
‘மக்களுடன் ஊராட்சி’ என்ற உயரிய நோக்கத்திற்காக மக்களுக்கான சேவையை மக்களிடம் சென்று வழங்குவதே இந்த நடமாடும் சேவையின் நோக்கமாகும்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசம் என்பது பரந்து விரிந்தது. எனவே எமது சபைக்கு மக்கள் வருகைதந்து சேவையினை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களை இலகுபடுத்துவதற்காக ‘மக்களுடன் ஊராட்சி’ திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம் என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் ஊடக அறிக்கையில்,

முதற்கட்டமாக கந்தபுரம் வட்டாரத்தில் எதிர்வரும் 28,29 ம் திகதிகளில் நடமாடும் சேவையை நடாத்தவுள்ளோம். எதிர்காலத்தில் ஏனைய வட்டாரங்களுக்கும் இந்த நடமாடும் சேவையினை விஸ்தரிக்கவுள்ளோம்.
விளம்பரப்பலகை கட்டணம், சோலைவரி, ஆதனப்பெயர் மாற்றம் ஆலோசனைகள், எல்லைக்கோட்டு சான்றிதழ் சேவை, வியாபார உரிமம், வியாபார வரி, வியாபார பெயர்ப்பதிவு, வழி அனுமதிப்பத்திர ஆலோசனைகள், கட்டட அனுமதி ஆலோசனைகள், கழிவகற்றல் சேவை, வீதி விளக்கு கோரிக்கைகள், ஆயுர்வேத மருத்துவ சேவை,

நூலக நடமாடும் சேவையும் அங்கத்துவ படிவம் வழங்கலும், முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளல், தலைவர் மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பு, 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் பெறல் உள்ளிட்ட மேலும் பல சேவைகளை இதன்போது பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் 28, 29ம் திகதிகளில் கந்தபுரம் வட்டாரத்திற்குட்பட்ட தோணிக்கல் RDS மண்டபத்தில் காலை 9 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரையில் நடைபெறும் இந்த சேவையில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வட்டாரத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




































