கரூரில் இடம்பெற்ற தவெக கட்சியின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை நேரில் காண செல்வதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் பாதுகாப்பு கோரியுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும் சந்தித்து ஆறுதல் அளிப்பதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு தவெக கோரியுள்ளது.
மேலும், விஜய் குறித்த இடங்களுக்கு சென்றால் மீண்டும் மக்கள் கூட்டம் கூடும் வாய்ப்பு உள்ளது எனவும் அதன் காரணமாக இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதியும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி தருமாறு தவெக மனு தாக்கல் செய்யவுள்ளது.
மத்திய கிழக்கு நாடான குவைத்துக்கு சென்று சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்களை மீண்டும் அழைத்து வர வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவனம் செலுத்தியுள்ளது.
குவைத்தில் பல்வேறு காரணங்களுக்காக செஞ்சிலுவைச் சங்கத்தால் நடத்தப்படும் தனியார் நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தங்களை உடனடியாக விடுவித்து இலங்கைக்கு அழைத்துச் செல்லுமாறு வெளியிட்டுள்ள காணொளி சமூக ஊடகங்களில் கவனத்திற்குள்ளாகியுள்ளதாக பணியகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமது அவல நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹேரத் கவனம் செலுத்த வேண்டும் என காணொளி வாயிலாக குறித்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், இலங்கை வெளியுறவு அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது குழந்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று (28.09) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் இவ்வாறு குழந்தை மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றில் பாரப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை தவெக பேரணி நடந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் 40 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுன கைது செய்யப்பட்டுள்ளார். இன்றையதினம்(29.09.2025) கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு : நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று(29.09.2025) அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த ஊடகவியலாளர்களுடனும் அர்ச்சுனா முரண்பட்டுள்ளார்.
முன்னதாக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் கடந்த 25ஆம் திகதி உத்தரவிட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் மிகவும் பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை போக்குவரத்து பொலிஸார் கடந்த 22ஆம் திகதி விசாரித்தனர்.
இதன்போது, காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என பொலிஸார் வினவியதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொண்டார்.
இந்நிலையில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று (27) அதிகாலை தனியார் பேரூந்துகள் இரண்டு பூகொடை-தொம்பே வீதியில் மோதி விபத்திக்கு உள்ளாகி உள்ளன. தனியார் பயணிகள் பேரூந்துகள் இரண்டும் தொம்பே பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன.
விபத்தில் இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு விபத்தில் சிக்கிய பேரூந்துகளின் முன்பக்கங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. எனினும் பேருந்துகளில் பயணித்த பயணிகளின் தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காரில் ஒருவர் மட்டும் பயணித்தால் வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஐடி துறையின் தலைநகராக கருதப்படும் பெங்களூரு, பல ஆண்டுகளாக டிராபிக் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது.
அவுட்டர் ரிங் ரோடு(ORR) போன்ற முக்கிய சாலைகளில் சில கிலோமீட்டர் தூரங்களை கடக்கவே பல மணி நேரம் ஆகும் நிலையில், இந்தியாவின் மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ள நகரமாக பெங்களூரு கருதப்படுகிறது.
இந்த போக்குவரத்து பிரச்சினையை சரி செய்வது குறித்து கர்நாடக மாநில தலைமை செயலாளர் ஷாலினி ரஜ்னீஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், கர்நாடக பெரு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நகர வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை செயலாளர் ஷாலினி ரஜ்னீஷ், “போக்குவரத்து நெரிசலை குறைக்க நெரிசல் வரியை(Congestion Tax) அமுல்படுத்துவது குறித்து விவாதித்தோம். இதன்படி, பெங்களூரு ORR சாலைகளில் காரில் ஒருவர் மட்டும் பயணித்தால் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
இது மக்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிப்பதோடு, கார்களின் பயன்பாட்டை குறைப்பதால், போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. OOR மற்றும் அதிக போக்குவரத்து உள்ள சாலைகளில் இதனை அமுல்படுத்த திட்டமிட்டுளோம்”என தெரிவித்துள்ளார்.
வடக்கே ஹெப்பலில் இருந்து தெற்கே சில்க் ரோடு வரை நீண்டுள்ள இந்த OOR சாலையில், பல்வேறு முக்கிய நிறுவனங்கள் உள்ளதால், இந்த சாலை அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் ஒன்றாக உள்ளது.
மேலும், சாலை பள்ளங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை 90 நாட்களுக்குள் தீர்ப்பதாக இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பச்சிளம் குழந்தையை காட்டில் கைவிட்டு சென்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா வனப்பகுதியில் பிறந்து 19 நாளே ஆன பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக இந்த குழந்தை பிறந்ததால், குழந்தையை தாய் காட்டில் கைவிட்டதாக தெரியவந்துள்ளது.
சமூக அவமானத்துக்கு பயந்து குழந்தையின் தாயும் அவரது தந்தையும் பண்டி பகுதியில் தனியாக வீடு ஒன்று வாடகை எடுத்து பிரசவத்தை முடித்துள்ளனர்.
இதையடுத்து பிறந்து 19 நாளே ஆன குழந்தையை பில்வாரா பகுதியில் கைவிட்டதோடு குழந்தை அழுது கத்தி பிறரின் கவனத்தை பெறாமல் இருக்க குழந்தையின் வாயில் கை திணக்கப்பட்டு உதடுகள் பசையால் ஒட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக ஆடு மேய்ப்பவர் ஒருவர் குழந்தை மீட்கப்பட்ட நிலையில் குழந்தையின் தாயும், குழந்தையின் தாய்வழி தாத்தாவும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் விசாரணையில், பிறந்த குழந்தையை முதலில் விற்கவும் முயற்சித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட தாய்க்கும், குழந்தைக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குழந்தை தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழை நீரில் அறுந்து கிடந்த மின்சார வயரை, பள்ளி முடிந்து வீடு திரும்பிய சகோதரிகள் மிதித்த நிலையில்,
சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரிய ஊழியர்களின் அலட்சியமே சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ஜிராபஸ்தி கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஆஞ்சல் யாதவ்(15).
இவரது தங்கை ஆல்கா யாதவ்(12), 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக பள்ளிக்கு சென்று வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை சகோதரிகள் இருவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் தேங்கி இருந்த மழைநீரில் மின்சார வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் அதில் இருவரும் கால் வைத்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சார வாரிய ஊழியர்களின் அலட்சியமே சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம் என அவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரியை செப்டம்பர் 30, 2025 அன்று அல்லது அதற்கு முன் செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும் உள்நாட்டு வருவாய் திணைக்களம் நினைவூட்டியுள்ளது.
இந்த உத்தரவு தனிநபர்கள், நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் கூட்டாண்மைகள் மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
IRD யின் படி, இறுதி கட்டணத்தை இணையவழி (online )வரி செலுத்தும் தளமான (OTPP) அல்லது இலங்கை வங்கியின் எந்த கிளையிலும் செலுத்தலாம்.
தாமதங்கள் அல்லது தவறவிட்ட கட்டணங்கள் வட்டி மற்றும் அபராதங்களுக்கு வழிவகுக்கும் என்பதை குறிப்பிட்டு, வரி செலுத்துவோர் நேரடியாக செலுத்தும் சீட்டுகளுக்காக காத்திருக்க வேண்டாம் என்றும் வருமான வரி தினைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களை பண ரீதியில் ஏமாற்றியதற்காக பம்பலப்பிட்டியில் சந்தேகத்தின் பேரில் மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் போலி விசா ஸ்டிக்கருடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், 69 வயதுடைய ஆண், ஒருவரும் 26 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்களும் அடங்குவர்.
கனடாவுக்கு மக்களை அனுப்புவதாகக் கூறி, பெண் சந்தேக நபர், இருவரிடம் 3,831,000 ரூபா மற்றும் 3,436,000 ரூபா என்ற வகையில் பணத்தை மோசடி செய்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் இது போன்ற பிற மோசடிகளில் ஈடுபட்டார்களா என்பதைக் கண்டறிய பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
தொடருந்தில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் சிராவஸ்திபுர தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (26.09.2025) அதிகாலை ஒரு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 57 வயதுடைய கண்டி பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் மக்கள் மத்தியில் கணனி அறிவு தொடர்பில் புதிய ஆய்வு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் 2024ஆம் ஆண்டில் 64.1% மக்கள் கணினி பயன்படுத்தத் தெரியாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட அண்மைய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் நாட்டில் 5 பேரில் 2 பேருக்கு மட்டுமே கணினி அறிவு உள்ளது தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கணினி அறிவு விகிதம் இன்னும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2024 ஆண்டில் மக்கள் மத்தியில் கணனி அறிவு 3.1 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
குடிசன மதிப்பீட்டு, புள்ளி விபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கடந்த மாதம் 85 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் இலாபமடைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிபுணத்துவ திட்டமிடலுக்கு அமைய யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுமே தவிர அரசியல்வாதிகளின் நோக்கங்களுக்காக அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்காக 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 2025.09.21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 150 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை விரிவுப்படுத்துவதற்கான காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு அபிவிருத்தி பணிகள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது.
ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் கேள்விகளை கேட்பது பொறுத்தமானதாக அமையும் என அமைச்சர் பிமல் ரட்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பலத்த காயங்களுடன் முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவின் அங்கொடை பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அங்கொட பகுதியை சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அயல் வீட்டு நபர் எனவும் உயிரிழந்த பெண்ணும் சந்தேக நபரும் ஒரே நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வந்தனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து சந்தேக நபர் ஆயுதத்தால் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடல் முல்லேரியா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.