பேரிடரின் போது கிராமம் ஒன்றில் பலரின் உயிர்களை காப்பாற்றிய நாய்!!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் பலர் உயிரிழந்த நிலையில், நாயொன்றினால் கிராமம் ஒன்று காப்பாற்றப்ட சம்பவம் பதிவாகி உள்ளது.

பதுளை, மாஸ்பண்ண பகுதியில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட சூட்டி என்ற பெயர் கொண்ட நாய் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தமையினால் பலரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

கடந்த 28ஆம் திகதி பாரிய மழை பெய்து கொண்டிருந்த போது, குறித்த நாய் தொடர்ச்சி ஊளையிட்டு, உரிமையாளரை எச்சரித்துள்ளது.

நாயின் செயற்பாட்டினை உணர்ந்த வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்று பார்த்த போது, மோசமான நிலைமை குறித்து அந்தப் பகுதி மக்களுக்கு எச்சரித்துள்ளார்.

உடனடியாக குழந்தைகள் உட்பட அந்தப்பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். காலையில் அவர்கள் வாழ்ந்த இடத்தில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் உவபரணகமவின் மஸ்பன்ன எனப்படும் பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற வனப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி டி.எம். தென்னகோன், தான் அனுபவித்த அனுபவத்தைப் பற்றி தெரிவித்துள்ளார்.

“செப்டம்பர் மாதம் முதல் எங்கள் கிராமங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் 27 ஆம் திகதி மதியம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. மாலையில், எங்கள் கிராமங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

பின்னர், கிராமத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அறிந்தேன். இரவில் மிகவும் சிரமப்பட்டு நாங்கள் இரவு உணவு சமைத்து, சமையலறையில் இருந்து பேசிக் கொண்டிருந்தோம்.

எங்கள் நாய் சமையலறைக் கதவை முன் பாதங்களில் மோதி, விசித்திரமாக சிணுங்கி, ஊளையிட்டுக் கொண்டிருந்தது. முதலில், மழையில் திருடன் வந்திருப்பார் என்று நினைத்தோம்.

பின்னர் மழையால் ஏற்பட்ட குளிரால் வீட்டிற்குள் வர முயற்சித்திருக்கலாம் என நினைத்தோம். கதவைத் திறந்தபோது, ​​எங்கள் நாய் குரைத்துக் கொண்டே முன்னோக்கி ஓடுவதைக் கண்டோம்.

அதே நேரத்தில், மலையிலிருந்து பெரிய பாறைகள் உருண்டு விழும் சத்தம் கேட்டது. ஒரு நிலச்சரிவு எங்கள் வீட்டை மூடும் என்று நினைத்தேன். காப்பாற்ற வாருங்கள் என கத்திக்கொண்டு வீட்டிற்குள் ஓடினேன்.

என் மனைவி மற்றும் மனைவியின் தாயையும் அழைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தோம். நிலச்சரிவு வரும் என்று நினைத்து சுமார் 100-200 மீட்டர் ஓடினோம்.

எங்கள் அலறல் பக்கத்து வீடுகளில் வசிக்கும் 11 பேரின் உயிரைக் காப்பாற்றியது. எங்கள் கிராமத்தில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கின. சூட்டியால், நாங்கள் 14 பேரும் காப்பாற்றப்பட்டோம். இல்லையெனில் நாங்கள் மண்ணில் புதைந்திருப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டித்வா புயலால் இலங்கையின் 20% நிலப்பரப்பு நீரில் மூழ்கியது : ஐ.நா. அறிக்கை!!

இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

டித்வா புயலால் இலங்கையில் 25 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

அதற்கமைய, அவர்களது புதிய புவியியல் பகுப்பாய்வின்படி, புயலால் ஏற்பட்ட வெள்ள நீர் 1.1 மில்லியன் ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பை பாதித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 20 சதவீதம் அல்லது ஐந்தில் ஒரு பங்கு நீரால் மூழ்கியுள்ளதுடன், வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளமையும் இதில் தெரியவந்துள்ளது.

‘டித்வா’ சூறாவளி காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பெண்கள் எனவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது.

கம்பளையில் ஒரே வீட்டில் 4 மரணங்கள் : கூரையை உடைத்துக்கொண்டு வெளியேறிய நபர்!!

நாட்டில் ஏற்பட்ட வெள்ல அனர்த்தத்தில் சிக்கி கம்பளையில் ஒரே வீட்டில் 4 மரணங்கள் நிகழ்ந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ள நீர் அதிகரிக்கும் ஒரு மணி நேர காலப்பகுதிக்குள், டைட்டானிக் கப்பலின் சோகம் இந்தக் கட்டிடத்தினுள் அரங்கேறி இருக்க வேண்டும். அதிலும் Jack, Rose போன்ற பாத்திரங்கள் இருந்திருக்கலாம்.

இதன்போது வீட்டின் மேல் மாடியின் கூரை. ஒருவர் தலையால் அடித்து கூரையை உடைத்துக்கொண்டு வெளியேற சந்தர்ப்பம் கிடைத்து உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் தாய், தந்தை, மகள் மற்றும் அத்தை, இந்த அறைக்குள்ளேயே மரணமடைந்துள்ள நிலையில், இரண்டு மாடி கொண்ட முழு கட்டிடமும் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டதாகவும் கூறப்ப்படுகின்றது.

குழந்தைக்கு தந்தை : DNA பரிசோதனை மறுக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்!!

குழந்தையின் தந்தை என நிரூபிக்க , இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன, DNA பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கு, மறுப்பு தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான் என கூறி செவ்வந்தி சேனாதிவீர எனும் பெண் விமானி ஒருவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜரான பெண், “எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான். தந்தை உரிமையை நிலைநாட்டுவதற்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜெருசா தம்பையா, குழந்தையின் தந்தை யார் என்பதைக் கண்டறிய DNA பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சாமிக்க கருணாரத்ன சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசேல ரேகவ, DNA பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது என்றும் நிரூபிக்க வேண்டிய சுமை முறைப்பாட்டாளரிடம் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

சாமிக்க கருணாரத்ன DNA பரிசோதனை கோரிக்கையை நிராகரிப்பதாகவும், குழந்தையின் தந்தை உரிமையை மறுப்பதாகவும் சட்டத்தரணி அசேல ரேகவ நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இதனை கருத்தில் கொண்ட நீதவான், வழக்கு விசாரணையை ஜனவரி 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கின் பிரதிவாதியான இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன 100,000 ரூபா பெறுமததியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு புறநகர் பகுதியில் ஆடையகத்தில் இரகசிய கமரா : உரிமையாளரிடம் சிக்கிய காணொளிகள்!!

கொழும்பின் புறநகர் தலவதுகொடையில் உள்ள ஒரு ஆடையகத்தின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலங்கம பொலிஸாரின் கூற்றுப்படி, நேற்று கடையின் ஆடை மாற்றும் அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கமராவை அதிகாரிகள் கண்டுபிடித்ததையடுத்து உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபருக்குச் சொந்தமான ஒரு கையடக்கத்தொலைபேசியை பரிசோதிக்கப்பட்டபோது, அறைக்குள் பதிவு செய்யப்பட்ட 201 காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதில்,பெண்கள், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள்; ஆடை மாற்றும் காணொளிகள் மற்றும் ஒரு வீட்டின் குளியலறையில் ஒரு பெண் குளிக்கும் தனி காணொளி ஆகியவை இந்த காட்சிகளில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த காணொளிகள் இணையங்களில் பதிவேற்றப்பட்டதா அல்லது உள்ளூர் அல்லது வெளிநாட்டு வலைத்தளங்களுக்கு விற்கப்பட்டதா என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

க.பொ.த உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு!!

கொழும்பை அண்மித்த தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற க.பொ.த உயர்தர மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 7 ஆம் திகதி அதிகப்படியான மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்ததாக ஹோமாகம ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் கொழும்புக்கு அருகிலுள்ள மீகொட என்ற தேசியப் பாடசாலையை சேர்ந்த 18 வயது மாணவி என தெரியவந்துள்ளது.

மாணவி கடந்த 7 ஆம் திகதி தனது தாயுடன் வீட்டில் இருந்த போது திடீரென ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அடிப்படை சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுமார் இரண்டு மணி நேரத்தின் பின்னர் மாணவி உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பான மருத்துவ பரிசோதனையில் மாணவி சுமார் 65 மாத்திரைகளை உட்கொண்டதாகவும், இதுவே அவர் மரணத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மீகொட பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, ஆரம்பகட்ட விசாரணையில், இந்த மாணவி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்று உயர்தரம் படிக்க தகுதி பெற்றவர் என தெரியவந்துள்ளது.

திறமையான மாணவியின் திடீர் முடிவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞன் ஒருவர் கொடூரமாக கொலை!!

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் வாலன வீதிப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்புருகமுவ, பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், பணத் தகராறு காரணமாக கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய 54 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சீரற்ற காலநிலையால் உடைப்பெடுத்த குளங்கள் புனரமைப்பு!!

கடும் மழை மற்றும் புயல் காரணமாக வவுனியாவில் உடைப்பெடுத்த குளங்களில் 24 குளங்களுடைய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், 6 குளங்களினுடைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கடும் மழை மற்றும் புயலின் காரணமாக வவுனியா மாவட்டத்தில் 114 குளங்கள் உடைப்பெடுத்திருந்தன.

உடைப்பெடுத்த குளங்களை புனரமைப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் என்பவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் கமக்கார அமைப்பினரின் உதவியுடன் 24 குளங்கள் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளதுடன், 6 குளங்களினுடைய புனரமைப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஏனைய குளங்களையும் புனரமைப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

2026 பூமிக்கு பெரும் அச்சுறுத்தலா? உலகத்தை அதிர வைத்த பாபா வங்காவின் கணிப்புகள்!!

உலகளாவிய ரீதியில் இயற்கை பேரழிவு அதிகரித்த வண்ணம் உள்ளது. பல்வேறு நாடுகளில் வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை என இயற்கை சீற்றங்கள் தாண்டவம் ஆடி வருகின்றன.

இது தொடர்பில் தற்போது பாபா வாங்காவின் கணிப்புக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், 2026 ஆம் ஆண்டிற்கான வாங்காவின் கணிப்புகளில் இயற்கை சீற்றங்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன.

பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் தீவிர காலநிலை மாற்றங்கள் போன்ற பல பேரழிவு நிகழ்வுகளை அவர் முன்னறிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இந்தக் catastrophic நிகழ்வுகள் பூமியின் நிலப்பரப்பை ஏழு தொடக்கம் எட்டு வீதம் வரை அழிக்கக்கூடும் என பாபா வங்காவின் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, சூழலியல் அமைப்புகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படும் என்றும் அவரது கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற தீவிர காலநிலை மாற்றங்களையும் குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை தாக்கவுள்ள மற்றுமொரு புயல்?

வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் இலங்கையைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் 75 மிமீ மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற மழைப்பொழிவு, கடுமையானதாக இல்லாவிட்டாலும், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கவலைகளைத் தூண்டும் என கூறப்படுகின்றது.

வெப்பமண்டல சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தாக்க மதிப்பீட்டிற்காக நீர்ப்பாசனத் துறை, மகாவேலி மேம்பாட்டு ஆணையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) ஆகியவற்றை திணைக்களம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

அதேவேளை வங்காள விரிகுடாவில் மேகங்கள் புயலாக மாறி இலங்கையை நோக்கி நகர்ந்து, தீவிர மழையை ஏற்படுத்தும் என்றும் பிபிசி தனது வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.

வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தால், நீர்ப்பாசனத் துறை மற்றும் மகாவேலி மேம்பாட்டு ஆணையம் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களை நிர்வகிப்பதற்கு தயாராக இருப்பதாக நிலம் மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.

அதேவேளை தித்வா சூறாவளியால் ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து பெரும்பாலான முக்கிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் கசிவு மட்டத்தில் உள்ளன என்றார். மீண்டும் 150-200 மி.மீட்டருக்கு மேல் மழை பெய்தால் அது ஆபத்தானது.

அதிகப்படியான நீரை வெளியேற்றவும் நிலைமையை நிர்வகிக்கவும் நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

சமீபத்திய வெள்ளத்தால் சிறிய மற்றும் நடுத்தர குளங்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலம் மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கூறினார்.

அனர்த்தங்களால் இதுவரை 638 பேர் பலி!!

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 638ஆக அதிகரித்துள்ளது.  மேலும், 191 பேரை இதுவரை காணவில்லை.

இன்று முற்பகல் 10 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், 501,958 குடும்பங்களைச் சேர்ந்த 1,737,330 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின்படி, கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இதன்படி, கண்டி மாவட்டத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் 89 இறப்புகளும், பதுளை மாவட்டத்தில் 90 இறப்புகளும், குருநாகல மாவட்டத்தில் 61 இறப்புகளும், கேகாலை மாவட்டத்தில் 32 இறப்புகளும், புத்தளத்தில் 37 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 28 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, 20,373 குடும்பங்களைச் சேர்ந்த 63,628 பேர் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

அடுத்த 24 மணி நேரத்தில் கடும் மழை, பலத்த காற்று : மக்களே அவதானம்!!

நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுவடைந்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யும் என வளிமணடலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமணடலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடும் மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் நீடிப்பு!!

வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவை விதித்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி தடை உத்தரவிட்டிருந்தது.

குறித்த வழக்கு நேற்று (08.12) மீண்டும் மூன்றாவது முறையாக மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட சட்டத்தரணிகள் சபை நடவடிக்கைகளை நடத்துவதற்கு அனுமதி கோரினர்.

இதற்கு மனுதாரர் தரப்பு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான சட்டத்தரணிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் நீண்ட விவாதம் இடம்பெற்ற நிலையில் இவற்றை ஆராய்ந்த மேல் முறையீட்டு நீதிமன்றம் மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரை முதல்வர் பிரதி முதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு வழங்கப்ட்ட இடைக்கால தடை உத்தரவினை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.பிரேமதாஸ் மற்றும் சு.விஜயகுமார் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பிரதிவாதிகளாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த மாநகர முதல்வர் சு.காண்டீபன், ஜனநாயக தேசிய கூட்டணியைச் சேர்ந்த பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 79 குடும்பங்கள் தொடர்ச்சியாக முகாம்களில்!!

வவுனியாவில் ஏற்ப்பட்ட வெள்ளப் பாதிப்பினால் 79 குடும்பங்களை சேர்ந்த 232 பேர் தொடர்சியாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் நாட்டில் ஏற்ப்பட்ட வெள்ளப்பேரிடர் காரணமாக வவுனியா மாவட்டத்திலும் கடுமையான பாதிப்புக்கள் ஏற்ப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மொத்தமாக 58 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

தற்போது மழைவீழ்ச்சி குறைவடைந்த நிலையில முகாம்களில் இருந்த மக்கள் மீண்டும் தமது வீடுகளிற்கு திரும்பியிருந்தனர்.

இருப்பினும் கடுமையான பாதிப்புக்களை சந்தித்த வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று இடைத்தங்கல் முகாம்கள் தொடர்ச்சியாக செயற்ப்பட்டு வருவதுடன் அங்கு 79 குடும்பங்களை சேர்ந்த 232 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தாயின் விபரீத முடிவால் பறிபோன குழந்தைகளின் உயிர்கள் : இலங்கையில் பெரும் துயர சம்பவம்!!

தாயின் விபரீத முடிவால் குழந்தைகள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொரட்டுவையிலிருந்து அனுராதபுரத்திற்கு வந்த ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயா ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதை அடுத்து காணாமல் போன இரண்டு குழந்தைகளில்

ஒருவரான சிறுமியின் சடலம் நேற்று (7) அனுராதபுரம் ‘மல்வத்து ஓயா லேன்’ சாலைக்குச் செல்லும் புதிய பாலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொரட்டுவை, அங்குலான, எண் 15/11 ரயில்வே பலாபாரவைச் சேர்ந்த சித்துல்ய மீரியகல்லேவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

முதலைகள் அல்லது பாம்பு தின்றிருக்கலாம்

சிறுமியின் ஒரே சகோதரரான திஷுகா மீரியகல்லே என்ற 8 வயது சிறுவனின் சடலம், காணாமல் போன மூன்று நாட்களுக்குப் பிறகு, கடந்த 4 ஆம் தேதி அனுராதபுரத்தின் மிஹிந்துபுர பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, ​​அவரது இடது கை மற்றும் இடது கால் காணாமல் போயிருந்ததாகவும், அது முதலைகள் அல்லது பாம்புகளால் தின்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு, 2 ஆம் தேதி, மொரட்டுவவின் அகுலான பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் தனது எட்டு வயது மகன் மற்றும் நான்கரை வயது மகளுடன் அனுராதபுரத்திற்கு வந்து,

அனுராதபுரத்தில் உள்ள பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள மிஹிந்துபுர பாலத்திலிருந்து மல்வத்து ஓயாவில் குதித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அன்று காலை, மிஹிந்துபுர பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர், மல்வத்து ஓயாவில் பெண், நீரில் மூழ்குவதை கண்டு அப்பகுதிவாசிகளுடன் சேர்ந்து,

அவரை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்தார். பின்னர் அந்தப் பெண் இரண்டு குழந்தைகளின் தாயாக அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலைக் குற்றச்சாட்டில் தாய் கைது

மீட்கப்பட்ட பெண் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது மகள் கடந்த 1 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, தனது 8 வயது மகனையும் 4 வயது மகளையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவரது கணவர் வெளிநாடு சென்ற பிறகு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தந்தை போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

அதேவேளை நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, மல்வத்து ஓயாவின் வேகமான நீரோட்டமும், கரையின் இருபுறமும் முதலைகள் இருந்ததாலும்,

நடவடிக்கைகளை கடினமாக்கியது. 6 நாட்களாக, பல குழுக்களாகப் பிரிக்கப்பட்ட காவல்துறை உயிர் பாதுகாப்புப் பிரிவு, இரண்டு குழந்தைகளைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இந்நிலையில் காணாமல் போன மற்றும் இறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் உடல்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் பள்ளத்தில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த மரணங்கள் குறித்து அனுராதபுரம் கூடுதல் நீதவான் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி பி.எச்.டபிள்யூ.டி.எல். சமரசிங்க நீதிவான் விசாரணை நடத்தினார். உடல்கள் குறித்து பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது.

இதனையடுத்து குழந்தைகளைன் தாயார் செனடி ஸ்ரீமா விதான (40) கொலைக் குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் , இந்த மாதம் 17 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

வெள்ள நீரில் சிக்கிய குடும்பம் : அயல் வீட்டாரின் நேர்மையான செயலால் நெகிழ்ச்சி!!

சேருவில, மாவிலாறு பகுதியில் டித்வா சூறாவளியின் பின்னர் இடம்பெற்ற மனிதாபிமான செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. குடும்பம் ஒன்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில் ஹெலிகொப்டர் மூலம் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது தங்கள் வீட்டின் கூரையில் இருந்து வெள்ள நீரில் விழுந்த தங்களின் விலைமதிப்பற்ற பொருட்கள் நிறைந்த ஒரு பையை 5 நாட்களின் பின்னர் அயல் வீட்டு நபர் மீண்டும் கொண்டு வந்து ஒப்படைந்துள்ளார்.

அந்தப் பகுதியில் வசித்து வந்த சுஜித் என்பவரின் குடும்பமே இந்த இக்கட்டான நிலையை எதிர்கொண்டது.

வெள்ளம் அதிகரித்ததால், அவர் தனது பிள்ளைகள் மற்றும் மனைவியுடன், பணம், தங்க ஆபரணங்கள், பிறப்புச் சான்றிதழ்கள், மதிப்புமிக்க ஆவணங்கள் மற்றும் பல துணிகளுடன் தயாரிக்கப்பட்ட பையுடன் வீட்டின் கூரையில் ஏறுவதில் சிரமப்பட்டார்.

மறுநாள் மதியம் ஹெலிகொப்டர் மூலம் அவர்கள் மீட்கப்பட்டபோது, ​​அவரது கையில் இருந்த பை தண்ணீரில் விழுந்து காணாமல் போனது. “எங்களை ஹெலிகொப்டர் மூலம் அழைத்துச் செல்லும்போது, ​​பை தண்ணீரில் விழுந்தது.

செய்வதற்கு எதுவும் இல்லை. நாங்கள் இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டோம். 5 நாட்களின் பின்னர் இந்த தொலைந்த பை என் நண்பர் சமிந்த குமாராவின் தோட்டத்தின் கம்பி வேலியில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அதை என்னிடம் கொண்டு வந்தார்.

அதில் மதிப்புள்ள தங்கப் பொருட்களும், 37,000 ரூபாய் பணமும் இருந்தன. மேலும், அனைத்து முக்கிய ஆவணங்களும் அப்படியே இருந்தன” என சுஜித் தெரிவித்துள்ளார்.