கிளிநொச்சி நபருக்கு காணொளி அழைப்பால் காத்திருந்த அதிர்ச்சி : எச்சரிக்கைப் பதிவு!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி நபர் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து 5 செக்கன் வந்த காணொளியால் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அந்த காணொளியில் பெண் ஒருவர் நிர்வாணநிலையில் நின்றதாகவும் அதன் பின்னர் கிளிநொச்சி நபர் தகாத உறவில் இருப்பதுபோல காணொளி அனுப்பியதுடன் அவரது நண்பர்களுக்கும் அக்காணொளியை அனுப்பியதுடன், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,AI தொழில்நுட்பம் என்பது தற்போது மக்களிடையே வெகு பிரபலமாகியுள்ளது. இந்த AI தொழில் நுட்பமானது, மனித இனத்தின் வளர்ச்சி என மகிழ்ச்சியடைந்தாலும் மற்றுமொரு பக்கத்தில் மோசடியாளர்களால் இதில் உள்ள ஆபத்துக்களையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

அந்த AI தொழில்நுட்பத்தால் ஒருவரின் புகைப்படத்தை மாற்றி என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். நல்லதை மட்டுமே எண்ணி செய்பவர்களை பற்றி பிரச்சனை இல்லை.

ஆனால் சிலமோசடியாளர்கள் இதனை தவறாக பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவிடிவோர் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இன்றையகாலகட்டத்தில் எல்லோருமே சமூகவலைத்தளங்களில் தங்கள் புகைப்படங்களை வெளியிடுவதை வழமையாக வைத்திருக்கின்றோம்.

அவ்வாறு நாம் பதிவிடுகையில் முகம் தெரியாதவர்களின் கைகளில் உங்கள் புகைப்படங்கள் இணைக்கப்பட்டு பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கலாம் என்பதில் கவனமாயிருங்கள்.கிளிநொச்சி நபர் போல உங்களுக்கும் அழைப்புக்கள் வரலாம்.

முடிந்தவரை தெரியாத நம்பர்களின் இருந்துவரும் காணொளி அழைப்புகளை தவிர்த்துகொள்வது மிகவும் நல்லது.முக்கியமாக யுவதிகள் இது தொடர்பில் மிகவும் அவதானமாயிருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். தொழிநுட்பங்கள் முன்னேறிமுன்னேறி செல்லச்செல்ல குற்றங்களும் அதிகரித்து செல்கின்றது என்பதனை யாரும் மறந்திடவேண்டாம்.

பாடசாலை மாணவர்களின் பைகளுக்குள் சிக்கிய இன்ஹேலர் கருவிகள்!!

குருநாகலில்..

குருநாகல் கொகரெல்ல பிரதேசத்தில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி பாடசாலை மாணவர்களுக்கு இன்ஹேலர் கருவிகளை வழங்கியதாக கூறப்படும் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

நேற்றைய தினம் அந்த பாடசாலையின் ஆசிரியர், மாணவர்களின் புத்தக பைகளை அவசரமாக ஆய்வு செய்ததில், பல மாணவர்களின் பைகளில் இன்ஹேலர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இப்பாகமுவ பிரதேசத்தில் தொலைபேசி விற்பனை நிலையமொன்றை நடத்தும் ஒருவரினால் இந்தக் கருவிகள் விற்பனை செய்யப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியர் கொகரெல்ல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இலங்கையில் நிபா வைரஸ் குறித்து சுகாதார பிரிவு வெளியிட்ட தகவல்!!

இலங்கையில்..

இலங்கையில் நிபா வைரஸினால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவின் கேரளப் பகுதியில் ஒகஸ்ட் மாத இறுதியில் இருந்து நிபா வைரஸ் தொற்றாகப் பரவி வருவதாகவும், முன்னதாக இது பங்களாதேஷில் தொற்றுநோயாகப் பரவியதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இது புதிய வைரஸ் அல்ல எனவும் நாட்டில் இந்த வைரஸினால் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் தொற்று நோய் போன்று இந்த நிலைமைக்கு அச்சப்படத் தேவையில்லை. நாட்டை முடக்குவதற்கான திட்டம் தங்களுக்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.மேலும் நாடு முழுவதும் கடைகள் மற்றும் விமானப் பயணிகளை சரிபார்ப்பதற்கும் எவ்வித அவசியமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முத்தையா முரளிதரனுக்காக இலங்கையில் மாற்றப்படும் சட்டம்!!

இலங்கையில்..

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்காக நாட்டில் சட்டமொன்று திருத்தப்பட்டுள்ளது. முரளிதரனின் வாழ்க்கை சரிதத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 800 என்னும் திரைப்படத்தை சிங்கள மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபன சட்டத்தின் படி உள்நாட்டில் தயாரிக்கப்படும் தமிழ் திரைப்படங்களை சிங்கள மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.

எனினும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகஅமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படத் தயாரிப்பிற்கு உள்நாட்டில் பல்வேறு பங்களிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சட்டம் ஓர் திரைப்படத்திற்கு மட்டும் மாற்றப்படுவதாகவும் பின்னர் மீண்டும் அந்த தடை நடைமுறையில் இருக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓட்டுனரின் வங்கிக் கணக்கில் திடீரென வந்த 9000 கோடி ரூபாய்… நடந்தது என்ன?

சென்னையில்..

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த ராஜ்குமார் கோடம்பாக்கத்தில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் 9ஆம்திகதி காரில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவரது கைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.

அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிஇல் இருந்து ரூ.9,000 கோடி டெபாசிட் ஆனதாக குறுஞ்செய்தியில் போடப்பட்டது.

திகைப்பில் ஆழ்ந்த அவர் தனது வங்கிக் கணக்கில் வெறும் 15 ரூபாய் இருக்கும் நிலையில் யாரோ தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்துள்ளார்.

அதன் பின்னர் வந்த தகவல் உண்மைதானா என அறியும் ஆவலில் தனது வங்கிக் கணக்கில் இருந்து நண்பருக்கு 21,000 பணம் அனுப்பிய பின்னர், 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்நிலையில் நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் பகிர்ந்த உடனேயே மீதமுள்ள பணம் அனைத்தையும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் தூத்துக்குடியில் இருந்து ராஜ்குமாருக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதிலிருந்து பகிரப்பட்ட பணத்தை செலவு செய்ய வேண்டாம் என வங்கி நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதுடன் நிர்வாகம் தரப்பில் ராஜ்குமாரை திடீரென மிரட்ட ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளைக்கு வங்கி தரப்பில் இருந்தும் டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து 9000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட 21,000 பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாக வங்கி தரப்பிலிருந்து சமரசம் பேசி அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில் வாடகை கார் ஓட்டுநர் வங்கிக் கணக்கில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திடீரென டெபாசிட் ஆன சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் நடந்த அன்றே மணமகன் தூக்கிட்டு தற்கொலை.. கதறித் துடித்த மனைவி!!

ராணிப்பேட்டையில்..

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் சாம்சங் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரத்தில் வசித்து வரும் ஸ்வேதா (எ) ராஜராஜேஸ்வரியும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவே இரு வீட்டார் சம்மதத்துடன் செப்டம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சரவணனுக்கும், ராஜராஜேஸ்வரிக்கும் திருமணம் நடைபெற்றது.

அன்றைய தினமே இருவரும் மறு வீட்டிற்காக திம்மாவரம் வந்துள்ளனர். நேற்றிரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தம்பதி இருவரும் தங்களது அறைக்கு சென்றனர்.

அதிகாலையில், ராஜராஜேஸ்வரி எழுந்து பார்த்தபோது சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இவருடைய கூக்குரல் கேட்டு உறவினர்கள் அனைவரும் ஓடிசென்றுபார்த்தபோது சரவணன் உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு போலீஸார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சரவணனின் மனைவி ராஜராஜேஸ்வரி, மாமனார் தாமோதரன் மற்றும் மாமியார் அலமேலு மூவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்த தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சரவணனின் உறவினர்கள் நேற்றிரவு முதலிரவு அறைக்குள் செல்லும் முன் சரவணன் தன்னுடைய பெற்றோரிடம் எப்போதும் போலவே பேசினார். மறுநாள் தனது மனைவியுடன் வெளியில் செல்ல திட்டமிட்டிருந்தார். அதையும் பெற்றோரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் திடீரென சரவணனின் உயிரிழப்பு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.முதலிரவு அறைக்குள் சென்ற மணமகன் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உலக சாதனை படைத்துள்ள வெங்காயம்!!

இங்கிலாந்தில்..

இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த தோட்ட விவசாயி கரேத் கிரிபின் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த பிரமாண்டமான வெங்காயத்தை காட்சிபடுத்தியுள்ளார்.

குறித்த வெங்காயம் 8.97 கிலோ எடை கொண்டதாக இருந்ததுடன் உலகிலேயே பெரிய வெங்காயம் என்று உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2014 – ம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிபின் தோட்டத்தில் வளர்ந்த வெங்காயத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

செங்கல் சூளையில் புகையால் மூச்சு திணறி கணவன், மனைவி உயிரிழந்த சோகம்!!

வேலூரில்..

வேலூர் அருகே செங்கல் சூளையில் ஏற்பட்ட புகையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு கணவன் மனைவி உயிரிழந்தனர். முறையாக உரிமம் பெற்று செயல்பட்டதா என வருவாய்த்துறை விசாரணை உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வேலூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி வயது (40), இவருடைய மனைவி அமுல் வயது (30) இந்த தம்பதியினருக்கு சந்தியா, சினேகா, அரவிந் என இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இவர்கள் அதே பகுதியில் பழனிவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள செங்கல் சூளை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு செங்கல் சூளையை பற்ற வைத்து விட்டு வெளியில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் திடீரென கனமழை பெய்ததால் செங்கல் சூலையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்கு உள்ளே தெய்வ சிகாமணி அவருடைய மனைவி அமுல் ஆகிய இருவரும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை உறவினர்கள் சென்று செங்கல் சூளையில் பார்த்த போது இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். செங்கல் சூளை அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்போது கொட்டகைக்கு உள் தங்கியதால் மழை காரணமாக அதிகமான புகை ஏற்பட்டு இதனால் உறக்கத்திலேயே மூச்சு திணறி இருவரும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் நடத்தி வந்த செங்கல் சூளைக்கு உரிய அனுமதி உள்ளதா? இல்லையா? என்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

உயிரிழந்த இருவரின் உடலை மீட்ட வேலூர் தாலுக்கா காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த தம்பதியினரின் சொந்த வீடு கூட இல்லாத நிலையில் ஏழ்மை நிலையில் இருப்பதால் அவர்களின் மூன்று பிள்ளைகளுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் மூத்த மகள் சந்தியா கூறுகையில், ”நேற்று இரவு வரை எங்களுடைய பெற்றோருடன் தான் இருந்தோம், எங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் அங்கேயே தங்கினார். நாங்கள் வீடு சென்று அடைந்ததும் எங்களுக்கு போன் செய்தும் பேசினர்.

ஆனால் காலையில் எங்கள் அப்பா, அம்மா இறந்து விட்டதாக கூறுகிறார்கள். எங்களுக்கு யாரும் இல்லை மூன்று பேர் என்ன செய்வது என தெரியவில்லை.அரசு உதவ வேண்டும்” என கேட்டுக்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!!

சென்னையில்..

சென்னையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கணவர் போலீசில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சின்னம்மன் கோவில் தெரு ஜீவா நகரை சேர்ந்தவர் ஜான்சன். இவர் அம்பத்தூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சாரம்மாள் என்ற பெண்ணுடன் ஜான்சனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சாரம்மாள் என்ற பெண்ணை 5 மாதங்களுக்கு முன்னர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

சாராம்மாள் ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து புதிய திருமணம் செய்த விபரம் ஜான்சனுக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஜான்சன் சாரம்மாளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு உடலை கோணிப்பையில் கட்டி வைத்துவிட்டு தலைமறைவானார்.

இந்நிலையில் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கோணிப்பையில் கட்டி இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதை அறிந்த ஜான்சன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பெற்றோர்களே அவதானம்.. கல்லூரி மாணவியின் காலணிக்குள் இருந்த பாம்பு!!

கடலூரில்..

இனி வரப்போவது மழைக்காலம். பொந்துகளுக்குள் வாழ்ந்து வரும் பூச்சி, பொட்டுகள் வெளிக்கிளம்பும். இதனால் வீட்டில் சிறு, சிறு பூச்சிகள் தலைக்காட்டத் தொடங்கும்.

புழு , பூச்சி, தவளை, பூரான் என சிறுசிறு பூச்சி, புழுக்கள் உலா வரும் காலம். இதனால் ஷூக்களை தட்டி விட்டு குழந்தைகளுக்கு போட்டுவிடவேண்டும். மூலை முடுக்குகளில் குழந்தைகள் நடமாடும் போது கவனம் அவசியம். கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன்.

இவரது மகள் கடலூரில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். 3 நாட்களுக்கு தொடர்ந்து கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்தார்.வெளியில் எங்குமே செல்லவில்லை. கல்லூரிதொடங்கவே ஷூ போடலாம் என கிளம்பி ஷூவை கையில் எடுக்கப் போகும் போது தான் பார்த்தார்.

வீட்டின் வெளியே கிடந்த அவரது ‘ஷூ’வுக்குள் பாம்பு ஒன்று புகுந்திருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பாம்பை விரட்டி பார்த்தனர். முடியவில்லை. அவர்கள் அளித்த தகவலின் பேரில் பாம்புபிடி வீரர் செல்லா வந்து, ஷூவில் இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார்.

இரண்டு அடி நீளமுடைய அந்த நல்லபாம்பை, பத்திரமாக மீட்டு அருகில் உள்ள காப்புக்காட்டில் கொண்டுவிட்டுவிட்டனர். ஷூவுக்குள் பாம்பு புகுவதை மாணவி பார்த்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பாம்பு பிடி வீரர் கூறுகையில், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் பாம்பின் நடமாட்டம் இருந்தால் குழந்தைகள் இருந்தால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பொதுவாக குழந்தைகளின் ஷூ, பை முதலியவற்றை ஒரு முறைக்கு இரு முறை பார்த்து விட்டு, அவர்களிடம் தரலாம் எனக் கூறினார்.

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து தானும் விபரீத முடிவெடுத்த கணவன்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பாரிப்பள்ளி நாவாயிக்குளம் பகுதியில் வசித்து வருபவர் ரஹீம். 50 வயதான இவர் சென்ட்ரிங் தொழிலாளி. இவருடைய மனைவி நாதிரா .

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நாதிரா பாரிப்பள்ளியில் உள்ள ஒரு இ-சேவை மையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே நாதிராவின் நடத்தையில் ரஹீமுக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று நாதிரா வழக்கம் போல் இ-சேவை மையத்திற்கு பணிக்கு சென்று விட்டார். அங்கு அவர் பணியில் இருந்த போது ரஹீம் திடீரென பெட்ரோல் கேனுடன் இ-சேவை மையத்திற்குள் நுழைந்தார்.

நாதிரா திரும்பி பார்ப்பதற்குள் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இ சேவை மையத்தில் அவருடன் இருந்த சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திகுதிகுவென பற்றி எரியத் தொடங்கிய தீயின் உக்கிரம் தாளாமல் நாதிரா அலறி துடித்தார். சக ஊழியர்கள் காப்பாற்ற முயற்சித்தும் சிறிது நேரத்தில் நாதிரா உடல் கருகி அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவியை கொன்றதும் அங்கிருந்து தப்பி ஓடிய ரஹீம் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நடத்தை சந்தேகத்தால் மனைவியை எரித்துக் கொன்று கணவர் தற்கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஹீம் ஆகஸ்ட் மாதம் மனைவியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அவர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் ஆத்திரத்தில் இ-சேவை மையத்துக்குள் புகுந்து மனைவியை எரித்து கொலை தானும் தற்கொலை செய்து கொண்டார்.

மீன் சாப்பிட்டதால் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடும் பெண்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் லாரா பராசாஸ். 40 வயதாகும் இவருக்கு மீன் உணவுகள் என்றால் உயிர் . எப்போதும் தன்னுடைய சாப்பாட்டு மெனுவில்மீன் உணவை சேர்த்துக்கொள்வார்.

அதே போல் சில நாட்களுக்கு முன் உள்ளூர் சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டது. கை விரல்கள் கறுப்பாக மாறத் தொடங்கின. பாதங்கள் மற்றும் கீழ் உதடு கறுப்பானது.

உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிறிது நேரத்திலேயே அவர் கோமா நிலைக்கு சென்றார். சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது. மேலும் கை, கால்களும் முற்றிலும் செயல் இழந்ததால் உயிருக்கு போராடி வருவதாக லாரா பராசாஸ் தோழி மெசினா தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவரது மெசினா ”லாரா கிட்டத்தட்ட தன் உயிரை இழந்துவிட்டார். அவருக்கு சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கடல் உணவுகளில் பொதுவாக கொடிய பாக்டீரியாக்கள் காணப்படும்.

இந்த உணவுகளை முறையாக தயார் செய்து சாப்பிடாவிட்டால் உடலுக்கு தொந்தரவு கொடுக்கும். சந்தையில் இருந்து வாங்கி வந்த மீனை சரியாக வேக வைக்காமல் அப்படியே சாப்பிட்டு விட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனை விடுத்த செய்திக்குறிப்பில் ”லாரா Vibrio Vulnificus என்ற கொடியவகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட மீனை சரியாக சமைக்காமல் சாப்பிட்டுள்ளார்.

இதனால் உடல் உள்ளுறுப்புக்களை நேரடியாக தாக்கியுள்ளன. பாக்டீரியா காணப்படும் கடல் நீரில் குளித்தாலும், உயிருக்கு ஆபத்து தான் ”என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பாக்டீரியாவால், லாராவின் கை விரல்கள், உதடு, பாதங்கள் அழுகி கருத்துபோனது.

உடல் முழுவதும் பாக்டீரியா தொற்று பரவியதால் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. அவரை கோமா நிலைக்கு கொண்டு சென்று, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். லாராவின் இரு கைகள், கால் பாதங்கள் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன. அவரது உயிரை காக்க வேறு வழியில்லாததால் கை, கால்கள் துண்டிக்கப்பட்டன என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கீர்த்தியை திருமணம் செய்தது குற்றமா.. சாபம் விட்ட ரசிகைகளுக்கு பதிலடி கொடுத்த அசோக் செல்வன்!!

சினிமாவில்..

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் சிலர், கீர்த்தி பாண்டியன் அழகா இல்ல என்று உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்தனர்.

இந்நிலையில் உலகில் மிகவும் அழகான பெண் என்று கேப்ஷன் செய்து கீர்த்தி பாண்டியனுடன் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார் அசோக் செல்வன்.

இதற்கு நடிகைகள் உட்பட நெட்டிசன்கள் சரியான செருப்படி என்று கூறி வருகிறார்கள்.

அனிருத் உடன் திருமணமா… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை கீர்த்திசுரேஷ்!!

சினிமாவில்..

3 என்ற படத்தின் மூலம் இசை வாழ்க்கையை ஆரம்பித்த அனிருத் தற்போது டாப் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் இசையமைத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்க காரணமாக அமைந்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்களில் பிஸியாக வேலை பார்த்து வரும் அனிருத் சில நடிகைகள் பாடகிகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி வந்தார். அதேபோல் 31 வயதை எட்டிய அனிருத்-க்கு விரைவில் திருமணம் என்ற பேச்சும் பிரபல தேசிய விருது நடிகையை திருமணம் செய்யவுள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது.

குடும்பத்தினரும் அவருக்கு பெண் பார்த்து வருவதாகவும் கூறி வந்தனர். நடிகை கீர்த்தி சுரேஷ் தான் அந்த நடிகை என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இதுகுறித்து விளக்கமளித்து முற்றுப்புள்ளி அளித்துள்ளார்.

அதில் வட இந்திய ஊடகங்கள் தன்னை பற்றியும் அனிருத்துடன் திருமணம் தொடர்பாக பரவும் செய்திக தவறானது என்றும் தனக்கு அவர் நல்ல நண்பர் என்றும் கூறியுள்ளார். திருமணம் நடக்கும் என்ற பதிலையும் கூறியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஒன்பதாம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் மரணம்…பெற்றோர் பரபரப்பு புகார்!!

உத்தரப்பிரதேசத்தில்..

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ அலிகஞ்சில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியில் 9-ம் வகுப்பில் படித்து வந்த மாணவன் அதிஃப் சித்திக். இன்று பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த சித்திக் திடீரென மயங்கி விழுந்தார்.

இதைக் கவனித்த நதீம் கான் என்ற ஆசிரியர், அவரைக் கொண்டு சென்று சிபிஆர் கொடுத்தார். இதையடுத்து மாணவனை ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மாணவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், தங்கள் மகன் மரணத்தில் மரணம் இருப்பதாக அதிஃப் சித்திக் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது இயற்கையாக நடைபெற்ற மரணம் அல்ல என்று கூறிய அவர்கள், பிற்பகலில் சித்திக் உடல்நிலை சரியில்லை என்று முதலில் பள்ளியில் இருந்து தகவல் தெரிவித்தனர். அவர்கள் பள்ளிக்கு வந்த போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறினர்.

மருத்துவமனை சென்ற போது சித்திக்கின் உயரிழந்த உடலைத் தான் காட்டினார்கள் என்று கண்ணீர் விட்டு கதறினர். சிறுவனின் குடும்பத்தினரிடமிருந்து காவல் துறை அதிகாரப்பூர்வமாக புகாரைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறுவனின் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

வவுனியாவில் மாணவன் மீது ஆசிரியர் தும்புத்தடி மற்றும் சப்பாத்துக் கால்களால் தாக்குதல் : மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா நகர பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவன் இன்று (21.09) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 9ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு, அப் பாடசாலையின் பகுதித் தலைவராகிய ஆசிரியர் ஒருவர் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கும் மேலாக தும்புத்தடி மற்றும் சப்பாத்து கால்களால் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், குறித்த மாணவன் மீண்டும் மீண்டும் குறித்த ஆசிரியரிடம் ஏன் என்னை அடிக்கிறீர்கள் என்று கேட்டத்தற்கு பதில் கூறாது அதற்கும் தன்னை தாக்கியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.

எனினும், மாணவன் பெற்றோருக்கு இது தொடர்பாக எதுவும் கூறாமல் இருந்துள்ளார். இதனால் அதிக மன அழுத்ததிற்கு உள்ளான மாணவன் நேற்றைய தினம் (20.09) ஒரு கடிதத்தை தனது வீட்டில் எழுதி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தை கண்ட பெற்றோர் மாணவனை விசாரித்த போது, நடந்தவற்றை கூறி தனது அடிகாயங்களையும் உட்காயங்களையும் காட்டியுள்ளார்.

தொடர்ந்து மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்த பெற்றோர் இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரிடம் மாணவன் மூலம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதுடன்,

மாணவனின் கடிதத்தினை கொண்டு வவுனியா தலைமை பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் மாணவனின் தந்தையால் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. மாணவனால் எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

அன்புள்ள அப்பா, அம்மா நான் சுயநினைவுடன் எழுதும் கடிதம். எனக்கு பாடசாலை செல்ல விருப்பமில்லாத நிலை ஏற்படுகிறது. காரணம் 11.09.2023 தொடக்கம் எனது கற்றல் நடவடிக்கை தொடர்பாக என்னை வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை.

அதற்கு காரணம் கேட்ட போது, பகுதித் தலைவர் பிரதாஸ் என்னை கீழே விழுத்தி தும்புத் தடியால் அடித்து, சப்பாத்து காலால் மிதித்து என்னை மாணவன் என்றும் பார்க்காது சித்திரவதை செய்கிறார்.

அதற்கு பிறகு இடைவேளை நேரம் சிறுநீர் கழிக்க வெளியே சென்ற போது என்னை வெளியே செல்ல விடவில்லை. சிறுநீர் கழிக்க செல்ல கேட்டத்தற்கு தும்புத் தடியால் அடித்து, சப்பாத்து கால்களால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் உதைந்தார்.

20.09.2023 அன்று என்னை தும்புத்தடியால் அடித்து என் கை விறைத்து நிற்கும் போது என்னை பாவம் என்றும் பார்க்காமல் பூங்கன்றுக்கு தண்ணீர் ஊற்ற விட்டார்.

எனக்கு உடல் எங்கும் வலியாக உள்ளது. மூச்சு விட கஸ்ரமாகவுள்ளது. பாடசாலைக்கு வருவதற்கு சைக்கிள் ஓட நெஞ்சு வலிக்கிறது. இதனால் எனக்கு பாடசாலை வரவே விருப்பமில்லாது இருக்கிறது.

எனவே எனது உடம்பிற்கு ஏதும் ஏற்படுமாயின் அதற்கு முழுக் காரணம் எனது பகுதித் தலைவராகிய ந.பிரதாஸ் ஆசிரியர் ஆவார் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதேவளை, குறித்த ஆசிரியரால் ஏற்கனவே ஒரு மாணவன் மீது தும்புத்தடி கொண்டு தாக்கிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக பாடசாலை பெற்றோர் வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

குறித்த பாடசாலையில் ஒருசில மாதங்களுக்கு முன் பிறிதொரு ஆசிரயரால் வேறு ஒரு மாணவனின் செவியில் தாக்கி அவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார் என்பதுடன் பாடசாலையின் நற்பெயர் குறித்து பெற்றோர் குறித்த விடயத்தை பெரிது படுத்தாமல் விட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.