வவுனியா வேப்பங்குளத்தில் இன்று (14.09.2016) இரவு 6.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குருமன்காட்டிலிருந்து வேப்பங்குளம் நோக்கிப் பயணித்த துவிச்சக்கரவண்டி வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு திரும்ப முற்ப்பட்ட போது நெளுக்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் காயமடைந்துள்ளார்.
மானிப்பாய் சங்குவேலி பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பிரணவனின் கொலையில், கொலையாளியுடன் வந்த நபர் நீதிமன்றில் இன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
மானிப்பாய் சங்குவேலி சிவஞானப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமாரன் பிரணவன் (31) என்பவர் கடந்த மாதம் 17ஆம் திகதி மானிப்பாய் சங்குவேலிப் பகுதியில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பிரசன்னா மற்றும் அவரது நண்பர்கள் தான் வெட்டியவர்கள் என அளித்த வாக்குமூலத்தின் பிரகாரம் சயின் என்பவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த கொலைச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் போது இளவாலை வழிப் போக்குவரத்து பேருந்தின் உரிமையாளரான சிவகுமாரன் பிரணவனின் சகோதரனான கனகலிங்கம் மன்மதன் என்பவரை சன்னா மற்றும் அவரது நண்பர்கள் வெட்ட வந்த போது ஆள்மாறி பிரணவனை வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்த தகவலின் அடிப்படையில் ஆலடி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சவுந்தரராசா சயிந்திரன்(25) (சயின்) கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 31 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் கண்கண்ட சாட்சியான மன்மதனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பு நடைபெறவில்லை.
அதன் பின்னர் இன்று புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு நடாத்துவதற்கு திகதியிடப்பட்ட நிலையில் கண்கண்ட சாட்சிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை தாண்டி சாட்சி மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகி கொலைக்கு உடந்தையாக வந்த நபரை அடையாளம் காட்டினார்.
இதேவேளை அடையாள அணிவகுப்பின் பிரகாரம் குறித்த நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த ஆமை றொசான் என்று அழைக்கப்படுபவரையும் பிரணவனை கொலை செய்த ஏனைய மூவரையும் 10 நாட்களுக்குள் கைதுசெய்து எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் விசாரணை செய்யப்படவுள்ள வழக்கின் போது மன்றில் ஆஜர்படுத்துமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி யூட்சன், மானிப்பாய் பொலிஸாருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்து வழக்கினை ஒத்திவைத்தார்.
ஹைதராபாத்தில் பிறருக்கு உதவி செய்வதற்காக கடிதம் கொடுத்த 10 வயது சிறுவனை இரண்டு இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ளா ஹயந்த்நகர் பகுதியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன் அசோக், டியூசன் முடித்துவிட்டு திரும்புகையில், அவ்வழியே வந்த பெண்ணிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.
கடிதத்தை பெற்ற அப்பெண்மனி உடனடியாக அவரின் கணவர் விஜய், தம்பி துர்கா பிரசாத்திடம் கொடுத்துள்ளார். அதை படித்து பார்க்காமல் விஜய், துர்காபிரசாத் ஆகியோர் அச்சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இதனால் ஆவேசமடைந்த சிறுவனின் தந்தை பொலிசில் புகார் தெரிவித்தார். பொலிசார் நடத்திய விசாரணையில் பைபிலில் பிறருக்கு உதவி செய்தால் நல்லது என கூறிப்பிட்டிருந்தது. அதன்படியே அச்சிறுவனும், அதனை ஒரு கடிதத்தில் எழுதி அப்பெண்ணிடம் கொடுத்துள்ளான். அதை இவர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள் என தெரியவந்துள்ளது.
இதனால் பொலிசார் துர்காபிரசாத், விஜய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 மாடிகளைக் கொண்ட வாகனத் தரிப்பிடக் கட்டடமொன்றின் மொட்டை மாடியில் உரிய நேரத்தில் காரை நிறுத்துவதற்கு சாரதியொருவர் தவறியதால் அந்தரத்தில் அக் கார் தொங்கிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள மேற்படி கட்டடத்தின் பாதுகாப்புத் தடுப்புக் கம்பிகளை இக் கார் உடைத்துக்கொண்டு சென்றது.
எனினும், காரின் அச்சு ஒன்றில் அக் கம்பிகள் சுற்றிக்கொண்டதால் அக் கார் தரையில் விழவில்லை.
அதன்பின் தீயணைப்புப் படையினர் அழைக்கப்பட்டு காரின் சாரதியான 24 வயதான இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டார். அவரின் விபரங்கள் வெளியிடப்படவில்லை
தொடுகை முறைமை மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகள் தவறி நிலத்தில் விழும் போது அவற்றின் கண்ணாடித் திரை உடைவதனால் பயன்பாட்டாளர்கள் அதனைச் சீர்செய்ய பெரும் செலவை எதிர்கொள்வது வழமையாகவுள்ளது.
இதன்போது பல சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசிகள் முழுமையாக செயலிழந்து பாவனைக்கு உதவாத நிலையை அடைவதும் வழமையாகவுள்ளது.
இந்நிலையில் மேற்படி பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக பிரித்தானிய சஸெக்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஒக்ஸ்போர்ட்டை அடிப்படையாகக் கொண்ட எம் – ஸ்லோவ் நுண்மின் நிறுவனம் என்பவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கீழே விழுந்தால் உடையாத கையடக்கத்தொலைபேசித் திரையை உருவாக்கியுள்ளனர்.
தற்போது பாவனையிலுள்ள கையடக்கத் தொலைபேசிகளின் தொடுகையுணர்வுடைய திரைகளுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு செலவில் உருவாக்கப்படும் இந்தத் திரைகளை 2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பாவனைக்கு விட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்தத் திரையை கையடக்கத்தொலைபேசிகளுக்கு மட்டுமல்லாது தொலைக்காட்சிகள் மற்றும் டப்லட் கணினிகள் என்பவற்றுக்கும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடுகையுணர்வுடைய திரைக்கான மின்வாய்கள் தற்போது விலையுயர்ந்த இன்டியம் தகர ஒட்சைட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேற்படி விஞ்ஞானிகள் மனித கேசத்துடன் ஒப்பிடுகையில் 10,000 இல் ஒரு மடங்கு விட்டமுடைய வெள்ளி நுண் இணைப்பு மற்றும்
உலகின் மிகவும் மெல்லிய மூலக் கூறான கிராப்பீன் ஆகியவற்றைப் பயன்படுத்தி கலப்பு மின்வாய்களை உருவாக்கியுள்ளனர்.
இலண்டன் வேபீல்ட் பகுதியில் டெலிகாம் இன்ஜினியர் சைமன் ஓ கேன் என்பவர் தன்னுடைய மனைவி லியாண்ட்ரா என்பவரை ஈபே எனப்படும் இணையதள விற்பனை மையத்தில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன. சைமனுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது அவரது மனைவி லியாண்ட்ரா அவரை விழுந்து விழுந்து கவனிக்காமல் வீட்டு வேலைகளிலேயே கவனமாக இருந்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த சைமன் ஈபே என்னும் ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் தளத்தில் தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு பயன்படுத்திய மனைவி விற்பனைக்கு என விளம்பரம் கொடுத்துள்ளார்.
மேலும், மனைவியின் தகுதிகள் என, நல்ல அழகு, சிறப்பாக சமையல் செய்வார். ஆனால் இரக்கமற்றவர், இளைஞர்கள் அவரை நன்றாக பயன்படுத்தலாம் என கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விளம்பரத்தை பதிவிட்ட இரண்டே நாளில் ஒருவர் அவரது மனைவியை 65880 பவுண்ட்டுக்கு ஏலத்தில் கேட்டிருந்தனர். இந்த ஏல விவரங்களை தெரிந்து கொண்ட லியாண்ட்ரா அந்த விளம்பரத்தில், தனது அழகான போட்டோவை சைமன் போடாமல் சுமாரான போட்டோவை போட்டதற்காக அவரை துரத்தியுள்ளார். அப்போது சைமன் லியாண்டாரவிடம் அவரது அரவணைப்பை தனது இயலாமையின் போது எதிர்பார்த்ததாகவும், அது கிடைக்காததால் அப்படி செய்ததாகவும் கூறினார்.
கணவரின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட மனைவி அவரிடம் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு புது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.
போதைப் பொருள் விற்றதாக கூறப்படும் இலங்கைப் பெண் ஒருவர் குவைத்தில் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.
இவர் பிடிக்கப்பட்ட வேளை 600 போதைப் பொருள் மாத்திரைகளை வைத்திருந்ததாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, அழகு நிலைய முகாமையாளரான இவர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக, இந்த விடயம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்த போதைப் பொருள் மற்றும் மது ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக 30 போதைப் பொருள் மாத்திரைகளுடன் எகிப்தியப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இவர் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் இலங்கைப் பிரஜையான குறித்த பெண் பணி புரிந்த அழகு நிலையத்தை சோதனையிட்ட போது போதைப் பொருள் விற்பனை குறித்து அம்பலமாகியமை குறிப்பிடத்தக்கது.
மிதக்கக்கூடிய சின்னஞ்சிறு தீவான பரானா டெல்டா, அர்ஜெண்டினாவின் வட கிழக்கு முனையில் அமைந்துள்ளது. வட்டமாக அமைந்துள்ள நிலப்பகுதியைச் சுற்றிலும் 130 அடி அகலத்திற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இங்கு தண்ணீர்ப் பகுதியும் நிலப்பகுதியும் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள்.
‘ஐ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியை 6 மாதங்களுக்கு முன்பு அர்ஜெண்டினாவின் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான செர்கியோ நெஸ்பில்லர் கண்டுபிடித்தார்.
அமானுஷ்யம், பேய், வேற்றுக்கிரக மனிதர்கள் போன்ற விஷயங்களை வைத்து ஒரு திரைப்படம் எடுப்பதற்காக, இடம் தேடி வரும்போது இதைக் கண்டுபிடித்துள்ளார்.
”இயற்கையாக உருவாகியுள்ள இந்த வட்டமான நிலமும் அதைச்சுற்றியுள்ள நீரும் தானாகவே சுற்றி வருகின்றன என்பதைப் பலவிதங்களில் உறுதி செய்தோம். வட்டப் பகுதியில் இருக்கும் மரங்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திற்கு நகர்ந்துவிடுகின்றன. திரைப்படத்திற்கு இடம் தேடி வந்த நான், இன்று ‘ஐ’ பகுதியை வைத்து, ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டேன். விரைவில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பரானா டெல்டாவுக்கு வரப் போகிறேன். ‘ஐ’ பகுதிக்கான காரணத்தைக் கண்டறிவேன். இந்த இடம் அற்புதமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கிறது. இந்தத் தண்ணீர் பளிங்கு போலவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது,” என செர்கியோ நெஸ்பில்லர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்பகுதி சதுப்பு நிலமாக இருக்கிறது. மேற்பகுதி நிலம் சுழல்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு ஏராளமான கேள்விகளை உருவாக்கியிருக்கிறது. சிலர் இது வேற்றுக்கிரக வாசிகளின் வேலையாக இருக்கும் என்கிறார்கள்.
பொகவந்தலாவ – கிவ் தோட்டத்தில் 13 வயது பாடசாலை சிறுமியும் 24 வயது இளைஞனும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். நேற்று மாலை 03.00 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கிவ்தோட்டத்தைச் சோ்ந்த 24 வயது இளைஞன் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் விசம் அருந்தியுள்ளார்.
இதனையடுத்து அவரை பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதே தோட்டத்தைச் சோ்ந்த 13 வயது பாடசாலை சிறுமி ஒருவரும், பாடசாலை விட்டு வீடு வந்தவுடன் விஷமருந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் வைபவம் ஒன்றிற்காக பாெகவந்தலாவ நகர பகுதிக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சிறுமி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்த சிறுமி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்கொலைக்கான காரணம் இதுவரையிலும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பங்களாதேஷ் பிரஜைகளுக்கான ஒன் எரைவல் வீசா முறையை இலங்கை அரசாங்கம், அந்த நாட்டுக்கு அறிவிக்காமலேயே நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பங்களாதேஷூம் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கி வந்த ஒன் எரைவல் வீசா முறையை நிறுத்தியுள்ளதாக, வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
மேலும், இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகரவை அழைத்து இது குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு விளக்கம் கோரியுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலம் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அதிருப்தியை வௌியிட்டுள்ள பங்களாதேஷ் வௌிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் கம்ரூல் அஷன், என்ன காரணத்திற்காக ஒன் அரைவல் வீசா நிறுத்தப்பட்டது என்பதனை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தான் இதுபற்றி அறிந்திருக்கவில்லை எனவும், தனது நாட்டு வௌிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு விடயத்தை அறிந்து வந்து மீண்டும் சந்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் செய்தியாளர் ஒருவருக்கு கருத்து வௌியிட்டுள்ள யசோஜா, பங்களாதேஷ் பிரஜைகளை இலங்கை எப்போதும் மதிப்பதாகவும், அவர்கள் இலங்கைக்கு வருவதை இந்த நாடு வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.
உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டி-சர்ட்டை விஞ்ஞானிகள் உருவாக்கினர்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழக நிபுணர்கள் அதி நவீன டி-சர்ட்டுகளை தயாரித்துள்ளனர். இவை மின்சாரத்தை எடுத்துக் செல்லும் வகையில் மிக குறைந்த எடையுடன் கூடிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த டி.சர்ட் அணியும் போது உடலில் இருக்கும் வெப்பம் அதில் உள்ள மூலப் பொருட்களால் மின்சாரமாக மாறும், அதன் மூலம் மிக சிறிய அளவிலான எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளை இயக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
‘டி சர்ட்டில்’ ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவில் 20 மைக்ரோ வாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.
உலகில் மக்கள் மகிழ்ச்சிகரமாக, நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை 28 ஆவது இடத்தில் நிரல்படுத்தப்பட்டுள்ளது.
HAPPY PLANET INDEX இனால் 2016 ஆம் ஆண்டிற்காக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் முதல் 30 இடங்களுக்குள் இம்முறை இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
140 நாடுகள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, சீனா, இந்தியா, நியூஸிலாந்து உள்ளிட்ட முன்னணி நாடுகள் முதல் 30 இடங்களுக்குள் இடம்பெறவில்லை.
கொஸ்டாரிக்கா முதல் இடத்திலும், மெக்சிக்கோ இரண்டாம் இடத்திலும், கொலம்பியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இதுதவிர, பங்களாதேஷ் 8 ஆம் இடத்தையும், தாய்லாந்து 9 ஆவது இடத்தையும் பிடித்துள்ளதுடன், அயல் நாடான இந்தியா 50 ஆவது இடத்தில் உள்ளது.
இதேவேளை, ஆசிய பசுபிக் வலய மட்டத்தில் உலகில் மகிழ்ச்சிகரமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளின் வரிசையில் இலங்கை 7 ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
திருகோணமலை, உப்புவெளி பகுதியில் காணாமற்போனதாகக் கூறப்பட்ட சிறுவனும், சிறுமியும் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலதிக வகுப்பிற்காக கண்ணியா சென்றபோது, நேற்று முன்தினம் மாலை இரு பிள்ளைகளும் காணாமற்போயுள்ளதாக அவர்களின் பெற்றோர்களால் பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.
உறவுமுறை சகோதரர்களான 9 வயதான சிறுமி மற்றும் 11 வயதான சிறுவன் ஆகியோரே காணாமற்போயிருந்தனர்.
இந்த நிலைமையின் கீழ், இவர்கள் இருவரும் வாழைச்சேனை ரயில் நிலையத்தில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் இருந்தபோது நேற்று மீட்கப்பட்டனர்.
சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளின் கண்காணிப்புடன் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தத்தமது பெற்றோர் அநாவசியமாகத் தம்மை கண்டிப்பதாகவும், அதன் காரணமாகவே இருவரும் வீட்டைவிட்டு தப்பியோடியதாகவும் விசாரணையின்போது இரண்டு சிறுவர்களும் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு சிறுவர்களையும் மருத்துவ பரிசோதனையின் பின்னர் வாழைச்சேனை நீதிமன்றத்தில் நாளை (14) ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இரண்டு சிறுவர்களும் காணாமற்போனதாகக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.