காதல் மனைவிக்காக இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு சைக்கிள் பயணம்.. சுவாரசியமான காவியக் காதல்!!

இந்தியாவில்..

தனது ஸ்வீடிஷ் மனைவியைச் சந்திக்க இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சைக்கிளில் சென்ற இந்தியரின் காவியக் காதல் கதையை தெரிந்துகொள்ளுங்கள். ஸ்வீடனைச் சேர்ந்த சார்லோட் வான் ஷெட்வின் (Charlotte Von Schedvin) 1975-ஆம் ஆண்டு டெல்லியில் இந்தியக் கலைஞர் பிகே மகாநந்தியாவைச் சந்தித்தார். அவர்களது சந்திப்பு ஏதேச்சையாக நடக்கவில்லை.

மகாநந்தியாவின் கலையைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு, ஷெட்வின் ஸ்வீடனில் இருந்து இந்தியாவுக்கு சென்றார். மேலும் தனது உருவப்படத்தை மகாநந்தியாவின் கையால் உருவாக்க முடிவு செய்தார்.

அப்போது மகாநந்தியா ஒரு கலைஞராக தனக்கென ஒரு பெயரை உருவாக்கத் தொடங்கினார். இவர் டெல்லியில் உள்ள கலைக் கல்லூரியில் ஒரு ஏழைக் கலைக்கல்லூரி மாணவராக இருந்தார்.

மகாநந்தியா ஷெட்வின் உருவப்படத்தை உருவாக்கும் போது இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர். அவல் அழகில் அவன் மயங்கினான், அவனுடைய எளிமையில் அவள் காதலில் விழுந்தாள்.

வான் ஷெட்வின் இந்தியாவை விட்டு சொந்த நாட்டுக்கு வெளியேற வேண்டிய நேரத்தில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மகாநந்தியாவின் குடும்பத்தினரின் ஆசியுடன், பழங்குடியினர் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

அவள் கிளம்பும் நேரம் நெருங்கிவிட்டதால், தன் கணவனைத் தன்னுடன் வரச் சொன்னாள். இருப்பினும், மகாநந்தியா முதலில் தனது படிப்பை முடிக்க வேண்டியிருந்தது. ஸ்வீடிஷ் ஜவுளி நகரமான போராஸில் உள்ள அவரது வீட்டிற்கு விளைவில் வந்து சந்திப்பதாக அவர் உறுதியளித்தார்.

இருவரும் கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்தனர். ஒரு வருடத்திற்குப் பிறகு, வான் ஷெட்வினைப் பார்க்க அவர் திட்டமிட்டபோது, ​​விமான டிக்கெட் வாங்குவதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்பதை உணர்ந்தார். தனக்குச் சொந்தமான அனைத்தையும் விற்று சைக்கிள் வாங்கினான்.

அடுத்த நான்கு மாதங்களில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைக் கடந்தார். வழியில் அவரது சைக்கிள் பல முறை பழுதடைந்தது, மேலும் அவர் பல நாட்கள் உணவின்றி செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அவரது காதலை எதுவும் உடைக்க முடியவில்லை.

அவர் ஜனவரி 22, 1977-ல் தனது பயணத்தைத் தொடங்கினார், மேலும் அவர் தினமும் சுமார் 70 கிமீ சைக்கிள் ஓட்டுவார். வழியில் மக்களின் உருவப்படங்களை உருவாக்கி சிறிது பணம் ஈட்டினார், பலர் அவருக்கு உணவு மற்றும் தங்குமிடம் கொடுத்து உதவினர்.

அவர் மே 28 அன்று இஸ்தான்புல் மற்றும் வியன்னா வழியாக ஐரோப்பாவை அடைந்தார், பின்னர் ரயிலில் கோதன்பர்க் சென்றார். இருவரும் சந்தித்தபிறகு அதிகாரப்பூர்வமாக ஸ்வீடனில் திருமணம் செய்து கொண்டனர். “ஐரோப்பிய கலாச்சாரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

இது எனக்கு புதியது, ஆனால் அவள் ஒவ்வொரு அடியிலும் என்னை ஆதரித்தாள். அவள் ஒரு சிறப்பு நபர். நான் 1975 இல் இருந்ததைப் போலவே நான் இன்னும் காதலிக்கிறேன்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார். இந்த ஜோடி இப்போது தங்கள் இரண்டு குழந்தைகளுடன் ஸ்வீடனில் வசிக்கிறது, மேலும் அவர் தொடர்ந்து ஒரு கலைஞராக பணியாற்றுகிறார்.

இரண்டாவது தாலியும் நிலைக்கவில்லை.. திருமணமாகி 8 நாளில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை!!

கேரளாவில்..

முதல் கணவருடனான திருமண வாழ்க்கை ஒத்து வராத நிலையில், அவரை விட்டுப் பிரிந்து தனியே மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார் ஸ்ரீஜா. காதலும், காமமும் எப்போது வாழ்க்கையைப் புரட்டி போடும் என்று யாருக்கும் தெரியாது தானே? தனது காமம் + காதல் காரணமாக ஏற்கெனவே திருமணமாகி குழந்தை, மனைவியுடன் வாழ்ந்து வரும் ஷஜியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது ஸ்ரீஜாவுக்கு.

முதல் மனைவிக்கு தெரியாமலேயே ஷஜியும், ஸ்ரீஜாவும் கடந்த 8 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். 3 குழந்தைகள் உட்பட 5 பேரும் தனியே வசித்து வந்த நிலையில், இன்று காலை 5 பேருமே வீட்டில் உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.

3 குழந்தைகளையும் கொன்று விட்டு, ஸ்ரீஜாவும், ஷஜியும் தற்கொலைச் செய்து கொண்டுள்ளனர். கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் வச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா (38).

இவருக்கு சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) என 3 குழந்தைகள் உள்ளன. இதனிடையே, கடந்த ஸ்ரீஜா கடந்த புதன்கிழமை ஷஜி (42) என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி 3 குழந்தைகளுடன் ஷஜி வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். ஷஜி வீட்டில் ஸ்ரீஜா அவரது கணவர் ஷஜி குழந்தைகள் 3 என 5 பேரும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 5 பேரின் உடல்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக 3 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு ஸ்ரீஜா மற்றும் அவரது கணவர் ஷஜி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2வது திருமணம் செய்த 8 நாட்கள் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தம்பதி தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிசை TO கோபுரம்.. திடீரென சூப்பர் மாடலாக அவதாரம் எடுத்த சிறுமி.. யார் இந்த மலீஷா?

மும்பையில்..

மும்பை, தாராவியை சேர்ந்த 12 வயது சிறுமி மலீஷா ‘Forest Essentials’ என்ற அழகு சாதன நிறுவனத்துக்கு விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் செளராஷ்டிரா பகுதியில் மீன் பிடி தொழில் செய்து வரும் ‘கார்வா’ என்ற சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த சமூகத்தை சேர்ந்த 12 வயது மலீஷா என்ற சிறுமியின் குடும்பம், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தனர். அங்கே தாராவி என்ற பகுதியில் வசித்து வருகின்றனர்.

மலிஷா தனது தாய், தந்தை, தம்பி என்று குடும்பத்தோடு அந்த பகுதியில் அமைந்துள்ள குடிசையில் வசித்து வருகிறார். வறுமையின் பிடியில் சிக்கி தவித்த இந்த சிறுமிக்கு நடனம், பேச்சு என பல திறைமைகள் இருந்துள்ளது.

இந்த சூழலில் ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ராபர்ட் ஹாப்மேன் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு இசை ஆல்பத்துக்காக இந்தியா வந்திருந்தார். அப்போது மும்பையில் இருந்த அவர், கொரோனோ தொற்று காரணமாக மும்பையிலே தங்க வேண்டியதாயிற்று.

அப்போது அவருக்கு சிறுமி மலீஷாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவரிடம் அந்த சிறுமி நன்றாக பேசவே, அவருடன் பழகியுள்ளார். மேலும் சிறுமியின் வறுமையிலும், அவரது திறமை ராபர்ட்டை வெகுவாக கவர்ந்துள்ளது.

எனவே சிறுமிக்கு எதாவது செய்ய எண்ணியுள்ளார். அதன்படி சிறுமிக்கு டொனேஷன் பெற்றுக்கொடுக்க எண்ணி, அதற்காக அவருக்கு என்று பிரத்யேகமாக இன்ஸ்டா பக்கம் ஒன்றை ஓபன் செய்து கொடுத்துள்ளார்.

பின்னர் அதில் அவரது புகைப்படங்கள் உள்ளிட்டவையை பதிவேற்றம் செய்து Followers-களை பெற்றுக்கொடுத்தார். அதில் இருந்து சிறுமிக்கு நிதி வர தொடங்கியது. சுமார் 15 லட்சம் வரை நிதி பெற எண்ணிய ராபர்ட், அதற்காக சிறுமிக்கு பலவற்றை செய்துகொடுத்துள்ளார்.

இப்படியே சிறுமி பிரபலமாக தொடங்கினார். அவரது ஒவ்வொரு போஸ்டுக்கும் கீழே #theprincessfromtheslum(‘குடிசை இளவரசி) என்று இருக்கும். இப்படியே இந்தியா முதல் வெளிநாடு வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர், பிரபல மாடலாக மாறினார்.

தி பீக்காக், காஸ்மோபாலிட்டன் இந்தியா உள்ளிட்ட முக்கிய முன்னணி இதழ்களில் மலீஷாவின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டன. அதிலும் சில நேரங்களில் முதல் பக்க அட்டையில் அவரது புகைப்படங்கள் இடம்பெற்றன. இப்படியே அவருக்கு ஒரு குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிக்கவும் செய்தார்.

இவரது பிரபலத்தின் காரணமாக தற்போது 2 பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து மாடலிங் துறையில் இருக்கும் இவர், சில நேரங்களில் பத்திரிகைகளுக்கு பேட்டிகளும் அளித்து வருகிறார். அதோடு இவர் ஆடைகள் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கும் விளம்பரங்கள் செய்து கொடுக்கிறார்.

சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட followers-களை வைத்திருக்கும் இவர், தற்போது இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி அழகு சாதன தயாரிப்பு நிறுவனமான ‘Forest Essentials’ நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் தற்போது அவர் சூப்பர் மாடலாக உருவெடுத்துள்ளார். இந்த நிறுவனம் இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட ஷோரூம்களை கொண்டுள்ளதோடு, உலகளவில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது.

இந்த சூழலில் மும்பையில் உள்ள இந்த நிறுவனத்தின் ஷோ ரூமுக்கு மலீஷா செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தான் மாடலாக நடித்த ஷோ ரூமுக்கு, மலீஷா பள்ளி சீருடையில் எளிமை தோற்றத்தில் சென்று அதனை கண்டு பிரம்மித்து போவது போன்று அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

தாராவியில் ஒரு குடிசையில் வசிக்கும் மலீஷா, முன்னணி நிறுவனத்துக்கு விளம்பரம் செய்வது, விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளது பலரும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண மேடையில் இருந்து ஓடிய மணமகனை விரட்டிப் பிடித்த மணமகள் செய்த செயல்!!

உத்தர பிரதேசத்தில்..

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் திருமணத்தில் இருந்து ஓடிய மணமகனை விரட்டிச் சென்று, பெண் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்தது. உத்தர பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், இளம் பெண்ணொருவரும் இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால், இவர்களின் காதலுக்கு இருவரது வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும், ஒருவழியாக இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பூதேஸ்வர் நாத் கோயிலில் திருமணம் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் திருமண நாளில் மணமகன் திருமண மேடைக்கு வரவில்லை. போனில் தொடர்புகொண்டு காதலி பேசியபோது அவர் மழுப்பலாக பேசியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த மணப்பெண் பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து பேருந்தில் 20 கிலோ மீற்றர் பயணித்து மணமகனை விரட்டி பிடித்துள்ளார். அதன் பின்னர் அவரை கோயிலுக்கு இழுத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வு அப்பகுதியில் பேசுபொருளானது.

இருமடங்காக அதிகரிக்கப் போகும் எரிபொருள் ஒதுக்கீடு.. அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

எரிபொருள் ஒதுக்கீடு..

அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரு மடங்காக அதிகரிக்க முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த 7 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த மாதம் எரிபொருள் விலைத் திருத்தத்தின் போது 14 லீட்டராக அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் எரிபொருள் ஒதுக்கீட்டு திருத்தமும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு வாரங்களில் மிக வேகமாக உயர்ந்த இலங்கை ரூபாவின் பெறுமதி.. மக்களுக்கு கிடைக்கவுள்ள நன்மைகள்!!

இலங்கையில்…

நாட்டில் கடந்த வருடம் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியின் பின்னர் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி மிக வேகமாக அதிகரித்தது. குறிப்பாக அதன் விற்பனை பெறுமதி 371 ரூபா என்ற இலக்கை அடைந்ததுடன், கொள்வனவு பெறுமதி அதனை அண்மித்த பெருமானங்களில் பதவாகியிருந்தது.

இதன்காரணமாக நாட்டின் பல துறைகளில் சிக்கல் நிலை ஏற்பட்டதுடன், விலைவாசி கடும் உயர்வை அடைந்திருந்தது. இந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாதத்தின் பின்னர் டொலரின் பெறுமதி சரிய ஆரம்பித்து இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற ஆரம்பித்தது.

சிறிய தொகையில் இருந்து வலுப்பெற ஆரம்பித்த இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி அதிவேக வளர்ச்சியை பதிவு செய்தது. இதன்படி, அதற்கு முந்தைய டொலரின் விற்பனை பெறுமதியான 348.03 ரூபாவில் இருந்து மார்ச் மாதம் 7ஆம் திகதி டொலரின் விற்பனை பெறுமதி 335.75 ரூபாவாக பதிவானது.

அத்துடன், கொள்வனவு பெறுமதி 334.50 ரூபாவில் இருந்து 318.30 ரூபாவாக மார்ச் மாதம் 7ஆம் வீழ்ச்சியை பதிவு செய்து ரூபாவின் பெறுமதி உயர்ந்தது. அதன் பின்னரான நாட்களிலும் டொலரின் பெறுமதி கடும் வீழ்ச்சியை அடைந்ததுடன் மீண்டும் மார்ச் மாதம் 15ஆம் திகதி டொலரின் பெறுமதியானது உயர ஆரம்பித்தது.

அன்றைய விற்பனை பெறுமதியாக 344.66 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், கொள்வனவு பெறுமதி 327.59 ரூபாவாக பதிவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து ரூபாவின் பெறுமதியில் உயர்வு மற்றும் வீழ்ச்சி என தளம்பல் நிலை காணப்பட்டது.

இவ்வாறான நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது. மேலும், கடந்த ஒரு வருடத்தின் பின்னர் டொலரின் கொள்முதல் பெறுமதியானது இம்மாதம் 18ஆம் திகதி 300 ரூபாவுக்கு கீழ் குறைந்து 299 ரூபா 21 சதமாக பதிவாகியிருந்தது.

அடுத்த நாளான 19ஆம் திகதி மாத்திரம் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டதுடன் அடுத்து வந்த இரு வாரங்களிலும் தொடர் வீழ்ச்சியையே டொலரின் பெறுமதி சந்தித்து வருகின்றது.

இதேவேளை, நேற்று முன்தினம்(26.05.2023)வரையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 19.8 வீதத்தால் வலுப்பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்று முன்தினம், 295 ரூபா 62 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 308 ரூபா 54 சதமாகவும் காணப்பட்டது. இதேநேரம், யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 18.9 வீதத்தாலும், ஸ்ரேலிங் பவுண்ஸுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 17 வீதத்தாலும் வலுப்பெற்றுள்ளது.

இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 19.7 வீதத்தாலும், ஜப்பான் யென்னுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 26.4 வீதத்தாலும் வலுப்பெற்றுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ரூபாவின் பெறுமதி கடுமையான உயர்வை அடைந்து வரும் நிலையில் அதன் நன்மையை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரை மாய்க்க போராடிய பெண்… பொலிஸாரின் நெகிழ்ச்சியான செயல்.!!

மாத்தறையில்..

மாத்தறை, வெலிகம நகரில் உயிரை மாய்க்க தயாரான பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகளின் நெகிழ்ச்சி செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. தனது கணவரால் சரியான முறையில் பார்த்துக் கொள்ளாதமையால் கடும் நெருக்கடியுடன் போராடிய இந்த பெண் நேற்று முன்தினம் காலை வெலிகம நகரில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காக சுற்றித் திரிந்துள்ளார்.

இது தொடர்பில் வெலிகம பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதற்கமைய, வெலிகம பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவின் சாந்த மற்றும் விக்கிரமாராச்சி ஆகிய இரு உத்தியோகத்தர்களினால் குறித்த பெண் வெலிகம பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, ​​கணவன் இவரைக் கவனிப்பதில்லை என்பதும், வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரப் பின்னணியும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் தனது உயிருக்கு மாய்த்துக் கொள்ளும் நோக்கில் அஹங்கம பிரதேசத்தில் இருந்து வெலிகம நகருக்கு வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது குழந்தையை வீட்டில் விட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையின் பின்னர் வெலிகம தலைமையக பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி டி. எம்.அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் குழு, குறித்த பெண்ணின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளில் மேற்கொள்வதற்கு தீர்மானித்தனர்.

அதற்கமைய, வெலிகம பொலிஸார் அவருக்கு தொழில் ஒன்று பெற்றுக் கொடுப்பதற்கும் தங்குமிடத்திற்கு தேவையான பணத்தை வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

பின்னர் அந்த பெண் வெலிகம பொலிஸ் நிலையத்தின் நிலையத் தளபதி உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். எப்படியிருப்பினும் அதன் பின்னரும் அவரை கண்காணிக்கவும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த தமிழ்ச் சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்!!

நுவரெலியாவில்..

உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் கூறி கலாநேசன் ஹர்சித் என்ற 5 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தின் பீற்று தோட்ட லவர் ஸ்லிப் பிரிவில் விநாயக புரம் பகுதியில் வசித்து வரும் கலாநேசன் மற்றும் லலிதாம்பிகை தம்பதியினரின் 5 வயது மகனே ஹர்சித் ஆவார்.

இவர் நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்று வருகிறார். உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் ஆங்கில மொழியில் கூறி ‘‘புதிய சோழன் உலக சாதனை‘‘ படைத்துள்ளார்.

இவருடைய ஞாபகத் திறனை ஊடகங்களூடாக கேள்விப்பட்ட தமிழ்நாட்டில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு உலகின் 26 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள பன்னாட்டுச் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தினர் சிறுவனின் முயற்சியை முறைப்படி பரிசோதித்து உலக சாதனையாக அங்கீகாரம் செய்துள்ளது.

இதற்கான நிகழ்வு நேற்றுமுன்தினம் (26.05.2023) நுவரெலியா பரிசுத்த திரித்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர்களான எஸ்.ரவிச்சந்திரன், என்.நவரத்னம், பொறுப்பதிகாரி எஸ்.ஆனந்தஜோதி மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

உலக சாதனை முயற்சிக்கு நடுவர்களாக நேரில் வந்து பார்வையிட்டு உறுதி செய்து உலக சாதனைக்கான சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் சான்றிதழ், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பதக்கம் போன்றவற்றை வழங்கி சிறுவனை கௌரவித்துள்ளனர்.

மேலும், அந் நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் முனைவர் யூட் நிமலன் மற்றும் இந்தியாவில் இருந்து வந்திருந்த தலைமைச் செயற்குழுவின் உறுப்பினர் பெருமாள் நீலமேகம், பொது தலைவர் மருத்துவப் பேராசிரியர் தங்கதுரை மற்றும் 24 நாடுகளின் கிளைகளின் தலைவர்கள், மாநில மற்றும் மாவட்டத் தலைவர்கள் போன்றோர் சிறுவனை வாழ்த்திப் பாராட்டியுள்ளனர்.

வகுப்பறைக்கு சென்ற வளர்ப்பு நாய்க்கு டிப்ளோமா பட்டம்!!

நியூஜெர்சியில்..

அமெரிக்காவின் நியூஜெர்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று வந்த வளர்ப்பு நாய்க்கு பட்டமளிப்பு விழாவில் டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது.

கிரேஸ் மரியானி என்ற பெண்ணின் வளர்ப்பு நாயான ஜஸ்டின், ஒவ்வொரு முறையும் தவறாமல் கிரேசுடன் வகுப்பறைக்கு சென்றுள்ளது.

இதை பாராட்டும் விதமாக வளர்ப்பு நாய் ஜஸ்டினுக்கு சீட்டன் ஹால் பல்கலைக்கழகம் டிப்ளமோ வழங்கி கௌரவித்தது.

பட்டத்தை நாய் தனது வாயால் கவ்வி வாங்கியபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கைத்தட்டினர்.

பல இளைஞர்களை ஏமாற்றிய இரு இலங்கைப் பெண்கள்!!

மோசடி..

அவுஸ்திரேலியாவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி பண மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை பிரதேச இளைஞர்களிடம் பணம் பெற்ற பதுளை, தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரிகளால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக 4 முறைப்பாடுகள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன.

அதன்படி, பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமம் இன்றி வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில், பதுளை, தெமோதர பகுதியில் வைத்து விசாரணை அதிகாரிகள் இந்த இரு பெண்களையும் கைது செய்தனர்.

மேலும் சந்தேகநபர்கள் இருவரும் பதுளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் நாளை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர்களைத் தவிர, இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதேவேளை, தென்கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 51 பேரிடம் பண மோசடி செய்து இரண்டரை மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த தென்கொரிய நபர் ஒருவர் கொட்டாவ பகுதியில் வைத்து இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட குறித்த நபர் அலங்கார மீன் ஏற்றுமதி தொடர்பான தொழில் தொடங்க இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உரிய சட்ட அனுமதி கிடைக்காததையடுத்து, தென்கொரியாவில் இளைஞர்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி பணத்தை ஏமாற்றியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் சந்தேகத்திற்குரிய தென்கொரிய பிரஜை நாளை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வவுனியாவில் இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகத்தின் 45ஆம் நாள் நினைவஞ்சலி!!

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், ஊடகப்பேராளுமையுமாகிய பொன்னையா மாணிக்கவாசகத்தின் 45ஆம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு வவுனியா மாநகர மண்டபத்தில் இன்று (27.05) இடம்பெற்றது.

வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மூத்த ஊடகவியலாளர் ரத்துகமகே மலர்மாலை அணிவிக்க, வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் பிரதான அஞ்சலிச் சுடரை ஏற்றியதுடன், நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலரஞ்சலி செலுத்தி ஒளித்தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

ஊடக அமையத் தலைவர் ப.கார்த்தீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றது. இதன்போது ‘ஊடகவியலில் மாணிக்கவாசகம்’ எனும் தலைப்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் ரத்துகமகே சிறப்புரை நிகழ்த்தினார்.

‘கலை பண்பாட்டு வளர்ச்சியில் மாணிக்கம்’ எனும் தலைப்பில் வவுனியா வடக்கு பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபனும், ‘மக்கள் சேவையில் மாணிக்கவாசகம்’ எனும் தலைப்பில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமாரும் ‘வாசகர் பார்வையும் அனுபவ பகிர்வும்’ எனும் தலைப்பில் ஐயம்பிள்ளை யசோதரனும் கருத்துரைகளை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து பிரமுகர் வரிசையில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பாடசாலை அதிபர் ஆ.லோகேஸ்வரன், சிரேஸ்ட ஊடகவியலாளர் அ.நிக்சன், தமிழரசுக் கட்சியின் இளைஞரணி தலைவர் க.சிவதர்சன் ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர்.

குறித்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தரப்பினர், சகோதரமொழி ஊடக நண்பர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா கூமாங்குளம் கிராம அலுவலகத்தில் பழுதடைந்த அரிசி மீட்பு!!

வவுனியா கூமாங்குளம் கிராம அலுவலகத்தில் மக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி பாவனைக்கு ஒவ்வாத நிலையில் காணப்படுவதாக தெரிவித்து குறித்த அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த கட்டிடம் சுகாதார பிரிவினரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு 10கிலோ அரிசி பை வீகிதம் வழங்குவதற்காக கூமாங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்கு ஓப்பந்ததாரரான வவுனியாவிலுள்ள பிரபல அரிசி ஆலையினால் நேற்று (26.05) காலை 4860 கிலோ அரிசி (10கிலோ பை விகீதம் 486 அரிசிப் பை) இறக்கப்பட்டது.

குறித்த அரிசிப் பைகள் மக்களுக்கு நேற்றைய தினமே பகிர்ந்தளிப்பட்டப்பட்டதுடன், அவை பழதடைந்த நிலையில் காணப்பட்டத்தனையடுத்து பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

கூமாங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு சென்ற சுகாதாரப் பிரிவினர் குறித்த அரிசியினை பரிசோதனைக்குட்படுத்தியதுடன் அவை பாவனைக்கு ஓவ்வாத நிலையில் காணப்படுவதனை உறுதிப்படுத்தியதுடன் அலுவலகத்தின் களஞ்சியசாலையினை சீல் வைத்தனர்.

26.05.2023 அன்று மாலை 5.59 மணிக்கு 260 மூடை (10கிலோ) அரிசியுடன் குறித்த மண்டபம் சமூர்த்தி உத்தியோகத்தர் ம.விக்கினேஸ்வரன் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் முன்னினையில் பொது சுகாதார பரிசோதகர் கே.சிவரஞ்சனினால் சீல் வைக்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் குறித்த கிராம சேவையாளரிடம் வினவிய போது, மக்களுக்கு அரிசி வழங்குவதற்காக குறித்த அரிசி மூடைகள் அரசாங்கத்தினால் ஒப்பந்தம் வழங்கப்பட்ட தனியார் அரிசி ஆலையினால் காலையே எமக்கு கிடைப்பெற்றது.

அரிசி கிடைக்கப்பெற்று சில மணித்தியாலயங்களலேயே மக்களுக்கு அரிசியினை பகிர்ந்தளித்திருந்தோம். ஆனால் அவை பாவனைக்கு ஒவ்வாத நிலையில் காணப்படுவதாக மக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு தகவல் வழங்கியிருந்தமையுடன் சுகாதாரப் பிரிவினர் களஞ்சியசாலையினை சீல் வைத்திருந்தனர். மேலும் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த அரிசியினை மீளப்பெறும் நடவடிக்கையினை கிராம அபிவிருத்தி சங்கத்தினர் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

14 வது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவன் தற்கொலை.. கதறித் துடித்த பெற்றோர்!!

சென்னையில்..

1980, 90கள் வரை பெரும்பாலான வீடுகள் கூட்டுக் குடும்பங்கள் தான். ஒவ்வொரு வீட்டிலும் 10 அல்லது 15 பிள்ளைகள் இருக்கும். அத்தை , மாமா, சித்தப்பா, சித்தி, தாத்தா, பாட்டி, ஒன்று விட்ட அத்தை, சித்தி என பல உறவுகள் .

இதில் யார் வேண்டுமானாலும் அந்த வீட்டில் உள்ள பிள்ளைகளை போகிற போக்கில் தலையில் தட்டி இந்த வேலையை ஒழுங்கா பாரு எனச் சொல்லலாம். தனிக் குடும்பங்கள் பெருகி விட்ட இந்த காலத்தில் சண்டைகளே பிள்ளைகளை எப்படி சொல்லலாம் ? என்பதிலிருந்து தான் தொடங்குகிறது.

பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், என்ன சொன்னாலும் மன அழுத்தம் வந்து விடுகிறது. இதனை பெற்றோரிடம் கூட தெரிவிக்காமல் உடனடியாக விபரீத முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.

அதே போல் ஒரு சம்பவம் சென்னையில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயும் தந்தையும் மருத்துவர்கள் . இதில் தாய் ஏன் இதை செய்யவில்லை எனக் கேள்வி கேட்டதற்கு கோபப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி 14 வது மாடியில் இருந்து அந்த மாணவன் குதித்து விட்டான்.

இந்த காலத்து பள்ளி, கல்லூரி பிள்ளைகளுக்கு என்ன சொன்னாலும் மன அழுத்தம் வந்து விடுகிறது. சென்னை ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 14 தளம் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், பாலாஜி – மலர் தம்பதி வசித்து வருகின்றனர்.

இதில் பாலாஜி திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவியான மலர் மதுரவாயல் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக உள்ளார்.

மருத்துவ தம்பதியான பாலாஜி – மலர்க்கு லோக்நாத் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதில் சிறுவன் லோக்நாத் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 483 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 11ம் வகுப்பில் சேர்க்க பெற்றோர் ஆயத்தமாகி வந்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் பணியில் இருந்தபடி மலர் தனது மகன் லோக்நாதை செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது தனது பெயரில் கிரெடிட் கார்டு வீட்டிற்கு வரும் அதனை வாங்கிவைக்கும் படி கூறியுள்ளார்.

கூறியபடி, டெலிவரி ஊழியர் வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு பூட்டியிருந்ததால் மருத்துவர் மலருக்கு செல்போனில் தொடர்புகொண்டு கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மலர், உடனடியாக தனது மகனை தொடர்பு கொண்டு, எங்கே இருக்கிறாய் என கேட்டு திட்டியுள்ளார்.

மேலும் அன்றுமாலை வீட்டுக்கு வந்து கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுவன் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில், தான் வசிக்கும் இரண்டாம் தளத்தில் இருந்து 14ம் தளத்திற்கு சென்றுஅங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 14ம் மாடியில் இருந்து சிறுவன் கீழே குதிக்கும் சி.சி.டி.வி வீடியோ காண்போரை அதிர்ச்சி அடையவைத்தது. தாய் திட்டியதற்காக சிறுவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

”அவர் என் கணவர்”.. மணமகளுக்கு போட்டோ அனுப்பிய திருநங்கை.. மனமுடைந்த மணமகன் எடுத்த விபரீத முடிவு!

சங்ககிரியில்..

திருமணம் நடைபெற 4 உள்ள நிலையில் மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. சங்ககிரி அருகேயுள்ள ஐவேலி ஊராட்சி ஸ்ரீ வாணி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (27) எலெக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார்.

இவருக்கும் சேலம் ஏத்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 20ம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு வருகின்ற மே25ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் விக்னேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து தகவலின் பெயரில் விரைந்து வந்த சங்ககிரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்து விக்னேஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் சில தகவல் கிடைத்துள்ளது.

சங்ககிரி குப்தா காலனியில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டிற்க்கு எலக்ட்ரீசியன் வேலை பார்க்க சென்ற போது வீட்டின் உரிமையாளரான அஸ்மா என்ற திருநங்கைக்கும் விக்னேஷுக்கும் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறி இருவரும் சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படத்தை மணப்பெண் பிரியதர்ஷினிக்கு திருநங்கை அஸ்மா அனுப்பி வைத்துள்ளார்.

விக்னேஷ் தனது கணவர் என்றும், நீ எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என மணப்பெண்ணிடம் மிரட்டியுள்ளார். இதனால் மணப்பெண்ணின் பெற்றோர்கள் மணமகனின் வீட்டிற்கு வந்து இதைப் பற்றி விசாரித்து திருமணத்தை நிறுத்த பேசிகொண்டிருந்தனர்.

அப்போது, திருநங்கை அஸ்மா தனது தோழிகளுடன் விக்னேஷின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அத்துடன், விக்னேஷின் பெற்றோரை மாமனார். மாமியார் எனவும் மற்றவர்களை உறவு வைத்து அழைத்ததாகவும் தெரிகிறது.

அப்போது வெளியே சென்றிருந்த விக்னேஷ் வீட்டிற்க்கு வந்த உடன் நடைபெற்ற சம்பவங்களை அறிந்து மனமுடைந்து தனது தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருமணம் நடைபெற நான்கு நாட்கள் உள்ள நிலையில் திருநங்கையின் தகாத உறவால் மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

செல்போன் பேசியதால் வந்த வினை : இரண்டு மகள்களுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

சேத்தூரில்..

ராஜபாளையம் அருகே சேத்தூரில் செல்போன் பேசுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தாய் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்தவர் முத்துக்குமார். வெல்டிங் தொழிலாளியான இவருக்கு ராமுத்தாய் (வயது 30) என்ற மனைவியும் 6 வயதான நிஷா மற்றும் 3 வயதான அர்ச்சனா தேவி என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை வேலை முடித்து வீட்டுக்கு வந்த முத்துக்குமார் பார்த்தபோது ராமுத்தாய் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராமுத்தாய் கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கிய முத்துக்குமார் கீழே போட்டு உடைத்துள்ளார்.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் நான்கு மணி அளவில் விளையாடிக் கொண்டிருந்த தனது மூத்த மகள் மற்றும் தூங்கிக் கொண்டிருந்த தனது இரண்டாவது மகளை அழைத்துக் கொண்டு ராமுத்தாய் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

குழந்தைகளுடன் வெளியேறிய ராமத்தாய் இரவில் வீடு திரும்பாததால், உறவினர்கள் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை, அருகில் உள்ள விவசாய கிணற்றில் ராமுத்தாய் மற்றும் அவரது மூத்த மகள் நிஷா சடலமாக மிதப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.

உறவினர்களின் தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சேத்தூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், கிணற்றில் மூழ்கி இருந்த மூவரின் உடலையும் மீட்டனர். பின்னர் இவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்து இறந்த சம்பவம் சேத்தூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடி நாட்டிய முதல் தமிழ்ப் பெண்!!

எவரெஸ்ட்டில்..

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட முதல் தமிழ்பெண் என்ற சாதனையை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்செல்வி படைத்துள்ளார். இயற்கையின் படைப்பில் என்றுமே அலுக்காத இரண்டு விஷயங்கள் கடலும், மலையும். இரண்டுமே அதன் அசாதாரணத்திற்காகவே நம்மை மிகவும் ஆச்சர்யப்பட வைக்கும்.

இதில் முக்கியமாக கருதப்படும் ஒன்று தான் எவெர்ஸ்ட் சிகரம். இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைப்பது என்பது பலருக்கும் லட்சியமாக இருக்கும். இந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்கள் பெரிய சாதனை படைத்ததாகவே கருதப்படுவர்.

அப்படி ஒரு சாதனையை படைத்த முதல் தமிழ் பெண்ணாக விருதுநகரை சேர்ந்த முத்தமிழ்செல்வி திகழ்கிறார். விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்செல்வி.

இவருக்கு சிறுவயது முதலே மலை ஏறுவதில் ஆர்வம் இருந்துள்ளது. இதன் காரணமாக இவை எவெர்ஸ்ட் சிகரத்தை எட்டி சாதனை படைக்க எண்ணியுள்ளார். அதன்படி சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வரும் இவர், தனது பயணத்தை கடந்த மாதம் தொடங்கினார்.

எப்படியாவது எவெர்ஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்ற இவரது தைரியத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சமும், அமைச்சர் உதயநிதி ரூ.15 லட்சமும் நிதியுதவி அளித்தனர்.

தனது பள்ளிப் பருவத்தில் தடகள வீராங்கனையாக விளங்கிய முத்தமிழ்செல்வி, கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மகளிர் தின விழாவினையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், மலைப்பட்டு மலையில் 155 அடி உயரத்திலிருந்து கண்ணை கட்டிக்கொண்டு 58 நிமிடங்களில் இறங்கினார்.

மேலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இமாச்சல் பிரதேசம், குலுமணாலி மலையில் தனது இருபிள்ளைகளுடன் ஒரு சிறுமியை முதுகில் கட்டிக்கொண்டும், மற்றொரு சிறுமியுடன் 165 அடிஉயரத்தில் இருந்து கண்ணை கட்டிக்கொண்டு 55 நிமிடங்களில் கீழே இறங்கி சாதனை படைத்தார்.

வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் பரப்பிட 2022-ஆம் ஆண்டு குதிரையில் 3 மணிநேரம் அமர்ந்து 1389 முறை வில் அம்பு எய்து 87 புள்ளிகள் பெற்றார். மேலும், இமாச்சல பிரதேசம், லடாக் பகுதி, காங் யெட்சே பீக் -2 (KANG YATSE HILL) மலையில் 5500 மீட்டர் வரை ஏறி சாதனை படைத்தார். இந்த நிலையில் தற்போது எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண்ணாக திகழ்கிறார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “எவரஸ்ட் ஏறுவது அத்தனை எளிதல்ல. தன்னம்பிக்கையுடன் அதற்கான முயற்சியை தொடங்கியிருந்தார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி முத்தமிழ்ச்செல்வி.

அவரது பயணத்துக்கு கழக அரசு & தனியார் பங்களிப்புடன் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய நிலையில், தமிழ்நாட்டிலிருந்து முதல் பெண்மணியாக வெற்றிகரமாக எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து அடிவாரம் திரும்பியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துகள். அவரது சாதனை பயணங்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும்.” என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் கடலோர கிராமத்தில் பிறந்த ராஜசேகர் (எ) குட்டி என்ற மீனவ குடும்பத்தை சேர்ந்த இளைஞர், எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடி நாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.