பருப்பின் விலை மேலும் அதிகரிக்கலாம்!!

பருப்பு..

பருப்பின் விலையானது தேசிய சந்தையில் மேலும் அதிகரிக்கும் என அத்தியவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஒரு கிலோ கிராம் பருப்பு 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இலங்கைக்கு கனடா, அவுஸ்திரேலியாவில் இருந்து பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.

கனடாவில் அறுவடை குறைந்து உலக சந்தையில் பருப்பின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக இலங்கையிலும் அதன் விலை அதிகரிக்கலாம் எனவும் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

-தமிழ்வின்-

இலங்கையில் ஜேம் போத்தலில் உயிருடன் புழு கண்டுபிடிப்பு!!

உயிருடன் புழு..

இலங்கையின் முதல்தர நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் ஜேம் போத்தல் ஒன்றில் புழு ஒன்று உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. வாதுல பிரதேசத்தை சேர்ந்த தம்பிக்க சஞ்ஜீவ அபேசுந்தர என்பவரின் மகனே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

தம்மிக்க என்பவர் அண்மையில் வாதுவ பிரதேசத்தில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கெட் ஒன்றில் தனது மகனுக்காக ஜேம் போத்தல் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

அவரது மகன் ஜேம் போத்தலில் உள்ள ஜேமை உணவிற்கு எடுக்க தயாரான போது அதற்குள் உயிருடன் புழு ஒன்று காணப்பட்டுள்ளதனை அவதானித்துள்ளார்.

உடனடியாக இது தொடர்பில் குறித்த நிறுவனத்தின் நுகர்வோர் விவகார பிரிவிற்கு அறிவித்த போதிலும் கடந்த 10 நாட்களாக, நிறுவன தரப்பினர் எவ்வித பதிலும் வழங்கவில்லை என தம்மிக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்த தம்மிக்க உணவு பாதுகாப்பு தொடர்பான ஆலோசகர்களில் ஒருவராகும். இதன் காரணமாக அவர் இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை திறப்பது தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட முக்கிய தகவல்!!

நாட்டை திறப்பது தொடர்பில்..

எதிர்வரும் வாரம் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறக்க முடியும் என கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்து்ளளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட இராணுவ தளபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை இது தொடர்பான இறுதி முடியு வழங்கப்படும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

நாட்டை திறப்பதென்றால் அதற்கான வழிக்காட்டல் பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி, கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். அதற்கமைய பரிந்துரைகளுக்கமைய நாட்டை நடத்தி செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் வாரம் நாட்டை திறப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது. சுகாதார வழிமுறைகளின் கீழ் சில கட்டுப்பாடுகளுடன் நாடு திறப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோர்களால் கைவிடப்பட்டு கொரோனா தொற்றுக்குள்ளான குழந்தைக்கு வைத்தியசாலையில் காதுக்குத்து நிகழ்வு!!

திருகோணமலை..

பெற்றோர்களால் கைவிடப்பட்ட, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தைக்கு வைத்தியசாலை ஊழியர்கள் காதுக்குத்து நிகழ்வு நடத்தியுள்ளமை காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்து 06 நாட்களில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தையொன்று திருகோணமலை சிறுவர் இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டுவந்த நிலையில், அக்குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த குழந்தை,கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் அங்குள்ள வைத்தியசாலை ஊழியர்களினால் அக்குழந்தைக்கு காதுக்குத்து நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

கந்தளாய் கோவிட் வைத்தியசாலை ஏழாம் வாட்டுக்கு பொறுப்பான தாதியர்கள் 8 பேர் ஒன்றிணைந்து கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தைக்கு காது குத்தும் விழாவை மிகவும் குதூகலமாக கொண்டாடியுள்ளமை காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

21 ஆம் திகதி நாடு முழுமையாக திறக்கப்படுமா? : வெளியான செய்தி!!

நாடு முழுமையாக திறக்கப்படுமா?

எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை முழுமையாகத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிடடுள்ளது.

இது உத்தியோகபற்றற்ற தகவல் எனவும், கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்கா செல்லும்முன் நாடு திறக்கப்படுகின்ற தீர்மானம் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அந்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நிறைவுக்கு வரும் என்றும், அதன் பின்னர் நாட்டின் வழமையான செயற்பாடுகளை தொடர்வது பற்றிய பரிந்துரைகளை அறிக்கையாக முன்வைக்கும் படியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்திருக்கின்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 21ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (14.09) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் 104 வயது மூதாட்டி உட்பட 11 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக இன்று (14.09) 104 வயதுடைய மூதாட்டி உட்பட 11 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 11 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மரணித்த 11 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட உள்ளாடைகளை அணியாவிட்டால் யாரும் சாக மாட்டார்கள் : ராஜாங்க அமைச்சர்!!

அமைச்சர் திலும் அமுனுகம..

இறக்குமதி செய்யப்பட்ட உள்ளாடைகளை அணியாத காரணத்தினால் யாரும் மரணிக்கப் போவதில்லை என ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், கோவிட் தொற்று ஏற்பட்டால் மரணிக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை காலமும் உள்ளாடைகளைக் கூட இறக்குமதி செய்து அணிவதை இட்டு நாம் வெட்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். அதனைவிடவும் ஆடைகள் இன்றி இருப்பது மேலானது என அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு : ஏற்றுக்கொண்ட அரசாங்கம்!!

அத்தியாவசிய பொருட்கள் ..

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்த நிலையில், அதனை அமைச்சரவைப் பேச்சாளரான இலங்கையின் வெகுஜன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெறும நிராகரித்துள்ளார்.

இலங்கையில் நிலவிவரும் அத்தியாவசிய பொருட்களுக்கான நெருக்கடி எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் தீர்க்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக வெளியாகின்ற தகவல்களை அண்மையில் பி.பி.சி செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியின் போது இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் நிராகரித்திருந்தார்.

இருந்த போதிலும், கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய டளஸ் அழகப்பெரும, இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை இலங்கையில் எரிபொருளுக்கு கடந்த சில தினங்களாக தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில்,

தற்போது எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்றும் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்று இலங்கையின் அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுல்படுத்தப்படுமா? அமைச்சர் இன்று வெளியிட்ட தகவல்!!

ஊரடங்கு..

எதிர்வரும் வாரம் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் விளைவாக கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கோவிட் பணிக்குழு பரிசீலனை செய்த பின்னரே இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4.00 மணிவரை ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பூவரசன்குளம் தடுப்பூசி நிலையத்தில் மக்கள் குவிந்தமையால் குழப்பநிலை!!

தடுப்பூசி நிலையத்தில்..

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் தடுப்பூசி செலுத்த சென்ற இடத்தில் மக்கள் குவிந்தமையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் கோவிட் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைவாக பூவசரன்குளம் வைத்தியசாலையில் சாளம்பைக்குளம், பம்பைமடு, பூவரசன்குளம், வேலன்குளம், செக்கட்டிபுலவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு நாளுக்கு 500 பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அறிவுறுத்தல்களை மீறி 500 பேருக்கு அதிகமானோர் பூவரசன்குளம் வைத்தியசாலைக்கு முன்பாக சுகாதார நடைமுறைளைப் பின்பற்றாது தடுப்பூசி பெறுவதற்காக ஒன்று கூடினர்.

இதனைக் கட்டுப்படுத்தி சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வழிப்படுத்த முற்பட்ட போது கிராம அலுவலர் மற்றும் கடமையில் நின்ற உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் சுமார் 30 மணி நேரம் பதற்றமான நிலை காணப்பட்டதுடன், இராணுவத்தினரும், கடமையில் இருந்த உத்தியோகர்த்தர்களும் குவிந்த மக்களை வெளியேற்றி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வவுனியாவில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில (14.09) காலை வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று (13.09) 04 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 04 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

வைரவப்புளியங்குளம் (வயது 80), குட்சைட் வீதி (வயது 62), பாரதிபுரம் (வயது 30), பம்பைமடு (வயது 70) ஆகிய பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றால் மரணித்தவர்களாவார்கள்.

இந்நிலையில் மரணித்த 4 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்ட 62 வீதமானவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது!!

தடுப்பூசி..

வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 62 வீதமானவர்களுக்கும், 30 வயதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்ட 27 வீதமானவர்களுக்கும் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக கோவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1 ஒரு இலட்சத்து 81 ஆயிரம் தடுப்பூசிகள் வவுனியா மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றது. வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 23,145 பேர் இருக்கின்றார்கள்.

அதில் முதலாவது டோஸ் தடுப்பூசி 87 வீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி 62 வீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 30 வயது தொடக்கம் 59 வயதிற்கு இடைப்படட 72,210 பேர் இருக்கிறார்கள். அதில் முதலாவது டோஸ் கோவிட் தடுப்பூசி 69 வீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. இதில் 27 வீதமானவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளார்கள்.

மேலும், கிராம அலுவலர் ஊடாக தடுப்பூசி செலுத்தப்படும் விபரங்களைப் பெற்று உரிய இடங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டு கோவிட் அச்சுறுத்தலில் இருந்து விடபட முன்வர வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சேதன பசளை உற்பத்தியினை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கை!!

சேதன பசளை உற்பத்தியினை ஊக்குவிக்கும் முகமான விழிப்புணர்வு நடவடிக்கை ஒட்டுசுட்டான் விவசாய போதனாசிரியர் பிரிவில் வட மாகாண விவசாய திணைக்களத்தின் வழிகாட்டலில் CSIAP திட்டத்தின் அனுசரணையில் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வட மாகாண விவசாய பணிப்பாளர் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் வட மாகாண பிரதி பணிப்பாளர் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பண்ணை முகாமையாளர் விவசாய போதனாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சேதன பசளை உற்பத்தி சம்பந்தமான தெளிவூட்டல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கம் : விசேட வர்த்தமானி வெளியானது!!

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஹமீட் மொஹமட் முஜாஹிர் அதிகார வரம்பை மீறி செயற்பட்டதாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதி விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் பாவனையில் இருந்ததாக கூறப்படும் ஓர் உழவு இயந்திரம் குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது,

மன்னார் பிரதேச சபை தவிசாளர் அது பிரதேச சபைக்குரியது என தவறாக உரிமை கோரும் கடிதம் வழங்கி, நீதிமன்றில் இருந்து உழவு இயந்திரத்தை விடுவித்து அதிகார துஸ்பிரயோகம் செய்தார் என ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் முறைப்பாடு தொடர்பில் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழுவின் அறிக்கை மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோரின் பரிந்துரைக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய செப்ரெம்பர் 14 ஆம் திகதி தொடக்கம் பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர் ஆகிய பதவிகள் வெறிதாக்கப்பட்டுள்ளது.