தங்க நகைகளுடன் வங்கிகள் மற்றும் அடகு நிறுவனங்களில் குவியும் இலங்கையர்கள்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பலர் அதிக விலைகளை பயன்படுத்திக்கொள்ள அடகுக்கடைகளில் உள்ள தங்க பொருட்களை விற்க தூண்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சிலர் தங்க நகைகளை வங்கிகள் மற்றும் அடகு நிறுவனங்களில் அதிகளவு அடகுவைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இதன் காரணமாக அதிக விலைகளைப் பயன்படுத்திக்கொள்ள, பலர் தங்கள் வீடுகள், வங்கி பெட்டகங்கள் மற்றும் அடகுக் கடைகளில் இருந்த தங்கப் பொருட்களை விற்கத் தூண்டப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, நாட்டின் சந்தையில் தங்கத்தின் புழக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியம் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, வட்டி விகிதங்கள் அதிகரிப்பு மற்றும் தங்க விலை உயர்வின் காரணமாக அடகு வைக்கப்பட்ட தங்கத்தை மீட்டெடுக்க முடியாத நிலையில், அவற்றில் மேலதிக பணத்தை பெற தூண்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றது.

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய சந்தேக நபர்!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் கடந்த 27ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொடூர கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய மரணமடைந்த நபரின் மச்சானை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியபோது குறித்த சந்தேகநபர் கொலை செய்ததை பொலிஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து நேற்றையதினம் (29.01.2026) கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்த குறித்த இறந்த நபர் கடந்த 27ஆம் திகதி இரவு,

கடைக்கு சென்று உணவு வாங்கிக் கொண்டு வீடு நோக்கி திரும்பிய வேளையில், அவரது தலையின் பின்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் அதிக இரத்தகசிவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, அப்பகுதியை சேர்ந்த 30 வயதுடைய மரணமடைந்த நபரின் மச்சான் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியபோது குறித்த சந்தேகநபர் கொலை செய்ததை பொலிஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து நேற்றையதினம் (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவரின் மகளை கொலை செய்வதாக அவர் மிரட்டியதாகக் கூறப்படுவதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக, கோடரி பிடியினால் தலையில் தாக்கியதாக சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் பழம்பாசி, கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த நாகையா நாகராஜா (வயது 41) என்பவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் நேர்ந்த சோகம் : குப்பைக்கு வைத்த தீயினால் பரிதாகமாக உயிரிழந்த வயோதிபப் பெண்!!

யாழ்ப்பாணத்தில் மகள் மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அரியாலையை சேர்ந்த பரமசிவம் பரமேஸ்வரி (வயது 81) என்பவரே இவ்வாறு நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார்.

பின்னர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கடைக்கு சென்றுள்ளார். இதன்போது தாயார் வீட்டு அறையில் உறங்கிக்கொண்டு இருந்தார். இதன்போது ஜன்னல் வழியாக தீயானது உள்ளே சென்று கொடியில் இருந்த ஆடைகளில் பற்றி, வீட்டு கூரை மரங்களிலும் பற்றியது.

இதன்போது குறித்த வயோதிப பெண் படுக்கையில் இருந்த நிலையில் அவர் மீதும் தீ பற்றியது. அவர் அவலக்குரல் எழுப்பிய நிலையில் அருகில் உள்ள வீட்டில் வசித்த மற்றைய மகள் ஓடிவந்து அவரை காப்பாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே பரிதாபமாக உயிரிழந்த 18 வயது மாணவன்!!

உந்துருளிகள் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த 18 வயதுடைய மாணவன் ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த நாளிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பதுரலிய பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதுரலிய, கம்புராவல பகுதியைச் சேர்ந்த ஹசிது தேமிய விஜேதுங்க என்ற இளைஞனே அகால மரணமடைந்துள்ளார். மதுகம சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி கற்று வந்த அந்த மாணவன், அப்பகுதியின் வர்த்தக தம்பதிகளின் மூத்த மகனாவார்.

ஹசிது கல்வியில் மாத்திரமன்றி, விளையாட்டிலும் பாடசாலைப் புறக்கிருத்தியச் செயற்பாடுகளிலும் ஒரு சிறந்த வீரனாகத் திகழ்ந்துள்ளார்.

கராத்தே போட்டிகளில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் வென்றுள்ளார். பாடசாலை நீச்சல் போட்டிகளில் பலமுறை செம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.

பாடசாலை கெடட் (Cadet) குழுவில் இணைந்து, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது பாடசாலைக்கு ‘ஹெர்மன் லூஸ்’ (Herman Loose) எனும் கௌரவப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்த குழுவில் முக்கிய வீரராக இருந்துள்ளார்.

“மகனுக்கு உந்துருளிகள் என்றால் மிகவும் பிடிக்கும். பழைய உந்துருளிகளை வாங்கி, சில நாட்கள் ஓட்டிவிட்டு, நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்வார்.

பின்னர் அவற்றை மீண்டும் விற்றுவிடுவார். எதிர்காலத்தில் வாகன வியாபாரி ஆக வேண்டும் என்பதே அவனது கனவாக இருந்தது” என அவரது தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். கடந்த ஜனவரி 22 ஆம் திகதி தனது 18 ஆவது பிறந்தநாளை ஹசிது கொண்டாடியுள்ளார்.

அதற்கு அடுத்த நாள் (23) இரவு நண்பர் ஒருவருடன் உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது, பதுரலிய – களுக்கலை வீதியில் உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஹசிது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் விபத்துக்குள்ளான உந்துருளியை வாங்கி இரண்டு வாரங்கள் கூட நிறைவடையவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

திறமைமிக்க ஒரு மாணவனின் இந்த திடீர் மறைவு, பல மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட யுவதி : திருமணமான காதலன் கைது!!

கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானை சயுர அடுக்குமாடி குடியிருப்பில் 24 வயதுடைய யுவதியை கொடூரமாக கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் நேற்று அங்குலானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாதுவ, குடா வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஹேஷலா காவிந்தி சில்வா என்ற 24 வயதான யுவதி துடைப்பத்தாலும், கைகளாலும், கால்களாலும் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மனைவியை பிரிந்து வாழும் திருமணமான சந்தேக நபர் கடந்த 8 மாதங்களாக உயிரிழந்த யுவதியுடன் தொடர்பை பேணி வந்துள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சந்தேக நபர் கடும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனத் தெரியவந்துள்ளது. அவர் இந்த யுவதியையும் போதைப்பொருள் பாவனைக்கு தூண்டியுள்ளதால், யுவதியின் பெற்றோர் அவரை வீட்டில் சேர்க்க மறுத்துள்ளனர்.

சந்தேக நபரின் சகோதரர் மற்றும் தாய் ஆகியோர் அங்குலானை சயுர அடுக்குமாடி குடியிருப்பில் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். யுவதிக்குத் தேவையான உணவை சந்தேக நபர் தனது தாய் அல்லது சகோதரரின் வீட்டிலிருந்தே பெற்றுக்கொடுத்து வந்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி மாலை சயுர அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் உள்ள கொன்க்ரீட் தளத்தில் இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த சந்தேக நபர், யுவதியை துடைப்பத்தாலும், கைகளாலும், கால்களாலும் மிகக் கொடூரமான முறையில் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

மறுநாள் மதியம், கொன்க்ரீட் தளத்தில் யுவதி ஒருவர் விழுந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

யுவதியின் உடல் முழுவதும் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டதுடன், உடல் நீல நிறமாக மாறியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

யுவதியின் சடலம் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக வகுப்புக்கு சென்று திரும்பிய மாணவிக்கு நேர்ந்த துயரம்!!

கண்டி – ஹதரலியத்த பிரசேத்தை சேர்ந்த மாணவி, பேருந்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹதரலியத்த டி. பி. இலங்கரத்ன தேசிய பாடசாலையில் 12ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த 17 வயதுடைய அப்சரா தசநாயக்க என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி கண்டியில் மேலதிக வகுப்புக்கு சென்று மீண்டும் பேருந்தில் வீடு திரும்பியுள்ளார். இதன் போது, பேருந்திலிருந்து இறங்க முயன்ற வேளையில் அவர் கீழே விழுந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் ஓட்டுநரான பிரபாத் மேகசூரிய என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் கலகெதர நீதவான் நுவான் குணசேகர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹதரலியத்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மாணவி அப்சரா தசநாயக்கவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ளது.

 

குடும்பப் பெண்ணை காப்பாற்ற முயற்சித்தவருக்கு நேர்ந்த கதி : பறிபோன உயிர்கள்!!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் இன்று (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரும் ஏறாவூர் 5ம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த பெண் மற்றும் உயிரிழந்தவரின் மனைவி இருவரும் மீன் வாங்குவதற்கு புலையவெளி ஆற்றுக்கு சென்ற போது வயல் பகுதியில் நில மட்டத்தில் இருந்த யானை வேலிக்கு மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியுள்ளது.

இதன் போது உயிரிழந்த பெண் நீர் உள்ள பகுதியிலும் இறந்தவரது மனைவி மேட்டு நிலப் பகுதியில் விழுந்துள்ளனர். நீரில் விழுந்தவரை காப்பாற்றுமாறு அழைத்துள்ளனர்.

இதன் போது குறித்த பெண்ணை காப்பாற்ற முயற்சித்த ஆணும் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளார் மின்சார வேலிக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை அயலவர்கள் உடனடியாக துண்டித்து இருவரையும் முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீதி விபத்தில் இளம் பெண் பரிதாபமாக மரணம்!!

மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி உயிரிழந்துள்ளார்.

ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த எத்திமலை பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி டிப்பர் லொறி மோதி காயமடைந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த அவர் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 39 வயதான தமயந்தி குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மொனராகலையில் இருந்து சியம்பலாண்டுவ நோக்கி தனது உறவினருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, ​​சியம்பலாண்டுவ திசையில் இருந்து வந்த லொறி அவரது மோட்டார் சைக்கிளில் மோதியது.

லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபர் சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உலகில் தலை சுற்ற வைக்கும் தங்கத்தின் விலை : 5600 டொலர்களை எட்டியது!!

உலக வரலாற்றில் முதல்முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,600 டொலர்களை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்,

மற்றும் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் கனடா மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் காரணிகளினால், இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையேற்றம் இன்று ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்று அதன் விலை 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 420,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 384,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 52,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை தற்பொழுது தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்தாலும், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரட்ணராஜா சரவணன் தெரிவித்துள்ளார்.

அங்குலானை கொலைச் சம்பவம் : தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!!

அங்குலானை சயுரபுர தொடர்மாடி குடியிருப்பில் கடந்த 27ஆம் திகதி 24 வயதுடைய யுவதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் நேற்று புதன்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

தகாத உறவில ்ஈடுபட்டிருந்த நபருடன் ஏற்பட்ட தகராறில் 24 வயதுடைய குறித்த யுவதி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் நேற்று அங்குலானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அங்குலானை, சயுருபுர பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

24 வயதுடைய யுவதி காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை!!

24 வயதுடைய யுவதி ஒருவர், காதலன் என கூறிக்கொண்ட ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அங்குலான பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் வாதுவ, குடா வஸ்கடுவ, லிப்பன்ஸ் வட்டத்தைச் சேர்ந்த ஹேஷலா கவிந்தி சில்வா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் நடத்திய ஆரம்ப விசாரணையில், தலைமறைவான சந்தேகநபர், தனது மனைவியை பிரிந்து வசித்து வருவதாகவும், யுவதியுடன் சுமார் எட்டு மாதங்களாக உறவில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருளுக்கு அதிக அடிமையான சந்தேகநபர், இதற்காக யுவதியை குறிவைத்து வந்துள்ளார். இதன் காரணமாக, யுவதின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்துச்செல்ல மறுத்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் தலைமறைவு

சந்தேகநபரின் சகோதரர் அங்குலான பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருவதுடன், அதே நேரத்தில் தாய் அருகிலுள்ள மற்றொரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மேலும் சந்தேகநபர் மற்றும் யுவதிக்கு அவரது தாயார் அல்லது சகோதரரின் வீட்டிலிருந்து உணவு வழங்குவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் புதிய உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை!!

கொழும்பு செட்டியார்தெரு தகவலின் படி இன்றைய தினம் (29.01.2026) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 384,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 420,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையேற்றம் இன்று ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்று அதன் விலை 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்தாலும், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரட்ணராஜா சரவணன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவில் சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 9520 ரூபா உயர்ந்து ஒரு சவரன் ரூ 134,400 இற்கும், கிராமுக்கு 1190 ரூபா உயர்ந்து ஒரு கிராம் 16,800 ரூபாவிற்கும் விற்பனையாகிறது.

அத்துடன் வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

அதன்படி, இன்று (29) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டொலர்களாகக் குறிப்பிடப்பட்டது. நேற்று (28) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,164 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இ.போ.ச பேரூந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இளைஞன் படுகாயம்!!

கேகாலை – அத்தனகொட வீதியில் நேற்று புதன்கிழமை (28) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார். விபத்தில் காயமடைந்த இளைஞன் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றை புரட்டிப்போடும் தங்கத்தின் விலை : பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகுமா?

பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கதரிசி பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கான சில கணிப்புகள் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

அவரது கணிப்பின்படி, உலக அளவில் ஒரு பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டு வங்கிகள் பாதிக்கப்படலாம் என சமூக வலைத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதாரத்தில் ஒரு நிலையற்ற தன்மை உருவாகும் என்று பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது முதலீட்டாளர்களை தங்கம் போன்ற பாரம்பரியமான மற்றும் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கித் தள்ளும். இதனால், தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்து ஒரு புதிய உச்சத்தை எட்டும் என்றும் சில கணிப்புகள் கூறுகின்றன.

ஆனால், பாபா வங்காவின் இந்தக் கணிப்புகள் வெறும் யூகங்களே தவிர, அவற்றுக்கு எந்த அதிகாரபூர்வ ஆதாரமோ அல்லது வரலாற்றுப் பதிவுகளோ இல்லை என்று ஆய்வாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.

வட்டி விகிதங்கள் உலக வட்டி விகிதங்கள், பணவீக்கம், அரசியல் பதற்றங்கள், மத்திய வங்கிகளின் கொள்கைகள் எனப் பல காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஆகவே, முதலீட்டாளர்கள் வெறும் வதந்திகளைக் கேட்டு பீதியடையாமல், மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும் என பொருளாதார வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதேவேளை இலங்கையில் வரலாற்றில் முதன் முறையாக தங்கத்தின் விலையில் நான்கு இலட்சம் ரூபாவை கடந்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு பதிவாகி வரும் நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி இன்றைய நிலவரப்படி (28.01.2026) உலக சந்தையில் தங்கத்தின் விலை 5250 டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதேவேளை கொழும்பு செட்டியார்தெரு தகவலின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 374,600 ரூபாவாக காணப்படுகிறது. அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 405,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே அவதானம் : தங்க நகைகளால் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை!!

நாட்டில் தற்போது தங்க நகைகளை கொள்ளையிடும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளுக்கு நாள் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஹட்டன் பகுதியில் நகை வாங்குவது போல பாவனை செய்த நபரொருவர் நகைக் கடைக்குள் வைத்தே தங்க நகையை கொள்ளையிட்டுச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், இரு தினங்களுக்குள் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இருந்து தங்க நகைகள் பறித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மோதரையில் இருந்து புறக்கோட்டைக்கும், பின்னர் வெள்ளவத்தை கடற்கரைக்கும் முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்த குழுவினர் முச்சக்கரவண்டி சாரதியிடம் இருந்து தங்க நகைகளைப் பறித்துச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

மிக நீண்ட சவாரியை மேற்கொண்டதன் காரணமாக, சாரதிக்கு குடிப்பதற்கு பால் பக்கற்றொன்றினை பயணம் செய்தவர்கள் கொடுத்ததாகவும் இதன் பின்னர் சாரதியிடம் இருந்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

கடந்த நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பது அவசியமாகின்றது.

பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் போதும், போக்குவரத்தின் போதும் அல்லது வீடுகளில் தனிமையில் இருக்கும் போதும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களால் உயிருக்கும் ஆபத்து ஏற்படக் கூடும் என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கையோடு செயற்பாடுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

தென்னிலங்கையில் கோர விபத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்!!

மாத்தறை, ஹக்மனை, வேபத்தைர, கட்டுபெலே சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடனும் கார் ஒன்றுடனும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹக்மனை, பெலியத்த வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஏஷான் பிரபோத என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் 16 வயதுடைய தனுக்க தேஜான் என்பவராகும். இருவரும் மாத்தறை மெதடிஸ்த மத்திய மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஹக்மனை – வலஸ்முல்ல வீதியில் பயணித்த சிறிய லொறி ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டு பின்நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

இதன்போது லொறிக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் லொறியுடன் மோதியுள்ளது.

இந்த நிலையில் எதிர்த்திசையில் வந்த கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

படுகாயமடைந்த மாணவன் கங்கொடகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் லொறி மற்றும் கார் ஓட்டுநர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹக்மனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.