அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சுய கற்றல் கையேடுகள் தற்போது அச்சிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த தரங்களில் கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை பைகளின் எடையும் குறைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனுக்கு 72 வயது தாயொருவர் தனது சிறுநீரகத்தை வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 72 வயதான மூத்த பெண்மணி ஒருவர் அவரது 46 வயதான மகனுக்கு சிறுநீரகத்தை வழங்கியுள்ளார். சிறுநீரக செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்ட குறித்த ஆண் கடந்த இரு வருடங்களாக கூழ்மப்பிரிப்பு (dialysis) சிகிச்சையைப் பெற்று வந்துள்ளார்.
எனினும் உடல் நலனில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுநீரகத்தை நன்கொடையாக வழங்க அவரது தாயார் முன்வந்துள்ளார்.
தற்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் , வெளிநாடொன்றில் இருந்து நாடு திரும்பிய தனது மனைவியை காணவில்லையென, பெண்ணின் கணவன், கடந்த சில நாட்களின் முன்னர் முறைப்பாடு செய்திருந்தார்.
இந் நிலையில், தான் வேறொரு திருமணம் செய்து கொழும்பில் வாழ்வதாக அப்பெண் காணொளி வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாமிமலை ஓல்ட்டன் தோட்டம் நிலாவத்தை பிரிவில் உள்ள, இரண்டு குழந்தைகளின் தாயான, மோகன் நிஷாந்தனி (வயது 33) என்ற பெண்னே காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதோடு பதுளை ஸ்பிரிங்வெளி பகுதியை சேர்ந்த ஒருவர் மனைவியை கடத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அப்பெண் வெளியிட்ட காணொளியில், தான் காணாமல் போகவில்லை என்றும், வேறொரு திருமணம் செய்து மிகவும் மகிழ்ச்சியாக கொழும்பில் வாழ்ந்து வருவதாக காணொளி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் பெற்ற குழந்தைகளையும் , கணவனையும் விட்டுவிட்டு எப்படி உன்னால் வாழ முடிகிறது என சமூக வலைத்தளவாசிகள் பெண்ணை திட்டி தீர்த்து வருகின்றனர்.
முகநூல் (Facebook) காரணமாக இந்த ஆண்டில் பாலியல் நோய் பரவல்கள் (STDs) இரட்டிப்பாகியுள்ளதாக அநுராதபுரம் பாலியல் சுகாதார சேவை மையத்தின் பாலியல் நோய்கள் பிரிவின் மூத்த மருத்துவ அதிகாரி ஹேமா வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
இவற்றில் பொதுவான பரவும் பாலியல் நோயான சிபிலிஸ் என்றும், அவற்றில் HIV தொற்றாளர்களும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் இந்த நிலைமையை சுட்டிக்காட்டும் அவர்,
“முகநூல் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு பெரும்பாலான ஆண்கள் இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். ஒரே பெண் முகநூல் மூலம் அதிக எண்ணிக்கையிலான ஆண்களுடன் தொடர்பில் காணப்பட்டதால் இவ்வாறான நிலைமைகள் உருவாகியுள்ளன.
இது ஒரு மாவட்டத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை பாதித்துள்ளது.
எனவே, முகநூல் தொடர்புகளில் மிகவும் கவனமாக இருப்பது முக்கியம். பல ஆண்டுகளுக்கு முன்பே சிபிலிஸ் நோய் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டாலும், அது இன்னும் பாலியல் ரீதியாக பரவும் நோயாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நேற்றையதினம்(16) 4 இலட்சத்தை விட இன்றையதினம்(17) மேலும் 10,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்றையதினம் கொழும்பு செட்டித் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 410,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 379,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,315,481 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 46,410 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 371,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 42,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், பண்டிகையை கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ‘ரெடிட்’ சமூக வலைதளத்தில் 21 வயது இந்திய இளைஞன் ஒருவர் வெளியிட்ட பதிவு இணையவாசிகளை கண்கலங்க வைத்துள்ளது.
அவரது பதிவில், தனக்கு புற்றுநோய் 4-வது கட்டத்தில் இருப்பதாகவும், எதிர்வரும் தீபாவளியே தனக்கு கடைசி திபாவளியாக இருக்கக் கூடும் என்றும் அந்த இளைஞர் பதிவிட்டுள்ளார்.
புற்றுநோய் வென்றுவிட்டது, நான் விடைபெறுகிறேன். கடந்த 2023-ம் ஆண்டு எனக்கு பெருங்குடல் புற்றுநோய் 4-வது கட்டத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பிறகு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இனிமேல் முயற்சி செய்வதற்கு எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த ஆண்டின் இறுதிவரை நான் இருக்கமாட்டேன்.
தீபாவளி வரப்போகிறது. தெருக்களில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவற்றை நான் பார்ப்பது இதுவே கடைசி முறை என்பதை உணர்வது கடினமாக இருக்கிறது. இந்த விளக்குகள், சிரிப்பு மற்றும் சத்தங்களை விட்டு பிரிவது எனக்கு வருத்தமாக இருக்கும்.
உலகம் தனது போக்கில் இயங்கிக் கொண்டிருக்கும்போது, எனது வாழ்க்கை அமைதியாக முடிந்து கொண்டிப்பதை நினைக்கும்போது விசித்தரமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு, நான் ஒரு நினைவாக மட்டுமே இருப்பேன்.
அப்போது யாராவது என் இடத்தில் விளக்கு ஏற்றுவார்கள் என்பது எனக்கு தெரியும். சில இரவுகளில் நான் வழக்கம்போல் எனது எதிர்காலத்திற்காக திட்டமிடுகிறேன்.
இது வேடிக்கையாக இருக்கிறது. எனக்கு கனவுகள் கூட இருந்தன, உங்களுக்கு தெரியுமா? நான் இன்னும் நிறைய பயணம் செய்ய விரும்பினேன், சொந்தமாக ஏதாவது ஒன்றைத் தொடங்க விரும்பினேன், எல்லாம் சரியாகிவிட்டால் ஒரு நாயை தத்தெடுக்க வேண்டும் என்று விரும்பினேன்.
ஆனால் இப்போது என்னிடம் போதிய நேரம் இல்லை என்பது நினைவுக்கு வரும்போது அனைத்து எண்ணங்களும் கலைந்து போய்விடுகின்றன. நான் வீட்டில் இருக்கிறேன், என் பெற்றோரின் முகத்தில் சோகம் தெரிகிறது. நான் ஏன் இதை பதிவிடுகிறேன் என்று எனக்கு தெரியவில்லை.
அடுத்து என்ன வருகிறதோ அதில் நான் அமைதியாக மறைந்து போவதற்க முன்பு ஒரு சிறிய தடயத்தை விட்டுச் செல்வதற்காக இதையெல்லாம் சத்தமாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
விடைபெறுகிறேன் என இளைஞர் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் இளைஞனின் பதிவால் இணையவாசிகளை கலங்க வைத்துள்ளது. எனினும் அந்த இளைஞருக்கு ஆறுதல்தரும் வார்த்தைகளையும் இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி, நேபாளத்திற்கு சென்று அவரின் உருவத்தை ஒத்த பெண்ணான நந்தகுமாரன் தக்சியை கண்டு வியப்பில் ஆழ்ந்ததாக கொழும்புக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான நிசாந்த சொய்சா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை வானொலியின் இணைய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
செவ்வந்தி நேபாளத்திற்கு செல்லும் வரை தக்சியை தெரியாதாம். கைது செய்யப்பட்ட ஆறு பேரும் நேபாளத்தில் பிரிந்து வசித்து வந்த நிலையில் ஒருவருக்கு ஒருவர் அவர்களின் இருப்பிடங்களை தெரிவித்துக் கொள்ளவில்லை.
ஆறு அல்லது ஏழு நாட்கள் தொடருந்துகள், பேருந்துகள் மற்றும் கார்களில் செவ்வந்தியை அழைத்துச் சென்ற ஒரு இந்திய தரகரால் ஜூன் மாதம் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நேபாள எல்லையில் தரகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் கைது செய்யப்படும் வரை இஷாரா செவ்வந்தி நேபாளத்திலேயே இருந்துள்ளார். அங்கு தங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும், பணம் உட்பட அனைத்தும் துபாயில் இருந்த ஜே.கே.பாயால் வழங்கப்பட்டுள்ளன.
அவரது நலனை விசாரிக்க அவர் அவ்வப்போது துபாயிலிருந்து நேபாளத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஜே.கே. பாயின் வேண்டுகோளின் பேரில் கே. சிவதாசன் செவ்வந்தி ஒரு மீன்பிடி படகில் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
நேபாளத்தில் தங்கியிருந்த காலத்தில் செவ்வந்தி தனது உடல் அழகு மற்றும் முகத்தை பொலிவாக வைத்திருக்க அழகுக்கலை நிலையங்களுக்கு அதிகம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை. பாதுக்க பிட்டும்பே பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. இந்தக் காகம் யாரோ ஒரு வீட்டில் வளர்க்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த காகம் வங்கிகளுக்கு அருகிலுள்ள கடைகள் மற்றும் பகுதிகளுக்குள் பறந்து பணத்தை எடுக்கிறது. கடை ஒன்றுக்குள் நுழைந்த காகம் அங்கிருந்து பணத்தை திருடிச் செல்லும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியிலுள்ள அலுவலகம் ஒன்றுக்கு சென்ற பெண் ஒருவரின் உடலில் காகம் ஒளிந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த காகத்திற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தளம், வென்னப்புவை, கொரக கஸ் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (17) காலை 06.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் வேனின் சாரதியும் காயமடைந்துள்ள நிலையில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மகளும் வேன் சாரதியும் சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து வேனின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினை நாகபூஷணி அம்பாளின் இராஜகோபுரத்தின் மேலாக தோன்றிய மிகப் பெரிய வானவில் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நேற்றையதினம் இந்த வானவில் தோன்றியுள்ளது.
இந்த வானவில்லானது நயினை அம்மனின் ராஜகோபு அழகை மேலும் அழகாக்கியுள்ளது. நயினை நாகபூஷணி அம்மனிற்கு அழகூட்டி வானவில் தோன்றிய காட்சி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நயினை நாகபூஷணி அம்மன் ஆலயம் ஈழத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த அம்மன் ஆலயங்களுள் ஒன்றாகும். நாகம் பூசித்ததால் நாகபூஷணி என நாமாவளி அம்மனுக்கு ஏற்பட்டதாக அலய வரலாறுகள் கூறுகின்றன.
இந்நிலையில் அம்மனுக்குரிய கேதார கௌரி நோன்பு இடம்பெறும் நாளில் இவ்வாறு மிகபெரும் வானவில் தோன்றி அம்மனின் அகை மெருகூட்டியமை கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்துபோயுள்ளனர்.
அதேவேளை தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கலங்கரை விளக்காய் அமைந்துள்ள நயினை தாய், ஈழ வரலாற்றில் பெரும் புகழ் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்திலிருந்து அழைத்துவரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை இடம்பெற்ற பின்னர் இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் மித்தெனிய பகுதியிலுள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிற்கு இஷாரா அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், தங்காலை பகுதியிலும் இஷாரா தங்கியிருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் இஷாரா செவ்வந்தி வாடகை வாகனம் ஒன்றினூடாக கிளிநொச்சிக்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கியுள்ளார்.
அதன் பின்னர் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாக இஷாரா குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் மூன்று வாரங்கள் தங்கியிருந்த நிலையில் அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பிச் சென்றதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்தியாவில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தபோது, ஜே.கே. பாய் அவருக்கு ‘தமிழினி’ என்ற பெயரில் ஒரு இந்திய அடையாள அட்டையை தயாரித்துக் கொடுத்துள்ளார். அதன் பின்னரே நேபாளம் சென்றதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பல மாதகால தேடுதலின் பின்னர் இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 06 சந்தேக நபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதனையடுத்து, இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 6 சந்தேக நபர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாது, அறிக்கைகளை சமர்ப்பித்து நீதவானிடம் தடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.
அதன்படி, இஷாரா செவ்வந்தி, ஜப்னா சுரேஷ், ஜே.கே.பாய் மற்றும் டுப்ளிகேட் இஷாரா என்ற தக்ஷி ஆகியோர் கொழும்பு குற்றதடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா பாபா என்பவர் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவிடமும், நுகேகொட பபி என்பவர் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.
இலங்கை வராலற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சத்தை கடந்துள்ளது.
இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இதன் விலை இன்று 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.
அதே நேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 13 ஆயிரத்து 800 ரூபாய் அதிகரித்து 379 ஆயிரத்து 200 ரூபாயாக காணப்படுகிறது.
நேற்றைய தினம் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 லட்சத்து 95 ஆயிரமாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 லட்சத்து 65 ஆயிரத்து 400 ரூபாயாகவும் காணப்பட்டது.
ஒரு நாள் பாடசாலைக்கு சமூகமளிக்காமையால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரை மரக் குச்சியால் தாக்கிய ஆனமடுவ கல்வி வலயத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபர் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
அதன்படி, தாக்குதல் நடத்திய அதிபர் குறித்து பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஆளானவர் கெடத்தேவ பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியாவார்.
இந்தச் சம்பவத்தை எதிர்கொண்ட சிறுமி, முந்தைய நாள் பாடசாலைக்கு செல்லாததால் கோபமடைந்த அதிபர், அருகில் இருந்த மரக் குச்சியை எடுத்து பலமுறை தாக்கியதாகக் கூறி அவரது பெற்றோர், ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நமுனுகுல கனவெரெல்ல பகுதியைச் சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கடை உதவியாளரான 17 வயதான காதலன் இன்று (16) கைது செய்யப்பட்டதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளையில் உள்ள பட்டியகெதரவைச் சேர்ந்த சந்தேக நபர், நமுனுகுல கனவெரெல்ல தோட்டத்தில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தியதாகக் கூறப்படுகிறது.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சந்தேக நபர் முன்பு மைனர் சிறுமியுடன் காதல் உறவில் இருந்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
தனது தந்தை தன்னை மிரட்டி துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி அவருக்குத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சந்தேக நபர் வேலைக்காக கொழும்பில் தங்கியிருந்த தனது தாயிடம் சென்றுள்ளார், அதன் பின்னர் சிறுமியின் தந்தை இந்த விவகாரம் குறித்து பொலிஸில் புகார் அளித்தார்.
சிறுமி, சந்தேக நபர் மற்றும் சந்தேக நபரின் தாய் ஆகியோர் பின்னர் தாமாக முன்வந்து பொலிஸில் முறைப்பாடு செய்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கிலுள்ள நான்கு மாவட்டங்களில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
வவுனியா, மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான (Re-conductoring) வேலைகளிற்காக வடமாகாணத்திற்கான 132kV வவுனியா புதிய அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பானது எதிர்வரும் ஜப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ‘காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை துண்டிக்கப்படுவதால்,
யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் ,முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் முழுவதும் மின் விநியோகமானது துண்டிக்கப்படவுள்ளது.
மேலும் வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
இணையதளம் மூலமாகவும், தொலைபேசிகள் மூலமாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, சில சமயங்களில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, பிணையில்லாமல் உடனடியாகக் கடன் வழங்க முடியும் என்று கூறி கடன் வழங்குவதற்காக முன்வந்த பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்கள் இலங்கை பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அத்தகைய நிறுவனங்களிடமிருந்து தொலைபேசிகள் மூலம் கடன் வாங்கும் போது செலுத்த வேண்டிய வட்டி வீதம் மற்றும் கடன் கால அவகாசம் குறித்து உரிய கவனம் செலுத்தாமல் கடன் வாங்குவதால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருப்பது இலங்கை பொலிஸாருக்கு கிடைக்கும் முறைப்பாடுகளில் கண்காணிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான சமயங்களில் கடனைத் திருப்பிச் செலுத்தும் போது எதிர்பாராதவிதமாக அதிக வட்டி செலுத்த நேரிடுவதுடன், அந்தக் கடன் நிறுவனங்கள் கடனை வசூலிக்க கடன் பெற்றவர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கும் வகையில் அழைப்புகள் விடுப்பது மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக அவமானகரமான பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் இலங்கை பொலிஸாருக்கு நாளாந்தம் முறைப்பாடுகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கமைய, இவ்வாறாக இணையம் மற்றும் தொலைபேசிகள் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து இலங்கை பொலிஸாரால் இலங்கை மத்திய வங்கியின் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மேற்பார்வைப் பிரிவில் வினவியபோது,
அத்தகைய நிறுவனங்களில் பெரும்பாலானவை இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை அல்ல என்றும், கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் எப்போதும் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட நிறுவனங்களிடம் மட்டுமே தங்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.