காதலியை சந்தித்து விட்டு திரும்பிய இளைஞன் பரிதாபமாக பலி!!

கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுனுவில, கண்டிரிப்புவ பகுதியில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டுள்ளது. கொச்சிக்கடை, மனவேரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய திருமணமாகாத செவன் எடம்பேல என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் இறந்த இளைஞர் காதல் உறவில் இருந்ததாகவும், தனது காதலியைச் சந்தித்துவிட்டு திரும்பி சென்ற போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரயிலில் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞன், 119 சுவசேரிய அம்புலன்ஸில் லுனுவில பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டாரா அல்லது விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மாரவில ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையை மரண விசாரணை அதிகாரி நிரோஷன் குணசேகர நடத்த உள்ளார்.

தெற்காசியாவின் அதிக செலவுமிக்க நாடாக மாறிய இலங்கை!!

இலங்கை , தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தனி ஒரு நபரின் வாழ்க்கைச் செலவு வாடகையைத் தவிர்த்து 506 டொலர் அல்லது 153,899 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு புள்ளி விபர வலைத்தளமான Numbeo இன் தரவுகளை மையப்படுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில், மாலைதீவு ஒரு நபருக்கு மாதம் 840.4 அமெரிக்க டொலர் செலவுடன் மிகவும் விலையுயர்ந்த நாடாகக் கருதப்படுகிறது.

Numbeo இணையதளத்தின்படி, கொழும்பு நகரில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, வாடகை நீங்கலாக, சௌகரியமாக வாழ மாதாந்தம் ரூபா 570,997 செலவாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தச் செலவில் குழந்தைப் பராமரிப்பு, மளிகைப் பொருட்கள், பொழுதுபோக்கு, உணவகச் செலவுகள், பாடசாலைக் கட்டணம், வீட்டுச் செலவுகள் மற்றும் வாகனச் செலவுகள் போன்றவை அடங்கும்.

அதிக வரிகள் மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் சுமையுடன் உள்ள நிலையில், மத்திய வங்கியின் ‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2024’ சில முக்கிய விடயங்களைக் குறிப்பிடுகிறது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில், சராசரி மாதாந்த குடும்ப நுகர்வுச் செலவு 2023 இல் ரூபா 103,383 ஆக இருந்தது, 2024 இல் 1.6 வீதமாக அதிகரித்து ரூபா 105,063 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், 2022 இல் (2021 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 74.9 வீத அதிகரிப்பு மற்றும் 2023 இல் (2022 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 16.5 வீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதைக் காட்டுகிறது.

இத்தகைய சூழ்நிலைகளில், குடும்பங்கள் தங்கள் செலவுகளைச் சமாளிப்பதற்கு எதிர்மறையான சமாளிப்பு வழிகளை நாட வேண்டியுள்ளது.

மேலும், மத்திய வங்கியின் 2024 செப்டம்பர் 18 முதல் 2025 செப்டம்பர் 18 வரையிலான தரவுகளின்படி, பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒன்பது மரக்கறிகளின் ஒரு கிலோகிராம் சராசரி விலை ரூபா 225 இலிருந்து ரூபா 321.10 ஆக அதிகரித்துள்ளது.

இது ஒட்டுமொத்தமாக 42.7 வீத உயர்வாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென்னந்தோப்பில் சிதைவடைந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

அம்பாந்தோட்டையில் பெலியத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகுலுகமுவ, தெத்துவாவெல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று வியாழக்கிழமை (30.10.2025) காலை சிதைவடைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞன் கடந்த 19 ஆம் திகதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் 11 நாட்களாக வீடு திரும்பாமல் இருப்பதாக பெலியத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னந்தோப்பு உரிமையாளர் சடலத்தை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மோட்டார் சைக்கிள் நாகுலுகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் – பேரூந்து மோதி விபத்து!!

அநுராதபுரம் – கற்குளம் வீதியில் 120ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (30.10.2025) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் பஸ் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோர விபத்தில் ஒருவர் பலி : கார் சாரதி கைது!!

கம்பஹாவில் உடுகம்பொல – கொட்டுகொட வீதியில் கெஹெல்பத்தர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (31.10.2025) காலை 06 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் இருந்த பாதசாரி மோதி பின்னர் அருகிலிருந்த கடை மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெஹெல்பத்தர பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து காரின் சாரதியான இளைஞன் ஒருவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விபத்தின் போது காரில் இருந்த சாரதியின் தாயும் சாகோதரியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் கம்பஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புகையிரதத்துடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் பலி!!

கஹவ மற்றும் அக்குரல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (31.10.2025) காலை 09.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கவனக்குறைவாக செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறைச்சிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கால்வாயில் கவிழ்ந்து கார் விபத்து : இருவர் காயம்!!

மாலம்பே, அரங்கல பிரதேசத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (29.10.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது காரில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து!!

திருகோணமலை உட்துறைமுக வீதியில் இன்று (30.10.2025) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் – பட்டா – மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்களே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து, மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞன் ஒருவரை கொடூரமாக கொலை செய்த பெண்கள்!!

மொனராகலை பிரதேசத்தில் காதலனை தாக்கி வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் காதலியும், அவரது இரண்டு சகோதரிகள் மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

29, 32 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்களும், 25 வயதுடைய ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக ஒருவர் விஷம் குடித்து மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கினர்.

பிரேத பரிசோதனை போது அது திட்டமிட்ட கொலை என்று தெரியவந்ததாகவும் வலுக்கட்டாயமாக விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

செவ்வந்தியின் பின்னணியில் செயற்பட்ட மற்றுமொரு பெண் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்ய உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞர் தமாரா, கெஹல்பத்தர பத்மேவின் நண்பரான தருன் என்ற பாதாள உலகக் குற்றவாளியின் தலைமையில் செயற்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சஞ்சீவவைக் கொல்ல துப்பாக்கியை மறைப்பதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டப் புத்தகத்தின இரண்டு பிரதிகளை இஷாரா செவ்வந்திக்கு இந்த வழக்கறிஞர் வழங்கியது தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர் இஷாரா செவ்வந்திக்கு போலி வழக்கறிஞர் அடையாள அட்டை, வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்ட வாகன நுழைவு அனுமதி மற்றும் வழக்கறிஞர்களின் உடைகளில் பொருத்தப்படும் 2 டைகளையும் வழங்கியது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கெஹல்பத்தர பத்மேவுக்கும் அவரது நெருங்கிய ஒருவரான தருனுக்கும் இடையே சிறிது காலமாக உறவுகளைப் பேணி வந்துள்ளார். பத்மேவின் ஆலோசனையின் பேரில், இந்த வழக்கறிஞர் சஞ்சீவவின் கொலைக்கு உதவ முன்வந்துள்ளார்.

தருனின் ஆலோசனையின் பேரில், இந்த வழக்கறிஞர் இஷாரா செவ்வந்தியை சந்தித்து சஞ்சீவவின் கொலைக்குத் தேவையான வசதிகளை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, சஞ்சீவவின் கொலைக்கான துப்பாக்கியை நீதிமன்றத்திற்கு இரகசியமாக எடுத்துச் செல்ல குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 2 பிரதிகள் வழங்கப்பட்டுள்ளன.

சஞ்சீவ கொலைக்கான துப்பாக்கியை மறைப்பதற்காக கொலையாளி இந்த பிரதிகளில் ஒன்றின் உள் பக்கங்களை வெட்டி எடுத்துள்ளார்.

மேலும், நீதிமன்றத்திற்குள் நுழைவதற்காக வழக்கறிஞர்கள் சங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை போலியாக உருவாக்க இஷாரா செவ்வந்தி ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனம் நுழைய வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்ட வாகன நுழைவு அனுமதியையும் இந்த வழக்கறிஞர் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கொலையை செய்த கமாண்டோ சாலிந்து வழக்கறிஞர் சீருடை அணிய தேவையான இரண்டு டைகளையும் வழக்கறிஞர் செவ்வந்திக்கு வழங்கியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சஞ்சீவ கொலைக்கு உதவிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இஷாராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கறிஞர் பற்றிய தகவல்கள் வெளியாகின.

அதற்கமைய, நேற்று முன்தினம் இரவு கடவத்தை பகுதியில் நடந்த சோதனையின் போது விசாரணை அதிகாரிகள் இந்த வழக்கறிஞரை கைது செய்ய முடிந்தது.

குற்றப் புலனாய்வுத் துறை இது தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகிறது.

பத்மே மற்றும் பாதாள உலகக் கும்பல் டுபாயில் இருந்தபோது, ​​பேலியகொட குற்றப் பிரிவின் அதிகாரி லிண்டன் சில்வாவை மிரட்டி வெளியிட்ட குரல் பதிவு சமீபத்திய நாட்களில் பரவியது.

அந்த பதிவில், லிண்டனை திட்டி கொலை மிரட்டல் விடுத்தது தருன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பத்மே மற்றும் அவரது கும்பல் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டபோது தருன் டுபாயில் இருந்ததுடன், அவர் இன்னமும் டுபாயில் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தனிப்பட்ட பாதுகாப்புக்கான ஆயுதம் கோரும் அர்ச்சுனா எம்.பி!!

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள் (pepper spray) மற்றும் மிளகு தோட்டாக்களை கொண்டு வர அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரிவால்வர் வகையிலான இந்த உபகரணம் நீண்ட தூரம் மிளகை ஸ்பிரே செய்யக்க கூடியதாகும் என அதன் தன்மையை குறிப்பிட்டு தான் கொள்வனவு செய்த இதை அனுமதிக்குமாறு கோரி அக்டோபர் 18 ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் வீரசூரியவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், இலங்கை சுங்க விதிமுறைகளின்படி இதுபோன்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன் அங்கீகாரம் தேவை என்பதை வாங்கும் நேரத்தில் தனக்குத் தெரியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கோள்காட்டி, தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களில் எம்.பி.க்கு அச்சுறுத்தல் இருப்பதாக இதுவரை வெளிப்படுத்தவில்லை என்றும்,

அது குறைந்தபட்ச ஆபத்து மட்டத்தில் உள்ளது என்றும், அக்டோபர் 23 திகதியிட்ட கடிதத்தில், நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன எம்.பி.க்கு தெரிவித்துள்ளார்.

ஒரு எம்.பி.உயிராபத்து இருப்பதாக நம்பகமான புலனாய்வு அறிக்கைகள் தெரிவித்தால், அத்தகைய எம்.பி.க்களுக்கு இலவச துப்பாக்கி உரிமத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான துப்பாக்கியை வழங்குவது குறித்து அமைச்சகம் பரிசீலிக்கலாம் என்று வலியுறுத்தி,

இந்த சாதனங்களைக் கொண்டுவர பாதுகாப்பு அமைச்சின் நேரடி ஒப்புதலைப் பெறுமாறு பதில் செயலாளர் நாயகம் எம்.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்.

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான லொறி!!

கிண்ணியா – கண்டி பிரதான வீதி, முனைச்சேனை பகுதியில் சிறிய ரக லொறி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து, இன்று(30.10.2025) காலை முனைச்சேனை சுமையா அரபு கல்லூரிக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

சூரங்கல் பகுதியில் இருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தெருவில் குப்பை கொட்டிய பெண்ணை மீண்டும் அள்ள வைத்த நபர் : யாழில் கலகலப்பு!!

யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்குத் தெருவில் தெருவில் குப்பை கொட்டிய பெண்ணை மீண்டும் அள்ள வைத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்குத் தெருவில் பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து வீதியில் குப்பையை வீசி சென்றுள்ளார். இதனை அவதானித்த நபர் ஒருவர் பெண்ணை மறித்து , அவரது தவறை சுட்டிக்காட்டினார்.

எனினும் குப்பை கொட்டிய பெண் காணொளி எடுத்தவருடன் தகராறில் ஈடுபாட்டார். இதனையடுத்து காணொளியஒஇ வெளியிடுவேன என கூறிய்தை அடுத்து பெண் தான் கொட்டிய குப்பையை மீண்டும் எடுத்துச் சென்றுள்ளார்.

அதேவேளை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் கழிவுகளை வீசி சென்றவர்களிடம் இருந்து கடந்த இரண்டு மாத காலத்தினுள் இரண்டு லட்சம் ரூபாவுக்கு மேல் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.

மாங்குளம்- வீதியில் பொலிஸாரின் வாகனம் தடம்புரண்டு விபத்து!!

முல்லைத்தீவு- மாங்குளம் வீதியில் மணவாளன் பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் பொலிஸாரின் வாகனம் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது இன்று(30.10.2025) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் பயணித்த பொலிஸ் ஜீப் ஒன்று வீதியின் குறுக்கே மாடுகள் வந்ததால் வீதியினை விட்டு விலகி விபத்தினை சந்தித்துள்ளது.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த பொலிஸார் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பொலிஸ் ஜீப் கடுமையாக சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையினை முன்னெடுத்து வாகனத்தினை மீட்டு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை இடம்பெற்றுள்ளதால் வீதிகளில் கால்நடைகளின் நடமாட்டம் தற்போது அதிகாரித்து காணப்படுகின்றது.

இதனால் கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன் சாரதிகள் மிகவும் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

 

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற இருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!!

2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண நியமனத் திட்டம் (PNP) வழியாக 302 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கான (PR) அழைப்புகளை அனுப்பியுள்ளது. இந்த அழைப்பு, draw number 374 என அழைக்கப்படுகிறது.

இதில் குறைந்தபட்ச விரிவான தரவரிசை அமைப்பு (Comprehensive Ranking System) (CRS) மதிப்பெண் 761-ஆக இருந்தது, இது கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதியிலிருந்து 17 புள்ளிகள் குறைந்துள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும்

இந்த PNP திட்டம், கனடாவின் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்குத் தேவையான திறமையான தொழிலாளர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் பணியாளர்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.

நிரந்தர குடியுரிமை பெறுபவர்கள், கனடாவில் வாழ வேலை செய்ய மற்றும் நிரந்தரமாக குடியிருப்பதற்கான உரிமையைப் பெறுவர்

CRS மதிப்பெண் விநியோக பட்டியலில், 451-500 மதிப்பெண் கொண்டவர்கள் 69,503 பேர் உள்ளனர். மொத்தமாக 248,253 பேர் Express Entry புலத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபரங்கள், புதிய விண்ணப்பங்கள் சேரும் போது மாறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு, கனடா அரசாங்கம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும் புதிய குடியுரிமை திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமண நாளில் சீஸ் கேக் சாப்பிட்டதால் விவாகரத்து : 25 வருட உறவை முடித்த மனைவி!!

அமெரிக்காவில் நடந்த வினோதச் சம்பவம் ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண நாளில் வாங்கிய சீஸ் கேக்கை கணவர் தனியாக சாப்பிட்டதால், மனைவி 25 வருட திருமண வாழ்க்கையை முடித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது அனுபவத்தை ரெட்டிட் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். திருமண ஆண்டு தினத்தில் இருவரும் சேர்ந்து கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.

அதற்காக பெண் ஒருவர் மிகப் பிரத்தியேகமாக சீஸ் கேக் வாங்கியிருந்தார். ஆனால், அவர் சிறிது நேரம் வெளியே சென்ற போது கணவர் அந்த கேக்கை முழுவதுமாக சாப்பிட்டு விட்டார்.

இதனால் கடும் அதிருப்தியடைந்த மனைவி, “25 ஆண்டுகளாக நான் எவ்வளவோ பொறுமையாகவும், பொருத்தமாகவும் வாழ்ந்து வந்தேன்.

ஆனால், என் உணர்வுகளையும் விருப்பங்களையும் புரிந்து கொள்ளாத ஒருவருடன் இனிமேலும் சேர்ந்து வாழ்வது பயனற்றது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பலரும் அதிர்ச்சியும் நகைச்சுவையுமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிலர், “ஒரு கேக்குக்காக 25 வருட திருமணத்தை முடிப்பது மிகைப்படுத்தல்” என விமர்சித்துள்ள நிலையில், மற்ற சிலர் “இது சிறிய விஷயமல்ல, அக்கறை இல்லாமையின் வெளிப்பாடு” என மனைவிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.