குவைத்தில் விசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வாய்ப்பு!!

குவைத்தில் விசா இன்றி சட்டவிரேதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குவைத்தில் விசா இன்றி தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளுக்கு அங்கிருந்து வெளியேறுவதற்கு பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அடுத்த மாதம் 22 ஆம் திகதி வரை இந்த பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில், விசா காலவதியான நிலையில் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருப்பவர்களுக்கு தண்டப் பணம் அறவிட மாட்டாது.

குவைத்தில் 15,447 இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் முதலமைச்சாராவது தமிழராக மட்டுமே இருக்கவேண்டும்!!

தமிழகத்திற்கு முதலமைச்சராவது தமிழராக மட்டுமே இருக்கவேண்டும் என்று நடிகர் ராதாரவி வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக அவர் திருவாரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது நல்லது. இதுவரை வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சென்று நடித்து வந்தவர்கள், தமிழகத்தை பற்றியும், தமிழக மக்களை பற்றியும் தெரிந்து கொள்ளட்டும்.

ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது குறித்து பல வழிகளில் விடை தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து யாரிடமாவது கேட்கலாம் என்று உள்ளேன். ரஜினி நல்லவர்களை கொண்டுதான் அரசியல் நடத்துவேன் என தெரிவித்துள்ளார். ஒருவேளை புத்தர், மகாவீரர் போன்றவர்களை அழைத்து வந்து அரசியல் நடத்துவார் என நினைக்கிறேன்.

விஷால் மிகவும் நல்லவர். ஆர்.கே.நகரில் 1500 ஓட்டு என நினைத்து போட்டியிடச் சென்றுள்ளார். அவருக்கு கையெழுத்து போடுவதற்கு 10 பேர் கூட உடனில்லை என்பது வேதனைக்குரியது. அவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

கமல், ‘நாளை நமதே’ என தொடங்கி பிரசாரம் செய்ய உள்ளார். அவருடைய ஊரையே அவர் பார்த்ததில்லை. முதலில் அவர், அதை பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் முதலமைச்சராவது தமிழனாக மட்டுமே இருக்க வேண்டும். பிறப்பால் இந்தியர்கள் மட்டுமே ஜனாதிபதி, பிரதமர் பதவி வகிக்க முடியும் என்பது போன்று பிறப்பால் தமிழர் மட்டுமே தமிழகத்தின் முதலமைச்சராக வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

300 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த கடற்கொள்ளையனை திருமணம் முடித்த இளம் பெண்!!

அயர்லாந்தில் பெண் ஒருவர் பேயை திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமண்டா டீக் என்ற பெண் இளம் வயதில் இருந்தே கடற்கொள்ளையர்களை பற்றி படித்தும், படம் பார்த்தும் வளர்ந்து வந்துள்ளார்.

இதனால், கடந்த 2016 ஆம் ஆண்டு கடற்கொள்ளையன் ஒருவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், அந்த கடற்கொள்ளையன் 300 ஆண்டுகளுக்கு முன்பே இறந்தவன். மேலும், இருவரும் காதலித்துதான் திருமணம் செய்திக்கொண்டோம் என அந்த பெண் கூறியுள்ளார்.

ஆனால் இந்த திருமணத்தை அந்நாட்டு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மீண்டும் அந்த பெண் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இருப்பினும் இந்த திருமணத்தை பதிவு செய்ய அரசு மறுத்துவிட்டது.

இது குறிந்த அந்த பெண் கூறியதாவது, நான் பேயுடன் வாழவில்லை. அவர் பேய் இல்லை. உலகில் இருக்கும் மற்ற தம்பதிகளைவிட எங்களது வாழ்க்கை அழகாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

வீட்டின் நடுப்பகுதியில் விலை மதிப்பில்லாத புதையல்!!

 
சொந்த வீட்டின் நடுப்பகுதியில் விலை மதிப்பில்லாத புதையல் தேடிய கும்பல் ஒன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணத்திற்குட்பட்ட உடதும்பர பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடதும்பர பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது எட்டுப் பேர் அடங்கிய கும்பல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது. அவர்களில் வைத்தியர், பேருந்து நடத்துனர், இரு வர்த்தகர்கள் உள்ளிட்ட 8 கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலத்திற்கு கீழ் புதையல் இருப்பதை கண்காணிக்கும் இயந்திரம், மின்சாரம் வழங்கும் இயந்திரம், கெப் வண்டி உட்பட பல பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் பூஜை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் பலி!!

 

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள கார் கழுவும் நிலையமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கார் கழுவும் நிலையத்தில் நேற்று இனந்தெரியாத துப்பாக்கிதாரியொருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார். இதன்போது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவருக்கு காலில் காயமேற்பட்டுள்ளதாகவும் அப் பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் வெளிவராத நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடலில் டாட்டூ இருந்தால் இனி வேலை கிடையாது!!

உடம்பில் டாட்டூ இருந்தால் விமானப்படை வேலையில் சேரமுடியாது என்பதை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

விமானப்படையில் சேருவதற்கான தனது பணி நியமன ஆணை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவர் உடம்பில் நிரந்தரமான டாட்டூ எனப்படும் பச்சை குத்தியிருந்ததால், பணி நியமனம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் ரேகா பள்ளி ஆகியோர் கொண்ட குழு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தபோது டாட்டூ வரைந்திருந்தால் வேலை கிடையாது என கூறப்பட்டுள்ளது. விமானப்படை விளம்பரத்தில் கூறப்பட்ட விதிவிலக்கின் கீழ் மனுதாரர் வரமாட்டார். உடம்பில் டாட்டூ குத்தியிருந்தால் அதுதொடர்பான புகைப்படத்தை அனுப்ப வேண்டுமென்ற விதிமுறையையும் மனுதாரர் முறைப்படி செய்யவில்லை. அதனால் வேலை நியமனத்தை ரத்து செய்தது செல்லுபடியாகும் என தீர்ப்பு அளித்தது.

பச்சை குத்துவது போல் உடலில் டாட்டூ வரைந்திருந்தால் வேலை கிடையாது என இந்திய விமானப் படை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை தமன்னா மீது செருப்பு வீசியவர் கைது!!

 

ஐதராபாத் நகரில் ஹிமாயத்நகர் பகுதியில் நேற்று நகைக்கடை திறப்பு விழாவுக்கு நடிகை தமன்னாவை வந்திருந்தார்.

அவரை பார்க்க அந்த கடையின் அருகே ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். திறப்பு விழா முடிந்து கடையில் இருந்து வெளியே வந்த தமன்னாவை நோக்கி கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆவேசத்துடன் செருப்பை தூக்கி வீசி எறிந்தார்.

சற்று குறிதவறி பறந்துவந்த செருப்பு புதிய நகைக்கடை பணியாளர் மீது விழுந்தது. செருப்பு வீசிய நபரை நாராயன்குடா பொலிசார் கைது செய்தனர்.

சமீபகாலமாக தமன்னா நடித்த படங்களில் அவரது கதாபாத்திரம் தனக்கு பிடிக்காததால் அவரை செருப்பால் அடிக்க முயன்றதாக கைதான கரிமுல்லா(31) என்ற பட்டதாரி தெரிவித்துள்ளார்.

நகைக்கடை பணியாளர் அளித்த புகாரின்பேரில் கரிமுல்லா மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வவுனியாவில் வன்புணர்வின்பின் படுகொலை : மாணவி ஹரிஸ்ணவிக்கு 2 வருடம் கடந்தும் கிடைக்காத நீதி!!

 

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13 வயது மாணவி ஹரிஸ்ணவிக்கு இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என பெண்கள் அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.

இன்றைய தினம் (29.01) வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வந்த போதும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து இது தொடர்பான அறிக்கை வராமையால் வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 13 வயது மாணவியான ஹரிஸ்ணவி வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்திருந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் பொலிசார் ஒருவரை கைது செய்திருந்ததுடன் அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற போதும் இரண்டு வருடங்கள் ஆகின்ற நிலையிலும் அந்த சிறுமிக்கு நீதி கிடைக்கவில்லை.

வித்தியா கொலை வழக்கை துரிதப்படுத்தி நீதி வழங்கியது போன்று இந்த மாணவிக்கும் துரிதப்படுத்தி நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவ்வாறான குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையே பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமையும் எனவும் பெண்கள் அமைப்புக்கள் மேலும் தெரிவித்துள்ளன.

தலைமன்னாரில் சிக்கிய 7 கோடி ரூபா பெறுமதியான தங்கம்!!

 
சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்கு தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்த இரண்டு பேர் 7 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் – ஊருமலை கடற்பரப்பில் வைத்து இவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 7 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 100 கிராம் எடை கொண்ட 120 தங்கக் கட்டிகளை பொதி செய்து சந்தேகநபர்கள் கடத்திச் சென்றதாக கடற்படையினர் கூறியுள்ளனர்.

சந்தேகநபர்கள் தங்கத்தை கடத்திச் செல்ல பயன்படுத்திய டிங்கி படகு உட்பட உபகரணங்களையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கைப்பற்றிய பொருட்களுடன் கைதாகிய இருவரும் யாழ்ப்பாண சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் ஏற்படவுள்ள மூன்று அரிய நிகழ்வு : 152 ஆண்டுகளின் பின் அதிசயம்!!

152 ஆண்டுகளுக்குப் பின்னர், நாளை மறுநாள் ஒரே நாளில் வானத்தில் மூன்று அரிய நிகழ்வுகளான, முழு சந்திர கிரகணத்துடன் கூடிய இரத்த நிலவு, சுப்பர் நிலவு, நீல நிலவு என்பன,தோன்றவுள்ளது.

இதுகுறித்து கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான அலகின் பணிப்பாளர் தகவல் வெளியிடுகையில்,

1866ஆம் ஆண்டுக்குப் பின்னர், நிகழும் இந்த மூன்று அரிய சந்திர நிகழ்வுகளையும் ஒருங்கே, நாளை மறுநாள் புதன்கிழமை மாலை 6.15 மணிக்குப் பின்னர் கிழக்குத் திசையில் காண முடியும்.

இதன்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வருவதால், கடல் அலைகள் உயரமாக மெலேழும். இதுபோன்ற வானியல் நிகழ்வுகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட போது, பூமி அதிர்ச்சிகளோ, வேறு இயற்கை அனர்த்தங்களோ ஏற்பட்டதாக பதிவாகவில்லை.

அன்றைய நாளில் பூமி அதிர்ச்சி, ஆழிப்பேரலை, சூறாவளி ஏற்படும் என்று கூறப்படுவது வெறும் வதந்திகளேயாகும்.

முழு அளவிலான சந்திர கிரகணம் இரத்த நிலவு என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், சந்திரன் பூமியின் நிழலில் முழுமையாக மறைக்கப்படும் போது செந்நிறமாக காட்சியளிக்கும்.

சந்திரன், பூமிக்கு மிக நெருக்கமாக வரும் போது அது சுப்பர் நிலவு என்று அழைக்கப்படுகிறது. ஒரே மாதத்தில் வரும் இரண்டு முழு நிலவுகளில், இரண்டாவதாக வரும், முழு நிலவு, நீல நிலவு என்று அழைக்கப்படும். ஆனால் இது நீல நிறத்தில் காட்சியளிக்காது.

இலங்கையில் முழு சந்திர கிரகணத்தை, மாலை 6.15 மணியில் இருந்து பார்வையிட முடியும்.  ஆனால் இலங்கை நேரப்படி மாலை 4.21 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகி, 9.38 மணியளவில் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். கடற்பரப்பில் மிதந்து வந்த பாரிய மர்மபொருள்!!

 
யாழ்ப்பாணம் கடற்பகுதில் மர்மான பாரிய பொருள் மிதந்து வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொண்டமானாறு, காட்டுப்புலம் பகுதி கடற்கரையில் இந்தப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இது இராட்சத மீன் ஒன்றின் உடற் பாகமாக இருக்கலாம் என அப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடற்பகுதி 30 கிலோ கிராமுக்கும் அதிகம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை!!

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் தற்பொழுது நிலவும் வறட்சியான காலநிலை இன்று முதல் மாற்றமடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வடக்கு மேற்கு வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தல் காற்று வீசுக்கூடும் என்றும் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!!

வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் நேற்று (28.01) மாலை 5 மணியளவில் சட்டவிரோதமான முறையில் பட்டா ரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட வேப்பங்குற்றிகளை நெளுக்குளம் பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை நெளுக்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ். அத்தநாயக்கவிற்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் அவரது தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் இராசேந்திரன்குளம் பகுதியிலிருந்து பொன்னாவரசன்குளம் பகுதிக்கு சட்டவிரோதமான முறையில் பட்டா ரக வாகனத்தில் 12 வேப்பமரக்குற்றிகளை கொண்டு சென்றபோது அவற்றைக் கைப்பற்றியதுடன் வாகனத்தின் சாரதியான மாரிமுத்து சந்திரபாலன் (வயது 41) என்பவரையும் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்று மாலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் நெளுக்குளம் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!!

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (28.01.2018) மதியம் 2.40 மணியளவில் வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா தமிழரசுக்கட்சி அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல்வேறு கொள்கைப் பிரகடனங்களை உள்ளடக்கிய 15 பக்கங்களை கொண்ட விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

மாவை சேனாதிராஜாவினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனிடம் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இரா. சம்பந்தனினால் கட்சித்தலைவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், டெலோ அமைப்பின் செயலாளர் க. ஸ்ரீகாந்தா, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், விந்தன் கனகரட்னம் உட்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.​

வவுனியாவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்!!

 
வவுனியாவில் இன்று (28.01) மாலை 5 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பரப்புரைக்கூட்டம் வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வவுனியா மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைபப்பின் தலைவருமான ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இப்பரப்புரைக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தாத்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சி.சிவமோகன், ஜனநாயக்போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி, தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் ஸ்ரீகாந்தா, வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமனற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் எனப்பலரும் கலந்துகொண்டதுடன் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம் போன்ற பகுதிகளின் வேட்பாளர்கள், பொதுமக்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கேரளக்கஞ்சாவுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 36 பேர் கைது!!

கேரளக்கஞ்சாவுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

20-30 வயதிற்கிடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.