29ம் திகதி இலங்கையை தாக்கவுள்ள புயல் : வெளியான எச்சரிக்கை!!

இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை மறுதினம் (29.11.2025) ஒரு புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, தற்பொழுது சியாம்பலாண்டுவவுக்கு அண்மையில் மையம் கொண்டு காணப்படுகின்றது.

இது நாளை மறுதினம்(29.11.2025) ஒரு புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதனை நாளையே உறுதிப்படுத்த முடியும்.

மேலும் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 01.12.2025 அன்று இலங்கையை விட்டு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாடு முழுவதும் கனமழை தொடக்கம் மிக கனமழை பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இன்று மிக கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்துக்கு கன மழை நாளை மறுதினம் வரை(29.11.2025) தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்திற்கு இன்று காற்று மணிக்கு 40-60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இன்று மாலை அல்லது இரவு மழை கிடைக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதிலும் பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. ஆறுகள் அவற்றின் கொள்ளளவைத் தாண்டி பாய்கின்றன. பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் மண்சரிவுகளும் இடம்பெறுகின்றன.

இந்த நிலைமை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தின் வெள்ள நிலைமைகளுக்கு காரணமாக அமைகின்ற மல்வத்து ஓயா அதிக கொள்ளளவோடு பாய்கின்றது.

ஆகவே வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்வரும் 30.11.2025 வரை அவதானமாக இருப்பது அவசியம்.

கடந்த 24 மணித்தியாலத்தில் ( 26.11.2025 காலை 10. 00 மணி முதல் இன்று 27.11.2025 காலை 10.00 மணி வரை) வடக்கு(யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தவிர்த்து)மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மிகக்கனமழை கிடைத்துள்ளது.

நாட்டிலேயே அதிகமாக மட்டக்களப்பு உறுகாமம் பகுதியில் 302 மி.மீ. மழை கிடைத்துள்ளது.

ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள கடல் நீரேரிகளின் கொள்ளளவு நிறைவு பெற்று அவற்றினுடைய முகத்துவாரப் பகுதிகள் வெட்டிவிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மிக கன மழையும் மிக வேகமான காற்று வீசுகையும் எதிர்வரும் 30.11.2025 வரை நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே மக்கள் இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டு போதுமான முன்னெச்சரிக்கைகள் மற்றும் தயார்படுத்தல்களை மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

12 மணி நேரத்தில் சூறாவளியாக வலுவடையவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் : மக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்!!

 

வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அறிவிப்புகளுக்கு கவனம் செலுத்துமாறு இன்று நண்பகல் நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு சூறாவளி புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை மற்றும் காற்று வீசும் சாத்தியம் உள்ளதாகவும் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மதியம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இலங்கையின் தென்கிழக்கில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கே 120 கி.மீ தொலைவில், அட்சரேகை 6.7°வடக்கு மற்றும் தீர்க்கரேகை 82.1°கி தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு சூறாவளி புயலாக வலுவடைந்து வடமேற்கு நோக்கி வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.

இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு நாட்டில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மேலும் அறிவிப்புகளுக்கு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 10 மி.மீ வரை மழை பெய்யும்.

சபரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும், பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான கனமழை மற்றும் 150 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

இலங்கையின் பிற பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். தீவின் பல பகுதிகளில் மணிக்கு (60-70) கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும், சில நேரங்களில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம்!!

நாவலப்பிட்டி, கதிர்லேன் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் நேற்று புதன்கிழமை (26.11.2025) பிற்பகல் வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

வீட்டின் பின்புறத்தில் இருந்த பெரிய மதில் சுவரே திடீரென நேரடியாக வீட்டு கூரையின் மீது விழுந்துள்ளது. இதனால் படுக்கையறை முற்றிலும் சேதமடைந்துள்ளது. மதில்சுவர் இடிந்து விழுந்தமையினால் வீட்டின் பிற சுவர்களும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் இடம்பெறவில்லை. ஒருவர் லேசான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, வீட்டு உபகரணங்கள் மற்றும் உடமைகள் சேதமடைந்துள்ளன.

கிழக்கில் வெள்ள நீரில் மூழ்கிய கார் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!!

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்று தடம்புரண்டு வெள்ள நீர் நிரம்பிய கால்வாய் ஒன்றில் மூழ்கியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இதன் போதுஅனர்த்த முகாமைத்துவத்தில் ஈடுபடும் குழுவினர் சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த செயலணி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட மீட்புப்பணியின் போது கால்வாயில் வீழ்ந்த கார் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் காரில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், குறித்த மூவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை : பாதிப்பு குறித்து தற்போது வரையான நிலைவரம்!!

நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (26) முதல் கடும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை தொடர்கின்றது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.

இன்று வியாழக்கிழமை (27) பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகையில், இதுவரை 170 மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 26 பேர் வரை அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட தற்போதைய அறிக்கையின்படி, நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிப்படைந்த மாவட்டங்கள் : 17
பாதிப்படைந்த பிரதேச செயலகப் பிரிவுகள் : 79
பாதிப்படைந்த குடும்பங்கள் : 1,158
பாதிப்படைந்த நபர்கள் : 4,008
குறிப்பாக பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப் பாதிப்புகள் காரணமாக,

உயிரிழப்புகள் : 18 (அனைத்தும் பதுளையில்)
காயமடைந்தோர் : 10
காணாமல் போனோர் தொடர்பான தகவல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
சீரற்ற வானிலை காரணமாக வீடுகளும் பெருமளவு சேதமடைந்துள்ளன:

முழுமையாக சேதமடைந்த வீடுகள் : 3
பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் : 381
பெரும்பாலான குடும்பங்கள் தற்காலிக பாதுகாப்பு முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்:

பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளோர் : 131
உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளோர் : 472
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், வானிலை மேலும் மோசமடையும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முப்படையினர் மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொள்ளுப்பிட்டியில் பேரூந்து – கார் மோதி விபத்து!!

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. விபத்தில் காரில் பயணித்த ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேரூந்து : பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!!

மொனராகலை – கொழும்பு பிரதான வீதியில் பஸ் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பிரதேசவாசிகள் இணைந்து பஸ்ஸில் இருந்த பயணிகள் பிரதேசவாசிகளின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தம் இன்று வியாழக்கிழமை (27.11.2025) காலை இடம்பெற்றுள்ளது. சுமார் 23 பயணிகள் பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்த அனர்த்தத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

கொழும்பில் பெண்ணின் கொடூர செயல் : நாயை கொலை செய்தமையால் நேர்ந்த கதி!!

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிபிட்டியவில் தெருநாய் ஒன்றை காரால் மோதி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த பெண் எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 14ஆம் திகதி நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரான பெண் வேண்டுமென்று தனது காரில் தெருநாயை மோதிக் கொலை செய்தமையை சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் செல்லப்பிராணியாக இருந்த பிளாக்கி என அன்புடன் அழைக்கப்பட்ட நாயின் மரணம் குறித்து, உள்ளூர்வாசிகள் கொட்டாவ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். அந்தப் முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதுவொரு சாதாரண விபத்தாக இல்லாமல், திட்டமிட்ட வகையில் ஒரு உயிரைப் பறித்ததாக கருதியதால் சந்தேக நபரான பெண்ணை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து, முறைப்பாடு செய்த மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மோசமான வானிலை : இடிந்து விழுந்துள்ள 100 வருட பழைமையான பாலம்!!

தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு இடையிலான எல்லையாக கருதப்படும் பெந்தர பாலம் மோசமான வானிலை காரணமாக இடிந்து விழுந்துள்ளது.

நேற்று (26) இரவு முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1902 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த பாலம் பல நாட்டுப்புற கதைகளுக்கு ஆதாமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து பதிவாகும் மண்சரிவு அனர்த்தம் : கண்டியில் 4 பேர் மாயம்!!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

உடுதும்பர மற்றும் பஹத்த ஹேவாஹெட்ட ஆகிய பகுதிகளிலிருந்தே இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கண்டி மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

முழு இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இயற்கை ஆபத்துகள் குறித்த வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று 08.30 மணியளவில் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை அறிக்கை நாளை இரவு 8.30 மணி வரை செல்லுப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களும் தற்போது கடுமையான மழை காரணமாக அதிக ஆபத்தில் உள்ளன.

திடீர் வெள்ளம், மண் சரிவுகள், ஆறுகள் நிரம்பி வழிகின்றன, பலத்த காற்று மற்றும் ஆபத்தான சூழ்நிலைகள் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கில் வெள்ள நீரில் மூழ்கிய கார் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!!

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்று தடம்புரண்டு வெள்ள நீர் நிரம்பிய கால்வாய் ஒன்றில் மூழ்கியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இதன் போதுஅனர்த்த முகாமைத்துவத்தில் ஈடுபடும் குழுவினர் சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த செயலணி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட மீட்புப்பணியின் போது கால்வாயில் வீழ்ந்த கார் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் காரில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், குறித்த மூவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்களுக்கான அறிவிப்பு!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பலத்த மழை வீழ்ச்சி தொடர்பில் முழு இலங்கைக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வெள்ள நிலைமை தொடர்பிலும் தொடர்ச்சியாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழலிலேயே கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என தெரியவருகிறது.

மேலும், “நிலவும் வானிலை காரணமாக விமான அட்டவணைகள் அல்லது தரைவழி நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்று அதிகாரியொருவர் கூறியதாக மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடையும் சாத்தியம் : முழு நாட்டிற்கும் சிவப்பு எச்சரிக்கை!!

இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கிச் சாய்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணித்தியாலங்களுக்குள் ஆழமான தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது.

கனமழை மற்றும் பலத்த காற்று நிலைமை

இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டில் நிலவும் கனமழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் எதிர்கால எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 200 மி.மீற்றருக்கும் அதிகமான மிக கனமழை பெய்யக்கூடும்,

வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேற்கு மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 150 மி.மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பிற பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது (60-70) கி.மீற்றர் வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும். கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் விபத்து அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இலங்கையில் மேலும் மோசமடையும் காலநிலை : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை : பலரை தேடும் பணி தீவிரம்!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த 10 நாட்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 17 முதல் இன்று (27) வரை, 17 மாவட்டங்கள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளன,

மேலும் 79 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 பேர் இன்னும் காணவில்லை என்றும் மையம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் 18 இறப்பு

இதே நேரத்தில், பேரிடர் காரணமாக 10 பேர் காயமடைந்துள்ளனர்.மேலும் 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் 5 முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பேரிடர் காரணமாக 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தற்போது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் மேலும் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் 18 இறப்புகளும், சபரகமுவ மாகாணத்தில் 7 இறப்புகளும், மத்திய மாகாணத்தில் 4 இறப்புகளும், தெற்கு மாகாணம் மற்றும் வடமேற்கு மாகாணத்தில் தலா ஒரு மரணமும் பதிவாகியுள்ளன.

பூட்டிய வீட்டிற்குள் வெட்டுகாயங்களுடன் பெண்ணின் சடலம் : மர்ம மரணத்தால் பரபரப்பு!!

பதுளை – கந்தேகெதர – கெடவல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் வீடொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் மூடப்பட்டுள்ளதாக, நேற்று (26) காலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த வீட்டை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். உயிரிழந்தவர் ஹாலிஎல – கெடவல பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும், அவரது கழுத்தில் வெட்டுக் காயங்கள் இருந்ததால், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்.

சந்தேக நபர்களைக் கைது செய்ய கந்தேகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.