பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிப்பு!!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டத்திற்காக அனைத்துப் பாடசாலைகளும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025.12.09 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2025.12.23 முதல் 2026.01.04 வரையிலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025.12.27 முதல் 2026.01.04 வரையிலும் விடுமுறை வழங்கப்படும் என்றும் அமைச்சகம் கூறுகிறது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டை 2025 டிசம்பர் 22 திங்கள் கிழமையும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டை டிசம்பர் 26 வெள்ளிக்கிழமையும் முடிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

2025.12.27 முதல் 2026.01.04 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை 11.09.2025 திகதியிட்ட பாடசாலை தவணை அட்டவணை – 2026 சுற்றறிக்கை எண். 30/2025 இன் படி செயல்படும் என அறிவித்துள்ளது.

மேலும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ள பாடசாலை பரீட்சைகளின் திகதிகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமைச்சகம் மேலும் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு!!

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைதுசெய்து முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23.12.2025) உத்தரவிட்டுள்ளது.

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பாக, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியமை காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர், விசாரணைக்காக இன்று முன்னிலையாக தவறியமை காரணமாகவே கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே இன்று (23) உத்தரவிட்டடுள்ளார்.

 

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 28ஆம் திகதி புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்பு!!

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 28ஆம் திகதி புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக யாழ்.

பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் காலநிலை அவதானிப்பாளருமான பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காலநிலை அவதானிப்பு அறிக்கையில்,

வங்காள விரிகுடாவில் இலங்கைக்குத் தென் கிழக்குத் திசையில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது மாலைதீவிற்கு அருகாக நிலை கொண்டுள்ளது.

இதனால் கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களுக்குக் கிடைத்து வரும் மழை இன்றிரவு முதல் படிப்படியாகக் குறைவடையும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி வங்காள விரிகுடாவில் இலங்கைக்குத் தென் கிழக்கே புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக மீண்டும் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மழை கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மழை எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது. ஆனால், இடையில் ஒரு சில நாட்கள் மழையற்ற நாட்களாக அமையும். இதேவேளை எதிர்வரும் 31ஆம் திகதி முதல் மத்திய, ஊவா, வடமத்திய, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்களுக்கு மழை கிடைக்கத் தொடங்கும்.

இந்த பிரதேசங்களுக்கும் மழை எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மீண்டும் எதிர்வரும் ஜனவரி 10 முதல் 13ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பெரும்பாலான நாட்கள் மழை நாட்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குளிரான காலநிலை எதிர்வரும் 26ஆம் திகதி முதல் குறைவடையும் சாத்தியமுள்ளது. விவசாயிகள் இந்த நாட்களைக் கருத்தில்கொண்டு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறந்தது என்றுள்ளது.

வீதிகளில் மிதக்கும் சடலங்களால் அதிர்ச்சியில் வாழும் மக்கள் : 2000 பேரின் பரிதாப நிலை!!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக, கம்பளை-துனுகேஉல்ல பிரதான வீதியில் உள்ள இஹலகம மயானத்திலுள்ள சடலங்களின் எச்சங்கள் வெளி வந்துள்ளமையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மயானத்தில் புதைக்கப்பட்ட சடலங்களின் சிதைவுகள் சவப்பெட்டிகளுடன் பல நாட்களாக வீதியில் கிடப்பதால் அந்தப் பகுதி அச்சம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது.

இது குறித்து உரிய அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்ட போதும், அதனை சரிசெய்ய இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 27 ஆம் திகதி ஏற்பட்ட பேரழிவுடன் இந்த மயானம் மண்சரிவால் பாதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

வீதி முடங்கியுள்ள காரணமாக துனுகேஉல்ல பகுதியில் சுமார் 2,000 பேர் வரையில் அந்த கிராமத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

அப்பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி குமாரி என்ற பெண் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். மயானத்தில் புதைக்கப்பட்ட சவப்பெட்டிகளுடன் உடல்கள் மண் சரிவில் இருந்து வெளியே வந்து வீதியில் கிடக்கின்றன.

கிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிட்டது. இது குறித்து உடபலத்த பிரதேச செயலாளரிடம் தெரிவித்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை.

இப்போது நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கிறோம். அழுகி, சேற்றில் கலந்த இந்த உடல்கள் ஆபத்தான நோய்களைப் பரப்பும் என அந்தப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளன.

அவதானம் : ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி நிதி மோசடி!!

இலங்கையில் பல்வேறு நபர்கள் ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி நிதி மோசடி செய்ததாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

ஒன்லைனில் பொருட்களை ஓடர் செய்வதற்கு முன், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அமைப்பு பற்றிய துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களைப் பெற வேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழவின் தலைமை தகவல் பாதுகாப்பு பொறியாளர் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக மோசடிகள் நடப்பது குறித்து கடந்த சில நாட்களாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் ஆனந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பண்டிகைக் காலத்தில் ஒன்லைனில் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்!!

கொழும்பின் புறநகர் பகுதியான மாதம்பே பிரதேசத்தில் பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த 15 வயது பாடசாலை மாணவியை கடத்த உதவிய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் மாதம்பே கலஹிடியாவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறிய லொறியும் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட சிறுமி 10 ஆம் வகுப்பு மாணவி எனவும் 18 ஆம் திகதி காலை பாடசாலையில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆனாலும் குறித்த மாணவி, பாடசாலையில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை என்பதை அவரது தாயார் அறிந்துள்ளார்.

அந்த சிறுமி மாதம்பே, பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞனுடன் காதல் உறவில் இருந்ததாகவும், அந்த இளைஞனையும் தற்போது காணவில்லை எனவும் காணாமல் போன சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

யாழில் கோர விபத்து ஒருவர் பலி : ஒருவரின் நிலமை கவலைக்கிடம்!!

யாழ்ப்பாணம் புத்தூரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்தானது நேற்று (2025.12.21) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்துள்ள நிலையில் எதிரே வேகமாக பயணித்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிரே வந்த கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் அதிவேகமாக பயணித்த இளைஞர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகினர். இதில் புத்தூர் மணற்பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

மேலும் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும், தாயும் மகனும் சிறு காயங்களுக்குள்ளாகினர்.

காயமடைந்தவர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் பிறந்த பெண்ணின் வரலாற்றுத் திருப்பம் : சுவிஸ்லாந்தில் உயரிய பதவி!!

சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக இலங்கை வம்சாவளி பெண் ஃபரா ரூமி அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் ஆரம்பத்தில் அவர் உத்தியோகபூர்வமாக அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர், அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், சுகாதாரத் துறை சார்ந்த குழுக்களில் தீவிரமாகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஃபரா ரூமி (Farah Rumy), சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழ் சபையான தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவர் எனப்படுவது சுவிட்சர்லாந்தில் உயரிய பதவியாகும்.

இவர் 1991 டிசம்பர் 28 அன்று இலங்கையின் கொழும்பில் பிறந்தார். தனது 6 ஆவது வயதில் பெற்றோருடன் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்தார்.

2021 ஆம் ஆண்டு சோலோத்தர்ன் (Solothurn) மாகாண சபைக்கு முதல் முறையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

2023 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வான முதல் இலங்கை வம்சாவளி நபர் என்ற பெருமையைப் பெற்றார்.

தற்போது நாடாளுமன்றத்தின் இரண்டாவது துணைத் தலைவராக மிக உயரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஃபரா ரூமி எதிர்வரும் 2028 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்றத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கான வழி இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்து போன்ற ஒரு நாட்டில், புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்ட ஒரு பெண் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தகைய உச்சத்தை அடைந்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து இருவர் பலி : மேலும் சிலர் வைத்தியசாலையில்!!

அனுராதபுரம் – பாதெனியா பிரதான வீதியில், கல்கமுவவின் குருந்தன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை (21.12.2025) விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு விபத்தில் சிக்கிய ஒருவரை கல்கமுவ வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்ற முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது கல்கமுவ வைத்தியசாலை நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டி, அனுராதபுரம் நோக்கிச்சென்ற டிமோ பட்டா லொரியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதன்போது லொறியின் பின்னால் வந்த மற்றுமொரு முச்சக்கர வண்டியும் லொறியுடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் நேருக்கு நேர் மோதிய முச்சக்கர வண்டியின் சாரதியும், வாகனத்தில் பயணித்த பெண் பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 58 வயதுடைய தாயும் 29 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் ஐந்து பேரும், லொறியில் மூன்று பேரும் பயணித்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த அனைவரும் கல்கமுவ அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கோர விபத்தில் தாயும் மகனும் பரிதாபமாக பலி!!

விபத்தில் சிக்கிய ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று, அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியின் கல்கமுவ, குருந்தன்குளம் பகுதியில் இன்று (21) பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கல்கமுவ வைத்தியசாலைக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த முச்சக்கரவண்டி, அநுராதபுரம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிமோ பட்டா ரக லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

அத்துடன், விபத்துக்குள்ளான லொறிக்கு பின்னால் வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் இந்த லொறியுடன் மோதியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் நேருக்கு நேர் மோதிய முச்சக்கரவண்டியின் சாரதியும், அதில் பயணித்த பெண்ணொருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இவ்வாறு உயிரிழந்தவர்கள் தாயும் மகனும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற போது முச்சக்கரவண்டியில் ஐந்து பேர் பயணித்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னால் வந்த லொறியில் நான்கு பேர் பயணித்துள்ளதுடன், அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அத்துடன் லொறியின் பின்னால் மோதிய முச்சக்கரவண்டியிலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் முன்பகுதிக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளது.

இ.போ.ச பஸ் – முச்சக்கரவண்டி மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

நாவலப்பிட்டி, போகஹவத்தை வழியாக கொத்மலை மகாவெலிகம வீதியில் உள்ள பெல்டன் அம்பகஸ்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (22) காலை 10:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை சொந்தமான பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் கொத்மலை மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார் கொத்மலை, மஹாவெலிகமவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற கொத்மலை டிப்போவைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு

சொந்தமான பஸ்ஸுடன் அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் கவிழ்ந்து பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நாளில் மீண்டும் எகிறிய தங்கத்தின் விலை!!

நாட்டில் இன்று (22.12.2025), 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த சனிக்கிழமை (20) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 340,000 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 344,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,775 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இப்படி ஒரு கஷ்டம் எந்த தாய்க்கும் வரக்கூடாது : தாயின் கண்முன்னே துடிதுடித்த மகள் : இரக்கமின்றி அடித்துக்கொன்ற கணவன்!!

தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயதுடைய பரமேஷ். இவர் அதே பகுதியில் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய அனுஷா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

திருமணமான மூன்று மாதத்தில் பரமேஷ் தனது காதலி அனுஷாவை அவரது வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வர கூறி கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது.

எனவே அனுஷா இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அனுஷா வீட்டிற்கு வந்த அவரது தாய் பரமேஷ் மற்றும் அனுஷாவை சமாதானம் செய்து வைத்திருக்கிறார்.

ஆனால் பரமேஷ் அனுஷாவின் தாய் முன்பே அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார். இதனால் மீண்டும் கணவன் மனைவி இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த பரமேஷ் அனுஷாவை வீட்டிற்கு வெளியில் இழுத்து சென்று அங்கிருந்த கட்டையால் அவரது தாய் கண் முன்னே சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அனுஷாவை மீட்டு அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுஷாவின் தாய் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்து விட்டு தப்பித்து சென்ற பரமேஷை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை வரதட்சணை கேட்டு அவரது தாய் கண் முன்னே கணவன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பரமேஷ் அவரது மனைவியை வீட்டுக்கு வெளியில் கட்டையால் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

6 மாதக் கரு கலைந்து உயிரும் போனது… கர்ப்பிணி மகளை ஆணவக் கொலை செய்த தந்தை!!

கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மாவட்டத்தில் மனிதநேயமற்ற முறையில் ஒரு கொடூரமான கௌரவக் கொலை அரங்கேறியுள்ளது. தலித் இளைஞரைத் திருமணம் செய்ததற்காக, ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த மகளை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.

ஹுப்பள்ளி இனாம்-வீரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மான்யா (20) என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தா என்ற தலித் இளைஞரை உயிருக்கு உயிராகக் காதலித்து வந்தார். இவர்களது திருமணத்திற்கு மான்யாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஜாதித் தடையை மீறி, கடந்த மே மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பெற்றோரின் கோபத்திற்குப் பயந்து, இருவரும் சில மாதங்கள் ஹவேரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர்.

தங்கள் மீது தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் இருந்த கோபம் குறைந்திருக்கும் என நம்பி, கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி இந்த ஜோடி மீண்டும் சொந்தக் கிராமத்திற்குத் திரும்பியுள்ளது. ஆனால், ஆத்திரம் குறையாத மான்யாவின் தந்தை பிரகாஷ் கெளடா, அடிக்கடி விவேகானந்தாவின் வீட்டிற்குச் சென்று தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு பிரகாஷ் கெளடா தனது இரண்டு மகன்களுடன் ஆயுதங்களை ஏந்தி விவேகானந்தாவின் வீட்டிற்குள் புகுந்தார். கையில் இருந்த இரும்புக் கம்பிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் மான்யா, விவேகானந்தா மற்றும் அவரது பெற்றோரைச் சராமாரியாகத் தாக்கினர்.

படுகாயமடைந்த அனைவரும் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 மாதக் கர்ப்பிணியாக இருந்த மான்யா, சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விவேகானந்தாவும் அவரது பெற்றோரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த மான்யாவின் தந்தை பிரகாஷ் கெளடா மற்றும் அவரது இரண்டு சகோதரர்களைக் கைது செய்துள்ளனர்.

ஒரு மகளின் உயிரைப் பறித்தது மட்டுமல்லாமல், பிறக்காத ஒரு உயிரையும் ஜாதி வெறி பலி வாங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் புகையிரதத்திலிருந்து புதுமணத் தம்பதி தவறி விழுந்து பலியான சோகம்!!

ஆந்திர மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து புதுமணத் தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம்,

கருகுபில்லி பகுதியைச் சேர்ந்த 25 வயதான சிம்மாசலம் மற்றும் 19 வயதான பவானி ஆகிய இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது.

ரசாயன தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த சிம்மாசலம், தனது மனைவியுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்காகச் சென்றபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

வாசல் அருகே நின்றதால் வந்த வினை: சிம்மாசலமும் பவானியும் விஜயவாடாவில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக, செகந்திராபாத்தில் இருந்து மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளனர்.

ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததா அல்லது காற்றுக்காக நின்றார்களா என்று தெரியவில்லை, ஆனால் இருவரும் ரயிலின் வாசல் அருகிலேயே நின்று கொண்டு பயணம் செய்துள்ளனர்.

ரயில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பிடி நழுவி இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்தபடி தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டனர்.

சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்கள்: வங்கபள்ளி ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது நிகழ்ந்த இந்த விபத்தில், ரயிலில் இருந்து கீழே விழுந்த கணவன்-மனைவி இருவருக்கும் தலையிலும் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்கள் இருவரும் மீட்கப்படுவதற்கு முன்பே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி இரண்டே மாதங்களில், வாழ்க்கையைத் தொடங்கும் முன்பே ஒரு சிறு கவனக்குறைவால் இரு உயிர்கள் பறிபோனது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் போது வாசலில் நின்று பயணம் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றுமொரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 வயது மகனைக் கொன்று விட்டு, போலீஸுக்கு அழைப்பெடுத்து வரச்சொன்ன தாய்!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள புன்னசெரி பகுதியில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.

38 வயதான அனு என்ற பெண், தனது 5 வயது மகன் ஹர்ஷனைத் தூக்கத்தில் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

விளையாடித் திரிய வேண்டிய வயதில், பெற்ற தாயின் கரங்களாலேயே ஒரு பிஞ்சு உயிர் பறிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அனு கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது மகன் ஹர்ஷன், அருகில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தான்.

நேற்று காலை திடீரெனத் தனது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்ற அனு, அதன் பிறகு பதற்றமடையாமல் போலீசுக்குத் போன் செய்துள்ளார்.

“என் மகனை நானே கழுத்தை நெரித்துக் கொன்று விட்டேன்” என்று அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கக்கூர் போலீசார், உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்தனர்.

அங்கு அறையில் மயங்கிக் கிடந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

இந்தக் கொடூரச் செயலுக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அனு கடந்த சில மாதங்களாகக் கடுமையான மனநலப் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தது தெரிய வந்துள்ளது. இதற்காக அவர் முறையான மனநலச் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.

மன அழுத்தம் அல்லது மனநலக் குறைபாடு காரணமாக ஏற்பட்ட ஆவேசத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சிறுவனின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகனைக் கொன்ற அனுவைக் கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு தாய் தனது சொந்த மகனையே கொலை செய்த இந்தச் சம்பவம், மனநலப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் ஹர்ஷனின் மறைவிற்குப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.