பெண்களை போன்று ஆடை அணிந்து எரிபொருள் நிரப்பு நிலைங்களில் கொள்ளையிட்ட மூவர் கைது!!

பெண்களை போன்று ஆடை அணிந்து அநுராதபுரம் நகரத்தில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலைங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களை கத்தி முனையில் மிரட்டி 3 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டு சென்ற மூன்று பேர் நேற்று புதன்கிழமை (30) காலை அநுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பும்மா” , “பச்சி”, “பொடியா” என்ற பெயர்களில் அழைக்கப்படுபவர்கள் ஆவர். அநுராதபுரம், தேவநம்பியதிஸ்ஸபுர மற்றும் கட்டுகெலியாவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 30, 36 மற்றும் 38 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் மூவரும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் எல்லகட்டுவ வீதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி பெண்களை போன்று ஆடை

அணிந்து அநுராதபுரம் நகரத்தில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலைங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களை கத்தி முனையில் மிரட்டி 3 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணகைளில் சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் மக்கள் தொகையை விட அதிகரிக்கும் கையடக்கத் தொலைபேசிகள்!!

நாட்டின் மக்கள் தொகையை விட மக்களால் பாவிக்கப்படும் கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் (SLC) அறிக்கையின் படி இரண்டு கோடியே பதினேழு இலட்சத்து அறுபத்தி மூன்று ஆயிரமாகும்.

அத்தோடு கடந்த 2024 ஆம் ஆண்டில் இந்நாட்டு மக்கள் 560 கோடி அழைப்பு நிமிடங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கையடக்க தொலைபேசிகள் பரவத் தொடங்கிய 2009 ஆம் ஆண்டில், அப்போது நாட்டில் தொலைபேசிகளின் எண்ணிக்கை 91,359 ஆக இருந்துள்ளது.

இதற்கிடையில், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் தரவுகளின்படி, நாட்டில் ஒரு வலுவான தொலைத்தொடர்பு வலையமைப்பு காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும் 2023 ஆம் ஆண்டில் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்ட வருவாய் 48,236 மில்லியன் ஆகும். இதில், 44,555 மில்லியன் தொலைத்தொடர்புக்கான ஒருங்கிணைந்த நிதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் வழிப்பறி கொள்ளையால் உயிரிழந்த மூதாட்டி!!

மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியைத் துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற சம்பவத்தில் படுகாயமடைந்த மூதாட்டில் நேற்றையதினம் (30.07) உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு நகர், நல்லையா வீதியைச் சேர்ந்த 81 வயதுடைய மகேஸ்வரி சரவணமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 24 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு இந்த வயோதிபப் பெண் தனது வீட்டின் முன்னாள் உள்ள வீதியை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இந்தநிலையில் அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்தெடுத்துக் கொண்டு அவரை வீதியில் தள்ளி வீழ்த்தி விட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து வீதியில் வீழந்தவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு நீதிவான் மட்டு. போதனா வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டமையுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டார். இதேவேளை இந்தக் கொள்ளையர்களை வலைவிரித்துத் தேடி வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் – லொறி விபத்து : இரு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு : தந்தை ஆபத்தான நிலையில்!!

கொழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கணவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விராஜ் விதானகே தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு மருதானையைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயார் என பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, மில்லகஹமுல பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றதாகவும்.

நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரைப் பார்வையிட குறித்த தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

இதன்போது, கொழும்பிலிருந்து வட்டவளை நோக்கிச் சென்ற லொறியினை மோட்டார் சைக்கிள் சாரதி முந்திச் செல்ல முயன்ற போது, லொறியின் இடது பக்கத்தின் நடுப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் இருந்த பெண் லொறியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் விழுந்து நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் இவ் விபத்து இன்று வியாழக்கிழமை (31) அதிகாலை 5:45 மணியளவில் நிகழ்ந்ததாகவும் மோட்டார் சைக்கிளின் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என்றும், சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

உயிரிழந்த பெண்ணின் சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ பரிசோதகரிடம் பிரேத பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இ.போ.ச பேரூந்து – கார் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்!!

காலி – உடுகம வீதியில் குருந்துவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (30) பிற்பகல் 03.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று முன்னால் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரின் சாரதி மது போதையில் இருந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலையில் இலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு : இளைஞன் பலி!!

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றதாகவும்,

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் 23 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்திற்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பூமி மீது தாக்கம் ஏற்படுத்தும் வேற்றுகிரகவாசிகள் : விஞ்ஞானிகளில் அதிர்ச்சித் தகவல்!!

ஏலியன்கள் (வேற்றுகிரகவாசிகள்) இருக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்வி பல்லாண்டுகளாக மனித குலத்துக்கு மர்மம் மற்றும் ஆர்வம் உருவாக்கி வருகிற நிலையில், பூமியை நோக்கி பயணிக்கும் ஒரு மர்ம விண்வெளிப் பொருள், விஞ்ஞானிகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல வானியல் நிபுணர் அவி லோயப், இந்த நிகழ்வை மிக தீவிரமாக எச்சரித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, இந்த மர்ம பொருள் “3I/அட்லஸ்” என அழைக்கப்படுகிறது (முன்னர் A11pl3Z). இது சுமார் 10–20 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும், மணிக்கு 2.45 லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்கக்கூடியது என்றும் கூறப்படுகிறது.

இந்த விண்வெளிப் பொருள் 700 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கக்கூடும். இது சூரிய மண்டலத்திற்கு முற்பட்ட காலகட்டத்தில் உருவானதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதனை முதன்முறையாக சிலி நாட்டின் ரியோ ஹர்டாடோ தொலைநோக்கி கண்டறிந்தது.

செப்டம்பர் 2025 வரை பூமியில் இருந்து தொலைநோக்கி வழியே காணக்கூடியது. நவம்பர் இறுதியில், இது சூரியனை நெருங்கும். டிசம்பர் தொடக்கத்தில், இது சூரியனின் மறுபுறமாக இருந்து மீண்டும் தெரியத் தொடங்கும்.

வானியல் நிபுணர் அவி லோய்ப் மற்றும் அவரது குழு, இந்த பொருள் வேற்றுகிரகவாசிகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழில்நுட்ப சாதனம் ஆக இருக்கக்கூடும் என நம்புகின்றனர்.

2017-ல், ‘ஓமுவாமுவா’ என்ற மற்றொரு மர்ம விண்கல் பற்றி அவர் இதேபோல் ஏலியன்களுடன் தொடர்பு இருக்கலாம் என கூறியதும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இந்த பொருள் மெகா நகரம் “மென்மேட்டன்” அளவுக்கு பெரியது. அதனால், அது பூமியைத் தாக்கினால் மிகவும் கடுமையான விளைவுகள் ஏற்படும். இருப்பினும், இது குறித்த துல்லிய கணிப்புகள் மற்றும் விஞ்ஞான ஆய்வுகள் இன்னும் தொடருகின்றன.

நாசா, ஐஎஸ்ஆர்ஓ, ஹார்வர்டு போன்ற அமைப்புகள் தற்போது இந்த மர்ம பொருளின் பயண பாதை, தோற்றம் மற்றும் தாக்கங்களைப் பற்றி விரிவான கண்காணிப்பு மற்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவையா? என்பது குறித்தும் விசாரணைகள் நடக்கின்றன.

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து : பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்தானது இன்று (31.07.2025) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளையே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொதுமக்களால் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

விபத்தில் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரம் யதுகிரி என்ற பெண்ணே 28 வயதானவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் : ஆலயத்திற்கு சென்றவருக்கு நடந்தது என்ன?

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் 27 வயது இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அருகில் உள்ள ஆலயத்தில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து விட்டு வீடு திரும்பும் பொழுது இளைஞன் வீட்டுக்கு முன்னால் மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உறவினர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த பொழுதும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் கால் பாதத்தில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக அச்சுவேலி பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

இலங்கையில் சுற்றித்திரியும் வெள்ளை யானை ஜோடி : படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் பானம பகுதியில் வெள்ளை யானைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த யானைகளைக் பார்வையிட ஏராளமானோர் அப்பகுதிக்கு வருகை தர ஆரம்பித்துள்ளனர். குறித்த யானைகள் பார்ப்பதற்கு வெண்மையாக காட்சியளிப்பது குறித்து பலரும் பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

தனித்துவமான தோற்றம்

மேலும் பொதுவாக வெள்ளை யானைகள் மரபணு மாற்றத்தால் ஏற்படும் நிறமிக் குறைபாட்டினால் உருவாகும் அரிதான உயிரினங்கள். அவை புனிதமானவை யாகவும் அதிர்ஷ்டத்தின் அடையாளங்களாகவும் பல கலாச்சாரங்களில் மதிக்கப்படுகின்றன.

பானமவில் காணப்படும் இந்த யானைகளின் ‘வெண்மை’ குறித்து பிரதேசவாசிகள் ஒரு சுவாரஸ்யமான விளக்கத்தை அளித்துள்ளனர்.

அப்பகுதியில் காணப்படும் சேறு மற்றும் மணல் இந்த யானைகளின் உடலில் ஒட்டியிருப்பதன் காரணமாகவே அவை வெள்ளையாகக் காட்சியளிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

யானைகள் சேற்றில் குளித்து பின்னர் மணலில் புரளும்போது சேறும் மணலும் அவற்றின் தோலில் ஒட்டிக் கொண்டு அவற்றின் இயல்பான நிறத்தை மறைத்து வெண்மையான தோற்றத்தை அளிக்கின்றன.

இது ஒரு தற்காலிகமான இயற்கையான நிகழ்வு என்பதைப் பிரதேசவாசிகள் உறுதிப்படுத்துகின்றனர்.

இதன் உண்மை நிலையைப் பொருட்படுத்தாமல் வெள்ளை யானை ஜோடியைக் காணும் ஆர்வம் சுற்றுலாப் பயணிகளிடையே அதிகரித்துள்ளது.

இயற்கையின் இந்த விசித்திரமான காட்சியை நேரடியாகக் காணும் அனுபவத்தைப் பெறுவதற்காக உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பலர் பானமப் பகுதிக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இயல்பாகவே யானைகள் அதிகம் காணப்படும் இலங்கையில் இதுபோன்ற ஒரு தனித்துவமான தோற்றம் கொண்ட யானைகள் இயற்கையின் ஆச்சரியமான அம்சங்களை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளன.

யாழ்ப்பாணம் – கண்டி ஏ 09 வீதி விபத்தில் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!

யாழ்ப்பாணம் – கண்டி ஏ 09 வீதியின் மதவாச்சி வெலிஓயா சந்திக்கு அருகில் இடம்பறெ்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மதவாச்சி பகுதியை வசிப்பிடமாக கொண்ட 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நகர சபை எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பம் சடலமாக மீட்கப்பட்ட பின்னணி – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்……!!

கண்டி, யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக்க நிலந்த தனது மனைவியையும் மகளையும் அதிகாலையில் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் சமையலறைக்கு அருகிலுள்ள திறந்தவெளிப் பகுதியில் உள்ள ஒரு மரத்தடியின் அருகில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரை மாய்த்துக் கொண்ட நிலந்த தனது 13 வயது மகளையும் கொல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் அந்தத் திட்டம் தோல்வியடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பின்னணி

தில்ருக்ஷி ஜெயலத் குமாரகே என்ற 45 வயதுடைய மனைவிக்கும் 17 வயதுடைய ஷிஹாரா அஷின்சானி ஹபுகோடா என்ற மகளுக்கும் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து, அவர்கள் உறங்கிய பின்னர் கொலை செய்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்திற்கு முந்தைய நாள் குடும்பத்தின் இளைய மகள் பாடசாலை சுற்றுலா சென்றிருந்தார். அவர் இரவில் வந்திருந்தார். சம்பிக்க நிலந்த பாடசாலையில் இருந்து மகளை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

எனினும் அதற்குள், அவர் ஏற்கனவே தனது மனைவியையும் மற்ற மகளையும் கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தனது இளைய மகளுக்கும் தூக்க மாத்திரைகளைக் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர், அவரை கொல்லும் நோக்கத்துடன் மாடிக்குச் சென்றிருந்தார், ஆனால் மகள் அந்த நேரத்தில் உறங்காததால் முடிவை கைவிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கண்டி தொழிலதிபர் ஒருவரிடமிருந்து வாங்கிய 5 மில்லியன் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதாலும், தொழிலதிபர் தொடர்ந்து அவரை மிரட்டியதாலும் கொலை மற்றும் உயிர்மாய்ப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசியலில் நுழைந்து சிறிது காலம் யட்டினுவர பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றிய சம்பிக்க நிலந்த, பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.

வட்டிக்கு பணம்

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்று யட்டினுவர பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவரானார்.

மார்ச் மாதம் தனது காரை விற்று, தான் வட்டிக்கு பணம் வாங்கிய தொழிலதிபருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சுமார் 1.5 மில்லியன் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றிலிருந்து அவர் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தி வருவதாகவும், தொழிலதிபருக்கு ஒரு மூத்த பொலிஸ் அதிகாரியின் ஆதரவும் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதாக கண்டியிலுள்ள உயர் பொலிஸ் அதிகாரிக்கு வழங்க 5 லட்சம் ரூபாய் வழங்குமாறு சட்டத்தரணி கேட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் கடைசி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட 17 வயது மகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல எதிர்க்கட்சித் தலைவர் முயற்சித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் நெருங்கிய உறவினரான மினெல் ஹப்புகொட என்ற பெண் தகவல் வழங்கியுள்ளார். “உயிரிழந்தவர்கள் எனது சித்தியும் சித்தப்பாவும் அவரது மகளுமாகும்.

மிகவும் அன்பாக வாழ்ந்தனர். அவர்களுக்குள் எந்த விரிசலும் இல்லை. ஆனால் கடந்த சில நாட்களாக, சித்தப்பா ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டார்.

அவர் ஒரு பிரச்சினையில் சிக்கியிருப்பதை என் தந்தையும் அறிவார். ஆனால் இப்படி ஏதாவது நடக்கும் என்று நாங்கள் யாரும் நினைத்ததில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதியின் விசாரணைக்குப் பிறகு, உடல் பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிர் பிழைத்த 13 வயது மகள் தற்போது பேராதனை போதனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு ஆண் நண்பருடன் சென்ற தாய்!!

2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தில் 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம் தற்போது பேசப்பட்டு வருகிறது.

அதாவது பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பருடன் பைக்கில் செல்வதற்காக குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

பின்னர், குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்த பேருந்து நிலைய ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் அப்பெண்ணையும், ஆண் நண்பரையும் சில மணி நேரங்களில் கண்டுபிடித்தனர்.

பின்னர், பெண்ணின் கணவரை தொடர்பு கொண்ட பொலிஸார் குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்தனர்.

தமிழகத்தை உலுக்கிய இளைஞனின் ஆணவப் படுகொலை!!

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐ.டி ஊழியர் கவின்குமாரின் படுகொலைக்கு நடிகர்,எம்.பி கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த கவின்குமார் என்ற ஐ.டி ஊழியர், காதல் விவகாரத்தில் பாளையங்கோட்டையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, சுர்ஜித் என்ற இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். மேலும், கவின்குமாரின் உறவினர்கள் சுர்ஜித்தின் பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் இச்சம்பவம் தொடர்பில் தனது கண்டன பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர், “பாளையங்கோட்டையில் கவின் செல்வகணேஷ் எனும் 27 வயது ஐ.டி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடும் குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கவினை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதிய வன்கொடுமை எனும் சமூக இழிவிற்கு எதிராக அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும். சாதிதான் நம்முடைய முதல் எதிரி என்பதை உணர வேண்டும். முற்றுப்புள்ளி எட்டும் வரை போராட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

வயலில் கிடைத்த வைரக்கல்லால் ஒரே நாளில் வாழ்க்கை மாற்றம் : பெண் விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

வயலில் கிடைத்த வைரக்கல்லால் பெண் விவசாயி ஒருவர் ஒரே நாளில் அதிர்ஷ்டசாலியாக மாறியுள்ளார். இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசம், கர்நூல் மாவட்டம் துக்கலி அடுத்த ஜிகவா சிந்தில் கொண்டா பகுதியில் சில தினங்களாகவே மழை பெய்தது.

இந்நிலையில். அப்பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு மின்னுகின்ற வகையில் ஒரு பொருள் கிடைத்தது.

அதனை கையில் எடுத்து பார்த்த போது வைரம் என தெரிய வந்தது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பலரும் அதனை வாங்குவதற்கு முன்வந்தனர்.

அப்போது அந்த பெண் விவசாயி வைரத்திற்கு ரூ.18 லட்சம் விலை நிர்ணயம் செய்தார். ஆனால், வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து ரூ. 8 லட்சத்துக்கு வைரக்கல்லை வாங்க பேரம் பேசினர்.

இந்நிலையில், சென்னம்பள்ளியை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் ரூ. 13.50 லட்சத்திற்கு வைரக்கல்லை வாங்கி சென்றார். அங்கு சுற்றியுள்ள பகுதியில் வைரம் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இலங்கையில் சாரதிகளுக்கு கடுமையாக்கப்படும் சட்டம்!!

ஆசன பட்டி சட்டத்தை எதிர்காலத்தில் கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட போக்குவரத்துக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், சட்டத்தை பின்பற்றாத பஸ்களின் உரிமங்களை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஆண்டுதோறும் 2,350 பேர் விபத்துகளில் உயிரிழப்பதாகவும், 6,000 பேர் படுகாயமடைவதாகவும் தெரிவித்த அமைச்சர், 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கான வீதி பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

2011 முதல் அமுலில் உள்ள ஆசன பட்டி சட்டம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதாகவும், பஸ்களில் ஆசன பட்டி இருந்தும் பயணிகள் அதனை பயன்படுத்துவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தை மதிக்காத பஸ்களின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.