டிப்பர் மோதி மன்னார் குடும்பஸ்தர் பலி : சாரதி மற்றும் உதவியாளர் தப்பியோட்டம்!!

மன்னாரில்..

மன்னார், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப்புதுக் குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து சம்பவம் நேற்று புதன்கிழமை (20) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் நானாட்டான் பிரதேசத்தில் இராசமடு சாளம்பன் பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடராசா ஞானசேகரம் என தெரியவந்துள்ளது.உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் அடையாளம் : மூவருக்கு பகிரங்க பிடியாணை

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள மூவருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று (21.09) பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

அத்துடன், எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவரை தான் கண்டதாகவும் அவரை அடையாளம் காட்ட முடியும் எனவும் விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்புக்கு திகதியிடப்பட்டிருந்தது. குறித்த சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த யுவதி இன்றைய தினம் (21.09) இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை அடையாளம் காட்டியுள்ளார்.

மேலும், மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டமையினால் அவர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

குறித்த மூவரும் தலைமறைவாகவுள்ளதால் அவர்களை கைது செய்ய பகிரங்க பிடியாணை உத்தரவு வவுனியா நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு திகயிடப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக நீளமான கூந்தல்.. சாதனை படைத்த 15 வயதுச் சிறுவன்!!

உத்தரபிரதேசத்தில்..

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிதக்தீப் சிங் சாஹல். 15 வயது கொண்ட இந்த சிறுவன்தான் தற்போது உலகிலயே மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

15 வயது கொண்ட இந்த சிறுவனுக்கு முடி வளர்ப்பதில் ஆர்வம் இருந்துள்ளது. அதன்படி இந்த சிறுவனின் தலைமுடியின் நீளம் 4 அடி (146 செ.மீ) மற்றும் 9.5 அங்குலம் கொண்டதாக இருக்கிறது.

பொதுவாக கூந்தலை பராமரிப்பது கடினமான ஒன்று என்பதாலே, தற்போதுள்ள காலத்தில் பெண்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப முடிகளை வெட்டிக்கொள்கின்றனர். ஆனால் இந்த சிறுவன் தனது முடியை வளர்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

அதற்காக தனது முடிகளுக்கு என்று பிரத்யேகமாக நேரத்தை செலவிடுகிறார். வாரத்துக்கு 2 முறை தலைக்கு குளிக்கும் இவர், அதனை காய வைப்பதற்கே நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்கிறார்.

மேலும் இயற்கை பொருட்கள் அடங்கிய எண்ணெய்கள் உள்ளிட்டவையை பயன்படுத்தி வருகிறார். சீக்கிய குடும்பத்தை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் முடி வளர்ப்பதை நண்பர்கள் கிண்டல் செய்தபோதெல்லாம் வேதனையாக இருந்து வந்துள்ளார். ஆனால் தற்போது இதுதான் தனது அடையாளம் என்று பெருமையாக கூறுகிறார்.

தான் சீக்கியர் என்பதால் தனது தலைமுடியை தலைப்பாகை வைத்து மறைத்து வைத்துள்ளார். ஆனால் இப்போது, தனது தலைமுடி உலக சாதனை படைத்துள்ளதை பெருமையாக தெரிவித்து வருகிறார். இந்த நிகழ்வு உத்தர பிரதேசத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோல் பலரும் உலக சாதனைகள் படைத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, அமெரிக்காவை சேர்ந்த எரின் ஹனிகட் என்ற 38 வயது பெண் ஒருவர் உலகின் மிக நீளமான தாடி வளர்த்த பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்தார்.

முன்னதாக இதே போல் நீளமாக தாடி வளர்த்த சில பெண்கள் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு 25.5 செ.மீ அளவு தாடி வளர்த்து அமெரிக்காவை சேர்ந்த விவியன் வீலர் என்ற 72 வயது மூதாட்டி கின்னஸ் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து : வெளியான காரணம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டு பகுதியில் பேருந்து ஒன்று தீ விபத்திற்கு உள்ளாகி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.இன்று (21.09.2023) அதிகாலை இடம்பெற்ற சம்பவத்தில் எலியாஸ் சுரேஷ்குமார் என்பவரது பேருந்தே எரிந்து சாம்பலாகியுள்ளது.

குறித்த பேருந்து கடந்த திங்கட்கிழமை பயணிகளை ஏற்றியவாறு சுற்றுலாவிற்கு சென்றது. இவ்வாறு சுற்றுலா சென்ற பேருந்து இன்று அதிகாலை மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளது.

சாரதி, பேருந்தின் உரிமையாளரின் வீட்டிற்கு முன்னால் உள்ள காணியில் பேருந்தை நிறுத்தி விட்டு பேருந்தின் உரிமையாளருடன் கதைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்சிறிது நேரத்தில் இரண்டு பாரிய சத்தங்களுடன் பேருந்து எரிய ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடற்றொழிலுக்கு செல்வதற்கு சென்ற இளைஞர்கள் பேருந்து எரிவதை அவதானித்த நிலையில் தீயினை அணைக்க முயன்றனர். இருந்தும் பேருந்து முற்றாக தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.இயந்திர கோளாறு காரணமாக பேருந்து தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயவியல் பொலிஸார் தடயங்களை பெற்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிலுள்ள ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

குறித்த அனர்த்தம் இன்று (21.09.2023) அதிகாலை 3.40 மணியளவில் நேர்ந்துள்ளது.ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே பேருந்து தீப்பிடித்துள்ளது.சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டது!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை திகதிகளை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் வாரம் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பரீட்சை ஆணையாளர் தனது அறிக்கையின் பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து திருத்தம் செய்யப்பட்ட திகதிகளை எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கான திகதிகளை எனக்கு இப்போது அறிவிக்க முடியாது என்றும் அது பரீட்சை ஆணையாளரின் பணி என்றும் அவர் எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பில் திருத்தப்பட்ட பரீட்சைக் கால அட்டவணையை வெளியிடுவார் என்றும் தெரிவித்திருந்தார்.

வவுனியா தோணிக்கல் லக்ஸபான வீதியில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 27வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிறிதரன் அரவிந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறைக்காக தனது தாயாரின் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரணம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் குளத்தின் அணைக்கட்டில் கல் குவாரி அமைக்கப்பட்டதற்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா, சின்ன விளாத்திக்குளம் குளத்தின் இயற்கையான அணைக்கட்டினை உடைத்து கல் அகழ்வுப்பணி இடம்பெறுவதற்கு எதிராக கதிரவேலர் பூவரசன்குளம் கமக்காரர் அமைப்பின் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓமந்தை கமநல அபிவிருத்தி நிலையத்திற்கு முன்பாக அலுவலகத்தின் வாயிலை பூட்டி அதன் முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் இன்று (20.09) இடம்பெற்றது.

வவுனியா, சின்ன விளாத்திக்குளம் குளக்கட்டு இயற்கையாக கற்பாறைகளை கொண்டமைந்த நிலையில் 12 அடி நீரை சேமிக்க கூடிய சிறு நீர்ப்பாசன குளமாக காணப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த குளப்பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன் கல்குவாரி அமைக்கப்பட்டு கல் அகழ்வு இடம்பெற்று வந்த நிலையில் விவசாயிகள் குளத்தின் பாதுகாப்பு மற்றும் விவசாய செய்கைக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களம், வவுனியா பிரதேச செயலாளர், ஓமந்தை பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறைப்பாடு செய்த நிலையில் கல் அகழும் பணி நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 15 நாட்களாக மீண்டும் குறித்த பகுதியில் மீண்டும் கல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது. இதனால் குளத்தின் அணைப்பகுதி சேமாகியுள்ளதாகவும் அதனை சீர் செய்ய முடியாது போயுள்ளதுடன் நீரை சேமிக்க முடியாது போகும் எனவும், 200 ஏக்கர் விவசாய நிலத்தினை விவசாயம் செய்யாது கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், கல்குவாரி அமைத்துள்ளவர்கள் மேலிடத்தில் இருந்து அனுமதியை பெற்று வருவதால் தாம் எதுவும் செய்யமுடியாதுள்ளதாக வவுனியா அரச அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் இதனால் தமது விவசாயம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து குறித்த கமக்காரர் அமைப்பிற்கு கீழ்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது குறித்த பகுதிக்கு வருகை தந்த ஓமந்தை பொலிஸார் ஆர்ப்பாட்டத்தினை கைவிடுமாறு தெரிவித்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இந் நிலையில் பொலிஸார் குறித்த கல் அகழ்வுப் பணியை இடைநிறுத்துவதாக தெரிவித்ததுடன் குறித்த பகுதியையும் சென்று பார்வையிட்டனர்.

இதன் பின்னர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்த கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடி குளத்தின் அணைப்பகுதியை செப்பனிட்டு தருவதாக உறுதிமொழி அளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டிருந்தது.

வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் திலீபனின் ஊர்திக்கு பல்கலைக்கழக மாணவர்கள், மக்கள் அஞ்சலி!!

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்த்திப் பவனி வவுனியாவில் இடம்பெற்ற நிலையில் உணர்வெழுச்சியுடன் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தியாக தீபம் திலீபனின் 36வது நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் ”திலீபன் வழியில் வருகின்றோம்” என்னும் ஊர்திப் பவனியானது அம்பாறை பொத்துவிலில் ஆரம்பித்து 6 ஆவது நாளான இன்று வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றிருந்தது.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வெளிநாட்டு பிரஜைகள், வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் ஊர்தியை வரவேற்று மலர்தூபி அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் வவுனியாவின் நெடுங்கேணி, புளியங்குளம், ஓமந்தை, வவுனியா நகரம், குருமன்காடு, தாண்டிக்குளம், பம்மைமடு, வைரவபுளியங்குளம், திருநாவற்குளம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் குறித்த ஊர்தி சென்ற நிலையில் அங்கும் பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் உணர்வெழுச்சியுடன் தியாக தீபத்திற்கு மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

வவுனியாவில் மாயமான சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபா சன்மானம்!!

வவுனியாவில்..

வவுனியா – இராசேந்திரங்குளம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் என சிறுமியின் அம்மம்மாவான குணரட்னம் ரோகினி அறிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (19.09.2023) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் துண்டு பிரசுரம் ஒன்றும் அவரால் வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,வவுனியா – பாரதிபுரம் பகுதியில் 2 வயது சிறுமி கடந்த (25.08.2023) அன்றைய தினம் நீர்த் தொட்டியில் தவறி விழுந்து இறந்தார்.

இறந்த சிறுமியின் பிரேதம் இராசேந்திரங்குளம் இந்து மயானத்தில் கடந்த (27.08.2023) ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டது. குறித்த சிறுமியின் பிரேதம் கடந்த (05.09.2023) அன்றைய தினம் சிறுமியின் பிரேதம் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த உண்மையான தகவல் தெரிந்தவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் சன்மானமாக வழங்கப்படும்.குறித்த சிறுமியின் சடலத்தை எடுத்தவர்கள் மீள கையளிக்கின்ற போது 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும். எங்களது பிள்ளையின் உடல் வேண்டும் எனவும் குறித்த சிறுமியின் அம்மம்மா தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த சமுர்த்தி உத்தியோகத்தர்!!

திருகோணமலையில்..

திருகோணமலை – வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சமுர்த்தி உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்றையதினம் (19-09-2023) மாலை பன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தில் கோமரங்கடவெல – கரக்கஹவெவ பகுதியைச் சேர்ந்த 53 வயதான அணில் சதுரசிங்க என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கோமரங்கடவெல பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் குறித்த நபர் திருகோணமலைக்கு வருகை தந்து வீட்டுக்கு செல்லும்போது பன்குளம் – 4ம் கண்டம் பகுதியில் வைத்து யானை வீதியை கடக்கும்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளை மூலம் தெரிய வந்துள்ளது.

காயமடைந்த நபர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடு அனுப்புவதாக கூறி ஏமாற்றியவரின் பரிதாப நிலை : குடும்பம் செய்த பாதக செயல்!!

குடாவெவவில்..

சீதுவ – தண்டுகங் ஓய பகுதியில் நபரொருவரை அடித்துக் கொன்று பயணப் பையில் சடலத்தை வைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடாவெவ – மஹாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த சுசந்த ரஞ்சன் ரணசிங்க என்ற 36 வயதான திருமணமாகாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரதான சந்தேகநபரின் மூத்த மகனை ஜப்பானுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றிய சம்பவத்தின் அடிப்படையில்,

குறித்த நபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட இளைஞன் வெளிநாடுகளுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதாகக் கூறி மோசடி செய்த குற்றச்சாட்டுகள் பல இருப்பதாக தெரியவந்துள்ளது.

மாதம்பே, கட்டான, பண்டாரவளை பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட இளைஞனும் சந்தேகநபர்களும் நட்பாக பழகியவர்கள் எனவும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 11ஆம் திகதி புறக்கோட்டை பிரதேசத்தில் குறித்த இளைஞனை சந்தேகநபர்கள் சந்தித்ததாகவும், குறித்த இளைஞனை சூட்சுமமாக தமது காரில் ஏற்றி கட்டான பிரதேசத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள தென்னை நிலத்திற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனிடம் பணம் கேட்டு கைகளாலும் தடியாலும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னரே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிலாபத்தில் பெய்த மீன் மழை!!

சிலாபத்தில்..

சிலாபம் பம்பல பிரதேசத்தில் வானில் இருந்து மீன் விழுந்த சம்பவம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த பிரதேசத்தின் பல இடங்களில் நேற்று மாலை மழையுடன் வானில் இருந்து இந்த மீன்கள் விழுந்துள்ளது.

பம்பல பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் அருகிலேயே அதிகளவிலான மீன்கள் விழுந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. மீன் மழை போன்று பொழிந்ததாகவும் மீன்களுக்கு மேலதிகமாக ஆமைகளும், நன்டுகளும் விழுந்ததாகவும்,

அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த மீன்களை மக்கள் மீட்டுள்ளனர். அதனை பாடசாலை மாணவர்கள் பலர் வீட்டிற்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படகின்றது.

மீண்டும் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக : சர்ச்சைகளுக்கு முடிவு!!

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷானக தலைமை தாங்குவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தசுன் ஷானகவை தொடர தெரிவுக்குழு முடிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணையின் தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானகவை நீக்க வேண்டாம் என பல்வேறு தரப்புக்களில் எதிர்ப்புகள் உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காதல் மனைவியை 17 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கணவன்.!!

பொள்ளாச்சியில்..

பொள்ளாச்சி அருகே தொப்பம்பட்டி புதுக்காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற டேவிட் (34), பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி கற்பகம் (33). இவர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆறுமுகத்துக்கும், கற்பகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஆறுமுகம் தனது மனைவியை பிரிந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் கடந்த சில வாரமாக ஆறுமுகம் பொள்ளாச்சி பகுதியில் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தவர், கடந்த ஒரு வாரமாக, தொப்பம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, கற்பகத்திடம் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு ஆறுமுகம் தெரிவித்துள்ளார். இதற்கு கற்பகம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு தொப்பம்பட்டியில் உள்ள தனது மனைவி கற்பகத்தின் வீட்டிற்கு ஆறுமுகம் சென்றுள்ளார்.

அப்போதும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது வீட்டுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் கத்தியால் கற்பகத்தின் வயிற்றுப் பகுதி, கழுத்து பகுதி என 17 இடங்களில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் கற்பகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மகாலிங்கபுரம் போலீஸார் கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் பிருந்தா அறிவுறுத்தலின்படி காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையில் பல்லடத்தில் பதுங்கி இருந்த ஆறுமுகத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை!!

தெலங்கானாவில்..

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் நந்தினி. தனது மகள் காதலித்ததை அறிந்த குமார், அவசர, அவசரமாக மகளின் காதலை பிரித்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால், மகளின் கணவருக்கு எலும்பு புற்று நோய் ஏற்பட்டு இறந்துவிட்டார்.

இந்நிலையில், நந்தினி தன் காதலரை மணந்துகொண்டதாக தெரிகிறது. மகளின் இந்த செயலால் கோபமடைந்த தந்தை மகேஷ் தனது மகள் நந்தினிக்கு, இறந்துவிட்டார் என்பது போல கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊரில் ஒட்டினார்.

அது மட்டுமல்லாமல் அவர் தனது மகள் உயிருடன் இருக்கும்போதே, அவருக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FREE FIRE கேம் விளையாட பணம் தராத தாய்: விரக்தியில் விபரீத முடிவெடுத்த மாணவன்!!

புதுச்சேரியில்..

புதுச்சேரியில் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாட ரீசார்ஜ் செய்ய தாய் பணம் தர மறுத்ததால் விரக்தியடைந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட மீனவ கிராமமான வீராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் பச்சைவள்ளி.

இவர் புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜவுளிக்கடை கேண்டினில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் அருள்தாஸ்; கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி படகில் அடிபட்டு உயிரிழந்துவிட்டார்.பச்சைவள்ளி – அருள்தாஸ் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் கமலேஷ், புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சூழலில் கமலேஷ் நேற்று மதியம் தனது தாயின் புடவையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்த அவரது தம்பி ரிஸ்வான் அதிர்ச்சியில் கூச்சலிட பச்சைவள்ளியின் தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்தனர்.தொடர்ந்து தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த கமலேஷை அனைவரும் மீட்டு சோதனை செய்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இது தொடர்பாக அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கமலேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கமலேஷ் வீட்டில் இருக்கும் நேரங்களில் ப்ரீ பையர் எனும் ஆன்லைன் விளையாட்டை செல்போஃனில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன்படி நேற்றும் காலை நேரத்தில் கேம் விளையாட செல்போனை ரீசார்ஜ் செய்வதற்காக தனது தாய் பச்சைவள்ளியிடம் பணம் கேட்டபோது அவர் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பும்போது ரீசார்ஜ் செய்து தருவதாக கூறியுள்ளார்.

விடுமுறை நாளான இன்று வீட்டிலிருந்த அவர் காலை முதலே கேம் விலையாட முடியவில்லை என அக்கம்பக்கத்தில் உள்ள அவரது நண்பர்களிடம் வேதனை தெரிவித்திருந்த நிலையில், மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனில் ஆன்லைன் கேம் விளையாட ரீசார்ஜ் செய்ய தாய் பணம் தர மறுத்ததால் விரக்தியடைந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”