அனுமதி மறுக்கப்பட்டதால் மருத்துவமனை வளாக கால்வாயில் பிரசவித்த பெண்!!

ஓடிசா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால் அருகாமையில் உள்ள கால்வாய்க்குள் அமர்ந்து கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் கோராபட் பகுதியில் ஒரு கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்வதற்காக சென்றுள்ளார்.

ஆனால் அவரிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் அவரை அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இதையடுத்து அந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிற்றுண்டி சாலை அருகே இருந்த கால்வாயினுள் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து செய்தி அறிந்ததும் மருத்துவமனை நிர்வாகத்தினர் உடனடியாக சென்று அந்தப் பெண்ணையும் குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

நியாய விலையில் தேங்காய் வழங்கும் வேலைத் திட்டம் நாளை முதல்!!

பொது மக்களுக்கு நியாய விலையில் தேங்காயை விநியோகிக்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பான ஆரம்ப வைபவம் அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையில், பத்தரமுல்லை தெங்கு உற்பத்தி சபையின் கட்டிட வளவில் நடத்தப்படவுள்ளது. தேங்காய்க்கு ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் 75 ரூபாவுக்கு மேலதிகமாக தேங்காயை விற்பனை செய்ய முடியாது என்று தெங்கு உற்பத்தி சபையின் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்.

அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் சட்டத்தின் முன் நிறுத்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுமென்று நுகர்வோர் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மொத்த விலையில் தேங்காய் தற்போது 40 ரூபாவுக்கும் 45 ரூபாவுக்கும் இடையில் காணப்படுகிறது.

வர்த்தகர்கள் கூடுதலான இலாபத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தேங்காயின் விலையை அதிகரித்துள்ளனர்.

இதுவே தேங்காய் விலைக்கு அதிகரிப்பிற்குக் காரணம் என்று தெங்கு உற்பத்தி சபையின் கபில யகந்தாவல மேலும் தெரிவித்துள்ளார் என, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

தேங்காய்க்கான தட்டுப்பாடு நீங்கம் வரையில் தெங்குத் தொழிலுக்காக மாத்திரம் கொப்பராவை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேங்காய் பால் தயாரிப்பாளர்களுக்கும் இதனுடன் தொடர்புடைய தொழில்துறையினருக்கும் இறக்குமதி வரி இன்றி அவற்றை இறக்குமதி செய்து கொள்ள முடியும்.

கொப்பராவை உடனடியாக துறைமுகத்திலிருந்து விடுவித்துக் கொள்ளும் வகையில் தேவையான அனுமதியை வழங்கவும் ஆலோசனை சுங்கப்பகுதியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதிபர்கள் மோசடியில் ஈடுபடுவது நிரூபிக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்யப்படுவர்!!

அண்மையில் கல்வி அமைச்சின் மூலமாக பாடசாலை வாசிகசாலைகளுக்கான புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இலவச சீருடைகளும் வழங்கப்பட்டன. இவற்றில் ஒரு சில அதிபர்கள் மோசடியில் ஈடுபடுவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறான அதிபர்கள் உரிய முறையில் இனம் காணப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஒரு சில மலையக பாடசாலைகளில் இருந்து மேற்படி விடயங்கள் தொடர்பாக எனக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக நான் கல்வி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். அது மாத்திரமன்றி கல்வி அமைச்சின் மூலமாக மிக விரைவில் சுற்று நிருபம் ஒன்றையும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களின் வாசிப்பு திறனை அபிவிருத்தி செய்கின்ற நோக்கத்துடன் பாடசாலை வாசிகசாலைகளுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக பணம் வழங்கப்பட்டது. ஆனால் ஒரு சில அதிபர்கள் இந்த பணம் கிடைத்தவுடன் பாடசாலைகளில் வாசிகசாலைகளுக்கு பொறுப்பாக இருந்த ஆசிரியர்களை உடனடியாக நீக்கிவிட்டு அந்த பதவியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன் மூலம் அதிபர்கள் ஏதோ ஒரு விடயத்தை திட்டமிடுவது தெளிவாக தெரிகின்றது. ஆனால், அதற்கு எந்த வகையிலும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது. அதே நேரத்தில் சீருடைகள் தொடர்பாகவும் பல முறைப்பாடுகள் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கிடைத்துள்ளது. அதிபர்கள் சிலர் தற்பொழுது துணி வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இதனை கல்வி அமைச்சு எந்த வகையிலும் அனுமதிக்காது. அரசாங்கம் மாணவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த பணத்தை பிழையான முறையில் கையாள முடியாது. பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் அவர்கள் உரிய முறையில் புத்தகங்களை கொள்வனவு செய்து அவற்றை முறையாக பட்டியலிட்டு அதனை வாசிகசாலைக்கு பொறுப்பான ஆசிரியர் கையொப்பமிட்டு, பின் அதிபர் உறுதிப்படுத்தி கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அரசாங்கம் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு வளங்களை வழங்கி வருகின்றது. அதனை எமது பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நான் பல சிரமங்களுக்கு மத்தியில் நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அதனை ஒரு சில அதிபர்கள் தவறாக பயன்படுத்தினால் அவர்களை எந்த காரணம் கொண்டும் மண்ணிக்க முடியாது.

இது தொடர்பாக பெற்றோர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் ஆகியோரும் உரிய கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக எந்தவித தயவு தாட்சன்யமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பகுதியில் காணாமல் போன சிறுவன் கட்டுவன்வில பகுதியில் மீட்பு!!

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் அண்மையில் காணாமல் போன சிறுவன் வெலிகந்தை கட்டுவன்வில பிரதேசத்தில் உள்ள உணவு விடுதியொன்றில் வேலை செய்து வந்த நிலையில் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர், கலைமகள் வித்தியாலய வீதி, ஹிதாயத் நகரைச் சேர்ந்த 15 வயதுடைய அப்துல் கரீம் ஹியாஸ் அப்துல் ஷாலிஹ் என்ற சிறுவன் கடந்த 13ஆம் திகதி இரவில் இருந்து காணாமல் போயிருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவனின் பெற்றோர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் காணாமல்போன சிறுவனின் தந்தை குறிப்பிடுகையில், ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன் வருட இறுதித் தவணை விடுமுறை கிடைத்ததும் நண்பர்களின் தூண்டுதலின்பேரில் வீட்டாருக்குத் தெரியாமல் தலைமறைவாகியிருந்தார் என தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு, தாம் தேடுதலிலும் ஈடுபட்டதாகவும் அதன் பின்னர் இவர் கட்டுவன்வில பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்வதாக தகவல் கிடைத்ததும் அங்கு சென்று அவரை மீட்டெடுத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை விடுமுறை காலங்களில் மாணவர்களை தமது கண்காணிப்பில் இருந்து மறையாத வண்ணம் அவதானத்துடன் இருக்குமாறு பெற்றோர்களுக்கு இதன்போது பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கனடாவில் யாழ். இளைஞன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை!!

கனடாவில் யாழ். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலமுரளி கிருஷ்ணா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 12ம் திகதி துப்பாக்கி சூட்டு விளையாட்டுக்கு சென்ற வேளையில், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கனடாவின் ரொறண்டோவில் வசித்து வரும் பாலமுரளி, Brock பல்கலைக்கழக மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களிடம் தர்ம அடி வாங்கிய வாள்வெட்டுக் குழு பொலிஸாரிடம் சிக்கினார்கள்!!

யாழ். கோண்டாவில் பகுதியில் நேற்று வாள்களுடன் சென்ற குழுவினரை அப்பகுதி மக்கள் அடித்து துரத்திய நிலையில் அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள், கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள கடையொன்றில் வாள்களுடன் சென்று கொள்ளையிட முயன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் பொதுமக்களிடம் அடிவாங்கிய குறித்த நபர்கள் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் கொக்குவில், கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் இரும்பு குழாய் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

 
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று (17.12.2017) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கல்வியற்கல்லூரிக்கு சொந்தமான வாகனம் இன்று அதிகாலை ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது

இவ் விபத்தில் வீதியில் நடந்து சென்ற 46 வயதுடைய நபர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் சமயத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் சிறந்த 43 பொலிஸார் கௌரவிப்பு!!

 
வவுனியா மாவட்டத்தில் சிறந்த பொலிஸாருக்காக கௌரவிப்பு நேற்று முன்தினம் (15.12.2017) காலை 10 மணியளவில் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

பொலிஸ் அதிகாரி ரி.எம்.எஸ்.எம் தேன்னக்கோன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசரி பேனந்தோ வுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ. ஏ.மகிந்த உட்பட பலர் கலந்து கொண்டு வவுனியா மாவட்டத்தில் சிறந்த 43 பொலிஸார்களுக்கு கௌரவிப்பு செய்தனர்.

பலர் தூக்கத்தை தொலைக்க நேரிடும் : பகிரங்க எச்சரிக்கை விடுத்த வடகொரியா!!

அமெரிக்காவின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்தால் பலர் தூக்கத்தை தொலைக்க வேண்டியிருக்கும் என வடகொரியா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

வடகொரியாவின் நடவடிக்கைகள் மூன்றாவது உலக யுத்தத்தை வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்து வந்தாலும், அணு ஆயுத திட்டங்களால் உலகின் சக்தி வாய்ந்த நாடாக உருவாகும் வரை தங்களின் நடவடிக்கைகள் தொடரும் என வடகொரியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால் அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரிய தலைவருக்கும் இடையே சமீபகாலமாக வார்த்தை போர் நீடித்து வருகிறது.

மட்டுமின்றி வடகொரியாவின் கொட்டத்தை அடக்க, தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அமெரிக்கா போர் ஒத்திகையிலும் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு தக்க பதிலடி தரும் வகையில், தங்கள் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமெரிக்காவின் போக்கு கண்டிக்கத்தக்கது என கடிந்துள்ள வடகொரியா, இதுபோன்ற நடவடிக்கைகள் பலரது தூக்கத்தை தொலைக்க காரணமாகும் என மறைமுகமாக போர் மூளும் அபாயம் குறித்து அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

இதனிடையே வடகொரியாவுக்கு எதிரான நிலை மேற்கொள்ள ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஆனால் ஏற்கெனவே வடகொரியா மீது அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் ரஷ்யா, அமெரிக்காவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு வடகொரியாவை எதிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரு கால்களையும் இழந்த பாலஸ்தீன நபர் சுட்டுக்கொலை : இஸ்ரேல் ராணுவம் அட்டகாசம்!!

 
இரு கால்களையும் இழந்த பாலஸ்தீன போராட்டக்காரர் இஸ்ரேல் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த நாளில் இருந்தே போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இதன் போது இரு கால்களையும் இழந்த Ibrahim Abu என்பவர் இஸ்ரேல் ராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். குண்டடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஷிபா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

இதற்கு முன்னரும் கடந்த 2014ம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போதே Ibrahim Abu இரு கால்களையும் இழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது மற்றொரு நபரும் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீன கொடியை ஏந்தியபடி சக்கர நாற்காலியில் Ibrahim Abu இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

டிரம்பின் அறிவிப்புக்கு பின்னர் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொலை செய்யப்படும் பாலஸ்தீன நபர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரத்தவெள்ளத்தில் கிடந்தவர்களை பார்த்து கதறிய குழந்தை : மனதை உருக வைக்கும் சம்பவம்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தல் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை பார்த்து குழந்தை அழுதுகொண்டிருந்த காட்சி அனைவரையும் உருகவைத்துள்ளது.

பவித்ரன் என்ற பள்ளி மாணவன் தனது அக்கா பிரியாவை தையல் பள்ளியில் கொண்டு சென்றுவிடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார், இவர்களுடன் மற்றொரு அக்கா மகளான 3 வயது குழந்தையையும் அழைத்துசென்றுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் சென்ற ஆலங்கிணறு பாதையில், சின்னத்துரை, சந்திரசேகர் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர், இந்த இரு சக்கர வாகனங்களும் எதிர் எதிரே மோதியதில் அனைவரும் தூக்கிவீசப்பட்டனர்.

இதில் பவித்ரன் மற்றும் சின்னத்துரை ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளனர், மற்றவர்கள் பலத்த காயத்துடன் விழுந்து கிடந்தனர், இவற்றையெல்லாம் பார்த்த 3 வயது குழந்தை ரத்தகாயத்துடன் அவர்களை பார்த்து அழுதுள்ளது.

அருகில் உள்ளவர்கள் உடனடியாக அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தையடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பவித்ரன் மற்றும் சின்னத்துரை ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர், குழந்தை உட்பட மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வவுனியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் 25வது நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

 
வவுனியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தா.சிவசிதம்பரத்தின் 25வது நினைவு தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (16.12.2017) இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன் போது அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.ஆனந்தசங்கரி , பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், சிறப்பு விருந்தினராக முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சரும் வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர் மற்றும் அதிதிகளாக சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் நா.சோனாதிராஜா, வவுனியா இந்து மாமன்ற தலைவர் வை.செ.தேவராசா, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் தலைவர் மு.குகதாசன், யாழ் பல்கலைக்கழக அரச அறிவியல் துறை தலைவர் கே.ரி.கணேசலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன், மாவட்ட – பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்கள், வவுனியா வர்த்தக சங்க தலைவர், உள்ளுர் விலைபொருள் உற்பத்தி சங்க உறுப்பினர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கணவன்- மனைவி தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது!!

தமிழ்நாட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கணவன்- மனைவியின் உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.

சேலம் குகை நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் நடராஜன், துணி வியாபாரியான இவருக்கு சந்திரகலா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் பெங்களூரிலும், இளைய மகன் தாய்லாந்திலும் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு மூத்த மகன் அருண்பிரகாசுக்கு நடராஜன் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில், உன் சித்தப்பாவின் தொந்தரவு அதிகம் இருப்பதால் நடராஜன்- சந்திரகலா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருந்தனர், வீட்டு சாவியும் இருந்துள்ளது.

உடனடியாக உறவினர்களுக்கு போன் செய்த அருண்பிரகாஷ் விவரத்தை கூறியுள்ளார். அவர்கள் சென்று பார்த்த போது வீடு பூட்டியிருந்தது, பொலிசுக்கு தகவல் அளித்த பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். கட்டிலில் கணவன்- மனைவி இருவரும் பிணமாக கிடந்தது, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்நிலையில் மேசையின் மீது நடராஜன் எழுதி வைத்திருந்த கடிதம், சிடி மற்றும் 2 பென்ரைவ்களை பொலிசார் கைப்பற்றினர்.

முதற்கட்ட தகவலில், நடராஜன் வீட்டின் முதல் மாடியில் அவருடைய தம்பி வசித்து வருகிறார், ஆனால் வீட்டை நடராஜனின் மகன்கள் பெயருக்கு அவருடைய தந்தை எழுதி தரவே காலி செய்யுமாறு தம்பியிடம் நடராஜன் கூறியதாக தெரிகிறது.

1 கோடி கொடுத்தால் வீட்டை காலி செய்வதாகவும், இல்லையெனில் கொன்று விடுவேன் என தம்பி மிரட்டியுள்ளார்.

அடிக்கடி தகாத வார்த்தையால் திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார், இதுவே இருவரின் தற்கொலை காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பெற்றோரை இழந்த குடும்பத்திற்கு வாழ்வளித்த கனடா பாராவூர்தி சாரதிகள்!!

 
வவுனியா தவசிகுளம் கந்தபுரம் கிராமத்தில் தாய் தந்தையினையிழந்து வாழ்ந்து வரும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் கனடா கியுபைக் மோன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதிகள் நற்பணி மன்றத்தினால் இன்று (16.12.2017) காலை 9.30 மணியளவில் முப்பது முட்டையிடும் கோழிகள் மற்றும் அவற்றுக்காக உணவுகள் வழங்கி வைக்கப்பட்டது.

தந்தை பிரிந்த நிலையில் தாயின் அரவணைப்பில் 14,18 வயதுடைய இரு பெண் பிள்ளைகளும் 23, 24 வயதுடைய ஆண் மகனும் வாழ்ந்து வந்தனர். இந் நிலையில் கடந்த 24.10.2017 அன்று தயாரும் சுகயீனம் காரணமாக இறந்துள்ளார். இதன் காரணமாக 14 வயதுடைய பெண் பிள்ளையின் கல்வி பாதிப்படைந்தது.

தங்களது வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுமாறு கனடா கியுபைக் மோன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதிகள் நற்பணி மன்றத்தினருக்கு விடுத்த வேண்டுகோளிக்கிணங்க இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் உதவித்திட்டத்தினை நற்பணி மன்றத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகளான பா.கதீஷன், பா.லம்போதரன், வ.பிரதீபன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

தாயின் உடலையாவது மீட்டுத்தாருங்கள் : மகன் ஒருவரின் உருக்கமான வேண்டுகோள்!!

மத்திய கிழக்கு நாடொன்றில் வேலைக்குச் சென்ற நிலையில், உயிரிழந்த தனது தாயின் உடலையாவது மீட்டுத்தாருங்கள் என உயிரிழந்த பெண்ணின் மகன் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
கெக்கிராவ கிதுல்ஹிடியாவ பிரதேசத்தைச் சேர்ந்த நெல்கா திபானி குமாரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
“கடந்த 2011ஆம் ஆண்டு வேலைவாய்ப்பொன்றை பெற்றுக்கொண்டு சவுதிக்குச் சென்ற குறித்த பெண், 2013ஆம் ஆண்டு மீண்டும் நாட்டிற்கு திரும்ப இருந்த நிலையில், ஊதியம் வழங்காது கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அன்று முதல் தனது தாயை தொடர்புகொள்ள முடியாமல் போனது. பின்னர் கடும் சிரமங்களுக்கு மத்தியில் 2014ஆம் ஆண்டு தாயை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக உயிரிழந்தவரின் மகன் தெரிவித்துள்ளார்.
பின்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய தனது தாய் மூன்று மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தனது தாயை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களிடம் கோரிக்கை விடுத்த போதிலும், அது பயனளிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 13ஆம் திகதி தனது தாய் உயிரிழந்து விட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் தொலைபேசி மூலமாக தெரியப்படுத்தினார்.
தற்போது தாயின் உடலை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு மீண்டும் கோரிக்கை கடிதம் எழுதி வருவதாக” அவரது மகன் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரை திருப்பியனுப்ப வேண்டாம் : அவுஸ்திரேலிய அரசிடம் ஐநா கோரிக்கை!!

ஏதிலி கோரிக்கையை முன்வைத்து தமது நாட்டுக்கு வந்துள்ள இலங்கை தமிழர் ஒருவரை திருப்பியனுப்ப வேண்டாம் என்று ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு அவுஸ்திரேலிய அரசாங்கத்தை கேட்டுள்ளது.
குறித்த தகவல் தொடர்பில் தெ கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. 10 சுயாதீன மனித உரிமைகள் காப்பு நிபுணர்களை கொண்ட இந்தக்குழு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கை ஒன்றில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜேரான் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த இலங்கை தமிழரின் ஏதிலிக் கோரிக்கை தற்போது பரிசீலிக்கப்படும் நிலையில் அவரை திருப்பியனுப்ப வேண்டாம் என்றும் அந்தக் கோரிக்கைகயில் கேட்கப்பட்டுள்ளது.