப் பூட்டிவிட்டு, உங்களுடன் வீட்டிற்கு வரமாட்டேன் என்று முபாரக்கிடம் கூறினார். பலமுறை அழைத்தும் கதவை திறக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த முபாரக் கோடாரியால் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். தன்னுடன் வாழ மறுத்த மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அர்பியாவின் தாய் ஓடி வந்தார். அப்போது முபாரக் கதவை பூட்டிவிட்டு கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜிகானி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அர்பியா தாஜ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அருகில் முபாரக் ஆபத்தான நிலையில் கிடந்தார்.

உடனே போலீசார் அவரை மீட்டு ஜிகானியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அர்பியா தாஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அனேகல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 மகள்களையும் கொன்றுவிட்டு புகையிரதம் முன்பு பாய்ந்த தந்தை!!

தன்னுடைய 2 மகள்களையும் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு, தந்தையும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது கேரள மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டம் பயோலியைச் சேர்ந்தவர் சுமேஷ். இவருக்கு கோபிகா (15) ஜோதிகா(12) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இவரது மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்த நிலையில், மனைவியை இழந்த பின்னர், குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல் சுமேஷ் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரயில் தண்டவாளத்தில் நடுத்தர வயதுள்ள ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது அடையாளம் குறித்து விசாரித்ததில் அந்த நபர் பயோலி பகுதியை சேர்ந்த சுமேஷ் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் அவரது இரு மகள்கள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று காலை தனது இரு மகள்களையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, சுமேஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், குழந்தைகளை கொன்று விட்டு, சுமேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

தாங்க முடியாத பாலியல் தொல்லை.. மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சைதன்யா கல்லூரியில் விசாகா என்ற மாணவி பிடெக் படித்து வருகிறார். இவர் அங்குள்ள ரூபாஸ்ரீ மேடா பகுதியை சேர்ந்தவர்.

இந்நிலையில் நேற்று கல்லூரி வளாகத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக விகாஷா உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார்? என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சமீபத்தில் அங்குள்ள நாராயணா கல்லூரியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது தெரியவந்துள்ளது.

யாழ். வட்டுக்கோட்டை படுகொலை விவகாரம் : தொலைபேசி உரையாடல்களைப் பெற அனுமதி!!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வீடுக்குத் திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறைக் கும்பலொன்று கடத்திச் சென்றது.

பின்னர் கடத்திச் சென்ற இளைஞனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளதுடன், மனைவியை வீதியில் இறக்கி விட்டு சென்று இருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் இதுவரையில் 09 பேரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதிமன்றால் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, 09 சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற பொலிஸார் மன்றில் அனுமதி கோரினர். அதற்கு மன்று அனுமதித்தது.

அத்துடன் , கடற்படை முகாமிற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் கட்டுப்பட்டு தொகுதியை (DVR) இராசயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் பொலிஸார் மன்றில் அனுமதி கோரினர் அதற்கும் மன்று அனுமதித்தது.

அதேவேளை கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்ட 08ஆம் மற்றும் 09ஆம் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பு உட்படுத்தவும் பொலிஸார் அனுமதி கோரினர். அதன் பிரகாரம் எதிர்வரும் 04ஆம் திகதி அடையாள அணிவகுப்பு திகதியிட்ட மன்று , அன்றைய தினத்திற்கு வழக்கினையும் ஒத்திவைத்தது.

யாழில் திடீரென உயிரிழந்த குடும்பஸ்தர்.. பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (29.03.2024) இளவாலை வசந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில், குடும்பஸ்தர் ஒருவர் குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரு மாதங்களுக்கு முன்னர் அவர்களை விட்டு பிரிந்து வசந்தபுரம் பகுதியில் குடிசை ஒன்றை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் அவர் குடிசைக்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் புதிய கொலனி, கீரிமலை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஐயங்கன் சிவானந்தராஜா என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் அதிக மதுப் பாவனை காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் வெல்வோம் ஸ்ரீலங்கா நடமாடும் சேவை முன்னெடுப்பு!!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு “நானே ஆரம்பம் வெல்வோம் சிறிலங்கா ஸ்மார்ட் சூரன்களோடு” வவுனியாவிற்கு ஸ்மார்ட் எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் நடாத்தும் நடமாடும் சேவை வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இன்று (29.03.2024) இடம்பெற்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை பொறுப்பேற்றல், தொழில் வங்கியில் பதிவு செய்தல், வெளிநாடுகளில் பணிபுரிவோருக்கு உரிய நஷ்டஈடு/ சம்பளம் / காப்புறுதி தொடர்பான சேவைகள் , EPF/ETF தொடர்பான சேவைகள்,

தொழிற்துறை பாடநெறிகள் தொடர்பான பதிவு , தொழில்முனைவாளர்களுக்கு அபிவிருத்தி மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, உத்தேச தொழில்வாய்ப்புகள் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு, வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல் போன்ற பல சேவைகள் இவ் நடமாடும் சேவையூடாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பிரதம அதிதியாக கலந்து கொண்டமையுடன் அதிதிகளாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் , ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி அமைப்பாளர் ம.மயூரதன் உள்ளிட்டவர்களுடன்,

மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள், அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பொதுமக்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நடமாடும் சேவையில் முன்னெடுக்கப்படும் சேவைகளை நேரில் சென்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பார்வையிட்டமையுடன் வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

இந்த நடமாடும் சேவை வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் நாளைய தினமும் காலை 9.45மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் கணவன் வெளியில் சென்ற நிலையில் வீட்டிலிருந்த மனைவி படுகொலை!!

கடுவெல (Kaduwela), கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அஜந்தா என்ற 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது கணவர், மகள் மற்றும் மகன் ஆகியோர் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் பெண் தனியாக இருந்துள்ளார். இவரும் கடுவெல நகரில் பணிபுரிந்து வருகின்றார்.

வழமையாக காலை 11.00 மணியளவில் வேலைக்கு செல்வதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பெண்ணின் தலையின் பின்புறத்தில் ஒரு பெரிய காயம் மற்றும் அவரது முகத்தில் கீறல்கள் இருந்தன.

அவர் அணிந்திருந்த தங்க ஆபரணமும் காணாமல் போனதையும், வீட்டில் எதையோ தேடியதற்கான தடயங்களும் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், வீட்டில் திருடுவதற்காக புகுந்த யாரேனும் ஒருவர் தாக்கியதமையால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கையடக்க தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி ஊடாக அனுப்பப்படும் பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை!!

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பொதுமக்களின் தகவல்களை பெறும் மோசடிக்கு உள்ளாக்கிய சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.

பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தரவுகள் பெறப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தம்மபொல குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரம் 200 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

நிமோனியா தொற்றில் உயிரிழந்த நபர் : பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!!

நிமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் உயிரிழந்த நபரின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் போது நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் நேற்று (27) இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போதே நுரையீரலில் பல் காணப்பட்டதாக பலாங்கொடை அவசர மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்துள்ளார். பலாங்கொடை வலேபொட பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரின் பிரேதப் பரிசோதனையிலேயே இவ்வாறு பல் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர் என்றும், நீண்ட நாட்களாக நிமோனியா மற்றும் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சில வருடங்களுக்கு முன்னர் இருந்தே பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மரண விசாரணை அதிகாரி கூறியுள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர் தனது தனிப்பட்ட நலனில் அக்கறை செலுத்தவில்லை எனவும் பத்மேந்திர விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாவில் பலரின் மனதை கவர்ந்த நண்பர்களை பிரித்த அதிகாரிகள்!!

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி பலரின் மனதை கவர்ந்த பறவையையும் நாயையும் வனவிலங்கு துறை அதிகாரிகள் பிரித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் பெகியையும் மொலியையும் மீண்டும் சேர்த்துவைக்குமாறு கோரும் மனுவொன்றில் 50000க்கும் அதிகமானவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் இன்ஸ்டகிராமில் பிரபலமான மக்பை பறவையை வனவிலங்கு காப்பகத்தினர் அதனை வளர்த்தவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த பறவையை மீண்டும் அந்த குடும்பத்திடம் ஒப்படைக்கவேண்டும் என குயின்ல்ஸாந்து பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

குயின்ஸ்லாந்தை சேர்ந்த தம்பதியினர் மொலி என அழைக்கப்படும் மக்பையை குஞ்சுப்பருவத்தில் மீட்டெடுத்து வீட்டில் வளர்த்து வந்தனர் .

அந்த வீட்டில் உள்ள பெகி எனப்படும் புல்டெரியர் இன நாய்க்கும் மக்பைக்கும் இடையிலான பாசப்பிணைப்பு சமூக ஊடகள் மூலம் தெரியவந்தது. இதை தொடர்ந்து இஸ்டகிராமில் இரண்டு மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் மொலியையும் பெகியையும் பின்தொடர்கின்றனர்.

மொலியை வனவிலங்கு காப்பகத்தினர் பொறுப்பேற்றுள்ள நிலையில் அதனை குறிப்பிட்ட குடும்பத்தினரிடம் கையளிக்க வேண்டும் என குயின்ஸ்லாந்து பிரதமர் ஸ்டீவன் மைல்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறிய குழுவொன்று தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வந்ததால் மொலியை வனவிலங்கு காப்பகத்திடம் கையளித்துள்ளதாக அதனை வளர்த்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தான் எங்கு யாருடன் வசிக்கவேண்டும் என மக்பியே ஏன் தீர்மானிக்க முடியாது என நாங்கள் கேள்விஎழுப்புகின்றோம் என தம்பதியினர் சமூக ஊடகத்தில் பதிவிட்டு;ள்ளனர்.

சமூகத்தின் ஆர்வத்தை புரிந்துகொள்வதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் ஆனால் மக்பைக்கள் வீடுகளில் வளர்க்கப்படுபவவை அல்ல தற்காலிகமாக மாத்திரம் வீட்டில் வளர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் : விசாரணைகள் CID யிடம்!!

கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஹம்தி பஸ்லின் என்ற குழந்தை சிறுநீரக நோயினால் உயிரிழந்துள்ளதுடன், அவரின் பெற்றோர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொரளை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் சிறுநீரக கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் சத்திரசிகிச்சையை மேற்கொண்டதாக கூறப்படும் விசேட வைத்தியர் நவீன் விஜேகோன் தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அவரது இருப்பிடம் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன சம்பந்தப்பட்ட துறைகளால் காவல்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் உட்பட பல வைத்தியர்கள் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டதாக கூறப்படும் நுவான் ஹேரத் என்ற வைத்தியரும் தற்போது வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள இரண்டு வைத்தியர்களையும் இலங்கைக்கு வரவழைத்து சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும் பொரளை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.