கடன் தொல்லையால் உயிரை மாய்த்தாரா சம்பிக்க நிலந்த? பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

கண்டி, யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக்க நிலந்த தனது மனைவியையும், மகளையும் அதிகாலையில் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேக வெளியிட்டுள்ளனர்.

கண்டி தொழிலதிபர் ஒருவரிடமிருந்து வாங்கிய 5 மில்லியன் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதாலும், தொழிலதிபர் தொடர்ந்து அவரை மிரட்டியதாலும் கொலை மற்றும் உயிர்மாய்ப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தனது காரை விற்றுத்தான் வட்டிக்கு பணம் வாங்கிய தொழிலதிபருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சுமார் 1.5 மில்லியன் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றிலிருந்து தொழிலதிபர் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தி வருவதாகவும், தொழிலதிபருக்கு ஒரு மூத்த பொலிஸ் அதிகாரியின் ஆதரவும் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்தப் பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதாக கண்டியிலுள்ள உயர் பொலிஸ் அதிகாரிக்கு 5 இலட்சம் ரூபாய் வழங்குமாறு சட்டத்தரணி கேட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் கடைசிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட 17 வயது மகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல எதிர்க்கட்சித் தலைவர் முயற்சித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிர் பிழைத்த 13 வயது மகள் தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழும்பில் அதி சொகுசு வீடொன்றை நிர்மாணித்தல் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகமவில் அதிசொகுசு வீடொன்றை நிர்மணித்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீட்டைக் கட்டிக்கொண்டிருந்த பெண் ஒருவரே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதான சந்தேக நபரான பெண் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரம் வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

ஹோமாகம போகுந்தர வீதியில் 8.67 பேர்ச் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 2 மாடி வீடு மற்றும் சொத்துக்கள் தற்போது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடு சுமார் 15 அடி உயரமுள்ள ஒரு பெரிய சுவரால் சூழப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எந்தவொரு தொழிலும் ஈடுபடாத இந்தப் பெண், சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் இந்த சொத்தை பெற்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவுக்கு 2023 ஆம் ஆண்டு இரகசிய தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையை தொடர்ந்து, சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் நடவடிக்கைகளுடன் இந்தப் பெண் தொடர்புடையவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கிருலப்பனை மற்றும் வெள்ளவத்தை பகுதிகளை மையமாகக் கொண்டு கடத்தல்காரரின் ஆதரவாளர்களால் வழங்கப்படும் போதைப்பொருள் விநியோகத்தில் அந்தப் பெண் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, 2024 ஆம் ஆண்டில் நீதிமன்றத்திலிருந்து அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையும் பெறப்பட்டது.

இந்த விசாரணைகளை விரைவுபடுத்தி, புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ருவன் காந்த, முதலில் இந்த சொத்துக்கு 7 நாள் தடையைப் பெற்றார்.

பின்னர், ஹோமகம நீதிமன்றத்தில் தகவல்களை சமர்ப்பிப்பதன் மூலம் பொலிஸாரால் மூன்று மாத காலத்திற்கு தடையை நீடித்துள்ளனர்.

யாழில் காணாமல்போன இளம் பெண் : பதறும் உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை!!

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) அன்று இருந்து 25 வயதுடைய டினுசன் நிஸ்ரலா எனும் குடும்ப பெண் ஒருவர் காணாமல் போய் உள்ள நிலையில், உறவினர்கள் மற்றும் பொலிஸார் பெண்னை தேடி வருகின்றனர்.

இந்த பெண்ணை கண்டு பிடிக்க உதவும்மாறு பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் உதவி கோரியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை (29) ஆம் திகதி இரவு கணவனுடன் இருந்த குடும்ப பெண் இரவு11மணியளவில் தூக்கத்தில் இருந்த கணவன் எழுந்து பார்த்தவுடன் குடும்ப பெண்ணை காணவில்லை.

அதனையடுத்து கணவன், மனைவியின் தாயிடம் மனைவி வந்துள்ளாரா என கேட்டுள்ளார் அங்கும் பெண் போகவில்லை இதன் பின் பதற்றம் அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் குடும்ப பெண்ணை தேடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து காணாமல் போன பெண் சம்பந்தமாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் மருதங்கேணி பொலிஸாரும் தமது தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றுடன் குறித்த பெண் காணாமல் போய் மூன்று நாட்கள் கடந்து செல்லும் நிலையில் அனைவரின் உதவியையும் பெண்ணின் கணவர்மற்றும் குடும்பம் கேட்டுநிற்கின்றனர் .

உயரும் வெப்பநிலை நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

வெப்பநிலை எச்சரிக்கை நிலைக்கு உயரும் இலங்கையில் இன்றும் சில பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை நிலை வரை உயரும் என்று வளிமண்டலவியம் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும்;, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிக வெப்பம் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொதுமக்கள் வெளிப்புறங்களில் கடுமையான செயல்பாடுகளை மட்டுப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர். அத்துடன் வெளிர் நிற, தளர்வான ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் நபரின் உயிரை பறித்த பணிஸ் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

ஹோமாகம, பிட்டிபன தெற்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த ஒருவர், சாப்பிட்ட மீன் பனிஸ் துண்டு தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற நகர சபை சாரதியான 72 வயதான சுனில் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நபர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். காலையில் அவர் மீன் பனிஸ் சாப்பிட விரும்புவதாக கூறியதால், குடும்பத்தினர் அவருக்கு அதனை கொடுத்துள்ளளனர்.

அதன் ஒரு பகுதியை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக அது அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், குடும்பத்தினர் 1990 சுவசேரியா அம்புலன்ஸை அழைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவிருந்தபோது, அங்குள்ள செவிலியர் நோயாளியை பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார்.

பிரேத பரிசோதனையில், அவர் சாப்பிட்ட மீன் பனிஸின் ஒரு துண்டு நுரையீரலுக்குள் சென்று சிக்கியதால் ஏற்பட்ட சுவாசக் கோளாறே மரணத்திற்கு காரணம் என்று தெரியவந்தது.

இந்த துயர சம்பவம் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

30 ஆண்டுகளுக்கு பிறகு கருவிலிருந்து வெளிவந்த குழந்தை!!

30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்த நிலையில் இருந்த ஒரு கருவில் இருந்து குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அமெரிக்காவின் ஒஹியோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

1994ஆம் ஆண்டு உறைந்த நிலையில் வைக்கப்பட்ட ஒரு கருவில் இருந்து குழந்தை ஒன்று பிறந்துள்ளமை உலகில் ஒரு புதிய சாதனையாக பாரக்கப்படுகின்றது.

தாடியஸ் டேனியல் பியர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள குறித்த குழந்தை உலகின் மிக வயதான குழந்தை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 26ஆம் திகதி, 30 ஆண்டுகளுக்கு முன்பு 62 வயதான நபர் ஒருவரிடம் இருந்து எடுக்கப்பட்ட கருவைப் பயன்படுத்தி இந்த குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐவிஎஃப் (IVF) சிகிச்சையில், கருத்தரித்த கருக்கள் உறைந்த நிலையில் பாதுகாத்து வைக்கப்பட்டு, பின்னர் கருத்தரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்க மருத்துவ துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சாதனை சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காணி வரைபடங்கள் இணையத்தளத்தில் : வெளியானது அறிவிப்பு!!

டிஜிட்டல் பொது சேவைகளை நோக்கிய ஒரு முக்கிய படியாக, ஆகஸ்ட் முதலாம் திகதி அதாவது இன்று முதல் காணி வரைபடங்களை இணையத்தளத்தின் ஊடாக பெற முடியும் என நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த திணைக்களத்தின் 225ஆவது ஆண்டு விழா நிகழ்வின் போது, நில அளவையாளர் நாயகம் வை.ஜி.ஞானதிலக நேற்றைய தினம் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இந்த புதிய அமைப்பின் ஊடாக, பொதுமக்கள், திணைக்களத்தின் இணையத்தளம் வழியாக இணையவழி கட்டணம் செலுத்துவதன் மூலம் காணி அளவீட்டு வரைபடங்களை பெறமுடியும்.

காணி தகவல் தரவுத்தளம் காணிப் பதிவுத் திணைக்களத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது காணி தொடர்பான தரவுகளுக்கான அணுகலை மேம்படுத்துகிறது.

சுமார் 2.4 மில்லியன் நில அளவை வரைபடங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. எனவே, காணி உரிமைச் சான்றிதழை சமர்ப்பிப்பதன் மூலம் நில அளவை வரைபடங்களும் வழங்கப்படும் எனவும் இது காணி தகவல் சேவைகளை நெறிப்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

225 மில்லியன் ரூபா வரி ஏய்ப்பு சிக்கலில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி!!

225 மில்லியன் ரூபா வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி மீது வழக்குத் தொடரப்பட உள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இவ்வாறு வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது.

அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தாம்புலாகல மற்றும் மாடல் அழகி பியூமி ஹன்சமாலி ஆகியோர் சுமார் 42 கோடி ரூபா வரித் தொகையை செலுத்தத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு செலுத்தப்படாத வரிக்கான அபராதம் மற்றும் வட்டி என்பனவற்றுடன் வரித் தொகையை அறவீடு செய்யும் நோக்கில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் அவுரா லங்கா தலைவர் விரஞ்சித் தாம்புகல 194 மில்லியன் ரூபா வரியை செலுத்தத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் பிரபல மாடல் அழகியும், தொழிலதிபருமான பியூமி ஹன்சமாலி 225 மில்லியன் ரூபா வரியை செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரங்கள் தொடர்பில் நீதிமன்றில் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை பிரபல போதைப் பொருள் வர்த்தகரான ஜயசிங்க ஆராச்சிகே ஹேமந்த எனப்படும் பதல மஹத்தாய என்வரின் கணக்கில் 175 கோடி ரூபா பணம் புழங்கியதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத சொத்து குவிப்பு குறித்த விசாரணைப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் ஆசிரியரின் அழுத்தம் – பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு!!

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாக பிரதேசத்தில் பிரபலமான பாடசாலையை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவணை பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதால் தனது வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து அளித்த அழுத்தத்தை தாங்க முடியாமல் குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக நுகேகொட பிரிவின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

4 பேர் கொண்ட குடும்பத்தில் அவர் இளையவர் எனவும் மாணவியின் தந்தை அதே பகுதியில் உள்ள மற்றொரு பாடசாலையின் அதிபர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவி ஹோமாகம பகுதியை சேர்ந்த 15 வயதான மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி பாடசாலையில் நடைபெறும் தவணை பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து மாணவிக்கு ஆலோசனை வழங்கி வந்துள்ளார். மற்ற மாணவர்கள் முன்னிலையில் தொடர்ந்து திட்டியதால் மன அழுத்தத்தில் இருந்த மாணவிக்கு சமீபத்தில் தலைவலி ஏற்பட்டுள்ளது.

பின்னர், மருத்துவ சிகிச்சை காரணமாக பாடசாலை செல்ல முடியாததால், மருத்துவ பரிந்துரையை கொண்டு வருமாறு பாடசாலை அறிவுறுத்தியது.

எனினும் பரிந்துரையுடன் கூடிய மருத்துவ அறிக்கையை அவரால் கொண்டு வர முடியாததால், அன்றைய தினம் வகுப்பு ஆசிரியர் மாணவியை பாடசாலையின் ஒழுக்காற்று அதிகாரியிடம் ஒப்படைத்து, மாணவிக்கு சில தண்டனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வருத்தமடைந்த மாணவி வீட்டிற்குச் சென்று உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான இராமநாதன் அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி செனானி தயாரத்ன, இந்த மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, நான்கு வாரங்களுக்குள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய நீதியரசர்கள் அமர்வு கால அவகாசம் வழங்கியுள்ளது. அத்துடன், அதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

வவுனியாவில் மாநகர சபைக்கு சொந்தமான ஆதனங்களை உடன் கையகப்படுத்துங்கள் : முதல்வர் உத்தரவு!!

வவுனியாவில் மாநகர சபைக்கு சொந்தமான ஆதனங்களை உடனடியாக மாநகரசபை கையகப்படுத்தி அதன் உரிமத்துவத்தை பேணுமாறு வவுனியாமாநகர சபை முதல்வர் சு. காண்டீபன் அறிவித்துள்ளார்.

வவுனியா மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் சு.காண்டீபன்  தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன் போது வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா மற்றும் மன்னார் வீதி கலைமகள் மைதானம்,

பூந்தோட்டம் மைதானம், மூன்று முறிப்பு மைதானம் உட்பட ஒரு சில இடங்களில் இருந்து மாநகரசபைக்கு கிடைக்கவேண்டிய வருமானம் கிடைக்காமல் போவதாக சபையின் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த ஆதனங்களை மாநகரசபையின் கீழ் கொண்டு வந்து அதன் வருமானம் மற்றும் பராமரிப்புசெயற்பாடுகளை மாநகர சபையே மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கையையும் முன் வைத்திருந்தனர்.

இதன் பிரகாரம் மாநகரசபைக்குட்பட்ட அனைத்து ஆதனங்களையும் மாற்றம் செய்து மாநகர சபைக்கு கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு செயலாளருக்கு முதல்வர் தெரிவித்தார்.

வவுனியா பொலிஸ் நிலையம் அமைந்துள்ள இடத்தினை விடுவிக்குமாறு கோரியுள்ள மாநகரசபை!!

வவுனியா தலைமை பொலிஸ்நிலையம் அமைந்துள்ள முழு ஆதனத்தினையும் விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வவுனியா மாநகரசபையின் முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்தார்.

வவுனியா மாநகரசபையின் மாதாந்த அமர்வு முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் நேற்று (31.07.2025) இடம்பெற்றது. இதன்போது கடந்த அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வரால் தெளிவுறுத்தப்பட்டது.

அந்தவகையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள மாநகரசபைக்கு சொந்தமான காணியை விடுவிப்பது தொடர்பாக கடந்த அமர்வில் பேசப்பட்டிருந்தது.

அது தொடர்பாக பதில் அளித்த முதல்வர் வவுனியா பொலிஸ் நிலையம் அமைந்துள்ள முழு ஆதனத்தினையும் விடுவித்து மாநகரசபைக்கு வழங்குமாறு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளதாக சபைக்கு தெரிவித்திருந்தார்.

38 வயது பெண்ணுக்கு உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை இரத்தம் : மருத்துவர்கள் ஆச்சர்யம்!!

இந்தியாவின் கர்நாடகா – கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நிரம்பிய பெண் இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவதுறையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவருக்கு அங்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது இரத்தம் ‘ஓஆர்.எச். பாசிட்டிவ்’ (ORH positive blood type) வகையைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், வழக்கத்திற்கு மாறாக அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களும் வினைபுரியும் நிலையில், இருந்தது. பொதுவாக சிவப்பு அணுக்கள் வினைபுரியும் நிலையில் இருக்காது என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, டாக்டர்கள் அந்த பெண்ணின் இரத்த மாதிரியை பெங்களூரு டி.டி.கே. இரத்த மையத்தில் அமைந்திருக்கும் அதிநவீன இம்முனோஹெமடாலஜி ரெபரென்ஸ் இரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பினர்.

அங்கு அந்த பெண்ணின் இரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவரது இரத்தம் பான்ரியாக்டிவ் ஆவது, அதாவது அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களும் வினைபுரியும் நிலையில் இருந்தது.

இதை அந்த இரத்த பரிசோதனை மையத்தில் டாக்டர் அங்கித் மாதுர் உறுதிப்படுத்தினார். பின்னர் அவர் அந்த பெண்ணின் இரத்த மாதிரியை இங்கிலாந்தில் உள்ள சர்வதேச இரத்த வகை கண்டறியும் மையத்துக்கு அனுப்பினார்.

அங்கு 10 மாதங்களாக நடந்த சோதனையில் அந்த பெண்ணுக்கு இருப்பது உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை இரத்தம் என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இரத்த வகைக்கு சி.ஆர்.ஐ.பி.(கோமர் இந்தியா பெங்களூரு) என்று பெயரிடப்பட்டுள்ளது.

உலகிலேயே இந்த வகை இரத்தம் உள்ள முதல் நபர் கோலார் பெண் தான் என்று அவர்களும் அறிவித்தனர். இது மருத்துவதுறையில் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

கணவனின் அவசரத்தால் நடு வீதியில் பலியான மனைவி : துயரில் கதறும் குடும்பம்!!

இன்று (31) கொழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கணவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு மருதானையைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து இன்று (31) அதிகாலை நிகழ்ந்ததாகவும் மோட்டார் சைக்கிளின் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என்றும், சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

உயிரிழந்த பெண்ணின் சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ பரிசோதகரிடம் பிரேத பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பஸ்தரின் உயிரை பறித்த தூரியன் பழம்!!

எஹெலியகொட, பரகடுவ பகுதியில், நபர் ஒருவரின் தொண்டையில் தூரியன் விதை சிக்கி உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 86 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆரியதாச வீரசிங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி ஹரிந்திர லக்மினா தென்னகோன் என்பவரால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாட்சியமளித்த உயிரிழந்தவரின் மனைவி, தனது கணவரின் தொண்டையில் சிரமம் ஏற்பட்டதாகவும், என்ன நடந்தது என்று கேட்ட போது, ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதாக அவர் கூறினார்.

அவர் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மனைவி தெரிவித்தார். எனினும் பிரேத பரிசோதனையில் தூரியன் விதை தொண்டையில் சிக்கியதால் மரணம் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

எரிபொருள் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்!!

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இன்று(31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த திருத்தங்கள் அறிவிக்கப்படலாம். கடந்த மாத திருத்தத்தின் போது எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர். இதேவேளை, கடந்த மாத எரிபொருள் விலை திருத்தத்தின் படி 92 ஒக்டேன் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டிருந்தது.

92 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 293 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக உயர்த்தப்பட்டது. மேலும், வெள்ளை டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் உயர்த்தப்பட்டது.