நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
மின்தடை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் செயலியை பயன்படுத்தி முறைப்பாடளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இவ்வாறான பகுதிகளின் சில இடங்களில் மின்தடை பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
அறிவிப்பு
இந்த நிலையில் நாடு முழுவதும் மின் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இவ்வாறான சூழலிலேயே இலங்கை மின்சார சபையின் தொலைபேசி பயன்படுத்தி சிக்கல்களைப் புகாரளிக்குமாறு பொது மக்களை கேட்டுக்கொள்வதாக இலங்கை மின்சார சபையின் பொது கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
புத்தளம், சிலாபம், இனிகொடவெல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கவனக்குறைவாக செலுத்தப்பட்ட லொறி ஒன்று ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் லொறியில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் லொறியின் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ (Red Alert) நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (25) பிற்பகல் 03.45 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கையானது இன்று (26) பிற்பகல் 03.45 மணி வரை செல்லுபடியாகும்.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவான வளிமண்டலத் தளம்பல் நிலையானது, நேற்று (25) காலையளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்துள்ளது.
இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்.
குறிப்பாக கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் சில இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இலங்கைக்கு தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மற்றும் காற்று அடுத்த சில நாட்களில் மேலும் தீவிரமடையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ வரையான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
ஏனைய பிரதேசங்களில் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மீனவர்கள் மற்றும் கடலில் பயணம் செய்வோர் நாளை (நவம்பர் 26) முதல் மறு அறிவித்தல் வரும் வரை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நவம்பர் 25 முதல் 29 வரை நிலவவுள்ள இந்த மோசமான வானிலை குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மொரட்டுவ பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் சட்டவிரோத பணத்தில் வீடு மற்றும் சொத்துக்களை கொள்வனவு செய்தமை குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்களைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவ்வாறு சம்பாதித்த பணத்தில் அந்த நபர் தனது மனைவியின் பெயரில் பாணந்துறை பகுதியில் 10 பேர்ச்சஸ் நிலத்தை வாங்கி அதில் இரண்டு மாடி வீடு கட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமாகப் பெற்ற வீடு மற்றும் சொத்துக்களை வாங்கிப் பயன்படுத்தியதற்காக குறித்த நபரின் மனைவி கடந்த 21 ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் மறுநாள் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் முதல் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (26.11.2025) இந்த விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 310,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
குருநாகல் மாவட்டத்தின் அலவ்வ ராகுல மகா வித்தியாலத்தில் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சை நிலையத்திற்கு பரீட்சை எழுத சென்ற மாணவி தற்செயலாக வேறொரு ரயிலில் ஏறியதால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த மாணவியை, பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்து செயற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகி உள்ளது.
முதல் முறையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 19 வயது மாணவி, அலவ்வ செல்லும் நோக்கத்துடன் மீரிகம ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் ஏறியுள்ளார்.
எனினும், சனிக்கிழமை காலை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியதால், ரயில் அலவ்வ ரயில் நிலையத்தில் நிற்காமல் பயணித்துள்ளது.
இதனையடுத்து தவறான ரயிலில் ஏறியமை குறித்து மாணவி அதிர்ச்சி அடைந்து அழுதுள்ளார்.
இதன் போது குறித்த ரயிலில் பயணித்த விரிவுரையாளர் சுரஞ்சித் ரத்னபால, மாணவியை சமாதானம் செய்ததுடன், பரீட்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
ரயில் சிக்னலில் நிறுத்தப்படும் போது இறங்கி முச்சக்கர வண்டியில் பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறும் அதற்கான நிதியுதவி தருவதாக ரயிலில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதாபிமான செயல்
எனினும் அங்கிருந்து வயல்வெளிகளால் சென்று முச்சக்கர வண்டியை பிடிக்க கால அவகாசம் எடுக்கும் என்பதால், மாணவி மேலும் கலக்கமடைந்துள்ளார்.
விரைந்து செயற்பட்ட விரிவுரையாளர் சுரஞ்சித், ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் தனது பல்கலைக்கழக நண்பரான சஜித் விக்ரமசிங்கவுடன் தொடர்பு கொண்டு நிலைமையை தெளிவுபடுத்தியுள்ளார்.
மனிதாபிமானத்தை மனதில் கொண்டு தனது கடமையை மீறி செயல்பட்ட சஜித் விக்ரமசிங்க, உடனடியாக பொல்கஹவெல நிலைய அதிபரை அழைத்து கண்டியிலிருந்து கொழும்புக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை பொல்கஹவெலவில் நிறுத்த ஏற்பாடு செய்தார்.
அதற்கமைய, மாணவி சென்ற ரயில் பொல்கஹவெலவை அடைந்தவுடன், நிறுத்தப்பட்டிருந்த மற்ற ரயிலில் அவரை ஏற்றி அலவ்வவிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
குறித்த மாணவி அலவ்வவில் இறங்கியதும் முச்சக்கர வண்டியின் மூலம் உரிய பரீட்சை நிலையத்திற்கு செல்வதற்கான ஒழுங்குகளை, ரயில்வே பாதுகாப்பு அதிகாரி நிமல் ரூபசிங்க மேற்கொண்டிருந்தார்.
காதலன் மரணமடைந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில், அதனை உண்மை செய்தி என்று நம்பி கதறியழுது கொண்டிருந்த பள்ளி மாணவி, மன அழுத்தத்தில் கிராம தலைவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த தீபான்ஷு மற்றும் 15 வயது ஜோயா கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
குடும்பங்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் உறவைத் தொடர்ந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தீபான்ஷு தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.
இந்தச் செய்தி ஜோயாவுக்கு சென்ற போதும், அவர் உயிரிழந்துவிட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டது.
காதலன் மரணமடைந்தார் என்ற நம்பிக்கையில் அதிர்ச்சி அடைந்த ஜோயா, தாங்க முடியாத துயரத்தில் பெண் கிராமத் தலைவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ஆனால் உண்மையில் தீபான்ஷு உயிருடன் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது பின்னர் தெரியவந்தது. தவறான தகவல் காரணமாக சிறுமி உயிரிழந்த இந்த நிகழ்வு, மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு சமூகத்தினர் மத்தியில் பதற்றம் அதிகரித்த நிலையில், நிலைமை கட்டுக்குள் வைக்க கூடுதல் பாதுகாப்பு படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.
சட்டீஸ்கர் மாநிலத்தின் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில் உள்ள ஹான்ஸ் வாஹினி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், LKG பயிலும் 4 வயது மாணவன் வீட்டுப்பாடம் முடிக்காமல் பள்ளிக்கு வந்துள்ளார்.
அந்த பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியைகளான காஜல் சாஹு மற்றும் அனுராதா தேவாங்கன், மாணவரை மரத்தில் கட்டி தொங்க விட்டுள்ளனர்.
4 வயது மாணவரின் சட்டையில் கயிற்றை கட்டி அவரை மரத்தில் தொங்க விட்ட கொடுஞ்செயலை இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த வீடியோ கல்வித்துறையின் கவனத்துக்கு சென்றுள்ள நிலையில், உடனடியாக அதிகாரி ஒருவர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
ஆசிரியரின் நடவடிக்கை தவறு என ஒப்புக்கொண்ட அவர், மாவட்ட கல்வி அதிகாரி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வார் என தெரிவித்துள்ளார்.
4 வயது மாணவர் நல்ல உடல்நிலையில் இருந்தாலும், இது குறித்து அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளனர்.
வாகன இறக்குமதிகள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில், 2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிகள் சாதாரண நிலைக்கு திரும்பும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த வருட இறுதியில் 582 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 250,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் ஒரு திருமண வீட்டில் எதிர்பாராத ஒரு விபத்து நிகழ்ந்ததில் மணமகனுக்கும் மணமகளுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மணமக்கள் திருமணம் தொடர்பான சடங்குகளில் பங்கேற்றிருந்த நிலையில், கையில் பல வண்ணங்களுடைய பலூன்களுடன் மணமகன் நடந்துவர, அவர் அருகே மணமகள் வந்துகொண்டிருந்திருக்கிறார்.
மணமகன் குஷாக்ரா, தன் கையில் ஒரு கொத்து பலூன்களை வைத்திருந்திருக்கிறார். எதிர்பாராதவிதமாக, திடீரென அந்த பலூன்கள் வெடித்துள்ளன.
பலூன்கள் வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகளான டான்யாவின் முகம் மற்றும் முதுகில் தீக்காயங்கள் ஏற்பட்டதுடன், அவரது ஒருபக்க தலைமுடியும் கருகியுள்ளது.
விடயம் என்னவென்றால், அவர்கள் வைத்திருந்தது ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள். ஹைட்ரஜன் எளிதில் தீப்பிடிக்கும் வாயு ஆகும். யாரோ ஒருவர் மணமக்களுக்குப் பின்னால் பட்டாசுகள் கொளுத்திக்கொண்டிருக்க, தீப்பொறி பட்டு பலூன்கள் வெடித்துள்ளன.
தங்கள் வாழ்வின் மறக்கமுடியாத நாளில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும், அது தங்கள் திருமணத்துக்கு இடையூறாக வரக்கூடாது என முடிவெடுத்த தம்பதியர் திருமணம் செய்துகொண்டு பிறகுதான் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகத்தில் இடுகை ஒன்றை வெளியிட்டுள்ள மணமகள் டான்யா, தீப்பற்றிய முடியை வெட்டி, காயங்களை மறைக்க அடுக்கடுக்காக மேக் அப் போட்டுக்கொண்டுதான் திருமணம் செய்துகொண்டோம் என்கிறார்.
இந்த சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்பதற்காகவே அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்வதாகவும் டான்யா தெரிவித்துள்ளார்.
விமானத்தில் தேரரின் கையில் இருந்து 4 லட்சத்து 93 ஆயிரத்து 850 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை திருடிய இரண்டு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, பேராதெனியாவில் உள்ள விகாரையிலுள்ள தேரர் நேற்று (25) காலை 10.05 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் EY-392 விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
குறித்த விமானம் கட்டுநாயக்க நோக்கி பறந்து கொண்டிருந்தபோது, அவர் கழிப்பறைக்கு சென்றுள்ளார்.
இதன்போது அதே விமானத்தில் இருந்த இரண்டு சீன பிரஜைகள் அவரது இருக்கையை நெருங்கி, பையிலிருந்து பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளனர்.
இதனைடுத்து தேரர் விமான அதிகாரிகளிடம் முறையிட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இரண்டு சீன பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் கொக்கரெல்ல மேல் வல்போல வீதியில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞர் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொக்கரெல்ல மேல் வல்போல வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த 33 வயதுடைய இளைஞர் மீது தென்னை மரம் விழுந்த நிலையில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
காலி – பலப்பிட்டிய கல்வி பிரிவுக்குட்பட்ட கந்தேகொடை மகா வித்தியாலத்தில் உள்ள பாதுகாப்பற்ற வடிக்கானுக்குள் விழுந்ததில் மாணவன் ஒருவனின் சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
வதுகெதர, குருந்துவத்தை பகுதியைச் சேர்ந்த , கந்தேகொடை மகா வித்தியாலத்தின் 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே இச் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
குறித்த மாணவன் பாடசாலையில் உள்ள பாதுகாப்பற்ற வடிக்கானுக்குள் கடந்த மாதம் 27 ஆம் திகதியன்று விழுந்து, நோய்வாய்ப்பட்டதில் பலபிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் , அறுவை சிகிச்சை மூலம் மாணவனின் சிறுநீரகத்தை அகற்ற வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
களுத்துறை, புலத்சிங்கள பிரதேசத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்படும் டிக்டோக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கோபாவக்க பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புலத்சிங்கள, அதுர பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, சமூக ஊடகமான டிக்டொக் மூலம் சந்தேக நபருடன் நட்பை ஏற்படுத்தியதுடன் அது காதல் உறவாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் தெல்மெல்ல பகுதியில் உள்ள குளியல் தொட்டிக்கு இருவரும் சென்றுள்ளனர். இதன் போது காதலன் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காதலியான சிறுமியை, சந்தேக நபரான காதலன் தவிர்த்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமி செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.