கியூபாவில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு பயணித்த போயிங் 737 ரக பயணிகள் விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் பயணித்த சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த விமானத்தில் 105 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்கள் உள்ளிட்ட 114 பேர் வரையில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபாவில் 104 பயணிகளுடன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால், பயணிகள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற விமானம் Havana-வின் José Marti சர்வதேச விமானநிலையத்திலிருந்து 107 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்திலே விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை.
விமான விபத்தை தொடர்ந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்துள்ளதாகவும், விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருவதாகவும் அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வவுனியா நெடுங்கேணி நயினாமடுவில் பாரிய மரம் முறிந்து விழுந்தில் வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு செல்வதற்கான வீதி தடைப்பட்டதுடன் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடும் காற்றுடன் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக இன்று மதியம் 12 மணிக்கு நெடுங்கேணி நயினாமடு பிரதான வீதிக்கு அருகில் இருந்த பாரிய மரம் வீதிக்கு குறுக்காக முறிந்து விழுந்ததன் காரணமாக இவ் வீதியினூடாக போக்குவரத்து செய்ய முடியாத நிலையேற்பட்டது.
இதனால் வவுனியா முல்லைத்தீவு போக்குவரத்து முற்றாக தடைப்பட்ட நிலையில் உடனடியாக விரைந்து செயல்ப்பட்ட கிராமத்து இளைஞர்கள் வீதியின் குறுக்காக விழுந்து கிடந்த மரத்தை துரிதகதியில் வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்திருந்தனர்.
மேலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு சென்ற மக்கள் அப்பாதை தடைப்பட்டதன் காரணமாக பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
வரலாற்று சிறப்புமிக்க தொண்மை மொழியான தமிழை பேச பலரும் விரும்பமின்றி ஆங்கில மொழியை பேசி வருகின்றனர். ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாகவும் கௌரவமாகவும் எண்ணுகின்றனர்.
இந்நிலையில் புலம்பெயர் தேசத்து நாடொன்றில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமியின் பேச்சு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வெளிநாட்டில் பிறந்தாலும், மழலை ததும்ப அழகிய தமிழில் பேசும் விதம் பலரையும் கவர்ந்துள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தமிழினப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் தமிழர் தாயகப்பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், முள்ளிவாய்க்காலில் அனுஷ்டிக்கப்பட்ட தமிழின படுகொலையின் நினைவேந்தலில் மனதை உருக்கும் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்திருந்தன.
இரத்தம் தோய்ந்த இந்த நாளில் முள்ளிவாய்க்காலில் இப்படியும் ஒரு மனிதாபிமானமா? என எண்ணி கண்ணீர்வடிக்கும் வகையிலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் இடம்பெற்றது.
தனது இன்னுயிர் உறவுகளை இழந்து கதறி அழும் தாய்மாரின் கண்ணீர் காண்போர் மனத்தில் துயரினை ஏற்படுத்தியிருந்தது. மேலும், முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்து கொண்ட தாயொருவர் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவார் என உணர்ச்சிப்பொங்க தெரிவித்திருந்தார்.
அவர் தொடர்ந்து கருத்து வெளியிட்டபோது, எனது பிள்ளை, சுற்றத்தாரை இழந்து நான் தனித்துவிடப்பட்டுள்ளேன். எனக்கென்று ஒரு வீடு இல்லை, அரசியல்வாதிகள் வந்தார்கள் உங்களுக்கென்று ஒரு வீட்டுத்திட்டம் தருகின்றோம் என்று கூறினார்கள், வீட்டுத்திட்டமும் கிடைத்தது.
ஆனால் இந்த வீட்டுக்காக பெரும் கடன் பட்டுள்ளேன், வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் மாத்திரம் அமைச்சராவதற்கு முன்னர் எனது கடனை அடைக்க பணம் கொடுத்து உதவினார்.
ஆனால் எனது கடனை இன்னும் முழுமையாக என்னால் இன்னும் முழுமையாக அடைக்கமுடியவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அத்தருணத்தில் குறுக்கிட்ட ஒருவர் உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கிறது அம்மா என்று கேள்வி எழுப்ப தான் இன்னும் வீட்டுத்திட்டத்திற்காக 15,000 ரூபா செலுத்த வேண்டும் என அந்த தாய் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு குறித்த நபர், உங்களுடைய பிள்ளையாய் என்னை நினைத்து இந்த பணத்தினை பெற்றுக்கொள்ளுங்கள் என 20,000 ரூபா பணத்தினை அந்த தருணத்திலேயே எடுத்துக்கொடுத்து உதவியுள்ளார்.
என்னை உங்களுடைய பிள்ளையாய் நினைத்துக்கொள்ளுங்கள் என அந்த நபர் கூறிய தருணம், நான் உங்கள் அனைவரையும் என்னுடைய பிள்ளையாய்தான் நினைக்கின்றேன் என அந்த தாய் தெரிவித்தமை அங்குள்ள அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், குறித்த நபரின் மனிதாபிமானம் அங்குள்ள மக்கள் அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வவுனியா நகரசபையில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்கு முன்னால் இன்று (18.05.2018) மாலை 5.30 மணிக்கு நகரசபையின் தவிசாளர் ஆர்.கௌதமன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
உயிர் நீத்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிர் நீத்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காக மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், எஸ்.சிவமோகன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வின் இறுதியில் தமிழ் விருட்சம் அமைப்பினரின் வேண்டுகோளிற்கு இணங்க பிரான்ஸ் வாழ் தமிழன் கார்மேகன் கலையழகன் அவர்களின் நிதியுதவியில் முன்னாள் போராளியோருவரின் பிள்ளைகளின் கல்விச்செலவுக்காக 5000 ரூபா பணத்தினை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் வழங்கி வைத்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொடர்ச்சியாக ஈழத்தில் முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை சூழவுள்ள இடங்கள் அனைத்திலும் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர் தாயக தமிழர்கள்.
இலங்கை இராணுவத்தினதும், இலங்கை அரசினதும் அந்த கொடூர தாக்குதல்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் விஷ்வரூபம்கொண்டு இலட்சக்கணக்கான தமிழர் குடும்பங்களை கருவறுத்த அந்த இரத்தம்தோய்ந்த தினத்தின் 9ஆம் வருட நினைவேந்தல் இன்றைய தினத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியுடன் மௌனிக்கப்பட்டது தமிழர்களின் உரிமைகோரிய யுத்தம் மாத்திரம் அல்ல, தமிழர்களின் சுயமாக செயற்படுவதற்கான சுதந்திரமும்தான்.
இந்நிலையில், இவ்வருடம் 4ஆவது தடவையாக பகிரங்கமாக முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு மாகாண சபையினரினதும், யாழ். பல்கலைக்கழக மாணவர்களினதும் ஏற்பாட்டில் இவ்வருடமும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான யாழ். பல்கலை மாணவர்களின் பேரணியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டது.
யுத்தம் மௌனிக்கப்பட்ட 2009ஆம் ஆண்டிற்கு முன்னர், தமிழீழ விடுதலைப்புலிகளால் எவ்வாறு மாவீரர் தினங்கள் தொட்டு அவர்களது நினைவுதினங்கள்வரை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டனவோ அதேபோன்று இன்றைய தினம் யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மத, குல பேதம் மறந்து ஆயிரக்கணக்கில் தமிழின எழுச்சிக்காக இன்றைய தினம் மாணவர்கள் ஒன்று திரண்டிருந்தனர்.
இந்த துணிவான செயல்களும், உணர்வுபூர்வமான அஞ்சலிகளும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, மீண்டுமொருமுறை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் உணர்வெழுச்சியுடன் ஒரு நிகழ்வை நடத்தியது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அனைவராலும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், இவ்வாறு படையெடுத்துச் சென்ற பல்கலை மாணவர்களை இலங்கை இராணுவத்தினர் வியப்புடன் நோக்கியதுடன், பேரணியாகச் சென்றவர்களுக்கு குளிர்பானம் கொடுக்க முற்பட்டனர்.
இளைஞர்களின் இந்த படையணி இலங்கை இராணுவத்தினரை ஒரு கணம் ஸ்தம்பிக்கச்செய்ததுடன், மீண்டுமொரு தமிழீழ எழுச்சியை நினைவூட்டியுள்ளது.
தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
ராஜாக்கண்ணு மற்றும் சிவக்குமார் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்தண்டு மார்ச் மாதம் துபாயில் உள்ள ரோஷினி எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்துக்கு கொத்தனார் வேலைக்கு வந்தனர்.
இந்த வேலைக்காக இருவரும் தலா 70,000 ரூபாயை கட்டினர். இவர்களுக்கு கம்பி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் கொடுக்கப்பட்ட நிலையில் அனைத்து வேலைகளையும் அவர்களால் செய்ய முடியவில்லை.
எனவே நிர்வாகத்திடம் தங்களுக்கு வேலை கடினமாக உள்ளது எனவும் சொந்த ஊருக்கே திருப்பி அனுப்புமாறும் ராஜாக்கண்ணுவும், சிவக்குமார் கெஞ்சியுள்ளனர். ஆனால் இதற்கு ஒத்து கொள்ளாத நிர்வாகம் இருவரையும் அடித்து வேலை வாங்கியுள்ளது.
இதுகுறித்து இருவரும் ஊரில் உள்ள தங்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து துபாய் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் குறித்த நிறுவனத்திடம் விசாரித்த நிலையில் ராஜாக்கண்ணுவும், சிவக்குமாரும் தங்களது நிறுவனத்தில் இருந்து ஓடிவிட்டனர் என நிர்வாகத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இதன் காரணமாக இரண்டு பேரும் கடந்த மூன்று மாதங்களாக தங்க இடமில்லாமல் நண்பர்களின் உதவியுடன் வசித்து வருவதோடு, உணவுக்காகவும் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இருவரும் பொலிஸ், தொழிலாளர் நலத்துறை, இந்திய துணைத் தூதரகம் என பல்வேறு அலுவலகங்களுக்கும் நடையாய் நடந்து வருகின்றனர்.
மேலும், தங்களை விரைவாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய துணை தூதரகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலதிபரை, கழுத்தை அறுத்து கொலை செய்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் டவுன் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ரவிராஜா(54). Real Estate தொழில் செய்து வந்த இவர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால், பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மருத்துவமனைக்குள் நுழைந்த நபர் ஒருவர், சிகிச்சை பெற்று வந்த ரவிராஜாவின் கழுத்தை, தான் கொண்டு வந்த கத்தியைக் கொண்டு அறுத்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், அவரை தடுக்க முயன்றனர். ஆனால், குறித்த நபர் அவர்களை கத்தியைக் காட்டி மிரட்டியதால், அவர்கள் அச்சமடைந்து அங்கிருந்து சென்று விட்டனர்.
அதன் பிறகு, குறித்த நபர் ரவிராஜாவின் மார்பு, கால் என பல இடங்களில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் படுகாயம் அடைந்த ரவிராஜா, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டும், பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை பொலிசார் ஆய்வு செய்து விசாரித்தபோது, கொலை செய்த நபர் சென்னையை சேர்ந்த சந்துரு என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மேற்கட்ட விசாரணையில், சந்துரு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரவிராஜாவிடம் ஓட்டுநராக வேலை பார்த்துள்ளார். அவரது நடவடிக்கை சரியில்லாததால் சந்துருவை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்.
இதனால் ஏற்பட்ட பகை காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது, இதனையடுத்து தப்பியோடிய சந்துருவை சோதனைச் சாவடியில் பொலிசார் காருடன் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவை சேர்ந்த திருநங்கை வாழ்வாதாரம் இன்றி மிகவும் கஷ்டப்படுவதால் தன்னை கருணை கொலை செய்யுமாறு ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருச்சூரை சேர்ந்தவர் சுஜி (51). திருநங்கையான இவர் செவிலியர் பட்டப்படிப்பு படித்துள்ளார். கடந்த 1989-ல் பட்டப்படிப்பை முடித்த சுஜி பின்னர் சவுதிக்குச் என்று அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். சில வருடங்களில் அவரின் பாலினம் குறித்து கேள்வியெழுப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கே திரும்பினார்.
சுஜி குடும்பத்தாரே அவரை ஒதுக்கிய நிலையில் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து தனியாக சிறிய வீடு கட்டி வாழ்ந்து வந்தார்.
கேரளாவில் பல மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு சுஜி விண்ணப்பித்தும் மூன்றாம் பாலினத்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதையடுத்து சில காலம் ஆங்கிலம் சொல்லி தரும் ஆசிரியையாக சொற்ப வருமானத்தில் சுஜி பணியாற்றிய நிலையில் அந்த வேலையும் பறிபோனது.
இதையடுத்து நிரந்தர வேலையில்லாமல் உணவு, உடை என வாழ்வாதாரத்துக்கே சுஜி போராடி வருகிறார். இதையடுத்து திருச்சூர் ஆட்சியருக்கு உருக்கமான கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.
அதில், தயவு செய்து என்னை கௌரவத்துடன் இறக்க அனுமதியுங்கள், என் கருணை கொலைக்கான திகதி மற்றும் நேரத்தை நீங்களே முடிவு செய்யுங்கள் என எழுதியுள்ளார்.
சுஜி கூறுகையில், நான் ஏற்கனவே மூன்று முறை என் நிலையை கூறியும், எனக்கு வேலை ஏற்பாடு செய்து தருமாறும் ஆட்சியருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அதற்கு பதில் வரவேயில்லை, அதனால் தான் என்னை கருணை கொலை செய்து விடுமாறு கடிதம் எழுதியுள்ளேன்.
பட்டினி மற்றும் வறுமையோடு இனியும் என்னால் போராட முடியாது என்பதால் இந்த முடிவுக்கு வந்தேன். இந்த விடயம் மீடியாவில் வந்ததால் ஐக்கிய செவிலியர்கள் சங்கத்திலிருந்து ரூ.25000 பண உதவி செய்வதாக கூறினார்கள்.
ஆனால் அதை நான் மறுத்துவிட்டேன், எனக்கு வேலை வேண்டுமே தவிர இதுபோன்ற பண உதவி தேவையில்லை. கண்ணியத்துடன் இறப்பது என் அடிப்படை உரிமையாகும் என கூறியுள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பொலிஸ் காவலில் மரணம் அடைந்த வாலிபரின் மனைவிக்கு, அரசு வேலை மற்றும் 10 லட்சம் மாநில அரசின் நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பரவூர் வராப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித், இவரது மனைவி அகிலா(26). அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வியாபாரியை, ஸ்ரீஜித் தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, பொலிஸ் காவலில் அவரிடம் வராப்புழா பொலிசார் விசாரணை நடத்தினர், அப்போது ஸ்ரீஜித்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதன் பின்னர், உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பொலிசார் சேர்த்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீஜித் இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீஜித் மீது பொய் வழக்குப்பதிவு செய்து விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொன்று விட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொலிசாரை கண்டித்து எதிர் கட்சியினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, கேரள அரசு ஐ.ஜி மட்டத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அதன்படி, நடந்த விசாரணையைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர், துணை காவல் ஆய்வாளர் மற்றும் மூன்று பொலிசார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மரணமடைந்த ஸ்ரீஜித் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது ஸ்ரீஜித்தின் மனைவிக்கு பரவூர் தலூகா அலுவலகத்தில் கிளார்க் வேலை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.10 லட்சம் மாநில அரசின் நிதியும் வழங்கப்பட்டது. ஸ்ரீஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்ற எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் முகமது சபீருல்லா, ஸ்ரீஜித்தின் மனைவி அகிலாவிடம் வேலைக்கான உத்தரவு மற்றும் ரூ. 10 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார்.
தமிழகத்தின் கன்னியாகுமரில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரின் களியக்காவிளை மரியகிரி பகுதியை சேர்ந்தவர் சர்ஜின். ஓட்டுனராக இவருக்கும், கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்த பபிதா என்பவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது, இவர்களுக்கு 5 வயதில் மகள் இருக்கிறார்.
சர்ஜின் தனது தாயுடன் அனைவரும் ஒரே குடும்பமாக மரியகிரியில் வசித்து வந்த நிலையில், சர்ஜினுக்கு பல பெண்களுடன் தகாத உறவு இருப்பதாக பபிதாவுக்கு சந்தேகம் எழுந்தது, இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் சம்பவதினத்தன்று சர்ஜினின் தாய், மகள் வெளியூர் சென்றிருந்த வேளை மறுபடியும் இருவருக்கும் சண்டை மூண்டது. இதில் கடும் கோபத்தில் இருந்த பபிதா, தூங்கிக் கொண்டிருந்த சர்ஜினை இரும்பு கம்பியால் அடித்துள்ளார், கத்தியை கொண்டு அவரது கழுத்தை அறுக்க முயன்றுள்ளார்.
இதில் வலியால் சர்ஜின் அலறித்துடிக்க விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் பபிதாவை பிடித்தனர். சர்ஜினை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் பபிதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த், தனது மன்றத்துக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் 78 வயது ரசிகை ஒருவரை வீட்டுக்கு அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சாந்தா (78). தீவிர ரஜினி ரசிகையான இவர், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை அறிவித்ததும், ரஜினி மக்கள் மன்ற கிளை உறுப்பினர் சேர்க்கைப் பணியில் தீவிரமாக இறங்கினார் சாந்தா.
இவரது ஒரே ஆவல் என்னவென்றால், ரஜினியைச் சந்தித்து தனது பணிகளைக் கூற வேண்டும் என்பது தான். இதுகுறித்த தகவலை ரஜினி மக்கள் மன்றத்தினர் ரஜினியிடம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சாந்தாவை தன் வீட்டுக்கு வரவழைத்த ரஜினிகாந்த், அவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் முடிவடைந்து, முள்ளவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் செத்து மடிந்து இன்றுடன் 9 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், உயிரிழந்த தமது உறவுகளை நினைத்து கண்ணீர் விட்டதுடன், கதறி அழுது தவித்ததை காணக்கூடியதாக உள்ளது.
ஒரு பக்கம் கதறி அழும் மக்கள், அஞ்சலி செலுத்தும் உறவுகள், பார்வையாளர்கள், அரசியல்வாதிகள் என பலரும் வருகைத்தந்திருந்தாலும், யாரும் எதிர்பாராத சில சம்பவங்கள் இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் இடம்பெற்றது.
அதாவது இன்று திரண்ட கூட்டமும் மக்களின் எண்ணமும் தமிழ் மக்களின் அடுத்த தலைவர் விக்னேஸ்வரன் என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடரை ஏற்றுவதற்கான தீப்பந்தத்தை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், கேசவன் விஜிதா என்ற யுவதியிடம் கொடுத்தார். இந்த யுவதி இறுதி யுத்தத்தில் தனது பெற்றோரை இழந்து, உறவினர்களையும் இழந்து, தானும் காயமடைந்திருந்தார்.
அந்த கூட்டத்தில் எத்தனையோ அரசியல் பிரமுகர்கள் வந்திருந்த போதும், ஒரு சாதாரண யுவதியிடம் முதலமைச்சர் தீப்பந்தத்தை கொடுத்து ஈகைச்சுடரை ஏற்றவைத்தமை அங்கிருந்தவர்களுக்கு முதலமைச்சர் மீது ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தி விட்டது என்றே கூறவேண்டும்.
யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்திருந்த போதும், 4 வருடங்களாகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகின்றது.
இந்த 4 வருடங்களிலும் இம்முறை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள் சற்று வித்தியாசமானதாகவும், ஏதோ ஒரு விடயத்தை உணர்த்துவதாகவுமே அமைகின்றது.
இயற்கை கூட இன்றைய நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தலைவணங்குவதாகவும், என்றுமில்லாத வகையில் மக்கள் கூட்டம் திரண்டு வந்ததையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்த நிகழ்வுகளை முன்னின்று நடத்த வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களோடு மக்களாக ஒதுங்கி நின்றதை இதில் எத்தனை பேர் கவனித்திருப்பார்கள்.
இவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் மத்திய இடத்திற்கு வராமல் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதையும் புகைப்படங்கள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.
முதல் வரிசையில் அமர வேண்டிய அரசியல் பிரமுகர்களை காணாத நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட அவர் சார்ந்தவர்கள் முதல் வரிசையில் அமர்ந்து நினைவேந்தலை நடத்தியதையும் காணக்கூடியதாக உள்ளது.
ஜேர்மன் நாட்டில் கடந்த 10ம் திகதி உயிரிழந்த இளம் உதைப்பந்தாட்ட வீரர் பிரபாகரன் ஈழவனின் பூதவுடல் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நேற்று முன்தினம் பிற்பகல் ஈழவனின் இறுதி அஞ்சலி நிகழ்வு Sudfriedhof, Marienburger, Strasse 90E, 31141 Hildersheim என்னும் இடத்தில் நடைபெற்றது.
புலம்பெயர் தமிழரான ஈழவனின் பூத உடலுக்கு ஜேர்மனிய மக்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதில், பாடசாலை மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள், கழக அங்கத்தவர்கள், பொறுப்பாளர்கள், தேசிய பயிற்சியாளர், முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள் மற்றும் ஐரோப்பியா முழுவதிலும் உள்ள விளையாட்டுதுறை சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் வெள்ளை இனத்தவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுத காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
அத்துடன், ஈழவன் விளையாடிக் கொண்டிருந்த Braunschweig கழகம், இறுதிச் சடங்குக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
பிரசித்தி பெற்ற தேசிய கால்பந்தாட்ட வீரர்கள் பலர் தங்களது இரங்கல் செய்தியினை வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா நகரிலுள்ள தங்க நகைக்கடையொன்றிலிருந்து ஆபரணங்களை திருடிச் சென்ற நபரை சிசிடீவியில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 16ஆம் திகதி காலையில் குறித்த கடைக்கு நகை வாங்குவது போல் வந்து ஊழியர்களிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்த சந்தேகநபர் நூதன முறையில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க மோதிரம் மற்றும் தோடு ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடை உரிமையாளர் தங்க நகைகள் சில காணாமல்போயுள்ளதை அவதானித்துள்ளார். இதனையடுத்து சிசிடீவியில் பதிவாகிய காட்சிகளை பார்த்த போது சந்தேகநபர் அணிந்திருந்த காற்சட்டை பையில் திருடிய நகைகளை போடும் காட்சிகள் தெளிவாக பதிவாயுள்ளதை அவதானித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதோடு முறைப்பாடொன்றும் நகைக்கடை உரிமையாளரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து நுவரெலியா பொலிஸார் சந்தேகநபரை தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.