தன்னைவிட அழகாக இருப்பதாக கூறி சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளை நீரில் மூழ்கடித்துக் கொன்ற பெண்!!

தன்னைவிட அழகாக இருந்ததால் சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற பெண்ணை அரியானா போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியானா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த பூனம் என்ற 32 வயதுப் பெண், தனது உறவினர்களின் குழந்தைகள் தன்னைவிட அழகாக இருப்பதாகக் கருதி அவர்கள் மீது கடும் பொறாமை கொண்டு வந்துள்ளார்.

இந்தக் குரூர எண்ணத்தின் காரணமாக, கடந்த 2023ம் ஆண்டு தனது மைத்துனியின் 9 வயது மகள் இஷிகாவைத் தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்தார்.

பின்னர் தன் மீது சந்தேகம் வராமல் இருக்க, தனது சொந்த மகனான 3 வயது சுப்பமையும் அதே பாணியில் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் உறவினர் ஒருவரின் 6 வயது மகள் ஜியாவையும் கொலை செய்தார். இவை அனைத்தும் விபத்து என்றே அந்த குடும்பத்தினர் நம்பி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி நடைபெற்ற திருமண விழாவின்போது, தனது அண்ணன் மகளான 6 வயது விதியைப் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பூனம் கொலை செய்துள்ளார்.

இம்முறை பூனமின் ஆடைகள் ஈரமாக இருந்ததைக் கண்ட உறவினர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பூனம் 4 குழந்தைகளையும் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இது குறித்துப் போலீசார் கூறுகையில், ‘தன்னைவிட அல்லது தனது குடும்பத்தைவிட மற்றக் குழந்தைகள் அழகாக இருப்பதைப் பூனாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அந்தக் குழந்தைகளைக் கொல்ல வேண்டும் என்ற மனநோயாளியைப் போல அவர் செயல்பட்டுள்ளார்’ என்று தெரிவித்தனர்.

தனது சொந்த மகன் என்றும் பாராமல் 4 பிஞ்சு உயிர்களைப் பறித்த இப்பெண்ணுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் வாகன பாவனை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய அல்லது அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை முழு ஆய்வு இல்லாமல் பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்து பொறியியலாளரான நுவான் மதநாயக்க தெரிவித்துள்ளார்.

நீரில் மூழ்கிய வாகனங்களை இயக்காமல் தொழில்நுட்ப வசதிக்கு கொண்டு சென்று முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.

அனைத்து வகையான ஒயில், பிரேக், பவர் ஸ்டீயரிங், கியர் எண்ணெய், என்ஜின் எண்ணை உட்பட அனைத்தை அகற்ற வேண்டும். மேலும் அவை வெண்மையாக மாறியிருந்தால், என்ஜினை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

சுமார் 2-3 நாட்கள் முழுமையாக நீரில் மூழ்கியிருக்கும் வாகனங்களின் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க முடியும், ஆனால் அவற்றின் மின் அமைப்புகளைப் பயன்படுத்தவே கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்காலிகமாக மீட்டமைக்கப்பட்டாலும், அது எதிர்காலத்தில் அரிக்கப்பட்டு பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.

எனவே வாகனத்தை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் செயலிழக்கச் செய்ய வேண்டும் அல்லது மூன்றாம் தரப்பு காப்பீடு இருந்தால், மின்சுற்றுகளை முழுமையாக மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.

வாகனத்தின் சஸ்பென்ஷன் அமைப்புகளுடன் தொடர்புடைய கிரீஸ் முழுவதுமாக அகற்றப்பட்டு புதியவற்றைப் பயன்படுத்த வேண்டும். அவற்றின் ரப்பர் பாகங்களை மீண்டும் பொருத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

டித்வா சூறாவளியின் கொடூரம் : 600ஆக அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!!

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் சூறாவளி புயல் டிட்வா மற்றும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) தெரிவித்துள்ளது.

மேலும் 214 பேரைக் காணவில்லை என்று பேரிடர் மையம் தெரிவித்துள்ளது. கடுமையான வானிலை நாடு முழுவதும் 586,464 குடும்பங்களைச் சேர்ந்த 2,082,195 பேரைப் பாதித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 232 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து நுவரெலியா (89 பேர்), பதுளை (83 பேர்), குருநாகல் (61 பேர்), கேகாலை (30 பேர்), புத்தளம் (30 பேர்) மற்றும் மாத்தளை (28 பேர்) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

காணாமல் போனவர்களைப் பொறுத்தவரை, கண்டியைச் சேர்ந்த 81 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 35 பேரும், கேகாலையைச் சேர்ந்த 41 பேரும், பதுளையைச் சேர்ந்த 28 பேரும், குருநாகலைச் சேர்ந்த 11 பேரும் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

43,715 குடும்பங்களைச் சேர்ந்த 152,537 பேர் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் மேலும் தெரிவித்துள்ளது.

பேரிடரில் சிக்கியுள்ள இலங்கையை மீட்க களமிறங்கும் பல நாடுகள்!!

பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதற்காக அமெரிக்கா இன்று இரண்டு விமானங்களை வழங்க உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா இரண்டு C1 30 சரக்கு விமானங்களை வழங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பேரிடர் மேலாண்மைக்காக அமெரிக்கா பல ஹெலிகப்டர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோசமான வானிலையால் இலங்கையில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பல சர்வதேச அமைப்புகள் உதவ வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பல நாடுகளின் அதிகாரிகள் இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, பல உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரான்ஸ், போலந்து, ஜெர்மனி மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு வருகைத்தற்து நாட்டிற்கு பொருத்தமான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பேரிடரில் 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!!

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் இதுவரையான காலப்பகுதியில் 586,464 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 2,082,195ஆக பதிவாகியுள்ளது.

பேரிடரில் சிக்கி இதுவரை 607 பேர் உயிரிழந்துள்ளதுடன், 214 பேர் காணாமல் போயுள்ளனர். அதேநேரம், 4,164 வீடுகள் முழுமையாகவும் 67, 505 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் 1,211 இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். 43,715 குடும்பங்களை சேர்ந்த 152,537 பேர் இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு : துயரத்தில் குடும்பம்!!

யாழில் இளம் குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கரைநகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடனைய மூன்று பிள்ளைகளின் இளம் தந்தையே உயிரிழந்தவர் ஆவார் .

யாழ்ப்பாணம் கரைநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் நேற்று முன்தினம் (03.12.2025) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சடலம் உடல் கூற்று சோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குழப்பம் : மீண்டும் அதிகரிக்கும் மழை வீழ்ச்சி தொடர்பில் எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், இடைப் பருவப்பெயர்ச்சி வானிலையுடன் ஒப்பிடுகையில் வடகீழக்கு பருவப்பெயர்ச்சியின் போது இடியுடன் கூடிய மழை குறைவானதாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரமடையும் பருவப்பெயர்ச்சி

வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த வடகீழக்கு பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதன் காரணமாக டிசம்பர் 9ஆம் திகதிக்குப் பின்னர் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்பதோடு,

எந்நேரத்திலும் இப்பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், 75 மி.மீ. அல்லது 100 மி.மீ. அளவிலான மழை பெய்யக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் ஏனைய மாகாணங்களில், குறிப்பாகத் தென்மேற்குப் பகுதியில் இக்காலப்பகுதியில் இடியுடன் கூடிய மழை இல்லாவிட்டாலும் மழை பெய்யக்கூடும் எனவும் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வளிமண்டலத்தளம்பல் நிலை

இதனிடையே, இலங்கைக்குத் தென்கிழக்குத் திசையில் வளிமண்டலத் தளம்பல் நிலை காணப்படுவதாகவும், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்நிலை நீடிக்கக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை உருவானமை வடகீழக்கு பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளதென குறிப்பிட்ட அதுல கருணாநாயக்க,

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள இந்தத் தளம்பல் நிலை இலங்கைக்குத் தொலைவில் தென்கிழக்குத் திசையில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக டிசம்பர் 9ஆம் திகதிக்குப் பின்னர் கடல் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மீனவர்களும் கடற்பயணிகளும் எதிர்கால அறிவித்தல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுளள்னர்.

மக்களுக்கான பல கோடி ரூபா பெறுமதியான காணியை வழங்கும் கொடையாளி!!

இலங்கையில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காக தனது கோடிக்கணக்கான மதிப்புள்ள காணியை நபர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஜாஎல பகுதிக்கு அருகில் உள்ள தனது நிலத்தை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி என ஷியாம் டயஸ் குறிப்பிட்டுள்ளார்.

தனது 4 கோடி ரூபாய் பெறுமதியான 24 பேர்ச் காணியை மக்கள் தங்களுக்காக வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்காக இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளார்.

வாழ்வதற்கு வீடுகள் இன்றி தவிக்கும் மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்காக அரசாங்கத்திற்கு இந்த காணியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டுத் தொகுதியை அமைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவான மக்களை அதில் தங்க வைக்க முடியும் என ஷியாம் டயஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வாறான உதவிகளை செய்யாவிடின், அது அந்த மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

இந்தப் பகுதியில் ஒரு பேர்ச் காணி 23 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை செய்ய முடியும். அதிகாரிகள் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு இதனை மக்களுக்கு வழங்க வேண்டும்.

மிகவும் வருமானம் குறைந்த மக்களுக்கு இதனை வழங்க வேண்டும். அந்த மக்களை இங்கே குடியேற்ற முடிந்தால், அது எனக்கு ஒரு நிம்மதியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கையில் பென்சிலுடன் புதைந்துபோன சிறுவன் : பொலிஸ் அதிகாரியின் வேதனைப் பதிவு!!

நாட்டில் இயற்கை பேரழிவால் மலையக பகுதிகளில் பலர் மண்ணில் புதையுண்டு போயுள்ளனர். இந்நிலையில் வெலிமடை பிரதேசத்தில் மண்ணில் புதையுண்ட சிறுவனின் உடலை மீட்கையில் அவனது கையில் பென்சில் இருந்ததாக கூறப்படுகின்ற சம்பவம் கண்ணீரை வரவழைத்துள்ளது.

இது தொடர்பில் ஆங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் (Sampath Abeywickrama) முகநூல் பதிவு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதிவில்,

வெலிமட, கெப்பிட்டிபோல, ரேந்தபோல பகுதி முஸ்லிம்கள் அதிக அளவில் வாழும் ஒரு பிரதேசமாகும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மூன்று மகன்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அதே இடத்தில் புதைக்கப்படும் அளவுக்குக் குரூரமான சம்பவம் நடந்தது.

அந்த ஒவ்வொரு உடலையும் என் இரு கைகளாலும் தூக்க வேண்டிய அளவுக்கு நான் துர்ப்பாக்கியமானவனாக இருந்தேன். சிறிய மகன் எழுதிய ஒரு பென்சில் உடலின் அருகே கிடந்ததை கண்டேன்.

மிகவும் மனவேதனையடைந்து அதை உடலுடன் சேர்த்து வைத்துக்கொண்டேன். அந்தபென்சிலை என்னிடமே வைத்துக்கொண்டு, உடலை ஒப்படைத்தேன் என வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

யாழில் தந்தையின் பல லட்சம் பணத்தை களவாடிய மகள் : காரணத்தால் அதிர்ச்சியில் குடும்பம்!!

யாழில் வர்த்தகரான தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை அவரது கைத் தொலைபேசியைப் பயன்படுத்தி 17 வயதான மாணவி, நண்பிக்கு பணப்பரிமாற்றம் செய்த சம்பவத்தால் தந்தை ஆடிப்போயுள்ளார் . சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அண்மையில் யாழ்ப்பாண வங்கி ஒன்றிற்கு வர்த்தகர் ஒருவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து 11 லட்சம் ரூபா பணம் தனக்கு தெரியாது மாற்றப்பட்டுள்ளதாக வங்கிக்கு வந்து முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தீர விசாரணை செய்த வங்கி நிர்வாகம், பணம் மாற்றப்பட்டது கைத் தொலைபேசி அப் மூலமே என்றும், அதுவும் நள்ளிரவு 11 மணியளவில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது எனவும் வர்த்தகருக்கு கூறியுள்ளது.

இந்நிலையில் தனது தொலைபேசி தனது பொறுப்பில் வீட்டில் வைத்திருந்த போது எவ்வாறு பணப்பரிமாற்றம் நடைபெற்றிருக்கும் என வர்த்தகர் , வங்கி நிர்வாகத்திடம் வாதாடியதுடன் அது தொடர்பில் பொலிசாரிடம் முறையிட போவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு முறை வீட்டில் தீர விசாரணை செய்து வருமாறும் வங்கி நிர்வாகம், வர்த்தகரிடம் கூறியுள்ளது.

அதோடு தமது வங்கி அல்லாது இன்னொரு வங்கி கணக்கிற்கு குறித்த பணம் அனுப்பப்பட்டுள்ளதால் அந்தக் கணக்கு விபரங்கள் தமக்கு தெரியாது எனவும் வங்கி கூறியுள்ளது.

இதனையடுத்து வீட்டுக்குச் சென்ற வர்த்தகர் விசாரணைகளை மேற்கொண்ட போது மூத்த மகளே , தந்தையின் பணத்தை மற்றொரு கணக்கிற்கு மாற்றியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மறுநாள் வங்கி முகாமையாளர் வர்த்தகரை தொடர்பு கொண்டு விசாரணைகளை செய்த போதே தனது மகள் கணக்கு பரிமாற்றம் செய்துள்ளதாக வர்த்தகர் கூறியுள்ளார்.

வர்த்தகரின் மகளின் பாடசாலை நண்பி ஒருவனின் தாயின் கணக்கிற்கே குறித்த பணம் மாற்றப்பட்டுள்ளது.

வர்த்தகரின் மகளும் நண்பியும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றும், பல தடவைகள் அவர்களை வர்த்தகர் எச்சரித்து பிரிக்க முயன்றதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நண்பி மீதான தீராத காதலால் மாணவி குறித்த பணத்தை பரிமாற்றம் செய்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தனது மகளை ஏமாற்றி பணம் பெற்றமை தொடர்பாக வர்த்தகரால் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மிகக் குறைந்தளவில் மழை பெய்தாலும் பாரிய ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை!!

நாட்டை பாதித்த டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மண் நிரம்பியுள்ளதால், மிகவும் குறைந்தளவில் மழை பெய்தாலும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் காமினி ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போதைய பேரிடர் நிலைமை குறித்து நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். “கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த மழையால், தரையில் உள்ள மண் இப்போது நிரம்பி, தண்ணீர் போல பாயும் நிலையை எட்டியுள்ளது.

இதனால் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நிலச்சரிவுகள், மண் சரிவுகள், பாறை சரிவுகள் மற்றும் வீடுகளுக்குப் பின்னால் நிலச்சரிவுகள் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, ​​தரையில் பல இடங்கள் நிலையற்றதாக இருந்தாலும், மக்கள் அந்த இடங்களில் தங்கியிருக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன. நிலச்சரிவுக்கான அறிகுறிகள் உள்ள இடங்களில் மக்கள் இன்னும் தங்கியுள்ளனர்.

பொதுமக்கள் இதுபோன்ற இடங்களில் தங்க வேண்டாம் என்றும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உரிய அதிகாரிகள் அனுமதி அளித்த பிறகு அவர்கள் அந்த இடங்களுக்குத் திரும்பலாம்.

ஆபத்தான மற்றும் சந்தேகிக்கப்படும் நிலச்சரிவு இடங்களை ஆய்வு செய்ய புவியியல் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலப்பரப்பில் ஏற்படும் விரிசல் : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

நாட்டில் நிலவிய மோசமான வானிலை தணிந்திருந்தாலும், மலையகம் உட்பட சில பகுதிகளில் நிலச்சரிவுகள், மண் சரிவுகள் மற்றும் தரையில் விரிசல்கள் இன்னும் பதிவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய சீரற்ற காலநிலையால் மலையகமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழலில், கொத்மலையில் உள்ள நயபன மலையைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் விரிசல் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொத்மலையில் உள்ள நயபன கிராமத்திற்கு செல்லும் வீதியில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன் சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு தாழிறங்கியுள்ளது.

இதன் விளைவாக, நயபன பகுதியில் இருந்து 30 குடும்பங்களைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியத்தில் உள்ளனர். இதேவேளை, கம்பளை-நுவரெலியா பிரதான வீதியில் உள்ள துனுகேவுல பகுதியில் சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதேபோல், கம்பளை-புபுரெஸ்ஸ பிரதான வீதியில் உள்ள ராஜதலாவ பகுதியில் கடந்த 28 ஆம் திகதி ஏற்பட்ட பெரிய நிலச்சரிவைத் தொடர்ந்து, மீண்டும் சில இடங்களில் நிலத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிலைமைகள் பதிவாகினால், மக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிலச்சரிவு ஆராய்ச்சி பிரிவின் இயக்குநர் காமினி ஜயதிஸ்ஸ தெரிசித்துள்ளார்.

மேலும் கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளது.

 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நாணயத் தாள்கள் : மத்திய வங்கியின் அறிவிப்பு!!

நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அல்லது நனைந்த நாணயத் தாள்களை எந்தவொரு வர்த்தக வங்கியிலும் சமர்ப்பிக்கலாம் என இலங்கை மத்திய வங்கி (CBSL) கூறியுள்ளது.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, நனைந்த நாணயத் தாள்களை மக்கள் மெதுவாகப் பிரித்தெடுக்கவும், அவற்றை வெப்பம், இரசாயனங்கள், அல்லது இஸ்திரிப் பெட்டிகள் மற்றும் அடுப்புகள் போன்ற அதிக வெப்பமூட்டும் மூலங்களைப் பயன்படுத்தாமல் இயற்கையாக உலர வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பயன்படுத்த முடியாத நாணயத் தாள்களைப் பரிமாற்றம் செய்வதற்காக எந்தவொரு வர்த்தக வங்கியிலும் சமர்ப்பிக்க முடியும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேலும், சேதமடைந்த நாணயத்தின் மதிப்பை பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெள்ளம் ஏற்படுத்திய பள்ளத்தில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து!!

கிண்ணியா – முனைச்சேனை பாலப் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதியில் ஏற்பட்ட பாரிய குழியில் வீழ்ந்ததன் காரணமாக முச்சக்கர வண்டி நேற்று( 04.12.2025) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாகச் சேதமடைந்தபோதிலும், அதன் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

​கனமழையின் காரணமாகப் பெருக்கெடுத்த வெள்ளம் வடியாத நிலையில், முறைச்சேனை பாலத்தின் அண்மித்த பகுதியில் வீதியின் ஒரு பகுதி அடியோடு சேதமடைந்தது. இதனால், வீதியில் ஒரு பெரிய பள்ளம் (குழி) திடீரென ஏற்பட்டுள்ளது.

சீரான ஒளியோ அல்லது போதுமான எச்சரிக்கை பலகைகளோ இல்லாத நிலையில், குறித்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் இந்தப் பள்ளத்தை எதிர்பாராத விதமாக கடக்க முயன்ற போது, அதில் சிக்கி கவிழ்ந்துள்ளது.​

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், விபத்துக்கான முதன்மைக் காரணம், வெள்ளம் காரணமாக வீதி சேதம் அடைந்து, பாரிய குழி ஏற்பட்டமையே என உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தில் காயம் அடைந்த சாரதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவிகள் வழங்கப்பட்ட பின்னர் வீடு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்ச் சேதம் எதுவும் இன்றி சாரதி உயிர் தப்பியது பெரும் ஆறுதலை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பகுதியில் மேலும் விபத்துகள் நடைபெறுவதைத் தவிர்க்கும் நோக்கில், வெள்ளத்தால் சேதமடைந்த இந்தப் பாலப் பகுதியை அவசரமாக சீரமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அழகாக இருப்பதாக 4 குழந்தைகளை கொன்ற பெண்!!

இந்தியாவில் அழகாக இருப்பதாக 4 குழந்தைகளை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை விட அழகாக இருப்பதாக நினைத்து 4 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்த கொடூரப் பெண்ணை ஹரியானா பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து பொலிஸார் கூறியதாவது,

நல்தா மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியின் போது 6 வயது சிறுமி ஒருவர் மாயமாகி போனார்.

சிறுமி காணாம்ல் போனதை அடுத்து உறவினர்கள் தேடி பார்த்த போது, அந்த வீட்டின் முதல் மாடியில் இருந்த தண்ணீர் டிரம்மில் தலைகீழாக மிதந்தபடி சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியின் உறவினரான பூனம் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

2023ஆம் ஆண்டு தன்னுடைய சொந்த மகன் மற்றும் ஒரு சிறுமியையும் கொன்றுள்ளார். கடந்த ஒகஸ்ட் மாதம் உறவுக்கார சிறுமியையும் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த 3 சிறுமிகளும், தன்னுடைய மகனும் பார்ப்பதற்கு அழகாக இருந்ததாகவும், அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனால், தன்னை விட அழகானவர்களாகி விடுவார்கள் என்ற பொறாமையில் அவர்களை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

அதேவேளை பூனம் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என சந்தேக வெளியிட்டுள்ள பொலிஸார், முந்தைய கொலை வழக்கு பதிவாகியுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

நிவாரணம் வழங்க சென்ற கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் தெய்வாதீனமாக விபத்தின் போது காயங்கள் ஏற்பட்டவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று மலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று நானுஓயா சாமர்செட் பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நோர்வுட்யில் இருந்து நுவரெலியா ராகலை பகுதிக்கு இயற்கை அனர்த்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிவிட்டு மீண்டும் நோர்வுட் நோக்கிப் பயணித்த கார் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் காரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.