கிளிநொச்சி – பளை இயக்கச்சி இராணுவ முகாம் ஒன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி மற்றும் நான்கு மகசீன்களுடன் தனது வீட்டுக்குச் செல்ல முற்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைத்து இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
இயக்கச்சி முகாம் ஒன்றில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் விடுமுறையில் குருநாகல் பிரதேசத்தில் உள்ள வீட்டுக்குச் செல்லும் வேளையில் தனது T-56 ரக துப்பாக்கியையும் எடுத்துச் சென்றுள்ளார்.
விடுமுறையில் செல்லும்போது துப்பாக்கியை ஒப்படைக்காமல் சென்றமையால் முகாமில் பரபரப்பான சூழல் ஏற்பட, குறித்த முகாம் இராணுவத்தினர் சிப்பாயை தேடி பளை புகையிரத நிலையத்துக்குச் சென்றுள்ளனர். எனினும் சிப்பாய் பளை புகையிரத நிலையத்துக்குச் செல்லாமல் கொடிகாமம் சென்று, அங்கிருந்து குருநாகல் செல்வதற்காக புகையிரதத்தில் பயணித்துள்ளார்.
இந்த நிலையில், இராணுவ அணி ஒன்று சிவில் உடையில் பளை புகையிரத நிலையத்தில் ஏறி சிப்பாயை தேடியபோது அவர் புகையிரதத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்டார்.இதன்போது புகையிரதம் கிளிநொச்சி, அறிவியல் நகர் புகையிரத நிலையத்தை அடைந்த நிலையில் உடனடியாக இராணுவத்துக்கு தகவல் வழங்கப்பட்டு, இராணுவ பொலிஸார் மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைத்து சிப்பாயை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிப்பாய் இராணுவ பொலிஸாரிடம், குடும்பத் தகராறு காரணமாக துப்பாக்கியை தான் எடுத்துச் சென்றதாக தெரிவித்த நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த சிப்பாய் பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் சேற்றினுள் புதையுண்ட நிலையில் 05 வயது யானை மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இன்று (04.09) தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியிலே மாடு மேய்க்கச் சென்ற கிராமவாசி ஒருவர் புதையுண்ட நிலையில் யானை ஒன்று உயிருக்கு போராடுவதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து மாமடு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் யானையினை மீட்பதற்கான நடவடிக்கையினை வனஜீவராசிகள் திணைக்களம், பொலிஸார், மற்றும் கிராமமக்கள் இணைந்து முன்னெடுத்ததுடன், யானை மீட்கப்பட்டு பாதுகாப்பாக காட்டுக்கு அனுப்பபட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
கடும் வெப்பம் காரணமாக நீர் அருந்த வந்த யானையே நீரேந்துப்பகுதியில் புதைந்து இருக்கலாம் எனவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேலும் தெரிவித்தனர்.
தமிழகம் – இராமேஸ்வரம் பகுதியில் 100 கோடி இந்திய ரூபாய் செலவில் இலங்கையை பார்த்தபடி 108 அடியில் பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலையொன்று அமைக்கப்படவுள்ளது.குறித்த சிலை இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அடுத்த ஓலைக்குடா கிராமத்தில் அமையப்பெறவுள்ளது.
சிலை அமைப்பதற்கான அஸ்திவார பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் அடுத்தாண்டு சிலை திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.இராமேஸ்வரம் என்பது இராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய காசிக்கு நிகரான புண்ணிய பூமி. எனவே பாவங்கள் நீங்கி புண்ணிய கிடைக்கும் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குறித்த பகுதிக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்து, அடுத்தாண்டு இராமேஸ்வரத்தில் இருக்கும் மற்றொரு முக்கிய புண்ணிய தலமாகவும் சுற்றுலா தலமாகவும் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில் மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் இரத்தினபுரியில் இருந்து எம்பிலிப்பிட்டிய நோக்கி பயணித்து கொண்டிருந்த காரொன்று எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, மற்றும் பாதசாரி கடவையில் வீதியைக் கடப்பதற்கு முயற்சித்த பெண்ணொருவர் மீது மோதியுள்ளது.
பிறகு குறித்த கார் கடையொன்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு கார் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அதில் பயணித்த அவரது சகோதரர், முச்சக்கர வண்டியில் பயணித்த தந்தை மற்றும் மகன் பாதசாரி பெண் உட்பட அனைவரும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பணித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 73 வயதுடைய கொலம்பகேயார பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
விபத்துடன் தொடர்புடைய கார் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேகநபர் 30 வயதுடைய திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் தனியார் நிறுவனமொன்றின் முகாமையாளராக கடமையாற்றுபவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காரில் மேலும் இருவர் பயணித்ததாக தெரிவித்த பொலிஸார், மூவரும் விருந்தொன்றுக்கு சென்று அங்கு மதுபானம் அருந்தி உள்ளதாகவும் அதன் பின்னரே சந்தேகநபர் காரை செலுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.மேலும் விபத்து தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையின் புகழ்பூத்த பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றையதினம் (03.9) ஞாயிறு மாலை நடைபெற்ற தேரோட்டத்தில் தேர் ஓடாமல் நின்ற சம்பவம் பக்தர்கள் மனதில் சஞ்சலங்களை தோற்றுவித்துள்ளது.
வரலாற்றுத்தலமாகிய கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சர பெருவிழா கடந்த மாதம் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது. தமிழ் மன்னர்கள் வகுத்த வழிமுறையின் கீழ் இன்றும் தான்தோறீச்சரம் உற்சவம் பழமை மாறா பண்பாட்டுடன் நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில் நேற்றையதினம் பெருமளவான பக்தர்கள் நூழ வீதி வலம் வந்த பிள்ளையார் தேர் இடைநடுவில் நின்றதாகவும் சித்திரத்தேரில் பொருத்தப்பட்டிருந்த வடம் ஐந்து தடவைகள் அறுந்ததுடன் சித்திரத்தேர் ஓடாமல் நின்றுள்ளமை பக்தர்களுக்கு அதிர்ச்சியையும் என்ன நிகழுமோ என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆலய பிரதம குரு தேரில் இருந்து இறங்கி கோயிலுக்குள் சென்று ஏதோ பிழை நடந்து விட்டது.
ஈஸ்வரா தேரை நகர்த்தி செல் என மனமுருகி வேண்டிய பின் வரலாற்றில் முதல் தடவையாக 5 வடங்கள் பூட்டிய பின்பே தேர் வீதி வலம் வந்ததாக கூறப்படுகின்றது.அதேவேளை இதற்கு முதல் பல வருடங்களுக்கு முன்பும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இவ்வாறு தேர் ஓடாது நின்ற இரு சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.
1920 ஆண்டு தேர் ஆலயத்தை விட்டுச்சென்று ஆற்றில் தாண்டதாகவும் 1933 ஆம் ஆண்டு உள்வீதியில் வலம் வந்த இரு தேர்களும் ஓடாமல் இடைநடுவில் நின்றதாகவும் மூன்று நாட்களுக்கு பிறகு படுவான்கரை மக்கள் ஒன்று சேர்ந்து தேரினை இழுத்து சென்று குறிப்பிட்ட இடத்தில் விட்டதாகவும் கூறப்படுகின்றது.இம்முறை தேர் வடம் அறுந்து ஓடாமல் நின்றது ஏன் என்ற கேள்வி கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன் சஞ்சலங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகருக்கண்மையுள்ள கொக்கட்டிச்சோலை கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோவில் ஆகும்.போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் “புல்லுண்ட கல் நந்தி” இக்கோவிலின் பெருமைகளில் ஒன்றாக விளங்குகின்றது. வெள்ளையர்களால் ஈழத்தில் சைவ சமயகோவில்கள் உடைத்துத் தரமட்டமாக்கப்பட்ட போது இவ் கோவிலையும் விட்டு வைக்க விரும்பாத வெள்ளையர்கள் கோவிலை உடைக்க வந்தார்கள்.
குருக்களுடன் வெள்ளையர்களுக்கு இடம்பெற்ற விவாதத்தில் இந்த கல் நந்தி புல்லுண்ணும் என்ற குருக்களின் கூற்றை நிரூபிக்க ஆலயத்தின் கல் நந்தி எழுந்து காலால் மண்ணை எற்றி தனுப்போட்டு கொடுக்கப்பட்ட புல்லை உண்டு வெள்ளையர்களை மெய்மறக்க வைத்து புறமுதுகு காட்டி ஓடவைத்த வரலாற்றுப்பெருமையும் இவ் ஆலயத்துக்கு உண்டு.
சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் உத்தரவின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.விசாரணைகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் இரு வைத்தியர்கள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு , விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மருத்துவ தாதியின் செயற்பாடு காரணமாக 08 வயது சிறுமியின் இடது கை , மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தமது பிள்ளையின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமி ஒருவருக்கு ஊசி மருந்து ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்க வேண்டிய துர்ப்பாக்கிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய விசாரணை குழுவை நியமித்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சுக்கும் குறித்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், காய்ச்சல் காரணமாக குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில் நோய் எதிர்ப்புக்காக ஊசி மூலம் மருந்து ஏற்றப்பட்டது.
ஊசி ஏற்றப்பட்ட மறுநாள் இரவு சிறுமி வலியினால் அவதிப்பட்ட நிலையில் குறித்த விடுதியில் கடமையில் இருந்த தாதியர்களிடம் சிறுமியின் நோய்நிலை தொடர்பில் தாயார் கூறிய போது ஊசி ஏற்றப்பட்டால் நோய் இருக்கும் என விடுதியின் தாதியர்கள் பொறுப்பற்ற விதத்தில் பதில் அளித்ததாக பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுமியின் கை நரம்பு பாதிக்கப்பட்டமை உணர்ந்த வைத்தியர்கள் அதனை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்த நிலையில் சனிக்கிழமை காலை சத்திர சிகிச்சை மூலம் குறித்த சிறுமியின் மணிக்கட்டுக்குட்பட்ட பகுதி அகற்றப்பட்டது.
சிறுமி அனுமதிக்கப்பட்ட விடுதியின் பொறுப்பு வைத்தியர் குறித்த தினத்தில் கடமையில் இருந்தாரா என்பது தொடர்பில் சந்தேகங்கள் எழும் நிலையில் விடுதியில் இருந்த தாதியர்களின் அலட்சியப் போக்கும் சிறுமியின் கை அகற்றப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, இடம்பெற்ற சம்பவம் மனவேதனையை உண்டு பண்ணும் ஒரு சம்பவமாக பார்க்கிறேன்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய விசாரணை குழுவை நியமித்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சுக்கும் குறித்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளேன்.விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பாரபட்சமின்றி எடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை பெறுபேற்றில் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவில் வவுனியா மாவட்ட மட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் முதலிடங்களை பெற்றுள்ளனர்.
இதன் பிரகாரம் கணிதப் பிரிவில் நிசாந்தன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும், விஞ்ஞானப் பிரிவில் விதுவர்சன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளதுடன் வர்த்தகப் பிரிவில் நான்கு மாணவர்கள் 3 பாடங்களில் ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.
இம் மாணவர்களுக்கு வவுனியா நெற் இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். முழுமையான விபரங்களை தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.
மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்த மாணவன் கொழும்பு – ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்ற முதலாம் ஆண்டு மாணவராவர்.
சம்பத்தினமான கடந்த 31.08.2023 அன்று குறித்த மாணவன் காணாமல் போன நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொலைபேசி மூலம் அவரை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர். எனினும் அவரது தொலைபேசி செயற்பட்டதாகவும் எவ்வித மறு அழைப்பும் உறவினருக்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகமடைந்த உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிரித்த பொலிஸார் , மாணவன் சென்ற இடங்கள் தொடர்பான சிசிரீவி காணொளியை ஆராய்ந்துள்ளனர். அதன்படி மாணவன், கொழும்பில் உள்ள தனியார் விடுதியொன்றின் அறையை முன்பதிவுசெய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும், உயிரிழந்த மாணவனின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை உயிரிழந்த மாணவன் கல்குடா வலயத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்று, கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்ததாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (04.09.2023) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி ராமகுமார் கவிப்பிரியா கலைப்பிரிவில் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.
இம் மாணவி கலைப்பிரிவில் விவசாய விஞ்ஞானம் , புவியியல் , தமிழ் ஆகிய பாடங்களில் 3A சித்தியினையும் ஆங்கிலம் பாடத்தில் எஸ் பெறுபேற்றையும் பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 194வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவ் மாணவிக்கு வவுனியா நெற் இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன் உங்களது பாடசாலை மாணவர்களின் சித்திகளை எமது இணையத்தில் பிரசுரிக்க விரும்பினால் எமது முகநூல் பக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.
கனேடிய குடியுரிமை பெற்ற ஒருவரின் மனைவி இந்தியாவில் பிரசவித்ததால், தன் மகளை கனடாவுக்கு அழைத்து வருவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. லிங்கன் (Lincoln Sekkappan), ஒரு கனேடிய குடிமகன். அவரது மனைவி கமலம் (Kamalam Elangovan) கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ளார்.
ஆனால், இந்தியாவுக்கு வந்திருந்தபோது, தன் மகளான ஆவிரா (Avira Mutho)வை பிரசவித்துள்ளார் கமலம். தம்பதியர் தங்கள் மகளுக்கு குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பித்தபோது, சில ஆவணங்களை இணைக்கத் தவறியுள்ளார்கள்.
முதல் விண்ணப்பமே பிரச்சினைக்குரியதாகிவிட, இரண்டாவது விண்ணப்பத்தில் தேவையான ஆவணங்களை இணைத்தும், சில ஆவணங்கள் இல்லை என்றே புலம்பெயர்தல் அலுவலகம் கூறியுள்ளது. ஆக, இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டன.
இதை ஒரு எச்சரிக்கை செய்தியாகவும் எடுத்துக்கொள்ளலாம். காரணம், முதல் விண்ணப்பத்தில் தவறு வராதிருந்திருக்குமானால், இவ்வளவு கால தாமதத்திற்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.
இது குறித்து விளக்கிய புலம்பெயர்தல் சட்டத்தரணியான Chris Veeman, இந்த தம்பதியரின் குழந்தை விடயத்தில் பல பிரச்சினைகள் உள்ளதாக தெரிவிக்கிறார். முதலாவது, தம்பதியர் என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்படவேண்டும் என்பது குறித்த விவரங்களை சரியாக பின்பற்றவில்லை.
ஆகவே, முதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இரண்டாவது விண்ணப்பம் குறித்து புலம்பெயர்தல் துறையிடமிருந்து சரியான விளக்கம் கிடைக்கவில்லை. ஆக, புலம்பெயர்தல் எளிதான ஒரு செயல்முறை அல்ல என்கிறார் Chris.
மனித தவறுகளும் தொழில்நுட்பப் பிரச்சினைகளும் பல குழப்பங்களை உருவாக்கிவிடுகின்றன என்கிறார் அவர். இந்த தம்பதியரைப் பொருத்தவரை, குழந்தையின் விண்ணப்பங்களை இறுதி செய்ய, ஒருவேளை அதிகாரப்பூர்வ சட்டத்தரணி ஒருவரின் உதவி அவர்களுக்குத் தேவைப்படலாம் என்கிறார் அவர்.
இலங்கையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையானது 145 ரூபாவால் அதன்படி புதிய விலை 3,127 ரூபாவாகும்.
5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 58 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 1,256 ரூபாவாகும்.
அத்துடன் 2.3 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 26 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 587 ரூபாவாகும்.
இன்று (04.09.2023) நள்ளிவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பூதிப்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் போஸ் இவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார் . இவருடைய மனைவி முருகேஸ்வரி . இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் முருகேஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
வளைகாப்புக்கு பிறகு அதே ஊரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.இன்னும் ஓரிரு நாட்களில் பிரசவம் நடந்து விடும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் அவருடைய குடும்பத்தினர் அதற்குரிய முன்னேற்பாடுகளில் இருந்தனர்.
காலையில் முருகேஸ்வரி தனது பெற்றோர் வீட்டில் இருந்து கிணற்றுக்கு அருகில் ஆட்டுக்குட்டிகளுக்கு இரை பறிக்கச் சென்றுள்ளார். இரை பறித்துக் கொண்டிருக்கும் போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அவருடைய தாய் மீனா கத்தி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தார்.
உடனடியாக 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குதித்து கர்ப்பிணியை மீட்க முயன்றனர். இதனால் அவரை மீட்க முடியவில்லை என்பதால் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேனி தீயணைப்பு படைவீரர்கள், தண்ணீரில் குதித்து முருகேஸ்வரியை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, கூலித்தொழிலாளி ஞானசேகரன் என்பவரை போலீசார் அங்கு அழைத்து வந்தனர். அவர் கிணற்றில் குதித்து சில நிமிடங்களில் முருகேஸ்வரி உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தார். காலையில் விழுந்தவரின் உடல் சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டது.
முருகேஸ்வரி உயிரிழந்த நிலையில், அவருடைய வயிற்றில் இருந்த சிசுவும் இந்த உலகை பார்க்கும் முன்பே பரிதாபமாக இறந்தது. பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது, கிணற்றுக்கு அருகில் வளையல்கள் உடைந்து கிடந்தன. அதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து முருகேஸ்வரியின் தாய் மீனா கொடுத்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஓராண்டு தான் ஆகிறது என்பதால் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் சேற்றினுள் புதையுண்ட யானையினை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த மீட்பு நடவடிக்கையானது இன்று(03.09.2023) மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியிலே மாடு மேய்க்க சென்ற கிராமவாசி ஒருவர், புதையுண்ட நிலையில் யானை ஒன்று உயிருக்கு போராடுவதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, மாமடு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் யானையினை மீட்பதற்கான நடவடிக்கையினை வனஜீவராசிகள் திணைக்களம், பொலிஸார், மற்றும் கிராமமக்கள் இணைந்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை பகுதியில் சிறுவன் ஒருவர் நாளுக்கு நாள் பார்வை இழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாத்தறை உருகமுவ, இஹலகொட கனிஷ்ட பாடசாலையில் 04ஆம் தரத்தில் கல்வி கற்கும் பஹன்சித என்ற மாணவனே இவ்வாறு நாளுக்கு நாள் பார்வையிழந்து வருவதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
மாணவன் தனது 15 ஆவது வயதில் முழுமையாக கண் பார்வையை இழக்க நேரிடும் என மருத்துவர்கள் சந்தேகிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது மகனுக்கு சிகிச்சை அளித்து, அவரின் கண் பார்வையை குணப்படுத்த மருத்துவர்கள் முன்வர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் தனியார் மருத்துவமனையில் புகுந்து காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்த காதலன், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சூளை பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் சத்யஸ்ரீ (21). இவர் கல்லூரியில் பி.காம் சிஏ படித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக சத்யஸ்ரீ திருப்பூர் குமார்நகர் 60 அடி சாலையில் உள்ள தனியார் பிசியோதெரபி மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்த நரேந்திரன் (25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நரேந்திரன் லாரி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக நரேந்திரனுடன் சத்யஸ்ரீ பேசுவதை நிறுத்தினார். இந்த நிலையில் நேற்று காலை நரேந்திரன் காதலி பணியாற்றும் தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சத்யஸ்ரீயை சந்தித்தார். அப்போது இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யஸ்ரீயின் கழுத்தில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சத்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதை பார்த்த மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் அலறியடித்து ஓடினர். காதலி உயிரிழந்த பின் நரேந்திரனும் கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டார். உயிருக்கு போராடிய நரேந்திரனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். நரேந்திரன் காதலியை கொலை செய்ய திட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் இருந்து பஸ் மூலம் திருப்பூருக்கு வந்துள்ளார்.
திருப்பூரில் உள்ள ஒரு கடையில் கத்தியை வாங்கியிருக்கிறார். நரேந்திரனுடன் சத்யஸ்ரீ கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சத்யஸ்ரீக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் நரேந்திரன் சந்தேகித்துள்ளார். இதனால் கத்தியால் குத்தும்போது, ‘‘எனக்கு இல்லாத நீ வேற யாருக்கும் இல்லை’’ என சத்தம் போட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அருகே தேப்பிராமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கமலபதி. இவரது மகள் ஜெயஸ்ரீ (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மருங்கூர் சத்திரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்கராசு.
இவரது மகன் மணிகண்டன் (35). கூலித்தொழிலாளி. இவர்கள் இரண்டு பேரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கின்றனர். இதை ஜெயஸ்ரீ வீட்டில் கண்டித்து வந்துள்ளனர். இதனால் ஜெயஸ்ரீ மணிகண்டனிடம் பேசி பழகுவதை நிறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜெயஸ்ரீயை வழிமறித்து பேச முயன்றார். ஆனால் ஜெயஸ்ரீ இதை கண்டுகொள்ளாமல் சென்றார்.
அப்போது மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயஸ்ரீயின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றார். இதில், படுகாயமடைந்த ஜெயஸ்ரீ திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார், வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அனுராதபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கள்ளக்காதலியுடன் தங்கியிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலாவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தனது கள்ளக்காதலியுடன் விடுதிக்கு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அன்று மதியம் ஒரு மணியளவில் அவர் விடுதியில் திடீரென விழுந்துள்ள நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி இது திடீர் மாரடைப்பு காரணமாக ஏற்பட்ட மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.