வடமாகாண பாடசாலைகளில் அடுத்த ஆண்டு முதல் நேர அட்டவணையில் மாற்றம் செய்யவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் வடமாகாண பாடசாலைகள் 8 மணி முதல் 2 மணி வரையான கால அட்டவணைகளின் அடிப்படையிலே கற்றல் செயற்பாடுகள் நடைபெற்று வந்தன.
தற்போது குறித்த நேர அட்டவணை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாற்றப்பட உள்ளது.
இதேவேளை பாடசாலை நேரம் மாற்றப்படுவதனால் அதற்கு ஏற்ற வகையில் போக்குவரத்து வசதிகள் செய்வது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடனும் கலந்துரையாடி முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வவுனியா மாவட்ட பாடசாலைகளில் இந்த விடயம் ஏற்கெனவே நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வடமாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் இந்த நடைமுறை எதிர்வரும் 2017 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஆர்.இரவீந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரின் உடையில் நடமாடிய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்று நுவரெலியா பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர் கேகாலை பகுதியை சேர்ந்த லோகநாதன் வினோத்குமார் என்பவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண் பொலிஸ் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுவதாக சந்தேகப்பட்டு உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டபோது சந்தேக நபர் பெண் பொலிஸ் ஆடை அணிந்த ஆண் ஒருவர் என்பதையும் அறிந்து குறித்த நபரை உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதேவேளை அவருக்கு எவ்விதம் பொலிஸ் ஆடை கிடைத்தது எனவும், ஏன் அவர் பெண் வேடத்தில் இருந்தார் என்பது தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இரசியங்களை பிரபல இணையத்தளம் ஒன்று வெளிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகின்றது.
ஒபாமாவின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் அதில் உள்ள தகவல்களை பிரபல விக்கிலீக்ஸ் இணையத்தளமே வெளியிட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் விக்கிலீக்ஸ் ஒபாமாவின் மின்னஞ்சல் பற்றிய தகவல்களோடு முக்கிய விடயங்களையும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியானது bobama@ameritech.net. என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த மின்னஞ்சல் முகவரியுடன் 2008ம் ஆண்டு நடைபெற்ற ஒரு பரிமாற்றமும் வெளியிடப்பட்டுள்ளது.
ஜான் போடஸ்டா இவர் அமெரிக்க அதிபரின் நிர்வாக குழுவில் இடம்பெற்று இருந்த ஒருவராவார். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அதே ஆண்டு நவம்பர் 15ம் திகதி நடைபெற்ற ஜி 20 மாநாட்டின் அழைப்பை ஒபாமா ஏற்க கூடாது என வலியுறுத்தி ஒபாமாவுக்கு மின்னஞ்சல் ஒன்றினை ஜான் போடஸ்டா அனுப்பி உள்ளார்.
இந்த மின்னஞ்சலில் ஒபாமா ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்டால் ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் தொடர்பிலும் போடஸ்டா அறியத்தந்துள்ளார். அந்தத் தகவலையும் விக்கிலீக்ஸ் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை போடஸ்டாவின் 23 ஆயிரம் மின்னஞ்சல்கள் தகவலும் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், ஸ்ரீலங்கன் விமான சேவையின் 620 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம், கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மூன்று மாதங்களுக்கு பகல் நேர விமான சேவைகள் ரத்துச் செய்யப்படவுள்ளன.
இதனால் மொத்தமாக 200 விமானப் பயணங்களை ரத்துச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை முன்னர் கூறியிருந்தது.
ஆனால் மாதம் ஒன்றுக்கே 200 விமான சேவைகள் ரத்துச் செய்யப்படும் நிலை ஏற்படும் என்றும் நாளொன்றுக்கு 7 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்படுவதால் மூன்று மாதங்களிலும் மொத்தமாக 620 விமான சேவைகளை ரத்துச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
பகல் நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், மாலே, திருச்சி, மதுரை, போன்ற குறுந்தூரப் பயணங்களே அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.இந்த விமானப் பயணங்களை ரத்துச் செய்வதால் ஸ்ரீலங்கன் விமான சேவை பெரும் வருமான இழப்பை எதிர்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாற்று ஏற்பாடாக மத்தள விமான நிலையத்தைப் பகல்நேரப் பயணங்களுக்குப் பயன்படுத்துவதில் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆர்வம் காட்டவில்லை.
ரத்துச் செய்யப்படும் பெரும்பாலான விமானப் பயணங்கள் 4 மணி நேரத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றும், இந்த நான்கு மணிநேர விமானப் பயணங்களுக்காக, மத்தளவுக்கு நான்கு மணிநேரப் பயணத்தை மேற்கொள்ள பயணிகள் தயாராக இருக்கமாட்டார்கள் என்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை நாட்டின் அனைத்து பல்ககைலக்கழங்களிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
உயிரிழந்த சுலக்சன் சகோதரர் மரணமானது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட முன்னதாகவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது
உத்தரவினை மீறி வண்டியை நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.இவ்வாறு உத்தரவினை மீறிச் சென்ற அனைவரையும் பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்ல முடியுமா?
திடீர் விபத்து ஒன்று ஏற்பட்டது, அதனால் பொலிஸாரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் உயிரிழந்ததனை இந்த அனைத்து தரப்பினரும் அறிந்திருந்தார்கள்.
வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இவ்வாறு மக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணிக்கின்றனர், இது ஓர் சாதரண விடயம் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார்,
எனினும், இந்தக் கூற்றினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.இது ஓர் சாதாரண நிலைமையல்ல இது ஓர் அசாதாரண நிலைமையாகும்.
வடக்கில் இடம்பெற்ற காரணத்தினால் நாம் இந்த சம்பவத்தை கைவிட்டு விடப் போவதில்லை.
மாணவர் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் நாடு முழுவதிலும் உள்ள பலக்கலைக்கழகங்களில் நாளை போராட்டம் நடத்தப்படும் என லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்பெய்னைச் சேர்ந்த பெண்ணொருவர் 62 வயதில் குழந்தை பிரசவித்துள்ளார். லீனா அல்வேரெஸ் எனும் இப்பெண் ஒரு மருத்துவர் ஆவார். செயற்கைக் கருத்தரிப்பு முறையில் இவர் குழந்தை பிரசவித்துள்ளார்.
ஸ்பெய்னின் லூகோ நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த 10 ஆம் திகதி பெண் குழந்தையொன்றை லீனா அல்வேரெஸ் பிரசவித்தார். சிசேரியன் முறையில் இக்குழந்தை பிறந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை இக்குழந்தையுடன் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் லீனா அல்வேரெஸ். இவருக்கு ஏற்கெனவே இரு பிள்ளை கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 27 வயது. இரண்டாவது மகனுக்கு 10 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
லீனா அல்வேரெஸ் 61 வயதில் கருத்தரித்தமையானது, ஸ்பெய்னில் சர்ச்சையை ஏற்படுத்தியது. செயற்கை முறை கருத்தரிப்புக்கு அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என சிலர் வலியுறுத்தியிருந்தனர்.
எனினும், தனது மகள் ஆரோக்கியமாக வுள்ளதாகவும் தான் மிக மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் லீனா அல்வேரெஸ் கூறுகிறார். வயதான பெண்கள் குழந்தைகளைப் பெறுவதற்கு தயங்கக்கூடாது எனவும் அவர் கூறுகிறார்.
இரவு உணவுடன் பொரியல் சமைத்து வைக்காமையினால் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியுடன் சண்டையிட்ட நபரொருவர், விடியும் வரை தனது மனைவியை ஜன்னலுடன் சேர்த்து கட்டி வைத்த சம்பவமொன்று ஹெம்மாத்தகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கூலித் தொழிலில் ஈடுபட்டிருந்த இந்நபர் தினமும் இரவில் வீடு திரும்பும் போது மதுபானம் அருந்தி வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று வழமையை விட அதிகளவில் மதுபானம் அருந்திவந்த இந்நபர், சோறுடன் உண்பதற்கு பொரியல் எதையும் மனைவி சமைத்து வைத்திருக்காமையினால் வயர் ஒன்றில் தனது மனைவியின் இரண்டு கைகளையும் கட்டிவிட்டு அவரை ஜன்னலுடன் பிணைத்து கட்டிவைத்து விட்டு மதுபோதையில் தரையில் படுத்து உறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாள் காலை கண்விழித்து பார்த்தபோது தனது மனைவி ஜன்னலில் கட்டப்பட்டிருப்பதனை கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் பின்னர் உடனடியாக சென்று கட்டவிழ்த்து விட்டு மனைவியை அழைத்து வந்து கதிரையில் அமரச் செய்ததுடன் அவரிடம் மன்னிப்பும் கோரியிருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்திருந்தனர்.
இச்சம்பவத்துக்கு பின்னர் இந்நபர் மதுபானம் அருந்திவரும் பழக்கத்தை விட்டிருந்ததாக அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக எவ்வித பொலிஸ் முறைப்பாடு செய்திருக்கவில்லை யென்றும் தெரிவித்துள்ளனர்.
கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் என அழைக்கப்படும் யாழ். மாதகலைச் சேர்ந்த சிரேஷ்ட கார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்த செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி உயிர் இழந்திருந்தார்.
அவரது இறுதிக் கிரியைகள் நேற்று சனிக்கிழமை (22.10.2016) யாழ்ப்பாணம் மாதகலிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றதுடன் தொடர்ந்து இறுதி யாத்திரையும் இடம்பெற்றது.
நேற்று காலை முதல் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அன்னாரது பூதவுடல் இன்று மாலை 3.30 மணியளவில் இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 4 மணியளவில் மாதகல் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அன்னாரது பூதவுடல் மாதகல் புனித செபஸ்ரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அஸ்வின் சுதர்சனின் இறுதிக் கிரியைகள் மற்றும் இறுதி ஊர்வலத்தில் அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், யாழ். ஊடக அமையம் சார்பாக சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தயாபரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் மாதகலையை பிறப்பிடமாகக் கொண்ட அல்பேர்ட் அஸ்வின் சுதர்சன் பிரபல ஊடகவியலாளரும், பத்திரிகை கார்ட்டூனிஸ்ட் பட ஓவியரும், குறும்பட இயக்குனர் ஒருவருமாவார்.
அரசியல்வாதிகளின் போலிமுகங்களைத் தோலுரித்துக் காட்டியும், சமகால அரசியல் நிலைமைகளை உணர்த்தும் வகையிலும் கார்ட்டூன் சித்திரங்களை வரைந்து பலரதும் கவனத்தையும் ஈர்த்த அஸ்வின் சுதர்சன் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடொன்றில் அடைக்கலம் புகவிரும்புவதாக தனது இறுதி உரையாடலின் போது குறிப்பிட்டிருந்தார்.
வெளிநாடொன்றில் அடைக்கலம் புகுவதற்காக சென்றிருந்த நிலையில் உக்ரேன் நாட்டில் கடந்த மாதம்-22 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் விபத்துக் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டதாகவும், போதிய சிகிச்சைகளின்மையால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.
மட்டக்களப்பு –வாழைச்சேனை பிரதான வீதியில் சத்துருக்கொண்டானில் நேற்று (22.10.2016) இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
சத்துருக்கொண்டான் பொலிஸ் சாவடிக்கு அருகில் உள்ள வீதி வளைவில் நேற்று இரவு 9.30மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஆறுமுகத்தான்குடியிருப்பினை சேர்ந்த வி.ரதிதரன் (17வயது), க.விதுசன் (17வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பில் நேற்று இரவு நடைபெற்ற இசை நிகழ்வினை கண்டுகளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தபோது குறித்த வளைவு பகுதியில் வேகத்தினைக்கட்டுப்படுத்தமுடியாமல் மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது விதுசன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளைச்செலுத்திச்சென்றவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லையெனவும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் கூறியுள்ளனர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் தியாகேஸ்வரனின் பணிப்புக்கு அமைய மரண விசாரணை நடைபெற்றுவருவதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் குஹான்சூ நகரில் சாங்க் பூ என்ற புத்த விஹாரை அமைந்துள்ளது. அங்கு பூஹூ என்ற புத்த மதத் துறவி தன்னுடைய 94 வயது வரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி, கடந்த 2012 ஆம் ஆண்டில் காலமானார்.
அவர் புத்த மதத்திற்கு ஆற்றிய சேவையை கௌரவிக்கும் விதமாக, ஒரு மிகப்பெரிய விஷயத்தை செய்ய குறித்த விஹாரையின் நிர்வாகம் முடிவெடுத்தது.
அதன்படி, அவர் இறந்து நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையில், அவரின் சடலத்தைப் பதப்படுத்தினர்.
பின்னர், அதை பெரிய ஜாடியில் உட்காரும் நிலையில் வைத்து மூடிவைத்தனர். அதற்கு தங்க முலாம் பூசி, ஒரு தங்க சிலையாக தற்போது வடிவமைத்துள்ளனர்.
மலேசியாவில் தொண்டு நிறுவனமொன்று நடத்திய நிகழ்ச்சியில், வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வெடித்துச் சிதறியதில் குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மலேசியாவின் டெரெங்கனு மாநிலத்தில் உள்ள பூங்கா ஒன்றில், ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் காற்றில் பறக்க விடப்படுவதற்கு முன் அதனைக் காண கூட்டம் கூடியிருந்தது.
அதைப் பறக்கவிடும் முயற்சியில், நிலத்தோடு கட்டப்பட்டிருந்த பலூன்களின் சரங்களை அதிகாரி ஒருவர் சிகரட் லைட்டர் மூலம் தீ வைக்க, அது மிகப்பெரிய தீ பிழம்பாக வெடித்துச் சிதறியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் 150 க்கும் மேற்பட்ட பலூன்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியுள்ளன. இதனால், பார்வையாளர்கள் பலருக்கும் முகங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, வாயு நிரப்பப்பட்ட பலூன்களுக்கு டெரங்கனு மாநில அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட நீர் பரப்பை பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) என்கின்றனர்.
புளோரிடா நீரிணை, பெர்முடா தீவு, கரீபியன் தீவுகள் ஆகிய மூன்றையும் ஓர் முக்கோணம் போல் இணைக்கும் கடல் பகுதியாகத் திகழ்கிறது இந்த பெர்முடா.
இந்த கடற்பகுதி 5 இலட்சம் கிலோமீட்டர் சதுர அடி பரப்பளவு கொண்டது. இந்த முக்கோணக் கடற்பகுதியில் எண்ணற்ற கப்பல்களும் விமானங்களும் மர்மமான முறையில் மறைந்து போயுள்ளன. ஆனால், இது குறித்த உண்மை நிலவரம் எவருக்கும் தெரியாததால், பலவிதமான கதைகள் உலவ ஆரம்பித்தன.
சிலர் இது வேற்றுக்கிரகவாசிகளின் சூழ்ச்சி எனவும் நம்பினர். இதை பேய் முக்கோணம் என்று லத்தீன் அமெரிக்காவில் அழைக்க ஆரம்பித்தார்கள்.
இதற்கிடையில், மெக்ஸிக்கோவின் 19 விமானங்கள் காணாமற்போயின. அந்த விமானங்களைத் தேடி மீட்புப் பணிக்காகச் சென்ற 13 பேர் கொண்ட குழுவும் காணாமற்போனது.
இதற்கான காரணங்களைப் பல காலமாகவே ஆராய்ச்சியாளர்கள் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், 2012 ஆம் ஆண்டு பெர்முடா கடலின் ஆழத்தில் புதிரானதொரு அமைப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இது குறித்து ஆய்வு நடத்தி வந்த இங்கிலாந்து விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக இருந்து வந்த மர்ம முடிச்சை தற்போது அவிழ்த்துள்ளனர்.
இந்த பெர்முடா பகுதியில் அறுங்கோண மேகங்கள் காணப்படுவதாகவும் அதனால் அங்கு நீர் சுழற்சி ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.
இது குறித்து கொலராடோ பல்கலைக்கழகத்தின் வானியல் செயற்கைக்கோள் ஆய்வாளர் ஸ்டீவ் மில்லர் கூறுகையில்,
“பொதுவாக நேரான விளிம்புகள் கொண்ட மேகங்களை நீங்கள் பார்த்திருக்க முடியாது. பெரும்பாலான நேரம் மேகங்கள் சீரற்ற நிலையில் பரவி இருக்கும். ரேடார் செயற்கைக்கோளைப் பயன்படுத்தி மேகங்களுக்கு கீழ் என்ன நடக்கிறது என ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 கிலோ மீட்டர் வேகத்தில் செயற்படும் காற்று, வெடிகுண்டுகள் (Air bombs) போல் கடல் மட்டத்தில் இருந்து மேல் எழும்பி மீண்டும் கடலை நோக்கி கீழே விழுகிறது. இந்த காற்று வெடிகுண்டுகளால்தான் அப்பகுதியில் கப்பல்கள், விமானங்கள் போன்றவை மர்மமான முறையில் மறைந்திருக்கும்.” என குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் பெற்ற தந்தையே 4 மாத குழந்தையை கடத்திய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு குழந்தை கடத்தப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பல ஊடகங்கள் வழியாக கடத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Grenoble பகுதியில் தாயுடன் வாழ்ந்து வந்த குழந்தையே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.
கணவன், மனைவி இருவரும் சட்டப்படி பிரிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தை தாயுடன் Grenoble பகுதியில் இருந்துள்ளது. இந்நிலையில், தந்தைக்கு சட்டப்படி குழந்தையை பார்க்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த செவ்வாய்க்கிழமை, Grenoble பகுதியில் தனது மனைவி வீட்டில் பால்கனிய வழியாக நுழைந்த கணவர், முன்னாள் மனைவியை தாக்கி குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் கடத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மறுநாள் காலை Echirolles பகுதியல் இருக்கும் ஒரு தொலைபேசி சாவடியிலிருந்து பொலிஸை தொடர்பு கொண்ட கணவர், குழந்தை தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உடனே சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் விடுக்கப்பட்ட கடத்தல் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
லண்டனில் பிரபல உணவகங்களை நடத்தி வரும் 53 வயதான டேஸ் குணவர்தன என்பவரே பணக்காரப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள 100 பணக்காரர்களில் இவரும் ஒருவராவார்.
லண்டனில் உயர் வகையான உணவகத்தின் 34 கிளைகள் மற்றும் நியூயோர்க், பாரிஸ், டோக்கியோ ஆகிய நாடுகளில் பல கிளைகளையும் இவர் நடத்தி வருவதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.
டேஸ் குணவர்தன இலங்கையில் பிறந்த, இங்குள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆரம்ப கல்வியை மேற்கொண்டு பின்னர் பிரித்தானியா சென்று அங்கு வசித்து வருகின்றார்.
பிரித்தானியாவில் மேலதிக கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்ட டேஸ் 1981ம் ஆண்டு கணக்காளராக தொழில் வாழ்க்கை ஆரம்பித்தார்.
அதன் பின்னர் 1991ம் ஆண்டு கொன்ரன் ஹோல்டிங்ஸ் என கூட்டு வர்த்தகத்திற்கு தொடர்புபட்டுள்ளார்.
லண்டனின் கோடீஸ்வர வர்த்தகரான ஸ்ரீமத் டேரன்ஸ் கொன்ரன் என்பவருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில் 11 வருடங்கள் சேவை செய்ததன் பின்னர் உணவகம் ஒன்றின் பகுதியை கொள்வனவு செய்ததனை தொடர்ந்து அதில் இருந்து விலகியுள்ளார்.
டேஸ் குணவர்தன மேலும் ஒரு நண்பருடன் D&D என்ற பெயரில் ஹோட்டல் மற்றும் உணவக வர்த்தகம் ஒன்றை நடத்தி செல்கின்ற நிலையில் உலக புகழ் பெற்ற Pont De La Tour, Blue Pring, Lavceston Place, Sky Low Meea ஆகிய அனைத்து உணவகங்களுக்கும் உரிமையாளர் அவர் என தெரியவந்துள்ளது.
அவருக்கு கீழ் 2300 ஊழியர்கள் வேலை செய்யும் நிலையில் அவரது வருடாந்த வருமானம் கிட்டத்தட்ட 100 மில்லியன் பவுன்ட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டில் பிரித்தானியாவின் 100 பணக்காரர்களின் பட்டியலில் டேஸ் குணவர்தனவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக லண்டன் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
யாழில் உயிரிழந்த இரு இளைஞர்களினதும் பிரேதபரிசோதனைகள் முடிவடைந்த பின்னர் சடலங்கள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதில் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜனின் சடலம் தற்போது அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் வருகைத்தந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
பல்கலைக்கழக மாணவர்களும் வருகைத்தருவதை காணக்கூடியதாக உள்ளது. பா.உ மாவை சேனாதிராஜா குறித்த இடத்திற்கு சென்று உயிரிழந்த மாணவரின் தாயாரைச் சந்தித்து துக்கம் விசாரித்துள்ளார்.
இதன்போது உயிரிழந்த மாணவனின் தாய் மற்றும் உறவினர்கள் தமது துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, கண்ணிர்விட்டு கதறி அழுதுள்ளனர்.
எனது மகன் திரும்பி வருவானா? பத்து பேருக்கு சமனானவன் என்மகன் என தாயும், எந்த ஒரு பிள்ளைக்கும் இவ்வாறான நிலை ஏற்படக் கூடாது என உறவினர்களும் கதறி அழும் குரல் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.