கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து : பரிதாபமாக பலியான இளைஞன்!!

புத்தளத்தில்..

புத்தளம் – மதுரங்குளி நகருக்கு அருகில் பயணித்த லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதப்பெற்று விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இருவர் படுகாயமடைந்த புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் புத்தளம் ஜயபிம பகுதியைச் சேர்ந்த சுரேந்திர அனுருத்திக 26 வயதுடைய என்ற இளைஞன் என தகவலறியப்பட்டுள்ளது.படுகாயமடைந்து வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் சாலியவெவ பிரதேசத்தைச் சார்ந்தவராவார்.

விபத்தில் உயிரிழந்த இளைஞன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புத்தளம் திசை நோக்கி பயணித்த போது எதிர்திசையில் கவனக்குறைவாக பயணித்த லொறியொன்று முந்திச் செல்ல தயாரான போது மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த லொறி மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு திசை நோக்கி சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் உடனடியாக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். லொறியின் சாரதி மதுரங்குளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் புதிய நடைமுறை.. எடுக்கப்பட்ட தீர்மானம்!!

இலங்கையில்..

இலங்கையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளிலும் தவணைப் பரீட்சைகளை வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இந்த தீர்மானமானது ஒவ்வொரு பாடசாலையிலும் முதலாம் தரம் முதல் உயர்தரம் (தரம் 13) வரை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஒவ்வொரு பாசாலையிலும் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடசாலையின் சுமையை குறைக்கும் வகையில் வருடத்திற்கு ஒரு முறை தவணைப் பரீட்சை நடத்துவதற்கு கல்வி அமைச்சர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்கத்தை விழுங்கி பொலிஸாரை குழப்பத்தில் ஆழ்த்திய கொள்ளையன்!!

கம்பஹாவில்..

கம்பஹா, ஒருதொட்ட வீதியில் பயணித்த பெண்ணிடமிருந்து தங்க நகையை திருடி, அதனை விழுங்கிய நபர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. குறித்த நபர் விசாரணையின் போது அதனை விழுங்கியுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்களின் தங்க நகையை பறித்து செல்ல முயற்சித்துள்ளனர். இதன் போது அருகில் இருந்தவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நகையை வைத்திருந்த கொள்ளையன் அதனை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யக்கல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அதுல கமகேவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் பரிசோதகர் சரத் பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் அந்த நகையை வெளியில் எடுப்பதற்காக சந்தேக நபரை கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையில் சொக்லட் ஒன்றில் மனித எச்சங்கள் : அதிர்ச்சியில் மக்கள்!!

இலங்கையில்..

மஹியங்கனை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சொக்லட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதி நேற்று காணப்பட்டதாக மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் உணவகத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட சொக்லட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதி காணப்பட்டதாக வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

விசாரணையின் போது அது நகத்துடன் கூடிய மனித விரலின் ஒரு துண்டு என உறுதிப்படுத்தப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த விரலின் உரிய பகுதியையும், அதில் இருந்ததாக கூறப்படும் சொக்லட் பொதியையும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொறுப்பேற்றுள்ளது. அத்துடன், நாளைய தினம் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் அறிவிக்கப்படவுள்ளது.

மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி சஹான் சமரவீரவின் ஆலோசனையின் பேரில், பொது சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்த இளம் குடும்பப் பெண்!!

யாழில்..

யாழில் பெண்ணொருவர் புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாப்பாணம், அரியாலை பகுதியிலேயே இவ்வாறு இளம் குடும்பப் பெண் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் நேற்று (5) மதியம் 2.15 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியாலை, நெடுங்குளத்தை சேர்ந்த திலீபன் ஈழப்பிரியா (27) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அவர் ஒன்றரை வயது பிள்ளையின் தாய் என தெரிய வந்துள்ளது. கணவனுக்கு அதிக கடன் தொல்லையென்றும், அவர் வெளிநாடு செல்வதற்காக டுபாயில் தங்கி நிற்பதாகவும், கடன்காரர்களின் தொல்லை தாங்க முடியாமல் இந்தப் பெண் தற்கொலை செய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் பொலிசார் முன்னிலையில் இளைஞர் மீது தாக்குதல் : வைரலாகும் வீடியோ!!

வவுனியா கடவுச் சீட்டு அலுவலகத்தில் வைத்து உத்தியோகத்தர்கள், பொலிசார் முன்னிலையில் கடவுச் சீட்டு பெற வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. கடவுச் சீட்டு புதுப்பிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் மீதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கடவுட்சீட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த குறித்த நபர் தனக்கு பின்னர் அன்றைய தினம் விண்ணப்பித்தவர்களுக்கு கடவுச் சீட்டு முன்னர் வழங்கப்பட்டாமையால் தனது கடவுச் சீட்டு ஏன் இன்னும் வரவில்லை என உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த அலுவலகத்தில் நின்ற பொலிசாரை தள்ளி கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பொலிசார் மற்றும் கடவுச்சீட்டு உத்தியோகத்தர்கள் முன்னிலையில் குறித்த நபரை தாக்கி கை கட்டப்பட்டு நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

பொலிசார் தகாத வார்த்தைகளை பேசி குறித்த இளைஞனை தாக்கியுள்ளனர். அத்துடன், பொலிசாருக்கு சார்பாக குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த கடவுச் சீட்டு அலுவலகம் முன்பாக இடம் பிடித்து கொடுத்தும், கடவுச் சீட்டை முன்னிலைப்படுத்தி பெற்றுக் கொடுக்கும் மாபியா கும்பலை சேர்ந்தவர் என அறிய முடிகிறது.

இதேவேளை, அரச கடமைக்கு இனையூறு விளைவித்ததாக குறித்த நபரை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி தற்போது விளக்கமறியலில் உள்ளார்.

காதல் முறிவால் இளம் வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு!!

கல்கமுவவில்..

கல்கமுவ பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.காதல் முறிவு காரணமாக விரக்தியில் சிறுமி இந்த முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உஸ்கல சியம்பலங்காமுவ கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி சில வாரங்களுக்கு முன்னர் மாணவன் ஒருவருடன் வீட்டை விட்டு சென்றுள்ளார்.சம்பவத்திற்கு தொடர்புடைய குறித்த மாணவனை பொலிஸார் கைது செய்து சிறுவர் சீர்த்திருந்த கல்லூரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தின் பின்னர் வீடு திரும்பிய சிறுமி விபரீத முடிவை எடுத்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பெண்ணின் உயிரை பறித்த புகையிரதம்!!

யாழில்..

யாழ்.அரியாலை – புங்கன்குளம் பகுதியில் ரயில் மீது மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் பாய்ந்து பெண் தனது உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

புங்கன் குளம் புகையிரத நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு குறித்த பெண் தற்கொலை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

காதலியின் பிறந்தநாள் நிகழ்வில் காதலன் செய்த இழிவான செயல்..!

குருநாகலில்..

குருநாகல் பிரதேசத்தில் பிறந்தநாள் நிகழ்வில் நண்பர்களுக்கு காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.இதனால் 6 மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மாணவர்களுக்கு தலா 1500 ரூபாய் அபராதம் செலுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலையொன்றின் 6 பாடசாலை மாணவர்களுக்கு அபராதம் விதித்த நீதவான் இனிமேல் இவ்வாறான தவறுகளை செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

காதலன் என்று கூறப்படும் சந்தேகத்திற்குரிய மாணவன் அதே வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்த நிலையில் பிரிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்நிலையில் மாணவியின் பிறந்த நாள் அன்று அவரின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பியுள்ளார்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தின் முன் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306 ஆவது பிரிவின்படி அவர்களுக்கு தண்டனை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், குறித்த மாணவர்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அண்ணன் கண்முன்னே துடிதுடித்து பலியான தங்கை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருச்சியில்..

திருச்சி மேல சிந்தாமணி காவேரி நகர் பகுதியில் வசித்து வருபவர் அழகப்பன். இவரது மகன் விஜயகுமார் மற்றும் மகள் ஜெகஜோதி. இதில் ஜெகஜோதி மேலபுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விஜயகுமார் மற்றும் ஜெகஜோதி இருவரும் பள்ளிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வந்தபோது, தனியார் பேருந்து அதிவேகமாக வந்து மோதியது. இதில் பள்ளி மாணவி ஜெகஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அண்ணன் சிவக்குமார் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், விபத்தில் மாணவி உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

இந்தக் கோர விபத்தைக் கண்டித்து இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் , சி.ஐ.டி.யு சங்க மாவட்ட செயலாளர் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெற்றோர், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சிஐடியு சங்கத்தினர், திருச்சி கோட்டாட்சியர், மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு, மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டல உதவியாளர், ஸ்ரீரங்கம் காவல்துறை உதவியாளர் உட்பட பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் முதற்கட்டமாக, 15நாட்களுக்குள் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து சாலை சீரமைத்து தரப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் உயிரிழந்த பள்ளி மாணவி குடும்பத்திற்கு ரூ4லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பேருந்து நிறுத்தத்தை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகளை தவிர மற்ற கோரிக்கைகள் அனைத்தும் பின்னர் பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி!!

அதா சர்மா..

2008-ல் வெளியான ‘1920’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் அதா சர்மா. அதன்பிறகு தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த இவர், 2017-ல் சிம்பு நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

தொடர்ந்து, ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் பிரபுதேவாவுடன் நடித்து இருந்தார். சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். கேரளாவில் இளம்பெண்கள் காணாமல் போன சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் வந்தது.

பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்தி பயங்கரவாத அமைப்பில் சேர்ப்பதுபோன்று திரைக்கதை அமைத்து இருந்தனர். இந்த படத்தில் நடித்ததற்காக தனக்கு மிரட்டல்கள் வருவதாக அதா சர்மா தெரிவித்து இருந்தார். இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில், நடிகை அதா சர்மாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வயிற்று போக்கு, உணவு அலர்ஜி போன்ற பிரச்சினைகள் இருந்ததாகவும் இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுவுக்கு அடிமையான காதல் கணவனை திருத்த போராடிய மனைவி.. இறுதியில் நடந்த விபரீதம்!!

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாஸ் (27). இவர் 6 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நிகிதா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாஸ்க்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வருவதால் நிகிதா அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகி கணவனை திருத்த பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளார்.

அனைத்து போராட்டங்களும் தோல்வியுற்ற நிலையில், கடந்த 28 ஆம் தேதி இரவில் மீண்டும் தாஸ் அதிக போதையுடன் வீட்டுக்கு வந்துள்ளார். கடைசி முயற்சியாக கணவனை திருத்துவதற்காக கடந்த வாரம் தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, நீ குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்றால் நான் கொளுத்திக் கொள்வேன் என்று கூறி தீக்குச்சியை பற்ற வைத்து கணவனை மிரட்டி உள்ளார்.

எதிர்பாராத விதமாக தீ நிகிதாவின் உடையில் பிடித்து உடல் முழுவதும் குபுகுபுவென எரிய தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ந்து போன தாஸ் ,நிகிதாவை கட்டிப்பிடித்து காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.

இதில் தாஸ் மீதும் தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு 75% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிகிதா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் 40% தீக்காயங்களுடன் தாஸ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிப்பழக்கத்திலிருந்து காதல் கணவனை மீட்டெடுக்க போராடிய பாசக்கார மனைவியின் செயல் விபரீதத்தில் முடிந்தது.

குடும்பத் தகராறு.. மனைவியின் கைவிரலை கடித்து தின்ற கணவன்.!!

கர்நாடகாவில்..

குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் கைவிரலை கடித்து தின்ற கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்திய மாநிலம் கர்நாடகாவின் பெங்களூரூவைச் சேர்ந்த தம்பதியினர் விஜய்குமார் (45), புஷ்பா(40).

இவர்கள் 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் பிறந்து சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் அடிக்கடி சண்டை, தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

பின்பு புஷ்பா, தனது இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 28 ஆம் திகதி விஜயகுமார், புஷ்பாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

பின்பு, இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையில் ஆரம்பித்து கைகலப்பில் ஏற்பட்டுள்ளது. அப்போது, விஜயகுமார் ஒரு கட்டத்திற்கு மேல் மனைவியின் இடது கை விரலை தனது வாயில் வைத்துள்ளார்.

பின்னர், ஆத்திரமடைந்து வாயில் வைத்தே விரலை கடித்து மென்று தின்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கை விரலின் வலியால் துடித்த புஷ்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை முடிந்த பிறகு புஷ்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், தனது கணவன் எனது கை விரலை கடித்து மென்று தின்றுவிட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. கதறித் துடித்த கர்ப்பிணி மனைவி!!

சென்னையில்..

சென்னை கொடுங்கையூரில் வசித்து வருபவர் தினேஷ்.இவருக்கு வயது 29. இவருடைய மனைவி சௌமியா 8 மாத கர்ப்பிணி. இவர், ஆவடியை அடுத்த ஐயப்பாக்கத்தில் தனியார் கழிவுநீர் அகற்றும் நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

வழக்கம் போல் நேற்று மாலை அலுவலகத்தில் பணியில் இருந்த போது, கீழே கிடந்த வயரை எடுத்தார். எதிர்பாராதவிதமாக திடீரென மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தினேஷ் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கார் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி.. கதறி துடித்த தாய்..!!

ஈரோட்டில்..

ஈரோடு மாவட்டம் சிவகிரி நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் பூபாலன். இவர் இருசக்கர மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மோகன பிரியா. இவர்களுக்கு 6வயதில் தமிழ் மாறன் என்ற மகனும், தமிழினி என்ற ஒன்றரை வயது மகளும் உள்ளனர்.

பூபாலனின் தாய் விஜயாள் . இவர் சிவகிரி ஜீவா தெருவில் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். விஜயாள் நேற்று காலை வேலைக்கு செல்லும் போது தமிழினியை அழைத்து சென்றுள்ளார்.இந்த நிலையில் மதியம் விஜயாள் நிறுவனத்தில் உள்ளே வேலை பார்த்து கொண்டிருந்தார்

அப்போது தமிழினி நிறுவனத்தின் வாசலுக்கு வந்து நின்றார். அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பின்னோக்கி எடுக்க முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக தமிழினி மீது கார் மோதியது.

இந்த விபத்தில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துமவனையில் சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு தமிழினி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகிரி போலீசார், தமிழினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய டிரைவர் சுப்பிரமணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை கொன்ற பாம்பு.. தாய் கண் முன்னே நடந்த சோகம்!!

வேலூரில்..

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (23). இவரது மனைவி செல்வி (21). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் செல்வி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

பிரசவத்திற்காக அவர் ஒடுகத்தூர் அருகே உள்ள ஓ.ராஜாபாளையம் கிராமத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு சென்றார். இதையடுத்து செல்விக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

3 மாத குழந்தை பிரனீஷ் உடன், செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் குழந்தை அருகில் தூங்கிய தாய் செல்வி, விடிந்ததும் வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே வேலை செய்து கொண்டு இருந்தார்.

குழந்தை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்தது. திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. பதறிப்போன செல்வி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையை நாகப்பாம்பு ஒன்று கடித்துவிட்டு படம் எடுத்து நின்றது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் செல்வி அக்கம் பக்கத்தினர் உதவியோடு பாம்பை விரட்டினார். அதையடுத்து பாம்பு கடித்த குழந்தையை மீட்டு, ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றனர்.

அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தை இறந்த தகவலை கேட்டு தாய் செல்வி கதறி அழுதார்.

இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பாம்பு கடித்து 3 மாத பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.