நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னிலையாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக அர்ச்சுனா நேற்றையதினம் வெளியிட்ட காணொளியொன்றில் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர், குறித்த கடிதம் தமிழாக்கம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்திலிருந்து அர்ச்சுனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கையில் அமர்ந்த அர்ச்சுனா, தான் வெளியிட்ட நேரலையில் ‘தமிழீழ மக்களுக்கு வணக்கம்’ என்று விழித்திருந்தார்.
அவர் தமிழீழம் என்ற சொல்லை பயன்படுத்தியமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் ஏ 35 பிரதான வீதியின் ஊடாக புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த உந்துருளியும் அதே திசையில் இருந்து பயணித்த மற்றுமொரு பெண் செலுத்திய உந்துருளியும் மோதி விபத்துக்குள்ளானது.
வீதியை குறுக்கெடுத்து செல்ல முற்பட்ட வேலை ஏற்பட்ட வீதி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
காயமடைந்த பெண் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உந்துருளியில் பயணித்த ஆண் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் விபத்து சம்பவம் தொடர்பாக தர்மபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குருணாகலில் வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரந்தெனிய பகுதியில் தனது தாயை , மகள் கழுத்து நெரித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த வாரியபொல பொலிஸார் மகளை கைது செய்துள்ளனர். ரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை சம்பவம் தொடர்பில் தாயின் 32 வயதுடைய மகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான மகள் மனநல நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகளே தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சாகாமல் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். உயிரிழந்த பின்பும் மீண்டும் உயிர் பெறும் ஆசை மனிதகுலத்தில் நீண்ட காலமாகவே காணப்படுகிறது. அந்தக் கனவை நிஜமாக்க அறிவியல் உலகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், ஜெர்மனியைச் சேர்ந்த ‘Tomorrow Bio’ எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம், உயிரிழந்தவர்களின் உடலை உறையவைத்து பாதுகாக்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவையின் நோக்கம், எதிர்காலத்தில் மருத்துவ அறிவியல் பெரிதும் முன்னேறும்போது, உயிரிழந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டுவரும் சாத்தியம் இருந்தால், அவர்களது உடலை மீட்டெடுக்க பயன்படுவதாகும்.
இதற்காக, முழு உடல் கிரையோபிரசர்வேஷன் (Whole-body Cryopreservation) எனப்படும் முறையில், உடலை மிகக் குறைந்த வெப்பநிலையில் உறைய வைக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படுகிறது.
மரணம் உறுதி செய்யப்பட்ட உடலை உடனடியாக மிகவும் குறைந்த வெப்பநிலைக்கு கொண்டு செல்லும் செய்முறை.
இதனால், உயிரணுக்கள் மற்றும் திசுக்களில் ஏற்படக்கூடிய சேதத்தைத் தடுப்பது நோக்கமாகும். இந்த entire செயல்முறை $200,000 வரையிலான கட்டணத்துடன் வழங்கப்படுகிறது. உடனடிப் பாதுகாப்பு வழங்கும் 24×7 அவசரக் குழுவும் நிறுவனம் வைத்துள்ளது.
இது வரை, 650க்கும் மேற்பட்டோர் இந்த சேவைக்கு முன்பதிவு செய்துள்ளனர். மேலும் 700க்கு மேற்பட்டோர் கையெழுத்திட்டு, உடலை உறையவைத்து பாதுகாக்க ஒப்பந்தத்தில் இணைந்துள்ளனர்.
அதே நேரத்தில், சிலர் இது குறித்து விமர்சனமும் வெளியிட்டுள்ளனர். “அதிக நம்பிக்கையோடு செய்யப்படும் ஒரு அபத்தமான முயற்சி” எனவும், மனித மூளை மீட்பு குறித்து எந்த விஞ்ஞான ஆதாரமும் இல்லை எனவும், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் நரம்பியல் பேராசிரியர் கிளைவ் கோய்ன் தெரிவித்துள்ளார்.
“Tomorrow Bio” ஐரோப்பாவில் இந்தவகை சேவையை வழங்கும் முதல் நிறுவனம் என்பதுடன், தற்போது 3–4 மனித உடல்களையும், 5 செல்லப்பிராணி உடல்களையும் பாதுகாத்து வருகிறது.
எதிர்காலத்தில் அமெரிக்காவிலும் இந்த சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ் ஜலசந்தி அருகே நடுவானில் விமானம் ஒன்று திடீரென்று மாயமாகியுள்ள நிலையில் விமானி மற்றும் அவரது நண்பரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த விமானமானது சனிக்கிழமை(2) மதியம் 12.45 மணிக்கு ஜோர்ஜ் டவுன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, விக்டோரியாவிற்கும் பின்னர் மத்திய NSWக்கும் புறப்பட்டது.
விமானத்தில் இருந்த விமானி 70 வயது முதியவர் என்றும், அவரது பயணி 60 வயதுடைய ஒரு பெண் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த தம்பதியினர், நியூ சவுத் வேல்ஸில் உள்ள குடும்பத்தைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தபோது, பாஸ் ஜலசந்தியைக் கடக்கும்போது அவர்களின் விமானம் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தம்பதியினர் சேருமிடத்தை அடையாததால் குடும்ப உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் தொடங்கப்பட்டது. விமானம் காணாமல் போவதற்கு முன்பு எந்த வானொலி தொடர்பும் அல்லது மேடே அழைப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
அந்த விமானி “மிகவும் அனுபவம் வாய்ந்தவர்” என்றும் தெரியவந்துள்ளது. ஆனால், அவர் பயணித்த அந்த விமானமானது அவருக்கு ஒப்பீட்டளவில் புதியது என்று தெரிவித்துள்ளனர்.
விமானத்தின் தற்போதைய உரிமையாளரும் விமானியும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்புதான் அந்த விமானத்தை வாங்கியுள்ளனர். விக்டோரியா மற்றும் டாஸ்மேனிய காவல்துறையினர் பாஸ் நீரிணை மற்றும் தெற்கு விக்டோரியாவில் தங்கள் தேடலை மையப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, காணாமல் போன விமானத்தின் அறிகுறிகளைக் கண்டறிந்து தேடுதலுக்கு உதவுமாறு பொலிஸ்துறை ஆய்வாளர் கிளார்க் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய கலைக்கூடம் மற்றும் பிக் பென் போன்ற கடிகாரத்தை அமைக்கவுள்ளதன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைக்க கொழும்பு துறைமுக நகரம் தயாராகி வருகிறது.
இது தொடர்பாக அரசாங்கம் ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பையும் வெளியிட்டு, 25 ஆண்டுகளுக்கு முதலீட்டிற்கான வரி சலுகையை வழங்கியுள்ளது.
இந்த கட்டுமானத் திட்டத்திற்கமைய, முதலில் 2 பெரிய கோபுரங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அதில் ஒரு கோபுரத்தில் உலகின் மிகப்பெரிய செங்குத்து கலைக்கூடம் அமைக்கப்படவுள்ளது.
மற்றொரு கோபுரம் 7 நட்சத்திர ஹோட்டல் மற்றும் பல நிறுவனங்களை கொண்டிருக்கும். இதன் நிர்மாணப்பணிகளுக்காக 540 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்யப்படவுள்ளது.
இந்த வளாகத்தில் அமைக்கப்படவுள்ள கலைக்கூடம் உலகிலேயே முதன்முதன் முறை எனவும், அது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்படும் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனுராதபுரம் கெக்கிராவையைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை முடிந்த பின்னர் சிறுமி பாடசாலை பேருந்தில் ஏறி முயன்றபோது இந்த சம்பவம் நேர்ந்தது. சம்பவத்திற்குப் பிறகு அவர் உடனடியாக கெக்கிராவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி பிரேத பரிசோதனை செய்த போதிலும் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
இதன் விளைவாக, உடல் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்விற்காக மருத்துவ பரிசோதகருக்கு அனுப்பப்பட்டு, திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்னர், சிறுமியின் உடல் அவரது பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் இன்று (04.08.2025) கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மின்னல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்தோடு, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, அந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மின்னல் ஆபத்துகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாநகர சபையை சேர்ந்த ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் அப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் காதை கத்தியால் வெட்டிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாநகர சபை உறுப்பினருக்கும் குறித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்தே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன்போது காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது நிலை தற்போது கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் உப்புவேலி வடிகால் அமைப்பு அடைக்கப்பட்டு மக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.
இதனையடுத்து, சில ஊழியர்களுடன் சேர்ந்து வடிகாலை சுத்தம் செய்யும் பணியை செய்வதற்காக மாநகர சபையை சேர்ந்த ஆளும் தரப்பு உறுப்பினர் சென்றிருந்தார்.
இதன்போது, அங்கு வந்த பிரதேசவாசி ஒருவர் குழப்பம் விளைவித்ததோடு உறுப்பினரை தடி ஒன்றால் தாக்க முயன்றுள்ளார். இந்நிலையில், தனது சொந்த பாதுகாப்பிற்காக பிரதேசவாசியை புதர்களை வெட்ட கொண்டு வந்த கத்தியை பயன்படுத்தி உறுப்பினர் தாக்கியுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்கனவே இருந்த முன்பகை காரணமாக இந்த மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரத்தினபுரி பொலிஸ் பிரிவின் டிப்போ சந்தி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலையில் இது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
அதற்கமைய, உயிரிழந்தவர் 74 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர். பெண்ணின் மருமகன் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றம் தொடர்பாக 29 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து இரத்தினபுரி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, வாரியபொல பொலிஸ் பிரிவின் ரன்தெனிய பகுதியில் இருந்து நேற்று ஒரு மகள் தனது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கொலையில் உயிரிழந்தவர் ரன்தெனிய பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் கொலையில் சந்தேகத்தின் பேரில் 32 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செம்மணி பற்றிய உண்மைகளை சர்வதேச விசாரணையில் வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச கூறியிருப்பது இவ்விவகாரத்தில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமைந்திருப்பதாக தமிழ்த்தேசியக்கட்சிகளின் பிரதிநிதிகள், சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனை ஒரு சர்வதேச கட்டமைப்பின் முன்னிலையில் விசாரிப்பதன் ஊடாக மாத்திரமே சகல உண்மைகளையும் வெளிக்கொணரமுடியும் எனவும், அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதியும் சர்வதேச சமூகமும் முன்னெடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ் செம்மணி மனிதப்புதைகுழு விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை
வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அத்தோடு யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் நடாத்தப்பட்டுவந்த சித்திரவதைக்கூடங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன்,
‘செம்மணி பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ச கூறியிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். மரணதண்டனை விதிக்கப்பட்ட அவர், இப்போது உண்மையைச் சொல்வதற்குத் தயாராக இருக்கிறார்.
இருப்பினும் இந்த நாட்டுக்குள் உண்மைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் தனக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதுவதனாலேயே அவர் சர்வதேச விசாரணையைக் கோருகிறார். இந்த சர்வதேச விசாரணையையே நாம் 2010 ஆம் ஆண்டிலிருந்து கோரிவருகிறோம்.
அவ்வாறிருக்கையில் தற்போது சிங்களத்தரப்பிலிருந்து, அதுவும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவரிடமிருந்து அந்தக் கோரிக்கை வந்திருப்பதை நாம் எமக்கான ஒரு விடையாகவே பார்க்கிறோம்.
அதேபோன்று தனக்கு ஆணையிட்ட உயரதிகாரிகள், படுகொலைக் குற்றங்களைப் புரிந்தவர்கள் உள்ளிட்ட சகலரது விபரங்களையும் வெளிப்படுத்துவதற்குத் தயார் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
எனவே நீதிக்கான பயணத்தில் சர்வதேசத்தின் தலையீடு அல்லது பங்களிப்பு இல்லாவிடின், அது உண்மையான நீதியாக இருக்காது என சிங்களவர்களே கூறுமளவுக்கு இன்று நிலைமை மாறியிருக்கிறது.
எனவே இலங்கை அரசாங்கம் முதலில் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். அதுமாத்திரமன்றி மீண்டும் மீண்டும் உள்ளகப்பொறிமுறை எனக்கூறி சகல தரப்பினரையும் ஏமாற்றுவதை விடுத்து, நீதியானதொரு சர்வதேசப்பொறிமுறையை நோக்கி நகரவேண்டும்” என கூறியுள்ளார்.
வவுனியா நகரத்தில் பாதுகாப்பான போக்குவரத்து ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக வீதி சமிக்ஞை விளக்குகளை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 22.07.2025 அன்று பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது,
வவுனியா நகரில் பொதுமக்களிற்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன் பாதுகாப்பான போக்குவரத்தை ஏற்படுத்தும் முகமாக வீதிச் சமிக்ஞை விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்,
இது தொடர்பில் கடந்த 07.03.2025 அன்று பாராளுமன்ற அமர்வில் கோரிக்கை விடுத்திருந்ததுடன், தொடர்ச்சியாக அதுதொடர்பிலான முன்மொழிவு தன்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த செயற்பாட்டினை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்ற உறுப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வவுனியா நகரத்தை ஊடறுத்துச்செல்லும் கண்டி – யாழ் பிரதான வீதியில் காணப்படுகின்ற மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம், வைத்தியசாலை சுற்றுவட்டம், பண்டாரவன்னியன் சுற்றுவட்டம், A29 பிரதான வீதியில் பள்ளிவாசல் சந்தி மற்றும் A30 பிரதான வீதியில் குருமண்காடு சந்தி ஆகிய இடங்களில் வீதி சமிச்சை விளக்குகளை பொருத்துவதற்கான முன்மொழிவினையும்,
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக சுயமாக இயக்ககூடிய பாதசாரிகள் கடவைக்கான சமிக்ஞை விளக்கு (Self Operated Pedestrian Crossing Signal Light) பொருத்துவதற்கான முன்மொழிவினையும் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக டிஜிட்டல் தேசிய பிறப்பு சான்றிதழ்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது .
இந்த திட்டத்தின் கீழ், 2021 இற்கு பின்னர் இலங்கையில் பிறந்த குழந்தைகள் புதிய தேசிய பிறப்பு சான்றிதழ்களினை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த தேசிய பிறப்பு சான்றிதழ்கள் சிங்களம்-அல்லது தமிழ் மொழிகளிற்கு மேலதிகமாக ஆங்கில மொழியிலும் அச்சிடப்படுவது சிறப்பம்சமாகும்.
எனவே, தேவைக்கேற்ப அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியமில்லை.
இதன் ஆரம்ப நிகழ்வில் 30 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்ர, துணைப் பதிவாளர் நாயகம் ஆனந்தி ஜெயரட்ணம் மற்றும் பி.பிரபாகர், வவுனியா காணிப் பதிவாளர் கிருஷ்ணராஜ் லிசாந்தனி, வவுனியா பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளர் சசிகலா யோஜீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வவுனியா சின்னப்புதுக்குளம் துர்க்கா சனசமூக நிலையத்தின் நூலகம் அங்குரார்ப்பண நிகழ்வு சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இதன் போது சனசமூக நிலைய நூலகத்திற்கு வவுனியா பொது நூலகம் சார்பில் ஒரு தொகுதி நூல்களும், உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் சார்பில் ஒரு தொகுதி நூல்களும், ஓய்வு நிலை அதிபர் த.பூலோகசிங்கம் அவர்கள் ஒரு தொகுதி நூல்களையும் அன்பளிப்பாக வழங்கி வைத்திருந்தனர்.
இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் சி.அருணன், சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பு.ஐங்கரன், வவுனியா பொது நூலகத்தின் நூலகர் சார்பில் உதவி நூலகர் சுதர்சன், இறம்பைக்குளம் கிராம சேவகர் பவித்திரா, அபிவிருத்தி உத்தியோகத்தர் தர்ஷிகா,
வெளிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலய அதிபர் பா.நேசராஜா மற்றும் பாடசாலை மாணவர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், வாசகர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
வவுனியா மன்னார் வீதி பட்டானிச்சூர்புளியங்குளத்தில் இஸ்ஸாமிய கலாச்சார மண்டபத்திற்கான அடிக்கல் நேற்று (03.08) காலை 9.30 மணியளவில் நாட்டி வைக்கப்பட்டது.
முஹதைீன் ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், முத்து முகமது, அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்,
மற்றும் மாநகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரீ, ஏ.ஆர்.எம் லறீப், பாறூாக் பர்ஷான் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுத்தீ்ன் வெளிநாட்டு பயணம் காரணமாக கலந்து கொள்ளவில்லை.
முஸ்ஸிம் கலாச்சார மண்டபத்திற்கான முதலாவது அடிக்கலினை பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் இணைந்து வைத்தமையுடன்,
இரண்டாவதாக மாநகரசபை உறுப்பினர்களும் மூன்றாவதாக பள்ளிவாசல் சார்ந்தோர் என பலரும் தொடர்ச்சியாக அடிக்கலை பலரும் நாட்டி வைத்திருந்தனர்.
இக் கலாச்சார மண்டபம் அமையும் இடமானது பல வருடங்கள் பல்வேறு சர்சைகளுக்கு மத்தியில் தற்போது உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதிகளுடன் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பல்கலைகழகத்தில் புதிய நூலகம் ஒன்றை பிரதமர் ஹரிணிஅமரசூரிய நேற்று (02.08.2025) திறந்துவைத்தார்.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று வடக்கிற்கு விஜயம் செய்துள்ளதுடன் நேற்று காலை வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தில் புதிய நூலக கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரிகள்,மற்றும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடவோ, அல்லது அரசியலில் ஈடுபடுவதற்கோ எந்தத தடையும் இல்லை. இருப்பினும், வன்முறை அல்லது நாசவேலைகளை மேற்கொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாது.
அத்துடன் பல்கலைக்கழகங்களை வெறும் பட்டம் வழங்கும் அமைப்புகளாக அல்லாமல், ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் மற்றும் துணைவேந்தர் அ.அற்புதராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.