வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுமடு கிராமத்தில் பத்து வயது சிறுமி ஒருவரை கடந்த 24.05.2016 பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபருக்கு 19.01.2018 நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையிலேயே பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எனது மகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நெடுங்கேணி பொலிசாரினால் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்படவில்லை, சிறுமியை கண்டிக்கும் விதமாகவே சந்தேக நபர் தாக்கியுள்ளார் என உண்மையை மறைத்து குற்றவாளிக்கு சார்பாக வழக்கு பதியப்பட்ட நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் உண்மைச் சம்பவத்தை முறைப்பாடு செய்திருந்தேன். பிரதி பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைவாக மீண்டும் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கிய நிலையில் சந்தேகநபர் மீண்டும் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அந்தவகையில் கடந்த 12.10.2017 அன்று பாதிக்கப்பட்ட எனது மகளை நடுநிசியில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரொருவர் கடத்திச் செல்ல முற்பட்டவேளை சுதாகரித்துக்கொண்ட நான் சத்தமிட்டதன் காரணமாக மர்மநபர் தனது முயற்சியை கைவிட்டு தப்பித்துச் சென்றிருந்தார்.
எனது மகள் கடத்தல் முயற்சி தொடர்பாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் 13.10.2017 முறைப்பாடு செய்திருந்தேன். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார் மர்மநபரின் தடயப் பொருட்கள் என சந்தேகிக்கப்படும் செருப்பு ஒரு ஜோடி மற்றும் கயிறு ஆகியவற்றை கைப்பற்றியிருந்தனர். ஆனால் இன்றுவரையில் கடத்தல் சம்பவம் தொடர்பாக எவரையும் கைது செய்யவில்லை.
இந்நிலையில் சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில் நானும் எனது குடும்பத்தினரும் அச்சமடைந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.





















