பதுளை – ஹாலி எல, உனுகொல்ல வீதியில் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று (23.08.2023) காலை இடம்பெற்ற இந்த வீதி விபத்தில் காயமடைந்த மூவரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹாலிஎலயில் இருந்து உனுகொல்ல பிரதேசத்திற்கு பால் சேகரிப்பதற்காக சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் ஹாலிஎல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவான் குணதிலக்கவின் பணிப்புரையின் பேரில், போக்குவரத்துப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் கூறியுள்ளனர்.
குருந்தூர் மலை தொல்பொருட் திணைக்களத்திற்கானது. அதனை பௌத்த சமயத்தவர் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. இந்த நாட்டில் அனைவருக்கும் வழிபடும் சுதந்திரம் உண்டு.
அதற்கு தொல்பொருள் திணைக்களம் அனுமதிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் தலைமையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவிற்கு வருகை தந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரங்கே பண்டார அவர்கள் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மகஜர் ஒன்று வழங்கப்பட்டது.
குறித்த மகஜரை வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தலைமையில் தேசிய ஒற்றுமைக்கான சர்வமத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த சங்கத்தினர் இணைந்து நேற்றைய தினம் (21.08) கையளித்தனர்.
குறித்த மகஜரிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குருந்தூர் மலை உள்ளிட்ட தொல்பொருட் திணைக்களத்திற்குட்பட்ட பிரதேசங்களை தொல்பொருட் திணைக்களம் பாதுகாக்க வேண்டும். தொல்பொருட் திணைக்களத்தின் பிரதேசங்களை பௌத்த சமயம் மட்டும் உரிமை கொண்டாட முடியாது.
தொல்பொருட் திணைக்களம் இந்த நாட்டிற்கானது. அது அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையை தரும் விதமாக செயற்பட வேண்டும். தொல்பொருட் பிரதேசங்களிற்கு செல்வதற்கும், வழிபடுவதற்கும் பௌத்த சமயத்திற்கு மட்டும் அனுமதி வழங்காது இந்த நாட்டில் வாழும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயத்தவர்களுக்கும் வழிபடுவதற்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதியும், அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவ்ஜீத் ஜும்மா பள்ளிவாசல் மெளலவி சதுர்தீன் மெளலவி, ஓமந்தை பங்கு தந்தை ஜெஸ்லீ ஜெகநாதன், கணேசபுரம் கருமாரி நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு பிரமசிறி பூ.முகுந்தன் சர்மா உட்பட சர்வமத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த மக்கள் ஒன்றிய பிரதிநதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டியக் கலையை அனைவருக்கும் சேர்க்க முயற்சி செய்து வருவதாக கூறும் இலங்கையரான ஜெயந்தி யோகராஜா லண்டனில் தமது நாட்டியப் பாடசாலையில் பல நாட்டு மாணவர்களுக்கு நாட்டியக்கலையை பயிற்றுவிக்கிறார்.
இலங்கையில் பிறந்து தற்போது லண்டனில் குடியிருந்து வரும் ஜெயந்தி யோகராஜா பரத நாட்டியத்தை மூன்று வயதில் கற்கத் தொடங்கி, 13 வயதில் இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்தில் அரங்கேற்றம் நடத்தியுள்ளார்.
நுண்கலையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள ஜெயந்தி யோகராஜா வீணை, வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளையும் வாசிக்கும் திறமை பெற்றவர். மட்டுமின்றி, லண்டனில் உள்ள சலங்கை நர்த்தனாலயா அகாடமியின் இயக்குநராகவும், கிரிபின் கல்லூரி நடனத்துறை தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
அத்துடன் நெதர்லாந்து, ஜேர்மனியில் உள்ள பாடசாலைகளில் நாட்டிய ஆசிரியராக பணியாற்றியுள்ளார். லண்டன் மட்டுமின்றி, நெதர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் நாட்டியப்பள்ளி நடத்தி வருகிறார்.
அங்குள்ள பாடசாலைகளில் முன்னாள் மாணவர்களை நடன ஆசிரியர்களாக நியமித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2019ல் நடன நிகழ்ச்சியும், 2023ல் லண்டனில் சரஸ்வதம் பிரவாஹம் நாட்டிய நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளார்.
மட்டுமின்றி, இதுபோன்ற நிகழ்ச்சிகளால் நாட்டியக் கலையை அனைவருக்கும் சேர்க்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக ஜெயந்தி யோகராஜா தெரிவித்துள்ளார். மேலும், லண்டனில் உள்ள புகழ்பெற்ற அறிவியல் அருங்காட்சியகத்தில் பல ஆங்கிலேயர்களுக்கு நடனம் கற்றுக் கொடுத்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டியக்கலை தொடர்பில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ள அவர், பல மொழிகளில் அந்த நூல்கள் இருப்பதால் உலகளாவிய ஆதரவு கிடைப்பதாகவும், மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் அகில இந்திய நாட்டிய சங்கத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள இவர் இதுவரை 30-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
கடையநல்லூர் அருகே இளம்பெண்ணை கொன்று உடலை கிணற்றில் வீசிய இன்ஸ்டாகிராம் காதலன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே வலசை கிராமத்தில் கிணற்றில் கடந்த 10ம் தேதி சாக்குப்பையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது.
கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து இளம்பெண் யார்? அவரை கொன்று வீசியது யார்? என விசாரணை நடத்தினர். பெண்ணின் முகம் முழுவதும் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், கையில் பச்சை குத்தப்பட்டிருந்த எம்.வி என்ற எழுத்தை அடையாளமாக வைத்து தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் காணாமல்போன இளம்பெண் குறித்து விசாரித்தனர்.
இதில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை காவல்நிலையத்தில் வினோதினி என்பவர் மாயமானதாக புகார் பதிவாகி இருந்தது. இதையடுத்து அம்மாவட்ட போலீசாரை தொடர்பு கொண்டு காணாமல் போன இளம்பெண்ணின் அங்க அடையாளங்கள் குறித்து விசாரித்தனர்.
இதில் மீட்கப்பட்ட இளம்பெண் பிணம், வினோதினிதான் என்பது உறுதி செய்யப்பட்டது. வினோதினியின் செல்போனில் கடைசியாக தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து விசாரித்தபோது, வலசையை சேர்ந்த மனோரஞ்சித் என்ற வாலிபர் பேசியது தெரிய வந்தது.
அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மனோரஞ்சித், வினோதினியை கொலை செய்தது தெரிந்தது. அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: எனக்கும், வினோதினிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
நான், அவரை தீவிரமாக காதலித்து வந்தேன். ஆனால் வினோதினி, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் என்னுடனான தொடர்பை கைவிடவில்லை. இதனால் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். வினோதினி அவ்வப்போது என்னை சந்திப்பதற்காக வலசை வந்து செல்வார்.
இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் வினோதினிக்கு மேலும் சில இளைஞர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி நான் கேட்கவே, “என் மீது நம்பிக்கை இல்லையா?, நான் அப்படி எல்லாம் கிடையாது, உனக்கு நான் உண்மையாக உள்ளேன்’ என்று கூறி சமாதானம் செய்தார்.
கடந்த 7ம் தேதி வினோதினியை ஊருக்கு அழைத்தேன். அவரும் வந்தார். வலசை காட்டுப்பகுதியில் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.
அப்போது வினோதினி, “என்னை நம்பவில்லை என்றால் நீயே என்னை கொன்றுவிடு’ என எதார்த்தமாக கூறினார். ஆத்திரத்தில் இருந்த நான், அருகே இருந்த கட்டையை எடுத்து வினோதினியின் தலையில் பலமாக தாக்கினேன்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தார். இதனால் நண்பர்களான மகாபிரபு, பரத், மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை செல்போனில் அழைத்து அனைவரும் சேர்ந்து சாக்குப்பையில் வினோதினி உடலை கட்டி கிணற்றில் வீசினோம்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மனோரஞ்சித் மற்றும் உடந்தையாக இருந்த நண்பர்கள் என 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், தாவணகெரேயில் உள்ள ஹலேகல்லு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் யோகேஷ். இவருக்கு வயது , 37. இவருடைய மனைவி பிரதிபா. மகன் யஷ்.மூவரும் அமெரிக்காவில் பால்டிமோரில் வசித்து வந்தனர்.
யோகேஷ் அமெரிக்காவில் இன் ஜினியராக பணிபுரிந்து வருகிறார். ஆகஸ்ட் 15ம் தேதி முதல் யோகேஷ் வீட்டில் இருந்து யாரும் வெளியில் வரவில்லை. இதனையடுத்து ஆகஸ்ட் 18ம் தேதி பக்கத்து வீட்டுக்காரரான பால்டிமோர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
அவர்கள் வந்து பார்த்த போது மூவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் யோகேஷ் மனைவி, மகனை சுட்டு கொலை செய்து விட்டு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மாகாண காவல் துறையின் செய்தித் தொடா்பாளா் ஆன்டனி ஷெல்டன் கூறியதாவது, உயிரிழந்தவா்களின் உடலில் துப்பாக்கிக் குண்டு காயங்கள் உள்ளன. யோகஷ், முதலில் தனது மனைவியையும் மகனையும் துப்பாக்கியால் சுட்ட பிறகு, தற்கொலை செய்துகொண்டாா் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் அருகில் மக்களின் உயிருக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்றார். கா்நாடகத்தின் தாவண்கரே மாவட்டத்தில் உள்ள ஹல்லேகல்லு கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ், கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இச்சம்பவம் குறித்து அமெரிக்காவில் உள்ள யோகேஷின் சகோதரருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.சம்பவம் நடைபெற்று மூன்று நாள்களாகிவிட்ட நிலையில், உயிரிழந்த மூவரின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யோகேஷின் தாயார் ஷோபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களை துப்பாக்கி சூட்டுக்கு பறிகொடுத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்கா, துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, ஒரு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 53 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாவதாக அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கண்டியில் இரண்டு வருடங்களாக தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் குழுவினால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது மாணவியொருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த சிறுமி எதிர்கொண்ட ஆபத்தான நிலைமை தொடர்பில் கண்டி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கண்டி அருப்பொல பகுதியைச் சேர்ந்த இந்த சிறுமி 13 வயது முதல் பாலியல் சித்திரவதைக்குள்ளாகியுள்ளதாக அவரது வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது அத்தைகளில் ஒருவரின் தலையீட்டில் இந்த குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 10 பேர் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களில் 09 பேர் குடும்ப உறுப்பினர்களாகும். இந்த 10 பேரில் ஒருவர் குடும்ப உறுப்பினர் அல்லாத திருமணமான ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாணவி வீட்டில் இருந்து காணாமல் போனதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி மாணவியை உறவினர் வீட்டில் கண்டுபிடித்துள்ளனர்.
மேலதிக விசாரணையில் இந்த மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அனைத்து தகவல்களையும் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது, பொலிஸார் அவரை மருத்துவரிடம் ஒப்படைத்து அறிக்கை பெற்றுள்ளனர்.அந்த அறிக்கையின்படி, இந்த மாணவி எப்படி பல சந்தர்ப்பங்களில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் ஏற்பட்டிருந்த விலை அதிகரிப்புக்கு அமைவாக கடந்த மாதமே சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் இந்த விலையேற்றம் கைவிடப்பட்ட நிலையில் இம்மாதம் அதனை அதிகரிக்கும் எண்ணத்தில் லிட்ரோ நிறுவனம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய இந்த விலை உயர்வு உள்ளூர் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த மாதம் 4ஆம் திகதியளவில், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்பட்டு 2982 ரூபாயாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 83 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1198 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் எரிவாயு விலை அதிகரிக்கப்படுகின்றமையானது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கம்பஹா பகுதியில் உள்ள தொடருந்து நிலைய முகாமையாளர் மற்றும் பயணச்சீட்டு பரிசோதிக்கும் அதிகாரிக்கு எதிராக பெண் ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.இளம் தாயும் அவரது 11 வயது மகளும் கம்பஹா தொடருந்து நிலையத்தில் இறங்கியுள்ளனர்.
வாசலில் இருந்த தொடருந்து பயணச்சீட்டு சோதனை அதிகாரி, பயணச்சீட்டைக் கேட்டபோது வழங்குவதற்கு சற்று தாமதமாகியுள்ளது. இதனால் பயணிகள் முன்னிலையில் அவமானகரமான முறையில் பகிரங்கமாகத் திட்டியுள்ளார்.
இது குறித்து தொடருந்து நிலைய தலைமை அதிகாரியிடம் முறைப்பாடு செய்ய சென்றபோது, அவரும் தன்னை இதேபோல் பகிரங்கமாக திட்டிவிட்டு, மீண்டும் நிலையத்திற்கு வர கூடாதென மிரட்டியதாக பொலிஸாரிடம் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
தலைமை அதிகாரி தனது கையடக்கத் தொலைபேசியில் தன்னைப் புகைப்படம் எடுத்ததாகவும், சம்பவத்தை தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக எடுத்ததாகவும் அந்தப் பெண் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உயர்நிலைப் பாடசாலையின்போது தேசிய மாணவர்ப் படையில் சிங்கப்பூர் ஆயுதப் படையைப் பற்றி கற்றுக்கொண்ட ‘லெஃப்டினன்ட்’ யுகராஜ் கார்த்திக், தற்போது 24 வயதில் ஒரு போர்விமானியாகச் செயல்பட்டு வருகின்றார்.
ஜனாதிபதி மாளிகையில் ஒகஸ்ட் 14ஆம் திகதியன்று சிங்கப்பூர் ஆயுதப்படையின் கல்விமான் விருது பெற்ற 97 பேரில் திரு யுகராஜும் ஒருவர். ஆக உயரிய கல்வி விருதான அதிபர் கல்விமான் விருதிற்கு அடுத்த நிலையிலான விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
யுகராஜ் தந்தை ‘செட்ஸ்’ நிறுவனப் பணிமனை ஊழியர், தாயார் இல்லத்தரசி மற்றும் யுகராஜுக்கு ஓர் அக்காவும் இருக்கிறார். சிறு வயதிலிருந்தே யுகராஜ் விமானத்தைப் பறக்கவேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.
உயர்ந்த நோக்குடன் சேவையாற்றவேண்டும் என்ற சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையின் கொள்கை தம்மைக் கவர்ந்திருந்ததாகவும் இவர் தெரிவித்தார்.
15 வயதில் மாணவர்ப் படையில் இருந்தபோது சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையினரை முதன்முதலாகச் சந்தித்து போர் விமானத்தில் பயணம் செய்த அனுபவம் மறக்க முடியாதது என்றார்.“ஃபோக்கர்-50 என்ற விமானத்தில் நானும் சில மாணவர்களும் பயணம் செய்தோம்.
விமானத்திலிருந்து நகரக் காட்சிகளைக் காணும்போது என் சிறுவயது கனவு புதிய பரிமாணத்தைப் பெற்றது. அந்த அனுபவம் என் மனதில் ஆழப் பதிந்தது,” யுகராஜ் தெரிவித்துள்ளார். தொடக்கக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதுதான் போர் விமானியாகும் லட்சியத்தை உறுதிப்படுத்தியதாக யுகராஜ் கூறினார்.
தேசிய சேவையின் அடிப்படை ராணுவப் பயிற்சிக்குப் பிறகு ஆள்சேர்ப்பு அதிகாரி ஒருவர், சிங்கப்பூர் ஆயுதப் படையிலும் சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையிலும் உள்ள மானிய வாய்ப்புகளைப் பற்றி பகிர்ந்தபோது யுகராஜ், தமது லட்சியத்தை நிறைவேற்ற எண்ணி விண்ணப்ப விவரங்களைப் பெற்றுக்கொண்டார்.
அதிகாரி பயிற்சிப் பாடசாலையில் சேர்வதற்கு முன் விமானி ஆவதற்கான தகுதியை அளவிடும் சோதனைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டார். ஆயுதப்படை அதிகாரியாகத் தகுதிபெற்ற பிறகு இவர் ஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும் பயிற்சி மேற்கொண்டார்.
விமானியாகத் தகுதிபெறுவது கடினம் என்றாலும் எந்தெந்த அம்சங்கள் தன் கட்டுப்பாட்டில் உள்ளனவோ அவற்றின் மீது கவனம் செலுத்தியதாக இந்த இளையர் கூறினார்.“விமானப் பயணத்திற்கான தயாரிப்புப் பணிகளை இயன்ற அளவு சிறப்பாகச் செய்து, சிரத்தை எடுத்துப் படித்து பயிற்றுவிப்பாளர்களிடம் வழிகாட்டுதலைப் பெற்று என் சந்தேகங்களை தீர்த்துக்கொள்வேன்,” என்றார் யுகராஜ்.
பிரித்தானியாவின் சவுத்ஹேம்ப்ட்டன் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் வரும் செப்டம்பர் மாதம் படிப்பைத் தொடங்கவிருக்கும் யுகராஜ், வெளிநாட்டுக் கல்விக்கான வாய்ப்பை நல்கிய இந்த விருதை நினைத்து நன்றியுணர்வுடன் இருப்பதாகக் கூறினார்.இந்தக் கல்வி வாய்ப்பைப் பயன்படுத்தி ஆயுதப்படையில் பணியாற்றும் சேவையாளர்களின் மீது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறார் யுகராஜ்.
எதிர்காலத்தில் போர்விமானியாக விரும்புவோர், சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையைப் பற்றி நன்கு படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார் யுகராஜ்.எந்த வேலையாக இருந்தாலும் கவனத்துடன் செய்யுமாறு அறிவுறுத்தும் யுகராஜ், இலக்கை அடையும் வழியில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் உறுதியுடன் போராடி வெல்லவேண்டும் என்றார்.
தேசிய மாணவர்ப் படையில் இணைவதுடன் இளம் விமானிகள் சங்கம் போன்ற அமைப்புகளை நாடி விமானியாக விரும்பும் இளையர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார் இளையர் யுகராஜ்.
மன்னாரில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியிலேயே இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து நேற்று (21.08.2023) மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலை மன்னார் ஊர்மனையைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தையின் தந்தையான லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் (வயது- 32) என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மனோகரன் நிசாந்தன் பேசாலையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தனது கிராமமான தலைமன்னார் ஊர் மனைக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்டத்திலிருந்து சுற்றுலா வந்த ஹயஸ் ரக வாகனம் ஒன்றுடன் மோதி இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.இறந்தவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு உடற் கூற்று பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கு உள்ளான மோட்டார் சைக்கிள் மீது மோதுண்ட வாகனம் தலைமன்னார் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தின் கடலூரை சேர்ந்த இளைஞனுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்துள்ளது. கடலூர் அடுத்த திருமாணிக்குழி டி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் எம்.பி.ஏ பட்டதாரி.
இவருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோவுக்கும் கடலூர் நடுவீரப்பட்டு வெள்ளக்கரை பகுதியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இத்திருமண வைபத்தில் பிலிப்பைன்ஸ், கடலூர், சிங்கப்பூரில் உள்ள அவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர். பிலிப்பைன்ஸ், சிங்கப்பூரில் இருந்து வந்த மணப்பெண்ணின் உறவினர்களும் தமிழ் கலாச்சாரப்படி வேஷ்டி சேலை அணிந்து திருமணத்தில் பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பத்மநாபன் எம்பிஏ முடித்துவிட்டு சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்துவந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த ரோனமி டியாங்கோ குவாங்கோவுடன் நட்பு ஏற்பட்டது.
இது நாளைடைவில் காதலாக மாறியது, பின் இருவரும் ஒரு வருடமாக காதலித்தது வந்து நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து பத்மநாபன் குவாங்கோவின் பெற்றோர்களிடம் தங்கள் காதலை சொல்லி முழு சம்மதம் வாங்கிய பின்பு திருமணத்தை தமிழ் கலாச்சார இந்து முறைப்படி உறவினர்கள் முன்னிலையில் நடத்தினர்.
இவர்களது திருமணத்தை மணப்பெண்ணின் பெற்றோர்கள் வயது முதிர்வு காரணமாக ஆன்லைன் வீடியோ மூலமாக பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் நாட்டில் ரிச்சாவ் தாஸ் நேவ்சில் வசித்து வந்தவர் ரோசங்கலா அல்மேடா தாஸ் சாண்டோஸ் .இவருக்கு வயது 37. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்து விட்டதாக நினைத்து அவரை குடும்ப வழக்கப்படி உறவினர்கள் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்தனர்.
ரோசங்கலா அடக்கம் செய்யப்பட்டு 11 நாட்கள் ஆன பிறகு அந்த வழியாக சென்றவர் கல்லறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. அத்துடன் உள்ளிருந்து சவப்பெட்டியை தட்டும் சத்தமும் கேட்கிறது என உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
ரோசங்கலாவின் உறவினர்கள் கல்லறையைத் தோண்டி சவப்பெட்டியை வெளியே எடுத்தனர். அந்த சவப்பெட்டியைத் திறந்த போது, ரோசங்கலாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது இருந்ததை காட்டிலும் வேறுமாதிரியாக இருந்தது. உடல் திருப்பி இருந்த நிலைய்ல் மூக்கு மற்றும் காதில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு கீழே கிடந்தது.
கைகளிலும் நெற்றியிலும் இரத்தம் வடிந்து இருந்தது. சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட ஆணி மேல் நோக்கித் தள்ளப்பட்டு இருந்தது. ரோசங்கலாவின் உடலில் சூடும் இருந்தது .
ஆச்சர்யம் அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரோசங்கலா சிறிது நேரத்திற்கு முன்பு தான் உயிரிழந்துள்ளார்.
சமீபத்தில் தான் அவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ரோசங்கலா உயிரிழந்ததாக தவறுதலாக முடிவு செய்து அவரை அடக்கம் செய்ததை நினைத்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவருக்கு சுயநினைவு வந்ததும், சவப்பெட்டியின் மூடியைக் கையாலும் நெற்றியாலும் முட்டித் திறக்க முயன்று இருக்கலாம். அதனால் தான் அவரின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 11 நாட்களாக ரோசங்கலா சவப்பெட்டிக்குள் இருந்து வெளியேற முயன்று கடைசியில் உயிரிழந்து விட்டார். இது தெரிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தனர்.
கடந்த வருடம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன்-டிக்கோயா,பகுதியை வசிப்பிடமாக கொண்ட 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான இராஜேந்திரன் தினகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வறுமை காரணமாக கடந்த வருடம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக இவர் சென்றுள்ளார். இந்த வருடம் 2023.04.05 ஆம் திகதி வரை அவர் தங்களுடன் தொலைப்பேசி ஊடாக தொடர்புகளை பேணியதாகவும் அதன் பிறகு அவரின் தொலைபேசியுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாது போயுள்ளதாகவும் அவரது அத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், பயண முகவருடன் தொடர்புகளை மேற்கொண்ட போது, மே மாதம் 8ஆம் திகதியே தினகேஸ்வரி இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஐந்தாம் மாதம் முதல் தாம் இவரின் இறப்பு தொடர்பாக தெளிவினை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு அமைச்சு, பயண முகவர், சவுதி தூதரகம் என அனைத்து இடங்களுக்கு சென்று வந்த போதும், இதுவரை தமக்கு தினகேஸ்வரியின் மரணம் தொடர்பாக எவ்வித உண்மைகளையும் தெரிந்துக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
தனது மருமகளின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு 10 இலட்சம் ரூபாய் கேட்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உயிரிழந்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க தமக்கு எவ்வித உதவியும் இல்லை எனத் தெரிவித்துள்ள குறித்த பெண்ணின் அத்தை,
தனது மருமகளின் மரணம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவரது சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை சுற்றுலா விசா மூலமே இவர் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டதும் இவரின் கடவுச்சீட்டில் இவரின் அப்பாவின் பெயரான ராஜேந்திரன் என்பதற்கு பதிலாக தாத்தாவின் பெயரான சாமிநாதன் சேர்க்கப்பட்டு தினகேஸ்வரி சாமிநாதன் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தினகேஸ்வரி வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே தமக்கு தெரியவந்ததாகவும் அவரின் அத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
யாழ். சாவகச்சேரியில் குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் 8 பவுண் தங்க நகைகள் நகரசபை குப்பை மேட்டிலிருந்து சுகாதாரப் பகுதியினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (21.08.2023) மதியம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, சாவகச்சேரி மண்டுவில் வட்டாரத்தில் வேலுப்பிள்ளை வீதியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டில் உள்ள சுமார் 8 பவுண் பெறுமதியான நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்துள்ளார்.
உடனடியாக செயற்பட்ட நகரசபை நிர்வாக அதிகாரி
இந்நிலையில் அண்மையில் அவரது வீட்டை சுத்தம் செய்கின்ற பொழுது குறித்த நகைகளும் குப்பைகளோடு கட்டப்பட்டு வீதியில் கொட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மண்டுவில் வட்டாரத்தில் வழமையான கழிவகற்றும் நடவடிக்கையில் சாவகச்சேரி நகரசபை சுகாதாரப் பகுதியினர் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது குறித்த வீட்டில் முன்னால் இருந்த குப்பைகளும் சுகாதார தொழிலாளர்களால் அகற்றப்பட்டு உழவியந்திரத்தில் நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான குப்பைகள் தரம் பிரிக்கின்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போனதையடுத்து நிலைமையை உணர்ந்த உரிமையாளர் குப்பைகளோடு நகைகளும் வீதியில் கொட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கேமராக்களை சோதனையிட்டுள்ளார்.
அப்பொழுது இன்று காலை அப்பகுதியில் நகராட்சி மன்ற கழிவகற்றும் வாகனம் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டிருந்தமை அவதானித்துள்ளார். இதை அடுத்து உடனடியாக சாவகச்சேரி நகராட்சி மன்றத்துக்கு சென்று பிரதம நிர்வாக அதிகாரி செ.அனுசியாவிடம் நிலைமை தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து உடனடியாக செயற்பட்ட நகரசபை நிர்வாக அதிகாரி மற்றும் நகரசபை சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர்களான பா.தயாகரன், மற்றும் பா.நிஷாந்தன் ஆகியோர் நகரசபை கழிவு சேகரிக்கும் இடத்திற்கு எவரையும் அனுமதிக்காத வண்ணம் செயற்பட்டு சுகாதார தொழிலாளர்களைக் கொண்டு தேடுதலை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த குடியிருப்பாளர் பழைய துணியில் கட்டி குப்பைகளோடு குப்பையாக வீதியில் வீசிய சுமார் 8 பவுண் நகைகள் குடியிருப்பாளரின் முன்னிலையிலேயே சுகாதார தொழிலாளியான சண்முகம் தமிழ்சனால் மீட்கப்பட்டு உடனடியாகவே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நகரசபை சுகாதார பகுதினரின் நேர்மையான விரைந்த செயல்பாடு நகரசபை குடியிருப்பாளர்கள் மற்றும் நகர வர்த்தகர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக சிகிச்சை பிரிவினை முழுமையாக பயன்படுத்துமாறு வைத்தியசாலையின் சிறுநீரக நோயியல் வைத்தியர் சிசில் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,சிறுநீரக நோயுடன் தொடர்புடைய அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் வைத்தியசாலை வைத்தியர் ஊடாக தங்களது சிறுநீரக குருதி சுத்திகரிப்பு பிரிவின் சிகிச்சையை பொது மக்கள் பெற முடியும்.
இலங்கையில் அண்மைக்காலமாக சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள்,சிறுநீரக சிதைவு,சிறுநீரக செயலிழப்பு உள்ளடங்களாக சிறு நீரகங்களுடன் தொடர்புடைய அதிகளவான நோய் காரணிகள் அதிகரித்துள்ளதுடன் இதன் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடுகளும் இவ்வாறான மரண அதிகரிப்புக்கு காரணங்களாக அமைகின்றன.
மனித உடலில் சிறுநீரகமானது சாதாரண நிலையில் 10 சென்றி மீற்றர் அளவு கொண்டிருக்கும் போது சிறுநீரகமானது தனது தொழிற்பாட்டை சாதாரணமாக மேற்கொள்ளும்.
இருப்பினும் உணவு பழக்கவழக்கம் அன்றாட நடவடிக்கைகள் நீரிழிவு,உயர் குருதி அமுக்கம் போன்ற நோய் காரணங்களால் சிறுநீரகங்களில் ஏற்படும் பாதிப்பினால் அவ் சிறுநீரகங்கள் சிறிதாவதுடன் அதன் செயற்பாடுகளும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றது.
குறிப்பாக சிறுநீரக பாதிப்பு ஏற்படும் போது பொதுவாக உடலினால் மேற்கொள்ளப்படும் கழிவகற்றல் செயற்பாடானது முற்றிலும் பாதிக்கப்படுவதுடன் வெளியேற வேண்டிய கழிவுகள் அனைத்தும் உடலில் சேகரிக்கப்பட்டு விடுகின்றது.
இவ்வாறு உடலினுள் சேகரிக்கப்படும் கழிவுகள் இரத்தத்திலும் உடலில் உள்ள பாகங்களிலும் நுரையீரல் உட்பட வயிற்று பகுதியில் தேங்கும் போது உடல் வீக்கம், சோர்வு ,மயக்கம்,மூச்சுத்திணறல் உள்ளடங்களாக பல்வேறு நோய் அறிகுறிகள் தோற்றம் பெறுவதுடன் சிலர் கழிவுகள் அதிகம் சேகரிக்கப்படிகின்றமையினால் மரணத்திற்கும் உள்ளாகின்றனர்.
இவ்வாறான நிலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை முழுமையான தீர்வாக காணப்படுகின்ற போதும் பொருத்தமான சிறுநீரகங்கள் கிடைப்பதென்பது அரிதிலும் அரிது.
இவ்வாறான நிலையில் சிறுநீரக நோயாளர்களை நோய் நிலையில் இருந்து பாதுகாப்பதற்கான சிறந்த முறை அவர்களின் குருதியில் காணப்படும் கழிவுகளை அகற்றும் குருதி சுத்திகரிப்பு முறையாகும்.
இவ்வாறான சிறந்த குருதி சுத்திகரிப்பு முறையை ஐந்து வருடங்களாக சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள மன்னார் குருதி சுத்திகரிப்பு சிகிச்சை பிரிவு.
வைத்தியர் சிசில் மற்றும் வைத்தியர் மல்ஷா கீழ் இயங்கும் மன்னார் குருதி சிகிச்சை பிரிவின் கீழ் தற்போது 60 சிறுநீரக நோயாளர்கள் சிறப்பான சிகிச்சையை பெற்று வருகின்றனர் என்பதுடன் சிறுநீரக பிரச்சினைகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக குறைந்துள்ளது.
குறிப்பாக மருந்து தட்டுப்பாடுகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளையும் கடந்து உள்ளூர் மற்றும் வெளியூர் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் விதமாக குறித்த சிகிச்சை பிரிவு ஐந்து வருடங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 2018 க்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் சிறுநீரக சிகிச்சை பிரிவு இன்மையால் பல சிறுநீரக நோயாளிகள் தங்கள் சாதாரண சிகிச்சைக்காக கூட மன்னார் மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம்
ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை காணப்பட்டது.
அதிலும் அவசர நோயாளர்கள் பலர் சிகிச்சை நிலையங்களுக்கு மன்னாரில் இருந்து அனுப்பப்படுவதற்கு முன் பல உபாதைகளுக்கு உள்ளாகியிருந்த கசப்பான அனுபவங்களும் உண்டு.
இதை விட கடந்த 2017 ஆண்டு மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிறுநீரக நோயாளி ஒருவர் இரத்த சுத்தீகரிப்புக்கு சிகிச்சைக்காக அனுராதபுரம் சென்று திரும்பிய நிலையில் பேருந்து தரிப்பிடத்தில் இறந்த சம்பவம் மன்னாரில் பதிவாகியிருந்தது.
இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் சிறுநீரக சிகிச்சை நிலையத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கக் கூடிய விதத்தில் அக்காலப்பகுதியில் வைத்தியசாலையில் காணப்பட்ட வளங்களை கொண்டு கடந்த 2018 ஆம் ஆண்டு சாதாரண இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
தற்போது அப் பிரிவின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் அர்பணிப்பின் காரணமாக 60 நோயாளிகளை பராமரிக்க கூடிய அளவில் சிறந்த சிகிச்சையை மன்னார் சிறுநீரக குருதி மாற்று சிகிச்சை பிரிவு வழங்கி வருகிறது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய 140 கிராமங்களை சேர்ந்த மக்களும் பயனடையும் வகையில் இந்த சிகிச்சை பிரிவு தனது சிகிச்சையின் தரத்தை அதிகரித்துள்ளது. அதே நேரம் இவ் சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சிறுநீரக நோய் காரணமாக மரணம் அடைவோர் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
வாரத்தில் ஏழு நாட்களும் இந்த பிரிவு சேவையாற்றுவதுடன் ஒரு சிறுநீரக நோயாளி கட்டாயம் கிழமைக்கு 2 அல்லது 3 முறை இவ் நிலையத்திற்கு வருகை தந்து இரத்த சுத்திகரிப்பில் ஈடுபட வேண்டிய அவசியம் உள்ளது.
சாதாரணமாக ஒரு நோயாளிக்கு இரத்த சுத்தீகரிப்புக்கு நான்கு மணித்தியாலங்கள் தேவைப்படும் நிலையில் மாதத்திற்கு குறைந்தது 500 தடவைகள் சுத்திகரிப்பு செயற்பாடுகள் இவ் நிலையத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.
இவை தவிர்த்து பாம்பு கடி ,சலரோகம்,சிறுநீர் கிருமி தொற்று போன்ற நோய் காரணமாக வைத்தியசாலை சிகிச்சைக்காக வருகை தரும் அவசர நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு சேவையையும் இவ் நிலையம் மேற்கொண்டு வருகின்றது.
சாதாரண அடிப்படை வசதிகள் இன்றி ஆரம்பிக்கப்பட்ட இந்த சிகிச்சை பிரிவு ஐந்து வருடங்களில் கிழமை 140 நபர்களுக்கும் நாள் ஒன்றுக்கு 20 நபர்களுக்கு சிகிச்சை வழங்க கூடிய நிலையில் வளர்ச்சியடைந்துள்ளது.
வெறுமனே மன்னார் மாவட்ட சிறுநீரக நோயாளர்கள் மாத்திரமின்றி வெளிமாவட்ட சிறுநீரக நோயாளர்களும் பயன் பெறும் வகையில் அந்த பிரிவின் வைத்தியர்கள்,தாதியர்களின் ஒத்துழைப்பில் இச்சிகிச்சை நிலையம் வளர்சியடைந்துள்ளதுடன் ஒரே நேரத்தில் 8 நபர்கள் குருதி சிகிச்சையை பெறும் அளவுக்கான கொள்ளளவை கொண்டுள்ளது.
மருந்து பொருட்களின் விலையேற்றம் வாழ்க்கை செலவுகள் உட்பட அனைத்து அதிகரித்துள்ள நிலையில் மக்களின் செலவை குறித்து அவர்களுக்கு திருப்தியான சேவையை வழங்குவதற்கான மேலதிக வாய்ப்புக்களையும் வளங்களையும் இவ் சிகிச்சை பிரிவின் வைத்தியர்கள் தேடி வருகின்றனர்.
சர்வதேச தரம் மிக்க சிகிச்சையையும் ஒரே நேரத்தில் 20 மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய வாய்ப்புகளை இப்பிரிவினர் உருவாக்க காத்திருக்கின்றனர்.
இவ்வாறான சிகிச்சை பிரிவு மன்னார் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றது சிறப்பே.இவ் சிகிச்சை பிரிவின் வளர்சிக்காக நன் கொடைகளையோ அல்லது மருத்துவ உதவிகளையோ சிகிச்சை உபகரணங்களுக்கான உதவிகளை வழங்க கூடியவர்கள் வழங்க முன் வருவது காலத்தின் தேவையாகும் என தெவிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும், பிரபல தமிழ் ஆசிரியருமான ஜீவரஞ்சனி எனும் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) இரவு கிளிநொச்சியிலிருந்து கணவருடன் மோட்டார் வண்டடியில் வட்டக்கச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி நகர் ஏ9 வீதியில் காக்கா கடைச் சந்தியில் வட்டக்கச்சிக்கு திரும்பும் போது எதிர்பக்கம் வந்த காருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளாகிய ஆசிரியர் வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் அதிபர் பங்கையற்ச்செல்வனின் சகோதரி என்றும் வட்டகச்சி மத்திய கல்லூரியின் பழைய மாணவியும் முன்னாள் ஆசிரியரும் ஆவார்.
விபத்தின் போது படுகாயமடைந்த ஆசிரியர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.