வவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கையை கடுப்படுத்த மாநகரசபை நடவடிக்கை!!

வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகரசபை நேற்று முன்னெடுத்திருந்தது.

நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களை கட்டியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களிற்கு முன்பாக நடைபாதையை தடை செய்யும் முகமாக கொட்டகை அமைத்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், வீதியோரங்களிலும் பொதுமக்களிற்கு இடையூறு ஏற்படும் வகையில் அங்காடி வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதுடன், விபத்துக்களும் ஏற்படும் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு மாநகர சபையினரால் நடைபாதை மற்றும் வீதியோரங்களை ஆக்கிரமித்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் கொட்டகைகள் மற்றும் பொருட்களை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

மாநகர ஆணையாளரின் உத்தரவுக்கமைய வருமானவரி பரிசோதகர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், உட்பட உத்தியோகத்தர்கள் இச் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியாவில் மீண்டும் மூடப்பட்ட பீட்சா உணவகம் : மாநகரசபை தொடர் நடவடிக்கை!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள சர்வதேச நிறுவனத்தின் பீட்சா உணவகம் இரண்டாவது தடவையாகவும் வவுனியா மாநகரபையினால் மூடப்பட்டுள்ளது.

உணவகம் அமைந்துள்ள குறித்த கட்டிடம் அனுமதிப்பத்திரத்திற்கு முரணாக அமைக்கப்பட்டுள்ளது, குடிபுகு சான்றிதழ் இன்மை, சுற்றுச்சூழல் உரிமம், வியாபார உரிமம் இன்மை என பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி கடந்த 2024.12.05 அன்று வவுனியா மாநகரசபையினால் உணவகத்தினை மூடி அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் பல மாதங்களாக இயங்காத நிலையில் காணப்பட்ட இவ் பிரபல பீட்சா உணவகம் கடந்த இரு வாரத்திற்கு முன்பாக மீண்டும் வியாபாரத்தினை ஆரம்பித்த சமயத்தில் வவுனியா மாநகரசபை ஆணையாளர் சாந்தசீலனால் மீண்டும் அறிவித்தல் ஒட்டப்பட்டு உணவகம் மூடப்பட்டுள்ளது.

1982ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க மற்றும் 1984ஆம் ஆண்டின் 44ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் திருத்தம் செய்யப்பட்ட 1978ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் குடிபுக சான்றிதழ் பெறப்படாமல் இயக்கப்படுவதாக தெரிவித்து குறித்த வர்த்தக நிலையத்தின் இரு பிரதான வாயில்களும் திறக்க முடியாத வண்ணம் வாயிலில் இவ் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் கிராம சேவையாரிடம் 25000 ரூபா கொடுப்பனவு கோரி கடமைக்கு இடையூறு : ஒருவர் விளக்கமறியலில்!!

வவுனியா நகரம் வடக்கு கிராம அலுவலகத்திற்கு கிராம சேவையாளரிடம் 25000 ரூபா கொடுப்பனவு கோரி கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

‘டித்வா’ புயலுக்கு பின்னர் வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவு கிராம சேவையாளர்களுடாக வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவிலும் இவ் கொடுப்பனவுகளை கிராம சேவையாளர்கள் ஊடாக வழங்கி வருகின்றனர்.

வவுனியா நகரம் வடக்கு கிராம அலுவலகத்திற்கு சென்ற நபரொருவர் தனக்கு 25,000 ரூபா கொடுப்பனவு தர வேண்டுமென கிராம சேவையாளரின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் முகமாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் செயற்பட்டதாக தெரிவித்து குறித்த நபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

கிராம சேவையாளரின் முறைப்பாட்டிற்கமைய கைது செய்யப்பட்ட குறித்த நபர் பொலிஸாரினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சமயத்தில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்

தென்னிலங்கையில் பேருந்து விபத்து : 30 பேர் காயம் : சாரதி தப்பியோட்டம்!!

தென்னிலங்கையில் சம்பவித்த பேருந்து விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், அதன் சாரதி தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை-பெலியத்த பிரதான வீதியில் ஹந்தபன்கொடெல்ல பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வீரகெட்டிய பகுதியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற டிப்பர் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.

டிப்பர் லொறியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களை உடனடியாக திக்வெல்ல மற்றும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியுண்டமையினால் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் தப்பியோடிய பேருந்தின் சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த ஈழத்தமிழ்ச் சிறுமி!!

டுபாயில் நடைபெற்ற ஏழாவது Roll ball உலகக் கிண்ண போட்டியில் பிரான்ஸின் அணியின் சார்பில் ஈழத்தமிழ் சிறுமி ஒருவர் பங்கேற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பரிஸ் – பொன்டியில் வசிக்கும் 15 வயதான சானுக்கா ஜெயமன் என்ற சிறுமியே இந்த பெருமையை பெற்றுள்ளார்.

மன்னாரை சேர்ந்த குடும்பத்தை பின்புலமாக கொண்ட சானுக்கா Roll ball போட்டியில் பிரான்ஸ் அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதற்கமைய கடந்த 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையில் நடைபெற்று சுற்றுத்தொடரில் பிரான்ஸ் அணி சார்பாக அவர் விளையாடியுள்ளார். மன்னாரில் வசித்த காலத்தில் முறையான பயிற்சிகளை பெற்ற சானுக்கா, பிரான்ஸிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பிரான்ஸ் வந்து குறுகிய காலத்திற்குள் France Roll ball அணியொன்றில் விளையாடும் வாய்ப்பினை அவர் பெற்றுள்ளார்.

கோர விபத்தில் தாயும் பிள்ளைகளும் பலி – காயங்களுடன் உயிர் தப்பிய தந்தை!!

தெஹியத்தகண்டிய-மஹியங்கனை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

தந்தை மட்டும் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், ஏனையவர்கள் ஒன்றாகவே உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 17ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் தாயும் பிள்ளையும் ஸ்தலத்தில் பலியானதுடன், மற்றுமொரு பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குடும்பமாக முச்சக்கர வண்டியில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த சாரதியான தந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் டிஸ்னா ஐரங்கனி என்ற இளம் தாயும் 10 வயதான பிம்சார சதேவ் அபேவர்தன, 4 வயதான செத்மினா டின்ஷான் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரிகைகள் ஒன்றாக நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த மாணவன், புலமைப்பரிசில் தேர்வில் 163 மதிப்பெண்களைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்த திறமையானவர் என பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மாணவனுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக நாம் எண்ணியிருந்த நிலையில், இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் கவலை வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்தில் உலகம் அழியுமாம் : அதிர்ச்சியை கிளப்பிய தீர்க்கதரிசி!!

உலகமெங்கும் உள்ள மக்கள் நாளை கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் நிலையில் நாளை ராட்சச வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போகிறார் என தன்னைத்தானே தீர்க்கதரிசி என சொல்லிக் கொள்ளும் கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா (eboh noah)என்பவர் பகீர் தகவலை கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகளிலும் அவ்வப்போது ஏற்பட்டும் இயற்கை பேரழிவுகள் சுனாமி, தீ பிடிப்பது, மழை வெள்ளத்தால் மக்கள் மடிவது, மண் சரிவு ஏற்பட்டு மக்கள் இறப்பது என பல இயற்கை பேரழிவுகளால் மக்கள் உயிரிழப்பு ஏற்படும்.

அவற்றில் இருந்து மக்களை பாதுகாக்கலாமே தவிர நடப்பதை தடுக்க முடியாது. அதேசமயம் இன்னமும் இயற்கை பேரழிவுகளை முழுதாக கணிக்கும் அளவுக்கு உலக விஞ்ஞானமும் முன்னேறவில்லை.

ஒருபக்கம் உலக பேரழிவுகளை கணிப்பதாக சில தீர்க்கதரிசிகளும் உலக நாடுகளில் இருக்கிறார்கள். பல்கேரிய தீர்க்கதரி பாவா வாங்கா கணிப்புக்கள் உலகளவில் அதிகம் மக்களால் நம்பப்படுகின்றது.

இந்த வருடம் சுனாமி வரும், இந்த வருடம் மழை வெள்ளத்தில் மக்கள் இறந்து போவார்கள், இந்த வருடம் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும், இந்த வருடம் ஒரு முக்கிய அரசியல் தலைவர் இறந்து போவார் என்றெல்லாம் அவர்கள் ஜோதிடம் சொல்வார்கள்.

அதில் ஆச்சரியப்படும் வகையில் அவற்றில் ஒரு சில விஷயங்கள் நிஜத்தில் நடப்பதும் உண்டு. அப்படி நடக்கும் போது அவர்களை கடவுளாக சிலர் வணங்குகி அவர்களை பின்பற்றுகிறார்கள்.

இவ்வாறான நிலையில் தான் கிறிஸ்துமஸ் தினமான நாளை ராட்சச வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போகிறார் என கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா என்பவர் கூறியுள்ளார்.

அழிவுக்குப் பின் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போல 8 நோவா பேழைகளை கட்ட கடவுள் தன்னை பணியமர்த்தியிருப்பதாகவும் அவர் கூறியதால் அவரை பின்தொடர்பவர்கள் தங்களை சொத்துக்களை விற்று அவருக்கு பணங்களை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமி : தோழியின் உடலை சுமந்துசென்ற மாணவிகள்!!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியொருவர் உயிரிழந்துள்ளமை மருத்துவமனையின் தவறு என்றும் சிறுமி உயிரிழப்பிற்கு சரியான நீதிவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு சிலாவத்தையில் கடந்த 20.12.2025 அன்று உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட 12 அகவை சிறுமி ஒருவர் 21.12.2025 அன்று உயிரிழந்துள்ளார்.

எனவே, இந்த சிறுமி உயிரிழப்புக்கு நீதியான விசாரணை தீர்வு வழங்கப்படவேண்டும் என சிலாவத்தை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இறந்த சிறுமிக்கு ஒரு நீதியான தீர்வு கிடைக்கவேண்டும் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் பிள்ளைகளுக்கு இதேமாதிரி எதிர்காலத்தில் நடக்கக்கூடாது.

போரில் அடிபட்டு இறந்துவிட்ட நிலையில் இப்போது ஒவ்வொரு உயிராக வளர்த்துக்கொண்டிருக்கின்றோம். கவனயீனத்தினால் பிள்ளைகள் செத்துக்கொண்டிருப்பார்களானால் இதனை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம்.

இதற்கான தீர்வினை மருத்துவமனை அதிகாரிகள் தரவேண்டும் தவறும் பட்சத்தில் சிலாவத்தை மக்கள் யார் என்பதை இந்த அரசாங்கத்திற்கு காட்டிக்கொள்வோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் குறித்த சிறுமியின் இறுதி நிகழ்வுகள் (24) இன்று சிலாவத்தை பகுதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

பெருமளவான மக்கள்,பாடசாலை மாணவர்கள் கண்ணீர்மல்க சிறுமியின் உடல் வீதிவழியாக பாடசாலைமாணவிகள் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் காவிச்சென்று சிலாவத்தை தமிழ்வித்தியாலயம் மாணவி கல்விகற்ற பாடசாலைக்கு முன்பாக நின்று அஞ்சலி செய்தபின்னர் உடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தரமற்ற மருந்தால் பறிபோன உயிர் : மனைவியின் மரணத்திற்கு நீதிகோரும் கணவர்!!

கொழும்பு தொற்று நோய்கள் நிறுவனம் (IDH) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் தாயான ஷானிகா சமரபால (37)வின் மரணத்துக்கு தரமற்ற மருந்துகளே காரணம் என அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.

டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளம் தாயார் 11 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் பிள்ளைகள் நிர்க்கதியாகியுள்ளனர்.

இந்நிலையில் தனது மனைவியின் மரணத்திற்கு நீதிகோரி நேற்று (23.12.2025) அதுருகிரிய பொலிஸில் கணவர் முறைப்பாடளித்தார். இறந்த பெண்ணின் கணவர், ஹோமாகம, ஹபரகடாவைச் சேர்ந்த பி. சானக மதுசங்க கூறுகையில்,

டெங்கு காய்ச்சலுக்காக தனது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட மருந்து வழங்கப்பட்ட உடனேயே தனது மனைவியின் இதயம் நின்றுவிட்டது என்றும், அவரது இதயம் சுமார் ஆறு முறை நின்றாலும், சிகிச்சை அளிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் இயல்பு நிலைக்குத் திரும்பிய போதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சம்பவத்திற்கான காரணத்தை மருத்துவர்களால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், இந்த விஷயத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் மதுசங்க கூறினார்.

“நான் என்ன செய்தாலும், இப்போது எனக்கு மனைவி இல்லை. என் குழந்தைகளுக்கு அம்மா இல்லை. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இளம் மனைவியை இழந்து வாடும் கணவர் வலியுறுத்தினார்.

முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து : குழந்தை உட்பட மூவர் காயம்!!

காலி – பெரெலிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!!

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் ஓபநாயக்க ஹுனுவல பகுதியில், இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி ஓடையில் விழுந்ததில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு சம்பவித்த விபத்தில் மத்தீத மந்தினு என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை நேற்று கஹவத்தை ஆதார மருத்துவமனையில் நடைபெற்றது. விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மண்சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்தோர் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி : எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!!

கண்டி, அங்கும்புர – கல்கந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக ஆட்கள் எவரும் இன்றி இருந்த வீடொன்றிலிருந்து, அடையாளம் காண முடியாத அளவிற்கு எரியுண்ட நிலையில் நபர் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த உடலம் நேற்றையதினம் (23.12.2025) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டின் உரிமையாளர்கள் அந்த பகுதியில் நிலவிய மண்சரிவு அபாயம் காரணமாக, சில நாட்களுக்கு முன்னர் வீட்டைப் பூட்டிவிட்டு நீர்கொழும்பு பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

நேற்றுமுன்தினம்(22) காலை வீட்டின் அருகே வசிக்கும் உறவினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், உரிமையாளர்கள் மதியம் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.

இதன்போது, வீட்டின் உட்புறத்தில் அடையாளம் காண முடியாத நிலையில் மனித உடலமொன்று எரிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்கும்புர பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த அங்கும்புர பொலிஸார் உடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழிலிருந்து இன்று ஓட்டப் பயணத்தை தொடங்கிய ஹொங்காங் கிரிக்கெட் வீரர்!!

புற்றுநோயில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக நிதி திரட்டுவதற்காக இலங்கையின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, முன்னாள் ஹொங்காங் கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா ஓட்ட பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிதி திரட்டும் முயற்சியில், இவர் இலங்கை முழுவதும் ஓட்ட பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

குறித்த பயணமானது, இன்று (24.12.2025), யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனையிலிருந்து ஆரம்பித்து, டிசம்பர் 30ஆம் திகதி அன்று மாத்தறையில் உள்ள தேவுந்தரா முனையில் முடிவடையும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஓட்ட பயணமானது, 574 கிலோமீட்டர் (356.7 மைல்) வரையானது என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அவரது உடல் மற்றும் மனம் கடுமையான சோர்வினை எதிர் கொள்ளும் எனவே, ஒரு நாளைக்கு சுமார் 100 கிலோமீட்டர் ஓட அவர் திட்டமிட்டுள்ளார்.

ராகுல் சர்மா, இதற்கு முன்பு முயற்சி செய்திடாத ஒரு சவாலை ஏற்க ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உடற்பயிற்சி உடலியல் நிபுணராக பணிபுரியும் அவர், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஹொங்காங்கின் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினார்.

இந்நிலையில், குழந்தை பருவ புற்றுநோயைக் குணப்படுத்த ஆராய்ச்சி நடத்தும் சிட்னியை தளமாகக் கொண்ட குழந்தைகள் புற்றுநோய் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்கே அவர் இந்த ஓட்ட பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

அதன்படி, இந்த நல்ல நோக்கத்திற்காக குறைந்தது 20,000 அவுஸ்திரேலிய டொலர்களை (தோராயமாக 13,100 அமெரிக்க டொலர்கள்) திரட்டுவதே அவரது இலக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் அதிரடி விலையேற்றம் – புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை!!

கொழும்பு தங்கச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (24.12.2025) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கப் பவுன் (8 கிராம்) ஒன்றின் விலை இன்று 354,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

நேற்று (23) இதன் விலை 352,000 ரூபாவாகக் காணப்பட்டது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று 2,000 ரூபாவினால் விலை அதிகரித்துள்ளது.

அதேபோல, 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்று ரூ. 327,500 ஆக பதிவாகியுள்ளது. நேற்று இதன் விலை சுமார் ரூ. 325,600 ஆகக் காணப்பட்டது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4500 அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியை பதிவு செய்துள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

வெனிசுலாவில் நிலவி வரும் தீவிர அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் ஆகியவை இந்த அதிரடி விலையேற்றத்திற்கு முதன்மையான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

உலகளாவிய ரீதியில் நிலவும் இத்தகைய பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழலால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெனிசுலாவில் நிலவும் போர் பதற்றங்கள் உலக சந்தையில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை மீண்டும் குறைக்கக்கூடும் என்ற தகவல்கள் தங்கத்தின் மதிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விலை உயர்வு உலக நாடுகள் பலவற்றிலும் ஆபரணத் தங்கத்தின் விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்பாட் கோல்ட் XAU ஒரு அவுன்ஸ் 4,391.92 டொலர் ஆக 1.2வீதம் உயர்ந்து 4,391.92 டொலராக நேற்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

விவாகரத்து கேட்ட மனைவியை வீதியில் சுட்டுக்கொன்ற கணவன்!!

இந்தியாவின் கர்நாடகாவில் விவாகரத்து கேட்ட மனைவியை, சாலையில் வைத்து கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த 39 வயதான புவனேஷ்வரி என்பவர் பெங்களுருவில் வங்கி மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் பாலமுருகன் (சேலம் மாவட்டம்) ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

புவனேஷ்வரி கணவர் பாலமுருகனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாலமுருகன் வேலை முடிந்து வீடு திரும்பிய மனைவி புவனேஷ்வரியை சாலையில் வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனையடுத்து கையில் துப்பாக்கியுடன் பாலமுருகன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். படுகாயமடைந்த புவனேஷ்வரி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது உடலைக் கைப்பற்றிய பொலிஸார், தமிழ்நாட்டில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

வவுனியா மடுக்கந்தபகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, அதே இடத்தை சேர்ந்த 32 வயதான ஒருவரை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கஞ்சாசெடியும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Screenshot
Screenshot
Screenshot
Screenshot