கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் தொடர்பில் வெளியான தகவல்!!

புதிய இணைப்பு : மொனராகல, பிபிலை – ரதலியத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்திரிகா ஷியாமலி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, வீட்டின் வரவேற்பறையில் பெண் இரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இதன்போது அவருக்கு அருகிலேயே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான துமிந்த என்பவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை பொலிஸார் கண்டறிந்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், தனது மனைவி கொழும்பில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், அழகு நிலையத்திற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்ய, தற்போது காயமடைந்துள்ள துமிந்த என்பவருடன் தனது மனைவி டுபாய் சென்று திரும்பியுள்ளார்.

அதன் பின்னர், மனைவியை என்னிடம் அனுப்பு, இல்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன் என அந்த நபர் தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.

மனைவியின் சில புகைப்படங்களை தனது கைபேசிக்கு அனுப்பியதாக கணவர் தெரிவித்துள்ளார். இது குறித்து மனைவியிடம் கேட்டபோது, அவருக்கும் அந்த நபருக்கும் இடையில் தொழில் ரீதியான தொடர்பே தவிர வேறெதுவும் இல்லை என அவர் மறுத்துள்ளார்.

சம்பவத்தன்று கணவர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த பெண்ணிற்கும் சந்தேகநபருக்கும் இடையில் நிலவிய தகாத உறவு அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறு இந்த கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முதலாம் இணைப்பு : மொனராகல, பிபிலை – ரதலியத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரதலியத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு தகாத உறவில் இருந்த நபருக்கு இடையே ஏற்பட்ட தகராறு நீடித்த நிலையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெண்ணைக் கொலை செய்த பின்னர், சந்தேகநபர் தனது கழுத்தை வெட்டி உயிரை மாய்க்க முயன்றுள்ளார். சந்தேகநபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பிபிலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிபிலை வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பிபிலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பில் பலியான இளம் தமிழ் குடும்பஸ்தர் : தீவிர சிகிச்சையில் ஒருவர்!!

புத்தளம் – கற்பிட்டி , கண்டக்குளி கடற்கரை வீதியில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற வெள்ளிக்கிழமை (30) குறித்த வீதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைக்காக உடனடியாக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இதனையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக அவ்விருவரும் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இருவரில், ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக காணப்பட்டதுடன், அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு அன்றைய தினமே மாற்றப்பட்டிருந்தார்.

இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தவர் நேற்று (31) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். குறித்த விபத்து தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டு பெண் பயணிக்கு தென்னிலங்கையர் செய்த முகம்சுழிக்கும் செயல்!!

ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைத் திருடிய நபர் ஒருவரை, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த வெளிநாட்டுப் பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்தச் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, அப்பெண்ணுக்குச் சொந்தமான கையடக்கத் தொலைபேசியும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதான சந்தேகநபர் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் செயல்பாட்டால் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து : உயிர்பிழைத்த 40 பயணிகள்!!

நுவரெலியா – வலப்பனை, நில்தண்டாஹின்ன பிரதேசத்தில் ஏற்படவிருந்த பாரிய பஸ் விபத்தொன்று சாரதியினால் தவிர்க்கப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துக் சபைக்குரிய பஸ் வண்டி ஒன்று, நில்தண்டாஹின்ன பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழக்கூடிய ஒரு சூழ்நிலையில்யிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஸ்ஸானது குறிப்பிட்ட வளைவில் திரும்பும்போது ஏற்பட்ட சத்தத்தை அடுத்து பஸ் ஓட்டுநர் பிரேக்கைப் பயன்படுத்தி பஸ் வண்டியை நிறுத்தி விட்டு பஸ்வண்டியின் அடிச்சட்டத்தை இணைக்கும் பிரதான பகுதி உடைந்துள்ளதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து பஸ் வண்டியை இயக்காது அப்படியே வைத்துவிட்டு திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பஸ்வண்டி தொடர்ந்து செலுத்தப்பட்டிருந்தால் ஏற்கனவே மண்சரிவு அபாயத்தில்பாதிக்கப்பட்ட அவ்விடத்தில் மீண்டும் ஒரு பாரிய அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இருந்துள்ளது.

அச்சமயம் பஸ்வண்டியில் 40 பயணிகள் இருந்துள்ளனர். சாரதியில் துரித நடவடிக்கையால் 40 பயணிகள் மயிரிழையில் உயிர் காப்பாற்றப்பட்டதாகத் தெரிவித்தனர்.

அநுராதபுரத்தில் வாகன விபத்து : ஐவர் காயம்!!

அநுராதபுரம், கற்குளம் பொலிஸ் வீதித் தடைகு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் திறப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்கள் நால்வர் பயணித்த காரும், களனியிலிருந்து அநுராதபுரத்திற்கு வழிபாட்டிற்காகச் ஒரே குடும்பத்தினர் பயணித்த கார் ஒன்றுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்து இடம்பெற்ற இடம் வளைவான பகுதி என்பதால், அநுராதபுரத்திலிருந்து வந்த கார் வேகக் கட்டுப்பாட்டு இழந்து, வீதியின் வலது பக்கமாகச் சென்று மற்றைய காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் அநுராதபுரத்திலிருந்து பயணித்த காரின் சாரதி உட்பட அதில் பயணித்த நால்வரும், மற்றைய காரில் பயணித்த ஒருவரும் அடங்கலாக 5 பேர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தினால் இரண்டு கார்களின் முன்பகுதிகளும் பலத்த சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் திறப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு கிளிநொச்சியில் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை!!

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் கொலை குற்றவாளி ஒருவருக்கு இன்றைய தினம் (02-02-2026) மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையின் பிரதான சந்தேகநபருக்கு இன்றைய தினம் பகல் 12 மணிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் குறித்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

கடந்த 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதியன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் பகுதியில் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்போது அதே இடத்தை சேர்ந்த அர்ச்சுனன் றஜீபன் என்ற 19 வயதுடைய நபர் கத்தியால் வயிற்றில் குத்தப்பட்டு படுகாயமேற்பட்ட நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த புதுக்குடியிருப்பு பொலிசார் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரை கைது செய்து இரத்த மாதிரிகள் சான்றுப் பொருட்கள் என்பவற்றையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

குறித்த வழக்கானது ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில்;

முன்னெடுக்கப்பட்டு விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம்(02-02-2026) குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி G. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேகநபருக்கு எதிர் தரப்பு சட்டத்தரணி S. ஸ்ரீகாந்தா முன்னிலையில் தீர்ப்பு வாசித்துக் காட்டப்பட்டதுடன் அவருக்கு மன்றிற்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

என்று கேள்வி கேட்கப்பட்டு அவருக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதையடுத்து நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு அனைவரும் எழுந்து நின்று குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குரங்கு என கணவர் அழைத்ததால் 23 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மொடலிங்கில் ஆர்வம் கொண்ட பெண்ணை, அவரது கணவர் குரங்கு என்று அழைத்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த தம்பதி தன்னு சிங், ராகுல் ஸ்ரீவஸ்தவா. இவர்கள் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தவர்கள் ஆவர்.

இருவரின் குடும்பத்தினரும் அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், தம்பதியர் இந்திரா நகரில் வசித்து வந்தனர். ராகுல் ஆட்டோ சாரதியாக பணியாற்றி வருகிறார்.

ராகுல், தன்னு மற்றும் அவரது தங்கை ஆகியோர் ஒன்றாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தன்னு கேலி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் உணவு வாங்க வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய ராகுல், மனைவி தன்னுவை அழைக்குமாறு அஞ்சலியிடம் கேட்டுள்ளார். அப்போது அறையின் கதவு உள்ளே பூட்டப்பட்டிருப்பது தெரிந்து, அழைப்பிற்கு பதில் வராததால் அஞ்சலி ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.

தன்னு ஒரு துணியால் ஆன கயிற்றில் தூக்கிட்டு தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே ராகுல் உட்பட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தன்னுவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதனையடுத்து தன்னுவின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.

மொடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்த தன்னுவை அவரது காதல் கணவர் குரங்கு என்று அழைத்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

பேருந்துடன் வேன் ஒன்று மோதி விபத்து!!

மாத்தறை – தெனியாய பிரதான வீதியில் பேருந்துடன் வேன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகலில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வேன் சேதமாகியுள்ளது. பாதிப்புக்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி!!

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் குறித்த விபத்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் வாகனத்தின் சக்கரம் காற்றுபோன நிலையில், கட்டுப்பாட்டை இழந்து எதிரே பயணித்த வானுடன் மோதி விபத்தை ஏற்படுத்தி பின்னர் மற்றுமொரு வானுடனும் மோதியுள்ளது.

இதன்போது முதல் விபத்தில் சிக்கிய வான் தடம்புரண்டுள்ளது. வானில் பயணித்த பயணிகள் சிறு காலங்களுடன் பிரதேச மக்களின் உதவியுடன் வெளிவேற்றப்பட்டனர்.

இதன்போது விபத்துக்குள்ளான மற்றைய வானின் சாரதி விபத்தை தவிர்க்க முயற்சித்த போதிலும், குறித்த வானும் விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் வானில் பயணித்தவர்களும் சிறு காலங்களுடன் வெளியேறினர்.

குறித்த விபத்து காரணமாக A9 வீதி ஊடான போக்குவரத்து 30 நிமிடங்கள் வரை ஸ்தம்பித்துள்ளதுடன், விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் வாகனத்தினை பிரதேச மக்கள் இணைத்து வீதி போக்குவரத்துக்கு தடை இல்லாதவாறு அப்புறப்படுத்தினர்.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றுவதற்கு 1990 இலக்க சேவையை பெற்றுக்கொள்ள அழைத்தபோது,

குறித்த சேவையை அணுக முடியாத நிலையில், 021 2 285329 இலகத்திற்கு அழைத்து கிளிநொச்சி வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சேவையை தருமாறு ஊடகவியலாளர் உதவி கோரினார்.

இதன்போது தம்மால் சேவையை வழங்க முடியாது எனவும், 1990 சேவைக்கே மீண்டும் மீண்டும் அழைக்குமாறு கூறி தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அவ்வீதி ஊடாக பயணித்த தேர்தல்கள் திணைக்கள வாகனம் மற்றும் பொது மக்களின் வாகனங்களில் காயமடைந்தவர்கள் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

அவுஸ்திரேலியாவில் பறிபோன கனேடிய பெண்ணின் உயிர் : பிரித்தானிய பெண்ணின் பரபரப்புக் காணொளி!!

அவுஸ்திரேலியாவில் கனேடிய பெண்ணொருவர் மாயமான முறையில் உயிரிழந்த நிலையில், பிரித்தானிய பெண்ணொருவரின் டிக்டோக் காணொளி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் என்கிற 19 வயது பெண், அவுஸ்திரேலியாவின் K’gari என்ற இடத்தில் உள்ள கடற்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவர் காட்டு நாய்களால் கொல்லப்பட்டாரா என்ற கேள்வி எழுந்தது. உடற்கூறு ஆய்வில் அவரது உடலில், அவர் உயிரிழப்பதற்கு முன்பும், அவர் உயிரிழந்த பின்பும் காயங்கள் ஏற்பட்டது தெரிய வந்தது.

ஆனால், அப்பெண் காட்டு நாய்கள் அவரைத் தாக்கியதால் அவர் உயிரிழக்கவில்லை என்பது உறுதியானது.

இந்த நிலையில், பைப்பர் ஜேம்ஸின் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, அதே தீவில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி எடுத்த காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் குறித்த சுற்றுலாப் பயணி மில்லி மெக்கார்த்தி, அந்தத் தீவில் வாழும் காட்டு நாய்கள் குறித்த தெளிவான பாதுகாப்பு எச்சரிக்கைகளை அப்பட்டமாகப் புறக்கணித்ததாக பார்வையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மில்லி மெக்கார்த்தியின் டிக்டொக் காணொளியில், புதர்கள் நிறைந்த பகுதியில் தனியாக சுற்றித் திரிவதையும், அவர் காட்டு நாய்கள் எச்சரிக்கை பலகையை கடந்து செல்வதையும் பார்க்க முடிகிறது.

மேலும் அவர், ‘டிங்கோ குச்சி’ என்று அழைக்கப்படும் பாதுகாப்பு தடியை எடுத்துச் செல்வதா வேண்டாமா என்று அவர் வெளிப்படையாக விவாதிக்கிறார்.

இறுதியில் அவர் அதனை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்கிறார். அத்துடன் “இது மிகவும் பயமாக இருக்கிறது, ஏனென்றால் நான் இப்போது தனியாக முகாமை விட்டு வெளியேறப் போகிறேன்” என்று அவர் கமெராவில் கூறுகிறார்.

அடுத்த கிளிப்பில், அவர் எவ்வித பாதிப்பும் இல்லாமல் கடற்கரையை அடைவது காட்டப்படுகிறது. இந்த டிக்டோக் காணொளியை பார்த்தவர்கள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு பதிலளித்த மில்லி, விதிகளை மீறுவது என்பது தற்செயலாக நடந்ததாகவும், வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை கூறினார்.

திருகோணமலையில் வீதியிலிருந்து சடலம் மீட்பு!!

திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (02.02.2026) காலை இடம்பெற்றுள்ளது.

வீதியில் கிடந்த நபரை பாரத்த பொது மக்கள் இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்த திருகோணமலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த நபர் விபத்தில் உயிரிழந்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

வெளிநாட்டில் இருந்து தாய் அனுப்பிய அதிநவீன தொலைபேசியால் மகளுக்கு நேர்ந்த கதி!!

புத்தளம், உடப்புவ பகுதியில் 15 வயது சிறுமியுடன் தொடர்பு வைத்து பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படும் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் முந்தலம், பள்ளிவாசல்பாடுவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.

சிறுமி அனுராதபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் அவரது தாயார் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தந்தையுடன் வீட்டில் வசித்து வரும் சிறுமிக்கு, வெளிநாட்டிலிருந்து அவரது தாயார் நவீன அம்சங்கள் கொண்ட கையடக்க தொலைபேசி ஒன்றை அனுப்பியுள்ளார்.

தொலைபேசியை பயன்படுத்தி சமூக ஊடகக் கணக்கைத் தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளார் சிறுமி. சமூக வலைத்தளம் ஊடாக சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சிறுமி தனக்கு 17 வயது என்று சந்தேக நபரிடம் கூறியிருந்தார். அதற்கமைய, இருவருக்கும் இடையே காதல் உறவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் காதலனை சந்திக்க சென்ற சிறுமியை, சந்தேக நபர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அன்று முதல் தனது காதலனுடன் ஒன்றாக வசிப்பதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு முந்தலம் பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடு செய்திருந்தார்.

அதற்கமைய சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை சிலாபம் பொது மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியிடம் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தங்கத்தின் விலையில் பதிவாகும் தலைகீழ் மாற்றம் – நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை இன்று (02.02.2026) 368,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 337,600 ரூபாவாக காணப்படுகிறது. கடந்த கிழமையளவில் தங்கத்தின் விலையானது வரலாற்றில் முதன்முறையாக சுமார் 4 இலட்சம் ரூபாவை எட்டியிருந்தது.

இவ்வாறான சூழலில் தற்போது தலைகீழ் மாற்றத்தை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உலக சந்தையில் தங்க விலை கணிசமாக சரிந்துள்ளதாகவே தெரியவருகிறது.

அதன்படி உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4,660 – 4,700 டொலர்களாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய நாட்களில் 5,000 டொலர்கள் வரையில் பதிவாகியிருந்த போதும் தற்போது 4 – 7% வரை குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக பலி!!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்றையதினம் (02.02.2026) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சம்பவத்தில் நவரட்ணம் என்பவரே உயிரிந்துள்ளார். மயிலிட்டி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ பொலிஸார் மற்றும் பலாலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவில் வீதியில் உலரவிடப்பட்ட நெல்லால் விபத்து!!

முல்லைத்தீவு பிரதான வீதியில் சற்று முன் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

காயமடைந்தவர் மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். வீதியில் நெல்லு உலர விடப்பட்ட நிலையில் தடுமாறிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வீதிகளில் நெல் உலர விடுவதால் விபத்துக்கள் ஏற்படும் என சமூக ஆர்வல்ர்கள் எச்சரித்திருந்தனர். வீதியில் நெல் உலரவிடும் பொதுமக்கள் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கபப்ட்டிருந்தது.

இந்நிலையில் விபத்து மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

 

வவுனியா நெடுங்கேணியில் “கிவுல் ஓயா வேண்டாம்” என மக்கள் போராட்டம்!!

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் கிவுல் ஓயாத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் கண்டனபேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் ஏற்ப்பாட்டில் வவுனியா நெடுங்கேணி பேருந்து நிலையத்தில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட பேரணி பிரதான வீதிவழியாக வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக சென்றது. அங்கு ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான மகஜர் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், கிவுல் ஓயா திட்டம் தீட்டப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதும் இதுவரை பிரதேச மக்களுடனோ, பிரதேச அபிவிருத்திக் குழுக்கள் மற்றும், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்துரையாடுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் கலந்துரையாடப்படவில்லை.

அதன்திட்ட முன்மொழிவில் புதிய குடியேற்றவாசிகள் குடியேற்றப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எமது பிரதேசத்தின் இனப்பரம்பலை பாதிக்கும் ஒரு செயற்ப்பாடு. திட்ட நோக்கத்திற்காக பல ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்படவுள்ளன.

இலங்கையில் எங்கும் காணப்படாத தாவர மற்றும் விலங்கு வகைகள் அழிவடைவதன் அபாயமும், தாவர விலங்குகளின் முழுமையான அழிவும் ஏற்படும். அத்துடன் இத்திட்டத்தினால் ஏற்கனவே உள்ள யானை–மனித மோதல் மேலும் மோசமடையும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வெடிவைத்தகல் மற்றும் பட்டிக்குடியிருப்பு கிராமசேவையாளர்கள் பிரிவுகளுக்கு சொந்தமான தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கா வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 13,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் வனவள திணைக்களத்தினால் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தமது விவசாயத் தேவைக்காக வேலி அடைப்பதற்காக தடிகளை வெட்டினால் கூட சிறையில் அடைக்கும் வனவளத் திணைக்களம், யுத்தத்தினால் கைவிடப்பட்ட குளங்களைப் பயன்படுத்த அனுமதிக்காத வனவளத் திணைக்களம் என்ன நோக்கத்திற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியை மேற்படி திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளனர்.

அரசே? இனப்பரம்பலை மற்றும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்ற உங்களின் வாக்குறுதி எங்கே? கடந்த அரசாங்கங்களை போல எமது வாழ்வுரிமையை பறிக்க இந்த அரசு விரும்புகிறதா,

பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது சிறுபான்மை மக்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள், மகாவலி–எல் வயத்திற்குக் வெளியே வாழ்வாதாரத்திற்கான நீர்த்தட்டுப்பாடு இல்லையா? இந்த கேள்விகளை உங்களிடம் முன்வைக்கிறோம்.

அத்துடன் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ்மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் கிவுல் ஓயா திட்டத்தை தமிழ்மக்களாகிய நாம் முற்றாக புறக்கணிக்கின்றோம் என்று தெரிவித்தனர்.

ஒன்றிணைந்த தமிழ்க்கட்சிகளினால் ஏற்ப்பாடுசெய்யப்பட்ட இவ் எதிர்ப்புப் பேரணியில் வடக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான பொதுமக்கள் மற்றும் அரசியல் வாதிகள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர்.