விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே, தான் கல்வி உதவித்தொகையைச் சேமித்து ஆசையாக வாங்கி வளர்த்த செம்மறி ஆடு கனமழையால் இறந்த சோகத்தைத் தாங்க முடியாமல்,
18 வயது ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர் பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களைத் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மைலி இலுப்பைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியின் மகன் செந்தில்குமார் (18).
இவர் அரசு ஐ.டி.ஐ.-யில் மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார். படிப்புக்காக இவருக்கு மாதந்தோறும் வந்த கல்வி உதவித்தொகையைச் சேமித்து, செம்மறி ஆடு ஒன்றை வாங்கி ஆசையாக வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக அந்த ஆடு திடீரென இறந்து போனது. இதனால் செந்தில்குமார் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
ஆடு இறந்த சோகத்தைத் தாங்க முடியாமல், திடீரென விபரீத முடிவெடுத்துச் செந்தில்குமார் பூச்சிகொல்லி மருந்தைக் குடித்தார். இதைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு முதலில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும்,
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றிச் செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஆல்பனியில் உள்ள வீட்டில் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இந்தியர்கள் இருவரில்,
மேலும் ஒரு இந்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
நியூயார்க் மாகாணம் ஆல்பனியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், இந்தியாவைச் சேர்ந்த முதுநிலை மாணவி சஹஜா ரெட்டி உடுமலா மற்றும் மற்றொரு இந்தியரான அன்வேஷ் சரபெள்ளி உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
இதில், ஆல்பனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சஹஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேல்சிகிச்சைக்காக வெஸ்ட்செஸ்டர் தீக்காய சிகிச்சை மையத்துக்கு மாற்றப்பட்ட அன்வேஷ் சரபெள்ளி, சனிக்கிழமை (டிசம்பர் 7) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
அன்வேஷின் இறப்புக்கு நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவரது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காகத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தூதரகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் கிட்டத்தட்ட ஆயிரம் பாடசாலைகள் மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவே குறிப்பிட்டுள்ளார்.
ஏதோ ஒரு வகையில் சுமார் 100,000 மாணவர்களும் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், டிசம்பர் 16 அன்று பேரிடரால் கடுமையாக பாதிக்கப்படாத பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தெந்தப் பகுதிகள் மற்றும் எந்தெந்தப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து இன்று (08) அல்லது செவ்வாய்க்கிழமை (09) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மீண்டும் திறக்கப்பட்டவுடன், ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகளை 2026 ஜனவரியில் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரிடரினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 607 ஆக உயர்வடைந்துள்ளது. மழை வெள்ளம், புயல் மற்றும் மன்சரிவு போன்ற இயற்கை பேரனர்த்தங்களினால் இதுவரையில் 607 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த அனர்த்தங்கள் காரணமாக இன்னமும் 214 பேர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பசறை யூரி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு உயிர் பிழைந்த ஆசிரியர் ஒருவர் தனது திகில் அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார், அவரது பதிவிலிருந்து,
27ம் திகதி நாங்கள் ஆறு பேரும் வீட்டுக்குள்ளேயே இருந்தோம். மாலை 4.30 மணி இருக்கும். அந்நேரம் கொஞ்சம் கடுமையான மழைதான்.
நான், (இந்து) மனைவி மற்றும் பிள்ளைகள் மூவரும் பாயில் படுத்தவாறு tv பார்த்துக் கொண்டும் மறுபக்கம் சின்னவளின் பரதநாட்டியத்தை குழப்பிக் கொண்டும் இருந்தோம். அப்போது முன்வாசல் கதவின் வழி மழைத்துளி வருவதை தடுக்க மழையில் நனைய சங்கடபட்டவாறு வெளியே சென்றேன்.
ஒரு கையில் குடையுடன் தகரத் துண்டினை எடுத்து முன் கதவில் சாய்ந்து வைத்தேன்.. அப்போது நீர் குழாயை திறந்தால் மண் கலந்த நீர்.. எனவே குடிப்பதற்கு தேவையான மழை நீரை சேகரிப்போம் என்று பாத்திரங்களை எடுக்க கூறியதால் மனைவி தரையில் இருந்து எழுந்தார். Raincoat ஐ எடுக்குமாறு மகனிடம் கத்தினேன்.
அதனால் அவனும் தரையில் இருந்து எழுந்தான்.. மழை மேலும் அதிகரிக்குமோ என்று கதவை பிடித்தவாறு எட்டி மேல் நோக்கி பார்த்த போது வீட்டின் பின்புறம், கொஞ்சம் தூரத்தில் சேற்று நீர் உயரமாக தெரிப்பது தெரிய.. “எல்லா ஒடுங்க”என்று கத்தியவாறு வீட்டுக்குள் ஓடி பிள்ளைகளை எழுப்பி ஓடும் போது எல்லாம் முடிந்து விட்டது.
நானும் மனைவியும் சின்னவளும் (பவன்யா) அம்மாவும் இடிபாடுகளுக்குள். மகனும் (மோகுலேஸ்), மகள் (தனன்யா) வெளியே. அவர்களை சேற்று நீரும் கற்களும், மரங்களும் சூழ தவித்து நிற்கிறார்கள்.. உள்ளே மனைவியின் கால்கள் இடிபாடுகளுக்குள்.. எதுவும் செய்ய முடியவில்லை..
சின்னவள் (பவன்யா) தரையில் தரையில். அவளது தலை மட்டும் தெரிகிறது. செல்லத்தை இழுக்க முடியவில்லை..
அம்மாவுக்கும் அப்போது எதுவும் காயங்கள் இல்லை.. ஆனால் அவருக்கு ஒருவரின் துணை இல்லாது அங்கிருந்து வெளியேற முடியாது.. எனக்கு அடிபட்ட போது இடிபாடுகளுக்குள் சிக்கவில்லை.
ஒருகணம்.. யாரை காப்பது? அம்மாவா? மனைவியா? சின்னவளையா? வெளியே நிற்கும் பிள்ளைகளையா?
பேர் செல்ல இருவரையவது காப்போம் என சின்னவளை கடவுளை வேண்டிக்கொள் என்றும் மனைவியை அம்மாவை பார்த்தவாறு உதவிக்கு கத்தியவாறு இடிபாடுகளுக்குள் இருந்து வெளியே வந்தேன்..
கடவுள் கொடுத்த, கல்வி கொடுத்த தைரியம்.. பிள்ளைகள் இருவரை பாதுகாப்பற்ற சேற்றிலும் கற்கள், மரங்கள், குப்பைகள் நிறைந்த வழிகளில் இரங்கி, விழுந்து வழிதெரியாமல்,
வழி உருவாக்கி அதன் வழி மகன் ஒட மகளை கையில் பிடித்து இழுத்தவாறு முன் இருந்த லயன் வீடோன்றின், முன் கதவு வழியே சென்று பின் கதவை திறந்து பிள்ளைகளையும் அந்த வீட்டில் அதுவரை முழங்கால் அளவை தாண்டி நிரம்பிக்கொண்டிருந்த சேற்று வெள்ளத்தையும் வெளியேற்றினேன்.
இருவரும் திரும்பி பார்க்காது கண்ணில் பட்ட ஆட்களை ஓடுங்கள்.. நான் அம்மா, தங்கச்சி, அம்மி (அம்மா) அழைத்து வருகிறேன்..
என்று மரணத்தை எதிர்த்து வந்த வழியே வலியுடன் மீண்டும் விழுந்து, எழுந்து, ஓடி வீட்டிற்கு சென்றேன்.. எதையும் தூக்க, அசைக்க முடியவில்லை..
அசைக்க பயம் தங்கமகள் தரையில்.. அவள் தைரியமானள்.. அவள் அப்போதும் அழவில்லை.. அந்த கணத்தில் உதவிக்கு அருகில் யாருமில்லை.. கையறு நிலை என்பதைப் அனுபவித்து அறிந்தேன்..
மகன், மகள் ஊடாக தகவல் அறிந்தோர் “சேர் செத்தா ஒன்னா சாவோம்.. என்ற வார்த்தைகளோடு அயலவரும் ஊரவரும் துணைக்கு வர செய்த புண்ணியம் அறுவரும் இன்று உயிருடன் இருக்கிறோம்…
(எல்லாம் 30 – 40 நிமிடங்களுக்குள் மரண வாசனையை அனுபவித்த போது) என அவர் தனது திகில் அனுபவத்தை வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
உலகநாடுகளில் உள்ள அனைவரையும் இணைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்தை கொண்ட சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராக யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை பொறுப்பேற்றுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (6) சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வில் அவர் தனது பதவியைப் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் கைதடி மண்ணின் மைந்தனும், புனித பரியோவான் கல்லூரியின் பழைய மாணவரும் மருத்துவ உலகில் நன்கு அறியப்பட்டவருமான தவம் தம்பிப்பிள்ளை தற்போது அமெரிக்காவின் சான்போர்ட் மருத்துவமனையில் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார்.
அதேசமயம் இவர் அடிக்கடி இலங்கைக்கு வருகை தந்து பல்வேறு சுகாதார நலத்திட்டங்களுக்கு உதவி செய்து வருவதோடு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிறுநீரக மாற்று சிகிச்சை திட்டம் ஆரம்பிக்க காரணமான முக்கிய நபராக விளங்குகிறார்.
அமெரிக்க மருத்துவ உதவி நிதியத்தின் (IMHO) உறுப்பினராக கடந்த 20 ஆண்டுகளாக இலங்கையில் பல தொண்டுப்பணிகளில் ஈடுபட்டு பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.
IMHO இலங்கையில் பல்வேறு சுகாதார, கல்வி மற்றும் வலுவிழந்தவர்களுக்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டங்களை செயற்படுத்தி வருகிறது.
பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் அமையத்தின் (International College of Surgeons) உலக அமைப்பின் தலைவராக அறிமுகப்படுத்தப்பட்டமை இலங்கைக்கும் யாழ்ப்பாண தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம் (05.12.2025) இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, இதற்கான உதவியை இராணுவத்தினர் விமானப்படையினரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். இதனையடுத்து, குழந்தையின் தாயார் கருத்து தெரிவிக்கையில், நானும் எனது குழந்தையும் 27ஆம் திகதி முதல் பிரிந்து இருந்தோம்.
நான் அபிசாவளையில் இருந்தேன்.எனது குழந்தை மீமுரேவில் இருந்தது.இந்தநிலையில் குழந்தை பற்றியோ, குடும்பத்தார் பற்றியோ எந்த தகவலும் கிடைக்கவில்லை.
நான் மிகவும் மனமுடைந்து இருந்தேன்.இந்த நிலையிலே இராணுவத்தினர் எனக்கு உதவி குழந்தையை என்னிடம் சேர்த்துள்ளனர்.அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
இதேனிடையே மீமுரேவில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவ மருத்துவக்குழுக்கள் சுகாதாரப் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அனுராதபுரத்தில் தாய் ஒருவர் 2 பிள்ளைகளுடன் உயிரை மாய்க்க முயன்ற நிலையில் அவரது மகனின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
மொரட்டுவையில் இருந்து அனுராதபுரத்திற்கு சென்ற தாய் தனது இரண்டு பிள்ளைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
இதனையடுத்து, நீரில் அடித்து செல்லப்பட்ட மகனின் சடலம் அனுராதபுர நகரத்தின் மிஹிந்துபுர பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நிலையில் 8 வயது திஷுகா மீரியகல்ல என்ற சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
மல்வத்து ஓயாவில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 4 வயது சிறுமி சித்துல்யா மீரியகல்லவை தேடும் நடவடிக்கையில் பொலிஸ் குழு ஈடுபட்டுள்ளது.
5 நாட்களுக்கு முன்பு, 2 பிள்ளைகளின் தாயான ஒருவர், தனது 8 வயது மகன் மற்றும் 4 வயது மகளுடன், மிஹிந்துபுர பாலத்திலிருந்து மல்வத்து ஓயாவில் குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்திற்குப் பின்னர் காணப்படும் இறந்த மீன்களை மக்கள் உண்பதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம், நோய் அல்லது காயங்கள் காரணமாக இறக்கும் விலங்குகளின் உடலங்களைச் சரியாகக் கையாளாவிட்டால், அவை தீவிர சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
இலங்கையில் வெள்ளத்திற்குப் பிறகு காணப்படும் இறந்த மீன்கள் உட்பட எந்தவொரு விலங்கின் உடலத்தையும் பொதுமக்கள் தொடுவது, சேகரிப்பது அல்லது உண்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறந்த விலங்குகளைக் கையாள்வதற்கு முன்னர், பொதுமக்கள் உடனடியாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அல்லது உள்ளூர் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுபவர்கள், தொற்று அபாயத்தைக் குறைக்கக் கையுறை , மற்றும் முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு பொருட்களைப் பயன்படுத்துவது அவசியமாகும்.
சவர்க்காரம் மற்றும் சுத்தமான நீரைக் கொண்டு கைகளைத் தவறாமல் சுத்தமாகக் கழுவுதல் உள்ளிட்ட கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை கிளை அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06.12.2025) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் மீது லொறி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற லொறி இரண்டு கார்கள் மீது மோதியதாகவும், பின்னர் லொறி ரயில் பாதையை நோக்கிச் சென்று ரயில் தண்டவாளத்தில் நின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத் தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant for Future Tomorrow Category யில் சர்வதேச வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு உலகின் 68 நாடுகளிலிருந்து வந்த திறமையான இளைஞர் போட்டியாளர்கள் மத்தியில் அனுசனின், சமூகத்தையும் சூழலையும் மேம்படுத்தும் முயற்சிகள் தனித்துவமாக வெளிப்பட்டது.
இந்த வெற்றி, ஒரு சாதாரண அங்கீகாரமாக அல்லாமல், இது ஒரு இளம் செயற்பாட்டாளரின் சுற்றுச்சூழல் கடமையைப் பூர்த்தி செய்யும் உறுதியின் சர்வதேச அங்கீகாரமாக காணப்படுகிறது.
யாழ்ப்பாண கண்டல் தாவர மீள்நடுகைத் திட்டம் கடற்கரை சூழலை மீட்பதோடு, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் வகையில், அனுசன் முன்னெடுத்த முக்கியமான முயற்சியாகும்.
குறித்த திட்டத்தின் மூலம் கடற்கரை கண்டல் தாவரங்கள் பாதுகாக்கப்பட்டதோடு, சமூகத்தினர் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, செயல்பாடுகளில் நேரடியாக பங்களித்துள்ளனர்.
இந்த சாதனை, இலங்கையின் பசுமை சூழல் மற்றும் சமூக நீடித்த வளர்ச்சியை உலகளாவிய அளவில் வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
குறிப்பாக, இளம் மாற்றத்தலைவர்களின் செயல்பாடுகளை பாராட்டும் QS ImpACT Summit 2025, லண்டனில் அதிகாரபூர்வமாக வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டது.
இந்த அங்கீகாரம், அவருடைய பணிக்கு மட்டும் அல்ல, அவருடன் இணைந்து பணியாற்றிய தன்னார்வலர்கள், சமூக உறுப்பினர்கள் மற்றும் Programme of Disaster Risk Reduction & Climate Resilience (DRR & CR) அணியினரின் வலிமையான முயற்சிக்கும் உரிய அங்கீகாரமாகும்.
லண்டனில் இடம் பெற்ற கத்திக்குத்தில் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி ஒரு வருடமான நிலையில் இத துயரச்சப்பவம் இடம் பெற்றுள்ளது கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .
இந்நிலையில் நேற்று 03 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கறுப்பின இளைஞர்கள் இக்கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரியவந்துள்ளது .
சம்பவத்தில் 32 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் சம்பவம் தொடர்பாக லண்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
ஹரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள நவுதலா கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த திருமண விழாவில், 6 வயது சிறுமி வித்தி மகிழ்ச்சியாக அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்.
அழகான ஆடை அணிந்திருந்ததால், பலரின் கவனமும் அவர்மீதே இருந்தது. ஆனால் சில நேரங்களில், அந்த சிறுமி காணாமல் போனது பெற்றோரையும் உறவினர்களையும் பதட்டத்தில் ஆழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து திருமண வீட்டை முழுதும் தேடியும், சிறுமி எங்கும் கண்ணில் பட்டதில்லை. இறுதியில், வெளிப்புறமாக பூட்டியிருந்த முதல் தள அறை திறக்கப்பட்டபோது,
தண்ணீர் வாளிக்குள் முகம் கீழ்வைத்து விழுந்த நிலையில் இருந்த வித்தி அசைவின்றி கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்சியில் இருந்த வீடு முழுவதும் சோகத்தில் மூழ்கியது.
இந்த சம்பவத்தை விசாரணை ஹரியானா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர். மேலும் சம்பவம் நடத்த இடத்தில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி கடைசியாக உறவுக்கார பெண் பூனத்துடன் சென்றது தெரியவந்தது.
அப்போது கடைசியாக குழந்தையுடன் அவரது உறவுக்கார பெண் இருந்தது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பூனத்தை அழைத்துச் சென்றனர். அப்போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
2019-ல் திருமணமான 34 வயதான பூனம், இரு குழந்தைகளின் தாயான பின்னரும், தன்னை மிகுந்த அழகி என்று நினைத்து, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அனைவரின் பார்வையும் தன் மீது இருக்க வேண்டும் என்ற மனநிலையிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த திருமண நிகழ்ச்சியில் சிறுமி வித்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பூனத்திற்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். இதற்காக, தனியாக அழைத்து சென்று தண்ணீர் வாளியில் தள்ளி மூழ்கடித்து தாக அவர் ஒப்புக்கொண்டு பரபரப்பு வாக்கு மூலத்தை அளித்தார்.
இதிலும் அதிர்ச்சி என்னவென்றால் முன்னதாக இதே காரணத்தால் முன்று பேரை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி
கடந்த 2023-ல் மைத்துனியின் 9 வயது மகள் இஷிகாவையும், அதை பார்த்து பயந்த தனது 4 வயது மகனையும் தண்ணீரில் தள்ளி கொன்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 2025-ல் மற்றொரு 6 வயது உறவுக்கார சிறுமியையும் இதே முறையில் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இவரது குடும்பத்தினர் அனைத்தும் இதுவரை விபத்து மரணமாகவே நினைத்த நிலையில், பூனம் சீரியல் கில்லராக இருப்பது தெரிய வந்ததும், குடும்பத்தினரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
6 வயது வித்தி கொலை வழக்கிலிருந்து தொடங்கி, பூனம் முன்பே பல கொலைகளை செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. இந்த சம்பவம் ஹரியானா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த மனவேதனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சிவகிரி அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி பொன் ஆனந்தி (26).
இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. பொன் ஆனந்தி கடையநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார்.
கணவர் பிரகாஷ் கோயம்புத்தூரில் வேன் டிரைவராகப் பணிபுரிவதால், குழந்தை பாசூர்சத்திரம் அருகேயுள்ள பெற்றோர் வீட்டில் வளர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் (டிசம்பர் 4) பொன் ஆனந்தியின் மாமியார் செல்வி வீட்டிற்குச் சென்றபோது, கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால், மற்றொரு சாவியைக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது பொன் ஆனந்தி வீட்டில் தூக்குப் போட்டுத் தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த சிவகிரி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை,
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளேன்” எனப் பொன் ஆனந்தி உருக்கமாக எழுதியிருந்ததாகப் போலீசார் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில்,
பொன் ஆனந்தி தனது பணிக்கு மத்தியில் அடிக்கடி ஆன்லைனில் விளையாடியதாகவும், அதில் ₹63 ஆயிரம் வரை இழந்ததால் மனவேதனையில் இருந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
திருமணமாகி மூன்றரை ஆண்டுகளே ஆவதால், சங்கரன்கோவில் உதவி கலெக்டர் அனிதா தலைமையிலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் கூலித்தொழிலாளி பிரவீன் கவுடு மரணித்த பின்னர், அவரது மனைவி அகிலா மாமியார் வீட்டில் குழந்தையுடன் தங்கி வந்தார்.
கணவரை இழந்த சோகத்தில் இருந்த அகிலாவை மறுமணம் செய்யுமாறு குடும்பத்தினர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அவர் சம்மதிக்காத நிலையில் மன அழுத்தத்தில் அவஸ்தைப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அகிலா தன் இரண்டு வயது குழந்தையை தூக்கில் போட்டுவிட்டு, பின்னர் தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறு மற்றும் மன அழுத்தமே காரணம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இந்த சம்பவத்துக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய்–குழந்தை உயிரிழப்பால் கிராமம் முழுவதும் துயர சூழ்நிலை நிலவுகிறது.
ஈரோடு அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மாணிக்–மகாலட்சுமி தம்பதியின் 5 வயது மகனான சாய்சரணுக்கு நேற்றிரவு நடந்த சம்பவம் குடும்பத்தினரை மட்டுமல்ல அப்பகுதியினரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டில் இருந்தபோது பெற்றோர்கள் வாழைப்பழம் சாப்பிடக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். அதைக் கண்ட பெற்றோர் பதற்றத்துடன் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த வாழைப்பழத்தை மருத்துவர் குழு அகற்றி, உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.