16 வயது காதலியை கொலை செய்துவிட்டு 28 வயது காதலன் எடுத்த விபரீத முடிவு!!

கம்பளை, மில்லகஹமுல, பன்விலதென்ன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி சிறுமியைக் கொலை செய்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காதல் விவகாரம் தொடர்பான தகராறில் இது நடந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 வயதுடைய சிறுமி தனது வீட்டில் இருந்தபோது சந்தேகநபர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபரும் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடல் அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இலங்கை வந்த சுற்றுலா பெண்ணிடம் மிகவும் மோசமாக செயற்பட்ட நபர்!!

இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுப் சுற்றுலாப் பெண் பயணி ஒருவருக்கு நிகழ்ந்த மோசமான சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்படவுள்ளார். குறித்த பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி சுற்றுலா சென்றிருந்தபோது தன்னை அணுகிய ஒரு இளைஞர் தகாத செயலில் ஈடுபட்டதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின் வீடியோவையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

பெண்ணை அணுகிய ஒருவர் தனது அந்தரங்க உறுப்புகளைக் வெளிப்படுத்தி, தகாத உறவுக்கு வருமாறு அழைக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்த மோசமான சம்பவம் பொத்துவில் பகுதியிலுள்ள அருகம் விரிகுடா பகுதியில் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

சந்தேக நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காதல் மனைவிக்கு நடு வீதியில் நடத்தப்பட்ட கொடூரம் : பட்டப்பகலில் கணவனின் வெறிச்செயல்!!

காதலித்து திருமணம் செய்த மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை கழுத்தறுத்து கொன்ற கணவனை பொலிஸார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டம், விஜயவாடா சூர்யாராவ்பேட்டையில் வசிப்பவர் விஜய் (28). இவர் விஜய்பவானிபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மையத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி சரஸ்வதி (25). அங்குள்ள மருத்துவமனையில் தாதியாக வேலை செய்து வந்தார்.

இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவர் விஜய்க்கு, மனைவி சரஸ்வதியின் நடத்தையில் திடீரென சந்தேகம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட தகராறு காரணமாக மன வேதனை அடைந்த சரஸ்வதி, கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால் மனைவி மீது விஜய் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் சரஸ்வதி, மருத்துவமனையில் வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது அங்கு வந்த விஜய்க்கும் சரஸ்வதிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த விஜய் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவமனை வாசலிலேயே சரஸ்வதியின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சரஸ்வதி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விஜய்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!!

பொலன்னறுவை மனம்பிட்டிய, மலியதேவபுர பகுதியில் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற 15 வயது சிறுவன் உழவு இயந்திரம் கவிழ்ந்து உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று (14.11.2025) இரவு 7.30 அளவில் சிறுவன் தனது தாத்தாவுடன் பயணித்த உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மனம்பிட்டிய பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டார் ஏர்வெய்ஸில் குழந்தை ஒன்றுக்கு நேர்ந்த கதி : தாய் எடுத்த அதிரடித் தீர்மானம்!!

ஒரு விமானப் பணிப்பெண் தனது எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, தனது இளம் மகளுக்கு பால் கலந்த சொக்கலேட் கொடுத்ததற்காக, வட கரோலினாவைச் சேர்ந்த தாய் ஒருவர் கட்டார் ஏர்வெய்ஸ் மீது 5 மில்லியன் டொலர் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

33 வயதான ஸ்வேதா நீருகொண்டா என்பவர், கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி வர்ஜீனியாவில் உள்ள வாஷிங்டன் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டாரின் தோஹாவிற்கு விமானத்தில் தனது 3 வயது மகளுடன் பயணம் செய்துள்ளார்.

இதன்போது குறித்த பெண், தனது குழந்தைக்கு பால் மற்றும் சொக்கலேட்டுகளால் கடுமையான ஒவ்வாமை ஏற்படும் என விமானப் பணிப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாய் கழிப்பறைக்குச் சென்றபோது, ​​ஒரு பெண் விமானப் பணிப்பெண்ணிடம் தனது குழந்தையைப் பராமரிக்கும்படி அறிவித்து விட்டு சென்றுள்ளார்.

தாய் திரும்பி வந்தபோது, ​​விமானப் பணிப்பெண் குறித்த குழந்தைக்கு பால் கலந்த சொக்கலேட் பாரை ஊட்டுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக அந்த பெண் வழங்கிய குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அந்த பெண், விமானப் பணிப்பெண்ணிடம் விசாரித்தபோது, ​​அவர் குழந்தைக்கு சொக்கலேட் கொடுத்ததாக ஒப்புக்கொண்டதுடன் “உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும்” என்று உறுதியாகக் கூறியதாக அப்பெண்ணின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

சிறிது நேரத்திலேயே, குழந்தைக்கு கடுமையான ஒவ்வாமை அறிகுறிகள் தென்படத் தொடங்கியதாகவும் குழந்தையினுடைய மனநிலை மற்றும் முக்கிய அறிகுறிகள் விரைவாக மோசமடைந்ததாகவும் அதனை தொடர்ந்து குழந்தைக்கு தடுப்பூசி போட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அந்த பெண் தொடர்ந்த வழக்கின்படி, கட்டார் ஏர்வேஸ் நடைமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அந்த பெண் விமானத்திலிருந்து இறங்கிய பின்னர் வைத்தியசாலைக்கு சென்றதாகவும் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, நிதி இழப்பு மற்றும் குழந்தை அனுபவித்த கடுமையான வலி, துன்பம் மற்றும் உணர்ச்சி ரீதியான துயரத்தை ஈடுசெய்ய கட்டார் ஏர்வேய்ஸிடமிருந்து 5 மில்லியன் டொலர்களை குறித்த பெண் கோரியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மீண்டும் பரபரப்பு : வெடிப்பு விபத்தில் 7 பேர் பலி : 27 படுகாயம்!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பொலிஸ் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடிவிபத்தில் தடயவியல் குழு, பொலிஸார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் வெடி விபத்தில் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன. தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் திகதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் பொலிஸார் நடத்திய சோதனையில் 3000 கிலோகிராம் அமொனியம் நைட்ரைட் என்ற வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முஸமில் ஷகீல் கனியா என்ற நபரை பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் வெடிபொருட்களை ஆய்வு செய்துக் கொண்டிருந்தபோது திடீரென அந்த வெடிபொருட்கள் வெடித்ததால் தடயவியல் குழு, பொலிஸார் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் 27க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், மீண்டும் வெடிபொருள் வெடித்து 7 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமியான காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன்!!

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலதென்ன பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த சிறுமி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதல் விவகாரம் தொடர்பான தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுமியும், கொலை செய்த சந்தேக நபரும் சிறிது காலமாக காதல் உறவில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

குற்றத்தைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மில்லகஹமுல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபரைக் கைது செய்ய கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மகளை பார்க்கச்சென்ற பெற்றோருக்கு நேர்ந்த சோகம்!!

பொலன்னறுவை, அரலகங்வில, சிலுமனிசய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மனைவி உயிரிழந்து, கணவன் பலத்த காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகளின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் தந்தை நேற்று (14) மதியம் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்தவர் வெலிகந்த கினிதமானவையில் வசிக்கும் சந்திரா போடி மெனிகே என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

காட்டு யானை தாக்குதலில் காயமடைந்த கணவன் கீர்த்திவன்ச ஜெயமன்னே (60) பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு வாய்ப்பு!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (15.11.2025) தங்கத்தின் விலை ரூ.10,000 குறைந்துள்ளது.

அதன்படி, இன்று (15) காலை கொழும்பு, செட்டியார் தெரு தங்கச் சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.305,200 ஆக குறைந்துள்ளது. நேற்று, ரூ.315,500 என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நேற்று (14.11.2025) ரூ.340,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ.330,000 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா கல்வியற் கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு திடீர் சுகவீனம் : சுகாதாரப் பரிசோதகர்கள் தீவிர விசாரணை!!

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு பகுதி ஆசிரிய மாணவர்களுக்கு திடீர் சுகவீனம் ஏற்ப்பட்ட நிலையில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றயதினம் காலை முதல் மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து 7 மாணவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகவீனமடைந்த சில மாணவர்கள் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்ப்பட்ட நிலையில் தனியார் மருத்துவ நிலையங்களிற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். கல்லூரிநிர்வாகம் கூறியே தனியார் மருந்தகங்களுக்கு சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சுகவீனம் தொடர்பாக மாணவர்களால் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை அழைத்துச்செல்வதற்காக இன்று காலை மட்டக்களப்பு,திருகோணமலை போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து பெற்றோர்கள் சிலர் வருகைதந்திருந்தனர்.

இருப்பினும் அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை மூன்று மணி நேரமாக அவர்கள் பிரதான வாயிலில் காக்க வைக்கப்பட்டிருந்ததுடன், அதன் பின்னர் அவர்களாக உள்ளே சென்று உப பீடாதிபதியுடன் கலந்துரையாடியிருந்தனர்.
பிள்ளைகளை தங்களுடன் அனுப்புமாறு கோரியிருந்தனர்.

காய்ச்சல் ஏற்ப்பட்டதாக கூறும் மாணவர்கள் தமது சொந்த விடுமுறையில் வீடு செல்ல முடியும்என நிர்வாகத்தால் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களிடம் கடிதம் பெறப்பட்ட பின்னர் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இவ் விடயம் தொடர்பாக கல்லூரியின் பீடாதிபதியிடம் கேட்டபோது சுகவீனமுற்ற மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர்கள் பரிந்துரைத்தால் மாத்திரமே வீட்டிற்கு செல்ல அனுமதிக்க முடியும் என தெரிவித்திருந்ததுடன்,

பெற்றோர்களின் கோரிக்கையின் பிரகாரம் அனுப்ப முடியாது என தெரிவித்தார். அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கினால் கல்விச்செயற்பாடுகள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை இன்றையதினம் கல்வியற்கல்லூரிக்கு வருகைதந்த வவுனியா சுகாதார பரிசோதகர்கள் மாணவர்களுக்கு சுகவீனம் ஏற்ப்பட்டமைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல சைவ உணவகங்களுக்கு பூட்டு!!

வவுனியா ஹொறவப்பொத்தான வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு பிரபல சைவ உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் தற்காலிகமாக மூடப்பட்டது.

குறித்த இரு உணவங்களும் சுகாதார பரிசோதகர்களால், நேற்றையதினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இரு உணவகங்களையும் எதிர்வரும் 14நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மகளை கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடப்பால் அருகே கண்டனகம் பகுதியில் நடந்த தாய்–மகள் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அங்கு வசித்து வந்த அனிதா குமாரி (57), கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது கணவரை உடல்நலக்குறைவால் இழந்திருந்தார்.

கணவர் இறந்ததையடுத்து மகள் அஞ்சனா (27) உடல்நிலை மோசமடைந்து படுக்கையிலேயே இருந்தார். முதுகுத் தண்டுவட நோயால் அஞ்சனா நடமாட முடியாத நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளும் திடீரென அனிதா குமாரியிடம் திரண்டிருந்த நிலையில், நாள் முழுவதும் மகளை கவனிப்பது அவரது வாழ்க்கையின் அத்தியாவசியமான கடமையாக மாறியிருந்தது.

நேற்று, வழக்கம்போல் அனிதா குமாரியின் மகன் வேலைக்குச் சென்றபோது, வீட்டில் தாய்–மகள் மட்டும் இருந்தனர்.

மகளின் நிலைவும் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களும் காரணமாக மன அமைதி குலைந்த அனிதா குமாரி, தீவிர மனச் சோர்வுக்கு ஆளாகியிருந்தார் என விசாரணையில் தென்பட்டுள்ளது.

மன அழுத்தத்தினால் தவறான முடிவெடுத்த அவர், மகள் அஞ்சனாவை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி மூச்சுத் திணறடித்து கொலை செய்தார்.

பின்னர், அதே வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் எடப்பால் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு,

பிரேத பரிசோதனைக்காக மலப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆரம்ப விசாரணையில், நோயால் அவதிப்பட்டிருந்த மகளை காப்பாற்ற முடியாத மன வேதனையில் தாய் இந்த கொடூர முடிவை எடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

கறிவேப்பிலையை தூக்கி எறிபவரா நீங்கள் : இதைப் படியுங்கள்!!

நாம் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் கறிவேப்பிலை வாசனைக்காக பயன்படுத்தப்பட்டாலும், பெரும்பாலானவர்கள் கறிவேப்பிலை சாப்பிடும்போது ஒதுக்கி எறிந்து விடுகின்றோம்.

ஆனால் நாம் தூக்கி வீசும் கறிவேப்பிலையில் ஆரோக்கிய பலன்கள் ஏராளம் உள்ளது. அவை என்ன என்பதை பார்க்கலாம்.

கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பது என்பது சுவைக்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்காகவும் மிக அவசியம்.

கறிவேப்பிலையில் உள்ள ஃபைபர் மற்றும் பிற சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகின்றன.

இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது செரிமான நொதிகளை தூண்டி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது.

இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்துக்கள் முடி உதிர்வதைத் தடுத்து, முடி அடர்த்தியாக வளர உதவுகின்றன. கறிவேப்பிலையில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகமாக உள்ளது.

இது இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது. வைட்டமின் ஏ சத்து இதில் இருப்பதால், கண் பார்வை குறைபாடுகளைத் தடுக்கவும், கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் இது உதவுகிறது.

எனவே, கறிவேப்பிலையை ஒதுக்கி வைக்காமல், தினமும் உணவில் சேர்த்து அதன் முழு பலனையும் பெறுவது அவசியம்.

யாழில் நண்பர்களுடன் சென்ற 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த பெரும் துயரம் : கதறும் உறவுகள்!!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நேற்று (13.11.2025) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

சுமார் ஐந்து இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது அனைவரும் கயிறு கட்டி நீராடியுள்ளனர். அதன் பின்னர் அனைவரும் வெளியேறிய நிலையில், ஒருவர் மாத்திரம் தொடர்ந்து நீராடியுள்ளார்.

அவரை வருமாறு ஏனையவர்கள் அழைத்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன’ சிறிது நேரத்திற்குப் பிறகு வருவதாகக் கூறியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் குறித்த இளைஞனைக் காணாததால், ஏனையவர்கள் மீண்டும் அங்கு சென்று பார்த்தபோது, கயிறு அறுந்த நிலையில் இளைஞனைக் காணவில்லை.

பின்னர் ஏனையவர்களின் உதவியுடன் தோட்டக் கிணற்றில் தேடியபோது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞனின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

வடக்கு, கிழக்கில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றம் : பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் அதிகரிக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். இன்று (14.11) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் : எடுத்துச் செல்ல வந்தவர்கள் அதிர்ச்சி!!

ஈஸி கேஷ் முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்ட, புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பகுதியில் நடைபெற்ற மற்றொரு சோதனையைத் தொடர்ந்து, ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியிலுள்ள டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இருந்த இரண்டு இளைஞர்கள் மீது பொலிஸ் அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.

இளைஞர்களின் நடத்தை சந்தேகத்துக்குரியதாக இருந்ததால், பொலிஸார் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோதனை செய்தபோது, பிரதான வீதியின் அருகிலுள்ள புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் பொட்டலத்தை கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆவார். இளைஞன் ஈஸி கேஷ் அமைப்பு மூலம் ரூ. 6,000 செலுத்தி போதைப்பொருள் பொட்டலத்தை வாங்கியிருப்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹட்டன் பொலிஸ் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் விநியோக வலையமைப்பை கண்டறிந்து,

சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்வதற்காக இளைஞனின் தொலைபேசி தரவுகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.