சொக்லெட் திருடியயதாக முதியவர் அடித்துக்கொலை : கண்டியில் பயங்கரம்!!

கண்டி – பேராதனை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சொக்லெட் திருடியதாக முதியவர் ஒருவரை கொடூரமக தாக்கியதில் , முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் மற்றும் கடையில் வேலை செய்யும் நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவத்தில் பேராதெனிய பகுதியை சேர்ந்த தர்மசேன குரே (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி மாலை, அவர் தனது வீட்டிற்கு மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.

இதன்போது, அருகிலுள்ள கடையைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் வந்து, முந்தைய நாள் அவர் சொக்லெட் திருடிய சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவித்து முதியவரை தமது கடைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழில் குடும்பஸ்தர் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு தப்பியோடிய நபர்கள்!!

35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் மீது பனையால் விழுந்ததாக கூறி மயக்க நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்ப்பித்துவிட்டு வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

அறுவைச் சிகிச்சை

அதன் பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் மயக்க நிலையில் இருந்து அவர் மீளவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த குடும்பஸ்தரின் தலை மற்றும் ஒரு கையில் படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த காயம் பனையால் விழுந்ததுபோல் இல்லை என சந்தேகிக்கப்படுகிறது.

 

வவுனியா வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் சுமந்திரன் கலந்துரையாடல் : கர்த்தாலுக்கு ஆதரவு வழங்க கோரிக்கை!!

வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று (13.08.2025) இடம்பெற்றது.

வடகிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமை போன்ற விடயங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு தழுவிய ரீதியில் கர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக்கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 

குறித்த கர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட வர்த்தகர்கள் ஆதரவினை வழங்குமாறு கோரியே இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி வடகிழக்கு தழுவிய ரீதியில் கர்த்தால் ஒன்றை அனுஸ்டிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை(15.08) அதனை அனுஸ்டிக்குமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து வந்த கோரிக்கை காரணமாக அதனை 18ஆம் திகதி என மாற்றியுள்ளோம்.

அந்தவகையில் முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு மரணமான சம்பவம் இடம்பெற்றிருந்தது. பிரதானமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் அழைக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் எமது பகுதிகளில் மக்கள் மத்தியில் தேவைக்கு அதிகமான இராணுவக் குவிப்பு மற்றும் இராணுவ முகாம்கள் நீண்டகாலமாக நிலைகொண்டிருப்பதால் இப்படியான தொடர் விளைவுகள் ஏராளமாக நடக்கின்றது.

எனவே இராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும். மக்களின் சாதாரண வாழ்க்கையிலே அவர்களின் ஈடுபாடு இருக்க கூடாது என நீண்டநாட்களாக நாங்கள் சொல்லிவருகின்றோம். அதன் விளைவே இந்த மரணமும் கூட.

எனவே இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ் செம்மணி மனிதப் புதைகுழியானது மிகவும் மோசமான முறையிலே செய்யப்பட்டிருக்கின்றது. குழந்தைகளது சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஆதாரங்கள் வெளிவரும் சந்தர்ப்பங்களில் அவற்றை எல்லாம் முன்னிலைப்படுத்தி இந்த கர்த்தாலை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

வடகிழக்கை முற்றிலுமாக முடங்கச்செய்யும் போராட்டமாக இதனை நாம் நடாத்தவேண்டும். வடக்கின் ஏனைய மாவட்டங்களின் வர்த்தக பிரதிநிதிகளுடனும் நாங்கள் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளோம்.

அவர்கள் ஆதரவினை வழங்குவதாக சொல்லியிருக்கின்றனர். கிழக்கிலும் முழுமையான ஆதரவு வழங்குவதாக சொல்லியிருக்கின்றார்கள். இதுவரை பாரியளவிலான ஆதரவு இந்த கர்தாலுக்கு கிடைத்துள்ளது என்றார்.

விசா கிடைக்கவில்லை : காதலனை காண தமிழகத்திற்கு தனியாக சென்ற இலங்கைப் பெண்!!

காதலனை கரம் பிடிப்பதற்காக இலங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் படகில் கடல் தாண்டி தனுஷ்கோடி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. விசாரணைகளின் பின்னர் அவர் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இளம்பெண் ஒருவர் வந்திருப்பதாக கடலோர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அந்த பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை மன்னார் ஆண்ட குளம் பகுதியை சேர்ந்த விதுர்ஷியா என்ற குறித்த பெண் ஏற்கனவே தனது தாய், தந்தையுடன் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மறு வாழ்வு முகாமில் வசித்துள்ளதுடன் அப்போது அவர், ஒரு வாலிபரை காதலித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ளதுடன் இங்கிருந்து திரும்பி இந்தியா செல்ல அவருக்கு விசா கிடைக்காததால் காதலனை கரம்பிடிக்க படகில் தமிழகம் செல்ல முடிவெடுத்துள்ளார்.

இதற்காக அப்பெண் தனது நகையை விற்று 2 லட்சம் ரூபாய் பணத்தை திரட்டி படகோட்டியிடம் கொடுத்து, அவரது ஏற்பாட்டில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் படகில் ஏறி அரிச்சல்முனைக்கு சென்றுள்ளார்.

அந்த பெண்ணை இறக்கி விட்டு படகோட்டி மீண்டும் இலங்கையை நோக்கி தப்பிச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின்னர் அந்த பெண் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காதலனை கரம்பிடிக்க இலங்கையிலிருந்து படகில் இளம்பெண் ஒருவர் கடல் கடந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யாழ். நல்லூர் கந்தன் ஆலயத்தில் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த சிறுவன்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் ஆலயத்தில் பல பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வண்ணம் காவடி, அங்கப் பிரதிஷ்டை, அடியளித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது வழமை.

அந்த வகையில் நேற்று (12) தந்தை ஒருவர் அங்கப் பிரதிஷ்டையில் ஈடுபடும்போது அவரது மகன் தந்தையின் பின்னே பக்தியுடன் நடந்து வருவது பார்ப்போரை நெகிழ்ச்சியுடன் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

 

கடல் அலையில் அள்ளுண்டு சென்ற சிறுமி!!

தங்காலையில் உள்ள மடிலா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுமி பலத்த அலைகளில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்காலையைச் சேர்ந்த குழந்தையின் குடும்பத்தினர் சுற்றுலா சென்று உள்ளூர் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தனர். இநிலையில் இன்று (13) கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்தது.

கொழும்பில் உள்ள ஒரு முன்னணி பெண்கள் பாடசாலையின் மாணவியே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையை விட்டு வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

அரசாங்க பல்கலைக்கழகங்களில் இலவசமாக பட்டம் பெறும் மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டப்படிப்பு முடித்தவுடன் இலங்கையை விட்டு வெளியேறுவதாக புதிய புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு வெளியேறுவோர் மீண்டும் நாட்டுக்கு வருவதில்லை என ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல மற்றும் லக்ஷ்மன் குமார ஆகியோர் நடத்திய ஆய்விற்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

விசேடமாக அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் துறைகளில் கற்ற மாணவர்களின் இடம்பெயர்வு மேலும் அதிகமாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக கல்விக்காக 87 பில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது. இந்த பணம் வரி செலுத்துவோரின் மூலமாக நேரடியாகவும், பல்கலைக்கழகங்களின் சொந்த வருமானம் மூலமும் செலவிடப்படுகின்றது.

ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவருக்கும் அரசாங்கம் ஆண்டுக்கு 400,000 முதல் 1.4 மில்லியன் ரூபாய் வரை செலவிடுகிறது.

இலவச கல்வி பெற்ற மாணவர்கள் இலங்கையை விட்டு சென்றுவிட்டால், அதற்கு அரசாங்க செலவினை திருப்பிச் செலுத்தும் ஒரு பொறுப்புணர்வு அவசியமாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டை நிரந்தரமாகவோ, நீண்டகாலத்திற்கு விட்டு செல்லும் பட்டதாரிகள் குறைந்தது 10,000 – 15,000 டொலர்கள் வரை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும். அல்லது தங்கள் குடும்பத்தினருக்காக ஆண்டுக்கு 50,000 டொல் வரை வரை நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என ஆய்வாளர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகள் நாட்டில் பணியாற்றுமாறு கட்டாயப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது. வேலையின்மை மற்றும் குறைந்த ஊதிய வாய்ப்புகள் காரணமாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வெளிநாடு செல்லுமாறு தூண்டுகின்றனர்.

இந்த ஆய்வு இன்னும் தொடரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இளம் யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட நபருக்கு நேர்ந்த கதி!!

கொழும்பு, மிரிஹான பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை ஏமாற்றிய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக் மூலம் அறிமுகமாக 35 வயதான நபரும் 21 வயது யுவதியும் காதல் தொடர்பில் இருந்ததாகவும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என அறிந்த யுவதி, அந்த உறவில் இருந்து விலகியமையினால் கோபம் அடைந்த குடும்பஸ்தர் இந்த செயலை செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்தினபுரியை வசிக்கும் 35 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி, ஒரு வருடமாக அந்த இளம் பெண்ணுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரண்டு குழந்தைகளின் தந்தை என்பது தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இளம் தம்பதியின் மோசமான செயல் : பொலிஸ் விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இளம் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் குறித்த தம்பதியர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ், ஹெரோயின் மற்றும் போதை வில்லைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரத்திலுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துக் குறித்த போதைப்பொருட்களை விநியோகம் செய்ய சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட தம்பதியினரை ஹோமாகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து : சாரதியின் தூக்க கலக்கத்தால் நேர்ந்த விபரீதம்!!

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நெல் ஏற்றும் சிறிய ரக கெண்டருடன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று புதன்கிழமை (13) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் யாருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை. எனினும் இரண்டு வாகனங்களும் சேதமாகியுள்ளன. சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றுவதற்காக வந்த பார ஊர்தியானது, ஈச்சிலம்பற்று – பூமரத்தடிச்சேனை பகுதியிலுள்ள வீதியில் நெல் ஏற்ற நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ஹெண்டர் வாகனத்தில் நேருக்குநேர் மோதியுள்ளது.

இந்த நேரத்தில் நெல் ஏற்றும் வாகனத்தில் யாரும் இல்லாததால் எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை. பாரவூர்தி வாகனச் சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசைகாட்டி மோசம் செய்த இளம் பெண்ணை தேடும் பொலிஸார்!!

ஜப்பானில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி மக்களிடம் பண மோசடி செய்த கல்கிஸ்ஸ பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரண்டு வருட Work Visa வழங்குவதாகக் கூறி, இந்தப் பெண் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பணம் மோசடி செய்ததாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதன்படி, கம்பளை பகுதியில் வசிக்கும் ஒருவர் 2023 நவம்பர் 14ஆம் திகதி குறித்த பெண்ணிடம் 5 இலட்சம் ரூபாவை முதற்கட்டமாக வழங்கியுள்ளார்.

இருப்பினும், குறித்த பெண் இன்னும் பணத்தைத் திருப்பித் தரவில்லை அல்லது ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், அந்தப் பெண்ணுக்கு எதிராக கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த பெண் அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது. இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையில் சந்தேகநபரான பெண் பண மோசடி தொடர்பில் பலரை ஏமாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தலைமறைவான பெண்ணை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தலாவ – கெக்கிராவை வீதியில் வேன் விபத்து : 6 பேர் காயம்!!

தலாவ – கெக்கிராவை வீதியில் மகாஇலுப்பல்லம பிரதேசத்தில் இடம்பெற்ற வேன் விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் 01.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி பின்னர் வீடொன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் வேனில் பயணித்த 6 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா சின்னடம்பனில் யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்!!

வவுனியா சின்னடம்பனில் யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், செவ்வாய்க்கிழமை (12.08.2025) தொழில் நிமித்தமாக தனது துவிச்சக்கர வண்டியில் சின்னப்படம்பன் வீதியின் ஊடாக பயணித்த வேளையிலேயே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவத்தில் பெரியமடு, நெடுங்கேணியினை சேர்ந்த 61 வயதுடைய நாகேசு தெய்வேந்திரன் என்பவரே படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க!!

வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (13.08.2025) பார்வையிட்டிருந்தார்.

கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வவுனியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை முதலிட்டு அமைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் இதுவரை இயங்காமல் உள்ளது.

இந்நிலையில் அதனை இயங்கச்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அதற்கான முன் ஆயத்த பணிகளை அமைச்சர் இன்று பார்வையிட்டிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், பல மில்லியன் ரூபாய் பணம் இந்த பொருளாதார மத்திய நிலையத்தில் செலவிடப்பட்டுள்ளது. எனவே இம்மாத இறுதிக்குள் இதில் செய்யவேண்டிய திருத்தப்பணிகளை செய்துவிட்டு எதிர்வரும் மாதம் முற்பகுதிக்குள் அதனை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் ஏற்கனவே வவுனியா மொத்த வியாபார சந்தையில் உள்ள 35 வியாபாரிகளுக்கு மத்திய நிலையத்தில் உள்ள கடைகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மிகுதி 15 கடைகள் விவசாய அமைப்புக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அத்துடன் மன்னாரில் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. எனவே அந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்.

அந்த திட்டத்தில் தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளனவா என்பது தொடர்பாக ஆராயவேண்டும். அபிவிருத்திப் பணிகளையும் மக்களுக்கு செய்யவேண்டிய தேவை உள்ளது.

நாட்டில் மின்சாரம் தொடர்பாக பல பிரச்சனைகள் உள்ளது. அதனை நிவர்த்திசெய்யவேண்டும். எனவே மக்களின் எதிர்ப்பினையும் கருத்தில் எடுத்து அந்த திட்டம் தொடர்பான முடிவு அறிவிக்கப்படும்.

சுப்ரீம்செற் செயற்கைகோள் தொடர்பாக அரசாங்கத்திற்குள் பிரச்சனையை ஏற்ப்படுத்த சிலர் முனைகின்றார்கள். அப்படி எவராலும் செய்யமுடியாது.
உத்தியோகத்தர்கள் வழங்கிய பிழையான தகவல்களின் அடிப்படையிலேயே பிரதமர் அந்த விடயத்தை கூறியிருந்தார்.

பிழையான தகவல்களை வழங்கியவர்களே இதற்கான பொறுப்பை ஏற்க்கவேண்டும். அதனை சரிசெய்ய வேண்டியது எமது பொறுப்பு. அதனாலேயே நான் அவ்வாறு கூறியிருந்தேன். அத்துடன் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்ப்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்திற்குள் எந்தவிதமான பேச்சும் இல்லை என்றார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், பிரதேச செயலாளர் இ.பிரதாபன், மற்றும் அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், தேசியமக்கள் சக்தியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை தமிழ் யுவதி!!

மன்னாரில் இருந்து பெண் ஒருவர் கடல் வழியாகப் படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார்.

மன்னார் மாவட்டம், தலைமன்னார் கிராமத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் 2 இலட்சம் ரூபா பணம் கொடுத்து அரிச்சல்முனையை மேற்படி பெண் சென்றடைந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரையில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணப் பையுடன் நின்றிருப்பதாக அப்பகுதி மீனவ மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணையில் அவர் இலங்கை திருகோணமலை மாவட்டம், ஆண்டான்குளம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அங்கிருந்து கள்ளத்தனமாக படகில் தப்பிவந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிஸார் அப்பெண்ணை மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

இதில், தலைமன்னாரில் இருந்து நள்ளிரவு கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு அதிகாலையில் அரிச்சல்முனை வந்திறங்கியது தெரியவந்தது. படகுக்கு இலங்கை மதிப்பில் இரண்டு லட்சம் பணம் கொடுத்துள்ளார்.

இவரது குடும்பத்தினர் ஏற்கனவே இலங்கையில் இருந்து தப்பிவந்து தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களில் தற்போது தங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இடியுடன் கூடிய கனமழை : பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.