காதலனின் உயிரை காப்பாற்றிய காதலிக்கு நேர்ந்த பரிதாபம்!!

மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது மைல்கல் பகுதியில் உள்ள வியன்னா கால்வாயில் தவறி விழுந்த தனது காதலனை மீட்கச் சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கால்வாயில் அதிக நீர் ஓட்டம் இருந்ததால் அவர்கள் கால்வாய் கரையில் நடந்து சென்றதாகவும், இதன் போது இளைஞன் தவறி விழுந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நேரத்தில் காதலி அவரைக் காப்பாற்ற கை நீட்டியதால், இருவரும் கால்வாயில் விழுந்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற மஹியங்கனை பொலிஸ் பயிற்சி பாடசாலையை சேர்ந்த ஒரு அதிகாரியும் அவரது மனைவியும் உடனடியாக கால்வாயில் குதித்து இளைஞனை காப்பாற்றினர்.

ஆனால் அவர்களால் அந்த இளம் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 26 வயது மாணவியே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நான் திருமணம் செய்துக் கொள்ளவிருந்த காதலியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். என்னை காப்பாற்ற முயற்சித்த போதே அவர் இவ்வாறு காணாமல் போயுள்ளார் என உயிர் பிழைத்த காதலன் தெரிவித்துள்ளார்.

யாழில் விளையாட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!

யாழ்ப்பாணம் – நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகழக மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த நபர் மீது கோல் கம்பம் வீழ்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 29 வயதுடை யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்பவரே உயிரிழந்துள்ளார். நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக மைதானத்தில் நேற்று (20.07.2025) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பில் சிறுமியை கடத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

கொழும்பின் புறநகர் பகுதியில் 15 வயது சிறுமியை அவரது பெற்றோரின் காவலில் இருந்து கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞர் ஒருவர் கொஸ்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் வென்னப்புவ, நைனமடம, வெல்லமங்கராய பகுதியை சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். லுனுவில, கிரிமதியனவத்தையில் வசிக்கும் பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி மதியம் தனது மகள் வீட்டிலிருந்து காணாமல் போனதாகவும், மேலும் விசாரணையில், மினுவாங்கொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேக நபருடன் இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும் சிறுமியின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் தனது கணவருடன் அங்கு சென்று தனது மகளையும் சந்தேக நபரையும் அழைத்து வந்ததாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபருடன் தனக்கு காதல் உறவு இருந்ததாகவும், தனது காதலனின் வேண்டுகோளின் பேரில் தான் அவருடன் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தன்னை அழைத்துச் சென்ற காதலன் மூன்று நாட்களாக குடும்ப உறவில் ஈடுபட்டதாக சிறுமி பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாயாரின் பாதுகாப்பின் கீழ் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதலன் செய்த கொடூரம்!!

தமிழகத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இளைஞர் தனது காதலியை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளம் பெண் சௌந்தர்யா. இவர் காஞ்சிபுரத்தில் அறையெடுத்து வேலை பார்த்து வந்தார். இவரும் தினேஷ் என்ற இளைஞரும் காதலித்த நிலையில், இருவரும் தங்கள் வீட்டில் கூறி சம்மதம் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் தினேஷுக்கும், சௌந்தர்யா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் சௌந்தர்யாவை சந்தித்த தினேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த சௌந்தர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அங்கிருந்து தினேஷ் தப்பியோடிய நிலையில், பொலிஸார் சௌந்தர்யாவின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். இதையடுத்து தினேஷை வலைவீசி தேடிவந்த நிலையில், அவரே நாகையில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஆண் நண்பர் ஒருவருடன் சௌந்தர்யா செல்போனில் பேசி வந்ததாகவும், அதனை அவர் கண்டித்தும் நிறுத்தவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

அதன் பின்னர் இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் சௌந்தர்யாவை கொலை செய்ததாக கூறியிருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்ட சகோதரர்கள் இருவர் : அசர வைக்கும் காரணம்!!

இந்திய மாகாணம் இமாச்சல் பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை ஊரைக்கூட்டி மேளதாளங்கள் முழங்க திருமணம் செய்துள்ளனர்.

இப்படியான வழக்கம் இமாச்சல் பிரதேசத்தின் ஹட்டி பூர்வகுடி மக்களிடையே தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. உல்ளூரில் இந்த வழக்கத்தை ஜோதிதரா என அழைக்கிறார்கள்.

சிராமௌர் மாவட்டத்தின் ஷில்லை கிராமத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மூன்று நாள் கொண்டாட்டம் ஜூலை 12 ஆம் திகதி தொடங்கி அவர்களின் பாரம்பரிய முறைப்படி நடந்து முடிந்துள்ளது.

ஒரு பெண் பல ஆண்களை, பொதுவாக சகோதரர்களை மணக்கும் இந்த வழக்கம் ஒரு காலத்தில் ஹட்டிகளிடையே, குறிப்பாக சிராமௌர் மாவட்டத்தில் பரவலாக இருந்துள்ளது.

தற்போது அரிதாக இருந்தாலும், ஜோதிதரா நடைமுறை இமாச்சலப் பிரதேசத்தின் வருவாய் சட்டங்களின் கீழ் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலின பூர்வகுடியினராக அறிவிக்கப்பட்ட ஹட்டி சமூகத்தினர், இமாச்சலப் பிரதேசம்-உத்தரகாண்ட் எல்லையில் உள்ள டிரான்ஸ்-கிரி பகுதியில் வசிக்கின்றனர்.

கடந்த ஆறு ஆண்டுகளில், பதானா கிராமத்தில் மட்டும் இதுபோன்ற ஐந்து பலதார திருமணங்கள் நடந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இந்த பாரம்பரியம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகவே ஹட்டி சமூக மூத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மணமகள் சுனிதா சவுகான் மற்றும் மணமகன்கள் பிரதீப் மற்றும் கபில் நேகி ஆகியோர் இந்த முடிவு வற்புறுத்தலின்றி பரஸ்பரம் புரிதலுடன் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கத்தை மதிப்பதாக கூறும் குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா, இந்த பாரம்பரியத்தை அறிந்திருந்தேன், எந்த அழுத்தமும் இல்லாமல் எனது முடிவை எடுத்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜோதிதரா என்பது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஹட்டி பூர்வகுடியினரிடையே நடைமுறையில் உள்ள ஒரு பாரம்பரிய பலதார திருமண வடிவமாகும், இதில் ஒரு பெண் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சகோதரர்களை மணக்கிறார்.

சகோதரர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பது, கூட்டுக் குடும்ப அமைப்புகளைப் பாதுகாப்பது மற்றும் தொலைதூர, மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் பாதுகாப்பான மற்றும் நிலையான சூழலை உறுதி செய்வது ஆகியவை இந்த பலதார வழக்கத்திற்கு காரணங்களாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

தனித்துவமான இந்த பலதார மண பாரம்பரியத்தில், திருமணத்தை ஜஜ்தா என்று அழைக்கப்படுகிறது, இது மணமகள் மணமகனின் கிராமத்திற்கு ஊர்வலமாக வருவதோடு தொடங்குகிறது.

மணமகனின் வீட்டில் சீஞ்ச் என்று அழைக்கப்படும் ஒரு சடங்கு செய்யப்படுகிறது, அங்கு மந்திரங்களை ஓதி புனித நீரை தெளிப்பார்கள். தம்பதியருக்கு வெல்லம் வழங்கப்படுவதோடு விழா முடிகிறது.

ஜேர்மனியில் 10 அடி பறந்து வீட்டின் கூரையில் சொருகிய கார்!!

ஜேர்மனியில் கார் ஒன்று வீட்டின் கூரையில் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர். வடமேற்கு ஜேர்மனியின் போஹ்மேட் நகரில் கார் ஒன்று புயல்வேகத்தில் பயணித்தது.

சீரற்ற நிலையில் சென்ற கார், நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது மோதியதில் 10 அடி உயரத்திற்கு பறந்து, அங்குள்ள வீட்டின் கூரை மீது சொருகியது.

இந்த விபத்தில் கார் இடித்ததில் 7 வயது சிறுவன் படுகாயமடைந்தார். மேலும் அடையாளம் தெரியாத 42 வயது நபரும், அவரது மனைவியும் படுகாயமடைந்தனர்.

அத்துடன் காரின் உள்ளே இருந்த 11, 12 மற்றும் 13 வயது சிறார்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அவசரகால சேவைகளில் தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்பு ஹெலிகொப்டர்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.

காரை ஒரு கிரேன் மூலம் கூரையில் இருந்து அகற்றி, பொலிசார் அதனை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

 

மீண்டும் உயரும் தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21.07) சற்று உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,013,847 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,770 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 286,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,790 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 262,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,300 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுணின் விலை 250,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

ஓடுபாதையை விட்டு விலகிய எயார் இந்தியா விமானம் : அச்சத்தில் பயணிகள்!!

இந்தியா கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அசம்பாவிதம் எதுவுமின்றி விமானம் தரை இறங்கியது.

இன்று காலை கொச்சியிலிருந்து வந்த ஏர் இந்தியா A320, AI-2744 விமானம், மும்பை விமான நிலையத்தில் கனமழை காரணமாக ஓடுபாதையில் ஒரு பயணத்தை மேற்கொண்டது. விமானம் ஓடுபாதை 27 இல் இருந்து விலகிச் சென்றது,

மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில் , கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வந்தார். எனினும் ஓடுபாதையில் சிறிய சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, எயார் இந்தியா விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது, விமானம் தரையிறங்கும் போது, கனமழை காரணமாக ஓடுபாதையில் இருந்து விலகியது. எனினும் விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார்.

அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். விமானத்தில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சிறிய தாமதங்களைத் தவிர வேறு எந்த விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அதேவேளை கடந்த சில தினங்களாக மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில், விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால், பயணிகள் அச்சமடைந்ததாகவும் இந்திய ஊட்ச்கங்கள் தெரிவித்துள்ளன.

100 வருடத்திற்கு ஒருமுறை நிகழும் முழு சூரிய கிரகணம் ; இருளில் மூழ்கவுள்ள நாடுகள்……!!

100 வருடத்திற்கு ஒருமுறை நிகழும் ஒரு அரிதான முழு சூரிய கிரகணம் 2027ஒகஸ்ட் 2, ஆம் திகதி அன்று, நிகழ உள்ள நிலையில் இந்த சூரிய கிரகணத்தால் ப நாடுகள் 23 நிமிடங்கள் இருளில் மூழ்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

2027 ஆகஸ்ட் 2-ம் தேதி ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் 6 நிமிடங்கள் 23 வினாடிகள் வரை நீடிக்கும் முழு சூரிய கிரகணம், இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தெற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு

தெற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளை ஆறு நிமிடங்கள் 23 வினாடிகள் வரை இருளில் மூழ்கடிக்கும்.

100 வருடத்திற்கு ஒருமுறை நிகழும் இந்த கிரகணம், 1991 – 2114 ஆண்டுகளுக்கு இடையில் நிலப்பரப்பில் இருந்து பார்க்கக்கூடிய மிக நீண்ட முழு சூரிய கிரகணமாகும். பொதுவாகவே முழு சூரிய கிரகணங்கள் கண்கவர்ந்தவைதான்.

ஆனால், 2027 ஆகஸ்ட் நிகழ்வு அதன் அசாதாரண நீண்ட நேரம் காரணமாகத் தனித்து நிற்கும். இந்த நீண்ட இருண்ட நேரம், இந்த கிரகணப் பாதையில் இருக்குறவர்களுக்கு, ஒரு அரிய வானியல் அவதானிப்புக்கும், மறக்க முடியாத அனுபவத்திற்கும் வழிவகுக்கும்.

அதேவேளை 2027 ஆகஸ்ட் 2-ம் தேதி, பூமி சூரியனில் இருந்து மிகத் தொலைவில் உள்ள அப்ஹீலியன் (aphelion) நிலையில இருக்கும். இதனால சூரியன் வானத்தில் சிறிதளவு தெரியும்.

அதே சமயம், சந்திரன் பூமிக்கு மிக அருகில் உள்ள பெரிகீ (perigee) நிலையில இருக்கும். இதனால சந்திரன் பெரியதாக தெரியும். சூரியன் சிறிதாகவும் சந்திரன் பெரியதாகவும் தோன்றுவதால், கிரகணம் நீண்ட நேரம் நீடிக்கிறது.

2027 ஆகஸ்ட் 2 முழு சூரிய கிரகணம் வெறும் ஒரு வானியல் நிகழ்வு மட்டுமல்ல; இது அரிய அனுபவம். அதன் தனித்துவமான கால அளவு மற்றும் அதற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகின்றது.

சிறுவனின் கொலையை மூடி மறைக்க உதவினார்களா பொலிஸார்? நீதி கேட்டு கதறி அழும் தாய்!!

கடந்த மாதம் 30ஆம் திகதி ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிறுவனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உயிரிழந்த என்னுடைய மகனுக்கு சரியானதொரு விசாரணை முன்னெடுக்கப்பட்டு இந்த விபத்துக்கான நீதி கிடைக்க வேண்டும். எனக்கு இந்த இழப்புக்கான பண இழப்பீடுகள் வேண்டாம். சரியான நீதி கிடைக்க வேண்டும்.

பொலிஸார் இந்த விபத்திற்கு சரியான விசாரணை முன்னெடுக்கவில்லை.இந்த விபத்தை ஏற்படுத்திய நபரும் குறித்த வாகனமும் இன்று வெளியில் இருக்கின்றது.

பொலிஸார் எங்களது வாக்குமூலத்தையும் சரியான முறையில் பதிவு செய்யவில்லை. நீதியான விசாரணை முன்னெடுக்கவில்லை. பக்க சார்பாக செயற்படுகின்றனர்.

விபத்து இடம்பெற்ற சிசிடிவி காணொளிகள் வெளியிடப்பட்டதுடன் பொலிஸார் இந்த சிசிடிவி காணொளிகளை கூட பார்வையிட்டு சரியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் இதன் போது குற்றம் சுமத்தினார்.

குறித்த விபத்தானது தாயின் கவனக்குறைவினால் இடம்பெற்றதாகவும் தாங்கள் சரியான முறையில் வாகனத்தை செலுத்தி வந்ததாகவும் கூறி குறித்த விபத்துக்கு காரணம் உயிரிழந்த சிறுவனின் தாயார் தான் என சித்தரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது பிள்ளையின் உயிருக்கு பேருந்து உரிமையாளர் 50 ஆயிரம் ரூபாயும் பேருந்து சாரதி ஒரு லட்சம் ரூபாயும் தங்களுக்கு இழப்பீடாக வழங்கியதாகவும் அதை அவர் ஏற்க மறுத்ததாகவும் தனக்கு சரியான நீதி வேண்டும் எனவும் இதன் போது தெரிவித்தார்.

தனது மகன் பேருந்தின் பின்பக்கம் அடிபட்டு விபத்துக்குள்ளானதாகவும் ஆனால் விசாரணையின் போது பேருந்து முன் பக்கம் விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்ததாகவும்

இறந்த சிறுவனின் உடல் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்னரே சாரதியை பிணையில் விடுவித்ததாகவும் பேருந்தையும் விடுவித்ததாகவும் குறித்த தாயார் கூறியுள்ளார்.

பொலிஸார் உயிரிழந்த சிறுவனின் தாயாரின் வாக்குமூலத்தை கூட சரியான முறையில் பெறவில்லை எனவும் நீதியான விசாரணையை முன்னெடுக்கவில்லை எனவும் சிசிடிவி காணொளிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனவும் இதன் போது குற்றச்சாட்டினர்.

உயிரிழந்த சிறுவனுக்கு சிறந்த விசாரணையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டி தர வேண்டுமென தாயார் இதன் போது கண்ணீர் மல்க ஊடகங்களிடம் வேண்டிக் கொண்டார்.

மேலும், சிறுவனின் கொலையை மூடி மறைக்க பொலிஸார் உதவியதாகவும் சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

280 பேருடன் நடுக்கடலில் பற்றி எரிந்த பயணிகள் கப்பல்!!

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசியில் உள்ள தாலிஸ் தீவில் மனாடோ துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த சுமார் 280 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மனாடோ நகரின் நீர்நிலைகளுக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த கே.எம். பார்சிலோனா 5 என்ற கப்பல், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:00 மணியளவில் தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின் போது கப்பலில் 280 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், மூவர் உயிரிழந்துள்ளதுடன் 150 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தீ விபத்துக்கான காரணம் இது வரை வெளியிடப்படவில்லை.

பேருந்துகள் நேருக்குநேர் மோதி பாரிய விபத்து : 21 பேர் காயம்!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் மோதியதில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கேகாலை – கலிகமுவ பகுதியில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் கேகாலை மற்றும் வரகாபொல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலையில் இருந்து இரத்தினபுரி நோக்கி சென்ற தனியார் பேருந்தும், வேரகொடவிலிருந்து கேகாலை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்துமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளன.

ஐரோப்பா செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்தவருக்கு அதிர்ச்சி!!

போலி பிரித்தானிய கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற ஈரானிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஈரானிய நாட்டவர் 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் நேற்று முன்தினம் இரவு 08.00 மணிக்கு ஜப்பானின் நரிட்டாவுக்குப் புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்திருந்தார்.

அவரது விமான டிக்கெட்டை பரிசோதனை செய்த போது, அவர் வழங்கிய பிரித்தானிய கடவுச்சீட்டில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரது அனைத்து ஆவணங்களுடனும் அவரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவுக்கு அனுப்பியுள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளில் கடவுச்சீட்டு போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி கடவுச்சீட்டிற்காக அவர் உள்ளூர் தரகரிடம் 15,000 அமெரிக்க டொலர்கள் செலுத்தியிருப்பதும் தெரியவந்தது.

அவரது பண பொதியை பரிசோதனை செய்ததில் அவரது உண்மையான ஈரானிய கடவுச்சீட்டு மற்றும் ஜப்பானின் நரிட்டாவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு விமான டிக்கெட் இருப்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட ஈரானிய நாட்டவர் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மாணவன் சசிகுமார் டனுசனால் 18 வருட வடமாகாண சாதனை முறியடிப்பு!!

வடமாகாணத்தில் கடந்த 2007ம் ஆண்டு என்.சிவநேசன் என்பவரால் நிலைநாட்டப்பட்ட 1500 மீற்றர் ஒட்டப்போட்டியை 4நிமிடம் 12.07 செக்கன் நேரத்தில் ஒடி முடித்த சாதனையினை 18 வருடங்களின் பின்னர் நேற்று (20.07) இடம்பெற்ற வட மாகாண மட்ட விளையாட்டு பெருவிழாவின் ஒட்டப் போட்டியில் 4நிமிடம் 10.09 செக்கன் நேரத்தில் ஓடி முடித்து பழைய சாதனையினை முறியடித்து புதிய சாதனையினை வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனுசன் தம்வசமாக்கியுள்ளார்.

மேலும் கடந்த 2024ம் ஆண்டு இடம்பெற்ற வட மாகாண மட்ட விளையாட்டு பெருவிழாவின் போது 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1 நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஒடி முடித்து 11வருட சாதனையினை சமன் செய்த அவர் இம்முறை 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1 நிமிடம் 58.07 செக்கன் நேரத்தில் ஓடி முடித்து தன்னால் நிலைநாட்டப்பட்ட சாதனையினை முறியடித்து புதிய சாதனையினை படைத்துள்ளார்.

வடமாகாண மாகாண விளையாட்டு பெருவிழாவானது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றைய தினம் (20.07)இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் போதே பயிற்சிவிப்பாளர் குமார் நவநீதன் நெறிப்படுத்தலின் கீழ் வவுனியா வீரர் சசிகுமார் டனுசன் இச் சாதனைகளை நிலை நாட்டியுள்ளார்.

வவுனியா மாட்டுத்தொழுவத்தில் அனுமதியின்றி அதிகளவில் வெட்டப்படும் மாடுகள்!!

வவுனியா மாட்டுத்தொழுவத்திற்கு மாநகரசபையினர் முன்னெடுத்திருந்த திடீர் விஜயத்தில் போது அனுமதியின்றி மாடுகள் வெட்டப்படுவது அவதானிக்கப்பட்டிருந்தமையுடன் தொடர்ச்சியாக மாட்டுத்தொழுவம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வருகின்றமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மாடுகள் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்து காணப்படுவதுடன் பால் உற்பத்தியும் அற்று காணப்படுகின்றது. மேலும் மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டத்திற்கு மாட்டிறச்சி ஏற்றுமதி செய்யப்படுவதினால் மாவட்டத்தில் மாட்டிறச்சியின் விலையும் அதிகரித்து காணப்படுன்றது.

அத்துடன் சுகாதாரமான முறையில் மாட்டிறச்சிகள் வெட்டப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் முகமாக மாநகர முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபனால் ஐவர் அடங்கிய சுகாதாரக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

சுகாதாரக் குழு திடீர் விஜயம் ஒன்றினை முன்னெடுத்து மாட்டுத்தொழுவத்திற்கு சென்றிருந்தனர். இதன் போது சுகாதார பரிசோதகரின் அனுமதியினை மீறி அதிகளவில் மாடு வெட்டப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தமையுடன் சுகாதார சீர்கேட்டுடன் குறித்த பகுதி காணப்பட்டமையும் உறுதிசெய்யப்பட்டது.

குறித்த விஜயம் குறித்த அறிக்கை மாநகர முதல்வரிடம் கையளிக்கப்பட்டுள்ளமையுடன் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மாநகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரக் குழுவில் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் தலைமையில் மாநகரசபை உறுப்பினர்களான நடராஜா தர்மத்திரனம், அப்துல் பாரி, முகமட் லரீப் மற்றும் சுகாதார பரிசோதகர் ஆகியோரே உள்ளடங்குகின்றனர்.

இதற்கு முன்னர் மாநகர துணை முதல்வர் மாட்டுத்தொழுவத்திற்கு சென்றிருந்த சமயத்தில் அங்கு சுகாதார சீர்கேடு நிலவுவதாக மாநகர முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா வடக்கில் வீதி, பாலம் சீரின்மை : நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்த ரவிகரன் எம்.பி!!

வவுனியா வடக்குப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமமக்கள், தமது கிராமத்திற்குச்செல்லும் வீதி, பாலம் என்பன சீரின்றிக்காணப்படுவதால் பலத்த இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பபையேற்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பனைநின்றான் கிராமமக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து இடர்பாடுகள் தொடர்பில் நேரடியாகச்சென்று ஆராய்ந்தார்.

குறிப்பாக ஒட்டுசுட்டான் – நெடுங்கேணி பிரதானவீதியிலிருந்து பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் வீதியும், பாலமுமே இவ்வாறு சீரின்றிக்காணப்படுகின்றன.

அவ்வீதியில் மிகமோசமான நிலையில் காணப்படும் மரப்பாலத்தைக் கடந்துசெல்வதில் பனைநின்றான் கிராமமக்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். மழைக்காலங்களில் குறித்த பாலத்தினுடாக முற்றாகப் போக்குவரத்து செய்யமுடியதநிலை காணப்படுவதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்தப்பாலத்தை வவுனிய வடக்கைச் சேர்ந்த பனைநின்றான் கிராமமக்கள் பயன்படுத்தினாலும், அந்தப்பாலம் புதுக்குடியிருப்பு பிரதேசசபைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்றது.

எனவே குறித்த பாலத்தினையும் அதனோடு இணைந்த வீதியையும் சீரமைத்து, தமது போக்குவரத்து இடர்பாட்டைத் தீர்த்துவைக்குமாறு பனைநின்றான் கிராமமக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் பனைநின்றான் கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாட்டைத் தீர்த்துவைப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த களவிஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுடன் வுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சுசீலன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.கிரிதரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.