சொத்து வரியை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை!!

சொத்து வரி..

2025ஆம் ஆண்டளவில் அரசாங்கத்தின் வருமான இலக்குகளை எட்டுவதற்கு அடுத்த வருடம் முதல் சொத்து வரியை நடைமுறைப்படுத்துவது மிகவும் கட்டாயமானது என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. நிதியத்தின் இலங்கைக்கு பொறுப்பான தலைவர் பீட்டர் போவர் இது குறித்து தெரிவித்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கு முன், நாட்டில் உள்ள அனைத்து சொத்துக்களையும் முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதற்கு பின்னரே அதற்கு வரி வசூலிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரி விதிக்கப்படும் சொத்தை முறையாக பதிவு செய்திருப்பது அவசியம் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் முடிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி அறிக்கைக்கமைய, இலங்கை எதிர்பார்த்த வரி வருவாய் இலக்குகளை இதுவரை எட்டாத காரணத்தால், சர்வதேச நாணய நிதியம் இதனைப் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

நாணய நிதி நிதியம் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட 290 மில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவான கடன் தொகையில் இதுவரை இரண்டு தவணைகளில் 670 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. மேலும் அடுத்த கடன் தவணைகளை அனுமதிக்கும் முன் அடுத்த மறுஆய்வு அடுத்த மார்ச் – ஏப்ரல் மாதங்களுக்கு இடையே செய்யப்பட உள்ளது.

2024இல் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் பெரும் நெருக்கடி!!

இலங்கையில்..

கடந்த வருடங்களில் மூன்று வேளை உணவு உட்கொண்ட மக்கள் தற்போது இரண்டு வேளைகள் உணவு உண்பதைப் போல, எதிர்வரும் ஆண்டில் ஒரு வேளை உணவினை மாத்திரம் உண்ணக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,2023ஆம் ஆண்டைவிடவும் 2024ஆம் ஆண்டு படு பயங்கரமான ஆண்டாக அமையப்போகின்றது. பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைப்போகும் ஆண்டாக அமையப்போகின்றது. மூன்று வேளை உணவு உட்கொண்ட மக்கள் தற்போது இருவேளைகள்தான் உண்கின்றனர். இந்நிலைமையும் அடுத்த ஆண்டு இல்லாமல்போகக்கூடும்.

எனவே, அரசு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். மக்கள் ஆணையுடன் ஆட்சியொன்றை ஏற்படுத்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை மீட்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் என்ன நடக்கின்றது? பொருட்களின் விலைகள் எல்லாம் எகிறிவிட்டன. மக்களால் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கள்வர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். விலைமனு கோரல்களில் கொள்ளைகள் இடம்பெறுகின்றன. எனவே, இந்நாட்டை மேலும் நாசமாக்காமல் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டை தொடர்பில் புதிய நடைமுறை : ஜனவரி முதல் மாற்றம்!!

டிஜிட்டல்..

டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான அடிப்படை விடயங்களை ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.இது தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நான்கு பில்லியன் ரூபாய் இந்திய நிதியத்துடன் வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் பயோமெட்ரிக் தகவல்களின் தரவுகள் அடங்கும் என குறிப்பிடப்படுகின்றது.முன்னதாக டிஜிட்டல் அடையாள அட்டை விண்ணப்பிப்பதில் 76 சுயவிபர தரவுகள் கோரப்பட்டிருந்தாலும், புதிய டிஜிட்டல் அட்டை பெற 6 தரவுகள் மட்டுமே தேவை.

அதற்கமைய, புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, ​​பெயர், முகவரி, பிறந்த திகதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கட்டாயம் வழங்க வேண்டும்.விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதன் மூலம், அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டையை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என குறிப்பிடப்படுகின்றது.

பிரித்தானியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கை இளைஞன் பரிதாபமாக பலி!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக சென்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரித்தானியா சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.ஓஷத ஜயசுந்தர என்ற 31 வயதுடைய இலங்கை இளைஞர் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. இவர் கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீதியில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான சொகுசுக் கார்!!

நானுஓயாவில்..

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று (16.12.2023) காலை இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி நானுஓயா ரதல்ல வீதியில் சென்ற சொகுசு காரே சீரற்ற காலநிலை காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடது பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துள்குள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சொகுசு காரில் பயணித்த கணவன், மனைவி இருவரும் எந்தவித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த நானுஓயா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் தொடரும் மழையால் பெருமளவானோர் பாதிப்பு!!

வவுனியாவில்..

தொடரும் மழை காரணமாக வவுனியா வடக்கில் 22 குடும்பங்களை சேர்ந்த 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று (16.12) இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, மாறாஇலுப்பை பகுதியில் 05 குடும்பங்களை சேர்ந்த 22 பேரும், சின்னடம்பன் பகுதியில் 09 குடும்பங்களை சேர்ந்த 35 பேரும் இடம்பெயர்ந்த நிலையில் இரு பொது மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நைனாமடு பகுதியில் 02 குடும்பங்களை சேர்ந்த 06 பேரும், நெடுங்கேணியில் 06 குடும்பங்களை சேர்ந்த 21 பேரும் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் பொருட்களின் விலைகள் 2 முறையில் அதிகரிக்கும்!!

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை..

ஜனவரி முதலாம் திகதி முதல் தற்போதுள்ள VAT அதிகரிப்பால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை இரண்டு வழிகளில் அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வு நிறுவனமான அட்வகாட்டா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஒட்டுமொத்த பணவீக்கம் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அரசாங்கம் கணித்துள்ளது. அதற்கமைய, VAT அதிகரிப்புடன் ஒப்பிடும்போது அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டண அதிகரிப்பு அதிகமாக உள்ளது.

மேலும் மருந்துகள், கோதுமை மாவு, குழந்தை பால் மா போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை. எனினும் பெற்றோல், டீசல் 60 ரூபாவினால் அதிகரிப்பதால், போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பினால் சில உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.

மின்சாரக் கட்டணத்திற்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், டீசல் மூலம் உற்பத்தி செய்யப்படும் போது மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒரு கோப்பை சுடுநீருக்கு 100 ரூபாய் : சர்ச்சையை ஏற்படுத்திய உணவகம்!!

இலங்கையில்..

இலங்கையில் ஒரு கோப்பை சுடுநீருக்கு 100 ரூபாய் வசூலிக்கும் கடை குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி உண்மையானதென உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டல் கட்டண ரசீது தேசிய நுகர்வோர் முன்னணியிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இது ஒன்று தான் தெரிந்த விடயமாக பேசப்படுகின்றது. மக்கள் அவசரத்திற்கு சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரை குடிக்கின்றார்கள். இப்படி ஒரு கோப்பை தண்ணீருக்கு கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது.

இது மிகப்பெரிய அநியாயம். இது போன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். இது தொடர்பாக நுகர்வோர் ஆணையகத்திடம் முறைப்பாடு செய்துள்ளோம். நுகர்வோர் சட்டத்தில் கூட இப்படி ஒரு தண்ணீருக்கு பணம் வசூலிக்க அதிகாரம் இல்லை. இதற்கு தொழிலதிபர்களை குறை சொல்ல முடியாது.

நாமெல்லாம் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம். மின் கட்டணம் விண்ணை முட்டும் அளவில் உள்ளது. அதனால் அனைவருக்கும் கடினமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இவ்வாறு செய்கின்றார்கள்.

எனினும் இதனை அனுமதிக்க முடியாது. இது ஒரு மோசமான முன்னுதாரணமாகும். இதை இங்கிருந்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனை ஏற்படும். சாமானியர்கள் பாதிக்கப்படுவார்கள். முறையான கட்டுப்பாடு இல்லாதது தான் இதற்கு காரணமாகும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதியில் பயணிகள் உயிருக்கு உலைவைக்கும் பேருந்து ஓட்டுநர் : வெளியான காணொளியால் அதிர்ச்சி!!

இலங்கையில்..

நாட்டில் வாகன விபத்துக்களால் பலர் அநியாயமக உயிரிழந்து வரும் நிலையில் தமிழர் பகுதியில் இ.போ.ச பேருந்து ஓட்டுநர் ஒருவர் தொலைபேசியில் மூழ்கியபடி பேருந்து ஓட்டும் கானொளி சமுக்கவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் (11.12) பகல் 12.30 மணியளவில் கிளிநொச்சி – வவுனியா வழியாக பயணத்தை மேற்கொள்ளும் பேரூந்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக் கொண்டு சாரதி பேரூந்தை ஓட்டிச் சென்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக சாரதிகளின் கவனயீனம் காரணமாக பல உயிர்கள் பலியாகி இருந்தனர்.

இந்த நிலையில், பொதுமக்கள் பொதுப்போக்குவரத்தை நம்பி பயணம் செய்கின்ற நிலையில், பயணிகளின் உயிரை பற்றி சிந்திக்காது ஓட்டுநரின் தொலைபேசியில் மூழ்கியபடி வாகனம் ஓட்டிச்சென்ற செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவருக்கு நேர்ந்த சோகம்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்று முன்தினம் (11.12.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

தருமபுரம் பகுதியில் இருந்து இராமநாதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், இராமநாதபுரம் பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டப்போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராமநாதபுரம் கல்மடு நகர் பகுதியைச் சேர்ந்த கனகரத்தினம் கோசிகன் (33 வயது) என்பரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்ததில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு மற்றும் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படும் அபாயம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மின் தடை..

நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை மின்னல் தாக்கம் காரணமாக திடீர் மின் தடை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த மின் விநியோக பாதையில் உடனடியான சீரமைப்பை மேற்கொள்வது உள்ளிட்ட சில பரிந்துரைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.இருப்பினும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படும் இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்பட்டமை தொடர்பில் ஆராய வௌியக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.மின்வெட்டு தொடர்பிலான விசாரணைகளுக்காக அரச புலனாய்வு சேவைப் பிரிவின் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நபர் : இப்படியும் நேர்மையான ஊழியர்கள்!!

அனுராதபுரத்தில்..

அனுராதபுரத்தில் திருட்டு, குற்றச்செயல்கள் அதிகம் இடம்பெறும் காலகட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் கூடிய பையையும் மடிக்கணினியையும் மறந்து விட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அதனை உரியவரிடமே திருப்பிக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தம்புள்ளையில் இருந்து அக்குறணை நோக்கி பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பயணி ஒருவரே பையை மறந்துவிட்டு இறங்கியுள்ளார்.

அந்த பையில் 5 லட்சம் ரூபாய் மற்றும் மடிக்கணினியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பணம் மற்றும் மடிக்கணினியின் அடையாளத்தை சரிபார்த்த பின்னர், பேருந்து சாரதி மற்றும் உதவியாளர் பொருட்களை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையை நெருங்கப்போகும் காற்று சுழற்சிகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

இலங்கையில்..

நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக மூத்த வானிலை ஆய்வாளர் சூரியகுமார் தெரிவித்துள்ளார். இலங்கையின் தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சி, மேற்கு நோக்கி இலங்கையின் தெற்கு பகுதியினூடாக நகர்ந்து வருவதனால் இந்த நிலைமை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காற்று சுழற்சியானது எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கைக்கு தெற்காக வந்து, குமரிக் கடல் வழியாக மாலைத்தீவு, இந்தியாவின் லட்சஷதீவுக்கு இடைப்பட்ட பகுதியின் ஊடாக அராபிய கடல் பிராந்தியத்திற்கு செல்லும்.

அதேவேளை எதிர்வரும் 18, 19ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கையை நெருங்கி, அது எதிர்வரும் 21, 22, 23ஆம் திகதியளவில் மன்னார் வளைகுடா ஊடாக அரபிக் கடல் பிராந்தியத்தினுள் நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாகவும் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மழை காணப்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாது, எதிர்வரும் நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் அந்தமான் கடல் பிராந்தியத்தில் தெற்கு சுமத்திரா தீவை ஒட்டி மேலும் ஒரு காற்று சுழற்சி வங்க கடல் பிராந்தியத்தில் உருவாகும்.

அது படிப்படியாக வலுவடைந்து எதிர்வரும் 26, 27ஆம் திகதியளவில் இலங்கையை நெருங்கி, தமிழ்நாட்டை நோக்கி செல்லும்.எனவே மேற்கூறப்பட்ட குறித்த காலப்பகுதிகளில் இலங்கையில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது, இந்த நிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

இலங்கையில்..

எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் இலங்கையில் விதிக்கப்படவுள்ள 18 சதவீத வட் வரி மூலம் நாட்டில் விலைவாசி பாரியளவில் உயர்வடையவுள்ளதாக இலங்கை பெட்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஜாதிக சேவக சங்கமய தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,பெறுமதி சேர் வரியான வட் வரியை விதித்த பின்னர், தற்போது 346 ரூபாயாக விற்கப்படும் ஒரு லீட்டர் பெட்ரோல் 62.28 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 408.28என்ற புதிய சில்லறை விலையில் விற்கப்படும்.

அதேநேரம் ஒரு லீட்டர் டீசல் 59.22 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலையாக 388.22 ஆக விற்பனை செய்யப்படும்.தற்போது, அரசாங்கம் சமூக பாதுகாப்பு வரி, மதுவரி, சுங்க வரி மற்றும் துறைமுக பாதுகாப்பு வரி என நான்கு வகையான வரிகளை வசூலிக்கிறது.

இந்தநிலையில் மின்சார கட்டணத்தில் வரி சேர்க்கப்படாது என அரசு கூறுகிறது. ஆனால், நாட்டின் மொத்த மின் உற்பத்திக்கு 40 சதவீதம் எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. எனவே டீசல் மீதான வட் வரி விதித்தப்பட்ட பின்னர், மின்சாரம் சரிசெய்தல் கட்டணத்திற்கு ஏற்ப மின்சாரக் கட்டணங்களும் நிச்சயமாக அதிகரிக்கும்.

மின்சாரம் சரிசெய்தல் கட்டணத்தை இணைத்து ஒரு சூத்திரத்தின்படி குடிநீர் கட்டணங்கள் வழங்கப்படும் என்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார்.எனவே டீசல் விலை 59.22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதன் பின்னர், நீர் கட்டணம் 30 வீதத்தால் அதிகரிக்கப்படும். இதேவேளை, உள்நாட்டு சமையல் எரிவாயுவிற்கும் வட் வரி விதிக்கப்படும்.

இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 680 ரூபாவுக்கும் அதிகமான விலை உயர்த்தப்படும்.எவ்வாறாயினும், ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரியை அதிகரித்து, மக்களை நரகத்தில் தள்ளும் நிலைக்கு ராஜபக்சர்கள் கொண்டுசென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இரு பாடசாலைகள் உடைக்கப்பட்டு திருட்டு!!

வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் இரு பாடசாலைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள அல் அக்ஸா வித்தியாலயம் மற்றும் ஆயிசா வித்தியாலயம் என்பவற்றுக்குள் நுழைந்த திருடர்கள் பாடசாலை கதவுகளை உடைத்துள்ளதுடன், பாடசாலையில் இருந்த மோட்டர்கள், மின்விசிகள் என்பவற்றையும் கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தால் பூவரன்குளம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

 

வவுனியா பிரதேச செயலக கலாநேத்ரா விருது தெரிவுகள் துறைசார்ந்த நிபுணர்கள் இன்றி இடம்பெற்றுள்ளன : கலைஞர்கள் குற்றச்சாட்டு!!

2023ம் ஆண்டுக்கான வவுனியா பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் கலாநேத்திரா விருது தெரிவுகளில் துறைசார்ந்த நிபுணர்கள் இன்றி இடம்பெற்றுள்ளதாக கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

கலாநேத்ரா விருதானது நாடக எழுத்துரு, கீழைத்தேச இசை, மேலைத்தேய இசை, பரதம், குறும்படம், ஊடகம், மரபு இசை உட்பட 18 துறைகளிற்கு இவ்விருது வழங்கப்பட்டவுள்ளது.

மேலும் இவ் 18 விருதுகளிற்கும் ஐந்து பேர் கொண்ட துறை சார்ந்த நிபுணர்களினால் மேற்கொள்ளப்படும் என இவ் விருதுகளிற்கான விண்ணப்பகோரலின் போது வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசனால் அறிவிக்கப்பட்ட போதும் அவ்வாறு இடம்பெறவில்லை என்று கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவ்வாறான தெரிவிக்குழுவினால், திறமையான பல கலைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசனிடம் கேட்ட போது,

தெரிவுக்குழுவில் துறைசார்ந்த யாரையும் நாம் தெரிவுசெய்வது இல்லை. ஓவ்வொரு துறைக்கும் தனி தனியாக நபர்கள் இல்லை என்றாலும் கலைத்துறையில் அனுபவம்வாய்ந்த நபர்களே உள்ளனர். மேலும் சான்றிதழ்களையும், விருதுகளையும் வைத்தே விருதுகள் வழங்கப்படுகின்றது என தெரிவித்தார்.