கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் உறவினர்களை கொண்ட நபர்கள் செயற்கை நுண்ணறிவு குரல் மோசடிகள் மூலம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நுண்ணறிவு குரல் மோசடியுடன் தொடர்புடைய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,இரவு நேரத்தில் 59 வயதுடைய பெண் ஒருவருக்கு, கனடாவில் இருக்கும் தனது மருமகனிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது, நள்ளிரவில் ஏற்பட்ட விபத்திற்காக சிறையில் அடைக்கவுள்ளனர் என பேசியுள்ளார்.அதற்காக, யாருக்கும் தெரியாமல் குறிப்பிட்ட தொகையை அனுப்புமாறும் தெரிவித்துள்ளார்.
இதனால், இரவு நேரத்தில் பதற்றமடைந்த அந்த பெண் 1.4 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார்.பின்னர் தான் மோசடி என்று அந்த பெண்ணிற்கு தெரிந்துள்ளது. அதாவது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் தொலைபேசியில் பேசியவர், பஞ்சாபியில் மருமகனும், நானும் எப்படி பேசுவோமோ அதே போல பேசினார் என அந்த பெண் கூறினார்.
இது தொடர்பாக சைபர் நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தடயவியல் ஆராய்ச்சி மையத்தின் செயல்பாட்டு இயக்குநர் பிரசாத் பதிபண்ட்லா பேசுகையில், “மோசடி குழுவினரால் மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்பு செயற்கை நுண்ணறிவு குரல் கருவிகள் மூலமாக ஒரு நபரின் குரலை மிக துல்லியமாக பிரதிபலிக்க முடிகிறது” என கூறியுள்ளார்.
இந்த மாதிரியான மோசடிகள் முக்கியமாக கனடா, இஸ்ரேல் போன்ற வெளிநாடுகளில் உறவினர்களை கொண்ட தனிநபர்களுக்கு தான் அதிகம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரிக்கெட் உலகின் மிகவும் பலம் பொருந்திய அணிகளில் ஒன்றான தென்னாபிரிக்க அணி இதுவரை ஒருமுறை கூட உலகக்கிண்ண இறுதிப்போட்டியை எட்டாமல் இருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டீ காக், மில்லர் போன்ற உலகத்தர துடுப்பாட்ட வீரர்களுடனும் ரபாடா, மஹராஜ் போன்ற தரமான பந்து வீச்சாளர்களுடனும் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி இம்முறையும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
நேற்றைய தினம்(17) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் சிறிது நேரத்தின் பின் தொடங்கிய ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு சரிய ஆரம்பித்தனர்.
இறுதிவரை போராடிய மில்லர், சதமடித்து 212 என்ற ஓட்ட எண்ணிக்கைக்கு தென்னாபிரிக்காவை அழைத்துச்சென்றார்.பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி போராடினாலும் அவுஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றதோடு இறுதிப்போட்டிக்குள்ளும் நுழைந்தது.
இதனை தொடர்ந்து ஐந்தாவது முறையாக அரையிறுதி வரை முன்னேறி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் தென்னாபிரிக்க அணி வெளியேறியது.தென்னாபிரிக்க அணி முதன்முதலாக கலந்து கொண்ட 1992ஆம் ஆண்டு உலகக்கோப்பையிலேயே அரையிறுதிக்கு முன்னேறியது.
1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற அரையிறுதியில், இங்கிலாந்தை எதிர்கொண்ட தென்னாபிரிக்க அணிக்கு 13 பந்துகளில் 22 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது.மழை ஓய்ந்த பிறகு அப்போது இருந்த மழை தொடர்பான சட்டதிட்டத்தின் அடிப்படையில், தென்னாபிரிக்க அணிக்கு ஒரு பந்தில் 22 ஓட்டங்கள் என்ற நியாயமற்ற இலக்கு விதிக்கப்பட்டது.
அப்போட்டியில் தென்னாபிரிக்க அணி தோல்வியை தழுவ, கிரிக்கெட் உலகில் இன்று வரை இது ஒரு நியாயமற்ற மற்றும் சர்ச்சைக்குரிய முடிவாக ரசிகர்களால் கருதப்படுகிறது.இதனையடுத்து 1999ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கெதிரான அரையிறுதியில், 214 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 213 ஓட்டங்களை எடுக்க போட்டி சமநிலையில் முடிந்தது.
புள்ளிப்பட்டியலின் படி தென்னாபிரிக்காவை விட உயர்வாக இருந்ததால் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.மீண்டுமொரு முறை தென்னாபிரிக்கா துரதிஷ்டத்தால், இறுதிப்போட்டியை அடைய முடியாமல் தொடரை விட்டு வெளியேறியது.அதன்பின்னர், 2007ஆம் ஆண்டு உலகக்கிண்ண அரையிறுதியில் மீண்டும் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட தென்னாபிரிக்கா மிக மோசமான ஒரு தோல்வியை சந்தித்தது.
தொடர்ந்து 2015ஆம் ஆண்டு உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.போட்டியில் மழை குறுக்கிட்டதால் 43 ஓவர்களில் 298 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, கடைசி 2 பந்துகளில் 5 ஓட்டங்கள் தேவை என்ற ஒரு பரபரப்பான நிலையில் இருந்தது.
தொடர்ந்து ஸ்டெய்ன் வீசிய 43ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தை எலியட் ஆறு ஓட்டங்களாக மாற்ற, தென்னாபிரிக்க அணி தொடரிலிருந்து விடைபெற்றது.டூ பிளெஸ்ஸிஸ், டிவில்லியர்ஸ், மோர்கெல் போன்ற வீரர்கள் தோல்வியுற்று மைதானத்தின் நடுவில் கண்ணீர் வடித்த காட்சியை இன்றுவரை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
இம்முறை நடைபெற்ற உலககிண்ணத்திலும் தென்னாபிரிக்க அணி இறுதிப்போட்டியை ஒரு எட்டாக்கனியாக பார்த்தவாறே வெளியேறியிருக்கின்றது.உலகக் கிண்ணங்களில் தென்னாபிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறும் போதெல்லாம் அதனுடன் இணைந்து துரதிஷ்டமும் முன்னேறிவிடுகிறது.
ஜொன்டி ரோட்ஸ், கிப்ஸ், கல்லிஸ், நிட்னி, டூ பிளெஸ்ஸிஸ் மற்றும் டிவில்லியர்ஸ் போன்ற உலகத்தர வீரர்களை உலகுக்கு அளித்த தென்னாபிரிக்க அணியின் 31 வருட உலகக்கிண்ண கனவு என்றாவது ஒருநாள் நிறைவேறும் என்று தென்னாபிரிக்க வீரர்களை போல கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்கின்றார்கள்.
தென்னாபிரிக்கா மட்டுமன்றி நியூசிலாந்து அணியும் உலகக்கிண்ணங்களில் துரதிஷ்டம் வாய்ந்த ஒரு அணியாக உள்ளது.நியூசிலாந்து அணி, உலககோப்பைகளில் 9 தடவைகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதுடன் அதில் 2 தடவைகள் இறுதிப்போட்டியிலும் அடியெடுத்து வைத்தது.
நியூசிலாந்து, 2007 மற்றும் 2011 உலகக்கோப்பைகளில் அரையிறுதியில் இலங்கையிடம் தோற்று வெளியேறியதுடன், 2015 மற்றும் 2019 உலகக்கோப்பைகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறி, முறையே அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தினால் தோற்கடிக்கப்பட்டு உலகக்கோப்பை கனவை பறிகொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 43 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து 175 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அதில் மாவட்டத்தில் முதல் நிலை உட்பட 43 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
மேலும், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 138 பேர் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் பிரசித்தி பெற்ற வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சூரசம்கார நிகழ்வு இன்று (18.11.2023) மாலை மழைக்கு மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றது.
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக சைவ மக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களில் மிக முக்கிய விரதமாக கந்தசஷ்டி விரதம் விளங்குகின்றது.
கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று (18.11) முருகன் ஆலயங்களில் சூரன்போர் இடம்பெறும். அந்தவகையில் வவுனியாவின் சிறப்பு மிகு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் மேளதாள வாத்திய இசை முழங்க,
அந்தணச் சிவாச்சாரியர்கள், பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலயத்தில் இருந்து வெளி வீதிக்கு வந்த வந்த முருகப் பெருமான் மழைக்கு மத்தியிலும் மணிக்கூட்டு கோபுர சந்தி உள்ளடங்கிய ஏ9 வீதியில் சூரனுடன் போர் செய்து சூரனை வதம் செய்து பக்த அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
இதேவேளை, வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோவில், நெளுக்குளம் முருகன் ஆலயம், கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயம், பழனி முருகன் ஆலயம் உட்பட வவுனியா மாவட்டத்தில் உள்ள பல முருகன் ஆலயத்தில் சூரசம்காரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை, பதறியபடி தொடர்புகொண்டார். பின்னர் அவர், தன்னுடைய தந்தை முகமது ஷியாம் (50) என்பவரை ஒரு கும்பல் கடத்தி வைத்துக்கொண்டு, தன்னிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகக் கூறினார்.
அதனால் உஷாரான காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்த போலீஸார், இலங்கை பெண்ணிடம் விவரங்களைக் கேட்டறிந்து, சம்பவம் நடந்த வடக்கு கடற்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வடக்கு கடற்கரை போலீஸார், கடத்தப்பட்ட முகமது ஷியாமின் செல்போன் நம்பரின் சிக்னலை ஆய்வு செய்தனர்.
அதோடு, முகமது ஷியாமின் மகளுக்கு வீடியோ காலில் மிரட்டியவர்களின் செல்போன் நம்பரையும் ஆய்வுக்குட்படுத்தினர். அப்போது மிரட்டல் கும்பல் பதுங்கியிருக்கும் இடம் போலீஸாருக்குத் தெரியவந்தது.
இதையடுத்து கடத்தப்பட்ட முகமது ஷியாமை மீட்க, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் கே.கே.நகர் பகுதியிலுள்ள ஒரு விடுதிக்குச் சென்று, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த முகமது ஷியாமை மீட்டனர். பின்னர் அங்கிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சித்ரா (43) என்பவர் கூறியதன்பேரில் முகமது ஷியாமைக் கடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சித்ரா, இந்தக் கடத்தலுக்கு உதவியதாக ரியாஸ் அஸ்கர், வேல்முருகன், தினேஷ், ஹரிகிருஷ்ணன், சுரேஷ், பாலசுப்பிரமணி ஆகிய ஏழு பேரைக் கைதுசெய்தனர்.
அவர்களிடமிருந்து செல்போன்கள், பாஸ்போர்ட்டுகள், 4,890 ரூபாய், கார் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து வடக்கு கடற்கரை போலீஸார் நம்மிடம் பேசுகையில், “இலங்கையைச் சேர்ந்த முகமது ஷியாம், பிசினஸ் செய்துவருகிறார்.
பிசினஸில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சித்ராவின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, முகமது ஷியாம் பிசினஸில் சித்ராவுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தெரிகிறது.
ஆனால், முகமது ஷியாம் அந்தப் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், முகமது ஷியாமுக்கு தற்போது சில லட்சம் ரூபாய் கடனாகத் தேவைப்பட்டிருக்கிறது. உடனே அவர், சித்ராவின் ஆண் நண்பர் ரியாஸ் அஸ்கரிடம் அந்தப் பணத்தைக் கேட்டிருக்கிறார்.
இந்தத் தகவலை ரியாஸ் அஸ்கர் உடனடியாக சித்ராவுக்குத் தெரிவித்தார். இதையடுத்து சித்ராவின் பிளான்படி கடன் தொகையைக் கொடுப்பதாக ரியாஸ் அஸ்கர், தொழிலதிபர் முகமது ஷியாமிடம் தெரிவித்தார். அதனால் கடன் தொகையைப் பெற முகமது ஷியாம் சென்னைக்கு வந்தார்.
அங்கு சித்ரா, ரியாஸ் அஸ்கர் உட்பட சிலர் இருந்தனர். சித்ராவிடம் சிக்கிக்கொண்ட முகமது ஷியாமை அடைத்துவைத்துத் துன்புறுத்திய கும்பல், வீடியோ கால் மூலம் முகமது ஷியாமின் மகளிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது. இதையடுத்துதான் முகமது ஷியாமின் மகள் கொடுத்த தகவலையடுத்து சித்ரா உட்பட ஏழு பேரைக் கைதுசெய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம்” என்றனர்.
வவுனியா, ஏ9 வீதி சாந்தசோலை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இன்று (18.11) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் வவுனியா, ஏ9 வீதி சாந்தசோலை சந்திப் பகுதியில் பயணித்த போது, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாந்தசோலை சந்தியில் திரும்ப முற்பட்டுள்ளது.
இதன்போது இரு மோட்டர் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளாகின. குறித்த விபத்தில் படு காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், பொலிஸ் உத்தியோகத்தரான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே மரணமடைந்துள்ளார்.
மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்தில் அக்கராயன் பகுதியில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் பணிபுரியும் வெலி ஓயா பகுதியைச் சேர்ந்த திசாநாயக்கா (வயது 27), சாந்தசோலையைச் சேர்ந்த சண்முகம் நாதன் (வயது 63) ஆகிய இருவருமே மரணமடைந்தவர்களாவர். குறித்த விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தெற்காசியாவின் மிக உயரமான கொழும்பு தாமரைக் கோபுரத்தில் மற்றுமொரு சாகச விளையாட்டு நிகழ்வு இடம்பெறுகின்றது.குறித்த சாகச விளையாட்டு நிகழ்வானது இன்று (18.11.2923) தாமரைக் கோபுரத்தில் நடைபெற்றுவருகின்றது.
விங்சூட் பேஸ் ஜம்பிங் (wingsuit Base Jumping) எனப்படும் சாகச விளையாட்டு நிகழ்வானது இரண்டாவது தடவையாக இடம்பெறுவதாக தாமரைக்கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சாகச நிகழ்வில் ஈடுபடுபவர்கள் தாமரைக்கோபுரத்தின் 29 ஆவது மாடியிலுள்ள கண்காணிப்புக் கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து கோபுர வளாகத்தின் நிலத்தை அடைவார்கள்.
ஆறு பேர் பங்குபற்றிய இந்த நிகழ்வில், முதலாவதாக குதித்த நபர் கோபுர வளாகத்தில் நிலத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வைக் காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை பதுரலிய பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வெலிவேரிய, அம்பரல்வ வடக்கு பகுதியைச் சேர்ந்த 6வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி தனது பெற்றோருடன் நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை – நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக நிந்தவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்தானது நேற்று (17.11.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இருவரில் ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு பலத்த காயங்களுக்குள்ளான மற்றுமொரு இளைஞன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேற்படி உயிரிழந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த நிலையில் விபத்து ஏற்பட்டதாகவும் இறந்த இருவரும் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மருதமுனை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் – நெடுந்தீவுப் பகுதியில் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக் கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் நெடுந்தீவில் இடம்பெற்றுள்ளது.இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே நேற்று (17.11.2023) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெடுந்தீவுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மனைவியுடன் பேசியவாறு தான் தற்கொலை செய்வேன் என வேப்பமரத்தில் தூக்கிட்டு பாசாங்கு செய்துக்கொண்டிருந்த போது மனைவி அதனைக் கண்டு கேலி செய்துள்ளார்.
பின்னர் அந்தக் குடும்பஸ்த்தர் தூக்கை மாட்டியவாறு மரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட வேளை வேப்ப மரக் கிளை முறிந்தமையால் தூக்கில் அகப்பட்டுளள்ளார். இதன்போது அவர் அதில் இருந்து தப்ப முடியாது தவித்த வேளை அவரைக் காக்கும் நோக்கில் மனைவி காலைப் பிடித்தவாறு அவலக் குரல் எழுப்பியபோதும் அருகில் எவருமே இல்லாத நிலையில் உடன் எவரும் அவ்விடத்துக்குச் செல்லவில்லை.
இந்நிலையில், குடும்பஸ்தர் குறித்த இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் பரிசோதனையின் பின்னர் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் நிலை உட்பட இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 176 மாணவர்கள் குறித்த பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
அவர்களில், மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலை உட்பட மாவட்ட வெட்டுப்புள்ளியான 145 இற்கு மேல் 74 மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதில் சுரேந்திரா அக்சரன் என்ற மாணவனும் யூஜின் ஆனந்தராஜ் எறின் பியரினா என்ற மாணவியும் 181 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலையைப் பெற்றுள்ளார். இவர்களுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வவுனியா எ9 வீதி சாந்தசோலை சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
இன்று மாலை 2 மணியளவில் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன்போது எதி்ரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த முதியவர் ஒருவர் சாந்தசோலைப்பகுதிக்குள் திரும்ப முற்ப்பட்டபோது குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பலியானதுடன் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 வயதான இளைஞரே பலியானதுடன் அவர் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் 3 ஆம் நிலை உட்பட வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் நிலை உட்பட இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 176 மாணவர்கள் குறித்த பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
அவர்களில், மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலை உட்பட மாவட்ட வெட்டுப்புள்ளியான 145 இற்கு மேல் 74 மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதில், யூஜின் ஆனந்தராஜ் எறின் பியரினா என்ற மாணவி 181 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலையைப் பெற்றுள்ளார்.
குறித்த பாடசாலையில் 70 க்குக் குறைவான புள்ளிகளை 04 மாணவர்களே பெற்றிருக்கின்றனர். வவுனியா மாவட்டத்தில் அதிகளவான மாணவர்களைச் சித்தியடைந்த பாடசாலையாக இது விளங்குகின்றது.
யாழ்ப்பாணம் கோண்டாவில், பரஞ்சோதி வித்தியாலயத்தில், 23 வருடங்களின் பின்னர் முதன்முறையாக மாணவி ஒருவர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில், பரஞ்சோதி வித்தியாலய மாணவி ஜஸ்ரின் ஜனனி 160 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இப்பாடசாலையில், 2000ஆம் ஆண்டிற்கு பின்னர், அதாவது 23 வருடங்களின் பின்னர், இம்முறைதான் மாணவியொருவர் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். பாடசாலைக்கு தனது ஒழுங்கான வரவு, அதிபர், ஆசிரியர் மற்றும் பெற்றோரின் விடா முயற்சியே தனது வெற்றிக்கு காரணமென குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு சமூகமளிப்பதோடு பெற்றோர்களும் அதில் கரிசனையெடுக்குமாறும் குறித்த மாணவி வேண்டுகோள் விடுத்துள்ளார். பரீட்சைக்கு தோற்றிய நான்கு மாணவர்களில் மாணவன் ஒருவன் 144 புள்ளிகளை பெற்றுள்ளதோடு ஏனைய இருவரும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பிரியாணி, ஃபிரைட் ரைஸ், இறைச்சி போன்ற உணவுகளுக்கு பல்வேறு நிறமூட்டிகளை கொண்டு பிரகாசமாகவும் கவர்ச்சியாகவும் தயாரிக்கப்படும் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த நிறமிகள் சரியான அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய சுகாதார அமைச்சு ஆய்வுக்கூட பரிசோதனை நடத்த வேண்டும் என சங்கத்தின் பொருளாளர் ரோஷன குமார தெரிவித்துள்ளார்.
உணவுச் சட்டம் சந்தையில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகளின் அளவைக் கட்டுப்படுத்தும் உட்பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது.இருப்பினும், ரோஸ்ட் கோழி இறைச்சி, பிரியாணி மற்றும் ஃபிரைட் ரைஸ் வகைகள் தயாரிப்பதில் இந்த நிறமூட்டிகளை பயன்படுத்துவது உணவுக் கடைகளில் காணப்படுகிறது.
இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தனவிடம் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் தேவையான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகள் குறித்து கேட்டபோது, தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தொழில் நிமித்தம் கம்பஹா சென்ற தனது கணவருடன் இதுவரை எவ்வித தொடர்பும் இல்லையென யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி அன்று கம்பஹா மாவட்டத்திற்கு வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற வத்திராயன் வடக்கைச் சேர்ந்த கணேசலிங்கம் தினேஸ் எனும் 38 வயதுடைய நபரே சென்றுள்ளார்அதன் பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாக அவரது மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து கடந்த 28 ஆம் திகதி கம்பஹாவிற்கு சென்றுள்ளதாகவும், அங்கு தொடர்ந்தும் வேலை செய்து வருவதாகவும் கடந்த மாதம் 30 ஆம் திகதி காணாமல்போன கணவன் தன்னுடன் பேசியதாக மனைவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 30 ஆம் திகதி முதல் இன்றுவரை தனது கணவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மனைவி தெரிவித்துள்ளார்.காணாமல் போன யாழ் குடும்பஸ்தர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் யாழ் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.