நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 15 இலட்சத்து 47 ஆயிரத்து 257 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டில் அதிகளவான சுற்றலுாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 320,702 ஆகும்.

மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 149,809 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 118,599 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 96,394 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 90,220 சுற்றுலாப் பயணிகளும்,

பிரான்ஸிலிருந்து 82,561 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 67,135 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்திலிருந்து 47,213 சுற்றுலாப் பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 43,185 சுற்றுலாப் பயணிகளும்,

பங்களாதேஷிலிருந்து 39,828 சுற்றுலாப் பயணிகளும், இத்தாலியிலிருந்து 36,312 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாயை தூக்கி நிலத்தில் அடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

நானுஓயா, எடின்போரோ தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை கொடூரமாக தாக்கி, வீதியில் தலைகீழாக தூக்கி அடித்து,

ஆற்றில் வீசிய குற்றச்சாட்டின் கீழ், சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞன் வியாழக்கிழமை (28) நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர், நுவரெலியா நீதவான் லங்கானி பிரபுத்திகா முன்னிலையில் வௌ்ளிக்கிழமை (2( ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

கனடாவில் மலர்ந்த காதல் : அமெரிக்க பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்த இளைஞன்!!

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த சேர்ந்த இளம்பெண்ணுக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர் கௌதம். இவர் கனடாவில் படித்து அங்கேயே ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியைச் சேர்ந்த சாரா.

இருவரும் காதலித்து வந்த நிலையில், கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தங்களது காதல் குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, கௌதம் மற்றும் சாரா இருவரும் கனடாவில் உள்ள மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் சாராவின் பெற்றோர் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்ட கொடிசியா வளாகத்தில் காதல் ஜோடி கௌதமிற்கும், சாராவிற்கும் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இதில் அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

நாடு முழுவதும் சமீப காலங்களாக வரதட்சணை கொடுமை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஷில்பா, தான் கர்ப்பமாக இருந்த நிலையில்,

கணவன் மற்றும் அவனது குடும்பத்தாரின் தொல்லையைத் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு சுத்தகுண்டேபாளையா பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷில்பா (27).

இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. ஷில்பா தற்போது கர்ப்பமாக இருந்தார். ஷிப்லாவும், பிரவீனும் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர்.

இவர்களின் திருமணத்தின் போது ரூ.50 லட்சம் வரதட்சணயாக ஷில்பா குடும்பத்தினர் பிரவீனுக்கு கொடுத்துள்ளனர். இதனிடையே திருமணமான ஒராண்டில் பிரவீன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு பானிபுரி உணவக தொழில் தொடங்கினார்.

இந்த தொழில் தொடங்க பணம் தரும்படி ஷில்பாவிடம் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து ஷில்பா குடும்பத்தினர் ரூ.10 லட்சம் பிரவீனுக்கு கொடுத்துள்ளனர்.

அதன் பின்னரும் ஷில்பாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரவீனும் அவரது குடும்பத்தினரும் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் பிரவீனுடன் வாழ பிடிக்காமல் பெற்றோர் வீட்டுக்கு ஷில்பா சென்றிருந்ததும், பின்னர் பிரவீன் குடும்பத்தினர் சமாதானப்படுத்தி அழைத்து வந்ததும் தெரியவந்தது. ஆனாலும், தொடர்ந்து ஷில்பாவுக்கு பிரவீன் குடும்பத்தினர் வரதட்சணை தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் வரதட்சணை கொடுமையால் ஷில்பா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் ஷில்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஷில்பாவின் கணவன் பிரவீன், அவரது தாய் சாந்தா மற்றும் தங்கை பிரியா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஓடும் புகையிரத்திலிருந்து கீழே தவறி விழுந்த நபருக்கு நேர்ந்த துயரம்!!

பதுளையில் பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கண்டி – பிலிமத்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த பொடி மெணிக்கே ரயிலில் பயணித்துள்ளார்.

இந் நிலையில், பண்டாரவளை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்துவதற்கு முன்னரே ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்ற போது, கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜயின் கச்சதீவு கருத்து : வரலாறு தெரியாதவர் … யாழில் இருந்து பதிலடி!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் கச்சதீவு குறித்த கருத்துகளை அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விமர்சித்துள்ளார்.

கடந்தவாரம் மதுரையில் இடம்பெற்ற தவெக மாநாட்டில் விஜய், கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தம் எனக் கூறியதை, வரலாறு தெரியாத அரசியல் நோக்கத்துடனான ஏமாற்று நாடகமாக அவர் தெரிவித்துள்ளார்.

கச்சதீவு இலங்கை – இந்திய ஒப்பந்தங்களால் இலங்கையின் பகுதியாக உள்ளதாகவும், அதை மீட்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்திருப்பதாகவும் சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசு சீனாவிடம் நிலத்தை இழந்து மீட்க முடியாத நிலையில், கச்சதீவு குறித்த பேச்சு வேடிக்கையானது எனவும் கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடித்தொழில் காரணமாகவே மீனவர் பிரச்சினை தொடர்வதாகவும், இதற்கு கச்சதீவு தீர்வாகாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விஜய்யின் கச்சதீவு கருத்து, தமிழக மீனவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான அரசியல் உத்தியாகவே உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,

இதற்கு பதிலாக சட்டவிரோத மீன்பிடிப்பை நிறுத்துவதற்கு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.

 

சாரதியால் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து : சாமர்த்தியமாக காப்பாற்றப்பட்ட 30 பயணிகள்!!

பண்டாரவளை போக்குவரத்து சபை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பயணிகள் பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்து 30 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினர்.

நேற்று முன்தினம் மாலை, பதுளையில் இருந்து பத்தேவெல, தெமோதர வழியாக பல்லகெட்டுவ நகரத்திற்கு சென்ற பண்டாரவளை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த பயணிகள் பாரிய ஆபத்து ஒன்றை எதிர்கொண்டுள்ளனர்.

எனினும் பண்டாரவளை போக்குவரத்து சபையில் பணிபுரியும் ஓட்டுநர் சுமிந்த கருணாரத்ன மற்றும் பேருந்தின் நடத்துனர் ஜயவர்தன ஆகியோர் எடுத்த முயற்சியால் பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பேருந்து குறுகிய வளைந்த மலைப்பாதையில் பயணித்த போது பேருந்து திடீரென நின்றுள்ளது. பேருந்தில் பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளதை உடனடியாக உணர்ந்த ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டு, அதை பின்னோக்கி நகர்த்த அனுமதிக்கவில்லை.

மேலும் பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளையும் அச்சமடையாமல் இறங்குமாறு அறிவுறுத்தியதுடன், பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது ​​பேருந்தின் பிரேக்குடன் தொடர்புடைய ஒரு குழாய் வெடித்துள்ளமை தெரியவந்துள்ளது. பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் சுமார் 50 மீட்டர் பின்னோக்கி நகர தொடங்கியது.

எப்படியோ, ஓட்டுநர் அதைப் பிடித்து ஒரு மலையில் மோதி நிறுத்தினார். பேருந்தின் ஒரு பகுதி மோதியதால், வீதியில் இருந்து நகர்ந்து, பேருந்து நின்றது.

பேருந்திற்கு மட்டும் சிறிய சேதம் ஏற்பட்டாலும், பயணிகள் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை. பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிய எச்சரிக்கையுடன் செயற்பட்டமையினால் 30 பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அவ்வாறு செய்யத் தவறியிருந்தால் பேருந்து பின்னோக்கி உருண்டு கீழே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்தை ஏற்படுத்தியிருக்கும் என பேருந்தில் இருந்த பயணிகள் தெரிவித்தனர்.

இரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்!!

வலஸ்முல்ல பொலிஸ் பிரிவின் உடகஹவத்த பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச் சம்பவம் நேற்று (28) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், 85 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண், உடகஹவத்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தனியாக வீடொன்றில் வசித்து வரும் குறித்த பெண்ணிற்கு அவரது மகன்,நேற்று இரவு உணவு வழங்கிவிட்டு வெளியேறியுள்ளார்.

இதன் பின்னர், வீட்டிற்குள் நுழைந்த ஒருவர் இந்தக் கொலையை மேற்கொண்டதாக பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பியோடியுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய வலஸ்முல்ல பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வவுனியாவில் இ.போ.ச பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதி!!

இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்திலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் இன்று (28.08.2025) சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இணைந்த நேர அட்டவணையில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபட வேண்டும் என கொண்டுவரப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலையிலிருந்து வவுனியாவில் பேருந்துகள் சேவையில் ஈடுபடாத காரணத்தினால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

தனியார் பேருந்துகளில் முண்டியடித்து மக்கள் செல்ல முற்பட்ட போதிலும் போதுமான பேருந்து வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதோடு, பலர் தமது பயணத்தை இடைநிறுத்தவேண்டிய நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடு வீதியில் நேர்ந்த துயரம் : தமிழர் பகுதியில் சம்பவம்!!

மருதமுனையை பிரதான வீதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று காலை 6.00 மணிக்கு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துயில் பெரிய நீலாவணையில் இருந்து கல்முனை மாநகர சபைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் பெரியநீலாவணை சரஸ்வதி வீதியில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையென தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர், கல்முனை மாநகர சபையில் காவலாளியாக பணியாற்றி வருபவர் அவர்.

பெரியநீலாவணையில் அமைந்துள்ள கழிவகற்றல் நிலையத்தில் கடமையாற்றி விட்டு தனது வேலை முடிவுறுத்தல் பணிக்காக கல்முனை மாநகர சபைக்கு செல்லும் போது மருதமுனை பிரதான வீதியில் இந்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ் தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்தில் 108 ஜோடிகளுக்கு திருமணம் : நெகிழவைத்த வெளிநாட்டு தம்பதி!!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்தில் இன்றையதினம் (28) திருமணமாகாத 108 ஜோடிகளுக்கு திருமணம் இனிதே நடைபெற்றது.

அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்தில், யாழ் மாவட்டத்தில் தேர்தெடுக்கப்பட்ட வறுமையில் உள்ள திருமணாகாத 108 ஜோடிகளுக்கு , சிங்கப்பூர் தம்பதி , திருமணம் செய்துவைப்பதற்கான உதவியினை வழங்கி இருந்தனர் .

மணமக்களுக்கு தேவையான தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றையதினம் (28) திருமணம் இனிதே நிறைவுபெற்றது.

இந்த 108 தம்பதியினரையும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்தில் குழுமியிருந்த பக்தர்கள் வாழ்த்துக்கூற மணமக்களின் திருமணம் இனிதே நடந்த நிலையில்,

திருமணம் செய்து வைக்க பேருதவி வழங்கிய சிங்கப்பூர் தம்பதிகளுக்கும் மணமக்களுக்கும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

அதேவேளை வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆலய வருடாந்த பெரும் திருவிழா தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரு பாடசாலை மாணவிகளை பலியெடுத்த கோர விபத்து : சாரதிக்கு பிறப்பிக்கபட்ட உத்தரவு!!

குளியாப்பிட்டிய, விலபொல சந்தியில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (27) காலை விலபொல சந்தியில் உள்ள பல்லேவெல பாலத்தில் டிப்பர் வாகனமும் பாடசாலை வேனும் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் மேலும் 13 பாடசாலை மாணவிகள் காயமடைந்தனர்.

விளக்கமறியல் உத்தரவு

சம்பவம் தொடர்பாக குளியாப்பிட்டி பொலிஸார் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்து இன்று குளியாப்பிட்டி நீதவான் ரந்திக லக்மல் ஜயலத் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரான டிப்பர் வாகனத்தின் சாரதியை செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் குறித்த சாரதி 24 மணி நேரத்திற்கும் மேலாக தூக்கமின்றி வாகனம் ஓட்டியதாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதன்படி, எதிர்காலத்தில் குறித்த டிப்பர் வண்டியின் உரிமையாளருக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கணவனின் வெறிச்செயல் : கொடூரத்தின் உச்சத்தை காட்டிய சம்பவம்!!

இந்திய மத்தியப் பிரதேசத்தில் வரதட்சணை கொண்டு வராத மனைவியை கணவன் கொடூரமான முறையில் சித்ரவதை செய்த சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கார்கோன் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குஷ்பூ பிப்லியா (23) பொலிஸில் அளித்த வாக்குமூலத்தின்படி, இந்த ஆண்டு பெப்ரவரியில் தமக்கு திருமணம் நடந்ததாக கூறியுள்ளார். திருமணமான நாளிலிருந்தே கணவர் தன்னை துன்புறுத்தத் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மதுபோதையில் இருந்த கணவர், முதலில் என்னை கண்மூடித்தனமாக அடித்தார். சமையலறைக்கு இழுத்துச் சென்று சூடான கத்தியால் மார்பு, கைகள் மற்றும் கால்களில் கடுமையாக சூடு வைத்தார்.

வலியால் அலறியபோது கொதிக்கும் கத்தியை என் வாயில் வைத்து துன்புறுத்தினார். “எனது பெற்றோர் உன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர், எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை” என்றும் கூறி என்னை தொடர்ந்து தாக்கினார்.

தாக்குதல் நடந்தபோது வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர்” என்று தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக உத்தரப் பிரதேசத்தில், வரதட்சணை கொண்டுவராத மனைவியை கணவன் தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரிடம் தப்பி கைவிலங்குடன் முதலைகளிடம் சிக்கிய திருடன்!!

திருட்டுச் செயல்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கைவிலங்குகளுடன் முதலைகள் நிறைந்த குளத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நேற்று (27) இரவு மில்லானியா பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருட்களை திருடிக்கொண்டிருந்தபோது, ​​கடை உரிமையாளரைக் கண்டு கூச்சலிட்டுள்ளார்.

அப்போது, ​​சந்தேக நபர் கடை உரிமையாளரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இன்று (28) காலை மில்லனியா பொலிஸாரால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், சந்தேக நபரை கைவிலங்கிட்டு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லும்போது, ​​மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பொலிஸ் அதிகாரியை தாக்கி ஆழமான முதலைகள் நிறைந்த குளமொன்றில் குதித்துள்ளார்.

பின்னர், உள்ளூர்வாசிகள் மற்றும் பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேக நபரை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சந்தேக நபருக்கு காயம் ஏற்படவில்லை, மேலும் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடொன்றில் பொலிஸாரினால் விரட்டிப் பிடிக்கப்பட்ட இலங்கை மாணவன்!!

ஜப்பானின் செண்டாய் நகரில், இலங்கை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்வசம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை தொழிற்கல்வி பாடசாலை மாணவர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி அதிகாலை 1.50 மணியளவில், செண்டாயில் வாகன நிறுத்துமிடத்தில், பெயர் குறிப்பிடப்படாத மாணவர் கஞ்சாவுடன் சிக்கியுள்ளார்.

ரோந்து பிரிவு வருவதனை அவதானித்து தப்பி செல்ல முயற்சித்த இலங்கை மாணவனை பொலிஸார் துரத்தி சென்றுள்ளனர். இதன்போது மாணவரிடம் மீண்டும் சீல் வைக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளில் ஒரு கிராம் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

ஜப்பானில் கஞ்சா சட்டவிரோதம் என தனக்கு தெரியாது என இலங்கை மாணவன் தெரிவித்துள்ளார். அத்துடன், கஞ்சாவை தனது சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டாலும், குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

கஞ்சா எங்கிருந்து பெறப்பட்டது உள்ளிட்ட விபரங்களை உறுதிப்படுத்த, பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 6 பேர் வெளிநாட்டில் கைது!!

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இருவர் உள்ளிட்ட 6 பேர் நேற்று(27) மாலை இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் கமாண்டோ சலிந்த என்ற பெயரில் அறியப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்ற ஐவரில் ஒருவர் ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’, ‘பெக்கோ சமன்’ மற்றும் ‘நிலங்க’ ஆகியோர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கமாண்டோ சலிந்த மற்றும் கெஹெல்பத்தர பத்மே ஆகிய இருவரும் கொழும்பு அளுத்கடை நீதிமன்றத்தின் உள்ளே வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திக் கொலை செய்யப்பட்ட கணேமுல்லை சஞ்சீவ கொலையின் சூத்திரதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.