காலி – கொழும்பு பிரதான வீதியில் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து கடந்த செவ்வாய்க்கிழமை (09.12.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வடக்கு, வட-மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் சுமார் 50 மி.மீ. அளவில் பலத்த மழை பெய்யலாம் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.
சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பாதுக்கை – லியன்வல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து புதன்கிழமை (10.12.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்று முன்னாள் பயணித்த சிறிய லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் லொறியில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நபரைத் தாக்கி கொலை செய்வதற்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை மேற்கொண்ட இரு சந்தேக நபர்கள், ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராமவின் காவந்திஸ்சபுர பகுதியில் கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களும் மீரிகம மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆகும்.
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர் ஒருவர், தனது மனைவியின் காதலனை தாக்குவதற்கு மீரிகம பிரதேசத்தில் வசிக்கும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தை வழங்கியதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
ரன்மிஹிதென்னவில் வசிக்கும் காதலனின் புகைப்படம், வட்ஸ்அப் மூலம் சந்தேக நபருக்கு வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைகப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீரை விற்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு பல்பொருள் அங்காடிக்கு நுவரெலிய நீதிவான் நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நீதிமன்ற அதிகாரிகளின் கூற்றுப்படி, குறித்த பல்பொருள் அங்காடி 100 விலை கொண்ட குடிநீர் போத்தலை 130 ரூபாய்க்கு விற்றுள்ளது.
இந்தநிலையில், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஒழுங்குபடுத்தப்பட்ட சில்லறை விலை நிர்ணயத்தை மீறியதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகமாக நிர்ணயித்ததற்காக நுவரெலிய மாவட்டத்தில் சமீபத்தில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதங்களில் ஒன்றாக, இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய சம்பவத்தில் உயிரிழந்த யாழ்ப்பாண இளைஞனுக்கு முதல் கட்டமாக ஒரு இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞன் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் பேருந்தில் சிக்கிபோது உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் , முதல் கட்டமாக இளைஞனின் குடும்பத்தினருக்கு ஒரு இலட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞனின் மரண சான்றிதழ் வழங்கப்பட்டதும் மீதி 09 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேவேளை பேருந்து வெள்ளத்தில் சிக்கிய நிலையில் , குறித்த இளைஞனின் தொலைபேசியில் இருந்தே , தகவல்கள் வெளியே சொல்லப்பட்டது.
அதனாலேயே , பேருந்தில் பயணித்த 69 பேரில் 67 பேரின் உயிரினை காப்பாற்ற முடிந்தது. யாழ் இளைஞன் கூரையில் இருந்து வெள்ளத்தினுள் விழுந்த நிலையில் , தவறுதலாக மீட்கப்படாததால் , இளைஞன் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை மீட்கப்பட்டவர்களில் முதியவர் ஒருவர் வைத்தியசாலையில் , சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
பண்டாரவளையில் வணிக வளாகத்திற்கு அருகில் பர்தா அணிந்து பெண் போல் வேடமிட்டு சுற்றி திரிந்த மாணவன் நேற்று முன்தினம் மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மாணவர் பண்டாரவளை, அத்தலப்பிட்டியவை சேர்ந்த 15 வயதானவர் என தெரியவந்துள்ளது. அவர் பண்டாரவளையில் உள்ள ஒரு பாடசாலையில் படித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் பாடசாலையில் நாடகம் மற்றும் நடிப்பு பயிலும் மாணவன் எனவும் பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு பரதநாட்டியத்திலும் ஆடியுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பல சந்தர்ப்பங்களில் பரத நாடகங்களில் இளம் பெண்ணாக தோன்றியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணவனின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர் தனது சகோதரியுடன் தனது பாட்டியின் வீட்டில் தங்கியுள்ளார்.
மாணவனின் பாட்டி உளவியல் ஆசிரியராக பணிபுரிகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. தனது தாயார் அனுப்பிய பணத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இந்த பர்தாவை வாங்கியதாகவும் மாணவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
தனக்கு பர்தா அணிய வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், தனது சகோதரி மேலதிக வகுப்புகளுக்கு சென்ற போது, அவரது உடைகள், செருப்புகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை மறைவான இடமொன்றில் அணிந்து கொண்டதுடன், நகரம் முழுவதும் சுற்றித் திரிந்ததாகவும் அந்த மாணவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளார்.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1000 ரூபாவால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வார இறுதி முதல் தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், இன்று இந்த சிறியளவான வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதேவேளை தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 336,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 309,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,650 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, வெள்ளி கிராம் ஒன்றுக்கு 800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி பரீட்சை தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால் பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி எண் 1911 அல்லது 0112784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி எண்களை அழைப்பதன் மூலம் தெரிவிக்க முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 0112784422 என்ற தொலைநகல் எண் மூலமாகவோ அல்லது பரீட்சைத் திணைக்களத்தின் http://gcealexam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தெரியப்படுத்த முடியும் எனவும் பரீட்சைத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்கள் 2026 ஜனவரி 12 முதல் 20 வரை நடத்தப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அண்மையில் அறிவித்தது.
மேலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் எதற்கும் சேதம் ஏற்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
பதுளை, கந்தக்கெட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாகொல்ல கிராமத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண் சரிவில் காணாமல் போன தனது ஒரே மகளை தாய் தேடி வருகிறார்.
21 வயதான காயத்ரி காவிந்தி ராஜபக்ஷ என்றயுவதி மண் சரிவில் சிக்கி 11 நாட்களாகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த கிராமத்தில் மண் சரிவில் சிக்கி மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன யுவதியின் உறவினர்கள் மூவரும் இதில் அடங்குவர்.
மண் சரிவு ஏற்படும் தப்பியோடும் போது மகள் அதில் சிக்கிக் கொண்டதாக மகள் தெரிவித்துள்ளார்.
தனது மகள் இந்த மண்மேட்டிற்குள் இரண்டடி அல்லது மூன்றடி ஆழத்தில் எங்கோ இருக்கிறார் என உறுதியாக நம்புவதாகவும், தினமும் 20, 30 தடவைகள் வந்து மகளை தேடுவதாகவும் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
மகளின் கையைப் பிடித்துக்கொண்டு ஓட முயற்சித்த போது மகள் தோட்டப் பக்கம் பாய்ந்ததாகவும், மகள் கை நழுவியதாகவும், இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தாய் தெரிவித்தார்.
அவரது மகன் அருகில் உள்ள வயலில் இருந்து ஓடிவந்து தன் தாயைக் காப்பாற்றினார். எனினும் மகளைக் காப்பாற்ற முடியவில்லை. மகள் மிகத் திறமையானவர் எனவும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குச் செல்லவிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை சீரழிவுகளால் நாட்டு மக்கள் பலர் நிர்க்கதியான நிலையை சந்தித்திருக்கின்றனர்.
உயிர், உடமை சேதம் என்று சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்துள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் ஒன்று திரள்வதை கண்கூடாக காண முடிகின்றது.
இதன்படி, பௌத்த, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மத குருக்கள் பலர் பொதுமக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அண்டாவளை சுமண ஜோதி என்ற தேரர் தலைமையிலான குழுவினர், ஒரு இடத்திற்குச் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல வீடுகள், ஆலயம் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
குறித்த பௌத்த தேரர் தலைமையிலான 100 பேர், இணைந்து ஆறு வீடுகள், ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்திக் கொடுத்துள்ளனர்.
குறித்த வீடுகளில், 4 வீடுகள் கத்தோலிக்கர்களது வீடுகள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், குறித்த தேரர் ஒரு மாதா சொரூபத்தினை சுத்தம் செய்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.
இலங்கையை உலுக்கிய அனர்த்தங்கள், இப்படி மன நிம்மதியைத் தரும் சாதகமான மாற்றங்களையும் வெளி உலகத்திற்கு எடுத்துச் சொல்லியிருக்கின்றது.
மிகப்பெரிய அனர்தம் ஒன்று நேர்ந்த பின்னர், இன, மத பேதமற்று இலங்கையர்கள் என்ற ஒரு குடையின் கீழ் இணைந்து எமக்காக நாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் பணியாற்றிய அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ள, விகாரைகளும், பள்ளிவாசல்களும், தேவாலயங்களும் என்று அனைத்து மத ஸ்தலங்களின் கதவுகளும் திறக்கப்பட்டிருந்தன.
யாரும் உணவுக்காக பசித்திருக்கா வண்ணம், சமைத்த உணவுகள் உடனுக்குடன் பகிர்ந்தளிக்கப்பட்டன. இது போன்ற பணிகள் வரவேற்கப்பட வேண்டியவை.
மாத்தளை,அம்போக்கா கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரின் உடல்களை வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் கண்டுபிடித்து பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில், கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். குறித்த பகுதி முழுமையாக மண் சரிவினால் மூடப்பட்டிருந்தது.
மண்ணில் மூழ்கியிருந்த வீட்டின் இடிபாடுகளைக் கூட கண்டுபிடிக்க முடியாது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் நிலச்சரிவில் சிக்கி காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களின் உடல்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்த நேரத்தில், வீட்டில் இருந்த நாய் நிலத்தடியில் மறைந்திருந்த குடியிருப்பாளர்களைக் கண்டுபிடித்து பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அம்போக்கா கிராமத்தில் சுமார் எண்பது குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு தற்போது ஒரு கோவிலிலும், அவர்களின் தனிப்பட்ட நண்பர்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.
இதற்கமைய, மாத்தளை, பல்லேபொல பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அம்போக்கா கிராமத்தில் உள்ள மலைத்தொடர் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் அவசர கோரிக்கையொன்றினை விடுத்துள்ளனர்.
நிலச்சரிவுகள் காரணமாக வெளியேறுமாறு அதிகாரிகள் தொடர்ந்து தகவல் வழங்கும் நிலையில், முறையான அறிக்கை அல்லது ஆய்வு இல்லாமல் வீடுகளிலிருந்து வெளியேற கடினமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த விடயம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் உடனடியாக கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்பு கிராமத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைமை குறித்த அறிக்கையை விரைவில் வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டித்வா புயலால் பெரும்பேரழிவை சந்தித்த பதுளை ஓயா தோட்டம் கிராமத்தில் உள்ள வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் எல்ல பகுதிக்கு வருகை தந்த சுவீடன், ஜெர்மனி, நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இரண்டு நாட்களாக மக்களுடன் இணைந்து வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் பதுளு ஓயா பெருக்கெடுத்ததால் பதுளையில் பாரிய மண் சரிவு ஏற்பட்டு பலர் வீகளை இழந்து நிர்க்கதிக்காகியுள்ளனர். இந்நிலையில் பதுளை மாவட்டத்திற்கு தொடர்ந்து அபாயம் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை ஓயா தோட்டம் கிராமத்தில் சேதமடையாத வீடுகளை மக்கள் சுத்தம் செய்து வரும் நிலையில், வெளிநாடவர்களும் மக்களுடன் இணைது வீடுகளை சுத்தம் செய்வதாக கூறப்படுகின்றது.
காலி – ஹிக்கடுவை நாரிகம பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காரின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரித்தானியாவில் இந்திய மாணவி ஒருவரை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்திய லேபர் கட்சி அரசியல்வாதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவின் மேற்கு வண்டனில் உள்ள லேபர் கட்சி கவுன்சிலர் ஹினா மீர் (Hina Mir), இந்திய மாணவி ஒருவரை குழந்தை பாதுகாவலராக (Nanny) வேலைக்கு அமர்த்தியதற்காக 40,000 பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹினா மீர், 22 வயதான ஹிமான்ஷி காங்க்லேயை (Himanshi Gongley) மாதம் 1,200 பவுண்டு பணமாக வழங்கி, தன் இரு குழந்தைகளை கவனிக்க பணிக்கு அமர்த்தியுள்ளார்.
மாணவிக்கு சட்டப்படி வேலை செய்ய உரிமை இல்லை என்பதையும், விசா 2023 மார்ச் மாதத்தில் காலாவதியானதையும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மாணவி, 2024 ஓகஸ்டில் பொலிஸ் காரை நிறுத்தி உதவி கேட்டபோது, தன்னை உடல்ரீதியாக துன்புறுத்தல் செய்ததாகவும், தனக்கு தற்கொலை எண்ணம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஸ்டீபன் ஹெல்மன், “மீர் சமூகத்தில் நல்ல பெயர் பெற்றவர். ஆனால், அவரது சாட்சியங்களில் முரண்பாடுகள் உள்ளதால் நம்ப முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். மீர், மாணவியை “வீடியோ கேம்ஸ் விளையாட, டிவி பார்க்க, வீட்டில் சும்மா இருக்க வந்த விருந்தினர்(social visitor)” என விளக்கமளித்திருந்தார்.
ஆனால், நீதிமன்றம் மாணவியின் சாட்சியங்களை உண்மையானவை எனக் கருதி, மீர் மீது அபராதம் விதித்தது. ஹினா மீர், ஹவுன்ஸ்லோ பகுதியில் முன்னாள் துணை மேயர் ஆவார்.
உள்ளூர் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள், “இது சட்டத்தின் மிகப்பெரிய மீறல். அவர் கவுன்சிலர் பதவியில் தொடரக்கூடாது” என்று வலியுறுத்தியுள்ளனர்.
மீர், 40,000 பவுண்டு அபராதத்துடன் 3,620 பவுண்டு நீதிமன்ற செலவையும் கட்ட வேண்டும். இந்த சம்பவம், பிரித்தானியாவின் சட்டவிரோத வேலைவாய்ப்பு தொடர்பான கடுமையான நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.