2016 ஆம் ஆண்டின் இன்ஸ்டாகிராம் இளவரசியானார் செலினா கோம்ஸ்!!

selena-gomez-for-coca-cola

இன்ஸ்டாகிராமை உலகம் முழுவதும் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் நிலையில், இன்ஸ்டாகிராமின் இந்த வருட இளவரசி என்ற பட்டம் அமெரிக்க பாடகி செலினா கோம்ஸிற்குக் கிடைத்துள்ளது.

நடிகை, பாடகி, கதையாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகங்கள் கொண்ட செலினாவின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளைக் குவித்துள்ளன.

கோக் போத்தலுடன் செலினா நிற்கும் புகைப்படம் அதிகபட்சமாக 5.9 மில்லியன் லைக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதுதவிர, அதிக லைக்குகளைப் பெற்ற முதல் ஐந்து புகைப்படங்களும் செலினாவுடையதுதான்.

இதன் காரணமாக 2016 ஆம் ஆண்டின் இன்ஸ்டாகிராம் இளவரசி பட்டம் செலினா கோம்ஸிற்குக் கிடைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 103 மில்லியன் பேர் செலினாவைப் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.

டெங்கு பரவக் கூடிய வகையில் சூழலை வைத்திருப்போரிடம் 25000 ரூபா அபராதம்!!

dengu

டெங்கு நுளம்புக் குடம்பிகள் பரவக் கூடிய வகையில் சூழலை வைத்திருப்போரிடம் அறவிடப்படும் அபராதம் 25,000 ரூபா வரை அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலால் எவரேனும் உயிரிழந்தால், நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருந்தவர் அல்லது நிறுவனத்திடம் இருந்து நட்டஈடு அறவிடப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வழங்கும் செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கான கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹாவில் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு சென்ற போதே அமைச்சர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

கொழும்பு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் 30 டெங்கு அபாய வலையங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

இதனிடையே இந்த வருடத்தில் மாத்திரம் 47,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் 76 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

11 நாட்களாக விமானநிலையத்தில் தங்கியிருக்கும் சீனப் பிக்கு : மொழி தெரியாததால் சிக்கல்!!

p1

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சீனாவை சேர்ந்த பிக்கு ஒருவர் கடந்த 11 நாட்களாக தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

களனி பிரதேச பௌத்த விகாரைக்கு தொடர்புபட்டுள்ள மாநாயக்க பௌத்த பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்காக இலங்கை வந்துள்ளதாக குறித்த பிக்கு தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர், குறித்த பல்கலைக்கழகத்திற்கு பிக்குவை அனுப்பி வைத்தபோதிலும், அவர்கள் மீண்டும் விமான நிலையத்திற்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த பிக்கு சீன மொழியில் மாத்திரம் பேசுவதால், அவரிடம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவது கடினமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, குறித்த பிக்குமார் வைப்பதற்கான கட்டிட நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தியடையவில்லை எனவும் இதன்காரணமாக சீன நாட்டு பிக்குவை தங்க வைப்பதற்கான வசதிகள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சீனாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுடன் பிக்குவை அனுப்பி வைக்க முயற்சித்த போதும், அவர் செல்ல மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

p2 p3

இலங்கையில் 191 பேரின் உயிரை காவுகொண்ட விமான விபத்து : இன்றுடன் 42 வருடங்கள்!!

11

191 பேரைகாவு கொண்ட பாரிய விமான விபத்து இடம்பெற்று இன்றுடன் 42 வருடங்கள் கடந்துவிட்டன.

இந்தோனேசியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த மார்டின் எயார் டீ.சீ 8 ரக பயணிகள் விமானம் சப்த கன்னியா என அறியப்படும் ஏழுகன்னியர் மலையில் ஐந்தாவது குன்றின் மீது விமானம் மோதி சிதறியது. விமானமோட்டிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர்.

1974ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடம் மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியில் இந்ந சம்பவம் இடம்பெற்றது.

191 பேரை பலியெடுத்த இந்த ஏழு கன்னியர் மலை ஆங்கிலத்தில் வில்கின் ஹில்ஸ் என்று அழைக்கின்றனர்.

இவ்விபத்தில் பலியான 190 பேர் தெப்பட்டன் தோட்ட கொத்தலென பகுதியில் அவ்விடத்திலேயே புதைக்கப்பட்டனர். அடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமானப்பணிப்பெண்ணின் உடலை அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்ற நெகிழ்ச்சியான சம்பவமும் இதில் அடங்கும்.

அத்தோடு விபத்துக்குள்ளான விமான பாகங்களில் எஞ்சியிருக்கும் டயர்கள் இரண்டு மட்டும் இதுவரை பாதுகாக்கபட்டு வருகின்றது. ஒரு டயர் நோட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ளது. நல்ல நிலையிலிருக்கும் டயர் நோட்டன் விமலசுரேந்திதர அணைக்கட்டுக்கும் செல்லும் வழியில் சம்பவங்ளை சுருக்கமாக தாங்கி பார்வைக்காக காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

விமானத்தின் கருப்புப்பெட்டி தகவலின் படி தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கை நாட்டை பொறுத்தவரை இதுவரை வெளிநாட்டு விமானம் ஒன்றுக்கு ஏற்பட்ட மிக மோசமான விபத்து இதுவாகும்.

12 13 15

வவுனியாவில் இன்றும் கடும்பனி மூட்டம் : மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!!

v1

வவுனியாவில் இரண்டாவது நாளாக இன்றும் கடும் பனி மூட்டம் காணப்படுவதால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பனிப் பொழிவு காரணமாக வீதிகளில் வாகனம் செல்லும் வாகன சாரதிகள்பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

மக்களது நடமாட்டமும் வீதிகளில் காலைவேளையில் குறைவாகவே காணப்படுகின்றது.

15303777_997597027052597_724221271_o15310843_997597037052596_2132843336_o15310902_997597030385930_391669068_ov2

கிளிநொச்சியில் ஒருவர் துண்டுத்துண்டாக வெட்டியும், எரித்தும் கொடூர கொலை!!

 
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவரை துண்டுத்துண்டாக வெட்டியும், எரியூட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம்(வயது 62) என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

துண்டுத்துண்டாக வெட்டிக் கொலை செய்யது எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பூநகரியைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கொலை சம்பந்தமான மேலதிக தகவல் எதனையும் உடனே பெற முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கிளிநொச்சி நீதிமன்றின் நீதவானின் விசாரணையை தொடர்ந்து சடலம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

இதேவேளை, மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மற்றும் கிளிநொச்சி குற்றத் தடவியல் பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 2 3 4

வவுனியாவில் மறைந்த இரும்பு மனிதன் பிடல் கஸ்ரோவின் அஞ்சலிக் கூட்டம்!!

kesto

கடந்த 25ம் திகதி மரணித்த கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் புரட்சியாளருமான இந்த நூற்றண்டின் இரும்பு மனிதன் பிடல் கஸ்ரோவின் அஞ்சலிக்கூட்டம் நாளை 04.12.2016 ஞாற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வவுனியா நகரசபை புதிய கலாசார விருந்துபசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனிசக் கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன் தலைமையில் இடம்பெறவுள்ள இன் நிகழ்வில் கே.கே.அருந்தவராஜா(மேழிக்குமரன்-எழுத்தாளர்), வெ.மகேந்திரன்(தேசிய அமைப்பாளர் -புதிய ஜனநாயக மாக்சிச லெனிசக் கட்சி), இரா.இராஜேஸ்வரன்(ஊடகவியலாளர்), க.மகேந்திரன்(தொழிற்சங்கப் பிரதிநிதி), பூ.சந்திரபத்மன் (சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு), தோழர் ஜீந்தீசன் (புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி) ஆகியோர் கலந்துகொள்வதுடன் சிறப்புரையாற்றவுள்ளனர்.

இவ் அஞ்சலி நினைவுக் கூட்டத்தில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏட்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

கட்டார் நாட்டில் திருடிய இலங்கையர்கள் சிறையில் : நாடு கடத்தவும் உத்தரவு!!

quatar-police

கட்டார் நாட்டவரின் வீட்டுக்குள் இரவு நேரத்தில் புகுந்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட 5 இலங்கையர்களுக்கு தோஹா – கட்டார் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

குற்றவாளிகள் வீட்டுக்குள் புகுந்து 2.2 மில்லியன் கட்டார் ரியால் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.

அனுமதியின்றி வீடொன்றுக்குள் புகுந்தமை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிகளுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்த தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனை காலம் முடிந்ததும் அவர்களை நாடு கடத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

டோஹாவில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் இரவில் வீட்டில் இல்லாத நேரத்தில் இவர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாக இலங்கையர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

தீக்குளித்த 11 வயது மாணவியின் கடைசி நிமிடங்கள் : கதறி அழுத தோழிகள்!!

fire

தமிழ்நாட்டின் தருமபுரியில் ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் வாழ பிடிக்கவில்லை என்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் இண்டூர் சின்னகனகம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவரது மகள் தர்ஷினி(11).

இவர் அதகபாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், வழக்கம் போல பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இவர் நேற்று திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, வலியால் துடித்த தர்ஷினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தர்ஷினியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், உடல் முழுவதுமாக தீ பற்றியதில் தர்ஷினி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தர்மபுரி டவுன் பொலிசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பெற்றோர், ஆசிரியர், சக தோழிகளிடம் விசாரணை மேற் கொண்டதில் தர்ஷினி தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவ தினத்தன்று காலை பள்ளிக்குச் சென்ற தர்ஷினி யாருடனும் சரியாக பேசவில்லை எனவும், இனிமேல் பள்ளிக்கு வரமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால், தான் வைத்திருந்த பேனா மற்றும் பென்சில் போன்ற பொருட்களை தனது நெருங்கிய தோழிகளிடம் கொடுத்துள்ளார்.

தோழிகள் ஏன் இப்படி செய்கிறாய் என கேட்ட பொழுது, என்னை இனிமேல் பார்க்க முடியாதல்லவா, அதனால் எனது நினைவாக வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

பின்பு, பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்த உடனே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டதாக தெரிகிறது.

துள்ளி விளையாடும் வயதில் தற்கொலை செய்து கொண்ட தர்ஷினி சடலத்தைப் பார்த்த பள்ளி தோழிகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க செய்தது.

கொலம்பியா விமான விபத்தின் மர்மம் விலகியது : வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

f1

கொலம்பியா நாட்டில் விமானம் விபத்துக்குள்ளாகி 71 பேர் பலியான சம்பவத்திற்கு தொடர்பான பின்னணி மர்மங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் நடைபெற இருந்த கால்பந்து விளையாட்டில் பங்கேற்க பிரேசில் நாட்டின் Chapecoense கிளப் வீரர்கள் கடந்த நவம்பர் 28-ம் திகதி LaMia Flight 2933 என்ற விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

இந்த விமானத்தில் 22 கால்பந்து விளையாட்டு வீரர்கள், 21 செய்தியாளர்கள், விமான குழுவினர் உள்ளிட்ட 71 பேர் பயணம் செய்துள்ளனர்.

பொலிவியா நாட்டில் உள்ள Santa Cruz என்ற விமான நிலையத்தில் இருந்து கொலம்பியாவில் உள்ள Medellin விமான நிலையத்திற்கு அந்த விமானம் புறப்பட்டுள்ளது.

ஆனால், துரதிஷ்டவசமாக நிகழ்ந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 71 பேர் பரிதாபமாக பலியாயினர்.

இவ்விபத்தில் 3 விளையாட்டு வீரர்கள், 2 விமானக் குழுவினர் மற்றும் ஒரு செய்தியாளர் என 6 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்.

விமான விபத்திற்கான விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பல மர்மங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விபத்து நிகழ்வதற்கு ‘மனித தவறு’ தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இவற்றை சற்று விரிவாக பார்ப்போம்.

தவறு 1

விபத்தில் சிக்கிய சிறிய நிறுவனத்தை சேர்ந்த LaMia Flight 2933 என்ற விமானத்தின் சேவைகள் கடந்த 2009-ம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. எனினும், விமானத்தின் தரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளிலும் விமானம் நிறுவனம் சிக்கியது.

கொலம்பியாவில் நடைப்பெற இருந்த முக்கிய விளையாட்டு போட்டியில் இந்த விமானத்தை ஏன் விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்தனர் என்பது தற்போது கேள்வியாக எழுந்துள்ளது.

சர்வதேச பெரிய விமானத்தை வாடகைக்கு எடுத்திருந்தால் அதற்கு 1,00,000 டொலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், அதை விட குறைந்தளவு 60,000 டொலர் கட்டணம் விதித்த LaMia Flight 2933 விமானத்தை தெரிவு செய்துள்ளனர்.

தவறு 2

பொதுவாக, நாடு விட்டு நாடு செல்லும் சர்வதேச விமானங்கள் புறப்படுவதற்கு முன்னதாக அதில் தேவையான எரிபொருள் உள்ளதா என்பது தவறாமல் பரிசோதிக்க வேண்டும்.

இதுமட்டுமில்லாமல், பயணம் செய்யவுள்ள தூரத்தை விட 30 நிமிடங்கள் விமானம் கூடுதலாக பறக்க தேவையான எரிபொருள் விமானத்தில் நிரப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த விமானம் புறப்பட்டபோது எரிபொருளை விமானக்குழுவினர் பரிசோதனை செய்யவில்லை எனத் தெரிகிறது.

ஏனெனில், LaMia Flight 2933 விமானத்தில் முழுவதுமாக எரிபொருளை நிரப்பி விட்டால் அது 2,965 கி.மீ வரை பயணம் மேற்கொள்ளலாம். ஆனால், விமானம் புறப்பட்ட Santa Cruz விமான நிலையத்தில் இருந்து சேரவேண்டிய Medellin விமான நிலையத்திற்கு இடையில் உள்ள தூரம் 1,961 கி.மீ. அதாவது, பயணிக்க வேண்டிய தூரம் குறைவாக உள்ளதால் விமானத்தில் உள்ள எரிபொருளை பரிசோதிக்க வில்லை எனக் கூறப்படுகிறது.

தவறு 3

விமானத்தில் எரிபொருள் பரிசோதனை செய்யவில்லை எனக் கூறப்பட்டாலும், இரண்டு விமான நிலையங்களுக்கு இடையில் உள்ள Cobija என்ற விமான நிலையத்தில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பலாம் என விமானி முடிவு செய்துள்ளார்.

ஆனால், திட்டமிட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக தான் விமானம் புறப்பட்டுள்ளது.

இதனால் இடையில் தரையிறங்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு நேராக Medellin விமான நிலையத்திற்கு விமானம் பறந்துள்ளது.

அதேசமயம், விமானம் இரவு நேரத்தில் புறப்பட்டதால் Cobija விமான நிலையம் மூடப்படும் என்பதாலும் அங்கு தரையிறங்கி எரிபொருளை நிரப்பாமல் விமானம் நேராக பறந்துள்ளது.

தவறு 4

விமானம் வானத்தில் பறந்துக்கொண்டு இருந்தபோது ‘விமானத்தில் போதுமான எரிபொருள் உள்ளதா?’ என விமானியான Miguel Quiroga என்பவருடன் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

இதற்கு ‘விமானத்தில் தேவையான எரிபொருள் உள்ளது’ என விமானி கூறியுள்ளார். இங்கு ஒரு முக்கியமான விடயத்தையும் கவனிக்க வேண்டும்.

இந்த விமானத்தை இயக்கிய Miguel Quiroga விமானி இந்நிறுவனத்தின் முதலாளிகளில் ஒருவர் ஆவார்.

எனவே, தனது சொந்த விமானத்தை பற்றி தனக்கு நன்றாக தெரியும் என்ற நம்பிக்கையில் அவர் ‘விமானத்தில் தேவையான எரிபொருள் உள்ளதாக’ கூறியதாக தெரிகிறது.

தவறு 5

இதுபோன்ற ஒரு சூழலில் தரையிறங்க வேண்டிய Medellin விமான நிலையத்தில் இருந்து 5 மைல்கள் தொலைவில் விமானம் வந்தபோது ‘ஓடுதளத்தில் தரையிறங்க வேண்டும்’ என கட்டுப்பாட்டு அறையிடம் விமானி அனுமதி கோரியுள்ளார்.

ஆனால், துரதிஷ்டவசமாக ‘உடனடியாக தரையிறங்க முடியாது. மற்றொரு விமானத்தில் எரிபொருள் கசிவதாக விமானி தகவல் அளித்துள்ளார்.

எனவே, அந்த விமானம் தரையிறங்கிய பிறகு தான் உங்கள் விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்படும். நீங்கள் வானில் வட்டம் அடித்து காத்திருங்கள்’ என கட்டுப்பாட்டு அதிகாரிகள் பதிலளித்துள்ளார்.

இந்த பதில் கிடைத்த அடுத்த விநாடி திடீரென விமானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது(விமானத்தில் எரிபொருள் இல்லையென்றால் மின்சாரம் தானாக துண்டிக்கப்படும்).

விமானத்தில் எரிபொருள் தீர்ந்துவிட்டது என்பது அப்போது தான் விமானிக்கு தெரியவந்துள்ளது. ஆனாலும், இதை அவர் உடனடியாக அவசர அழைப்பு மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு கூறவில்லை.

ஏனெனில், விமானத்தில் போதுமான எரிபொருள் உள்ளது என அவர் தான் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உறுதி செய்தார்.

தற்போது விமானத்தில் எரிபொருள் இல்லை எனத் தகவல் அளித்து அது நிரூபிக்கப்பட்டால், வான்வழி போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக விமானத்தின் உரிமையாளர்களில் ஒருவரான தனக்கு ஒரு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும் என அஞ்சிய அவர் அதனை ஆரம்பத்திலேயே கூறாமல் மறைத்துள்ளார்.

எனினும், நிலைமை கட்டுப்பாட்டை விட்டு சென்றதை உணர்ந்த விமானி விமானத்தின் உண்மை நிலையை அவசர அவசரமாக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார். ஆனால், காலம் கடந்துவிட்டது.

விமானத்தில் சிறிதளவு எரிபொருளும் இல்லாததால் வேகமாக தரையிறங்கி விமானம் மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

பொலிவியா அதிகாரிகளின் அதிரடி உத்தரவு

விபத்து நிகழ்ந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டபோது விமானம் வெடித்து சிதறவில்லை என்ற உண்மையை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விமானத்தில் எரிபொருள் இருந்திருந்தால் விபத்தில் விமானம் நிச்சயமாக வெடித்து சிதறியிருக்கும். எனவே, விமானம் பறந்தபோது அதில் தேவையான எரிபொருள் இல்லை என்பது நிரூபணம் ஆனது.

விசாரணையில் இத்தகவல்கள் வெளியானதை தொடர்ந்து விபத்துக்குள்ளான விமான நிறுவனத்தின் அனைத்து சேவைகளுக்கான உரிமைகளை பொலிவியா அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

f2 f3

இலங்கை அணிக்கு இரு புதிய பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்!!

sl

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஹசான் திலகரட்ன இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை உப்புல் சந்தன இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

யாழில் நாடா புயலில் சிக்கிய மீனவர் சடலமாக மீட்பு!!

fish

கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவரின் சடலம் குருநகர் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநகர் இறால் வளர்ப்புத் திட்டப் பகுதியை சேர்ந்த ஆர்.ஜெகன் (வயது 31) என்ற நபரே சடலமாக கரையொதுங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் குருநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற போது, ஏற்பட்ட நாடா புயலின்போது போது ஏற்பட்ட சுழியில் சிக்கி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடா சூறாவளி தாக்கிய சமயம் குருநகர் பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தனர்.

அவர்களில் ஒருவரின் சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது.ஏனைய இருவரில் ஒருவர் உடைந்த படிகில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து மற்றைய மீனவரையும் தேடும் பணிகள் தொடர்ந்து வருகின்றது.

இன்று கடலிற்கு சென்ற மீனவர்கள் சடலத்தினைக் கண்டு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதன் பிரகாரம் உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

வெள்ளை நிறமாக மாற்றம் பெறும் பாதசாரிகள் கடவை!!

A pedestrian crosses a road in Tokyo, Japan, on Wednesday, May 15, 2013. Japan's economy expanded the most in a year last quarter as consumer spending and export gains outweighed the weakest business investment since the wake of the March 2011 earthquake and tsunami. Photographer: Akio Kon/Bloomberg

வெள்ளை நிறமாக மாற்றம் பெறும் பாதசாரிகள் கடவை
பாதசாரிகள் கடவையை வௌ்ளை நிறமாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பொது நூலகத்திற்கு அருகிலுள்ள பாதசாரிகள் கடவையை வௌ்ளை நிறமாக்கி இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், முதற்கட்டமாக மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாதசாரிகள் கடவைகளும் வௌ்ளை நிறமாக்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்குள் நாட்டிலுள்ள அனைத்து பாதசாரிகள் கடவைகளும் வௌ்ளை நிறமாக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் நடைமுறைப்படுத்தப்படாது : ஜனாதிபதி!!

25000

வாகன சாரதிகளுக்கான குறைந்தப்பட்ச தண்டப்பணமான 25 ஆயிரம் ரூபா நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ்கள் சங்கங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் அகில இலங்கை தனியார் பஸ்கள் சங்கங்கங்களின் சம்மேளனத்திற்கும் இடையிலான விசேட கலந்துரையாடலின் போது குறித்த விடயத்தினை ஜனாதிபதி தெரிவித்ததாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் தண்டப்பணம் தொடர்பில் பஸ் உரிமையாளர் சங்கங்களிடம் கலந்துரையாடப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் இவர் தெரிவித்தார்.

திருகோணமலையில் பேருந்து தீக்கிரை!!

bus

திருகோணமலை 4 ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த தனியாருக்கு சொந்தமான பேருந்து ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – திருகோணமலை சேவையில் ஈடுபடும் குறித்த பேருந்து, உரிமையாளரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 01.00 அளவில் அடையாளம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பேருந்தின் பின்புறச் சில்லில் மூட்டப்பட்ட தீ காரணமாகவே பேருந்து முழுமையாக எரிந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உப்புவெளி பொலிசார் விசாரணைகளை முன்னெத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொண்டு வந்த நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வீதி விதிமுறைகளை மீறும் வாகன சாரதிகளுக்கு தண்டப்பணமாக 5 ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா அறவிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் குறித்த திட்டத்தை வாபஸ் பெறுமாறு கோரி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் ஊழியர்கள் பாதிக்கப்பட்டதுடன் மாத்தறை, பாணந்துறை, வவுனியா, தம்புள்ளை, புத்தளம், கண்டி, திருகோணமலை, குளியாப்பிட்டி, தங்கொட்டுவ, தம்பதெனிய, யக்கல, பயாகல, கெரவலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மீதும் அடையாளந்தெரியாதோரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழில் வாள் வெட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது!!

vaal

யாழ். குடா நாட்டில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்பட்டும் ஐந்து இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து இரண்டு வாள்களும் வாள் வெட்டுக்கு தயாராகும் புகைப் படங்கள், வீடியோக்கள் அடங்கிய கைத்தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோப்பாய் பொஸிஸ் அதிகாரி கருத்து தெரிவிக்கையில், கைதுசெய்யப்பட்ட ஐவரில் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து வாள்கள் இரண்டு மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஜபோன் கைதொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இவர்கள் சுன்னாகம், உரும்பிராய், திருநெல்வேலி, கோப்பாய் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவர் யாழ். மாவட்டத்திலுள்ள பிரபல பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்வி கற்பவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.