வானொன்று 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து : இருவர் படுகாயம்!!

 
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், லிந்துலை பெயார்வெல் பகுதியில் வானொன்று 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில், விபத்தில் படுகாயமடைந்தவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பிட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ருவான்வெல்ல பகுதியிலிருந்து, நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த வானே விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நேர்ந்த போது வானில் சாரதி உட்பட இரு பெண்கள் இருந்துள்ள நிலையில், யுவதிகளே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்த இரு பெண்களும் நுவரெலியா, கந்தபளை மற்றும் தெரணியகல பகுதிகளைச் சேர்ந்த 23, 18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வான் சாரதி லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வானில் ஏற்பட்ட இயந்திர கோளாறால் வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர்களை வியக்க வைத்துள்ள வெளிநாட்டவர்கள்!!

 
தூத்துக்குடியில் வெளிநாட்டினர் தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து மண்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர்.

சென்னையில் உள்ள “கிளாசிக் ரன்” என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் கடந்த 11 வருடங்களாக வெளிநாட்டினர் பங்குபெறும் “ஆட்டோ சலஞ்ச்” என்ற ஆட்டோ சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோ சலஞ்ச் சுற்றுலாப் பயணம் கடந்த 28ம் திகதி சென்னையில் துவங்கியது. அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த 32 பேர் கலந்து கொண்டு ஆட்டோவில் 16 அணியாகப் பிரிந்து 16 ஆட்டோக்களில் சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை வழியாக இன்று தூத்துக்குடி வந்தனர்.

உப்பளங்கள், பிரசித்தி பெற்ற பனிமய அன்னை ஆலயம், முத்துநகர் கடற்கரை ஆகியவற்றைப் பார்த்துவிட்டு தூத்துக்குடி அருகிலுள்ள சாயர்புரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் பொங்கல் கொண்டாடுவதற்காக வந்தனர்.

தோட்டம் முழுவதும் கரும்பு, மஞ்சள் குலை, வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. ஆட்டோக்களில் தோட்டத்திற்கு வந்த அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையாம் வேட்டி, சேலை அணிந்தனர். 17 அணிகளுக்கும் அடுப்பு மூட்டி தனித்தனியாக பொங்கல் பானை, பச்சரிசி, நட்டுச்சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டன.

ஒவ்வொரு அணியும் தனித்தனியாகப் பொங்கல் வைத்தனர். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது, தோட்டத்தில் பணிபுரிபவர்கள் செய்துகாட்ட, “பொங்கலோ பொங்கல்” என கோஷமிட்டு குலசைச் சத்தமும் எழுப்பி அசத்தினர்.

பொங்கல் வைத்து முடிக்கப்பட்டதும், அந்தந்த அணியினர் வைத்த பொங்கலை வரிசையாகத் தட்டில் வைத்தனர். வெளிநாட்டினர் வைத்த பொங்கலைச் சுவைத்துப் பார்த்த நடுவர்கள் முதல் மூன்று அணியை தேர்வு செய்தனர்.

முதல் பரிசாக செவ்வாழை, இரண்டாம் பரிசாக மலை ஏத்தன், மூன்றாம் பரிசாக பச்சை வாழைக் குலைகள் வழங்கப்பட்டன. இச்சுற்றுலாவின் ஒருங்கிணைப்பாளர் பிரின்லி தெரிவித்தபோது,“ வெளிநாட்டினர் நமது கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ஆட்டோ சலஞ்ச் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.” என்றார்.

“தமிழர்களின் கலாச்சாரம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. வேட்டி, சேலை அணியும் போது தனி மரியாதை கிடைக்கிறது. இங்கு ஒன்றுகூடிப் பொங்கல் வைத்தது எங்களது வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான ஒன்று” என வெளிநாட்டினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரம் செல்லும் வெளிநாட்டினர் வரும் 6ம் திகதி அங்கிருந்து அவரவர் சொந்தநாட்டிற்கு திரும்புகின்றனர்.

கருணாநிதியோடு கூட்டுச்சேரும் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரையில் நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த 31ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக ஆதரவாளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இதற்காக இணையம் மற்றும் செயலி என்பனவும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய தினம் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது ரஜினியின் முதல் அரசியல் கட்சி தலைவரின் சந்திப்பாக அமைந்துள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் வைத்து ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தி.மு.கவின் செயல்தலைவர் ஸ்டாலினும் உடனிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக நடிகர் ரஜினியின் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு தரப்பினர்களும் வரவேற்பு தெரிவித்திருந்ததுடன், அதற்கு இணையாக எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டிருந்தன.
நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதியை சந்திக்கவுள்ளார் என செய்திகள் வெளியானதும், ரஜினி கருணாநிதியோடு கூட்டு சேரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், சந்திப்பின் பின்னர் அதனை நடிகர் ரஜினிகாந்த் முற்றாக மறுத்திருந்தார். கருணாநிதியை சந்தித்து பேசிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கருணாநிதியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். அவருடைய உடல்நலனை கேட்டறிந்தேன், என்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் கூறி ஆசி பெற்றேன். தி.மு.க தலைவர் கருணாநிதி என்னுடைய நண்பர். அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளேன் என ரஜினிகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக பாடசாலைக்கு சென்ற சிறுமி விபத்தில் பலியான சோகம்!!

யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கு முதன்முறையாக சென்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை கற்கோவளத்தைச் சேர்ந்த ஆறு வயதான ராஜ்குமார் தனுஸ்கா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், நீர்வேலியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிறுமி பலியாகி உள்ளார். இந்த அனர்த்தம் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முச்சக்கர வண்டியும் ஹையஸ் வானும் நேருக்கு நேர் மோதியதில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றது.

விபத்தையடுத்து சிறுமியும் சாரதியும் உணர்வற்ற நிலையில் காணப்பட்டனர். வீதியில் பயணித்தவர்கள் விரைந்து செயற்பட்டு பிறிதொரு வாகனத்தில் நால்வரையும் ஏற்றி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது சிறுமியும் சாரதியும் உயிரிழந்து விட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

ஹயஸ் வாகன சாரதியான 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சாரதி பருத்தித்துறையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கில் சாதனை படைத்த தமிழ் மாணவர்களுக்கு கிடைத்த கௌரவிப்பு!!

 
2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் அதி உயர் சித்தி பெற்று மாகாணத்திற்கு பெருமை சேர்த்த 35 மாணவர்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வுகள் வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில், கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மாணவர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் இம்முறை யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவர் சிறிதரன் துவாரகன் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று வடமாகாணத்திற்கே பெருமை சேர்த்துள்ளார்.

இந்த மாணவர் உட்பட பல மாணவர்கள் மற்றும் தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பாராட்டும் வகையில், அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து நாளை இ.போ.ச, தனியார் பேரூந்துகள் சேவையில்?

 
வடமாகாண முதலமைச்சரினால் பழைய பேரூந்து நிலையம் கடந்த (01.01.2018) அதிகாலையுடன் மூடப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திற்கு இ.போ.சபையினரை செல்லுமாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து இ.போ.ச சபையினர் மூன்றாவது நாளாக இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் தங்களது வர்த்தகமும் பாதிக்கப்படும் என தெரிவித்து பழைய பேரூந்து நிலைய கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள 130க்கு மேற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்பு கொடிகளை பறக்க விட்டு கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இந் நிலையில் வடமாகாண முதலமைச்சர், கொழும்பில் இருந்து சென்ற குழுவினர் மற்றும் வடமாகாண இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் இடையில் இன்று (03.01.2018) முதலமைச்சரின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது 40:60 என்ற பங்கீட்டு முறையில் சேவையை முன்னெடுப்பதற்கு வடமாகாண இலங்கை போக்குவரத்து சபை சம்மதித்தமை குறிப்பிடத்தக்கது

புதிய பேரூந்து நிலையத்தினை தனியார், இ.போ.ச என இரண்டாக பிரித்து தரும் படசத்தில் நாங்கள் செல்ல தயார் என இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து இன்று (03.01.2018) மாலை வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட வட மாகாண முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் ரூபினி வரதலிங்கம், சிரேஸ்ட செயலாளர் வியஜலட்சுமி கேதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன் நாளைய தினம் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து தங்களது சேவையினை மேற்கொள்ள இரு தரப்பினர்களும் சம்மதம் தெரிவித்ததாக தெரிவித்தனர்.

புதிய பேரூந்து நிலையத்தில் உள்ளுர் சேவைகள் வெளியூர் சேவைகள் என இரு கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் உள்ளுர் சேவை கட்டிடத்திலிருந்து இ.போ.ச பேரூந்துகளும் வெளியூர் சேவைகள் கட்டிடத்திலிருந்து தனியார் பேரூந்துகளும் சேவையில் ஈடுபடும் என மேலும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா இ.போ.சபையினரிடம் வினவிய போது, எங்களின் ஊழியர்களுடன் நாளை காலை கலந்துரையாடலொன்று இடம்பெற்று அதில் எடுக்கப்படும் முடிவின்படியே செயற்படுவோம் எனவும் பேரூந்து நிலையத்தினை இரண்டாக பிரித்து தராதவிடத்து செல்வது பற்றி சற்று சிந்திக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா தனியார் போக்குவரத்து சங்கத்தினரிடம் வினவிய போது, புதிய பேரூந்து நிலையத்தினை சங்கிலி , பூச்சாடி , வேலியடைத்து பிரிப்பதற்கு நாங்கள் சம்மதம் தெரிவிக்க மாட்டோம் எனவும் இவ்வாறு இருக்க உள்ளுர் சேவை கட்டிடத்திலிருந்து இ.போ.ச பேரூந்துகளும் வெளியூர் சேவைகள் கட்டிடத்திலிருந்து தனியார் பேரூந்துகளும் சேவையில் ஈடுபட தயார் என தெரிவித்தனர்.

வலியால் துடிதுடித்த துடுப்பாட்ட வீரரை கண்டுகொள்ளாத வீரர்கள் : திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!!

டெல்லி ரஞ்சிக்கோப்பை போட்டியில் பந்து அடித்து துடிதுடித்த துடுப்பாட்ட வீரரை கண்டுகொள்ளாத சக வீரர்களுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி- விதர்பா அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக்கோப்பை இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியின் போது டெல்லி வேகப்பந்து வீச்சாளர் வீசிய பவுன்சர் பந்து தாக்கியதில், துடுப்பெடுத்தாடிய வீரர் துடிதுடித்து தரையில் விழுந்துள்ளார்.

வேதனையில் துடித்த அந்த வீரருக்கு உதவ டெல்லி அணி வீரர்கள், நடுவர்கள் உள்ளிட்ட எவருமே முன் வராதது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எதிர்முனையில் இருந்த மற்றொரு துடுப்பாட்ட வீரர் முன்வந்து, மைதானத்துக்கு வெளியில் இருந்து உதவிக்கு அழைத்துள்ளார்.

இதனால் பல ரசிகர்கள் அதிருப்தியடைந்த நிலையில் ரசிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ள கண்டனம் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

அதில், “கிரிக்கெட் போட்டியில் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் கிடையாதா…. மைதானத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை தோனியிடம் கற்றுக்கொள்ளுங்கள்” என டெல்லி கேப்டன் ரிஷாப் பாண்டை டேக் செய்து அந்த ரசிகர் கூறியுள்ளார்.

அப்போட்டியில், ஏழு முறை ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ள டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பா அணி வீழ்த்தி முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

62 அடி உயரத்திலிருந்து கடலில் விழுந்த பேருந்து : 48 பயணிகள் உயிரிழந்த சோகம்!!

பெருவில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து கடலில் விழுந்ததில் 48 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

பெருவின் தலைநகரம் லிமா நோக்கி நேற்றிரவு பேருந்து ஒன்று மலைப்பாதையில் 57 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது எதிரில் வந்த ஒரு டிராக்டருடன் பேருந்து மோதியதில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து 262 அடி உயரத்திலிருந்து அருகிலிருந்த கடலில் விழுந்தது.

இந்த சம்பவத்தில் 48 பயணிகள் உயிரிழந்துள்ள நிலையில் ஆறு பயணிகள் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் இறந்தவர்களின் சடலங்களை பெரும் போராட்டத்துக்கு பின்னர் கைப்பற்றினார்கள்.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். மூன்று பயணிகள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களின் நிலை என்னவென தெரியவில்லை.

நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ பப்லோ விடுத்துள்ள அறிக்கையில், இந்தளவு ஒரு பெரிய விபத்து நாட்டில் ஏற்பட்டது வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இரண்டு வாகனங்கள் அதி வேகத்தில் வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தை பயன்படுத்தி பயணிகளின் உடமைகளை திருட முயன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். பெருவில் சாலை விபத்து காரணமாக கடந்தாண்டு 2600 பேர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று மனைவிகள் : 4 லட்சம் வருமானம் : ராஜ வாழ்க்கை வாழும் பிச்சைக்காரர்!!

 
இந்தியாவில் ரயில் நிலையத்தில் பிச்சையெடுத்து கொண்டே வேறு தொழில்களும் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நபரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சக்ராத்பூரில் பிச்சையெடுத்து வருபவர் சோட்டு பராக் (40). மாற்றுதிறனாளியான இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர்.

சோட்டு, வெஸ்டேஜ் என்ற முன்னணி சுகாதார பாதுகாப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் ஒப்பனை பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இதற்கான அடையாள அட்டையையும் அவர் வைத்துள்ளார்.

இதோடு சிம்திகா மாவட்டத்தில் ஒரு பெரிய பாத்திர கடையும் சோட்டு வைத்துள்ளார். இதை அவரின் ஒரு மனைவி நடத்தி வருகிறார். எல்லா வியாபாரத்திலும் சேர்த்து சோட்டுவுக்கு மாதம் 30,000 வருமானம் வருகிறது, ஆண்டுக்கு 4 லட்சம் வருவதாக அவரே கூறுகிறார்.

இதோடு இன்னும் வேறு சில தொழில்களையும் சோட்டு செய்து வருகிறார். அவர் கூறுகையில், வறுமை காரணமாக சிறு வயதிலிருந்தே ரயில் நிலையத்தில் பிச்சையெடுக்கிறேன். ஆரம்பத்தில் தினமும் 1,000லிருந்து 1,200 வருமானம் வந்து பின்னர் அது படிப்படியாக உயர்ந்தது என கூறுகிறார். தன்னுடைய மனைவிகள் மற்றும் மற்ற வியாபாரங்கள் குறித்து விரிவாக பேச சோட்டு மறுத்துவிட்டார்.

குடி போதையில் தாயை மகன் செய்த செயல் : பொதுமக்கள் வழங்கிய தண்டனை!!

இந்தியாவில் குடிபோதை காரணமாக தாயை அடித்துக் கொன்ற மகனை, பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் சிவானி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெல்லம்மா(65). இவருக்கு 30 வயதில் சுப்பிரமணியம் என்ற மகன் உள்ளார். சுப்ரமணியம் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து பொல்லம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, சுப்ரமணியம் மது அருந்தி விட்டு தனது தாய் என்று கூட பாராமல் பொல்லம்மாவை கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.

இதை அறிந்த ஊர் பொதுமக்கள் பதுங்கி இருந்து சுப்பிரமணியத்தைப் பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசாரிடம் சுப்பிரமணியத்தை பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.

நான் மட்டும் ஹீரோ இல்லை : எட்டு பேர் உயிரைக் காப்பாற்றிய பொலிசார் உருக்கமான தகவல்!!

மும்பையில் நடந்த தீ விபத்தில் பெண் ஒருவரை தோளில் சுமந்த படி நின்ற பொலிசார் தொடர்பான புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து, அந்த பொலிசார் நான் மட்டும் அங்கு ஹீரோ இல்லை என்று கூறியுள்ளார்.

மும்பை லோயர் பரேல் சேனாபதி பாபத் மார்க் பகுதியில் கமலா மில் வளாகம் உள்ளது, இங்கு ஹோட்டல்கள், மது விடுதிகள், பிரபல தனியார் தொலைக்காட்சி அலுவலகங்கள் உட்பட பல அலுவலகங்கள் உள்ளன. இங்குள்ள 4வது மாடி கட்டிடத்தின் மேல் மாடியிலுள்ள ஒன் அபோவ் என்ற ஒரு ஹோட்டலில் கடந்த 28ம் திகதி இரவு நள்ளிரவு 12 மணிக்கு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 14 பேர் பலியாகினர், 55 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் இந்த தீ விபத்தின் போது பொலிசார் ஒருவர் இளம்பெண் ஒருவரை தோளில் போட்டுக் கொண்டு தூக்கி வரும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அந்த பொலிசாரின் பெயர் சுதர்ஷன் சிவாஜி ஷின்டே என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், தீ விபத்து நடந்த அன்று இரவு 12.30 மணி அளவில் வாக்கி டோக்கியில் ஷின்டேவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக அவர் தனது டீமுடன் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளார். ஆனால் அங்கு சென்ற போதே பொலிசாரிடம் ஸ்டார்ச் லைட் கூட இல்லை என்பது தெரியவந்தது. இதனால் உள்ளே மயங்கிக் கிடந்தவர்களை வெளியே கொண்டு வர வழி தெரியாமல் முழித்துள்ளனர்.

அப்போது உடனடியாக ஷின்டே உள்ளே நுழைந்துள்ளார். அங்கு அவரை கரும்புகை சூழ்ந்துள்ளது, மூச்சுத் திணறியுள்ளது, இருப்பினும் அவர் தான் முன் வைத்த காலை பின் வைக்கப்போவதில்லை என்று கூறி 8 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

இது குறித்து ஷிண்டே கூறுகையில், உயிர்களைக் காப்பாற்றியது ஒரு கூட்டு முயற்சி தான் என்னைப் போன்று அங்கு பலரும் பலர் உயிரைக் காப்பாற்றினர். அருகில் இருந்த தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த மகேஷ், கிரி என்ற இளைஞர்களும் உத்வேகத்துடன் செயல்பட்டு பலரைக் காப்பாற்றினர்.

என்னை மட்டுமே ஹீரோவாக உயர்த்திக் காட்டுவது சரியானது அல்ல, 8 உயிர்களை காப்பாற்றியதை விட 14 உயிர்கள் இறந்துபோனது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்..

விஞ்ஞானி பணியை தூக்கி எரிந்துவிட்டு ஆடு மேய்த்து வரும் இளைஞர் : வருமானம் தெரியுமா?

 
ஆடு மேய்ப்பதற்காக அமெரிக்க விஞ்ஞானி பணியை ராஜினாமா செய்த இளைஞர் இன்று ஆட்டுப் பண்ணைக்கு உரிமையாளராக உள்ளார்.

இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலம் புல்டானாவில் பிறந்த அபிஷேக் பாரத் சிறு வயதி முதல் கல்வியில் சிறந்து விளங்கியுள்ளார். 2008-ஆம் ஆண்டு பஞ்சமராவ் தேஷ்முக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த அபிஷேக், அமெரிக்கா சென்று தனது முதுகலை பட்டத்தை பெற்றுள்ளார்.

பின்னர் அமெரிக்காவின் Louisiana பல்கலைக்கழக்கத்தில் தனது டாக்டரேட் பட்டத்தை பெற்று அதே பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் விஞ்ஞானியாகவும் பணியாற்றியுள்ளார்.
அதில் போதுமான திருப்தி இல்லாததால் தனது தாய்நாடான இந்தியாவிற்கு சென்று விவசாயம் செய்ய முடிவு செய்துள்ளார் அபிஷேக்.

இதற்கு அவரது குடும்பம் மற்றும் உறவினர்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எதிர்ப்பை மீறி 20 ஏக்கர் நிலத்தினைக் குத்தகைக்குப் பெற்று அதில் ஆடு வளர்ப்பினை துவங்கியுள்ளார்.

துவக்கத்தில் 120 ஆடுகளுடன் பண்ணைத் தொடங்கிய அபிஷேக்கிடம் தற்போது 400 ஆடுகள் உள்ளன. படித்த கர்வம் இல்லாமல் அனைத்து விதமான பராமரிப்பு பணிகளிலும் தானே இறங்கி வேலை செய்து வரும் அந்த நபர், ஆறு ஏக்கர் நிலத்தில் ஆடுகளுக்காக மக்காச்சோளம் மற்றும் தினை போன்றவற்றை விவசாயமும் செய்து வருகிறார்.

தற்போது ஆண்டு வருவாயாக 12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் அந்த நபர், வரும் காலங்களில் கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.

மேலும் தன்னைப் போன்ற ஆடு வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசப் பட்டறை அமைத்து பயிற்சி வழங்கி வரும் அந்த நபர், பலருக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார்.

விஞ்ஞானி பணியை இராஜினாமா செய்துவிட்டு ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் சிக்கிய அபூர்வ வகை அணில்!!

 
இலங்கையில் அபூர்வமான அணில் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரணாநாயக்க, செலவ, பில்லேவ பிரதேசத்தில் அரிய வகை வெள்ளை நிற அணில் ஒன்று இனங் காணப்பட்டுள்ளது.

அந்த பகுதி வீடொன்றில் விழுந்து கிடந்த அணில் குட்டியை, வீட்டு உரிமையாளர் மீட்டுள்ளனர். அந்த அணில் குட்டியை வீட்டவர்கள் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.

இதற்கு முன்னரும் இந்த பிரதேசத்தில் வெள்ளைநிற அணில் குட்டி ஒன்றை காண முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் சாதாரண அணில்கள் காணப்பட்ட போதும், இவ்வாறு வெள்ளை நிற அணில்கள் காணப்படுவது மிகவும் அபூர்வம் என வனஜீவராசிகள் தொடர்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பேரூந்து நிலையப் பிரச்சினைக்கு தீர்வு : முடிவிற்கு வந்த சர்ச்சை!!

 

வவுனியாவில் பூதாரகாரமாக உருவெடுத்துள்ள போக்குவரத்து பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைக்கப்பபெற்றுள்ளது.

இதன்படி வடமாகாண இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று பிற்பகல் 2 மணியில் இருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண முதலமைச்சர், கொழும்பில் இருந்து சென்ற குழுவினர் மற்றும் வடமாகாண இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் இடையில் இன்று காலை முதலமைச்சரின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

புதிய பேருந்து நிலையத்தில் எமக்காக ஒரு பகுதி தருவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது, தூர இடத்திற்கு செல்லும் பேருந்துகளும், வெளி மாகாணங்களில் இருந்து வரும் பேருந்துகளும் நேராக செல்ல வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உள்ளூர் சேவைகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்து பழைய பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றிச்செல்லும்.

அத்துடன் இணைந்த நேர அட்டவணையில் எமக்கு 40 வீதமும் தனியாருக்கு 60 வீதமும் கொடுத்து புதிய நேர அட்டவணை தயாரிக்கப்பட உள்ளது. இதையடுத்து இன்று பிற்பகல் 2 மணிக்கு தாம் சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக” இ.போ.சபையின் பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு தை மாதம் 195 மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் புதிய பேருந்து நிலையம்  அமைக்கப்பட்டிருந்தது. திறந்த அன்று தவிர ஒரேயொரு நாள்கூட கடந்த வருடத்தில் அந்த நிலையத்தில் இருந்து சேவைகள் இடம்பெற்றதில்லை.

வடமாகாண முதலமைச்சரினால் பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், புதிய பேருந்து நிலையத்திற்கு அனைவரையும் செல்லுமாறு முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தனியார் பேருந்துகள் கடந்த வாரம் முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தமது சேவையினை முன்னெடுத்து வரும் நிலையில், இ.போ.ச சபையினர் மூன்றாவது நாளாக இன்றைய தினமும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக பழைய பேருந்து கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள 130 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பினை வெளியிட்டு வந்தார்கள்.

இதையடுத்து, கொழும்பிலிருந்து சென்ற குழுவினருக்கும், வடமாகாண முதலமைச்சருக்கும், இ.போ.சபையினருக்கும் இடையில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் சில நாட்களாக வவுனியாவில் இருந்த பதற்றமான  சூழ்நிலை முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 3வது நாளாகவும் அரச பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் : வர்த்தகர்கள் கடையடைப்பில்!!

வவுனியா பேரூந்து நிலையம் தொடர்பாக வழக்கொன்று நீதிமன்றத்தில் உள்ள நிலையில் வட மாகாண முதலமைச்சரினால் பழைய பேரூந்து நிலையம் நேற்று முன்தினம் (01.01.2018) அதிகாலையுடன் மூடப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திற்கு இ.போ.சபையினரை செல்லுமாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து இ.போ.ச சபையினர் மூன்றாவது நாளாக இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் தங்களது வர்த்தகமும் பாதிக்கப்படும் என தெரிவித்து பழைய பேரூந்து நிலைய கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள 130க்கும் மேற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தொடர்ச்சியாக வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்பு கொடிகளை பறக்க விட்டு கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வவுனியா பேருந்து நிலைய விவகாரம் தொடர்பில் இ.போ.ச பேருந்துகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பட்சத்தில் பருவச்சீட்டுக்களை பெற்றுள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் தனியார் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியுமெனவும், பயணிகளின் நலன் கருதி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை இலவச பேருந்து சேவையை முன்னெடுப்பதாகவும் வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ரி.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார் பேரூந்துகள் கடந்த வாரம் முதல் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தமது சேவையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளிச்சம் அறக்கட்டளையினால் மடு பிரதேச செயலகத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்!!

 
மன்னார் மாவட்ட மடு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மிகவும் பின் தங்கிய கிராமங்களான இரணை இலுப்பைக்குளம் மற்றும் கல்மடு படிவம் 2 ல் வசிக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தும் மிகவும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட பிள்ளைகளை தெரிவு செய்து அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (01.01.2018) வெளிச்சம் அறக்கட்டளையின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகஸ்தர் எஸ்.எஸ்ஸ்ரீநிவாசன், வெளிச்சம் அறக்கட்டளையின் செயலாளர் கார்த்திக், வவுனியா பசங்க அமைப்பின் உறுப்பினர் வ.பிரதீபன், இரணை இலுப்பைக்குளம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் அ.றஜுவன், பூசாரிகுள கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சிவகுரு, சமுர்த்தி சங்க செயலாளர் திருமதி. ராஜேஷ்வரி , பெற்றோர்கள் , பிள்ளைகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.